ஒரு தந்தை பிரசவிக்கப்பட்ட கதை

26.12.1996, 21 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் எனது வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது என்பதை அறியாமல், Volda என்னும் கிராமத்தில் அமைந்திருந்த வைத்தியசாலையில் இரத்தமும் சதையுமான அவளை எனது கையில் ஏந்தினேன்.

அவள் அப்போதுதான் பிரசவிக்கப்பட்டிருந்தாள். “தொப்புள்கொடியை வெட்டு“ என்றனர் செவிலியர். அவளுக்கு வலிக்கும் என எண்ணியதால் “மாட்டேன்“ என்றேன்.

அதேநாள் அவள் விக்கியபோது செவிலியரைத் திட்டினேன். அவர்கள் சிரித்தார்கள். விக்கலும் கடந்துபோனது.

செவிலியர்களே அவளை எவ்வாறு நீராட்டுவது என்பதை எனக்குக் கற்பித்தார்கள்.

வீடுவந்ததும் எனக்காக உணவு தயாரிக்காது பத்திய உணவுடன் காலத்தை கடந்துகொண்டேன். இரவில் அவளை கீழ்மாடிக்கு அணைத்தெடுத்து வருவேன். மார்பின் இளஞ்சூட்டில் தூங்கிப்போவாள். பாலுக்கு மட்டும் விட்டுக்கொடுப்பேன். வேலையில் இருப்புக்கொள்ளாது தவிப்பேன். வீடுவந்ததும் அவளே உலகமென்றானது.

நீராட்டுவது எமக்கிடையிலான ஒரு திருவிழா. மெதுவாய் இடது மணிக்கட்டில் தலையை ஏந்தி, விரல்களால் அவளது இடதுகையைப்பற்றி நீரில் அமிழ்த்தி, வலதுகையால் நீராட்டி, கண்களுக்குள் நீர் புகாது, மென்மையான தலைமுடியினை நீரால் கழுவி, கண், காது, மூக்கு, கைகள், உடல், கால்களை நீராட்டி, அவளுடன் உரையாடி உரையாடி எங்கள் திருவிழா தொடர்ந்துகொண்டிருக்கும்.

காலம் 5 – 6 மாதங்கள் ஆனபின் நீராட்டத்தை நிறுத்துவது சிரமமானது. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிணாள். மெதுவாய் கெஞ்சி, கொஞ்சி பருத்தித்துணியில் அவளைச்சுற்றியெடுத்து தலைமுடியினை துடைத்துவிடுவேன். அற்புத அழகாய் சிரிப்பாள்.

ஓடிக்கொலோன் வாசனையுடன் அப்படியே அவளை தொட்டிலுக்குள் இட்டு பால் புட்டியைக்கொடுத்ததும் கண்கள் சொக்கிப்போகும்வரை பாலைக்குடித்துவிட்டு கண்ணயர்வாள். சிலநாட்களில் எனது படுக்கையில் எனது மார்பில் உறங்கிப்போயிருப்பாள். நானும் மனதுநிரம்பி உறங்கியிருப்பேன்
.
“ப்பா”...என்பது “அப்பா” என்று மாறிய நாள் காற்றில் நடந்தேன். என்னிடம்தான் நடைபயின்றாள். எனது வயிற்றில் உட்கார்ந்திருந்து துள்ளுவது அவளுக்கு பிடித்தமானது. பாலூட்டுவது தவிர்த்து என்னால் எதையும் செய்ய முடிந்தது. அவள் வளர்ந்தபோது அவளின் நீண்ட கேசத்தினை அழகாகப் பின்னவும் பழகிக்கொண்டேன்.

அவளது தங்கை பிறக்கும்வரையில் எமக்கிடையில் ஒரு உலகம் இருந்தது. பின்னாட்களில் அவளது தங்கையும் அங்கு இணைந்துகொண்டாள்.

எங்கள் உலகம் அற்புதமானது. பனிக்காலத்தில் பனிச்சறுக்கும், இளவேனிற்காலத்தில் துவிச்சக்கரவண்டியோட்டங்களும், காட்டுவழிப்பயணங்களும் தூரதேசப்பயணங்கள் என்றும் காலத்தை உழுதுகொண்டிருந்தோம்.

அவளுக்கு எழுத்தறிவித்த பெருமையும் எனக்குண்டு. கதைகள்மேல் அவளுக்கு அதீக காதல் இருந்தது. என்னையும் ஒரு கதைசொல்லியாய் ஏற்றுக்கொண்டவள் அவள்தான்.

அவளுக்கு துவிச்சக்கரவண்டி ஓடுவதற்கு பழக்கியது ஒரு பெரிய கதை. விழுந்தெழும்பியபோதெல்லாம் நான் திட்டுவாங்கினேன்.

அவளின் அணிக்கு காற்பந்தாட்ட பயிற்சியாளனாய் நான்பட்ட அவஸ்தைகள் ஆயிரம். வீட்டினுள்ளும் காற்பந்து விளையாடி கண்ணாடிப்பொருட்களை உடைத்து, அக்குற்றத்தை ஏற்ற பெருமையும் எனக்குண்டு.

அவளுடைய முதலாவது கைத்தொலைபேசி வெள்ளைநிற Nokia 5310. அவளது துவிச்சக்கரவண்டியும் வெள்ளை நிறம்.

இடுப்பளவு நீளமான தலைமுடி இருந்தது. ”அப்பாதான் நோகாமல் தலை இழுத்துவிடுவார்” என்றபடியே என்னிடம் சீப்பினை நீட்டுவாள்”

என் வாழ்க்கை பிரளம்கொண்டு ஆடி,  மணவிலக்கானபின் இங்கிலாந்தில் என்றானது அவளது வாழ்க்கை.

நான் மன அழுத்தங்கள், தனிமைணர்வு, மனச்சோர்வுகளைக் கடந்து சற்றே நிமிர்ந்தபோது பதின்மவயதுகளை கடந்துகொண்டிருந்தாள் அவள்.

ஒரு நாள் ”அப்பா, பல்கலைக்கழகத்தில் சூழலியல் கற்கப்போகிறேன்” என்றாள். ”மகிழ்ச்சி” என்றேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் ”அப்பா, ஒரு வாரத்தில் வருகிறேன். நாம் வடக்கு நோர்வேயை சுற்றிப் பார்க்கப்போகிறோம் என்றாள். 7 நாட்களில் எறத்தாள 6500 கிலோமீற்றர்கள் பயணித்திருந்தோம். வாகனத்திலேயே தங்கினோம். மலைகள் ஏறினோம், கடற்கரைகளை கடந்தோம்.

பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தை அவுஸ்திரேலியாவில் கடந்துகொண்டாள்.

சில மாதங்கள் உலகம் சுற்றினாள்.

இப்போது மூன்றாம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்தில். இன்னும் இரண்டு வருடங்கள் கற்கப்போகிறாளாம்.

”இது உனது உலகம் நீயே அதன் அதிபதி” என்றிருக்கிறேன் அவளிடம்.

மரக்கறிகளை மட்டும் உண்பதோடு, பால் முட்டை ஆகியவற்றை தவிர்க்கிறாள். ”மச்சம் உண்ணாதே” என்று எனக்கும் உபதேசிக்கிறாள், திட்டுகிறாள்.

திடீர் திடீர் என்று தொடர்புகொள்வாள். ஆயிரம் கதை இருக்கும் அவளிடம். உலகத்தை மாற்றும் இளரத்தம் அவளையும் ஆட்டுகிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

அவ்வப்போது பல இணைப்புக்களை அனுப்புவாள். கட்டாயம் பார். உலகம் அழிவுப்பாதையில் செல்கிறது. அதை நாம் திருத்தவேண்டும் என்பாள். நானும் இப்படித்தான் உன் வயதில் நினைத்தேன் என்பதை நான் அவளுக்கு இதுவரை கூறியதில்லை.

வழிகாட்டுவதோடு நின்றுவிடுகிறேன். அப்படிச் செய், அதை தெரிவுசெய் என்று நான் கட்டளை இடுவதில்லை.

அது தவறு என்பது எனது எண்ணம். குழந்தைகளை வாழ்வின் சிரமங்களில், துன்பங்களில், துரோகங்களில், ஏமாற்றங்களில் இருந்து பாதுகாப்பதில் எனக்கு உடன்பாடில்லை. வாழ்க்கையை அவர்கள் விழுந்தெழும்பி கற்றுக்கொள்ளவேண்டும். தேவையானபோது கைகொடுக்கலாமே அன்றி அவர்களின் வாழ்க்கை நாம் வாழ முடியாது.

என் அப்பன் இப்படித்தான் என்பது அவளுக்குத் தெரியும். அதுவும் மனதுக்கு பெரும் ஆறுதலான விடயமல்லவா.

பெண்குழந்தைகளை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்ற எனது கற்பனைகளை, வாழ்வின் யதார்த்தம் வென்ற என்னோடல்லாத கடந்த 9 வருடங்களிலும் சுயம்புவாய் வளர்ந்துகொண்டவள் அவள்.

அஞ்சாமல் எதையும் எதிர்கொள்ளப் பழகும் அவள் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளப் பழகுகிறாள் என்றே எண்ணத்தோன்றுகிறது. அவளது வயதில் நான் இத்தனை முதிர்ச்சியாக இருந்ததில்லை.

அவளின் வெட்டொன்று துண்டிரண்டென்ற பேச்சினை, வயதுக்கேயுரிய சினத்தினை, சமூகநல ஆர்வத்தை தள்ளியிருந்து ரசிக்கிறேன்.

அன்றொருநாள் ”அப்பா, பல்கலைக்கழகத்தின் கைப்பந்து அணிக்கு தேர்வாகியிருக்கிறேன்” என்றாள். மனது பெருமையுணர்ந்தது.

காலம் எமக்கிடையே கண்ணுக்குப்புலப்படாத ஒரு இடைவெளியொன்றினை உருவாகிவிட்டிருக்கிறது என்பததை மறுப்பதற்கில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்ய முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

மணவிலக்குகள் தரும் ஈடுசெய்யமுடியாத இழப்புக்கள் இவைதான்.

26.12.2017 நேரம் 00.01

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா என்றேன்"
"ம்.... I love you Appa’ என்றாள்"

"Why don't you love me, Jenny? I'm not a smart man... but I know what love is."

ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும்தேடித் தேடிப்பார்ப்பது நெஞ்சோடுகிளத்தல் அன்றி வேறென்ன?

ஒரு காலத்தில் 'நினைத்தாலே இனிக்கும்' எனக்கு அப்படி இருந்தது. அந்நேரத்து வயது அப்படி.

இப்போது Forrest Gump. 1994இல் இருந்து பலதடவைகள் பார்த்தாகிவிட்டது. இறுதியாக நேற்றிரவு.

ஒவ்வொரு முறையும் புதிய புதிய செய்தியொன்றை மனது கண்டுகொண்டு கிறங்கிப்போகிறது.

- தாய் மகனுக்கான உறவு.
- சக வயத்தொவர்களின் கொடுமை
- பால்யத்து சகியின் தோழமை
- Bubba உடனான நட்பும் அவன் இறந்தபின் அவனது குடும்பத்திற்கு உதவும் மனது.
- யுத்தமும் இழப்பும்
- இராணுவத்தில் தனது மேலதிகாரி Lieutenant Dan Taylor உடனான நட்பும் அன்பும்.

என்னை Gumpஇன் தோழனாக்கியது அவனது Jenny மீது அவனுக்கிருக்கும் அடங்காத காதல்.

அன்பு என்பது உரிமைகோருவது அல்ல என்பதை மிக அழகாக இத்திரைப்படம் உணர்த்துகிறது.

பால்யத்துச் சகியை, காதலியை அவ்வப்போது அவனிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்கிறது காலம்.

சில நேரங்களில் அவளாகவே விலகிச்செல்கிறாள்.

அப்போதும்கூட அவள்மீதான அவனின் காதல் குறையவில்லை.

இது இலகுவல்ல. என்னால் அவனைப் போன்று இருக்கவே முடியாது. சுக்குநூறாகியிருப்பேன். ஆத்திரப்பட்டிருப்பேன்.

வேறுபலருடன் பழகும் அவளை, அவளின் விருப்பப்படி வாழ அனுமதிப்பதும், அவளாகவே அவ்வாழ்க்கைகளில் இருந்து அலுத்துக் களைத்துத் திரும்பும்போதெல்லாம் அவளைக் காதலித்துக் கொண்டாட அவனால் எப்படி முடிந்தது. இது சாத்தியமானதா?

அவள் தன்தைத் தவிர்த்து மற்றையவர்களை கொண்டாடியபோதும் பொறாமையை, சினத்தை, சுயபரிதாபத்தை எல்லாம் கடந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வை எதிர்கொள்ளும் மனம் எப்படி வாய்தது?

இறுதியாக காலம் அவளை அவனிடமே ஒப்படைக்கிறது. அப்போதும் அவனின் நேசிப்பில் குறையேதுமில்லை. அவள் இறந்தபின்பும்தான்.

இதுவா மனவிசாலம்?

Forrest Gumpஇன் வசனமென்றுடன் இப்பத்தியை முடிக்கிறேன்.

"Why don't you love me, Jenny? I'm not a smart man... but I know what love is."

#Forrest_Gump

இருளின் ஒளி

எல்லா மனிதர்களுக்கும் மனதுக்கு நெருக்கமான ஒரு இடமிருக்கும். மனம் அமைதியுறும் இடம். அப்படி எனக்கும் ஒரு இடமிருக்கிறது. 1987ல் நோர்வேக்கு வந்தபோது முதன்முதலாக நகரத்தினுள் நடந்த வீதி அது. நகரத்தின் மையத்தில் இருக்கிறது. பழைய புகையிரத நிலையத்திற்கு நேரெதிரே ஆரம்பித்து நோர்வே அரசனின் அரண்மனையில் முடிவடையும் இந்த வீதி.

இந்த வீதியில் நடப்பது ஒரு நண்பனுடன் உரையாடியபடியே நடப்பது போன்றது. நடந்து முடியும்போதெல்லாம் மனது ஆறிப்போயிருக்கும். இந்த வீதியில் நடந்த அனுபவம் ஒன்றினை பால்வீதிப்பயணங்கள் என்று முன்பு எழுதியிருக்கிறேன். இதுவும் அப்படியானதே.

நேற்று மனது அழுந்திக்கிடந்ததனதல் நாளின் பெரும்பகுதி தூக்கத்தில் கழிந்தது. என்னை வற்புறுத்தி வெளியே அழைத்துவரவேண்டியிருந்தது. நேரம் மாலை 9 மணி. எங்கே செல்வது என்ற தீர்மானமின்றி நடந்துகொண்டிருந்தேன்.

சற்றுநேரத்தில் எனது வீட்டில் இருந்து நான்கு கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள ஒரு நிலக்கீழ்தொடரூந்து நிலையத்தை கண்ணுற்றபோது கால்கள் என்னை அங்கு அழைத்துப்போயின. 30 நிமிடத்தின்பின் நகரின் மையத்தில் நின்றிருந்தேன். அங்கிருந்து ஒரு நிமிட நடையில் ஆரம்பிக்கிறது நான் மேலே கூறிய வீதி.

நேரம் மாலை 11 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. கடும் குளிர். நகரின் மையப்பகுதி என்பதால் வீதிகளில் இருந்து பனி வழிக்கப்பட்டிருந்தது. இந்த வீதியுடனான எனது நினைவுகளில் அதிகமானவை வீதியின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கமரா கடையினுடனானவை. 1980களின் இறுதியில் புகைப்படக்கலையைவிட வேறு எதையும் மனது சிந்திக்காத காலம். ஏறத்தாழ வாரத்தில் 3 – 4 முறை அந்தக் கடைக்குச்செல்வேன். இப்போது அந்தக் கடை அங்கில்லை. முதற்காதலின் நினைவுபோன்றது அந்தக்கடையின் நினைவுகள்.

ஞாயிற்றுக்கிழமை இரவு என்பதால் வீதி வெறிச்சோடிக்கிடந்தது. கண்ணில்பட்ட முதல் மனிதர் ஒரு போதைப்பொருள் பாவனையாளர். தனது சொத்துக்களை இரண்டு பைகளில் அடைத்துவைத்திருந்தார். அவரால் நிற்கமுடியவில்லை. உடலை வளைத்து நின்றுகொண்டிருந்தார். இல்லை, அவர் தூங்க முயற்சித்துக்கொண்டார். எத்தனை கொடுமையான தூக்கமாக இருக்கும் அது. வாழ்வு சிலவேளைகளில் அவலம்.

அவரைக் கடந்தபோது ஒரு பிச்சைக்காரர் இரண்டு விளக்குகளுடன் தூங்கிப்போயிருந்தார். அவருக்கு வலதுபுறமும் இடதுபுறமும் இரண்டு விளக்குகள் மங்கி மங்கி எரிந்துகொண்டிருந்தன.

இந்த நீண்ட வீதியை பல வீதிகள் குறுக்காக கடக்கின்றன. முதலாவது சந்தியில் இரண்டு பால்வினைத்தொழிலாளிகள் நுகர்வோருக்காகக் காத்திருந்தனர். வீதியின் மறுபுறம் இன்னும் இரண்டுபேர். காமத்திற்குப் பகலென்ன இரவென்ன.

வீதியைக் கடந்துகொண்டேன். வலதுபக்கமாக ஒரு தேவாலயம் இருக்கிறது. தேவாலயத்தின் உயரமான கூரையின்மேல் பனி கொட்டியிருந்தது. பகல்போல் தேவாலயத்தைச் சுற்றி மின்வெளிச்சம். அந்தக் காட்சி அழகாய் இருந்தது. அப்போது தேவாலயத்தின் மணிக்கூடு நேரம் 11 மணிக்கான ஒலியை எழுப்பியது. இருளிலும் மனதை அள்ளும் மெது இசை.
தேவாலயத்திற்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு பாலின்ப மகிழ்விகள் (sextoys) விற்கும் கடை இருக்கிறது. பகலில் என்றால் காமம்

வழிந்தோடிக்கொண்டிருக்கும் இடம் இது. நிறம் நிறமான பல வடிவங்களினான ஆணுறுப்புக்களின் விளம்பரங்கள் குளிரில் விறைத்துக்கிடந்தது. காமத்திற்கும் ஓய்வுவேண்டுமோ என்னவோ.
எதிரே ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரின் உடற்பருமையை அவரால் தூக்கிக்கொண்டு நடக்கமுடியாது சிரமப்பட்டார். கையில் உணவுப்பொருட்களைக் கொண்ட பை. அவரைக் கடந்துகொண்டுபோது அவது மூச்சுச்சத்தம் பலமாகக் கேட்டது. இரவு சில மனிதர்களுக்கு பாதுகாப்பைக்கொடுக்கிறது. சிலருக்கு அமைதியின்மையைக்கொடுக்கிறது. என்னைக் கடந்துகொண்டவர் இதில் முதலாவது ரகமாக இருக்கவேண்டும். நான் இரண்டாவது ரகம்.

இரவின் மனிதர்களைக் கண்டிருக்கிறீர்களா? அவர்கள் பகலை வெறுப்பவர்கள். இருள் அவர்களை உயிர்ப்பிக்கிறது. பகலை அவர்கள் சட்டைசெய்வதே இல்லை.

பல வருடங்களுக்கு முன் ஒரு நோர்வேஜியருக்கு உளவள துணைவராக இருந்தேன். சம்பளம் இல்லாத வேலை. ஆனால் மனதுக்கு பிடித்தமானவேலை. அவர் ஒரு கப்பலின் தலைவனாக இருந்தவர். நோயுற்று, கடும் மன அழுத்தத்திற்கு உட்பட்டு, மண விலக்காகி தனியே வாழ்ந்தார். அவர் இருளின் மனிதர். பகலில் வீட்டின் திரைச்சீலைகளைக்கூட விலக்கமாட்டார்.

வெளிச்சத்தின் மீது அத்தனை வெறுப்பு அவருக்கு. இருண்டபின்பே வெளியே செல்வார். தேவையானதை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவார். அவரோடு நான் உரையாடும் நேரங்களில் “பகலை ஏன் வெறுக்கிறீர்கள்’’என்றேன். “தெரியாது, ஆனால் நோயுற்றபின் இரவு மனதுக்கு இதமாக இருக்கிறது|| என்றார். அவரது அந்தப் பதில் மிகவும் கனமானது. நோயுறுவது எத்தனை பெரிய சோகம். மனிதனை உயிருடனேயே கொன்றுபோடுகிறது அது.

இப்போதும் எனது வீட்டிற்கருகே உள்ள ஒரு பெற்றோல்விற்பனை நிலையத்தில் இரவு நேரங்களில் ஒருவரைக் காண்பதுண்டு. நீண்ட தாடியும் பெருத்த உடம்புமான மனிதர். பகல்நேரத்தில் அவரை நான் கண்டதே இல்லை. இரவு நேரங்களில் பல மணிநேரம் அங்கிருப்பார்.

வெளிச்சம்தான் மகிழ்ச்சியானது, பாதுகாப்பானது என்று நினைத்திருந்தேன். ஆனால் இருளும் அப்படியானது என்பதை இவர்கள் கற்றுத்தருகிறார்கள்.

மீண்டும் ஒரு சந்தியில் நின்றிருந்தேன். டொக் டொக் என்ற காலணியின் ஒலி தூரத்தேகேட்டது. ஒரு பெண்ணின் காலடியோசை. மெல்ல மெல்ல? என்னை நோக்கிவந்து என்னையடைந்துபோது ஒலி பெரிதாகக்கேட்டது. கடந்தும்போனது. மெது மெதுவாக காற்றில் கரைந்துபோனது. ஒலியின் அழகில் மனதைப்பறிகொடுத்திருந்ததில் ஒலிக்குரியவரை கவனிக்கத்தவறிவிட்டேன்.

எனக்கேதிரே ஒரு ஆண் பெண்போல் ஒப்பனைசெய்துகொண்டு, பெண்களின் உடையணிந்து வந்தார். அதீத ஒப்பனை. கடந்துபோன அவர் பின்னே மனம் ஓடியது. திருநங்கையாக இருக்குமோ? அல்லது பெண்களைப்போன்று ஒப்பனைசெய்ய, உடையணிந்து மனதின் இரகசிய ஆசையை இரவில் தீர்த்துகொள்ளும் மனிதரா? அல்லது பால்வினைத்தொழிலாளியா? எது எப்படியோ.... இவரும் இருளின் நண்பர்.

எதிரே ஒரு பெரும் தொலைக்காட்சிப்பெட்டியில் அழகிகள் இரண்டு துண்டு உடைகளுடன் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். இந்தக் குளிர்காலத்தில் ஏனிந்த இரண்டு துண்டு உடை? இருளை ஆராதிக்கும் மனிதர்களுக்கா?

வீதியின் நடுப்பகுதிக்கு வந்திருந்தேன். எதிரே ஒரு போலீஸ்வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே இருந்த ஒரு ஆணும் பெண்ணும் வீதியை பார்த்துக்கொண்டிருந்தனர். இரவின் பாதுகாவலர்கள்.

அவர்களையும் கடந்து நடந்துகொண்டிருந்தேன். பாராளுமன்றமும் கடந்துபோனது. ஒரு உணவகத்தின் வெளியே இருவர் தனித்தனியே இருந்து உணவருந்திக்கொண்டிருந்தனர். குளிரைப் போக்குவதற்கு அவர்களருகே மின்சூட்டடுப்பு சிவப்புநிறமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. இருளையும் தனிமையும் விரும்பும் மனிதர்களாக இருக்கலாமோ?

நான் நடந்துகொண்டிருந்தேன். வலது பக்கத்தில் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கட்டிடங்கள் ஒளியூட்டப்பட்டிருந்தன.

மனதில் இருந்து அமைதியின்மையும் அழுத்தமும் மெது மெதுவாக அகன்றுகொண்டிந்தது. இப்போது நோர்வே அரசனின் அரண்மனைக்கருகில் நின்றிருந்தேன்.

வீதியின் அதி உயரமான பகுதி இது.
எனக்கு முன்னே 7. September1875 அன்று சிலையாய் நிறுவப்பட்ட Karl III Johan என்ற நோர்வே – சுவீடன் அரசன் தனது குதிரையில் நின்றபடியே முழு வீதியையும் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது சிலைக்கு கீழ் ‘மக்களின் அன்பே எனக்கான பரிசு’ என்று குறிக்கப்பட்டிருந்தது.

சிலையின் அடித்தளத்தில் நின்று வீதியைப்பார்த்தேன்.

இருளிலும் அழகாயிருந்தது எனது Karl Johans gate.

மண்ணாசையும், பெண்ணாசையும்

சில நாட்களுக்கு முன் நான் அழுவதாக பாசாங்கு செய்தால் ஒரு நாய்க்குட்டி என் மடியில் ஏறி தனது மொழியில் எனக்கு ஆறுதல் சொல்வதாக எழுதியிருந்தேன் அல்லவா. அந்த நாய்குட்டியின் உரிமையாளர் இன்று தான் சற்றுநேரம் பிந்தி வரவேண்டியிருப்பதால் நாய்க்குட்டியை வெளியே அழைத்துச் செல்லும் பொறுப்பினை எனக்குத் தந்திருந்தார். நான் அழுவதுபோன்று பாசாங்கு செய்தாலே என்னைத்தேற்றும் இந்த நாய்க்குட்டிக்கு இதையாவது நான் செய்யாவிட்டால் நான் மனிதனே இல்லை என்று நினைத்து, நண்பரிடம் “கவலைப்படாதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்“ என்றேன். நண்பர் தனது வீட்டுத் திறப்பைத் தந்தார்.

இது நடந்தது நேற்று. இன்று, நண்பரின் வீட்டைத் திறந்தேன். என்னைக் கண்டதும் “அய்யோ, நாசமாய்ப் போனவன் வந்துவிட்டான்“ என்று நினைக்காது, துள்ளிக்குதித்து மகிழ்ச்சியடையவும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு மனம் இருக்கிறது என்பது நாய்க்குட்டியைக் கண்டதும் புரிந்தது. சற்றுநேரம் அதனுடன் விளையாடியபின் நண்பர்கூறிய நேரத்தின்போது நாய்க் குட்டியைப் பார்த்து “அய்யா வா, வெளியே போவோம்” என்றேன், சுந்தரத் தமிழில். எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்காது, கதவருகில் சென்று, நின்று என்னை நிமிர்ந்து பார்த்தது. அதற்குரிய சேணத்தைப் பூட்டினேன். வீட்டைப்பூட்டிப் புறப்பட்டடோம். என்னைவிட வேகமாய் படியில் பாய்ந்து இறங்கியது. வீட்டுக்கு வெளியே வந்ததும் தனது எல்லைகளை அளவிடும் வேலையைத் தொடங்க, நான் பட்டம் ஏற்றும்போது நூலை இழக்கிவிடுவது போன்று சேணத்தின் கயிற்றை இழக்கி விட்டபடியே நடந்துகொண்டிருந்தேன். 

திடீரென்று யாரோ சேணத்தை பின்னால் இழுப்பது போல உணர்ந்து திரும்பினேன். நாய்குட்டி ஒரு மின்விளக்குக் கம்பத்தினை “ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை” என்பதுபோல கம்பத்தினை மணந்துகொண்டிருந்தது. இழுத்துப் பார்த்தேன். அது நகரவில்லை. அப்போதுதான் புரிந்தது நான் நண்பர் நாயை எந்தப் பாதையால் அழைத்துப்போவார் என்று கேட்கவில்லையே என்று. அதற்கிடையில் நாய் காலைத்தூக்கி தனது GPS மார்க்கிங்ஐ செய்துவிட்டு பின்னங்காலால் மண்ணையும் காய்ந்த இலைச் சருகுகளையும் அள்ளி எறிந்துவிட்டு எதுவும் நடக்காததுபோன்று வாலையாட்டியபடியே வந்தது. 

என்னருகில் வந்ததும் நான் «என்னய்யா, இது எனக்குரிய இடம், இதில் வேறு எவரும் காலைத்தூக்கப்படாது என்று எழுதிவிட்டு வருகிறாயாக்கும்» என்றேன். அதற்கும் அது வாலையாட்டியது. நாம் நடந்துகொண்டிருந்தோம். இப்போது நான் உங்களுக்கு என்னைக் கண்டால் அளவில்லாத மகிழ்ச்சிகொள்ளும் இந்த அற்புத ஜீவனைப்பற்றி சற்றுக் கூறவேண்டும். 

அவர் ஆண்பாலானவர். ஆண்களுக்குரிய அனைத்துக் குணங்களையும் உடையவர் (புரிந்ததா). வயது 3 ஆகப்போகிறது. இளமைத் துடிப்புள்ளவர். உயரம் 19 சென்டிமீற்றர்கள். நீளம் 40 சென்டிமீற்றர்கள், அகலம் 13 சென்டிமீற்றர்கள் இருக்கக்கூடிய அதி இராட்சத உருவம் அவருக்கு. அவர் இனத்தின் பெயர் Yorkshire Terrier. “யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள்“ இட்டுச் செய்த உறைப்பான இறைச்சி, மீன் வகைகயை மட்டுமே உண்ணுவார். வீட்டில் உள்ளவர்கள் உண்ணுமுன் இவருக்குப் படைக்கவேண்டும். உணவின் பின் இனிப்பு உண்ணுவது முக்கியம் இவருக்கு. இரவு படுக்கைக்குச் செல்லுமுன் தானியங்கி பல் மினுக்கியினால் பற்களைச் சுத்தம்செய்வது இவருக்கு பிடிக்காது. இவரைப்போன்றவர்களுக்கு கட்டாயம் காப்புறுதி செய்யவேண்டும் என்று நோவேயில் சட்டமிருக்கிறது. இவருக்கு அண்மையில் பல் புடுங்கினார்கள். அந்தச் செலவீனத் தொகையைக் கேட்டால் மயங்கிவிடுவீர்கள். எங்கே இன்று தன்னை நீராட அழைத்துவிடுவார்களோ என்றும் தன்னருகில் ஒரு காதலி நிரந்தரமாக இல்லையே என்ற இரண்டு கவலைகளைவிட அவருக்கு வேறு எதுவித கவலையும் இல்லை. அவ்வப்போது நண்பர் பியர் குடிக்கும்போது நாக்கு நனைக்கவும் கிடைக்கிறது இவருக்கு. மொத்தத்தில் ராஜ வாழ்க்கை. 

நாம் நடந்துகொண்டிருந்தோம். காலநிலை சிறப்பாக இருந்தது. நாய்குட்டியின் நடவடிக்கைகள் அவர் தினமும் போகும் பாதையால் நாம் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தின. கண்ணில்படும் கம்பங்கள் அனைத்திற்கும் தீர்த்த அபிஷேகம் செய்து தனக்குரிய உறுதிப்பத்தரத்தில் கையெழுத்திட்டபடியே வந்துகொண்டிருந்தார். ஏறத்தாழ 50 கம்பங்களுக்கு அது அபிஷேகம் செய்தபோதுதான் எனக்கு அந்த சிந்தனை வந்தது. நாயின் அளவே மிகச் சிறியது. இதன் சிறுநீர்ப்பை பெரிதாக இருந்தாலும் 50 கம்பங்களை அபிஷேகம் செய்ய அதற்குள் தீர்த்தம் இருக்குமா? என்பதுதான் அந்த அற்புதக் கேள்வி. இரத்தம் சிந்தி நிலம் பிடிக்கும் மனிதர்களைவிட இது மிகவும் நிலத்தாசை கொண்ட நாய்போன்றிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். 

கம்பங்கள் இருந்தாற்தானே காலைத் தூக்குவாய் என்று நினைத்தபடியே கம்பங்கள் இல்லாத ஓரு புல்வெளியினூடாக நடாத்திச் சென்றேன். சற்று நேரம் அமைதியாக வந்தது. நாம் உரையாடியபடியே நடந்துகொண்டிருந்தோம். நான் எதைச் சொன்னாலும் அது வாலையாட்டி சம்மதம் என்றது. 

ஒருவர் தனது நாயுடன் எம்மைக் கடந்தபோது அந்த நாயும் எனது நாயும் பரஸ்பரம் சந்தித்துகொண்டார்கள். நான் அந்த மனிதருடன் உரையாடிய சற்றுநேரத்திற்குள் அது தனது வம்சவிருத்திக்கான நடவடிக்கைகளில் ஈடுபட நினைப்பதை உணர்ந்துகொண்டேன். “அய்யா, இவ்விடத்தில் வேண்டாம்“ என்று இழுத்தேன். சற்று எதிர்ப்பைக் காட்டினாலும் பின்பு என்னுடன் நடக்கலாயிற்று. திடீரென்று நாம் நடந்துகொண்டிருந்த அந்தப் புல்வெளியையும் கைப்பற்றும் எண்ணம் அதற்கு வந்திருக்கவேண்டும். சர்க்கஸ் காட்டும் நாய்போன்று இரண்டு முன்னங்கால்களிலும் நின்றபடியே ஆங்காங்கு அபிஷேகம் செய்தது. பலர் அதை பார்த்துச் சிரித்தபடியே கடந்துபோனார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது. அருகே இழுத்து “இப்படி வெட்கம் கெட்ட வேலைகளை செய்யாதே எனக்கு கோபம் வரும்“ என்றேன். அதற்கு வெறிகொண்ட மண்ணாசை ஏற்பட்டிருந்திருக்கவேண்டும். உடனே என் காலருகிலேயே காலைத் தூக்கியது. “ராசா, நீ எங்காவது போய் என்தையும் செய். இந்த ஊரை என்ன, நாட்டையும் பிடி… என் காலை மட்டும் விட்டுவிடு“ என்று சேணத்தின் கயிற்றினை இழக்கிவிட்டேன்.

நாம் காடு, மேடு, மலை, சிற்றாறுகள், வீதிகள் என்று அலைந்து திரிந்து வீடு வந்தோம். நான் சோபாவில் சரிந்தேன். நாய் தண்ணீர்பாத்திரத்தை நக்கிக்கொண்டிருந்தது. இன்று ஒஸ்லோவில் தமிழர்களிடத்தில் வளரும் நாய்களிடத்தில், நண்பரின் நாயிடம்தான் அளவுகணக்கில்லாத நிலம் இருக்கிறது. நண்பரின் நாயை ஒரு போடியார் என்று சொல்லாம் இப்போது. மண்ணாசையும், பெண்ணாசையும் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல.

பீரங்கி வாசலில் வீடு கட்டாதீர்கள்

எனக்கு சவரம் செய்வது என்பதானது திருவிழாபோன்றது.
கூரிய சவரக்கத்தி, வாசனையான சவர்க்காரம். சவர்காரத்தை முகம் எங்கும் வெள்ளையடிக்கும் சிறு தும்புத்தடி, ஆப்டர் சேவ் வாசனத்திரவியம். கிறீம் ஆகியன எனது திருவிழாப்பொருட்கள்.
என்னிடம் இருந்த, சவர்க்காரத்தை முகம் எங்கும் வெள்ளையடிக்கும் சிறு தும்புத்தடி பழுதடைந்ததால் அதை நேற்று எறிந்துவிட நேர்ந்தது.
இன்று அப்படி ஒன்று வாங்குவதற்காய் கடைக்கு அலைந்தேன். பல கடைகளிலும் இருக்கவில்லை.
சற்று அலைச்சலின் பின் ஒரு கடையில் மிக அழகானதொன்று இருந்தது. மனதுக்கு அதன் அழகும், தும்புகள் வெட்டப்பட்டிருந்த விதமும் பிடித்துக்கொண்டதால் கையிலடுத்துச் சென்று பணம் செலுத்த முற்பட்டேன்.
”வணக்கம், நத்தார் பரிசா இது?” என்றார் விற்பனையாளினி.
”இல்லை, இது அடியேனுக்கு” இது நான்.
”உங்களுக்கா? என்றுவிட்டு நிமிர்ந்து பார்த்தார்”
”எனக்கு தலையில்தான் முடியில்லை. ஆனால் முகத்தில் இருக்கிறது. இது சவரம்செய்யும்போது பாவிப்பதற்கு”
சிரிப்பை அடக்கியபடியே இப்படிச்சொன்னார்.
”இது பெண்கள் முகத்திற்கு ஒப்பனை செய்யும்போது பாவிப்பது”
விதி கிழிந்த குருவி பீரங்கி வாசலில் கூடு கட்டுவது என்பது இதைத்தான்.

சீட்டுக்கட்டு ராணி

எனது நண்பர்களின் எண்ணிக்கையைவிட அதிகமானது சிறுவர் சிறுமியரின் தோழமை எண்ணிக்கை.
அதில் ஒருத்திக்கு 3 - 4 வயதாக இருக்கும்போதே நாம் நண்பர்கள். இப்போது அவளுக்கு 9 வயது.
அவளின் பெற்றோரையும் நான் அறிவேன். அன்றொரு நாள் அவளது தந்தை இப்படிச் சொன்னார் ”எனது இளைய மகள் உங்களைப்பற்றி அடிக்கடி உரையாடுவாள்”.
நெகிழ்ந்துபோனது மனது.
அவள் சரளமாகத் தமிழ்பேசுவாள். பெரும் வாயாடி அவள்.
எங்கு என்னைக் கண்டாலும் ஏதாவதொரு குறும்புத்தனம் செய்வாள். நானும்தான்.
நேற்று மாலை, ஒரு விழாவில் அவளைக் கண்டேன். நண்பியர் சூழ உட்கார்ந்திருந்தாள். அவளின் நண்பியரையும் நான் அறிவேன் என்பதால் அருகில் உட்கார்ந்து உரையாடிபோது அவர்கள் சீட்டுக்கட்டு விளையாடுவதை அவதானித்தேன்.
எனக்கு சீட்டுக்கட்டு விளையாட்டில் ஒருவர் ஒரு சீட்டினை எடுத்து அதனை எனக்குத் தெரியாமல் சீட்டுக்கட்டினுள் வைத்தால் அந்த சீட்டினை கண்டுபிடிக்கும் தந்திரம் தெரியும்.
எனவே ”அம்மா! ஒரு மஜிக் காண்பிக்கவா” என்றேன்.
” நான் உன் அம்மா இல்லை” என்று பதில் வந்தது.
சற்றுநேரத்தின் பின் ”சரி” என்றாள். கண்களில் ஆர்வம் தெரிந்தது.
சீட்டுக்கட்டை வாங்கி எண்ணிப்பார்த்தேன் 52 சீட்டுக்கள் இருந்தன.
”ஒரு சீட்டை எடுத்து நண்பிகளுக்கு காண்பித்தபின் உங்களக்கு விரும்பிய இடத்தில் வைய்யுங்கள்” என்றேன்.
பெரும் இராணுவ ரகசியத்தைப் பார்ப்பதுபோன்று ஒரு சீட்டை மூவரும் பார்த்தார்கள். பின்பு இருவர் என்று கண்களை மூட, ஒருத்தி சீட்டுக்கட்டினுள் அந்த சீட்டை வைத்தாள்.
நான் எனது மந்திர தந்திர விளையாட்டுக்களைத் தொடங்கினேன்.
”நான் வென்றால் நீங்கள் மூவரும் என்க்கு ”முத்தம்” தரவேண்டும். நீங்கள் வென்றால் நான் உங்களுக்கு ”முத்தம்”தருவேன் என்றேன்.
நாங்கள் வென்றால் ஒன்றும் தரமாட்டோம். நீயும் தரத்தேவையில்லை என்று என்னை மடக்கினாள் அவள்.
”ஓ ஜீபும்பா ... ஓடிவா.. சூ காளி.. மந்திர காளி” என்று மந்தரித்தபடி சீட்டுக்கட்டினை பரப்பி எனது தந்திரத்தின்படி வரவேண்டிய சீட்டினை எடுத்து ”இதுவா உங்கள் சீட்டு” என்று கேட்டேன். எனது குரலில் பெருமிதம் இருந்தது.
”இல்லை, இல்லை” என்று விழுந்து விழுந்து சிரித்தனர்.
பிழைக்க முடியாதே. எப்படி பிழைத்தது என்பது எனக்குப் புரியவில்லை.
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தேன்.
இப்போதும் பிழைத்தது.
நண்பிகள் மூவரும் விழுந்து விழுந்த சிரித்தபடியே கேலிபண்ணிணார்கள்.
எனக்கு வெட்கமாக இருந்தது.
”அடியேய், நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என்றேன்.
இல்லை இல்லை என்று வாதித்தனர்.
எனக்கு சற்று வெட்கமாயும் இருந்தது. நாம் அமர்ந்திருந்த மேசையில் வேறு பல வளர்ந்தோரும் எனது திருவிளையாடலை கடைக்கண்ணால் கவனித்தபடி இருந்தார்கள்.
மூன்றாவது தடவையும் நான் தொல்வியுற்றபோது எனக்கே எனது தந்திரத்தின் மீது அவநம்பிக்கை வந்தது.
அப்போது அந்த சிறுக்கி என்னைப் பார்த்து ”சில வேளை மேசைக்கு கீழ் ஏதும் கார்ட் விழுந்திருக்கும்” என்றாள்.
மேசைக்குக் கீழ் பார்த்தேன். அங்கு ஒரு சீட்டு கிடந்தது.
”அடியேய் கள்ளி” என்றேன்
கல கல எனறு சிரித்தார்கள்.
இறுதியாக கீழே இருந்த சீட்டினையும் இணைத்து எனது மஜிக்ஐ காண்பித்தேன். சரியாக வந்தது.
கேட்காமலே மூன்று முத்தம் கிடைத்தது.
கொட்டிக்கிடக்கும் பணம், பதவி, சொத்துக்கள் வாழ்விற்கு அர்த்தம் போதிப்பவை அல்ல.
இப்படியான சின்னஞ்சிறு சம்பவங்களே வாழ்வின் அர்த்தத்தை போதிக்கின்றன.
குழந்தைகளின் உலகினைப் புரிந்தால் அதுவே பேரின்பம்.

உலகப்புகழ் பெறப்போகும் என்னுடைய புகைப்படம்

மார்கழி 31ம் திகதி அம்மாவுடன் தொலைபேசியில் உரையாடியபோது ”ராசா, ஒரு படம் அனுப்பு என்றார்.

நான் புகைப்படங்களில் முகத்தை நீட்டுவது குறைவு. எனவே புகைப்படங்கள் குறைவு.

ஆனால் எனது அதிஸ்டம் அம்மாவுடன் தொலைபேசியபோது நான் ஒரு நிகழ்ச்சியில் நின்றிருந்தேன்.

அங்கு 3 உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளர்கள் இருந்தார்கள். அவர்கள் உடல்லெங்கும் காய்த்த மாமரம்போன்று புகைப்பட உபகரணங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

அவர்களிடம் ”ராசாக்களே.. என்னைப் பெத்த ஆத்தாவுக்கு படம் அனுப்பவேண்டும். என்னை அழகாக ஒரு படம் எடுத்துத்தாருங்கள்” என்றேன்.

முதலாமவர் அண்ணை flash போடுறதா இல்லையா என்றார்.

இரண்டாமவர், பானையில் இருப்பதுதான் அகப்பையில் என்றார்.

மூன்றாமவர் மட்டும் ”அண்ணை... இது சின்னப்பிரச்சனை” என்றார்.

இது நடந்து இன்றுடன் 4 நாட்களாகி விட்டன.
இன்று 110 படங்களை அனுப்பிருந்தார் ”அண்ணை... இது சின்னப்பிரச்சனை” என்ற தெய்வம்.

அந்தப்படங்களுக்குள் நான் என்னை தேடினேன்.
என்னை நான் அடையாளம் கண்டுகொண்டது இத்துடன் இணைத்திருக்கும் இந்தப்படத்தில்தான்.

எங்கே என்று தேடுகிறீர்களா?

முதலில் ஒரு பூதக்கண்ணாடியை எடுத்துக்கொள்ளுங்கள்.

மேடைக்கு இடதுபுறமாக, ஒரு சிவப்பு நிற உடையணிந்திருக்கும் சிறுமிக்கு அருகில் தெய்வீக அழகுடன் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்... தெரிகிறதா?

அவர் தான் ... நானாம்.

அய்யா.... போட்டோகிராபர் உங்களுக்கு நான் என் அநியாயம் பண்ணினேன்?

மற்றைய இரண்டு தெய்வங்களும் இன்றும் படங்கள் அனுப்பவில்லை.

ரொம்ப பயமாக இருக்கிறது.

வாழ்விற்கான வைத்தியங்கள்

நமது தொழில் குழந்தைகளுடன் தனவுவது.

அண்மையில் ஒரு விழாவில் எனக்கு நன்கு அறிமுகமாகிய சிறுமியொருத்தி முகத்துக்கு, உதட்டுக்கு, நகங்களுக்கு நிறமள்ளிப் பூசிக்கொண்டு ஒரு குட்டித்தேவதையாய் வந்திருந்தாள். அவளுக்கு வயது 8-9 தான் இருக்கும்.

அவள் நண்பிகளுடன் என்னைக் கடந்தபோது..

“அம்மாச்சி, ஏனம்மா உதட்டுக்கு நெயில் பொலிஸ்ம், நகத்திற்கு லிப்ஸ்டிக்கும் அடித்திருக்கிறீங்க” என்று தொழிலை ஆரம்பித்தேன்.

அவளின் நண்பிகளும் இதைக் கேட்டார்கள்.

இவள், நக்கலாக பெரிதாக சிரித்தபடியே... நண்பிகளை அழைத்து..

“பெரிய பகிடி விட்டுட்டாராம்.... சிரியுங்கடி” என்று கூறியதல்லாமல் கண்ணை, மூக்கை, வாயை, நாக்கை நெளித்துக் காட்டிவிட்டு கல கல என்று சிரித்தபடியே மறைந்தாள்.

சிங்கம் அசிங்கப்பட்டதை யாராவது பார்த்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.
எவரும் காணவில்லை.

ஆனால்

அருகில் இருந்து அலட்டிக்கொண்டிருந்த ஒரு குட்டிப்பிசாசு வாயைப்பொத்தி சிரித்துக்கொண்டிருந்தாள்.

வாரங்கள் ஆனபின்பும் அதை நினைத்துக்கொண்டிருக்கிறேனே... ஏன்?

இப்படியான சம்பவங்களில்தான் வாழ்விற்கான வைத்தியம் இருக்கிறது.

"Why don't you love me, Jenny? I'm not a smart man... but I know what love is."

ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும்தேடித் தேடிப்பார்ப்பது நெஞ்சோடுகிளத்தல் அன்றி வேறென்ன?

ஒரு காலத்தில் 'நினைத்தாலே இனிக்கும்' எனக்கு அப்படி இருந்தது. அந்நேரத்து வயது அப்படி.

இப்போது Forrest Gump. 1994இல் இருந்து பலதடவைகள் பார்த்தாகிவிட்டது. இறுதியாக நேற்றிரவு.

ஒவ்வொரு முறையும் புதிய புதிய செய்தியொன்றை மனது கண்டுகொண்டு கிறங்கிப்போகிறது.

- தாய் மகனுக்கான உறவு.
- சக வயத்தொவர்களின் கொடுமை
- பால்யத்து சகியின் தோழமை
- Bubba உடனான நட்பும் அவன் இறந்தபின் அவனது குடும்பத்திற்கு உதவும் மனது.
- யுத்தமும் இழப்பும்
- இராணுவத்தில் தனது மேலதிகாரி Lieutenant Dan Taylor உடனான நட்பும் அன்பும்.

என்னை Gumpஇன் தோழனாக்கியது அவனது Jenny மீது அவனுக்கிருக்கும் அடங்காத காதல்.

அன்பு என்பது உரிமைகோருவது அல்ல என்பதை மிக அழகாக இத்திரைப்படம் உணர்த்துகிறது.

பால்யத்துச் சகியை, காதலியை அவ்வப்போது அவனிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்கிறது காலம். 

சில நேரங்களில் அவளாகவே விலகிச்செல்கிறாள். 

அப்போதும்கூட அவள்மீதான அவனின் காதல் குறையவில்லை.

இது இலகுவல்ல. என்னால் அவனைப் போன்று இருக்கவே முடியாது. சுக்குநூறாகியிருப்பேன். ஆத்திரப்பட்டிருப்பேன்.

வேறுபலருடன் பழகும் அவளை, அவளின் விருப்பப்படி வாழ அனுமதிப்பதும், அவளாகவே அவ்வாழ்க்கைகளில் இருந்து அலுத்துக் களைத்துத் திரும்பும்போதெல்லாம் அவளைக் காதலித்துக் கொண்டாட அவனால் எப்படி முடிந்தது. இது சாத்தியமானதா?

அவள் தன்தைத் தவிர்த்து மற்றையவர்களை கொண்டாடியபோதும் பொறாமையை, சினத்தை, சுயபரிதாபத்தை எல்லாம் கடந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வை எதிர்கொள்ளும் மனம் எப்படி வாய்தது? 

இறுதியாக காலம் அவளை அவனிடமே ஒப்படைக்கிறது. அப்போதும் அவனின் நேசிப்பில் குறையேதுமில்லை. அவள் இறந்தபின்பும்தான்.

இதுவா மனவிசாலம்?

Forrest Gumpஇன் வசனமென்றுடன் இப்பத்தியை முடிக்கிறேன். 

"Why don't you love me, Jenny? I'm not a smart man... but I know what love is."

#Forrest_Gump