வறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி

வறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி

அன்றைய தினம் காலையிலேயே எழுந்து விட்டேன். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் தேர்த்திருவிழாவினை காண்பதற்ககாவும், கொக்கட்டிச்சோலைக்கு சற்றுத் தொலைவில் வாழும் ஒரு முன்னாள் போராளியைச் சந்திப்பதாகவும் திட்டமிட்டிருந்தோம். மோட்டார்சைக்கில் மண்முனைக் கரையில் நிறுத்தப்பட்ட போது நேரம் 10 மணியிருக்கும். வாவியைக் கடப்பதற்கு உதவும் மிதப்புப் பாதைகள்  இரண்டும் இரு ‌கரைகளிலும் இருந்து புறப்பட்டு ஆற்றின் நடுவே வந்து கொண்டிருந்தன. ஒரு மிதப்புப் பாதையில் ஒரு சிறு வாகனம் ஏற்றப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் கனத்தை தாங்க முடியாமல் ஒரு பக்கமாய் சாய்ந்தபடியே வந்துகொண்டிருந்தது, அந்த மிதப்புப்பாதை.  பாதை கரைக்கு வந்ததும் நாமும் ஏறிக்கொண்டோம்.  எம்முடன் ஒரு ஆட்டோவும், பல மோட்டார்சைக்கில்களும், மனிதர்களும் ஏறிக்கொண்டனர். நான் பயந்திருந்தபடி அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி பாதை எம்மை மறுகரையில் இறக்கிவிட்டது.

பறவைக்காவடிகள், முள்ளுக்காவடிகள், பக்கதர்கள் என்று பலரையும் கடந்தபடியே மேட்டார் சைக்கில் ஓடிக்கொண்டிருந்தது. வீரமும் சோகமும் விளைந்த கொக்கட்டிச்சோலைக்குள் நாம் நுளைந்த போது எமது மோட்டார்சைக்கிலை மேலே செல்ல அனுமதிக்க முடியாது என்றார்கள் திருவிழாவின் வாகனங்களை கட்டுப்படுத்தும் இளைஞர் கோஸ்டியினர். அவர்கள் காட்டிய இடத்தில் நிறுத்தும்படியும் கட்டளை வந்தது. அப்போது எனது வழிகாட்டி நண்பர் வாயில் விரலை வைத்து விசில் அடிக்க, அருகில் இருந்த ஒருவர் ”அண்ணை நீங்களா” என்ற படியே அருகில் வந்தார். அடுத்த நிமிடம் எமக்கு தொடர்ந்து செல்ல அனுமதி கிடைத்தது.

எனது வழிகாட்டி நண்பருக்கு எங்கு சென்றாலும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அவருக்கு தெரியாத ஒழுங்கையோ, தெருவோ, ஊரோ இருக்காது என்னுமளவுக்கு மனிதர் படுவாங்கரையை அறிந்துவைத்திருந்தார். சேவை நோக்கம் கொண்ட அவரை ஊர் பெருசுகள் எல்லோரும் பலரும் அறிந்திருந்தனர்.

படுவாங்கரை கடந்து சிறிது நேரத்தில் நாம் ஒரு சிறு கிராமத்தினுள் நின்றிருந்த போது எனது நண்பர் தொலைபேசியூடாக நாம் இன்று சந்திக்கவிருப்பவருடன் தொடர்புகொண்டு இடத்தை நிட்சயப்படுத்திய பின்னர் ஒரு சிறு ஒழுங்கையினூடாகச் சென்று ஒரு வீட்டின் முன் மோட்டார்சைக்கிலை நிறுத்தினார்.  எம்மை நோக்கி ஒரு சிறுவன் ஓடி வந்தான். அவனின் பின்னே அவனின் தாயார் வந்தார். உள்ளே செல்லமுடியாத அளவிலான ஒரு குடிசை. வெளியே கிணற்றிகு அருகே மரநிழலில் அமர்ந்து கொண்டோம். எம்மருகிலேயே அமர்ந்து கொண்டார் அந்தப் பெண்ணும்.

அவரின் ஒரு கை சிதைந்திருந்தது. தோள்மூட்டுக்கும் முழங்கையுக்குமான இடைவெளி மிகவும் சிறிதாக இருந்தது. நான் அதை கவனி்ப்பதை கண்ட அவர்,  2008ம் ஆண்டு இறுதியில் முழுமாதக் கர்ப்பிணியாக இருந்த போது செல் பட்டு தனது கை முறிந்த போது அதை மருத்துவர்கள் தகடுகள் வைத்து காப்பாற்றியதாகவும், அப்போது ‌தோள்மூட்டுக்கும் முழங்கையுக்குமான எலும்பில் பெரும்பகுதி அகற்றப்பட்டதாகவும் கூறினார். அந்தக் கையினால் எதுவித வேலைகளையும் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டதாகவும் எனினும் கணவரை முள்ளிவாய்க்காலில் இழந்பின் கைக்குழந்தையை பராமரிப்பதற்காக அந்தக் கையை பாவித்ததனால் கையினுள் இருந்த தகடுகளும் ஆனிகளும் இடம்பெயர்ந்து பலத்த சிரமத்தை தந்த போது மீண்டும் வைத்தியர்களை அணுகியிருக்கிறார். ‌ அவரது கையை பரிசோதித்த வைத்தியர்கள் கையை அகற்றுமாறு அறிவுரை கூறிய போது அதை மறுத்து மீண்டும் ஒரு வைத்தியரிடம் சென்ற போது அவர் இந்தக் கையை காப்பாற்றுவது மிகக் கடினம் ஆனால் முயற்சிக்கிறேன் என்று முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்தக் கையால் எதுவித பாரத்தையும் தூக்கினால் கையை அகற்றவேண்டி வரும் என்னும் செய்தியும் கூறப்பட்டிருக்கிறது அவருக்கு.

அவர் வீட்டில் நான் தங்கியிருந்த போது அவர் கிணற்றில் நீர் அள்ளும் முறையைக் கண்ணுற்றேன். ”கப்பியில் இருந்த வரும் கயிற்றை ஒரு கையால் இழுத்து பின்பு குனிந்து இழுத்த கயிறை வாயினால் கவ்வி மீண்டும்  கயிற்றை இழுத்து” இவ்வாறு நீரை அள்ளுகிறார். இவரை இவரது வயதான தகப்பனாரே கவனித்துவருகிறார். ஆனால் அவர் தொழில் தேடிச் செல்லும் போது இவர் தனியேயே வாழ்க்கையை நடாத்துகிறார்.

தன்னால் தலை சீவி முடிகட்டவோ, உடைகளை ஏனையவர்கிளன் உதவியின்றி மாற்றிக்கொள்ளவோ முடிவதில்லை அவரால்.  குழந்தையை ஒரு கையால் பராமரிக்க மிகவும் சிரமப்படுகிறார். அவரின் உறவினர் ஒருவரின் உதவி கிடைக்கிறது என்பதனால் சமாளிக்கமுடிகிறது என்றார்.

அவரது உடலெங்கும் காயங்கள். ஒரு காலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவரும் கணவரும்  போராளிகளாக இருந்திருக்கிறார்கள்.  2008 ம் ஆண்டு இறுதியில் காயப்பட்ட பின்னர் பிரசவம் நடந்திருக்கிறது. அதன் பின்பும் 2009ம் ஆண்டு மீண்டும் காயப்பட்டிருக்கிறார். காயங்களின் வலியும், சூழ்நிலைகளும் மன அழுத்ததை கொடுத்திருக்கின்றன. அந் நாட்களில் கணவரும் கொல்லப்பட மனம்பேதலித்து சில காலம் இருந்ததாயும், அந் நாட்களில் குழந்தையையும் தூக்கியபடியே பங்கருக்கு வெளியில் நின்றிருந்த நேரங்களில் அருகில் இருந்தவர்கள் இவரை பல முறை உள்ளே  பங்கரின் உள்ளே இழுத்து காப்பாற்றியதாகவும் கூறினார்.

அப்படி  அவர்  செல் மழைபோல் கொட்டிய நேரங்களில் வெளியே நின்றும் தனக்கு மரணம் வரவில்லையே என்று கூறியழுதார். முள்ளிவாய்க்கால் நாட்களின் பின் வருமானமின்றி, குழந்தைக்கான உணவுகளின்றி வாழ்ந்திருந்த நாட்களில் இரு தடவைகள் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்று தோற்றிருக்கிறார்.

இவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரின் படலைக்கருகே வந்த ஒருவருடன் உரையாடிவிட்டு வந்தார். அவர் கண் கலங்கியிருந்தது. ஏதும் பிரச்சனையா என்றார் எனது நண்பர்.

அண்மையில் கையை இரண்டாம் தரம் சத்திரசிகிச்சை செய்வதற்காக பணம் தேவைப்பட்டிருக்கிறது. உள்ளூரில் 20.000 ரூபா வட்டிக்கு எடுத்திருக்கிறார். மாதாந்தம் வட்டியாக 1200 ருபாய் கொடுத்துவந்திருக்கிறார்.  ஏறத்தாள ஒரு வருடத்தின் பின்பும் கடன் வாங்கிய தொகை குறையவில்லை. வட்டியை மட்டுமே கொடுத்திருக்கிறார். தற்பொது  கடன் வாங்கிய தொகை மீளச் செலுத்தமாறு கேட்டுப்போகிறார் வட்டிக்குப் பணம் வழங்கியவர்.

20000 ரூபாவுக்கு 1200 ரூபா வட்டி என்பது எனக்குப் நம்ப முடியாத தொகையாக இருந்ததால் இரு தடவை அது பற்றி மீண்டும் மீண்டும் விசாரித்தேன். அருகில் இருந்த நண்பர் ஆம் இது ஊர் வட்டி. அவர் சொல்வது உண்மைதான் என்றார். என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

எவ்வாறு இந்த வட்டிக்கான பணத்தைக் கொடுத்தீர்கள் என்று கேட்டேன். ஒரு உதவி நிறுவனம் தனக்கு தரும் 2000ரூபாயில் இந்தத் தொகையை செலுத்துவதாகவும் மிகுதியிருக்கும் 800 ரூபாயில் மாதச் செலவை கவனிப்பதாயும் கூறினார்.  சில நிமிடங்கள் பெருத்த மௌனமொன்று எம்மிடையே நிலவிற்று.

சிகிச்‌சைக்கான பணம் தேவைப்பட்டபோது தனது காணித்துண்டினை  பொறுப்பாகவைத்து கடன்பெற்றிருக்கிறார். அது தற்போது 1 இலட்சம் ருபாவாக வளர்ந்து நிற்கிறது என்றார்.

போராட்டத்திற்காக வாழ்வினை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு இத்தனை கொடியதாக இருக்கும் என்று நான் கற்பனையிலும் நினைத்ததில்லை. கற்பனைக்கும் அப்பாற்பட்ட வேதனைகளையும்‌ சோதனைகளையும் கொண்டிருக்கிறது அவர்களது வாழ்வு.

அங்கிருந்தபடியே நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து இவருக்கு உதவ முடியுமா என்றேன். மிக விரைவிலேயே இந்தப் போராளியின் கடனை அடைப்பதற்கான பணத்தை அனுப்பபுவதாகப்பதில் அனுப்பியிருந்தார், நண்பர்.  அன்று மாலையே எனது வழிகாட்டி நண்பர் வட்டிக்கு கொடுத்தவரிடம் சென்று இந்தப் போராளியின் கடனை அடைத்தார். அதன் பின்பு நாம் கொக்கட்டிச்சோலை தேர்த்திருவிழாவில் அவரைச் சந்தித்த போது நன்றி என்று கூறி தான்தோன்றீஸ்வரர்தான்  உங்களை இன்று அனுப்பியிருக்கிறார் என்றார். எந்த நன்றியும்  எனது நண்பருக்கே உரியது என்று கூறினேன்.  அவர் முகத்தில் ஒருவிதமான அமைதி தெரிந்தது. இதற்குப் பின்னான நாட்களில் இவரின் வேறுசில கடன்களையும் இன்னொரு நண்பர் செலுத்தி அவரின் காணிக்கான உறுதியையும் பெற்றுக்கொடுத்தார். இவர்களை விட வேறுசிலரும் இவருக்கு தற்போது உதவுகிறார்கள்.

அன்று மாலை மட்டக்களப்பில் ஒரு உணவகத்தில் மாலையுணவின் விலை 800ருபா என்ற போது உணவின் ருசியை மனச்சாட்சி தின்றிருந்தது.


நோர்வே வந்தபின் ஒரு நண்பருடன் உரையாடியபோது அவர் அந்தப் பெண்ணிண்  அனைத்துக் கடன்களையும் தீர்த்துவைத்தார்.

----------------------------------
அறாவட்டிக்கு இவர்களுக்கு பணம் கொடுத்து கொழுக்கும் பண முதலைகள் ஏனோ நல்லவர்கள் போல் தெரிகிறார்கள் போராட்டத்தின் பெயரால் ‌சேர்த்த பணங்களை சுருட்டிக்கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது.

அறா வட்டிக்கு பணம் கொடுப்பவன் ஏதோ ஒரு வழியில் இவர்களது வாழ்விற்கு உதவுகிறான் என்றே கூறவேண்டும். ஆனால் மக்களுக்காக வழங்கப்பட்ட பணத்தையே சுருட்டிக்கொண்ட மகான்கள் போராளிகளை மறந்துபோயிருப்பினும் இன்றும் மக்கள் கூடுமிடங்களில் இன்றும் பணம் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மறைந்து விட்ட போராளிகளுக்கு  பெரியளவில்அஞ்சலி செய்யும் இவ்வமைப்புக்கள், உயிர்வாழ்வதற்கு போராடும் இம் மனிதர்களைக் கவனிக்காத காரணமும், போராளிகளின் இன்றைய நிலைபற்றி மக்களிடம் எடுத்துக் கூறி புலம் பெயர்ந்து வாழும் மக்களை உதவி தேவைப்படுபவர்களுடன் இணைப்பதற்கான முயற்சிகளை எடுக்காதிருப்பதற்கான காரணமும் என்ன? தெரிந்தால் பதில் அறியத்தாருங்கள். நானும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

2 comments:

  1. மனம் வலிக்கிறது எமக்காய் தமது அனைத்தையும் இழந்து போராடியவர்களின் வாழ்வின் துயர்கண்டு. நிச்சயம் இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு எம்மாலான உதவிகளை செய்வது எமது கடமை. அதற்காக புலம் பெயர்ந்தவர்களை கொச்சைப்படுத்துவது தவறு. அவர்களுக்கு அறியப்படுத்தினால் நிச்சயம் உதவுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

    ReplyDelete
  2. மறக்ககபட்ட, மறைக்படுகின்ற கசப்பான உண்மைகள்.

    -இடிமுழக்கம்-

    ReplyDelete

பின்னூட்டங்கள்