யமனும் பாலஸ்தீனத்து பல்வைத்தியரும்

சாமம்போல் பல்வலித்தது. வலி அதிகரித்தபோது இரண்டு குளிசைகளை விழுங்கிக்கோண்டேன்.

காலை மீண்டும் பல்வலி. இன்று காலையுணவு உண்ணும் இடத்திற்குச் செல்லவில்லை.
இத்தாலிய நண்பன் பிராங்கோவை அழைத்து“பல்லில் பிரச்சனை” என்றேன்.

வாகனம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுவருகிறேன் என்றவன் இரண்டு மணிநேரத்தின் பின் ஒரு எலும்புக்கூடு வாகனத்தில் வந்து என்னை ஏற்றிக்கொண்டான்.

நான் அவன் அருகில் உட்கார்ந்து கீழே குனிந்தபோது வாகனத்தின் கீழ்ப்பகுதினூடாக வீதிதெரிந்தது. பயத்தில் காலை அகட்டி வைத்துக்கொண்டேன். கடும் கரிய புகை வானத்தின் பின்பகுதியால் வெளியேறிக்கொண்டிருந்தது.

ஒரு மணிநேரத்தின்பின் ஒரு இடத்தில் நிறுத்தினான். அருகில் இருந்து கட்ட்டத்தினுள் அழைத்துப்போன்போது கடந்த 50 வருடங்களாக சுத்திகரிக்கப்படாத இடம்போன்றிருந்தது அது. இடிந்த கட்ட்டம், எங்கும் குப்பையும் அழுக்கும். இரண்டாவது மாடியில் பல் வைத்தியர் நின்றிருந்தார்.
அரபி மொழியில் வரவேற்றார். இடது மார்பில் கையைவைத்து மரியாதை செலுத்தினேன். என்ன பிரச்சனை என்றார் ஆங்கிலத்தில். விளக்கினேன். ஒரு கதிரியக்கப்படம் எடுத்தார். அதைப்பார்த்து தலையாட்டிக்கொண்டார்.

வாய்க்குள் ஒரு குறடு ஒன்றை கொண்டுசென்றபோது கையால் தடுத்து “அய்யா! எனக்கு பல்வைத்தியர் என்றால் யமனைக் கண்டது போன்று பயம், தயவு செய்து விறைப்பூசி போடுட்டுவிட்டு குறட்டை வாய்குள் வைய்யுங்கள்” என்றேன்.

இது சின்ன வேலை. நோகாது. பயப்படாதே. கவலைப்படாதே என்று விட்டு தோளில் தட்டினார். நான் விடவில்லை. இல்லை, ஊசிபோட்டுவிட்டு கைவைய்யுங்கள் என்றேன். அப்போது மின்சாரம் நின்றுபோய் பல்வைத்தியரின் கந்தோர் இருட்டானது. என்னை சற்றுப்பொறுக்கச்சொன்னார். நான் சகுனம் பார்ப்பதில்லை. எனவே இதையிட்டு கவலைப்படவில்லை.

அரைமணிநேரம் சாய்ந்திருந்தேன். வெக்கை தாங்க முடியாத்தாய் இருந்தது. வைத்தியரின் குறடு கறள்பிடித்திருப்பதுபோன்று தோன்றியது. எடுத்துப்பார்த்தேன். நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது அது. டாக்டருக்கு ஏறத்தாள 50 வயதிருக்கும். அவரது வைத்தியசாலைப்பொருட்களுக்கு அவரின் வயதில் 50 வீதமாவது இருக்கும் என்றே தோன்றியது. உதவியாளினியைத் தவிர்த்து.

சில நாட்களாக களற்றிய பற்கள் ஒரு பக்கத்தில் அனாதரவாகக் கிடந்தன. அவற்றைப் பார்க்க பார்க்க பயமாக இருந்து.

மின்சாரம் வந்ததும் வைத்தியர் வந்தார். குறட்டை வாய்குள் வைத்தபோது தடுத்தேன். ஊசி என்ற என்னை கடுமையாகப் பார்த்தார். இதற்கெல்லாம் இங்கு ஊசிபோடுவதில்லை என்றுவிட்டு வாய்க்குள் குறட்டைத் திணித்து வாயை அகலமாகத் தற என்றார்.
நான் அதிர்ந்துபோய் என்ன நடக்கிறது என்று உணர்வதற்கிடையில் குறட்டால் பல்லைஆட்டிப் பார்த்தார். உண்மையில் எனக்கு வலிக்கவில்லை. டாக்டரில் பலத்த நம்பிக்கை வந்தது.

குறட்டை வெளியே எடுத்து, துளையிடும் கருவியை வாய்க்குள் வைத்து துளையிட ஆரம்பித்தார். வலி தாங்கக்கூடியதாக இருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டு தாங்கிக்கொண்டிருந்தேன்.
திடீர் என்று அறை இருட்டானது. மின்சாரம் நின்றுபோயிற்று. துளையிடும் கருவி பல்லினுள் பொறுத்து இறுகிக்கொண்டது.
டாக்டர் அதை இழுத்தார். வலி உயிர்போனது. கத்தினேன். எனது அலரலில் பயந்த டாக்டர் துளையிடும் கருவியை வெளியே இழுத்தார். அது வரவில்லை. எனக்கு உயிர்போகும் வலி. உயிர் பிரிகிறது போன்று வலி. அத்துடன் பயமும் பீடித்துக்கொண்டது. உயிரைக்கொடுத்து அலரினேன்.
கதவைத்திறந்தபடியே ஒடிவந்தான் பிராங்கோ.
இவ்வளவும் நடப்பதற்கிடையில் டாக்டர் துளையிடும் கருவியை மீண்டு மிகுந்த பலத்துடன் இழுத்தார். இழுத்தது மட்டுமல்ல என்னைப்பார்த்து ” எவ்ரிதிங் ஈஸ் பpனிஸ்ட்” என்றுவிட்டு துளையிடும் கருவியோடு வெளியே வந்த பல்லையும் காண்பித்தார்.

எனது வாய்க்குள் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பஞ்சை வைத்து, கடி என்றார்.

வலிகுறைந்து நான் சாதாரண நிலையை அடைய 15 நிமிடங்கள் ஆகியிருக்கும். அவருக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு அவரது கையைக்குலுக்கியபோது “இது சின்னப்பிரச்சனை. இனி நோகாது. பயப்படாதீர்கள்” என்ற அவரிடம் இனி வருவதில்லை என்று தீர்மானித்தபடியே வெளியே வந்தேன்.

வாகனத்தில் என்னை ஏற்றிக்கொண்ட பிறாங்கோ, டாக்டர் உனக்கு மருந்து வாங்கிக் கொடுக்கச்சொன்னார் என்றுவிட்டு ஒரு பைக்குள் இருந்து ராகி மதுபானப் போத்தலைக் காண்பித்தான்.

நண்பேன்டா.. என்றது மனது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்