கலைகள் கற்பிக்கப்படுகின்றனவா இல்லை விற்கப்படுகின்றனவா?

அண்மையில் ஒரு நண்பருடன் நடந்த உரையாடலின் தொடர்ச்சியாக மனதில் எழுந்து எண்ணங்களை அடிப்படையாக்கொண்டும், பல நாட்களாக மனதில் ஊறிக்கொண்டிருந்த எண்ணங்களையும்  அடப்படையாக வைத்தே இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

இவைபோன்ற தலைப்புக்களை பேசி, உரையாடும் தேவை எமது சமூகத்துக்கு அவசியம் என்றே கருதுகிறேன். உரையாடல்களுக்கான வெளிகளை ஏற்படுத்திக்கொள்வதானது, நகரங்களுக்கு நடுவே இருக்கும் சோலைகளையும், அழகிய புல்வெளிகளையும் போன்றதே. அவையே எம் சுவாசத்தினை உயிர்ப்பிக்கின்றன.

அண்மையில் ஒரு நண்பருடன் உரையாடியபோது வெளிநாடுகளில் கலைகளைப் பயிற்றுவிப்போர் கலையை வளர்க்கவில்லை, விற்கிறார்கள்  என்பதே எமது உரையாடலின் கருப்பொருளாக இருந்தது.

அவரது கூற்றில் முற்றிலும் உடன்படாவிட்டாலும், அதிகமாக உடன்படவேண்டியிருக்கிறது.

நான் கல்விபயின்ற நாட்களில் 10ம்வகுப்புவரை கணிதப்பாடம் என்றால் எனக்கு கடும் கசப்பாயிருந்தது.  அதே கணிதபபாடத்தை 10ம் வகுப்பில் எனக்கு ஓரிரு மாதங்கள் கற்பித்த ஒரு ஆசிரியர்  நான் அதிகம் விரும்பும் பாடமாக மாற்றயமைத்தார். அதேவேளை சங்கீத வகுப்பில் இருந்து நான் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடுவதற்கும் ஒரு ஆசிரியரே காரணமாய் இருந்தார்.

இதேபோலத்தால் வெளிநாடுகளில் எமது சந்ததியினர் தமிழ் கற்பதும், கலைகளைக் கற்பதும்.

”இந்தாளால தான் நான் தமிழ் படிப்பதை நிறுத்தினேன்” என்றும்,  இவரால்தான் நடனம்மீது எனக்கிருந்த ஆசை இல்லாதுபோனது, இவரிடம் படிக்கமுடியாது, இவருக்கு கதைகத்தெரியாது, ஏனோ தானோ என்று படிப்பிப்பார், இப்படி எத்தனையோ கதைகளை நாம் கேட்பதுண்டு. இவற்றில் உண்மையில்லை என்று நாம் யதார்த்தத்தை மறந்துவிடலாகாது.

மாணவர்களின் பல தோல்விகளுக்கு ஆசிரியர்களே காரணகாத்தாவாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

ஆசிரியர்களின் கற்பிக்கும்முறை அவர் கற்றுக்கொண்ட காலத்தில் இருந்ததை விட, பல மடங்கு மாறியிருக்கிறது. தவிர பயிலும் மாணவர்களும், அவர்கள் பிறந்து வளர்ந்த நாடும், சூழலும்கூட மாறியிருக்கிறது. இவற்றை கவனத்தில் எடுத்து கற்பிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தான் கற்றதையே தனது மாணவர்களுக்கு அப்படியே மாற்றமின்றி ஒப்புவிப்பதை கற்பித்தல் என்பது மகா தவறு. இதை கிளிப்பிள்ளையும் செய்யுமே.

தனது மாணவர்களின் நிலையறிந்து, குறிப்பறிந்து, ஆவர்மூட்டி, உரையாடி, வழிகாட்டி, ஊக்குவித்து, மாணவனின் சிந்தனையைத் தூண்டி கற்பிக்கும் ஆசிரியனே உண்மையான ஆசிரியராகிறார். இப்படியான எண்ணங்களுடன் ஆசிரியர் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்தால் அது மாணவனின் அதிஸ்டம். கலையின் பேரதிஸ்டம்.

வெளிநாடுகளில் கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களில் எத்தனைபேர் மேற்கூறியவாறு கலைமீதான ஈடுபாட்டுடன் கற்பிக்கிறார்கள்? அப்படியானவர்கள் இல்லை என்று கூறமுடியாது. இருக்கிறார்கள். அவர்களைத் தேடிக்கண்டுபிடித்து குழந்தைகளை ஒப்படைப்பதில் பெற்றோரின் பங்கு அதிமுக்கிய இடத்தைப்பெறுகிறது. இங்கு தவறுநேரும்போது குழந்தையின் கலையார்வம் மட்டுமல்ல, கலையின் வளர்ச்சியும் மட்டுப்படுத்தப்படுகிறது.

கலைமீதான உணர்வு குறைந்து அதுவே வியாபாரமாகிவிடும்போது கலையைக் கற்கும் குழந்தைகளும், கற்பிக்கப்படும் கலையுமே பாதிக்கப்படுகிறது.

கலை வியாபாரமாகிவிடும்போது போலியான விளம்பரங்களும், பகட்டும், தற்பெருமைகளும், குழுவாதங்களும், சக கலைஞர்களையே ஒதுக்கும் குறுஞ் சிந்தனைகள் போன்றவையும் வெளிப்படையாகவே நடைபெற ஆரம்பிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு ஆசிரியரிடம் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகவைத்து நாம் ஆசிரியரின் தரத்தை எடைபோடுவதில் ஏற்பில்லை எனக்கு.

எனது பார்வையில் கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் என்பவரை நாம் அவரின் படைப்புக்கள், படைப்புக்களின் தரம், நுணுக்கங்கள், கலைபற்றிய அவரது அறிவு, கலை மீதுள்ள பிரக்ஞை, கற்பித்தல் மீதுள்ள ஈர்ப்பு, கற்பிக்கும்விதம், உரையாடும் விதம், சுயவிமசனத்தன்மை, உண்மைத்தன்மை, தொடர்ச்சியான தேடல், அவர்களின் மேடைப்பேச்சுக்கள், கட்டுரைகள், நூல்கள், உரையாடல்கள் என்று பலவிதமான கோணங்களில் இருந்து அறியலாம்.

ஒரு பொருளை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி இறங்கி பொருளின் தரத்தை ஆராயும் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு தகுந்த ஆசிரியரை தேர்வுசெய்யும்போது எதுவித விமர்சனமும் இன்றி இருப்பது குழந்தைகள் சிறந்த ஒரு கலைஞர்களாக உருவாவதற்கு மிக முக்கிய தடையாக இருக்கிறது.

மிக முக்கியமாக கலையைக் கற்கும் ஆசிரியர் தனது மாணவனுக்கு அக் கலைமீது தீராத தாகத்தை ஏற்படுத்துபவராக இருத்தல் மிக மிக அவசியம். வெளிநாடுகளில் எமது கலைகள் குறிப்பிட்ட சில எல்லைகளைக் கடந்து மேலும் மேலும் வளராமைக்கு இதுவே மிக மிக முக்கிய காரணியாகிறது. இங்கு பெற்றோருக்கு இருக்கும் பொறுப்பைவிட ஆசிரியரின் பொறுப்பே  அதிகமாகும்.

பல ஆசிரியர்களுக்கு மாணவர்களுடன் மனம்விட்டு உரையாடுவதற்கு நேரம் போதாதிருக்கிறது. கும்பலில் ஒருவராய் மாணவன் கற்பிக்கப்படுதே வளமையாக இருக்கிறது. மாணவனுக்கும் ஆசிரியருடன் உரையாடும் தேவையிருக்கும், ஆசிரியருக்கும் அத்தேவை மாணவனைவிட பல மடங்கு அதிகமாக இருக்குவேண்டும். அப்போதுதான் குரு, சிஸ்யன் என்ற ஆத்மார்த்தமான உணர்வு உருவெடுக்க ஆரம்பிக்கிறது. உரையாடல் என்பது கற்றலின் முக்கிய செயற்பாடு.

உரையாடல் என்பது மிகப்பெரிய கலை. உரையாடலே ஒருவர் மீது இன்னொருவருக்கு நம்பிக்கை, பிடிப்பு, ஆர்வம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாகவே நாம் கற்றலுக்கும், தேடலுக்குமான விடைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இந்த உரையாடல் நிலைக்கு எத்தனை புலம்பெயர் குருக்களும் சிஸ்யர்களும் சென்றிருக்கிறார்கள்?

எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களுடன் உரையாடுவதற்கு அதிக நேரங்களை செலவிடுகிறார்கள்? கலை வியாபாரமாகும்போது இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றன என்பது உண்மையே.

வாரத்தில் ஒரு நாள், கும்பலில் கோவிந்தா என்னும் மாணவனுக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஆத்மார்த்மாக குரு, சிஸ்யன் உணர்வு ஏற்பட இடமேயில்லை. அப்படி அமைந்தாலும் அது ஒரு போலியான குரு, சிஸ்யன்  உறவாகவே அமையும். 

எனது பாடசாலைக்காலங்களில் என்னுடன் உரையாடி, கண்டித்து, அணைத்து, வழிகாட்டி அறிவுரைகூறிய எனது ஆசிரியர்களே எனக்குள் இன்றும் பெருவிருட்சமாய் இருக்கிறார்கள். எனக்குக் கற்பித்த பல ஆசிரியர்கள் என் நினைவுகளில் இல்லவே இல்லை. காரணம் அவர்கள் கற்பித்தல் என்னும் கலையை கற்றிருக்கவில்லை.

இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் எத்தனைபேருக்கு அவர்களது மாணவர்கள்மீதான ஆத்மார்த்தமான உணர்வு இருக்கிறது? ஒரு விரல்விட்டு எண்ணிவிடலாம் அப்படியான உன்னத எண்ணமுள்ள ஆசிரியர்களை. 

ஒரு சிறந்த ஆசிரியரால் மாணவனின் சிந்தனையோட்டத்தை, கலைஆர்வத்தை, அங்கு ஒளிந்திருக்கும் திறமையை அல்லது வெறுப்பை இனங்கண்டுகொள்ளமுடியும். உதாரணத்துக்கு ஒருவருக்கு தான் கற்கும் கலையில் ஆர்வமில்லை, பெற்றோரின் இம்சைக்காவே வந்து போகிறார் எனின், கற்பித்தலின் சிறப்பை அறிந்த ஆசிரியர் அந்த மாணவனுடன் உரையாடி, பெற்றோருடன் உரையாடி ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார். ஒரு கலையை விரும்பாத அந்த மாணவன் ஆசிரியரின் உதவியினால் இன்னொரு கலையில் தேர்ச்சிபெறும் நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால் கலை வியாபாரமாகும்போது ஆசிரியர் வாய்மூடியே இருப்பார். பெற்றோர் விளித்துக்கொள்ளதவரையில் குழந்தையின் நிலை திரிசங்குதான்.

கற்பித்தலை ஒரு கலையாகவே பார்க்கும் ஆசிரியர்கள் மிக மிகக் குறைவு. கற்றுத் தேர்ந்தபின்பும் தொடர்ச்சியாக தங்களை கலைப்புலமையை புதுப்பித்துக்கொள்ளும், கலையின்பால் தேடலையும் உடைய ஆசிரியர்கள் மிக மிகச் சிலர‌ே. அரங்கேற்றமானது தனது கலைவாழ்வின் உச்சம் என்னும் சிந்தனை எத்தனை பரிதாபமானது என்பதனை பல ஆசிரியர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அரங்கு ஏறுதல், என்னும் அந் நிகழ்வானது கலைவாழ்வின் ஆரம்பம் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.

என்னிடம் புதுப்பித்து்கொள்வதற்கு எதுவும் இல்லை. கலை எனக்கு வசப்பட்டிருக்கிறது என்னும் அதீத ஞானச்செருக்குடையவர்களையும் ஆசிரியர்களாகக் கொண்ட மாணவர்கள் இருக்கிறார்கள். இப்படியான நேரங்களில் அம் மாணவர்களைவிட அந்த ஆசிரியரிலேயே பரிதாமமேற்படுகிறது.

கற்பித்தலை கற்றுக்கொள்ளாத ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்களை இன்னொரு ஆசிரியரிடம் மாற்றுவதில் எவ்விதத் தவறுமில்லை. இதில் குருபக்தி என்று சம்பிரதாய சகதிகளை பூசும் ஒருசாராரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இறந்துகொண்டிருப்பவனின் உயிரைக்காப்பாற்ற முடியாத குடும்பவைத்தியரிடம் இருந்து வேறு வைத்தியரிடம் நாம் செல்வதில்லைாயா, அதுபோலத்தான் இதுவும். அங்கு மனிதனின் உயிர். இங்கு கலையின் உயிர். அவ்வளவே.


குழந்தைகளை கலைகளை கற்றுதேர்ச்சியடையாமைக்கு, எவ்வித சுயவிமர்சனமும் இன்றி வாராந்தம் ஏற்றி இறக்கும் பெற்றோர்களும் ஒரு காரணம். உங்கள் குழந்தைகள் கற்பிக்கப்படும் விதத்தை, குழந்தையின் மனநிலைகளை, கொடுக்கப்படும் பயிட்சிகளை இப்படி பல விடயங்களில் பெற்றோரின் அசமந்தப்போக்கும் குழந்தைகளின் கலைமீதான ஆர்வத்தை மழுங்கடிக்கின்றன.

உரையாடல் என்பதை அறியாத, உரையாடலை விமர்சனமாகப் பார்க்கும் கலைஞர்களே எம்மத்தியில் அதிகம். ஒரு விடயத்தை பொதுத்தளத்தில் உரையாடும்போது உரையாடும் நபர்கள் எதிராளிகளாகமாறி வாதம்புரிவதை காணக்கூடியதாக இருக்கிறது. வாதத்திற்கும்
உரையாடலுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. போரும் சமாதானமும் போன்றதானது அது. உரையாடைல் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டது. வாதம் தன் கருத்தே சரி என்னும் ஒருவித சர்வதிகாரப்போக்கினையுடையது.

சுயவிமர்சனம், தன்னடக்கம் என்பன ஒரு கலைஞனை உயர்த்தும் ஏணிப்படிகள். ஆனால் தூரதிஸ்டவசமாக சுயவிளம்பரம் என்னும் மாயைக்குள் பல கலைஞர்கள் சிக்கிவிடுகிறார்கள். இதனால் இவர்களின் வளர்ச்சி தடைப்பட்டுப்போவது மட்டுமன்றி இவர்களை நம்பியிருக்கும் மாணவர்களின் வளர்ச்சியும் மட்டுப்படுத்தப்படுகிறது. இப்படியான குருவிடம் இருந்து அவரது மாணவர்கள் ஆரோக்கியமற்ற சில பலவற்றையும் பழகிக்கொள்கவதன் மூலம் இது தொடர்சக்கரமாக மாறிவிடுகிறது.
கலை என்பது வெளிநாடுகளில் பகட்டுக்கும், தற்பெருமைக்கும், பணத்துக்கும் விலைபோய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும், ஆசிரியரின் கற்பிக்கும் திறமைபற்றிய விமர்சனம் பெற்றோரிடம் இல்லாமையுமே ஆகும்.

பல ஆசிரியர்களிடம் கலையை கற்பிக்கவேண்டும், வளர்க்கவேண்டும் என்னும் சிந்தனையைவிட, கலையை பணமாக்கிக்கொள்வதில் அவர்கள் பலத்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதே உண்மை. இப்படிப்பட்டவர்களது படைப்புக்களில் பாரிய மாற்றங்களோ, புரட்சிகரமான சிந்தனைகளோ இருக்கமாட்டாது. அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பார்கள். இப்படியானவர்க‌ளே பெருங்கலைஞர்களாக உலாவருகிறார்கள் என்பதே முறண்நகை.

பெருமளவில் வெற்றிபெற்ற கலைஞர்களின் சிறப்பான பண்புகளை எடுத்துநோக்கினால் அவர்களிடத்தில் மாணவர்களுடன் இயல்பாக பழகும் தன்மையிருக்கும். கர்வமற்று மாணவர்களின் நிலையறிந்து கற்பிப்பார்கள். கற்பித்தல் பற்றிய விளிப்புணர்வு இருக்கும். தமது கலையை நேசிப்பார்கள் முக்கியமாக வியாபாரமாக்கமாட்டார்கள். மாணவர்களின் எண்ணிக்கையைவிட மாணவர்களின் தரத்திற்கே அவர்கள் முன்னுரிமை இருக்கும். தனது மாணவர்களின் பெற்றோருடன் மாணவனின் வளர்ச்சி பற்றிய ஒரு புரிந்துணர்வுடனான தொடர்ச்சியான உரையாடல் இருக்கும். முக்கியமாக ஒரு வழித்தொடர்பாடல் (mono dialogue) இருக்காது, மாணவர்களின் கருத்துக்களை, பெற்றோரின், சமுகத்தின் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்பவராய், தன்னை செம்மைபடுத்திக்கொள்பவராய் இருப்பார். சக கலைஞர்களுடன் சுமூகமாக உரையாட, கருத்துப்பகிரக் கூடியவர்களாக இப்பார்கள். விமர்சிப்பவர்களை நண்பர்களாக ஏற்கும் வளர்ந்த மனநிலையும், மிக முக்கியமாக கலை, சமுகம் பற்றிய பிரக்ஞையும் இருக்கும்.
இவர்களின படைப்புக்கள் உயர்ந்த தரமுடையவையாக இருக்கும். பல பல வித்தியாசமான கற்பனைகளில், தலைப்புக்களில், மரபுசார்ந்து, புதிய சிந்தனைகளைக் கலந்து இவர்களது நிகழ்வுகள் அமையும்.

பெற்றோரின் விருப்பத்திற்காகவோ, ஆசிரியரின் கட்டாயத்திற்காகவே, போலியான பெருமைகளுக்காகவோ அன்றி, கலைமீதுள்ள பற்றின் காரணமாக கலையைக் கற்றுக்கொண்டு, தொடர்ச்சியான தேடலுடன் உள்ள ஒரு சிஸ்யனை ஒரு ஆசிரியர் உருவாக்குவார் எனின் அவரே சிறந்த ஆசிரியன் என்பேன் நான்.

இது பற்றி உரையாடலாமே நாம்.

2 comments:

  1. எல்லாமே பணமாகிவிட்ட இன்றைய காலத்தில் கற்பிப்பதும் வியாபாரமாகிவிட்டது.
    கற்பது கூட மாணவனுக்கு புரியாவிட்டாலும் அவனது பெற்றோர்கள் பணம் கொட்டும் கல்வியாக இருக்க வேண்டும் என அவாவுகிறார்கள்.

    ReplyDelete
  2. தமிழகத்தில் இன்றைய மிகப்பெரிய வியாபாரமே கல்விதான். என் மகள் படிக்கும் டியூஷனில் 100க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்காங்களாம்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்