அண்ணை! இனியாவது பொய் சொல்லாதீங்கோ - வ. ஜ. ச ஜெயபாலனுக்கு பகிரங்கக் கடிதம்

பேரன்புமிக்க வ.ஜ.ச ஜெயபாலன் அண்ணருக்கு!

அண்ணை!

எனது நண்பர் ஒருவர் சற்றுமுன் தொலைபேசியில ”அண்ணரின் அறிக்கையை வாசித்தாயா” என்று பேச்சை ஆரம்பித்து, இன்றைய (05.12.13) உங்கள் முகப்புத்தக செய்தியை பதிவு / அறிக்கையை அறியத்தந்தார்.

இதுதான் உங்கள் பதிவு / அறிக்கை:

என்னுடைய தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான கட்டுரைகளை எழுநா தோழமையுடன் ஒரு குரல் என்ற பெயரில் வெளியிட்டது அறிந்ததே. நெடுநாட்க்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே.

தற்போது பாதுகாப்பு பிரச்சினையை காரணம்காட்டி அந்த கட்டுரை தொகுப்பை வெளியிடும் முயற்ச்சியை எழுநா கைவிட்டுள்ளது. இந்தியாவில் அந்த புத்தகத்தை வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் என்னுடன் தொடர்புகொள்ளவும்.

இவை நிற்க,

சிலவாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து எழுநா சார்பில் ”டிஸ்கவரி புக்பேலஸ்” என்னும் நிறுவனம் சில புத்தகங்களை அனுப்பியிருந்தது.

அதில் ஒரு புத்தகத்தில் வ.ஐ.ச ஜெயபாலன் என்று இருந்தது. சற்று உற்றுப்பார்த்தேன், சத்தியமாக உங்கள் பெயர்தான் அது. உங்களை நன்கு அறிவேன் என்பதால் புத்தகத்தின் தலைப்பையும் பார்த்தேன். அது இப்படி இருந்தது. ”தோழமையுடன் ஒரு குரல்”  ”முஸ்ஸீம் தேசியமும் தமிழ்-முஸ்ஸீம் உறவுகளும்”

இப்பவும் அந்தப் புத்தகத்தை எனக்கருகில் வைத்திருந்தபடியேதான் இதையும் எழுதுகிறேன். அத்துடன் உங்களின் புத்தகம் நோர்வேயில் உள்ள பலரிடம் உண்டு என்பதையும் அறியத்தருகிறேன்

அண்ணை!  உங்களின் இன்றைய அறிக்கையையும் வாசித்தேன். புத்தகத்தையும் பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் இந்தப் புத்தகத்தை எழுநா வெளியிட மறுப்பதாக எழுதுகிறீர்கள். ஆனால் என் கண்களுக்கு முன்னால் ஒருவித நீல நிற முன்னட்டையுடன் நீங்கள் கூறும் புத்தத்தை எழுநா வெளியிட்டுள்ளது என்று இருக்கிறது.

அண்ணை! நீங்கள் திரைப்படத்துறையில் இருப்பதால்  என்னிடம் இருப்பது கமரா கொப்பியாக இருக்குமோ என்னும் சந்தேகமும் வருகிறது.

அண்ணை! இதுவும் இந்த இடத்தில் நிற்கட்டும்.

காலச்சக்கரத்தை ஒரு சில மாதங்களுக்கு முன்னான பகுதிக்கு பின்நோக்கி மெதுவாகச் சுளற்றுங்கள்.

நீங்கள் போர்க்குற்றவாளிகளின் / பேரினவாதிகளின் சிறைசென்று மீளுமுன், இந்தியாவில் இருந்தபடியே ”யாழ்பாணத்தில் நடக்கவிருக்கும் ஒரு புத்தகவிழாவில், எனது புத்தகமான ”தோழமையுடன் ஒரு குரல்” புத்தகம் அறிமுகம் செய்யப்படுவதை குறிப்பிட்ட ஒரு நபர் தடுக்கிறார்” என்று ”அறிக்கை”விட்டீர்களே, அது நினைவிருக்கிறதா?

அதிக அறிக்கைகளை அடிக்கடி வெளியிடுபவரல்லவா நீங்கள். சிலவேளைகளில் மறந்திருக்கும். அதுதான் நினைவூட்டுகிறேன்.

மேற்குறிப்பிட்ட அந்த அறிக்கைக்கு பதிலளித்த சரிநிகர் சிவகுமார்  உங்களின் கருத்து பிழையானது என்று அவர் தந்திருந்த பதிலினைத்தொடர்ந்து நீங்கள் அப்பதிவினை முகப்புத்தகத்தில் இருந்து நீக்கியிருந்ததையும் உங்களுக்கு இவ்விடத்தில் நினைவூட்டவிரும்புகிறேன்.

அன்று நீங்கள் முகப்புத்தகத்தில் கூறியது பச்சைப் பொய் என்பதை பலரைப்போல் நானும் அறிந்திருந்தேன். உங்கள் ”அறிக்கையின்”  உண்மையை அறிந்த பலரும் கண்டனம் அல்லது மறுப்பு தெரிவித்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுவும் இவ்விடத்தில் நிற்கட்டும்.

அடியேனும் எழுநாவினூடாக ஒரு புத்தகத்தினை சென்ற வருடம் வெளியிட்டிருந்தேன். எனவே  ஒரு புத்தகத்தை அவர்கள் வெளியிடமுன், வெளியிட்டபின் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதுபற்றியும், அவர்கள் எந்தளவுக்கு தொடர்புகளை பேணுவார்கள் என்பது பற்றியும் நானும் மிக மிக நன்கு அறிவேன்.

இதுதவிர, புத்தகம் வெளிவந்ததும் ”டிஸ்கவரி புக் பேலஸ்” நிறுவனத்தினர் எழுத்தாளர்களுக்கு புத்தகங்களை அனுப்பிவைப்பார்கள் என்பதையும் நான்மிக நன்கு அறிவேன். உங்களுக்கும் அவர்கள் புத்தகத்தை அனுப்பியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் நீங்கள் இப் புத்தகத்தை சிலரிடம் காட்டியிருக்கிறீர்கள் என்று அறியவும் கிடைத்தது. எனவே புத்தகம் உங்களை வந்தடைந்திருக்கிறது.

இதுவும் இவ்விடத்தில் நிற்கட்டும்.

உங்களிடம் சில கேள்விகளை கேட்கவிருக்கிறேன்.

கேள்வி 1:

இவ்விடத்தில் கேள்வியினை கேட்க முதல் உங்கள் முகப்புத்தக அறிக்கையில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

என்னுடைய தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான கட்டுரைகளை எழுநா தோழமையுடன் ஒரு குரல் என்ற பெயரில் வெளியிட்டது அறிந்ததே. நெடுநாட்க்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே.

தற்போது பாதுகாப்பு பிரச்சினையை காரணம்காட்டி அந்த கட்டுரை தொகுப்பை வெளியிடும் முயற்ச்சியை எழுநா கைவிட்டுள்ளது. இந்தியாவில் அந்த புத்தகத்தை வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் என்னுடன் தொடர்புகொள்ளவும்.


அண்ணை! உங்கள் ”தோழமையுடன் ஒரு குரல்” என்னும் புத்தகத்தை எழுநா  ”பாதுகாப்பு காரணங்களைக்காட்டி வெளியிட மறுத்திருக்கிறது என்று நீங்கள் இன்று (05.12.13) கூறுகிறீர்கள் அல்லவா? ஆக இன்றைய தினம்வரையில் அப்புத்தகம் இன்னும் வெளிவரவில்லை என்பதுதானே உங்கள் கருத்து.

அப்படியாயின் சில காலங்களுக்குமுன் நீங்கள் ”யாழ்பாணத்தில் நடக்கவிருக்கும் ஒரு புத்தகவிழாவில் எனது புத்தகமான ”தோழமையுடன் ஒரு குரல்” புத்தகம் அறிமுகம் செய்யப்படுவதை குறிப்பிட்ட ஒரு நபர் தடுக்கிறார்” என்று அறிக்கைவிட்டதற்கான காரணம் என்ன?

உங்கள்  அறிக்கையின்படி, இன்றுவரையில் வெளிவராத அந்தப் புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த எழுநாவின் புத்தக அறிமுகவிழாவில் அறிமுகப்படுத்துவதை ஒருவர் தடுத்தார் என்று நீங்கள் எப்படி‌க் கூறலாம்? வெளிவராத புத்தகத்தை யாரேனும் அறிமுகம் செய்வார்களா?

கேள்வி புரியும் என்று நினைக்கிறேன். (உங்களுக்கா புரியாது)

கேள்வி 2:

அப் புத்தகம் அன்று வெளிவந்திருந்தது என்றால் இன்றைய (05.12.13) அறிக்கையை நீங்கள் வெளியிடவேண்டிய அவசியம் என்ன?

கேள்வி 3:

நெடுநாட்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே”  நீஙகள் இந்த கண்டனக் குரலைக் கொடுத்தபோது சரிநிகர் சிவகுமார் அதற்கு நெத்தியடியாக தந்த பதிலின்பின், நீங்கள் உங்களின கண்டனத்தை முகப்புத்தகத்தில் இருந்தே அழித்திருந்ததை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ஆக உங்களுக்கு சிவகுமாரின் பதில் உண்மையை விளக்கியிருக்கிறது. எனவே அதை அழித்தீர்கள். ஆனால் இன்று மீண்டும் அதேமாதிரியான கண்டனத்தை வெளியிடுகிறிர்கள்.


கேள்வி 4

எழுநா உங்களின் புத்தகத்தை வெளியிடும் முயற்சியை கைவிட்டுள்ளது என்கிறீர்களே. அதற்கான ஆதாரத்தை நீங்கள் முன்வைத்திருக்வேண்டுமல்லவா?

அண்ணை! மேற்கூறியவற்றைப் கோர்த்துப்பார்க்கும்போது நீங்கள் வெளியிட்ட அறிக்கைகள் எவ்வளவு மலிந்த, கீழ்த்தரமான எண்ணங்களை உள்ளடக்கியவை என்பதை நான் கூறவேண்டியதில்லை. உங்களின் பிரபல்பயம், அனுதாபம் தேடும் ஆடுகளங்களுக்கு சமூகத்தினையும், சமுகத்தில் இயங்கும் இலாபநோக்கற்ற நிறுவனங்ளையும், அங்கு இயங்கும் மனிதர்களையும் பாவிக்காதீர்கள்.

இனங்களுகளுக்கிடையில் ஒற்றுமையை பேசுகிறீர்கள்.  முதலில் உங்கள் எழுத்துடனும், உண்மையுடனும், மனதுடனும் ஒற்றுமையாயிருங்கள்.

அண்ணை! உங்களின் நேர்மையற்ற ஆடுகளங்களை இன்றுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். பெரியமனிதர் என்று வைத்திருந்த அத்தனை மரியாதையையும் அழித்துக்கொண்‌டிருக்கிறீர்கள். உங்களை அறிந்தவர்கள் முன் நகைக்கிடமாகியிருக்கிறீர்கள்.

அண்ணை! சாதாரணமாக பகிரங்கமாக குற்றம் சுமத்துபவன் நான் அல்லன். அது அநாகரீகமானது என்பதை அறிவேன். ஆனால் நீங்கள் அளவுக்கதிகமாக  எல்லைகளை மீறியிருக்கிறீர்கள். எத்தனை எத்தனை பொய்களை அள்ளி அள்ளி வீசியிருக்கிறீர்கள். இப்போது சமூக அமைப்புக்களையும் கேவலப்படுத்துகிறீர்கள். எனவே நானும் எனது எல்லைகளை மீறவேண்டியிருக்கிறது.

உங்களைப்போல் பிரபல்யத்துக்காக சமூகப்போராளியாகும் மனிதர்களாலேயே எம் சமூகம் இப்படி இருக்கிறது. உங்களைப்போன்றவர்களுக்கும் ஜால்ராக்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதுதான் கசப்பான யதார்த்தம்.

உங்களின்  சிறைமீண்ட அறிக்கைக்கு கருத்து தெரிவித்தபோது நாம் இது பற்றிப் நேரில்பேசுவோம் என்ற தொனியில் எழுதியிருந்தீர்கள்.  மறு கணம் என்னை நீங்கள் உங்கள் முகப்புத்தகத்தில் இருந்து தடைசெய்திருந்தீர்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் ஊடகச்சுதந்திரம்பற்றிப் பேசினீர்கள்.

அன்று உங்களுக்கு கூறிய பதிலையே நான் இன்றும் கூறுகிறேன். ”வாருங்கள் எங்கும் எதிலும் பேசிக்கொள்ளலாம்”

முடிந்தால் பதில்தாருங்கள்.

தயவு செய்து ஒரு வேண்டுகோள்!

தமிழ்த் திரைப்படங்களின் கிளைமாக்ஸ் நேரங்களில் எதுவும் நடக்கலாம் என்பது போல எனது முகப்புத்தத்தை ”யாரோ hack செய்திட்டாங்கள்” அது, நான் எழுதாத பதிவு / அறிக்கை என்று சொல்லிவிடாதீர்கள், முகப்புத்தகம் தாங்காது.


தோ‌ழமையுடன்
சஞ்சயன்


4 comments:

  1. அந்தக்காலங்களில் அரசவைக் கோமாளி என்றொருவர் இருந்தார். இப்ப அந்த வேலையை அண்ணார் மாதிரி ஒரு சிலர் செய்கிறார்கள்.

    ReplyDelete
  2. ஈழத்தவன்December 06, 2013 12:02 pm

    அண்ணன்ர facebook link please

    ReplyDelete
    Replies
    1. அண்ணர் என்னோட டூ விட்டுட்டார். ஆதலால் அவரின் முகப்புத்தக லிங்க் எடுக்கமுடியவில்லை. எதற்கும் Jaya Balan என்று தேடுங்கோ. படு பயங்கர மீசையுடன் ஒருத்தர் நிற்பார்.

      Delete

பின்னூட்டங்கள்