தொலையும் காலம்

அம்மாவை அவரது வயோதிபம் முழுவதுமாக உள்ளே இழுத்துக்கொண்டுவிட்டது. இறுதியாக ஒன்றரை வருடங்களுக்கு முன் சந்தித்த அம்மா இப்போது இல்லை. நினைவுகள் சில கணங்களுக்கு ஒரு முறை அறுந்து அறுந்து வருகின்றன. ஒரு கணம் மகிழ்ச்சியாயும் மறு கணம் அயர்ச்சியாயும் அவரது மனநிலை மாறிக்கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் தொலைபேசினேன். என்னை மறந்துபோய் இருந்தார். “உங்கள் மகன் சஞ்சயன்” என்று நினைவூட்டினேன். சஞ்சயன் அவரது நினைவில் இல்லை. சற்று நேரம் உரையாடியபின் “எப்போ வருவாய்” என்றார் பெருத்த எதிர்பார்ப்பான, குழந்தைத்தனமான குரலில். கண்கலங்கிப்போனது எனக்கு.

இன்று தொலைபேசினேன். என்னை நினைவிருந்தது. அவரது வயது அவரது நினைவில் இல்லை. எனக்கு எத்தனை வயது என்றார். எனது வாய் சும்மா இருக்குமா.

“உங்களுக்கு 30 வயது” என்றேன்.
“அவ்வளவுதானா” என்றார் ஆச்சர்யத்துடன். “இல்லையம்மா, உங்களுக்கு 85 வயது” என்றேன். “அவ்வளவு வயதாகிவிட்டதா” என்று ஆச்சர்யப்பட்டார்.

தம்பியையும் தங்கையையும் மறந்துபோயிருந்தார். எப்படி நினைவூட்டினாலும் அவர்கள் அவர் நினைவில் இல்லை. அவரை தினமும் சந்திப்பவர்களின் பெயர்களும் நினைவில் இல்லை. அவருடன் வாழும் உதவியாளரின் பெயரும் நினைவில் இல்லை.

இரண்டாம் தடவையாக இன்று தொலைபேசினேன். அப்போது மகிழ்ச்சியாக துள்ளலான மனநிலையில் சம்பாசனையை ஆரம்பித்தார். “இன்று வருகிறாயா” என்றார். “இல்லையம்மா, விரைவில் வர முயற்சிக்கிறேன்” என்றபோது, “அவசரமில்லை ஆறுதலாக, உனக்கு வசதியான போது வா. உன்னைக் கவனித்துக்கொள்” என்றார்.

அவரைச் சிந்திக்கவைக்கும் எதனைக்கேட்டாலும் அவர் குளம்பிவிடுவிடுகிறார் என்பதை அறிந்திருக்கிறேன். என்ன சாப்பீட்டீர்கள் என்று கேட்காமல் சோறு சாப்பிட்டீர்களா என்று கேள்வியை மாற்றினால் மகிழ்ச்சியாக “ஆம்” என்பார்.

அம்மாவை மறதியைத் தவிர அவரது வயதுக்கெற்ற வேறு எந்த நோயும் அதிகம் பாதிக்கவில்லை என்பது மனதுக்கு ஆறுதலான விடயம்.
அம்மா மட்டுமே அவரது சந்ததியில் மிஞ்சியிருக்கிறார். அதுவும் அவரது பிரக்ஞையில் இல்லை.

நேற்று முன்தினம் தங்கையுடன் உரையாடியபோது “அம்மாவின் நிலை எனக்கு வரமுன் நான் விடைபெறவேண்டும்” என்றாள்.

தங்கையின் மனநிலை எனக்கும் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

அம்மா வின் 85ம் பிறந்தநாள் இன்று. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்