நினைவழியா பதின்மம், பகுதி 2

 பதின்ம வயதுப் பரவசங்கள் -2

******
தயாபற்றிச் சொல்ல வேண்டும். எனது நண்பன். குழப்படிகளின் பங்காளன். அவனின் கிளிமூக்கு ஊருக்குள் பிரபல்யமானது. வேகப்பந்து வீச்சாளன். பந்துகாப்பாளனும் கூட. காற்பந்து விளையாட்டில் தன்னுடன் இணைந்து மேலும் பத்துப்பேர் விளையாடுகிறார்கள் என்பது அவனுக்கு மறந்துவிடும்.

எனக்கு 304 விளையாட, இன்ன பிற வயதுவந்தவர்களுக்கான இலக்கியங்களைக் கற்பித்த குரு. கொழும்பு சென்றால் Playboy இதழுடன் வருவான். காட்டுக்குள் ஒளித்துவைத்துப் பார்ப்போம். காணாததைக் கண்டது அங்குதான். இரத்தமும் உடலும் சூடாகும்.

அனுமாரின் வாரிசுகள்போல் தாவும் கலை அவனுக்கு வசப்பட்டிருந்தது. எத்தனை உயரமான மரமானாலும் குரங்குபோல் லாவகமாக ஏறியிறங்குவான். புன்னைக்குடாவுக்குக் கடலில் குளிக்கச் செல்லும் நாட்களில் கள்ள இளநீர் இறக்கும் எங்கள் தளபதி தயாதான். இவற்றைவிட வாயால் வடைசுடும் பெரு விற்பன்னன். நட்புக்காக உயிரையும் கொடுக்கும் சீவன். 37 ஆண்டுகளின் பின்பு கடந்த மாதம் எனது முதற்காதலை என்னுடன் பேசவைத்த நேசமிக்க தோழன்.

தற்போது ஊரார் அவனை(ரை) தயாசாமி என்று பெருமையுடன் அழைக்கிறார்கள். நான் அவனைக் கள்ளச்சாமி என்றழைக்கிறேன்.
அவரது பெருமைகள் பலவுண்டு.

சந்திரே அய்யா ஆமோதித்தார் என்றே அல்லவா!. அடுத்து வந்த மாலைப்பொழுதுகளில் விளையாட்டு நிறுத்தப்பட்டு, செடிகள் பற்றைகள் அகற்றப்பட்டு, மணற்கும்பங்கள் வெட்டப்பட்டு மைதானம் சமப்படுத்தப்பட்டது.

சிங்கள மகாவித்தியாலய அதிபரின் வீடும் பாடசாலை வளவுக்குள்ளேயே இருந்தது. அவர்களின் வளவுக்குள்தான் நாம் நீரருந்திய கிணறும் இருந்தது. அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவளுக்கு 15 வயதிருக்கலாம். டவுனில் இருந்த சிங்கள மகாவித்தியாலத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தாள். எனது முதற்காதலின் தோழி. அலரிப்பூவின் அழகையும் மென்மையையும் கொண்டவள்.

மைதானம் திருத்தப்பட்ட காலத்திலும் அங்கு நாம் விளையாடிய காலத்திலும் தயா மட்டும் சிங்கள மகாவித்தியாலத்தின் வாசலின் அருகாமையிலே நின்று கொண்டிருந்தது ஏன் என்பதும், அடிக்கடி அவனுக்கு தண்ணீர்த் தாகமெடுத்தது ஏன் என்பதையும் நீங்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நெருஞ்சி முட்கள் எம்மைப் பதம் பார்த்தமையினால் ஊருக்குள் வீசி எறியப்பட்டிருந்த வாழைத்தண்டுகளை எடுத்துவந்து மைதானம் முழுவதும் உருட்டி உருட்டி எடுத்தோம். முட்களின் பிரச்சினை கட்டுக்குள் வந்தது.

புன்னைக்குடா வீதியில் இருந்த தென்னந்தோட்டங்களில் இருந்து தென்னங்குற்றிகளை எடுத்துவந்து, மைதானத்தில் கோல்போஸ்ட் நட்டுக்கொண்டோம்.

ஓரிரு வாரங்களுக்குள் மைதானத்தினுள் இருந்த பற்றைகள், செடிகள், குப்பைகள் அகற்றப்பட்டு, மணற்கும்பிகள் வெட்டிச் சமப்படுத்தப்பட்டு ஓரளவேனும் மைதானம் போன்று வடிவமெடுத்திருந்த மைதானம் உருவாகியிருந்தது.

எங்கிருந்தோ கண்டெடுத்த மூங்கிற்தடிகளை கோல்போஸ்ட்க்கு மேல்பக்கமாக கட்டிக்கொண்ட அன்று மாலை இருண்டு பந்து கண்ணுக்குத் தெரியாமல் போனதையும் மறந்து விளையாடிவிட்டு வீதி வெளிச்சத்தில் அமர்ந்திருந்தபோது கிரிக்கெட் பிட்ச் செய்ய வேண்டும் என்றார் சந்திரே அய்யா.

அதற்கும் தயாவிடம் ஒரு ஆலோசனையிருந்தது. பிள்ளையாரடியில் இருக்கும் கிறவற்குழியிலிருந்து ஒரு ட்ராக்டர் லோட் கிறவல் கொண்டுவந்து, மைதானத்தின் நடுவே இருபதுக்கு இரண்டு மீற்றர் நீள அகலத்தில் ஒரு அடி ஆழத்தில் கிடங்கு கிண்டி அதனுள் கிறவலைக் கொட்டிக்கொண்டு விட்டால் போதும் என்றான்.

சந்திரே அய்யாவுக்கும் அவனது ஆலோசனை பிடித்துக்கொண்டது. நான் உழவியந்திரம் வைத்திருந்த எனது இன்னொரு நண்பனின் தந்தையாரிடம் உதவுமாறு கேட்டேன். அவர் பணம் கேட்டார்.

எமது அணியிடம் ஒரு பந்தேனும் இல்லை. சிறிய டென்னிஸ்பந்தில் இனியும் காற்பந்தடிக்க முடியாது. ஒரு டியூப்போல் (காற்பந்து விளையாடும் பந்து) வாங்க வேண்டும். அத்துடன் கிரிக்கெட் பிட்ச் தயாரிக்க வேண்டும். எனவே, விளையாடுபவர்கள் அனைவரும் தினமும் இரண்டு தொடக்கம் ஐந்து சதம் கொண்டுவரவேண்டும் என்றார்கள் சந்திரே அய்யாவின் மருமனான குமாரவும் தயாவின் தம்பியான ராஜனும்.

ஏறத்தாழ ஒரு மாதத்தின் பின் இருபத்தியைந்து ரூபாயுடன் நண்பனின் தந்தையாரிடம் சென்றோம். போதாது என்று வாயைப் பிதுக்கினார். அடுத்த மாதம் ஐம்பது ரூபாயுடன் அவரிடம் நின்றபோது “ஏறுங்கள் பெட்டியில்” என்றார்.

மண்வெட்டி, பிக்கான், அலவாங்குடன் சந்திரே அய்யா தளபதிபோல் ட்ராக்டர் வண்டியின் மட்காட்டில் உட்கார்ந்திருக்க, பத்துப் பதினைந்த விடலைகள் ட்ராக்டர் பெட்டியில் நின்றிருந்தோம்.

மட்டக்களப்பிற்கு போகும் பாதையில் பிள்ளையாரடியில் வலதுபக்கமாகத் திருப்பி அருகிருந்த கிறவற்குழியில் ட்ராக்டர் நிறுத்தப்பட்டதும், துரிதமாக இயங்கியது விடலைகளின் படையணி. பிக்கானால் சிலர் கொத்த. அவர்கள் கொத்திய கிறவலை சிலர் ட்ராக்டர் வண்டியின் பெட்டிக்குள் மண்வெட்டியால் அள்ளி எறிந்தார்கள். இரண்டு மணிநேரத்தின்பின் பெட்டி நிரம்பியது.

அங்கிருந்து புறப்பட்டபோது அனைவருக்கும் களைத்து வியர்த்து ஓடிக்கொண்டிருந்தது. பிள்ளையாரடியிலிருந்த ஒரு கடையில் இருவருக்கு ஒரு பிளேன் டீ வாங்கித் தந்தார் சந்திரே அய்யா. தோழமையின் ருசியைக் கொண்டிருந்த அந்தத் தேநீரின் சுவையை இன்றும் உணர்கிறேன்.

அன்று மாலையே மைதானத்திற்கான கிடங்கினை வெட்டி வீதியைச் செப்பனிட கொட்டப்பட்டிருந்த கருங்கற்களைக் கொள்ளையடித்து வந்து பிட்ச்சின் அடிப்பகுதியில் கொட்டினோம். அதன்பின் கிறவலைக் கொட்டியபோது, சிங்கள மகாவித்தியால அதிபரின் வீட்டுக் கிணற்றிலிருந்து பல வாளி நீரை எடுத்துவந்து ஊற்றினான் தயா. அவனது முகத்தில் களைப்பிருக்கவில்லை. அந்நாட்களில் அதிபரின் மகளுக்கு வேறு ஒருவன்மேல் ஈர்ப்பிருந்தது என்பதை நான் கண்டுபிடித்திருந்தேன்

நீரைக் கிறவல் மண்ணில் ஊற்றிக் காலால் மிதித்துக் குழைத்துச் சமப்படுத்தியபோது மேற்பகுதியை எவ்வாறு சமப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது.

செங்கலடி சந்திக்கருகில் வீதியைச் செப்பனிடுகிறார்கள். அங்கு ஒரு ரோலர் உண்டு என்றான் தயா. அதனை எடுத்துவருவதற்கு நால்வரை அழைத்தான்.

தொடரும்...

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்