இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம்?

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம்?  (கூட்டத்தின் தலைப்பு) இக் கூட்டம் பற்றிய எனது பார்வை

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம்  (Tamilenes fremtid på Sri Lanka? ) என்னும் தலைப்பில் நோர்வே வலதுசாரிக்கட்சியினாலும் நோர்வே ஈழத்தமிழர் அவையினாலும் இன்று நோர்வே பாராளுமன்றத்தில் ஒரு ”lobby” கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக் கூட்டத்தின் உள்ளடக்கத்தில் இலங்கையில் அபிவிருத்தி அரசியல் என்னும் தொனியிலான தலைப்புடன் ஒரு உரையாற்றப்பட இருந்ததால் இக் கூட்டத்தில் பங்குபற்றும் ஆவல் உருவாகியது.

கூட்டம் 14:00 மணிக்கு என்றிருந்ததால் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு 13:00 மணிக்கே ஆஜராகியிருந்தேன். கூட்டத்தினை ஆரம்பித்து வைத்த இடதுசாரிக்கட்சி உறுப்பினர் Peter Gitmark போரில் உயிர்நீத்த அனைவருக்கும் அகவணக்கம் செலுத்தி கூட்டத்தை ஆரம்பித்துவைத்தார். அதன் பின் நோர்வே ஈழத்தமிழர் அவையினர் தாங்கள் யார் என்பதை விளக்கிக் கூறினர்.

அடுத்ததாக Dr. Jude Lal Fernando இலங்கைப் பிரச்சனைக்கு சிங்கள, பௌத்த மத சிந்தனைகள் காரணமாயிருக்கலாமா என்னும் தொனியிலான தலைப்பில் உரையாற்றினார்.  சிங்கள மதத்தலைவர்களும், அரசியல்வாதிகளும் எவ்வாறான சிந்தனையுடன் செயற்பட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டிய போது தமிழர்களால் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட வலிகள் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தால் இன்னும் நியாயமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

அடுத்ததாக Maria Bergram Aase நோர்வே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ”இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்” வழக்கு பற்றி சிறு விளக்கமளித்தார். இவர் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை பற்றி மட்டுமே பேசினார். இவர் ஈழத்தமிழர் அவையினரின் சார்பில் இவ் வழக்கினை நீதிமன்றத்தில் நெறிப்படுத்துவதால் அவரின் வாதங்கள் நடுநிலையாக இருக்க முடியாது என்பது பரிந்து கொள்ளக் கூடியதே.

Rohitha Bashana என்னும் புலம்பெயர் பத்திரிகையாளர், பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமா அல்லது இன அழிப்பா? என்னும் தொனியில் இலங்கை அரச முக்கியஸ்தர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்புகளை அடிப்படடையாக வைத்து உரையாற்றினார். யதார்த்தத்தை பிரதிபலித்தது இவரது உரை.

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இலங்கையில் அபிவிருத்தி அரசியல் என்னும் உரை பெருத்த ஏமாற்றத்தையே தந்தது. இன்றைய அபிவிருத்தி பற்றி ஏதும் கூறப்படும் என எதிர்பார்த்திருந்தது எனது தவறு தான். திருத்திக்கொள்ள முயல்கிறேன், என்னை.

இன்றைய கூட்டத்தின் முக்கிய காரணமாக நாளை (31.05) நோர்வே பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள இலங்கை பற்றிய ஐ.நா சபையின் மனிதஉரிமைகள் மீறல் பற்றிய விவாதத்தையும் அத்துடன் சில இலங்கை சம்பந்தமான சில முக்கிய அறிக்கைகள் அண்மைக் காலங்களி்ல் வெளிவரவுள்ளதாலும், தமிழர் பிரச்சனைகள் குறித்த தகவல்களை இந்தக் கூட்டத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  வழங்கி இதன் முலமாக தமிழர் பிரச்சனைகளை பலரும் கவனிக்கத்தக்கதாக மாற்றுவதே நோர்வே ஈழத்தமிழர் அவையினரின் நோக்கமாக இருக்கும் என்பது எனது கருத்து.

இதில் தவ‌று ஏதுவுமே இல்லை. வரவேற்கப்படவேண்டிய செயல் இது. இருப்பினும் இன்றைய கூட்டத்தில் அவதானிக்கக்கூடியதாக இருந்த சில விடயங்கள் அவர்களின் நோக்கத்திற்கு சாதகமாக அமையாமல் போகலாமோ என அஞ்சுகிறேன்.

அவையாவன:
  • Lobby செய்யும் போது எவரை எமது செய்தி சென்றடைய வேண்டும் என்பதில் நாம் மிக அவதானமாக இருத்தல் அவசியம். (கலந்து கொண்டவர்களில் ஆகக் குறைந்தது 75 வீதமானவர்கள் தமிழர்கள்)
  • இன்றைய கூட்டத்தில் நாளை பாராளுமன்றத்தில் விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்? இதில் வெளிநாட்டு விடயங்களை கையாள்பவர்கள் எத்தனை பேர்? நாம் ஓரளவாவது திருப்திப்பட முடியாத எண்ணிக்கை அது என்பது மட்டும் உண்மை. இதற்கான காரணத்தை ஆராய்வது முக்கியமாகிறது.
  • உரையாற்றுபவர்களின் ஆளுமை என்பது இத்தகைய Lobby கூட்டங்களில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. Dr. Jude Lal Fernando இன் உரையின் ஆழுமை குறிப்பிடத்தக்கது. சிறந்த உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும் Rohitha Bashana உரை சபையோரில் முக்கியமானவர்களை சென்றடைந்ததா என்பது கேள்விக்குறியே. ஒரு  முக்கிய விடயத்தை குறைந்த நேரத்தில் சபையோர் மீது முன்வைக்கும் நடவடிக்கையானது மிகவும் நுட்பமான கலை. அதைக் சிறப்பாக கையாள்பவர்கள் மட்டுமே வெற்றிபெறுகிறார்கள். நாம் வெற்றிபெறும் காலம் வரும்.
  • கூட்டத்தின் உள்ளடக்கத்தினையும் நேர அட்டவணையையும் தயாரித்தவர்கள் ஏனோ தங்கள் உரையின் நேரங்களை கவனத்தில் கொள்ளவில்லை. இப்படியான தவறுகள் தவிர்க்கப்படல் மிக மிக அவசியம்.  முக்கியமாக Dr. Jude Lal Fernand தனக்குத் தரப்பட்ட நேரத்தை விட15 நிமிடங்கள் ‌மேலதிகமாக உரையாற்றினார் என்பதை கூட்டத்தின் அமைப்பாளரே சுட்டிக் காட்டினார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். Rohitha Bashana வின் உரையும், வேறு சில உரைகளும் நேரத்தினை ஒழுங்காக் கடைப்பிடிக்காமையினால் ஒரு வித unprofessional image ஐ சபையோருக்கு கொடுத்து என்பதை எனக்கருகில் இருந்த நோர்வேஜயர்களின் உடலசைவுகளைக் கொண்டு அவதானிக்கக் கூடியதாயிருந்தது.
  • நேரக்கட்டுப்பாட்டினை கவனத்தில் கொள்ளாததால் கேள்வி நேரம் ஏறத்தாள இல்லாது போயிற்று. கருத்துப்பரிமாற்றங்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் மிக அவசியம்
கேள்வி நேரத்தில் Aftenposten பத்திரிகையாளர் இன்றைய  கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப்பற்றி மட்டுமே பேசுகிறீர்கள், ஆனால் ஐ.நா சபையின் அறிக்கையில் உள்ள விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களை பற்றி பேசப்பட‌வில்லையே ஏன்? என கேட்ட போது  ”நாம் எவ்வித மனித உரிமை மீறல்களையும் ஆதரிக்கவில்லை” . ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும் என்று பதிலளிக்கப்பட்டது.

எது எப்படியோ? இன்றைய கூட்டம் எனக்கு புதிதாய் எதையும் அறிவித்ததாய் உணரமுடியவில்லை. இருப்பினும் Lobby முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. இவ்வகையில் NCET அமைப்பினர் பாராட்டப்படவேண்டியவர்கள்.

இறுதியாக:

இன்றைய கூட்டத்தில் நோர்வேஐிய தொலைக்காட்சிகள் எவையும் இன்றி வேறு ஒரு தொலைக்காட்சி மட்டும் ஏ‌க போக உரிமையுடன் உலா வந்தது போலிருந்தது எனக்கு. அது ஆவணப்படம் தயாரிப்பாகவும் இருக்கலாம். நோர்வே தமிழர்களுக்கு இச் செய்தி சென்றடையக் கூடிய நோர்வேஜிய தொலைக்காட்சிகள் இக் கூட்டத்தில் சமூகமளிக்காததற்கான காரணம் என்ன என சிந்திக்கச் சொல்கிறது மனம்.

ஒரு விடயத்தை நாம் ஒருவரிடம் முன்வைக்கும் போது அவர், நாம் வழங்கும் தகவல்கள் சரியா பிழையா என வேறு சிலரின் தகவல்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம். அதிலும் இங்குள்ள அரசியல்வாதிகளை கேட்கவே வேண்டாம். எனவே எமது நம்பகத்தன்மையை  நாம் தக்கவைத்துக் கொள்வதற்கு எமது தகவல்கள் ஓரளவாவது நம்பகத்தன்மையை கொண்டிருத்தல் அவசியம்.

இம் மாதம் தமிழர்கள் நடாத்திய மூன்று கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.  அதில் ஒன்று அரசியலுக்கு அப்பாட்பட்டு பொதுநலத்தை அடிப்படையாக கொண்டு நடாத்தப்பட்ட கூட்டம். எம் மக்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம், அவர்களின் தேவைகள் என்ன என்பது பற்றியது அது. மன நிறைவைத் தந்த கூட்டம் அது.

ஏனைய இரண்டு கூட்டங்களிலும் அரசியல் என்னும் தூரிகை எடுத்து காற்றில் கோடு போடுகிறார்கள்.   அக் கூட்டங்களில் இருந்து வீடு திரும்பும் போது மனதுக்குள் எதோ நெருடியபடி இருந்தது. ”மனது நெருடுடப்படுவது” தான் எமக்கு விதிக்கப்பட்ட ஒற்றுமையோ?

.

மசிர்க் கதை கதைக்கிறேன்

ஏறத்தாள 35 வருடங்களுக்கு முன் நாம் பிபிலையில் வாழ்ந்திருந்தோம். பிபிலையில் தமிழ்ப்பாடசாலைகள் இல்லை என்பதால் இந்த அறிவாளியை மட்டக்களப்பில் படிக்க வைத்தார்கள் எனது பெற்றோர். இரண்டு - மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீடு வருவேன். மகிழ்ச்சியின் உச்சியிலிருந்து கொண்டாடுவேன் அந்நாட்களை.

ஆனால் எனது மகிழ்ச்சி, தனக்கு மகிழ்ச்சியாய் இல்லை என்பது போலிருக்கும் எனது அப்பாவின் ஒரு நடவடிக்கை. வீடு வந்து இரு நாட்களில் பெரியதம்பி உனக்கு தலைமயிர் வெட்ட வேண்டும் என்பார். இரண்டு மாதமாய் ஆசையாசையாய் வளர்ந்திருந்த அழகிய கூந்தலைக் கண்டால் மட்டும் அவருக்கு சுர்ர்ர்ர்ர் என்று  கோபம் வரும். என்னது ”ரவுடிகள் மாதிரி தலை” என்பார். நான் தலை குனிந்திருப்பேன். ” நாளைக்கு ” பண்டாவின்ட சலூனுக்கு போய் அப்பா சொன்னவர் என்று சொல், வெட்டிவிடுவார்” என்பார். நான் விரும்பாமலே எனது தலையாடும்.

மேலே கூறு முன்..எனது தந்தையைப் பற்றி சிறு அறிமுகம். தொழில் போலீஸ், தலையில் மழைக்கு முளைத்த காளான்கள் மாதிரி ஆங்காங்கே சில கறுப்பு நிற முடிகளும், வெள்ளை முடிகளும்மட்டுமே  அங்குண்டு. எப்பவுமே போலீஸ் கிராப் வெட்டியிருப்பார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல் தலையில் இருக்கும் அந்த சில முடிகளுக்கும் மிகவும் விசேடமாகத் தயாரித்த ஒரு வித வாசனையான எண்ணையைத் தடவி, கிழமைக்கு ஒரு தடவை பண்டாவின் சலூனில் பண்டாவை நுனிப்புல் மேய விடுவார். பண்டாவும் ஒரு போலீஸ்காரனுடன் எதையும் எதிர்த்துக் கதைப்பது தற்கொலைக்குச் சமம் என்பதால் ”மாத்தயா லஸ்ஸனாய் னே”  (அய்யா அழகாய் இருக்கிறாரே”) என்று ஒரு பொய்யை மட்டும் சொல்லுவார்.  புகழ்ச்சிக்கு போலீஸ்காரன் மட்டும் விதிவிலக்கா என்ன... அவரும் அதை ஆமோதிப்பதாய் தலையாட்டுவார்.

இந்த பண்டாவிடம் அப்பாவிற்று பல சலுகைகள் கிடைத்தன. அப்பாவாலும் அவருக்கு நிட்சயமாய் சில சலுகைகள் கிடைத்திருக்கும். பண்டாவினால் அப்பாவுக்கு கிடைக்கும் முக்கிய சலுகை அப்பா அழைக்கும் போது வீடு வந்து அவரின் நேரடி மேற்பார்வையின் கீழ் எமக்கு ”மயிர்ச்சேதம்” செய்வது. இதை அப்பா மிகவும் ரசித்தார். கையிலே கனகலிங்கம் சுருட்டோடு சாரணை சற்று உயர்த்தி பிடித்தபடி பூமியை சுற்றும் சூரியன் போல எனது தலையை சுற்றி சுற்றி வருவார். அந்நேரங்களில் பண்டாவின் கண்களும் அப்பாவின் கண்களும் ஏதோ பேசிக் கொள்ளும். அதற்கப்புறமாய் பண்டா ஒரு இயந்திரத்தை கையில் எடுத்து அதன் இரு சிறிய பிடிகளையும் அமத்தியபடியே எனது பின்னந்தலையில் அவ்வியந்திரத்தை அழுத்தி அழுத்தி எனது இரண்டு மாத மகிழ்ச்சியை வெட்டிப் போடுவார். நீண்டு அழகாய் உச்சி பிரித்து  நெற்றிக்கு முன்னால் அழகாக மடிந்திருந்த மயிர்கள் அழிக்கப்பட்ட காடுகள்‌ போன்று நிலத்தில் சரிந்திருக்கும். அப்பாவோ ”தவ டிகக்” ”தவ டிகக்” (இன்னும் இன்னும்) என்று எனது கண்ணீரைப் பொருட்படுத்தாது கட்டளைியட்டபடியே நடந்து கொண்டிருப்பார்.

எல்லாம் முடிந்து முழுகி  மங்கிப்போயிருக்கும் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது அவ்விடத்திலேயே உயிர் பிரிந்தால் என்ன என்று தோன்றும். எனக்கே என்னை பிடிக்காதிருக்கும். எது  எப்படியோ, பெரிசை எதிர்க்கும் துணிவு என்னிடம் என்றும் இருந்ததில்லை. எனவே அவரிஸ்டப்படி அவர் எனது தலையில் விளையாடிக் கொண்டிருந்தார் எனது பதின்பக்காலங்கள் வரை.

அப்பாவின் மேற்பார்வையில் பண்டா என் தலையில் கத்தி வைத்தால் ஒரு சென்டிமீற்றர் உயரத்திற்கு ஒரு மில்லிமீற்றர் உயரம் கூட உயரமில்லாமல் அப்பாவுக்கு பிடித்த விதத்தில், அப்பாவுக்கு அழகாக வெட்டிவிடுவார். எனக்கு பிடிக்கிறதா, அழகாக இருக்கிறதா என்று அவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை.

ஏறத்தாள 15 வயது வரை  என் தலையின் சுதந்திரத்தை எனது தந்தையார் கைப்பற்றியிருந்தார். நண்பர்கள் ”சக்கி” கட் வைத்து காதை மூடி தலைமயிர் வளர்க்கும் போது எனக்கு மட்டும் அப்பா  ஒரு சென்டிமீற்றர் முடி வைக்க அனுமதித்தார். அப்பாவுடன் எனக்கு ”ஆகாமல்” போனதற்கு இதுவும் ஒரு கா‌ரணமாயிருக்கலாம்.

அப்பா நான் 15 வயதாய் இருந்த போது இறந்து போனார். தலைக்கு மட்டுமல்ல எனது பதின்ம வாழ்வுக்கே சுதந்திரம் கிடைத்தது. அப்பாவின் இறுதிக்கிரிகைகளுக்கு மொட்டை போடச் சொன்னார்கள். மொட்டை போட்டால் சுடலைக்கு வரமாட்டேன் என்ற போது பெரிசுகள் ”deal" க்கு வந்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை எனது தலை சுதந்திரக்காற்றை சுவாசித்திருக்கிறது.

அப்பா இறந்த பின் என்னிஸ்டத்துக்கு தலைமயிர் வளர்த்தேன். பதின்மக் காலங்களின் இறுதியில் நெற்றி சற்று பெரிதாகியது. உச்சியை சற்று மே‌ல் நோக்கி நகர்த்தி பெரிதாகிய நெற்றியை மறைத்துக் கொண்டேன். இப்படியே  மேலேறிய உச்சி ஒரு வருடத்தில் நடுத்தலைக்கு வந்து விட்டது. நெற்றி மிகவும் பெரிய நெற்றியாக மாறியிருந்தது.

எத்தனையோ எண்ணைகள் (மண்ணெண்ணை தவிர்த்து), மருந்துச் சாறுகள், களிம்புகள் என்று  எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும் தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் நோர்வேக்கு வந்து  ஓரிரு வருடங்களில் ஏறத்தாள 23 வயதில் 75வீத மொட்டை 25 வீத மயிரினால் முட முயற்சித்துக் கொண்டிருந்தேன். காற்றடிக்கும் போது வெளில் செல்வதை தவிர்க்க வேண்டியதாயிற்று. காண்பவர்கள் எல்லோரும் இதைப்பற்றியே பேசினார்கள். என்னிடம் மனவருத்தப்பட்டார்கள். உள்ளுக்குள் சிரித்திரிப்பார்கள்.. (தமிழேன்டா).

எனக்கும் என்ன செய்வது என்று தெரியாதிருந்த போது கண்ணில் பட்டது அந்த விளம்பரம். முடியே அற்றவர் ஒருவர் கையில் இரு சிறு போத்தல் வைத்திருந்தார். அருகில் இருந்த படத்தில் வனாந்தரம் போன்று அடர்ந்து படர்ந்திருந்தது அவர் முடி. 300 குறோணர்கள் செலுத்தி தபாலில் வரவளைத்துக் கொண்டேன். தபாற் செலவாக 50 குறோணர்களும் செலுத்தினேன். போத்தில் அளவு எனது  சுண்டுவிரலை விட சிறியதாய் இருந்தது. அதற்கென்று செய்கைமுறை விளக்கம் படங்களுடன் அனுப்பியீருந்தனர்.

உச்சம் தயைில் 5 துளிகள் இடவும்  -  நான் 5 துளிகள் இட்டேன்
கையினால் மருந்தை தலையில் தடவி பின்பு தலையை 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும் - அதையும் செய்தேன்
24 மணிநேரத்தின் பின்பு முழுகவும் - இதையும் செய்தேன்

ஒரு நாள், வாரமாகியது தினமும் கண்ணாடியின் முன் நின்று எனது தலையில் எங்காவது ஏதாவது முளைக்கிறதா என்ற பார்ப்பேன். ஏமாற்றமாய் இருக்கும். நாளை என்று மனதை தேற்றிக் கொள்வேன். இப்படியே நாட்கள், வாரங்களாகி, மாதங்களாகின. இதற்கிடையே மேலும் இரு தடவைகள் மருந்தும் வந்து சேர்ந்தது. இப்போ காலையும் மாலையும் நீர் ஊற்றி நிலம் கிண்டும் விவசாயி போன்று நான் தலையை மருந்திட்டு, மசாஜ் செய்யலானேன். கற்பனையில் முடி அதீததமாய் வளர்வதாய் கனவு கண்டேன்.

மாதங்கள் மூன்றாகிவிட்டன. தரிசு நிலத்தில் விதைத்தது போலிருந்தது எனது முயற்சி. டாக்டரிடம் போனேன். 300 குறோண் மருந்தைக் காட்டினேன். எனது மருந்தை பரிசோதனைக்கு அனுப்பினார். சில மருந்துகள் எழுதித் தந்தார். மீண்டும் டாக்டரிடம் சென்ற போது எனது தந்தையாரைப் பற்றி விசாரித்து அவரின் பரம்பரையலகே எனது மொட்டைக்கு காரணம் இதை தவிர்க ஏலாது என்றார். தவிர நான் சென்ற முறை டாக்டரிடம் காட்டி மருந்து உண்மையில் மருந்தல்ல என்றும் அதில் 95 வீதம் நீரும் 5 வீதம் உப்பும் இருக்கிறது என்றும். உன்னைப் போல் பலர் இம் மருந்து விற்பனையாளனினால் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் விளக்கினார்.

உப்பு நீரை தலையில் அதுவும் சொட்டு சொட்டாக 5 சொட்டு இட்டு மசாஜ் செய்து ”மயிர்” பயிர் செய்த எனது பேரறிவை நினைத்து இப்போது சிரிக்க முடிகிறது. அன்று அது வேதனையாகவே இருந்தது. தற்போதெல்லாம் மொட்டையே அழகு என்னும் கொள்கையை நான் ஆதரிக்கிறேன். அது பற்றிய சிந்தனையில்லை, மனவருத்தங்கள் இல்லை. மிக மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.

தற்போது அப்பாவின் தலையில் ஆங்காங்கு சில மயிர்கள் இருந்து போலவே எனக்கும் இருக்கிறது.  தினமும் முழுகினால் தலை துடைக்கும் பிரச்சனையோ, தலை வாரும் பிரச்சனையே எனக்கில்லை இல்லை. ஒரு விரலால் தலையை துவட்டும் சுகமே தனி......

முன்பு அப்பாவின் இம்சையினால் தலைமுடி வெட்ட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இம்சை பண்ண எவருமில்லை. ஆனால் வெட்டுவதற்கு முடியில்லை. இருப்பினும் இரு கிழமைகளுக்கு ஒரு தடவை அப்பா ”பண்டாவை” நுனிப்புல் மேய விட்டது போன்று நானும் நுனிப்புல் வெட்டும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். தலையில் இருக்கும் மயிர் நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தபடியே இருக்கிறது. அதிகமாய் வளராமல் இருக்கும் வரை மட்டடற்ற மகிழ்ச்சி.

அண்மையில் ஒரு மொட்டை நண்பண் ” மொட்டை செக்ஸியாக” இருக்கிறது என்று எங்கோ வாசித்ததாக கூறினான். உண்மையாக இருக்கலாம்...



மொட்டையர்கள் அனைவர்க்கும் இது சமர்ப்பணம்



.

ஒரு பேதையின் போதை

சில நாட்களுக்கு முன் கணணி உதவி வேண்டும் என்று ஒரு ஆண் தொலைபேசினார். பிரச்சனையை கேட்டறிந்து கொண்டு அவரின் விலாசம் கேட்டேன். ஓஸ்லோவில் அதிகளவில் பணத்தில் மிதப்பவர்கள் வாழும் இடத்தில் இருந்தது அவரின் வீடு. அடுத்தத நாள் வருவதாக கூறி, அடுத்த நாள் முன் மாலை நேரத்தில் அவரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

புதிய வீடு, அடக்கமான ஆர்ப்பாட்டமில்லாத வீடு. இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. வெளியில் வந்து கைகுலுக்கி அழைத்துப் போனார். வீட்டுக்குள் போனதும் அவரின் மனைவியும் தன் பெயரைச் சொல்லி கையைக்குலுக்கிய போது அவரின் முகத்தை எங்கேயோ பார்த்திருப்பதாக மனம் சொல்லிற்று. பெயரையும் எங்கோ கேட்டமாதிரி இருந்தது. எனினும் எங்கு,  எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் என்று என்னால் நினைவில்கொள்ள முடியவில்லை. அங்கு நின்றிருந்த நேரம் முழுவதும் இதுவே மனதைக் குடைந்தபடி இருந்தது. அவர்களின் வீட்டின் ஓரிடத்தில் ஒரு விளையாட்டு வீரர் போட்டி அணியும் ஒன்று மிக அழகாவும், நோர்த்தியாகவும் ஒரு கண்ணாடிச் சட்டத்தினுள் வைக்கப்பட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் Torino என்றிருந்தது.

அன்று அவர்களின் வீட்டில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் முடியாததால் நாளை மீண்டும் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன். சிந்தனை மீண்டும் அந்த வீட்டில் நான் கண்ட அந்தப் பெண்ணை பற்றியதாகுவே இருந்தது. எங்கு கண்டேன் அவரை? என்ற இடத்தில் இருந்து சிந்தனை அகல மறுத்தது. ஆனால் அவரை நான் எங்கோ கண்டிருக்கிறேன் என்ற உணர்வு மட்டும் வலுவாகிக் கொண்டே இருந்தது.

மறு நாள் மீண்டும் அங்கு போன போது கணவன் முக்கியவேலையாய் வெளிய செல்ல நாம் இருவரும் தனியே விடப்பட்டோம். அவரின் கணணியில் அவரின் பெயரை பதிய வேண்டியேற்பட்ட போது மீண்டும் அவரின் பெயரைச் சொன்னார். இந்தப் பெயரை எங்கோ கேட்டிருக்கிறேன் என்றேன் அவரிடம். சிரித்து எங்கே என்று கேட்டார்? அதைத் தான் நேற்றில் இருந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்‌ற போது.. அப்படியா  என்று ஆச்சர்யப்பட்டார்.

இனியும் பொறுக்க முடியாது நீங்கள் யார் என்றேன். தான் ஒரு சாதாரண பனிச்சறுக்கு வீரர் என்றார். அப்போது தான் மின்னலடித்தது எனது நினைவுகளுக்குள். நீங்கள் Winter olympics இல் பங்குபற்றியவரல்லவா? நீங்கள் 4ம் இடத்தை பெற்றவர் தானே என்றேன். ஒளி கொண்டன அவரது கண்கள். புன்னகைத்தபடியே தலையாட்டினார்.

சிலருடன் உடனடியாகவே பழகிவிடலாம். சிலருடன் பழகுவதற்கு நாட்களெடுக்கலாம். சிலருடன் அவரிகளின் மனதைத் தொடும் விடயத்தை பேசினாலேயே இலகுவில் பழகலாம். தனது வாழ்வின் பெரும் பகுதியை பனிச்சறுக்கு விளையாட்டிற்கே அர்ப்பணித்த ஒருவருக்கு, ஒரு வெளிநாட்டவன் அதுவும் பனிச்சறுக்கும் கலாச்சாரம் அற்ற நாட்டவன் தன்னைப்பற்றி அறிந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.  கண நேரத்தில் நண்பர்களாகிப்போனோம்.

இப்போது புரிந்தது அவரின் வீட்டில் கண்ணாடிச் சட்டத்தினுள் வைக்கப்பட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அந்த Torino  என்று எழுதப்பட்ட உடையின் ரகசியம்.

நான்காம் இடம் என்பது மிகவும் வேதனையைத் தரும்  இடமல்லவா என்றேன். சற்றே மொளனித்தார். ‌அந்த மௌனத்தின் கனத்தை நான் நன்றாகவே புரியக்‌கூடியதாயிருந்தது. அவர் மெதுவாய் புன்னகைத்தார். அவரின் புன்னகையில் வேதனை தெரிந்தது.

ஆம், நான்காம் இடம் என்பது மிகுந்த வலியைத் தருவது. அதுவும் நான் மிக மிக குறைந்தளவு நேரத்தில் எனது வெற்றியை தவறவிட்டேன். ஆனால் அதன் பின்னான காலங்களில் அவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ” தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள்” பாவித்திருந்ததாக ஒலிம்பிக் கமிட்டியில் அறிவித்தார்களாம். ஆனாலும் அவர்களின் பரிசில்கள் திரும்பப்பெறப்பட்டு மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், உண்மையான விளையாட்டுவீரர்களின் தூய்மையான விளையாட்டு விழுமியங்கள், சில முறையற்ற விளையாட்டு முறைகளை பின்பற்றும் விளையாட்டு வீரர்களினால் பாழடிக்கப்படுகிறது என்றார்.

அதன் பின் மீண்டும் அடுத்த வருட விளையாட்டுக்களுக்கு பயிட்சியில் இருந்த காலத்தில் நோர்வேயில் வாழும் ஒரு வித உண்ணி (Tack) யின் தாக்குதலுக்கு உட்பட்டதால் பல வருடங்கள் சிறந்த முறையில் பயிட்சியில் ஈடுபடமுடியாதிருந்து இந்த வருடம் தான் முழுமையான பயிட்சியில் ஈடுபடுவதாகவும் சொன்னார்.

உடற்பயிற்சி பற்றி பேச்சு வந்த போது ஒரு நாளைக்கு காலையில் 2 மணிநேரமும் மாலை 2 மணிநேரமும் கிழமையில் எழு நாட்கள் பயிட்சி செய்கிறாராம். பயிட்சியின் இடையில் உள்ள  ஓய்வு நோரம் பயிட்சி நேரத்தைப் போன்று முக்கியமானதாம் அவருக்கு என்றும் கூறினார்.

அவரின் கணணிக்கு ஒரு ”இரகசியச் சொல் (password)”  தேவைப்பட்ட போது அவரால் தரப்பட்ட இரகசியச் சொல் மீண்டும் அவர் போட்டியில் பங்கு பற்றி தங்கம் வெல்ல வேண்டும் என்னும் அவரது மனநிலையை தெரிவிக்கும் விதத்தில், ஏறத்தாள இப்படி அழைத்திருந்தது 2goldsInOlym.

நான் புறப்பட்ட போது நீங்கள் உங்கள் இலட்சியத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றேன். நன்றி, நிட்சயமாய் சாதிப்பேன், வெற்றியின் போதையை நிட்சயமாய் நுகர்வேன் என்றார்.

அடுத்த பனிக்கால பனிச்சறுக்கு விளையாட்டுக்களுக்காக நான் காத்திருக்கிறேன்.

இன்னைய நாளும் நல்லதே!

தொலை தூரம் தொலைந்தவர்கள்

ஏறத்தாள  ஒரு வருடத்திற்கு முன்பொரு நாள் கணணி உதவி வேண்டும் என்று ஒருவர் அழைத்தார். அவர் வீடு தேடிப் போய் இறங்கினேன். கதவருகில் அவரைக் கண்டதும் என் மனது எச்சரிக்‌கை மணியடித்தது. வயது 55 இருக்கலாம். பேச்சு சீராக இல்லை. நடை நிதானமாக இல்லை. அவரின் நடை ஒரு மணிநேரத்திற்கு 100 மீற்றர் என்னும் வேகத்தில் இருந்தது. என்னை வீட்டுக்குள் அழைத்தார். நான் அவரைக் கடந்து வீட்டுக்குள் சென்றேன்.

வாசலில் மனிதர் ஆச்சர்யப்படுத்தினார். உள்ளே அவரின் வீடு என்னை ஆச்சர்யப்படுத்தியது.  வீடு முழுவதும் கணணியும் கணணி சார்ந்த பொருட்களுமாக ”கணணி நிலம்” போன்று  இருந்தது.
அவரின் வீட்டில் 23 கணணிகள் இருந்தன
அவற்றில் 18 ஒரே நேரத்தில் இயங்கின
நான்கு50 அங்குல தொலைக்காட்ச்சிப்பெட்டிகள்
இரண்டு இணைய இணைப்புக்கள் (மிக மிக வேகமான இணைப்புக்கள்)
4 தொலைக்காட்சி இணைப்புக்கள் Digital box
எண்ணிக்கையில்லாத சிறு சிறு கணணி உபகரணங்கள்

நான் அவற்றைப் பார்த்து ஏங்கிப் போய் நின்ற போதுதான் அவர் என்னை வந்தடைந்தார். அவரின் பேச்சில் அவர் ஒரு ”கறுப்பனை” எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது. 

என்ன பிரச்சனை என்றேன். தனது கணணிகளுக்கிடையில் உள்ள ”நெட்வோர்க்” வேலை செய்யவில்லை என்றார். பிரச்சனையின் முலத்தை தேடி ஓடினேன் நான்.  முக்கியமாக ஒரு உபகரணம் செயலிழந்திருந்தது.  அதை விளக்கிய போது பொறு என்னிடம் புதிதாய் ஒன்று இருக்கிறது என்றார். அவர் தந்த உபகரணத்தை நான் இணைத்த போது அவரின் ”நெட்வேர்க்” இயங்கத் தொடங்கியவுடன் மனிதர் முழுவதுமாக மாறிப் போனார்.

என்ன குடிக்கிறாய் என்றார். சாக்லொட் எடுத்து வைத்தார். பழங்கள் எடுத்து வந்தார். ‌தேநீர் வந்தது. உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

பல வருடங்களுக்கு முன் கப்பல் ஒன்றில் காப்டன் பதவியில் இருந்திருக்கிறார். மனைவி இரு குழந்தைகள் என வாழ்ந்திருந்த நாட்களில் துருக்கிக்கு குடும்பத்துடன் சென்றிருந்த போது மனைவி ஒரு துருக்கிய மனிதரை காதலிக்க ஆரம்பித்து, இவரையும் குழந்தைகளையும் பிரிந்து சில காலங்கள் அந்த துருக்கியருடன் வாழந்திருந்த போது மன அழுத்தம் இவரை தாக்கியிருக்கிறது. அதன் பின் சக்கரை வியாதி, அதைத் தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி இப்படி பல வியாதிகள் இவரைத் தாக்கியிருக்கின்றன. தனக்கு இல்லாத நோயே இல்லை எனலாம் என்றார் சுய நகைச்சுவையுடன்.

காலப் போக்கில் மன அழுத்தத்தினால் மனிதர்கள் எவரையும் சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம். நடுச் இரவில் ஊர் உறங்கிய பின்  மட்டும் வெளியில் போய் வருவார். தூக்கமின்மையினால் பெரும் அவதிப்படுவதாகவும் சொன்னார். மருந்துக்டைபோன்று வீடு முழுவதும் மருந்துகள் அரைந்து கிடந்தது

ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின் என்னை அவருக்கு மிகவும் பிடித்துப் போக அன்று மாலை முழுவதும் என்னை உட்கார்த்தி வைத்துப் பேசிக்கொண்டிருந்தார்.  அவரின் நிலை உணர்ந்ததால் நானும் அவருடன் உட்கார்ந்திருந்தேன்.

அவரால் நடக்க முடியாதிருப்பதால் ஒவ்வொரு இடத்திலும் தனக்கு எல்லா பொறுட்களும் இருக்க வேண்டும் என்று தன் வீட்டில் பல கணணி சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான காரணத்தை விளக்கினார். எதுவும் எப்பவும் நடக்கலாம் என்பதால் ஒவ்வொரு பொருளுக்கும் அது பழுதடைந்தால் அதை ஈடு செய்ய ஒரு பொருள் எப்பவும் அவர் வீட்டில் இருந்தது என்பது பின்பு எனக்கு தெரிய வந்தது.

அடுத்து வந்த வாரங்களில் பல தடவைகள் கணணி திருத்த அழைத்தார். கணணி திருத்துவது மட்டும் எனது தொழிலாய் இருக்கவில்லை. அவருக்கு பேச்சுத் துணையாயும் இருந்தேன். அவரின் காதலி என்று ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினார். காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதான் என்பதை யதார்த்த உலகில் நான் உணர்ந்து கொண்டது அன்று தான். தினமும் இவருக்குரிய  பொருட்களை கொள்வனவு செய்து கொடுப்பது இவர் காதலியின் கடமைகளில் ஒன்று. எனக்கு முன்னாலேயே அவருக்கு ஒரு ”இச்” கொடுத்துவிட்டு விடைபெற்றார் காதலி.

ஓரிரு  வாரங்களில் நெருங்கிய நண்பர்ளாய் மாறியிருந்தோம் நாம். அலைவரிசை பெருந்திப்போகும் நட்பு கிடைத்தது போலிருந்தது அவரது நட்பு. அவரை வாருங்கள் வெளியே போய் வருவோம் என ஒரு நாள் அழைத்தேன். சங்கடப்பட்டார். சற்றே வற்புருத்தினேன்.  அவர் மிகவும் அசௌகரீயமாய் உணர்வதை உணர்ந்ததால் வேண்டாம் பின்பொருநாள் போவோம் ‌ என்று கூறிய போது கண்களால் நன்றி என்றார்.

நான் தொழில் இன்றி வாழ்ந்திருந்த காலம். நோய்கள் மற்றும் வாழ்வின் முட்படுக்கை ஆகியவற்றுடன் முட்டி மோதி நடப்பதற்கே திராணியற்றுக் கிடந்த நாட்கள் அவை. மனம் விட்டுப் பேசுவதற்கு அவருக்கு நானாயும் எனக்கு அவராயும் இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் வடிகால்களாயும், மனத்தைரியம் கொடுப்பவர்களாய் இருந்தோம்.  பின்பு வந்த காலங்களில் எத்தனையோ தடவைகள் அவரை வாருங்கள் வேளியே செல்வோம் என்ற போதெல்லாம் முடியாது, பின்பொருநாள் என்பார்.

எனக்கு தொழில் கிடைத்ததை அவருடன் பகிர்ந்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதன் பின்னான காலங்களில் நேரமின்மையினால் தொடர்பு குறைந்து போனது. இருப்பினும் அவ்வப்போது தொடர்பு கொள்வேன். அவரும் தொடர்பு கொள்வார்.

அண்மையில் ஒரு தொலைபேசி வந்தது எனக்கு அவரிடமிருந்து. குரலில் ஒரு துள்ளல் இருந்து. தற்போது மன அழுத்த நோய் சற்று குறைந்திருப்பதாயும். ஒரு பயிட்சி முகாமிற்கு தான் சென்று வருவதாயும் கூறினார்.

அத்துடன்,  நாம் இந்த கோடைக்காலத்தின் போது மீன் பிடிக்கப் போகவேண்டும் என்றழைத்திருக்கிறார்.  நிட்சயமாய் என்று பதிலளித்திருக்கிறேன்.

மனிதனையும் மனத்தையும் செப்பனிட கடந்தோடும் காலத்தை விட சிறந்த வைத்தியன் இல்லை என்பது மீண்டும் நீரூபனமாகியிருக்கிறது.

இன்றைய நாளும் நல்லதே.



.

நமீதாவின் உதடும் சூர்யாவின் six pack ம்

அது ஒரு அழகிய நாள். வானம் முகில்கள் அற்று நீல நிறத்துடன் நிர்வாணமாய் இருந்தது. நானும் மிக அழகாய்  காற்சட்டை உடுத்தி வெறும் உடம்போடு கடற் காற்று முகத்திலடிக்க கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன்

கடற்கரை எங்கும் , பெற்றோர்கள், பெற்றோர்கள் அல்லாதவர்கள், பெற்றோர்கள் ஆகிக்கொண்டிருப்வர்கள், பழசுகள், இளசுகள், குஞ்சு குறுனிகள் என மனிதர்கள் கூடியிருக்கிறார்கள்.

நான் தனியே நடந்து கொண்டிருக்கிறேன்.  எதிரே 3 குமரியுமல்லாத அதேவேளை கிழவியுமல்லாத எனது வயதையொட்டிய பெண்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.  பார்ப்பது மட்டுமல்ல என்னைக் காட்டி ஏதோ பேசுவதும் தெரிய எனக்குள் ஒரு பரவச சூடு பரவ, மிகவும் மிடுக்காய், நெஞ்சை நிமிர்த்தி நடக்கலானேன். அவர்களை நான் கடந்த போது அவர்கள் என்னை நோக்கி விசிலடிப்பதும் கேட்டது. ”திரும்பிப் பார்க்காதேடா மடையா” என்று மனம் சொன்னதால் அவர்களை கவனிக்காதததைப் போன்ற பில்ட் அப் இல் சற்றுத் ‌தூரம் நடந்து போனேன்.

அப்போது அவர்கள் முவரும் எழும்பி ஆங்காங்கு அழகிய அங்கங்களில் ஒட்டியிருந்த மணலைத் தட்டினார்கள். மணல்  கூட அழகான பெண்களின் அழகான இடங்களில்  ஒட்டிப்பிடிக்கிறது  என்று எனது உயர்ந்த இலக்கியச் சிந்தனை தோன்றியபோது, அவர்கள் என்னை நோக்கி வரத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள்  நெருங்க நெருங்க எனக்கு எனது நெஞ்சின் சத்தம் மிகப் பெரிதாய் டம் டம் டம் என்று கேட்க, அந்தச் சத்தம் அவர்களுக்கு கேட்டவிடுமோ என்ற பயமாய் இருந்தது எனக்கு.

அருகில் வந்து ஒருத்தி ஹாய் என்றாள். நானும் வளிந்தபடியே ஹாய் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் காற்று மட்டுமே வந்தது, சத்தம் வர மறுத்தது. உடனே புன்னகையை வெளியே கட்டாயமாய் அனுப்பி நிலமையை சமாளிபிகேஷன் செய்து கொண்டேன். இப்போது அவர்களில் ஒருத்தி ஒரு வித மோகமான பார்வையுடன் அருகில் வந்து என்னைப் பார்த்தபடியே கீழுதட்டை பல்லால் நமீதாவைப் போல் கடித்துக் காட்டினாள். எனக்கு தலை சுற்றத் தொடங்க ஒஸ்லோ முருகா காப்பாத்து என்று நினைத்துக் கொண்டேன். (முருகன் காதுக்குள் ”என்ஜாய் பக்தா” என்று வடிவேலுவின் குரலில் அருள் புரிந்தார்) அவள் எனது காதுக்குள் உனது சிக்ஸ் பக் ரொம்ப செக்சியாக இருக்கிறது என்றாள்.. நெஞ்சுப பூரிக்க குனிந்து வயிற்றைப் பார்த்தேன். சூர்யா தோத்தார் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

அப்போது மற்றைய இருவரில் ஒருத்தி  மிகவும் நெருங்கி வந்து முதுப்புறத்தால் எனது சிக்ஸ்பக் வயிற்றை கட்டிப்பிடித்தாள்.  திமிறித் தள்ளினேன். தலையில் யாரோ ஒரு மரப்பலைகையால் அடித்தது போலிருந்தது. விழுந்தேன்... கையையும் காலையும் உதறி எழும்ப முயற்சிக்க மீண்டும் அதே பலகையால் தலையில் அடித்து போலிருக்க என்னாலான முழுப்பலத்தையும் உப‌யோகித்து அவர்களை தள்ளி எழுந்த போது, நான் எனது கட்டிலில் வேர்த்தொழுக உட்கார்ந்திருந்தேன். தலைமாட்டில் தலை அடிபட்டதையே நான் பலகையால் அடித்ததாக நினைத்திருக்கிறேன்.

அட..சீ நான் கனவு கண்டிருக்கிறேன்.

மேலே இருப்பது ஒரு சின்ன கற்பனை தான் என்றாலும், அந்த மாதிரி எனது வண்டியும் சிக்ஸ் பக் ஆக வரணும் என்று நான் பட்ட பாடு இருக்கிறதே.. அதையேன் கேக்குறீங்க. சாண் ஏற முழம் சறுக்கும் கதை தான் அது.

இப்போ பல தசாப்தங்களாக எனது பேத்தை வண்டிக்கு முடிவு கட்டவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.  திடீர் என்று ஒரு ஞானம் வரும். அப்போது உடனடியாக இந்த வண்டியை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இறங்குவேன்.

இப்படித்தான் ஒரு முறை வண்‌டியைக் குறைப்பதற்காக ஒரு Gym இல் சேர்ந்தேன். மாதம் 60 டாலர். முதல் அங்கு போனதும் பயிற்றுனர் எனது நீளம், அகலம், உயரம், எடை என எல்லாவற்றையும் ”துணிவே துணை” படத்தில் வில்லன் ஜெயசங்கருக்கு அளப்பது போல அளந்தார்.

ஒரு கருவி எனது உடலின் கொழுப்பை அளந்து, இவனுக்கு வாய்க்கொழுப்பும் அதிகம், வண்டியிலும் கொழுப்பதிகம் என்றது.

பயிற்றுனர் பல அப்பியாசங்களை கற்பித்தார். ஒவ்வொரு அப்பியாசத்தையும் மூன்று தரம் செய்யச் சொன்னார். நான் நாலு தரம் செய்தேன். ஒரு மணிநேரத்தின் பின் நடக்கமுடியாமல் நடந்து வந்து வீடு வந்து கட்டிலில் விழுந்தேன். அடுத்தநாள் காலைவரை உலகத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாதிருக்க காலையில் கட்டிலால் எழும்ப முடியாதிருந்தது.

பல்லை மினுக்குவுதற்காக கையைத் தூக்கினேன் கை மேலே வர மறுத்தது. வைத்தியருக்கு போன் பண்ணினேன். ”Ibux வாங்கிப் பாவியும்”, அதோடு தேவைக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்றார். அவருக்கு எனக்கு சிக்ஸ்பக் வருவது பிடிக்காதிருந்ததோ என்னவோ?

அடுத்த நாள் Gym க்கு போனேன்.  அப்பியாசங்களை நாலு தரம் செய்வது அலுப்பாய் இருந்ததால் 2 தரம் செய்தேன். ஒரு மணித்தியால அப்பியாசத்‌தை 45 நிமிடமாக குறைத்தக் கொண்டேன். குளியலறையில் வயிற்றை தடிவிப் பார்த்தேன். அது குறைந்திருப்பது போலிருந்தது.  வயிற்றை சற்று எக்கிப் பிடித்தேன். கண்ணாடியில் பார்த்‌த போது மிகவும் அழகாய் இருப்பது தெரிய மனம் பூரித்துப் போனது.

3 நாட்களின் பின் பின் அப்பியாசங்களை 1 தரம் செய்தேன். சிலவற்றை தவித்து இலகுவான அப்பியாசங்களை செய்தேன். 15 நிமிடங்களில் குளியலறையில் வண்டி குறைந்திருப்பது போல தெரிந்தது.

இப்படி ஒரு வாரத்திலேயே அந்த Gym மறந்து போயிற்று. ஆனால் மாதாந்தம் 60 டாலர்  வங்கியில் இருந்து கழிந்து கொண்டிருந்தது.

ஒரு நண்பர் சைக்கில் ஓடினால் வண்டி குறையும் என்றார். ஓடிப் போய் ஒரு சைக்கில் வாங்கினேன். ஆனால் வண்டி குறையவில்லை. சைக்கில் ஓடினால் தானே வண்டி குறையும்.... 400 டாலர் சைக்கில் புதிதாய் வீட்டை அலங்கரிக்கிறது.

சாப்பாட்டை குறைத்தால் வண்டி குறையும் என்றார் நிறைமாதக் கர்ப்பிணி போலிருந்த பக்கத்துவீட்டு நண்பர்.

அவரின் ஆலோசனையினால் காலையில் 3 கிளாஸ் தண்ணீர், மதியம் ஒரு பாண் துண்டு, பிறகு ஒரு கரட், மாலையில் சலாட் என்று என்னை கொலைப்பட்டிணி போட்டார். இரு நாட்களின் பின் பசி தாங்க முடியாததால் இரண்டு கொத்துரொட்டி வாங்கி விழுங்கிக் கொண்டேன்.  அடுத்த நாள் காலையில் கழிப்பறையில்  குந்திய போது... வேண்டாம் அந்தக் கதை.

அடுத்து  கொழுப்பைக் கரைக்கும் குளிசை, களிம்பு என முயற்சித்தேன். அவை ஒன்றுக்கும் அடங்காமல் எனது வண்டி தினமும் வளர்ந்து கொண்டு வந்தது. இப்போது பக்கத்து வீட்டு நண்பர் என்னைப் பார்த்து ”எத்தனை மாதம்?” என்கிறார். அவர் ”ஓவர் டியூ” ஆக இருப்பதை அறியாமலே.

இப்போ ஒஸ்லோவில் ஒரு சாமியார் வந்திருக்கிறார். அவர்  லேகியம் கொடுக்கிறார் என்பதால், உற்ற நண்பனிடம் அது பற்றி கேட்ட போது ” டேய் .. வேண்டாம் இந்தச் சாமியார்களுக்கு வண்டியை பெரிதாக்க மட்டுமே தெரியும்” என்கிறான். உண்மையாக இருக்கலாம். எனவே அவரிடம் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

எனது வண்டி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் சீரும் சிறப்புமாய் வளர்ந்துகொண்டிருக்கிறது.

வண்டி உங்களுக்கும் வளரலாம், வளர்ந்து கொண்டிருக்கலாம் அல்லது ஏற்கனவே வளர்ந்திருக்கலாம்

அட விடுங்கய்யா இதெல்லாம்  சகஜமப்பா............!


ஒரு கொசுறுச்  செய்தி:
இந்த பதிவு எழுத எடுத்த நேரத்தை விட பல மடங்கு நேரம் செலவழிந்தது அடக்கொடுக்கமான நமீதா  ஆன்டியின் படம் ஒன்றை இணையத்தில் தேடி எடுக்க .... சரவணா என்ன கொடும இது..


.

பூக்களின் பூக்கள்

இன்று மதியம் போல் தொடர்மாடி விடுகளைக் கடந்து எனது வீட்டைநோக்கி நடந்து கொண்டிருந்தேன். ‌வெய்யிலும் வஞ்சகம் இன்றி காய்ந்து கொண்டிருந்தது. குழந்தைகளின் ஒலிகளும், விளையாட்டுக்களும் என்று சுற்றாடல் மகிழ்ச்சியாய் இருந்தாலும் நான் ஏதேதோ சிந்தனைகளுடன் நடந்து கொண்டிருந்தேன்.

என் அருகில்  ”ஹாய்” என்ற குழந்தையின் குரல் கேட்டு நிமிர்ந்தேன். புதிதாய் பூத்த பூ போன்றதோர் பெண்குழந்தை, அழகிய பெரிய கண்கள் சுருண்ட தலைமுடி கொழுத்த கன்னங்களுடன் அழகிய  பூக்கள் போட்ட ஒரு சிவப்பு நிற சட்டையுடன் நின்றிருந்தாள். அவளுக்கு  ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம். அவளின் அழகை ரசித்தபடியே ”ஹாய்” என்றேன்.
”உன் பெயர் என்ன?” என்றாள்
”சஞ்சயன்”
தன் பெயர் என்று ஏதோ ஒரு பெயர் சொன்னாள். ”புரியவில்லையே” என்ற போது மீண்டும் ”ரமீ” என்னும் உச்சரிப்பில் எதோ சொல்ல நானும் தலையாட்டினேன்.
”நாங்கள் பூ விற்கிறோம்,  உனக்கு வாங்க விருப்பமா?” என்றாள்

எனது மனமும் உடலும் உட்சாகமாகிப் போனது. சில ஆண்டுகளுக்கு முன் என்னவள்களும் சிறுமிகளாய் இருந்திருந்த காலங்களில், நான் பல தடவைகள் அவர்களிடம் பூ வாங்கியிருக்கிறேன்.  நான் வாங்கிய பூவை மீண்டும் எனக்கே விற்ற தலை சிறந்த விற்பனையாளிகள் என்னவள்கள். அந் நாட்களின் சுகந்தம் என் மனதை ஆட்கொள்ள....

புன்னகைத்தபடியே ”ம்.. என்ன விலை?” என்றேன்
”ஒரு குறோணர்”
”சரி” என்ற போது
” கண்களால் சிரித்தபடியே பூக்கள் அங்கிருக்கின்றன” என்று புல்வெளியி்ல் போடப் பட்டிருந்த ஒரு மேசையைக் காட்டினாள்.

அம் மேசைக்கருகில் மேலும் இரு சிறுமிகள் நின்றிருந்தனர். அருகில் சென்ற போது மேசை முழுவதும் புல்வெளியினருகே பூத்திருக்கும் பூக்களை கொய்து அழகாய் அடுக்கியிருந்தனர். அவர்களுடன் சற்று நேரம் உரையாடியபடியே
”இவற்றில என்ற நிற பூவை நான் எடுக்கலாம்?” என்றேன்.
இருவரும்  வெள்ளை எ்ன்றார்கள்.
”சரி.. அப்ப நான் இந்தப் பூவை எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி ஒரு குறோனர் பணம் செலுத்தி பூவினைப் பெற்றுக்கொண்டேன். பணத்தைப் பெற்றவள் ”நன்றி” என்றாள். புன்னகைத்துக் கொண்டோம். பெரியதொரு சாதனை செய்த மகிழ்ச்சியை அவர்களின் கண்களில் கண்டேன். எங்கும் விற்பனைக்கில்லாத  மகிழ்ச்சியின் அடையாளங்கள் அவை.

நூற்றுக்கும் அதிகமான மிகச் சிறிய வெள்ளை நிறமான பூக்களைக் கொண்ட ஒரு தண்டு எனது மேசையில் இருக்கிறது. சற்று நீர் ஊற்றிப் பாதுகாத்திருக்கிறேன் அப் பூக்களை. அப்பூக்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுகள் நீரூற்றிப் போகின்றன எனக்கு. விலைமதிப்பற்ற பூக்கள் நாளையும் விற்கப்படலாம். ஒரு வாடிக்கையாளன் காத்திருக்கிறான்.


இன்றைய நாளும் நல்லதே



.

அசரீரீகளுடனான வாழ்வு











பின்னிரவில்
அதீதக் கனவுகளின் களைப்பில்
மீள்கிறது நிஜவுலகு
தலையருகிற் இடர்கிறது
பூவினும் மிருதுடன், அறியும் வாசனையுடனான,
நினைவுகளின் அட்சயபாத்திரமாய்
ஒரு சிறு கை
மெதுவாய் தொட்டுணர்கிறேன்

கசியும் நினைவுகளில்.....
உனக்கு, இது நான்
காதுக்குள் அசரீரியாய்
அன்றொரு நாள் கேட்ட
வாசனை வார்த்தைகள்

எடுத்தணைத்துக்கொள்கிறேன்
தந்தையர் தினத்தன்று
கிடைத்த கரடிப்பொம்மையை

மெதுவாய்
நினைவுகளின் மகா சமுத்திரத்தில்
நனைந்து மிதந்து தொலைந்து போகிறது
மற்றொரு இரவு

காத்திருக்கிறது
அசரீரீகளுடனான பகல்



.

பேரின்பக் காலங்களின் சுவடுகள்

இன்றைய காலைப் பொழுது,  நித்திரை கலைந்தாலும் ஏகாந்த நிமிடங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் ஏனோ பம்பரமாய் காலத்தைச் சுற்றிக்கொண்டிருந்தது. எனது இளையவளுக்கு மூன்று நான்கு  வயதிருந்த காலத்தில் எனக்கு யாதுமே அவளாய் இருந்த காலம். பெயரியவள் சற்று வளர்ந்திருந்ததால் அவளின் உலகம் சற்று வேறாய் இருந்தது எமக்கு இன்னும் வசதியாய் இருந்தது.

சனி ஞாயிறு காலைப் பொழுதுகள் மிகவும் மிருதுவான, இதமான இனிமையானவை. தூக்கம் கலைந்து ஏகாந்த நிமிடங்களை அனுபவிக்கும் போது ஓடி வந்து குதிரை ஓடுவாள் என் முதுகில். எனது ஏகாந்த நிமிடங்கள் பேரானந்த நிமிடங்களாகும். மெதுவாய் அள்ளியெடுத்து நெஞ்சிலிருத்தியதும் என்னுடன் பேசி, பாடி, கோபித்து, சிணுங்கி, சிரித்து மீண்டும் ஒரு குட்டித் தூக்கத்தினுள் நாமழ்ந்து போவோம்.

கைசூப்பியபடியே என் கையினுள் எக் கவலையும் இன்றி தூய்மையாய் தூங்கும் அவளை மணிக்கணக்காய் ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு நிமிடங்களும் ஆயிரம் கதை சொல்லும். அவள் முகம் கண்ணால் உட்புந்து இரத்தத்தில் கலந்துபோன காலங்கள் இவை.  தூக்கத்தில் முகபாவனைகள் சிரிப்பு, விம்மல், அழுகை, பேரமைதி என மாறிக் கொண்டிருப்பதும், அவள் தூக்கத்தில் சிரித்தால் நானும் சிரித்து, அழுதால் நெஞ்சுருகி அவளை அணைத்து ஆறுதல்படுத்தியும், நாம் மகிழ்ச்சியாய் வாழ்ந்திருந்த காலங்கள் அவை.

மீண்டும் தூக்கம் கலையும் போது அவளின் சினுங்கலுக்கு பதிலளித்தும், தலைகோதி, கலைந்த சுறுள் மயிர் ஒதுக்கும் போது கிடைக்கும் அவளின் மந்தகாரமான புன்னகைக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை. அத்தனை பேரழகு அது. அந்தக் காலை வேளையிலும் கதை கேட்பாள். புதிதாய் கற்பனையில் ஒரு சிறுமிப் பாத்திரம் உருவாக்கி சற்று வேகம், வீரம், கலந்தூட்டும் போது விரியும் கண்களின் அழகுக்காய் எத்தளை க‌தைகள் வேண்டுமானாலும் சொல்லலாம்.

அக்கா அறைக்குள் வருகிறாள் என்றால் வாயில் கைவைத்து ”உஸ்” என்பாள் அதனர்த்தம் நாம் போர்வைக்குள் ஒளியவேண்டும் என்பதே.  கால் முதல் தலைவரை முடிய போர்வைக்குள் தன் வாயை இரு கைகளாலம் பொத்தியபடி கண்ணால் சிரித்திருக்க, நானும் வாயில் விரல் வைத்து சத்தம் போடாதே என்னும் போது பதிலாய் கிடைக்கும்  பிரகாசமான கண்களும், அக்கா பொய்யாய் எங்கே பூக்குட்டியும் அப்பாவும் என்னும் போது அடக்க முயற்சித்து அடக்கமுடியாது வெளிவரும் ”களுக்” சத்தத்துடன் சிரிப்பும் கலந்து முடிவடையும் அந்த தேடல் படலம்.

அக்கா! ”குதிரை” என்பாள். கண நேரத்தில் இரு இளவரசிகளையும் நான் முதுகில் சுமந்திருக்க அவர்கள் காற்றில் கடுகிக்கொண்டிருப்பார்கள். என் ஆன்மா அந்த பேரின்பத்தை அனுபவித்திருக்கும். இடையிடையே அப்பா நோகுதா என்பார்கள். நொந்தாலும் அனுபவிக்கும் பரவசத்தில்  இல்லை என்ற ‌வார்த்தையே வெளிவரும்.

முதுகு வலிக்கும் நாட்களில் ”அம்மா, முதுகில் ஏறி நடவுங்கோ” என்பேன். பிஞ்சுக்காலால் முதுகில் நடப்பாள். அவள் நடப்பதாலும், நடக்கும் போது விழுவதாலும், விழுந்து சிரிப்பதாலும் என் வலிகள் மறைந்து போன இனிமையான காலங்கள் அவை.

எட்டு ஆண்டுகளின் பின்னான இந்தக் காலைப் பொழுது அப்படியானதாக இல்லை என்றாலும்.  நினைவுகளின் நீரூற்றில் தீயணைந்து போகிறது.

இன்றைய நாளும் நல்லதே!


எனது பூக்குட்டிக்கும், காவியாவுக்கும் இது சமர்ப்பணம்.


.

ஈரமான மனிதர்களும் எனது முட்டாள்த்தனங்களும்

வாழ்வில் எத்தனையோ தடவைகள் மனிதர்களின் புற அமைப்பையும் அழகையும் கொண்டு அவர்களை கணிக்கும் தவறைச் செய்திருக்கிறேன். ஆனால் வயது ஏற ஏற அத் தவறை செய்யாதிருக்க நான்  விரும்பினாலும் அது முற்றிலும் சாத்தியமாயில்லை என்பதை சில வாரங்களுக்கு முன் நடந்ததோர் சம்பவம் முகத்திலறைந்து சொல்லிற்று.

சில வாரங்களுக்கு முன் நான் நோர்வேக்கு வந்த ஆரம்ப வருடங்களில் கண்டிருந்த ஒருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. 1990 களின் ஆரம்பத்தில் அவரை நான் கண்டிருக்கிறேன். ஆனால் பேசிப் பழகியதில்லை. பேசிப்பழகும் ஆர்வத்தையும் அவரின் அந்தக்காலத்து நடவடிக்கைகள் தரவில்லை. அந்தளவுக்கு மிகவும் நல்லவராகவே தென்பட்டார் அந்நாட்களில், அவர். அப்போது அவரின் வயது 17 - 18 ஆக இருக்கலாம். கண்ணை விட மிகச் சிறியதாய் ஒரு கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பார், தலையைக் குனிந்து, கண்ணாடிக்கு மேற்பகுதியினால் பார்க்கும் அவரின் பார்வையை பலர் திட்டியபடியே செல்வதை கண்டும் கேட்டுமிருக்கிறேன்.

துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்னும் கொள்கையில் இருந்தவர்கள் இவரைக் காண்பதற்கு முன்பே விலகிப்:போனார்கள். அடிதடிகளின் போது இவர் இல்லாதிருந்தால் அந்தச் சண்டைக்கு மரியாதை அற்றிருந்தது. பேட்டை ரௌடி என்னும் பதம் அவருக்காகவே உருவாக்கப்பட்டதோ என்னுமளவுக்கு அச்சொல்லுடன் மிகவும் நெருக்கமாயிருந்தார் அவர், அந் நாட்களில்.

நான் 1990களின் ஆரம்பத்தில் வடமேற்கு நோர்வேக்கு இடம் பெயர்ந்த பின்பும் இவரின் வீரபிரதாபங்கள் அவ்வப்போது காற்றில் என் காதுக்குள் வந்தபடியே இருந்தன. ஒரு வித நம்பிக்கையீனமான உணர்வையே அவருடனான சந்திப்புக்களும், அவருடைய நடவடிக்கைகளும் எனக்கு தந்திருந்ததனால் அவரைப் பற்றி எனக்குள் ”ஒரு விதமான” எண்ணமேயிருந்தது.

ஏறத்தாள 16 வருடங்களின் பின்பு அவரைக் காண்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரும் நானும் அவரவர் வாழ்வின் முக்கியமான காலங்களை கடந்தும், 16 வருடங்கள் முதிர்ந்துமிருக்கிறோம். அன்று முதன் முறையாக அவருடன் கை குலுக்குகிறேன்.  அவர் என் கையைப்பற்றி அழுத்திய கணத்திலிருந்தே எனக்குள் இருந்த அவரைப் பற்றிய தப்பிப்பிராயங்கள் கரையத்தொடங்கியிருந்தன. வார்த்தைகளை தேடி எடுத்து மரியாதையில் நனைத்துப் பேசினார். அந்த முதல் நாளின் முதல் நிமிடங்களிலேயே என் மனச்சாட்சி தனது சாட்டையை என் மீது வீசத் தொடங்கியிருந்தது.

நாம் ஒரு குழுவாக ஒரு செயலைச் செய்ய அங்கு கூடியிருந்தோம். எனது பெயரைக் கேட்டறிந்தார்.  என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் உங்களை எனக்குத் தெரியாது என்று அவர் கூறிய போது அவரின் நகைச்சுவையுணர்வை உணர்ந்து கொண்டேன். அடுத்த வந்த பல நாட்களில் அவரிடம் என்னைக் கவர்ந்த அவரின் பல நடவடிக்கைகளில் அவரின் ”டைமிங் நகைச்சுவை”யும் ஒன்று.

நாம் சேர்ந்தியங்கவேண்டிய திட்டத்தின் காலம் ஏறத்தாள ஒரு வாரகாலமாய் இருந்தது.  நாம் திட்டமிடும் பணியில் இருந்த போது அவர் தன்னால் எது முடியும், எது முடியாது என்பதை மிகத் தெளிவாகத் அறிவிக்கும் அவரின் தெளிவு என்னை மிகக்கவர்ந்தது. நாம் திட்டமிடலுக்கு செலவளித்த நாட்களில் ஒவ்வொரு நாளும் தன்னைப் பற்றி புதிதாய் ஏதோ ஒன்றை எனக்கு அவர் அறிவிக்கிறார் போலவே உணர்ந்தேன். எமது திட்டம் நடைபெற்ற வாரத்தில் அவரால் செய்யக் கூடிய எந்த வேலையையும்ஒரு வித கண்டிப்புடன் செயது முடித்தார்.  நேர காலம் இன்றி ஓடி ஒடி உதவினார். மாலையில் அவரின் பணி முடிவுற்றதும் அவரின் நடை உடை பாவனை என்பன மாறி மிகவும் அன்னியோன்யமாக பழகினார்.

நாம் சேர்ந்தியங்கிய திட்டத்தில் உலகத் தமிழர்கள் மத்தியில், அகில இந்திய  ரீதியில் மிக மிகப் பிரபலமான மனிதர்கள் பங்கு பற்றினர். அவர்களுடன் நாம் சேர்ந்தியங்கிய அந்த 5 - 6 நாட்களில் அப் பிரபலங்களே மூக்கில் விரலைவைக்கும் அளவிற்கு அமைந்திருந்தது அவரின் நடவடிக்கைகள். அவரின் நடை உடை பாவனைகள், நகைச்சவையின் உச்சம், பாடும் திறமை, மனிதர்களுடன் பழகும் பண்பு என்பன  அப் பிரபலங்கள் அவரின் விசிரிகளாகுமளவிற்கு இருந்தன.

ஒரு நாள் அவரின் வாழ்வின் கதையை அவர் மூலமாகவே கேட்கக் கிடைத்தது. அவற்றை வேறு சிலருடன் பகிந்த போது அவர் கூறியவை முற்றிலும் உண்மை எனவும் புரிந்தது. அவரின் இளமைக்காலம் "கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை" என்பதாய் இருந்திருக்கிறது. நோர்வே வந்த பின்பும் துன்பியல் வேறு விதத்தில் தொடர்ந்திருக்கிறது அவரை. 30 வயதினை தாண்டு முன்பே மிகவும் கசப்பான வாழ்வினை தாண்டியும் அதற்கு தேவைக்கதிகமான விலையையும் கொடுத்திருக்கிறார்.

இவரைப் பற்றி இவ்வளவு அறிந்ததும் என்னிடமிருந்த எண்ணங்களை மாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் தன் வாழ்வனை கூறிய போது கூறாத ஒரு விடயத்தை வேறு ஒருவர் மூலமாக அறிந்த போது நான் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவேயில்லை.”அவன் தான் மனிதன்” என்னுமளவிற்கு அமைந்திருந்தது அவரின் செயல்.

அவரின் குடும்பத்தினை சில வாரங்களுக்கு முன் சந்திக்கக் கிடைத்தது. எனது பூக்குட்டியைப் போன்றதொரு பெண்குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும், மனைவியுமென மிகிழ்ச்சியாய் இருந்தது அவரின் குடும்பம்.  அவருக்கு திருமண ஆசை வந்த போது இலங்கைக்குச் சென்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்திருந்த ஒரு குழந்தைகள் பராமரி்ப்பு இல்லத்தில் வறமையின் காரணமாய் வாழ்ந்திருந்த ஒரு பெண்ணை திருமணம் இவர் செய்திருக்கிறார். இவரின்  நண்பரும் இவரைப் பின்பற்றியிருப்பது அவரின் நண்பரும் வித்தியாசமானவர் என்பதை அறிவிக்கிறது.

அவரின் அந்தச் செயலை அறிந்த அன்றிரவு அவரைப் பற்றி நினைத்திருந்தேன். வாய்ப்பேச்சில் வல்லவர் வாழும் இந்த உலகில் இப்படியும் மனிதர்களா என்பது ஆச்சர்யமாயிருந்தாலும் இவர் அப்படி செய்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இப்படியான முடிவுகளை எடுத்து அதை சாதிக்க எத்தனை மனப்பக்குவம் வேண்டும் என்றெல்லாம் எனது சிந்தனையோடிக்கொண்டிருந்து.

நான் கணடு ஒதுங்கிப்போன அந்த இளைஞனுக்குள் இத்தனை பக்குவமா என்று அதிசயத்திருந்தேன். அந்த ரௌடியிசத்தினுள் எத்தனை மென்மையிருநதிருக்கிறது. கல்லுக்கள்ளும் ஈரமிருக்கிறது என்பதும் அப்போது தான் புரிந்தது. வெட்கிப்போனேன் எனது முட்டாள்த்தனத்தையெண்ணி.

தற்போதுஅவர் ஒரு திரைப்படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார் என்றறிகிறேன். அது பற்றி கேட்ட போது அடக்கமாய் ”ஆம” என்று தலையாட்டினார். என் மனமெல்லாம்  எதற்காகவோ ஏகாந்தமாய் மாறியிருக்க ”நம்பியார் சாமி”  என்றழைக்கப்படும் வில்லன் நம்பியார் மனதில் வந்து போனார்.

அகத்தின் அழகே அழகு என்று எங்கோ அறிந்ததன் உண்மை இப்பொது தான் புரிந்திருக்கிறது. இப்போதாவது எனக்குப் புரிந்ததில் மகிழ்ச்சியே.

இன்றைய நாளும் நல்லதே.


.

காப்பாத்துங்கய்யா காப்பாத்துங்க..

சில மாதங்களுக்கு முன் ஒரு இளிச்சவாயனும் ஒரு சுத்தத் தமிழனும் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அன்றுடன் சனி விட்டது என்று நினைத்திருந்தது தப்பாகிவிட்டது.

இன்று மதியம் ”வான் நிலா,  நிலா, நிலா ”  என்ற பாடலைக் கேட்டபடி எனது பால்ய காலத்து பைங்கிளியின் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தேன். திடீர் என வீட்டின் அழைப்பு மணியடித்து எனது தவத்தைக் கலைத்தது. எனது நண்பர் கதவைத் திறந்தார். நான் எனது அறைக்குள் நின்றிருந்தேன், அழைப்பு மணியை அடித்தது யாராயிருக்கும் என்ற சிந்தனையில். கதவைத் திறந்த நண்பரையும் தள்ளிக்கொண்டு வந்து எனது அறைக்குள் நுளைந்தார் அந்த சுத்தத் தமிழன். தனது வீட்டுக்குள் நுழையும் அதிகாரமும், அலட்சியமும் இருந்தது அவரது நடையிலும், பார்வையிலும். நான் எனது அதிர்ச்சியில் இருந்து மீள முன்  அவர் வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.

”உவளோட பெரிய பிரச்சனையா இருக்கு, இத ஒருக்கா வாசித்துச் சொல்லுங்க” என்றார் அசிங்கமான அன்பினை பல்லில் காட்டியபடி.

எனது எரிச்சல் கொதி நீர் நிலையில் இருக்க, மனேமோ இவரை எப்படியாவது வெளியில் அனுப்பு  என்றபடியிருந்தது.

”யாரோட பிரச்சன” என்றேன் அப்பாவியாய்.
”உவள் தான்.. மனிசியோட” என்றார்.
அவரும் மனைவி விடயத்தில் அடக்கமான தமிழன் என்பது புரிந்தது. எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
”பொறுங்கோ, டவுனுக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன். சற்றுப் பொறுங்கள் மொழிபெயர்க்கிறேன் என்றேன் சிறிது பொய் கலந்து.
”இல்ல  இல்ல, நான் வேலைக்கு போக வேண்டும், இப்பவே சொல்லுங்கள், காத்திருக்க நேரமில்லை” என்றும் தொனியில் கட்டளையிட்டார் தமிழன்.

நான் எனக்குள்,
நான் என்ன அவ்வளவு கேனயனாகவா தெரிகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். அவரின் பார்வை அதை ஆமோதித்தது போலிருந்தது.

கடிதத்தை வாங்கினேன். வாசித்தேன். அவர் விண்ணப்பத் முடிவுத்திகதிக்கு பின் தனது குழந்தைக்கு குழந்தைகள் காப்பகத்தில் இடம் கேட்டு விண்பத்திருப்பதால் அவரின் குழந்தைக்கு முன்னுரிமை வழங்கமுடியாது என்றிருந்ததை விபரித்தேன்.  என்னுடன் சண்டைக்கு வந்துவிட்டார் மனிதர். நான் அந்த திகதிக்கு முன்பு தானே விண்ணப்பித்தேன் என்றார்.
குரல் உயர்ந்து தடித்தது.
கண்கள் விரிந்தன.
பேசும் போது எச்சில் பறந்தது.
ஏதோ நான் தான் அவரின் குழந்தைக்கு இடம் தர மறுத்தது போல் குதித்தார்.

”பு. ம” என்று செந்தமிழிலும் ஆராதித்தார்.
”இவர்கள் நிறவாதிகள்” என்றார்


நான் மெதுவாய் நீங்கள் இதை என்னிடம் சொல்லுவதால் என்ன பிரயோசனம்? நீங்கள் அவர்களிடமல்லவா இதைச் சொல்ல வேண்டும் என்றேன், மெதுவாய்.
சற்று அமைதியானார் மனிதர். எனது நண்பர் கதவுக்கு அப்பால் இருந்து எட்டிப்பார்த்தபடியே இருந்தார்.  எனது பாதுகாப்பில் அவருக்கு சந்தேகம் வந்திருந்ததாகவே நான் கருதினேன். நானும் அப்படியே உணர்ந்திருந்தேன்.

ஒரு விதமாக அவரை எனது அறையில் இருந்து அழைத்தபடியே வீட்டை விட்டு வெளியேறினேன். இருவரும் எனது வாகனத்தை கடந்த போது அந்த சுத்தத் தமிழன் இப்படிக் கூறினார்.

கடந்த வாரம் ஒரு நாள் இரவு 1 மணியோல் தான் எனது வாகனத்தை கடந்த நடந்து சென்ற போது எனது வாகனத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு எட்டிப் பார்த்தாராம். எவரும் இல்லாததால் திருடர்கள் எனது வாகனத்தை உடைத்துவிட்டார்கள் என நினைத்தால்  தான் மெதுவாய் அவ்விடத்தை விட்டு அகன்றதாகக் கூறினார்.

நானும் ”ஏன் எனக்கு நீங்கள் அதைப் பற்றிக் கூறவில்லை?” என்றேன். போலீஸ் கேஸ் என்றாகிவிட்டால் தனது உழைப்பு கெட்டுவிடும், போலீஸ்க்கு ஏறி இறங்க வேண்டும் என்றார், இந்தக் கேனயனின் தமிழ் நண்பர்.  நான் மனதிற்குள் அவரை ஏறத்தாள பல முறை கொலை செய்திருந்தேன்.


நண்பர் கூறிய அந்த நாள் அன்று மிகவும் அதீத களைப்பில் வந்த நான் வாகனத்தின் கதவை மூட மறந்து சென்றது என்னமோ உண்மை தான். நான் வீடு வந்த போது நேரம் இரவு 12:30 இருக்கும்.

அதை எனது நண்பர் 1 மணிக்கு கண்டிருக்கிறார். எனது வீடு 100 மீற்றர் தூரத்தில் இருந்தும் அவருக்கு என்னிடம் வந்து அதைப்பற்றி அறிவிக்க மனமிருக்கவில்லை.  மறுநாள் காலை நான் வாகனத்தினருகில் சென்ற போதே எனது ஞாபகமறதியை உணர்ந்து கொண்டேன். வாகனத்தினுள் இருந்த எதுவும் களவு போயிருக்கவில்லை.

நான் ஞாபகமறதிக்கு பெயர் பெற்றவன் என்பதை எனது நண்பர்கள் நன்கு  அறிவார்கள். அண்மையில் நண்பர்களாகிய  திரைப்பட இயக்குனர்கள் சேரன், சந்தோஷ், ராதாமோகன், பிரபுசாலமன், சீனு ராமசாமி ஆகியோரும் என்னை சஞ்சய் ராமசாமி என்றே அழைக்கிறார்கள் (கஜனி திரைப்படத்தில் சூர்யாவின் பெயர் அது தான்).


அந்த சுத்தத் தமிழனின் நெஞ்சழுத்தத்தை நான் வியந்து போனேன். என்னிடம் ஒரு உதவி கேட்டு வருகிறார். உதவியையும் பெறுகிறார். அன்றொரு நாள் அவரை நான் பயங்கரமான இக்கட்டில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன். அன்று நான் காப்பாற்றியிருக்காவிட்டால் நாறியிருப்பார் மனிதர்.

ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யும் நேரம் வந்த  போது நமக்கேன் பொல்லாப்பு என்று ஒதுங்கியோடிருக்கிறார். அவருக்கு எனது வாகனத்தின் கதவு அந்த இரவில் திறந்திருந்ததை 100 மீற்றர் நடந்து வந்து சொல்லமுடியாமல் போயிருக்கிறதே? தனது செயலை எவ்வித கூச்சமோ, தயக்கமோ  இன்றி என்னிடமும் கூறுகிறார்.

அவரின் மேலில்லாதிருந்த மரியாதை மேலும் இல்லாது போயிருந்தது.

”நான் போய் வருகிறேன்” என்றேன் அவரிடம்.
”எங்க போறீங்கள்? வேலைக்கோ?” என்று புதினம் புடுங்கினார். ஓம் ஓம் என்று சொல்லியபடியே புகையிரத நிலையத்தின் பக்கமாய் ஓடுவது போல் பாசாங்கு செய்தேன்.

எனக்குப் பின்னால்....

” நாளைக்கு வாறீங்களே அந்தக் கந்தோரில போய் கதைப்பம்” என்று ஒரு குரல் கேட்டது. எனது ஓட்டம் வேகமெடுத்தது. எனது பின்னங்கால் எனது பிடரியில் அடிபடுவது போலிருந்தது எனக்கு. ஓடினேன் ஓடினேன் ஒஸ்லோவின் எல்லைக்கே ஓடினேன்.

ஒரு மனிதன் எவ்வளவைத் தான் தாங்குவது.... ..........  ஷப்பாஆ .. தாங்கமுடியலடா சாமீ.


.