நினைவழியா பதின்மம், பகுதி 12

இந்தக் கதைக்கும் partner in crime தயாசாமிக்கும் தொடர்பில்லை என்று சொல்லிக்கொண்டு...

எனது பால்யகாலங்களில் பல ஆண்டுகள், விடுதிவாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தது. விடுதிவாழ்க்கை என்பது இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்க்கை. அன்புக்காக ஏங்கி, ஏங்கி வாழும் வாழ்க்கை அது. அப்படிப்பட்ட வாழ்க்கையையும் அழகாக்கிய நிகழ்வு இது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கும், சனிக்கிழமைகளில் 2 மணிநேரம் வெளியில் செல்லவும் அனுமதிப்பார்கள். படம் பார்ப்பதற்கு அனுமதி கிடைப்பது விடுதிக்கு பொறுப்பான ஆசிரியரின் மனநிலையைப் பொறுத்தது. அத்தி பூத்தாற் போல் அதற்கும் அனுமதி கிடைக்கும்.

ஆனால், வெள்ளிக்கிழமைகளில் ஆனைப்பந்தி கோயிலுக்குப் போவது என்றால், அன்று காலையிலேயே மனம் ஆனந்தக்கூத்தாடத் தொடங்கிவிடும். காரணம் பக்தியல்ல. வெள்ளி இரவு படிப்பு இல்லாமல் போவதும், கோயில்பிரசாதமும், மோதகமும், பொறுக்கித் தின்னும் தேங்காய்ச் சொட்டுகளும்தான்.

1976இல் விடுதியில் சேர்ந்த பின், பல வெள்ளிக்கிழமைகள் கடந்து போயின. எனக்கும் பதின்மக்காலங்கள் தனது விளையாட்டுக்களை ஆரம்பித்திருப்பதை அன்று நான் உணர்ந்திருக்காவிடினும், இன்று அது நன்றாகவே புரிகிறது.

அதே கோயிலுக்கு நாம் ஒவ்வொரு வெள்ளியும் செல்வதுபோல ஆனைப்பந்தி பாடசாலையின் பெண்கள் விடுதியில் இருந்தும் பெண்கள் (சிறுமிகள்) வருவார்கள். இவர்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்களும் என்னைக் கண்டுகொள்வதில்லை. கோயில்பிரசாதமும், தேங்காய் சொட்டுமாய் எனது உலகம் உருண்டோடிக் கொண்டிருந்தது.

அந்தச் சிறுமிகளில் ஒருத்தி (பெயர் தெரியாது) ஒவ்வொரு வெள்ளியும் தேவாரம் பாடுவாள். உருகி உருகிப் பாடுவாள். கேட்பவர்களையும் உருக்கி நெகிழவைக்கும் குரல் அது. அவள் தேவாரம் பாடும் நேரம் மட்டும் எனது எண்ணம் கோயிலில் இருக்கும்.

அதுவும் ஒரு வெள்ளிக்கிழமைதான். வழமைபோல் வேட்டி, திருநீறு சந்தனத்துடன் கோயில் மணலில் விளையாடிக் கொண்டிருந்தேன். தேவாரம் பாடும் பெண் கோயிலுக்குள் வந்து கும்பிட்டபடியே, உள்வீதியைச் சுற்றிவந்து கொண்டிருந்தாள். மனதுக்குள் ஏதோ செய்தது. அவளைப் பார்த்தபடியே இருந்தேன். நான் இருப்பதை அவள் கவனிக்கவேயில்லை. தேவாரங்களை முணுமுணுத்தபடியே கடந்து போனாள்.

அன்று தொடங்கியது ஹோர்மோன்களின் ஆட்டம். மனம் அவளையே தேடியது. தேவாரம் படிப்பதற்காக முன்னால் நிற்பாள். அன்று முதல் நானும் நின்றேன். அவள் தேவாரம் படிக்கத் தொடங்குவதும் தெரியாது, படித்து முடிப்பதும் தெரியாது. அவளின் முகம் மட்டுமே தெரியும். கண்மூடி, அவள் தன்னிலை மறந்து தேவாரம் படித்தபோது, நானோ என்னிலை மறந்து அவளைப் படித்துக் கொண்டிருப்பேன். இதுவும் ஒருவித பக்திதான்.

அமைதியான அழகுடன் இருப்பாள். தலையில் மல்லிகைப் பூவிருக்கும். கூப்பியிருக்கும் அவள் கைகளில் பிளாஸ்டிக் காப்புகள் இருக்கும். வெள்ளைச் சட்டையும், பழுப்படித்துப் போயிருந்த வெள்ளை பாவாடையுமாய் நின்றிருப்பாள்.

அன்று தொலைந்தவன்தான் அதன்பின் வந்த சில மாதங்கள் தொலைந்து போயிருந்தேன். ஒவ்வொரு வெள்ளியும் திருவிழா தான். வியாழன் இரவே எப்படா விடியும் என்றிருப்பேன். வெள்ளி மாலை குளித்து, மற்றவர்களுடன் வரிசையாக நடந்து சென்று கோயிலுக்குள் புகுந்தால், அவள் வரும்வரை மனது தவியாய்த் தவிக்கும். கண்டதும் அமைதி கொள்ளும். எனது தந்தையார் அடித்து, அடித்து கற்பித்த தேவாரமெல்லாவற்றையும் அவள் அடிக்காமலும், கற்றுத் தராமலும் கற்பித்தாள். சமர்த்தாய் கற்றுக்கொண்டேன்.

தேங்காய் சொட்டு பொறுக்குபவர்களும், மோதகத்துக்கு அடிபடுகிறவர்களும் ஏதோ அற்ப பிராணிகளைப் போல் எனக்குத் தெரிந்தார்கள். அவர்களுக்குப் போட்டிக்கு ஒருவன் குறைந்திருந்தான். நான் பட்டினியாய் விடுதிக்குப் போனாலும், மனம் நிரம்பியிருக்கும்.

அவளுடனான அந்த நாட்களில் ஒரு துளியேனும் காமம் என்னும் சொல்லுக்கு இடமிருக்கவில்லை.. எழுத்தில் சொல்லமுடியாத பரிசுத்தமான மகிழ்ச்சியான நிலையை மட்டுமே தந்து போன அனுபவமது.

ஒருமுறை மட்டும் அவளுடன் இருவார்த்தைகள் பேசினேன். கோயிலில் திருவிழாவின்போது அய்யர் தேவாரம் படிப்பவளைத் தேடினார். என்னையும் தேடச் சொன்னார். தேடாமலே அறிந்திருந்தேன் அவளிடத்தை. அவளிடம் சென்று “அய்யா வரட்டாம்” என்றேன். நிமிர்ந்து பார்த்தாள் என்னை. என்னால் பார்க்கமுடியவில்லை. கொலுசின் ஒலி கேட்க ஓடினாள். பதட்டம் குறைந்ததும் நானும் ஓடிச்சென்று அவளுக்கு எதிர்வரிசையில் நின்றபோது..

“இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்”

என்று கண்மூடி உருகிக் கொண்டிருந்தாள். “அய்யா வரட்டாம்” என்ற அந்த இரு வசனங்களைக் கொண்ட காட்சி எனது மனத் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேலாக ஓடிச் சாதனை புரிந்தது என்பது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சில மாதங்களின்பின், அவளின் வருகை நின்று போனது. ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தாலும், சில காலங்களில் அவள் ஞாபகத்தில் இருந்தும் மறைந்து போனாள்.

எனக்கு அவளைத் தெரியும், அவளுக்கு நான் யார் என்றே தெரியாது.

ஒரு வேளை நான் நினைப்பது போல, 'எனக்கு அவனைத் தெரியும், அவனுக்கு என்னைத் தெரிந்திருக்காது...' என்று கடந்தபோய்விட்ட பல பத்து ஆண்டுகளில் ஒருநாளாவது அவள் நினைத்திருகக்கூடுமோ?

நினைத்திருக்கலாம்.


தொடலாம்...

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்