நினைவழியா பதின்மம், பகுதி 8

அந்த நாட்களில் எனக்கு ஒரு காதலி இருந்தாள்.

அதிகம் கற்பனை பண்ணிவிடாதீர்கள். கண்ணால் கதைப்பதுடன், சரி. இந்தக் கதை என்னிலும் வயது குறைந்தவர்களிடம் பரவியிருந்தது. அந்நாட்களில் காதலி இருப்பது பெருமையான விடயம். காதலி இருந்தால், அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று யாரோ கதையைக் கட்டிவிட்டிருந்தார்கள்.

நட்புவட்டத்தில் மற்றும் வயது குறைந்தவர்களிடம் காதலி இருப்பவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்தது. சிலருக்கு காதலி கிடைக்கலாம் என்ற நம்பிக்கை வருவதற்கு ஏதேனும் சந்தர்ப்பங்கள், சம்பவங்கள் நடந்தால், அவர்கள் காதலி உள்ள எங்களிடமே அறிவுரை கேட்க வருவார்கள்.

அறிவுரை கேட்க வருபவர்கள் தனித்தே வருவார்கள். எம்முடன் மெதுவாய் நட்பாவாா்கள். பின்பு தேநீர், பணிஸ், தேங்காய்ப்பூரொட்டி, சிலருக்கு சிகரெட் என்று லஞ்சம் கிடைக்கும். எனக்குப் படத்துக்கு டிக்கெட் எடுத்துத் தந்தால் காணும் என்ற நிலையிருந்தது. இப்படியான காலத்தில்தான், அவன் எனக்கு அறிமுகமாகினான். பெரிய உயரமில்லை. கட்டான உடம்பு, அடத்தியான மேவி இழுத்த தலைமுடி, வசதியான குடும்பத்துப்பையன் என்பதால், எப்போதும் அழகிய உடைகள். கிழக்கின் ஒரு பெருந்தளபதியின் ஊர். மட்டக்களப்பு நகரத்தில் கல்விகற்றான். தினமும் இரு மணிநேர பஸ்பயணம் என்று அவனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

அவனை நான் முன்பு கண்டிருந்தாலும், அவன் எனது நட்பு வட்டத்தில் இருந்ததில்லை. யார் என்று தெரியும், அவ்வுளவு தான். இப்படியாய் இருந்தவன் மெது மெதுவாய் என்னிடம் நட்பாகினான். என்ன மாயமோ தெரியவில்லை ஓரிரு வாரங்களில் நாம் இருவரும் நட்பாகிப்போனோம்.

அப்போதுதான் கவனித்தேன், தினமும் அவன், எனக்கு முன்பே எங்கள் பேரூந்து தரிப்புநிலையத்தில் நின்றிருப்பதை. அவன் எங்கள் ஊரைக் கடந்தே அவனது ஊருக்குச் செல்லவேண்டும். எனவே, அவன் வரும் பேரூந்தில் நான் ஏறினால் அவனைச் சந்திக்கலாம். ஆனால், அவனோ தினமும் எனக்கு முன் எங்கள் பேரூந்து நிலையத்தில் வந்து நிற்கலானான். நானும் அவன் எனக்காகவே வருகிறான் என்று நினைத்திருந்தேன்.

காலப்போக்கில் அவன் காத்திருந்தது எனக்கல்ல, என்னுடன் பேரூந்தில் உரையாடும், எனக்கு அறிமுகமான சில சிறுமிகளின் கூட்டத்துடன் வரும் ஒருத்திக்காகவே. அந்த ஒருத்திக்காக அவன் காத்திருப்பதை எனது உளவுப்படை கண்டுபிடித்து எனக்கு அறியத் தந்தது.

அவனை அழைத்து “என்னடா விசயம். அவளை அடிக்கடி பார்க்கிறாய், அவளும் கண்களால் உன்னுடன் கதைக்கிறாள்” என்றேன். அன்று எனக்கு ஒரு படத்திற்கு இலவச டிக்கெட்டும், டீ, வடை, ஐஸ்கிறீம் எனப் பலமாய்க் கவனித்தான். ஆனால், படம் பார்க்க மட்டும் அவன் அனுமதிக்கவில்லை. தனது 'காதல் கதையை'ப் படம் போல எனக்குக் கூறிக்கொண்டிருந்தான்.

அவர்கள் இருவருக்கும் எப்படியோ காதல் கனிந்து கசிந்துருகிவிட்டது. ஒரு நாள் பேரூந்தில் அவளிடம் இவர் புத்தகத்தை வைத்திருங்கள் என்று கொடுத்திருக்கிறார். அவளும் பக்குவமாய் வாங்கி, அவனின் ஒரு கொப்பியை வீட்டுக்கு எடுத்துச் சென்று, அதில் இதயத்தின் படம் வரைந்து அதனுள் அவனின் பெயரை எழுதி தனது சமிக்ஞையை காட்டியிருக்கிறாள். அவளும் பேரழகிதான். பெரிய வீட்டுப்பிள்ளை. செங்கலடி - பதுளை வீதியில் பெரிய வீடு அவர்களுடையது.

சமிக்ஞையைக் கண்ட இவன் தன்னை மறந்தான், படிப்பை மறந்தான், பாடசாலையை மறந்தான், ஏன் சில நாட்களில் வீட்டையே மறந்தான். செங்கலடியில் சில நட்புக்களைப் பிடித்துக்கொண்டான். அவன் பிடித்த நட்பில் நானும் ஒருவன். எங்கள் ஊரிலேயே அலைந்தான்.

அவளிடம் இதுவரை பேசமுடியவில்லை. அவளுடன் நான் தினமும் பேசுவதுண்டு எனவே, கொப்பால் ஏறி மரத்தால் இறங்குவது போன்று என் மூலமாக அவளுடன் பேசவே என்னுடன் நட்பாகியதாகவும், நானே அவனின் காதல் குரு என்றும் அவன் கூறியபோது, நான் மனமிரங்கிப்போனேன். உதவி என்று வந்தவனைக் கைவிடலாமா? எனவே, சில அறிவுரைகளை அள்ளிவிட்டேன்.

முதலாவது கடிதம் கொடுப்பது. அவளிடம் அந்தக் கடிதத்தை சேர்ப்பிக்க நாம் பெரும்பாடு படவேண்டியதாயிற்று. ஒருவாறு அவர்கள் பாடசாலை விளையாட்டுப்போட்டி முடிந்து அவள் வீடு திரும்பும் போது, பேருந்துக்குள் வைத்து கடிதத்தைக் கொடுத்தான். அந்தக் காலத்து பாடல் வசனங்கள், ‘என் உயிர் நீ..., நீயில்லாமல் நான் இல்லை...‘ என்று அதி உயர் இலக்கியத்தரத்துடனான கடிதம் அவ‌ளிடம் கொடுக்கப்பட்டது.

கடிதம் எழுதுவதற்காகவே அழகிய படங்கள் பதிக்கப்பட்ட தாள்கள் வாங்கினோம். 4 - 5 தடவைகள் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதினோம், கடிதத்தை உறையினுள் இட முன்பு, அது வாசனையாக இருக்கவேண்டும் என்பதற்காய் பவுடர் பூசினோம், இரண்டு அழகிய ஸ்டிக்கர்கள் வைத்தபின், இறுதியாக 7 - 8 முத்தங்கள் கொடுத்தான். அப்புறமாயே அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் உறைக்குள் இடப்பட்டு, நாக்கால் உறையை சீனியை நக்குவது போல நக்கி நக்கி ஒட்டினான். கடிதத்தைக் கொப்பிக்குள் ‌மறைத்தும் கொண்டான்

சில நாட்களின்பின் அவளின் நண்பிகள் மூலமாக இவனுக்கு கடிதம் வந்து, போய்க்கொண்டிருந்தது. அவள் புதிதாய் டியுசனுக்குச் சேர்ந்தாள் இவனுக்காய். இவன், தான் படித்த டியுசனை விட்டான் அவளுக்காய்.

அடுத்ததாய் அவளைப் படம் பார்க்க அழைத்துப்போக விரும்புவதாகச் சொன்னான். என்னடா இது! நான் செய்யாததை இவன் செய்யப்போகிறானே... எனது மரியாதை என்னாவது? என்று பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளை அவள் மறுத்துவிட்டாள்.

"சரி அவளை Elephant house க்கு அழைத்துப்போய் ஐஸ்கிறீம் வாங்கிக்கொடு..." என்றேன். அவர்கள் இருவரும் இரண்டரை மணிநேரமாக ஒரு ஐஸ்கிறீமை குடித்துக்கொண்டிருந்தார்கள். நான் வெய்யிலில் காய்ந்தபடி வெளியே நின்றிருந்தேன். அவளின் கையைத் தொட்டானாம் என்று பையன் ஏகத்துக்கும் கற்பனையில் மிதந்துகொண்டிருந்தான். அன்று மாலை எனக்குப் படத்திற்கு டிக்கெட் கிடைத்தது. நான் அவனை அழைத்துச் செல்லவில்லை.

ஏறத்தாழ ஒருவருடத்தின் பின்பு, அவளின் தந்தைக்கு விடயம் தெரியவர, வெடித்தது பூகம்பம். பாடசாலை நிறுத்தப்பட்டது. டியுசன் நிறுத்தப்பட்டது. அப்பா வீட்டுக்கு முன்பு நந்திபோன்று குந்தியிருந்தார். நல்லவேளை அவருக்கு இந்தக் காதலில் எனது பங்கு பற்றித் தெரிந்திருக்கவில்லை. எனவே, நான் சற்றுத் தைரியத்துடன் அவள் வீட்டுப்பக்கமாய் போய்வரக்கூடியதாயிருந்தது. அவளின் வீட்டுப்பக்கம் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது இன்னும் வசதியாகவிருந்தது.

என் நண்பன் பைத்தியம் பிடித்தவன் போலானான். 'அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' வசனம் பேசினான். ஒரு தலை ராகம், வைதேகி காத்திருந்தாள், பயணங்கள் முடிவதில்லை போன்ற திரைப் படப்பாட்டுக்களை அழுது அழுது கேட்டான். என்னையும் கேட்கச் சொன்னான்.

அந்நாட்களில் அவனுடைய ஊரைச் சேர்ந்த கிழக்கின் அந்தப் பெருந்தளபதி, மீண்டும் மட்டக்களப்புக்கு வந்தார். ஊருக்குள் பெரிய இடத்துப் பையன் என்பதால், அவரின் கடைக்கண் பார்வை இவனுக்குக் கிடைத்தது. ஒரு நாள் இரவு அவளின் தந்தையிடம் சிலர் சில கட்டளை இட்டனர். அவரும் தன் பங்குக்கு சிபாரிசுக்கள‌ை பிடித்தார். பிரச்சினை இழுபட்டது. தளபதியை மீற முடியுமா?

நான் அந்நாட்களில் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். தொடர்பு அற்றுப்போனது அவனுடன்.

பின்பொரு காலத்தில் அவர்கள் திருமணம் முடித்து குழந்தைகள் பிறந்திருப்பதாகக் காற்றுவாக்கில் செய்திகள் கிடைத்தன. காலம் மட்டும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது.

ஏறத்தாழ 2005ஆம் ஆண்டளவில் முதன் முதலாக 20 வருடங்களின் பின், செங்கலடிக்குச் சென்றபோது... அவனைத் தேடினேன். சந்தியில் கடை வைத்திருப்பதாகச் சொன்னார்கள். கடையினுள் அவளைக் கண்டேன். "என்னைத் தெரியுமா?" என்றபோது, சற்று சிந்தித்து "ஓம்" என்றாள். “இருங்க... அவர் இப்ப வருவாா்” என்றாள். குளிர்பானம் ,சிற்றுண்டி வந்தது. சற்று நேரத்தில் உள்ளே வந்தான் அவன். நொடிப்பொழுதும் சந்தேகமின்றி ”டேய் சஞ்சயன்” பாய்ந்து வந்து அணைத்துக்கொண்டான். அன்று மதியம் அவர்கள் வீட்டில் விருந்து தடபுடலாகவிருந்தது. பழங்கதைகளைப் பேசி மகிழ்ந்திருந்தோம்.

எப்போதும் ஊருக்குச் சென்றாலும் அவனைச் சந்திக்காதிருப்பதில்லை. மறுவருடமும் சந்தித்தேன். கடையில் ஒன்றாய் தேநீர் அருந்தினோம். ஆரத்தழுவி விடைபெற்றோம்

2013ஆம் ஆண்டு, 'வலையை' மேய்ந்துகொண்டிருந்தேன். செங்கலடியில் இரட்டைக் கொலை என்றிருந்தது. பெயர்களைப் பார்த்ததும் தலை சுற்றத்தொடங்கியது.

இனி, செங்கலடியில், தோளில் கைபோட்டு, டேய் மச்சான் என்றழைத்து, பால்யத்துக் கதைபேச ரகு இருக்கப்போவதில்லை. அவனின் விப்புறாவும் இல்லை. தங்களின் குடும்பத்தவர்களாலேயே இருவரும் கொல்லப்பட்டார்கள்.

'அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' என்னும் அவனின் வசனம் சற்று உருமாறியிருக்கிறது. அவனை இரண்டு தேவிகளும் அணைத்திருக்கிறார்கள்.

தொடரும்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்