பால்யம் - சினேகம் - காமம்

பால்யகால நாட்களில் இருந்து இன்றுவரை காலம் எனக்குப் பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் பலரின் நினைவுகள் என்னுள் பசுமையாய்ப் படிந்துபோயிருக்கின்றன. அவற்றில் சில நினைவுகளுக்குள் சில இரகசியங்களும் உண்டுதான். 48 வருடங்கள் வாழ்ந்து கழித்தபின், எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு காட்சியில் அவர்கள் பற்றிய நினைவுகள், நீரின் அடியில் இருந்து மேல் எழும் நீர்க்குமிழிகள் போன்று எனது நினைவுகளின் மேற்பகுதிக்கு வருவதுண்டு.

Trivandrum Lodge என்னும் மலையாளப் படத்தை இன்று பார்க்கக்கிடைத்தது. நான் மலையாளப்படங்களைப் தேடித் தேடிப் பார்ப்பவன் அல்லன். அவ்வப்போது காலம் எனக்கு மிகவும் சிறப்பான மலையாளத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அப்படித்தான் Trivandrum Lodge எனும் திரைப்படமும்.

அதில் ஒரு சிறுவனுக்கு சகவயதுடைய ஒரு சிறுமிமீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தக் காட்சிகள் எனக்குள் படிந்துபோயிருந்த சில பரவசமான நினைவுகளைக் கிளறிவிட்டன.

படத்தில் வரும் சிறுவனைப்போன்றே எனக்கும் ஒருத்தியில் ஈர்ப்பு வந்தது. 1977 - 78 காலப்பகுதியில் நாம் இலங்கையின் மத்திய பிரதேசத்துக்கு அணுக்கமான ஒரு கிராமத்தில் வாழ்ந்திருந்தோம். அங்கு தமிழ்ப் பாடசாலைகள் எதுவும் இல்லையாதலால், நான் மட்டக்களப்பில் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்றுக்கொண்டிருந்தேன். வருடத்திற்கு மூன்று தடவைகள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். வீடு வருவது என்றாலே நான் காற்றில் பறந்து திரிந்த நாட்கள் அவை.

அந்தக் கோடைவிடுமுறைக்கு வீடு வந்திருந்தேன். அம்மாவின் மேலதிகாரியினுடைய உறவினர் பெண் அவள். மேலதிகாரி ஒரு தமிழர். எனவே, எனக்கு விளையாட்டுத் தோழியாய் அறிமுகப்படுத்தப்பட்டாள். அம்மாவின் மேலதிகாரி ஒரு சிங்களவரை மணம்முடித்திருந்தார். அவரது சகோதரியின் மகள் இவள். என்னிலும் ஒரு வயது அதிகம்.

அரசல் புரசலாக சில விடயங்கள் புரியத் தொடங்கியிருந்த காலம் அது. தகாத சகவாசத்தால் சற்று பிஞ்சிலே பழுத்திருந்தேன். எனினும், என்னைத் தவிர எவருக்கும் இதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.

அந்நாட்களில் எனது தந்தை ஒரு கரும்புத்தோட்டம் வைத்திருந்தார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால் கரும்புத்தோட்டதின் காவலுக்கு என்னையும், தர்மலிங்கம் என்னும் ஒரு தொழிலாளியுடன் கூட அனுப்புவார். தர்மலிங்கம் ஒரு இளைஞர். என்னை விளையாட அனுப்பிவிட்டு, மரத்தின் உச்சியில் இருக்கும் பரண்மீது ஏறி உட்காந்திருப்பார். அப்பா கேட்டால் தம்பி என்னுடன் இருந்தார் என்பார். அதனாலோ என்னவோ தர்மலிங்கம் இன்னும் நினைவில் இருக்கிறார்.

அப்போதுதான் அவளுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவள் கொழும்பில் வாழ்ந்திருப்பவள் என்பதால், விடுமுறைக்கு சித்தியின் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்கு ஒரு தங்கையுமிருந்தாள். எனக்குத் தம்பியிருந்தான். அவர்கள் இருவருக்கும் 9 வயதிருக்கும். அவர்கள் தூய்மையான குழந்தைகளின் உலகத்தில் இருந்தார்கள். நாம் அந்தத் தூய்மையான குழந்தைகளின் உலகத்தைவி்ட்டு வெளியேறிக்கொண்டிந்த காலம். பதின்ம வயது பலவிடயங்களை எமக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தது.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அவர்களும், நாங்களும் சந்திப்பது வழக்கமாகியது. ஆரம்பத்தில் சாதாரணமாகச் சென்ற எமது நட்பு காலப்போக்கில் சற்று வில்லங்கமானது. அங்கு வந்திருந்த ஒரு கோடைவிடுமுறையின் போது அவள் ருதுவெய்தினாள். அவளது சித்தியின் வீடு திருவிழாபோலானது.

அவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு குடும்பம் நாம் ஆகையால், நாம் அங்கு நின்றிருந்தோம். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பலரின் வருகையும், பாட்டுகளும், இனிப்புவகைகளும், கொண்டாட்டத்திலும் நான் என்னை மறந்திருந்தேன். வழமையாக விளையாட வரும் அவள் மட்டும் விளையாட வரவில்லை.

அந்த விடுமுறையின் பின் மீண்டும் பாடசாலைக்குச் சென்றிருந்தோம். காலம் ஓடியது. அடுத்த விடுமுறையின்போது எனக்கும் 13 வயதாகியிருந்தது. பாடசாலை மற்றும் விடுதி நண்பர்கள் அந்த வயதிற்குரிய பலதையும் கற்றுத்தந்திருந்தார்கள். பெண்கள் என்றால் மனதில் சற்று ஆர்வம் புகுந்திருந்தது. மனதுக்குள் இனம் புரியாத ஒரு விறுவிறுப்பு, பயம், வெட்கம் என்று பல உணர்வுகளின் கதம்பத்தில் இருந்தேன். என் உற்ற நண்பன் எமது பாடசாலையிலே‌யே மிக அழகிய ஆசிரியையில் பெருங்காதல் கொண்டிருந்த காலம் அது. அவனும் எனது உணர்வுகளுக்கு தூபம்போட்டிருக்கலாமோ என்று இன்று யோசிக்கிறேன்.

அடுத்து விடுமுறையின்போதும் விடுதியில் இருந்து வீடு சென்றிருந்தேன். ஒரு மதியப்பொழுதில் அம்மா அவள் வந்திருப்பதாகவும் அங்குபோய் விளையாடலாம் என்றும் கூறியபோது, தம்பியை அழைத்துக்கொண்டு அவர்களின் வீடு சென்றேன்.

அவர்களின் வீட்டுக்கு முன்னால் தங்கையுடன் பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்தாள் அவள். அவளைக் கண்டதும் எனக்கு ஏதோ ஆனது. குட்டி குட்டிப் பூக்களின் படம்போட்ட ஒரு சட்டையை அணிந்திருந்தபடியே தங்கையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் துள்ளும்போதெல்லாம் நான் விழுந்துகொண்டிருந்தேன். எனது ஹோர்மோன்கள் நர்த்தனமிடத்தொடங்கின. அவள் கடந்துபோன ஆ்றுரேழு மாதங்களில் முன்னிலும் அழகாகியிருந்தாள். உடலின் வளைவு நெழிவுகளும் அவளை இன்னும் பேரழகாகியாய் மாற்றியிருந்தன. பிஞ்சிலே பழுத்திருந்த எனக்கு அவைபற்றிய சிற்றறிவு வாய்த்திருந்தது.

எனது தம்பியும் அவளின் தங்கையும் குழந்தையுலகத்தில் இருக்க, நாம் மட்டும் அதிலிருந்து வெளியேறியிருந்தோம். குழந்தைகளுக்கான தூய்மை எம்மைவிட்டு அகன்று களவு புகுந்திருந்தது.

தொலைக்காட்சி வந்திராத எழுபதுகளின் நடுப்பகுதி அது. வெளியே விளையாடியே எமது காலத்தைக் கடத்திக்கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். நாம் தனித்து இருப்பதற்கு அவர்களின் வீட்டுக்குப் பின்னால் இருந்த நீரோடை துணைசெய்தது.

அவள் எதைக்கேட்டாலும் மந்திரித்துவிட்டவன்போன்று தலையாட்டினேன். அவள் பின்னாலேயே அலைந்தேன். அவளின் அருகாமை என்னைக் காற்றில் அலைக்க அவள் பின்னால் திரிந்தேன். அவள் பேசினால் மனது கிளர்ந்தது. அவள் உடல் என்னுடலுடன் கணப்பொழுதேனும் உரசினால் முதலில் நாவரண்டு, இதயம் பெரிதாய் அடித்துக்கொண்டது, வியர்த்தது, பின்பு மோட்சமடைந்தேன்.

அவள் கொழும்பு நாகரிகத்தில் வளர்ந்தவள். நானோ நவ நாகரிகத்தின் வாசனையற்ற மட்டக்களப்பின் ஏக புத்திரன். எமக்கிடையில் நாகரிகத்தில் காததூரம் வித்தியாசம் இருந்தது. ஆனாலும் நான் பிஞ்சில் பழுத்திருந்‌தது மேற்கூறிய இடைவெளியை குறைத்தது என்றே கூறவேண்டும்.

அவள் காதல் என்னும் சொல்பற்றி அறிந்திருந்தாள். ஓரளவு நானும். எம் நால்வரையும் சில நாட்களில் சிங்களத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு அனுமதிப்பார்கள். நாம் அருகருகே அமர்ந்திருப்போம். காமினிபொன்சேகா, விஜயகுமாரதுங்க ஆகியோர் மாலினி பொன்சேகாவைக் கட்டிப்பிடித்துப் புரளும் காதல்காட்சிகளின்போது, அவள் அர்த்தமாய் பார்த்து மர்மமாய்ப் புன்னகைப்பாள்.

மறுநாள் படத்தின் காதல்காட்சிகளைப் பற்றி நாணத்துடன் பேசுவாள் எனக்கும் வெட்கம் பிடுங்கித்தின்னும் . ஆனாலும் அவள் மேலும் அதைப்பற்றிப் பேசவேண்டும் என்று நினைப்பேன்.

அவளுக்கு என்னைவிட சிலவிடயங்கள் அதிகமாகவே தெரிந்திருந்திருக்க வேண்டும். அடிக்கடி ஒளிந்து பிடித்துவிளையாடும்போது என்னை இழுத்தோடினாள். வீட்டின் பின்புறம் இருந்து நீரேரிக்கு என் தம்பியும் அவளின் தங்கையும் எம்மை தேடிக்களைத்தனர். நாம் அங்கிருந்தபடியே பேசிக்கொண்டிருப்போம்.

அவளின் கைகள் என்னை பற்றி இழுத்ததும் மந்திரித்துவிட்ட மந்திபோன்று அவள்பின்னே ஓடுவேன். என்னென்னவோ எல்லாம் பேசினோம், எதுவும் நினைவில் இல்லை. நீரோடையைக் கடந்து சென்ற ஒரு நாள் முதன் முதலாக கபரகொயா என்னும் ஒரு பிராணியைக் கண்டோம். முதலைமாதிரியான தோற்றமுள்ள கபரகொயா என்னும் பிராணியைக் கண்டோம். . தாவரபட்சணியான அப் பிராணி தனது வாலால் மட்டுமே தாக்கும். அதைக் கண்டு பயந்த அவளைக் கைபிடித்து அழைத்துவந்தேன். அன்று என்னை ஒரு கதாநாயகனைப்போல் உணர்ந்தேன். அதன்பின் அவள் நீரோடைப்பக்கம் வர மறுத்துவிட்டாள்.

அவர்களின் வீட்டுக்குமுன் பல கொய்யாமரங்கள் இருந்தன. ஒரு நாள் “கொய்யாப்பழம் ஆய்ந்து தா” என்றாள். மரம் ஏறத்தெரியாத மந்தி நான். அவளுக்காய் பெரும்பாடுபட்டு ஏறிக் கொய்யாப்பழமும் ஆய்ந்து கொடுத்தேன்.

மரத்தில் சிரமப்பட்டு ஏறிய எனக்கு இறங்கத்தெரியவில்லை. தட்டுத்தடுமாறிக் கால்வைத்தபோது வழுக்கி விழுந்த என்னை கீழே இருந்த ஒரு கொப்பு தாங்கிக்கொண்டது. அதன்பின் அவள் ஓர் ஏணியைக் கொணர்ந்து இறங்க உதவினாள். “உனக்கு மரம் ஏறத்தெரியாதா?” என்றபோது, "கால் வழுக்கிவிட்டது" என்றேன். என்னிலும் ஓரிரு வயதான அவள் அதை நம்பவில்லை என்பதை அவள் புன்னகை காட்டியது. வெட்கமாய் இருந்தது. எதுவும்‌ பேசாது வீட்டுக்கு ஓடினேன்.

என்னிடம் கொய்யா மரக்கிளையில் செய்ப்பட்ட கட்டப்பொல் (catapul) இருந்தது. ஆனால், குறிபார்த்து அடிக்கத்தெரியாது. அவளைப் பிரமிக்க வைப்பதற்காக அதை எடுத்துச்செல்வேன். ஒரு நாள் அவளுக்கு குறிபார்த்து அடிக்க கற்றுதரக் கேட்டாள். அவளின் பின்னால் நின்று, அவள் கையைப்பிடித்து இப்படித்தான் இதைப் பிரயோகப்பதென்று கற்றுக்கொடுக்க வேண்டும். அவள் கையினைப் பிடித்திருந்த எனது கை உணர்ந்த குளிர்ச்சியும், அவளின் அருகாமையும் வந்த காரியத்தை மறக்கடித்தன. கற்பதில் அவளுக்கும், கற்பிப்பதில் எனக்கும் ஆர்வம் இருந்திருக்க நியாயமில்லை.

இன்னுமொரு நாள் ஒளிந்து பிடித்து விளையாடினோம். என் தம்பியும், அவளின் தங்கையும் பொலிஸ், நாம் இருவரும் கள்வர்கள். அவர்களுக்குத் தெரியாத ஒரு இருட்டறைக்குள் ஒளிந்துகொண்டோம். மிகவும் குறுகிய இடம். என்னருகில், மிக மிக அருகில் நின்றிருந்தாள். அவளின் முகமும் எனது முகமும் உராய்வதைத் தடுக்க பெரும்பாடுபட்டேன். அவளின் மூச்சு என்னைத் திணறடித்தது. கொழும்பில் வளர்ந்த அவளோ அதுபற்றி பிரக்ஞை இன்றி இருந்ததைப் போன்றே உணர்ந்தேன். அவள் மூச்சின் காற்றும், மார்பும், உடலும் என்னில் உரசியபோது... நாவரண்டு, உடல் நடுங்கி வியர்த்தது. இருப்பினும் எனது கன்னத்தில் ஈரம்படிந்தது. பயத்தில் மறுபுறம் திரும்பிக்கொண்டேன். அப்போதும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் அவளும் திரும்பிக்கொண்டாள்.

இதன்பின் எமக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. அவளே எனது நினைவில் இருந்தாள். எப்போதும் 16ஆம் வாய்ப்பாட்டைப் பாடமாக்கு என்று பெரும் வில்லனாய் இருந்த அப்பாகூட நினைவில் இருந்து மறைந்துபோனார்.

அவளே யாதுமாய் இருந்தாள். அவளுக்கும் அப்படியே இருந்திருக்க வேண்டும். என்னைக் கண்டதும் மயக்கும் புன்னகையால் மயங்கடித்தாள். அதிகமாய் பேச மறுத்தாள். தனியே இழுத்துக்கொண்டோடினாள். அதன் பின்பும் நாம் தனியே உரசிக்கொள்ளும் கள்ளன்பொலிஸ் விளையாட்டு அடிக்கடி நடந்தது. அந்நேரங்களில் எனது தொண்டை காய்ந்து, நா வரண்டு, என் நடுக்கம் சற்றுக் குறைந்து, அவள் சிவந்தது பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை இந்த நிமிடம்வரை.

ஆண் பெண் உறவுகளில் பிரிவுக்கு பெரும் இடம் இருக்கிறதல்லவா? அதே வருடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏறாவூருக்கு மாற்றமாகியது. காலப்போக்கில் அவள் நினைவில்இருந்து மறந்துபோனாள். வேறுசிலர் அவளின் இடத்தை கைப்பற்றிக் கொண்டார்கள்.

ஏறத்தாழ 35 ஆண்டுகளின் பின்பு…

2013ஆம் ஆண்டு கோடைவிடுமுறையின்போது இலங்கை சென்றிருந்தேன். ஒரு மாலைநேரம் வீடுவந்தபோது, வீட்டில் விருந்தினர் ஒருவர் இருந்தார். அவரை அடையாளம் தெரிந்தது. பிபிலையில் இருந்த அம்மாவின் மேலதிகாரியின் மனைவி அவர். கடந்துபோயிருந்த 35 வருடங்கள் அவரை முதுமையினுள் அழைத்துப்போயிருந்தாலும், அவர் கம்பீரத்துடனும் அழகாகவும் உட்கார்ந்திருந்தார்.

நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் எப்போதாவது அவரின் சகோதரியின் மகள் பற்றி ஏதேனும் கூறவேண்டும் என்று மனம் தவியாய்த் தவித்தது. இதயம் வேகமாய்த் துடிக்க, பல வருடங்களுக்கு முன்னான அவளின் அருகாமையையும், வெம்மையையும் உணர்ந்தேன். வாய்விட்டுக்கேட்க வெட்கம் அனுமதிக்கவில்லை. எனவே, அவளின் தங்கைபற்றிக் கேட்டேன்.

அப்போது அவர் அவளின் பெயரைக்கூறி, நேற்று அவளைச் சந்தித்தபோது, இன்று உன்னை சந்திப்பதாகக் கூறினேன், உன்னைப்பற்றி மிகவும் விசாரித்தாள் அத்துடன், அவள் உன்னை மிகவும் அன்பாக விசாரித்ததாகவும் கூறச்சொன்னாள் என்று அவர் கூறியபோது, அவர் முகத்தில் பெரும்குறும்பும் சிரிப்பும் கலந்திருந்தன.
எனது பேரன்பையும் தெரிவியுங்கள் என்றேன் சிங்களத்தில் தலையைக்குனிந்தவாறே.

அன்று மாலை முழுவதும்... அவளும் இன்றுவரை என்னை மறக்கவில்லை என்பது என்‌னை காற்றில் சுமந்துபோய்க்கொண்டிருந்தது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்