இடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமையக் கடவதாக!

அண்மையில் ஒரு தொலைபேசி அழைப்பினூடே ஒருவர் பேசினார். அவரை நான் சில காலங்களாக அறிவேன்.  ஏனைய தமிழர்களைப்போலல்லாது நேரடியாகவே விடயத்துக்கு வந்தார். அவரின் வாழ்வின் போராட்டத்திற்கு வழிகேட்டார். நானே, திசைதெரியாது தடுமாறிக்கொண்டிருக்கிறேன், என்னிடம் வழி கேட்கிறீர்களே என்று கூறினேன்.  சிரித்தார். சேர்நது சிரித்தோம்.

அடுத்து வந்த ஒரு மணிநேரமும், ஒரு வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்து, அவ் வாழ்க்கை முர்ச்சையடையும் நிலைவரையிலான கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நானும் இவ்வாறான நாட்களை கடந்து கொண்டவன் என்பதால், சோகங்களைப் பகிர்ந்துகொள்வதன் அவசியத்தையும், அது தந்து போகும் ஆறுதலையும் நன்கே உணர்ந்திருக்கிறேன். இன்னொருவரின் சோகங்களை ஒருவர் பகிரும் போது அமைதியாய் செவிமடுத்தபடியே, அவர்கள் மனம் திறந்து பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் அவரின் சோகங்களின் கனம் பலமாய் குறைந்து போகும் என்பதனை நான் எனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளினூடே அனுபவரீதியாக உணர்ந்துகொண்டுள்ளேன்.

அவர் கூறிய ஒரு வசனம் என்னை பலமாய் சிந்திக்க வைத்தது.

”நானோ, மூர்ச்சையடையும் நிலையி்ல் இருக்கிறேன், என்னைச் சுற்றியிருப்பவர்கள் எனக்குச் செய்யும் முதலுதவி  என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறது” என்றார் அவர்.

வாழும் கலை என்னும் நோர்வேஜியப் புத்தக்தை வாசித்தபோது அதில் ஒரு முக்கிய கருத்தொன்று கூறப்பட்டிருந்தது. ” வாழ்வினை இன்னொருவருடன் சேர்ந்து, பகிர்ந்து வாழும் போது மற்றையவர் மீதான மரியாதையும், சுய மரியாதையும் இவற்றோடு அன்பும், காதலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கவேண்டும்” என்றிருந்தது.

இவை எத்தனை உண்மையான வார்ததைகள் என்பதை வாழ்க்கை எனக்குக் கற்பித்திருக்கிறது. அவற்றைக் கற்று, உணரும் போது நான், வாழ்வின் பெரும்பகுதியை கடந்தும், தொலைத்தும் இருப்பதை உணர்கிறேன்.

ஒருவர் இல்லையேல் மற்றவர் இல்லை என்று  ஹோர்மோன்களின் ஆட்டங்கள் உச்சத்தில் இருக்கும் போது நினைத்திருந்த இருவரும் தனித்தனியே, மற்றையவர் போய்த் தொலையமாட்டாரா என்று நினைக்கும் நிலை எதனால் உருவாகிறது?

எப்போது நாம் மற்றையவர் எனக்குச் சொந்தமானவர் என்றும், அவரின் செயல்கள், கருத்துக்கள் போன்றவை என் செயல்கள், கருத்துக்கள் போன்றிருக்க வேண்டும் என்றும், மற்றையவரின் கருத்துக்கள், செயல்களுக்கு நாம் மதிப்பளிக்காமலும், என்று நாம் செயற்பட ஆரம்பிக்கிறோமோ அன்றே அவர்கள் இருவர்களுக்கிடையிலும் கருத்துவேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன.

கணவன், மனைவி, குழந்தை இப்படி எல்லா மனிதர்களிடத்தேயும் அவரவர்களுக்கென்ற ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்தத் தனித்தன்மையினுள் மற்றயவர்கள் புகுவது ஒரு வித மனிதஉரிமை மீறலே.

அன்பின் முக்கிய அம்சங்களாக ஒருவரை ஒருவர் மதிப்பதும், ஒருவரை ஒருவர் செவிமடுப்பதும் இருக்கின்றன.

இரு மனிதர்கள் சேர்ந்துவாழும் உறவானது இருவரின் தனித்தன்மைகளும் இருவராலும் மதிக்கப்படும் போதே பலமானதோர் உறவாக மாறுகின்றது. இக் கருத்தானது இருவரினதும் சுயமரியாதையில் இருந்தே உருவாகிறது.

ஒரு மனிதனின் சுயமரியாதை அலட்சியப்படுத்தப்படும் போது அமைதியாயிருக்கும் விடுதலையுணர்வு விளித்துக்கொள்வதாயே நான் எண்ணுகிறேன். அதன் காரணமாய் ”ஏன்” என்னும் கேள்வியும், அதனால் தொடரும் வாதப் பிரதிவாதங்களும், அதிகாரமனப்பாங்கும், அதிகாரப் போட்டியும் பல மனிதர்களின் வாழ்வில் விளையாடியிருக்கிறன்றன. விளையாடுகின்றன.

என்னுடன் தொலைபேசியில் உரையாடிவரின் சுயமரியாதை பலமாய் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரினுள் இருந்த விடுதலையுணர்வு கேள்வியெழுப்ப, அவரின் வாழ்வு கேள்விக்குறியாய் இருக்கிறது தற்போது.

”பல்லைக்கடிச்சுக்கொண்டு இரு”, ”பிள்ளைகளுக்காக பொறுத்துக்கொண்டு போ”, ”நீதான் விட்டுக்குடுத்துப்போகவேணும்” என்று இப்ப‌டி பல பல ஆலோசனைகளை இருபாலாருக்கும் கூறுபவர்கள் ஒரு மனிதனின் சுயமரியாதையை தாம் மதிக்கவில்லை என்பதை உணர்கிறார்கள் இல்லை என்பதே மிகவும் வேதனைக்கரிய விடமாகும்.  
 
குடும்பக் கப்பல் தண்ணீரில் முழ்கிறது எனக்கு உதவுங்கள் என்று கூக்குரலிடும் ஒருவருக்கு ”கப்பலுக்குள் வரும் தண்ணீரை இறைத்தால் கப்பல் தாளாது” என்று அறிவுரை கூறுபவர்களே எமது சமுதாயத்தில் அதிகமாக இருக்கிறார்களே அன்றி, கப்பலில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து, கப்பலுக்குள் நீர் புகாது இருக்க நடவடிக்கைகளை இருவரும் எடுங்கள் என்று கூறுபவர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள்.

உறவுகள் பிரியும் போது, அந்த உறவுக்குள் அதிக அதிகாரத்துடன் இருந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மற்றையவர் பிரிந்துபோகும் காரணம் புரிவதில்லை. அவ் அதிகாரத்தின் காரணமாகவே மற்றையவரின் சுயமரியாதை காயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியாது போகிறது, அவரால். இந்த அதிகார மனப்பான்மையினால் அவர் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்வதோ, மாற்றங்களை மனதார ஏற்று நடைமுறைப்படுத்துவதோ இல்லை. பல சொற்களை விட ஒரு செயல் வீரியமானது என்பது இங்கும் பொருந்துகிறது.

சில உறவுகள் காயப்படத் தொடங்கியபின் அவ்வுறவுகளில் அதிகாரத்தில் உள்ளவர்களின் குற்றச்சாட்டுகள் காலப்போக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனதில் ”என்னில் தான் ஏதோ பிழை” என்னும் மனநிலையை உருக்கிவிடுகிறது. இது அவரது சுயநம்பிக்கையை மட்டுமல்ல சுய மரியாதையும் கலைத்துப்போடுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் நடைமுறைப்படுத்தும் ”முளைச்சலவை” கருத்துக்கள், மற்றையவரை நேர்மையாக சுயவிமர்சனம் செய்வது போன்று அல்லாது, தமது கருத்தினை மறைமுகமாக வலியுறுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் மற்றையவரை வைத்திருக்கும் வடிவமாகவே இருக்கும்.

எனது தொலைபேசி நண்பரும், தான் மூளைச்சலவை செய்யப்படுதாயும், தனது சுயம் மறுக்கப்படுவதாயும், தனது நெருங்கிய சகோதர ‌சகோதரிகள், உறவினர்கள் கூட தனது சுயத்தை மதிக்காமல், கலாச்சாரம் என்னும் சொற்பதத்தினுள் தன்னை முர்ச்சைதெளிவிப்பதாய் நினைத்து முழ்கடிப்பதாய் உணர்வதாயும் கூறினார். 
 
புரிகிறது, நான் கடந்து வந்த பாதையில் நடந்துகொண்டிருக்கும் பலரைப்போன்று நீங்களும் நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்றேன்.  சிரித்தார், அவர். சேர்ந்து சிரித்தோம்.

ஓருவருக்கு நாம் சுதந்திரமளிக்கும் போது, அவனை அல்லது அவளை நீங்கள் இழப்பதற்கான அபாயம் இருக்கிறது என்பது உண்மையே, ஆனால் சுதந்திரமில்லாத ஒரு மனிதனை நீ பெற்றிருப்பாயானால் அம்மனிதனை நீ ஏற்கனவே இழந்துவிட்டாய் என்று எங்கோ வாசித்திருக்கிறேன். 
 
இவையிரண்டுக்குமிடையே தான் வாழ்வின் இரகசியம் ஒளிந்திருக்கிறது.

ஒரு குடும்பஉறவில் மகிழ்ச்சியாய் நாம் இருக்கவேண்டும் எனில் நாம் முக்கியமாக ஒன்றை உணர்ந்திருக்கவேண்டும் என்கிறார் ”வாழும் கலை”  புத்தகத்தின் எழுத்தாளர். அதாவது உனது எல்லாவிதமான தேவைகளை, உணர்ச்சிகளை மற்றவரால் திருப்தி செய்ய முடியாது என்பதை நீ மிகவும் தீர்க்கமாய் உணரவேண்டும், உன் தேவைகளை திருப்திசெய்யும் மனிதனை நீ பெற்றிருப்பாயானால் உன் தேவைகள் உனக்கு இருக்கவேண்டிய தேவைகளின் அளவை விட குறைந்திருக்கிருக்கிறது என்று  அர்த்தப்படுகிறது என்கிறார் அவர்.

தொலைபேசி நண்பரிடம், நீங்கள் இருவரும் மூழ்கும் கப்பலுக்குள் நீர் உட்புகாதிருக்கும் நடவடிக்கைகளை எடுங்கள். இருவரும் சேர்ந்தே கப்பலுக்குள் இருக்கும் நீரை அகற்றுங்கள். இருவரும் கப்பலை முழுமனதாக காப்பாற்றுவதற்கு முன்வராவிட்டால், கப்பல் மூழ்குவது நிட்சயம். அப்போது தற்பாதுகாப்புக்காக இருக்கும் கப்பலில் ஏறிக் கரைசேருங்கள், என்றேன்.

குழப்புறீங்களே என்று கூறி தொலைபேசியை வைத்தார்.
 
வாசகர்களாகிய உங்களையும் நான் குழப்பிருந்தால் மன்னியுங்கள். யார் கண்டது நானும் குழம்பியிருக்கிறேனோ என்னவொ?

வாழ்க்கை சொர்க்கத்தில் (வானத்தில்) நிட்சயிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆம், இடியும் மின்னலும் கூட வானத்திலேயே நிட்சயிக்கப்படுகிறது. 
 
 இடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமையக் கடவதாக!
 

4 comments:

  1. நல்ல அலசல்...

    மரியாதை - பண்புகளின் தாய்...

    ReplyDelete
  2. //எப்போது நாம் மற்றையவர் எனக்குச் சொந்தமானவர் என்றும், அவரின் செயல்கள், கருத்துக்கள் போன்றவை என் செயல்கள், கருத்துக்கள் போன்றிருக்க வேண்டும் என்றும், மற்றையவரின் கருத்துக்கள், செயல்களுக்கு நாம் மதிப்பளிக்காமலும், என்று நாம் செயற்பட ஆரம்பிக்கிறோமோ அன்றே அவர்கள் இருவர்களுக்கிடையிலும் கருத்துவேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன.//
    எம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வைக்கிற பதிவு இது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அனுபவங்களும் அதன்பால் உண்டான பக்குவங்களும் சொற்களில் அப்பட்டமாக தெரிகிறது..
    பல குழப்பங்களுக்கு முடிவுகளை சொல்லிவிட்டு தன்னடக்கத்தோடு குழுப்புவதாக சொல்லி முடித்திருப்பது அடக்கம்.

    -இடிமுழக்கம்-

    ReplyDelete

பின்னூட்டங்கள்