காலப் புதிர்கள்

காலம் எப்போதும் புதிரானது. அது மகிழ்ச்சி, துக்கம், ஆச்சர்யம் அல்லது வேறுவிதமான மனநிலையைத் தருவதாக இருக்கலாம். ஆனால் எப்போதும் தனக்குள் ஒரு புதிரைக்கொண்டிருக்கும். இன்றைய நாள் மிகவும் கனமானது. நண்பர் ஒருவரின் இறுதிப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தேன். தேவாலயம் நிரம்பியிருந்தது. மரணத்தின் வாசனையை அங்கு உணரமுடிந்தது. மரணத்தை நெருக்கத்தை உணரும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு விதத்தில் சில பொழுதுகள் இறுகிப்போகிறார்கள். மௌனம் பேசும் நேரம் அது. அந்நேரங்களில் மரணம் அவர்களுடன் ஒருவித ஆத்மார்த்தமான உரையாடலை நடாத்திக்கொண்டிருக்கும். மரணம்பற்றிய சிந்தனைகள் அவர்களைப் பற்றிக்கொள்ளும். இவ்வளவுதானா வாழ்க்கை? இதற்காவா இவ்வளவு அலைகிறோம்? மரணத்தின் பின் என்ன நடக்கும்? என் இழப்பு யாருக்கு துயரையைக் கொடுக்கும்? என்று பலரும் சுய உரையாடலில் இருப்பார்கள். தேவாயத்தின் மணி ஒலித்தது. நோர்வேஜிய பாதிரியார் திருப்பலியை ஆரம்பித்தார். நான் கடைசி வாங்கில் உட்கார்ந்திருந்தேன். அவர் அதிகநேரம் பிரசங்கிக்கவில்லை. தமிழ் போதகரிடம் பொறுப்பினைக் கொடுத்துவிட்டு நகர்ந்துகொண்டார். திருப்பலி தொடர்ந்துகொண்டிருந்தது. எனது மனம் நோர்வேஜிய பாதிரியாரின் குரலில் லயித்துக்கிடந்தது. அமைதியான, ஆர்ப்பாட்டமற்ற, மனதை நெகிழச்செய்து வருடிவிடும் ஆளுமையான குரல். அந்தக் குரலில் மனம் கரைந்துகொண்டிருந்தபோதுதான், இந்தக் குரல் உனக்கு அறிமுகமானதல்லவா என்றது உள்மனது. எங்கே, எப்போது அறிமுகமான குரல் இது? யாருடைய குரல் என்று எனக்குள் நானே தேடிக்கொண்டிருந்தேன். பாதிரியாரின் முகமும் பரீட்சயமானதாக இருக்கவில்லை. எனது பலவீனங்களில் முதன்மையானது மனிதர்களின் முகங்களை நினைவில் நிறுத்திவைத்திருப்பது. பல இடங்களிலும் நான் இதனால் சங்கடப்படுகிறேன். ஆனால் பழகிய மனிதர்களின் குரல்கள் ஆழப் படிந்துபோயிருக்கும். அவர்களின் பெயர்களும் நினைவிருக்கும். எவ்வளவு தேடியும் அக்குரலுக்கானவர் யார் என்பது பிடிபடிவில்லை. திருப்பலியின்போது மரணத்தவரின் குழந்தைகள் தந்தைக்கான உரையை வழங்கிக்கொண்டிருந்தபோது. என் மனம் பல்வேறு சிந்தனைகளில் உருளத்தொடங்கியது. தனிமையான எனது வாழ்க்கை, எனது குழந்தைககளின் அருகாமையை இழந்திருப்பது என்று மனம் சுயபரிதாபத்தில் உளன்றது. கண்கலங்கிற்று. அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியில் வந்தேன். தனியே ஒரிடத்தில், பெரும் சாரளத்தின் முன் நின்றுகொண்டேன். வெளியே வெண்பனி நிலத்தை மூடியிருந்தது. வானத்தில் இருந்து பனித்துகள்கள் வீழத்தொடங்கின. மனது ஆறத்தொடங்கியது. அப்போது திடீர் என்று பாதிரியாரின் குரலையுடையவரின் பெயர் நினைவில் வந்தது. இது Dag Håland என்னும் பாதிரியாரின் குரல். வடமேற்கு நோர்வேயில் Hareid என்னும் கிராமத்திற்கு 1987 வைகாசி மாதம் இடம்பெயர்ந்து சென்றபோது அறிமுகமாகிய முதல் மனிதர் இவர். நாம் தங்கியிருந்த இடத்திற்கு மிக அருகிலேயே வசித்திருந்தவர். பிற்காலத்தில் அவருடைய இரண்டு பெண்குழந்தைகளுக்கும் நான் ஆசிரியனாக இருந்திருக்கிறேன். அவருடைய வீட்டில் நான் இரண்டுமுறை நத்தார்நாட்களை கொண்டாடியிருக்கிறேன். அன்பான மென்மையான மனிதர். தேவாலயத்திற்கு வெளியே ஒரு நோர்வேஜியர் நின்றிருந்தார். அவர் மரணநிகழ்வினை ஒழுங்குசெய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இன்றைய போதகரின் பெயர் Dag Hålandஆ என்று வினாவினேன். ஆம், என்றார். திருப்பலி முடிந்து அனைவரும் தேனீர் அருந்திக்கொண்டிருந்தார்கள். பாதிரியாரின் கந்தோரைத் தேடிப்போனேன். அவரது மனைவி அங்கிருந்தார். நான் Hareidஇல் வாழ்ந்திருந்தவன் என்று அறிமுகப்படுத்தியபோது சற்றுத் உற்றுப்பார்த்த பின் ஆம்... நினைவிருக்கிறது என்றார். அப்போது அங்கு வந்த பாதிரியாருக்கும் என்னை நினைவிருந்தது. என்னை மட்டுமல்ல அவர் திருமணம்செய்துவைத்த எனது நண்பரொருவரின் பெயரும் நினைவில் இருந்தது. ‘1996ம் ஆண்டின்பின் இப்போதுதான் உன்னைச் சந்திக்கிறேன். 21 வருடங்களாகிவிட்டன. நீயும் உருவத்தில் மாறியிருக்கிறாய். நானும் கிழவனாகிவிட்டேன்’ என்றபோது புன்னகைத்தேன். ‘என்னை நினைவில் வைத்திருந்திருக்கிறாய் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதுசரி, என்னை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டாய்?’ ‘உங்களை நேரடியாகக் கண்டிருந்தால் அடையாளம் கண்டிருக்கமாட்டேன். ஆனால் திருப்பலின்போது உங்கள் குரலைக்கேட்டேன்’ மீண்டும் கையை இறுகப்பற்றிக்கொண்டார். சற்றுநேரம் மௌனமாயே கழிந்தது. நாம் விடைபெற்றபோது ‘நன்றி. உன்னை சந்தித்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நண்பர்களுக்கும் அன்பைத் தெரிவி’ என்றார். நடக்கத்தொடங்கினேன். வெண்பனித் துகள்கள் காற்றில் பரவத்தொடங்கியிருந்தது.

சவம்

நண்பரின் வீட்டில் ஒரு பதின்மவயதுப் பூலான்தேவி மீதமிருக்கிறாள்.

அவளுக்கு என்னிடமும், எனக்கு அவளிடமும் சேட்டைவிடவேண்டும்.

காணும் இடங்களிலெல்லாம் எனது தலையில் மிருதங்கம் வாசிக்கும் வித்துவான் அவள்.

பதிலுக்கு பூலான்தேவியைக் காணும்போதெல்லாம் ”அடியேய் கறுப்பி” என்பபேன்.

அதற்கு அவள் ”போடா சவம்” என்பாள்.

சவத்திற்கும் உயிர்கொடுக்கக்கூடியது அவளது செல்லத் தமிழ்

ஒருநாள் ”அம்மாச்சி, சவம் என்றால் என்ன?” கேட்டேன்.

”தெரியாது.. அப்பாவுக்கு கோபம் வந்தால் அப்படித்தான் சொல்லுவார்” என்றாள்.

”அப்ப நீ சொல்லாம்” என்றேன்.

அண்மையில் ஒரு மண்டபத்தில் பலருடன் நின்றிருந்தாள். அருகே சென்று ”தலையைத் நீவிவிட்டேன்”

அருகே இருந்தவர்கள் ”இவரா உன் தந்தை என்றார்கள்”

”எனக்கு இவரும் தந்தை என்றாள்”

உச்சிமோர்ந்து.... ”நன்றி கறுப்பி” என்றேன்

போடா சவம் என்றாள்.