2018இலும் முடிவுறாத ஓயாத அலைகள் 3

அவசர அவசரமாக மட்டக்களப்பிற்கு வந்துபோகவேண்டியிருந்தது. ஒரு மதியப்பொழுது மட்டும் தங்கியிருப்பதாய் திட்டம்.
2012ம் ஆண்டில் இருந்து இன்றுவரை பல திட்டங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் நண்பர்கள் படுவான்கரையின் எதிர்க்கரையான எழுவான்கரைக்கு அழைத்துப்போயினர்.
நாம் அமர்ந்திருந்த மோட்டார் சைக்கில் கிறவற்பாதையில் சென்று, மணற்பாதையூடாகச் சென்றது. இரண்டுமுறை வாகனத்தை நிறுத்தி வழிகேட்டோம்..
ஒரு இந்திய அரசின் வீட்டுத்திட்ட வீட்டின் முன் நாம் இறங்கிக்கொண்டபோது ஒருவர் வந்தார். வைரம்பாய்ந்த அவரது முகத்தில் அன்பான வரவேற்பு தெரிந்தது.
அவரது பொய்க்கால் மணலில் புதைந்து புதைந்து நடந்தபோதுதான் அதன்மீது எனது கவனம் சென்றது. வீட்டைச்சுற்றி 7-8 கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன. வீட்டின் உள்ளே அழைத்துப்போனார். உட்கார்ந்தோம்.
சக்கரநாட்கலியில் அவரது மனைவி உட்கார்ந்திருந்தார். சற்றுநேரம் மிகவும் கடினமான அமைதியுடன் கடந்துபோனது.
இருவரும் முன்னாள் போராளிகள் 1999ம் ஆண்டு ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் தனது காலை இழந்திருக்கிறார். அதன்பின் இறுதியுத்தத்தில் அதேகாலில் மீண்டும் காயப்பட்டு முழுக்காலையும் இழந்திருக்கிறார்.
அவரது மனைவிக்கு 1999ம் ஆண்டு ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காயப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காதிருக்கிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு பெண்குழந்தையுண்டு.
இவர்களது வீட்டைச்சுற்றி மணல். கழிப்பறைக்குச் செல்வதாயினும் கணவரின் உதவிவேண்டும். அவரால் மட்டுமே சக்கர நாற்காலியை மணலினூடாகச் தள்ளிச்சென்று அவர் கழிப்பறைகுச் செல்வதற்கு உதவ முடியும். கணவர் இரவு வேலைக்குச் சென்றால் அவர் வரும்வரையில் கழிப்பறைக்குச் செல்வதற்கு இவர் காத்திருக்கவேண்டும்.
தொழில் எதுவுமில்லை. அவ்வப்போது இரவுவேலை கிடைக்கிறது.வீதியோரத்தில் செவ்விளநீர் விற்றிருக்கிறார். மாநகரசபை வந்து தடுத்திருக்கிறது. பின்பு கடற்கரையில் இருந்து மீன்வாங்கிவந்து விற்றிருக்கிறார். அதையும் மாநகரசபை பெருந்தன்மையுடன் தடுத்திருக்கிறது.
தனது குடும்பத்தின் நிலையை விளக்கிக்கூறியபின்பும் இரங்கினார்கள் இல்லை என்றார்.
2009ம் ஆண்டின்பின் 4-5 இடங்களில் வாடகை வீட்டில் வாழ்ந்தபின் இப்போது வீட்டுத்திட்டத்தினால் வீடு கிடைத்திருக்கிறது. இவர்கள் இந்த வீட்டுக்கு குடிவந்தபோது சக்கரநாற்காலியில் உட்காந்திருந்தவரின் அக்கா 3 கோழிக்குஞ்சுகளை பரிசாகக் கொடுத்திருக்கிறார். இன்று அவை ஏறத்தாள 10ஆக பெருகியுள்ளன. அவற்றின் முட்டைகளே அவர்களது வருமானம்.
அண்மையில் உடம்பில் இருந்து காயங்களின் ஊடாக துர்மணமுடைய நீர் வழிந்திருக்கிறது. வைத்தியசாலைக்குச் செல்லும் வசதி இன்மையால் பல நாட்கள் சிரமப்பட்டிருக்கிறார். இறுதியாக உயிராபத்து து என்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
அவரது தனது கால்களைக் காண்பித்தார். அவை யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவைபோன்று மாறியிருக்கிறன்றன. அவரது முடிகொட்டி மீளவும் வளர்ந்துகொண்டிருக்கிறது.
ஏறத்தாள 20 வருடத்து விழுப்புண்களின் வாழ்வியற்வலியை அவர்கள் இருவரது முகத்திலும் காணமுடிந்தது.
“அண்ணர், 2009ம் ஆண்டு வைகாசிமாதமும் எங்களுக்குரிய கொடுப்பனவை வங்கிக்கு அனுப்பியிருந்தார்”, அதன்பின் இன்றுவரை நாம் படாத பாடில்லை” என்றபோது மாவீரர் நாட்களுக்கு அதிவிலையுயர்ந்த வாகனங்களில் வந்து விளக்கேற்றி விசுவாசிக்கும் அண்ணின் பெயர் சொல்லும் தம்பிகளை நினைத்துகொள்வதைத் தவிர என்னால் என்ன செய்துவிட முடியும்.
நண்பர்களே! இவர்களின் வாழ்க்கையை உங்களால் மேம்படுத்த முடியும். சுயதொழில் முயற்சிக்கு உதவ விரும்புபவர்கள் உட்பெட்டியில் தொடர்பு கொள்ளுங்கள். வழமைபோன்று நாம் உங்களையும் அவர்களையும் இணைப்பதோடு விலகிக்கொள்வோம் எதுவித பணக்கொடுக்கல் வாங்கல்களும் எம்மூடாக நடைபெற மாட்டாது. ஆனால் உங்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்துதருகிறோம்.
இனியாவது ஓயாத அலைகளை முடித்துவைக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டல்லவா?
இதனைப் பகிர்ந்து, உதவிகள் கிடைக்க உதவினால் மனம் மகிழ்வோம்.
நன்றி

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்