முகப்புத்தகத்தில் ஒரு அந்தரங்கம்


அன்பு நண்பர் ஒருவரின் கணணியுனுள் ஒருவித வைரஸ் புகுந்து அட்டகாசம் பண்ணுகிறதாம், இணையத்தினுள் செல்லும் வேளைகளில் ”அந்த மாதிரியான” படம்தான் திரையில் தெரிகிறது என்றும், அதை தர்மபத்தினி கண்டு சந்தேகப்பட்ட போது, தானும் நகைச்சுவையாக ”எத்தனை நாளைக்குத் தான் உன்னைப் பார்க்கிறரது” என்று ஒரு A ‌ ஜோக் அடித்தாராம்.

அதன்பின் தர்மபத்தினியின் பார்வை மதுரையை எரித்த கண்ணகியின் பார்வை போலிருப்பதாகவும், உடனே இந்தப் பிரச்சனையை தீர்ததுவைய்யுங்கள் இல்லை என்றால் உங்களுடன் தான் நான் இனிமேல் தங்கவேண்டும் என்று கூறியபடியே இரவு 9 மணிபோல் கதவைத்தட்டினார், நண்பர்.

கையோடு கணிணியைக் கமக்கட்டுக்குள் வைத்துக்கொண்டுவந்திருந்தார்.

எனது இதயம் எதையும் தாங்கும். ஆனால் நண்பரை என்னுடன் தங்கவைப்பதைத் தாங்காது. எனவே கணணியை வாங்கி மேசையில் வைத்தேன்.

நண்பர், எனது சமயலறைக்குள் புகுந்து, ஒரு கிளாஸ் எடுத்துவந்து எனது மேசையில் இருந்த பழரசத்தை ஊற்றி, ரசித்துக் குடித்தார். பின்பு எனது கணிணியை எடுத்து மடியில் வைத்தபடியே முகப்பத்தகத்தில் யாருடனோ சிரித்துச் சிரித்து உரையாடிக்கொண்டிருந்தார். நானோ அவரது கணிணியை இயக்கிக்கொண்டிருந்தேன்.


”டேய், கொம்பியூட்டருக்குள்ள எக்கச்சக்க படம் இருக்கு, முக்கியமா அவள் இந்த வருசம் ஊருக்கு போய் தன்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் என்று ஒரு தொகை படம் இருக்கு. அதுகள் கவனமடா, அதுகளுக்கு ஏதும் நடந்தால் என்னைய இனிமேல் நீ பார்க்க ஏலாது” என்று கணணியைத் தரும்போது கூறியிருந்தார்.
 
அவர் கூறியதை, ”ஒஸ்லோ கஜனி” என்றழைக்கப்படும் நான் மறந்துபோவேன்  என்றோ, அதனால் நான் சிக்கலில் மாட்டுவேன் என்றோ எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.


நானும் எனது மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காக சில கேள்விகளைக் கேட்டேன்அவரிடம்.
”டேய்! என்ன ஒப்பரோட்டிவ் சிஸ்டம் வேணும்?”
”எதையாவது போடு, பேஸ்புக்கு போனால் காணும்”
”இல்லை, XP, Vista, Win 7 இதுல எது வேணும்”

நண்பர் தனது Iphone ஐ இயக்கினார். (சம்பாசனை தொடர்கிறது)

”எடியேய், உனக்கு என்ன சிஸ்டம் வேணும் என்று கேக்கிறான்”
”அப்பிடியெண்டால் எனன? (நண்பரின் தர்மபத்தினி)

நண்பர் என்னிடம் ”என்னட்ட சொன்னததை இவளிட்டயும் சொல்லு” என்று நினைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.

”வணக்கம்” என்றேன் நான்
”அண்ணை! அவருக்கு கொம்பியூட்டரைப்பற்றி ஒண்டும் தெரியாது, எல்லாத்துக்கும் எனக்கு போன் பண்ணுறார்” என்றார் நண்பரின் தர்மபத்தினி. (சப்பாஆஆ என்றது எனது உள் மனது)

”இல்ல இல்ல அவன் உங்களில் இருக்குற அளவுகடந்த மரியாதையில் தானே கேக்கிறான்” (எனக்கு அடிக்கடி சமைத்துப்போடும் புண்ணியவதியை சற்று குளிரவைப்பதில் தவறில்லை என்பதால் சற்று தாராளமாகவே அவரைப் புகழ்ந்தேன்)

”அண்ணை! எனக்கு நாடகம், சூரியாவின்ட படம் வந்தால் காணும். மிச்சத்தை அவரிட்ட கேளுங்கோ, அவர வெளியில அலைந்து திரியாம கெதியில வீட்ட வரச்சொல்லுங்கோ” என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

நண்பரோ இரண்டாவது கிளாஸ் கடந்து, சற்று அதிகமாகவே சிரித்தபடியே உதட்டை நாக்கால் நனைத்தபடி முகப்புத்தகத்தில் ஐக்கியமாகியிருந்தார்.

அவனிடம் எதையும் கேட்டால் சிக்கல் வரும் என்ப்தால் Win 7 இன்ஸ்டால் பண்ணினேன். 

நண்பர் நான் இன்ஸ்டால் பண்ணிய அந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு போத்தல் வைன் முடித்து மிகவும் ஜாலியான மூடில், முகப்புத்தகத்தில் உரையாடிக்கொண்டிருந்தார். எனது கீபோட் இல் இருந்து புகை வருவது போல் பிரமை ஏற்பட்டது எனக்கு. அவ்வளவு விரைவாக எழுத்தித் தள்ளிக்கொண்டிருந்தார், நண்பர்.

வேலை முடிந்ததும், நண்கரிடம் கூறினேன். நண்பரோ தான் மிகுந்த நிதானத்துடன் இருப்பதாக நினைத்து, எனது கதவினில் சாய்ந்தபடியே, நிதானமாகப் புன்னகைகிறேன், என்று நினைத்து கோணலாகப் புன்னகைத்தார்.

”டேய் மச்சான், நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” இதை இரண்டுதரம் கூறியபின் அடுத்த வசனமாக என்னத்தை கூறுவது என்று யோசித்தார். எதுவும் வாயில் வராததால் அவரால் நிதானமாக கதவில் சாய்திருக்க முடியவில்லை. எனவே கட்டிலில் குந்திக்கொண்டார்.

எனது வாய் சும்மாயிருக்கவில்லை.
”டேய்! என்னது பேஸ்புக்கில உதட்டை நனைத்து நனைத்து எழுதுகிறாய், கனக்க சிரிக்கிறாய், என்ன விசயம்” என்று கேட்டேன்
கோணலான சிரிப்புடன் ”அது ரகசியம்” என்றார்.
பொறுடீ... வீட்ட வந்து ஆத்தாளிட்ட போட்டுக்கொடுக்கிறேன் என்று கறுவிக்கொண்டேன்.

கணணியுடன் புறப்பட்ட நண்பர், திடீர் என்று என்னைப் பார்த்து
”டேய்! அந்த ”பலான படங்கள்” இனியும் வரு‌மா என்று கேட்ட போது அவரின் குரலில் ஒரு சோகம் இளையோடியிருந்தது போலிருந்தது எனக்கு.
”ஒஸ்லோ முருகன் சத்திமா இனிவராது” என்றேன்.
”டேய்! அவளின்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்கள் எல்லாம் இருக்குத்தானே? ” என்ற போது தான் எனது மரமண்டையில் நான் அவர் கூறியதை மறந்து, அனைத்துப்படங்களையும் அழித்திருப்பது தெரியவந்தது.

நண்பர் மீண்டும் கேள்வியைக் கேட்டார். ” ஓம் ஓம். அப்ப நீ வீட்ட போ, இல்லாட்டி மனிசி தேடும்” என்றேன்
”யார் அவளோ, என்னைத் தேடுறதோ. தொல்லை தொலைந்தது என்று நினைத்து, இப்ப நாலாஞ்சாமத்தில் இருப்பாள்” என்றார் நண்பர்.

எப்படி உங்களுக்கெல்லாம் ரெண்டு கிளாஸ் பழரசம் போனதும் வீரம் பிறக்கிறது என்று கேட்க நினைத்தேன் என்றாலும் அடக்கிக்கொண்டேன்.

மறுநாள், நானாகவே நண்பரின் வீட்டுக்கு அழையாவிருந்தாளியாய் போய் உட்கார்ந்து கொண்டேன்.

”அண்ணை, உங்களிட்ட சொன்னனான் தானே இந்தாளுக்கு கொம்பியூட்டரப் பற்றி ஒன்றும் தொரியாது என்று”
நான் ஆம் என்பது போல தலையை மேலும் கீழுமாய் ஆட்டுகிறேன். பின்பு பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்தேன்.

”என்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்க‌ளையெல்லாம் இந்த ஆள் எனவோ செய்துட்டார், அதுகளைக் காணேல்ல, அண்ணண்” என்றார்

நான் நண்பனைப் பார்த்து

”டேய்! எவ்வளவு முக்கியமான படங்கள், என்னடா செய்த நீ” என்று குரலை கடுமையாக்கிக் கேட்டேன்.

சோபாவின் முலையில் ஒடுங்கி்ப்போயிருந்த நண்பன்

”மச்சான், நேற்று வீட்ட வந்த பிறகு நீ சொன்ன மாதிரி படங்கள் இருக்குதா என்று பார்த்தன். அங்க ஒன்றும் இருக்கேல்லடா” என்றார் நண்பர்.

நான் வாய் திறக்கமுதலே நண்பரின் மனைவி முந்திக்கொண்டார்”

”உங்களுக்கு ஒண்டும் ஒழுங்காச் செய்யத்தெரியாது, எத்தன தரம் அவர் உங்களுக்கு கொம்பியூட்டர் திருத்தித் தந்திருக்கிறார். அவர பிழைசொல்லாதீங்க. நீங்க நேற்று வரேக்க உங்களுக்கு பயங்கர வெறி, உங்கட சிரிப்பில கண்டுபிடிச்சனான். நீங்கள் தான் படம் பார்க்கிறன் என்று அழித்திருப்பீங்க” எனறு கூறினார்.

”என்ன, பயங்கர வெறியோ? டேய் எங்கயாடா போய் ஊத்தின நீ” என்று கதையைத் திசைதிருப்பமுயற்சித்தேன்.
நண்பனின் மனைவி தொடர்ந்தார்
”உங்க எத்தனைபேர் இருக்கினம், இல்லாட்டி போலந்து ஆக்களிட்ட வாங்கிக் குடிச்சிருப்பார்” என்றார். அத்துடன் நண்பருக்கு செம டோஸ் விட்டுக்கொண்டேயிருந்தார்.

எனக்கு திடீர் என்று ஒரு யோசனை வந்தது.

”நீங்க ரெண்டு பேரும் சண்டை பிடிக்காதீங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லா மெலிஞ்சு வடிவா இருக்கிறீங்க, உங்கட கமராவை கொண்டுவாங்க உங்க ரெண்டுபேரையும் வடிவா படம் எடுத்துத்தாறன்” என்றேன். எதிர்பார்த்த பலன் கிடைத்துது.

” நான் இப்ப சாப்பாட்டிலயும் கவனம், பின்னேரத்தில நடக்கிறனான், ஆனால் எனக்கெண்டால் இவர் மெலி்ஞ்சமாதிரி தெரியேல்ல. நீங்கள் உங்கட ப்ரெண்டுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க” என்றபடியே கமராவை எடுத்துவந்தார்.

இருவரையும் சில படங்களை எடுத்தேன். அத்தோடு மெமரிகார்ட்ஐயும் கழட்டி எடுத்து காட்சட்டைப்பையினுள் போட்டுக்கொண்டேன்.

”சாப்பிட்டுட்டு போங்கோ, உங்கட கருவாடுதான் இண்டைக்கு இங்கயும் என்றார்”. ஒரு பிடி பிடித்துவிட்டு புறப்படும் போது இண்டைக்கு கொம்பியூட்டர தாங்க இவன் அழித்த படங்களை திருப்பி எடுக்க ஏலுமோ என்று பார்க்கிறேன் என்று கூறி கணணியை வாங்கிச் சென்றேன். நண்பன் குளிந்த தலை நிமிராது உட்கார்ந்திருந்தான்

வீடு வந்து மெமரிக்கார்ட் இல் படம் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒஸ்லோ முருகன் என்னைக் கைவிடவில்லை. கமரா வாங்கிய காலத்திலிருந்து எடுத்த படங்கள் அனைத்தும் இருந்தன. அவற்றை கணணியுக்குள் ஏற்றி, மறுநாள் அவர்கள் வீட்டில் கொண்டுசென்று கொடுத்தேன்.

”இனிமேல் இந்த கொம்பிட்டரை நீங்க தொடப்படாது” என்றார் மனைவி, எனது நண்பனைப் பார்த்து.
என்னால் நண்பனைப் பார்க்க முடியவில்லை. மேலே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அன்றும் இறைச்சிப்பொரியல், இறைச்சிக்கறி என்று சாப்பாடு அமர்க்களப்பட்டது.

அவர்களுடன் உணவு உண்ணும் போது நண்பனிடம் ” டேய் உன்ட பேஸ்புக் எப்படி போகுது” என்று கேட்டேன். நண்பன் மேசைக்குக் கீழ்ப்பகுதியினூடாக எனது காலை மிதித்தான். அவனின் மனைவி, அது என்ன அண்ணை என்று கேட்ட போது ”அது பெடியங்களின்ட” விசயம் என்றேன்.

அப்ப அது ஏன்  கிழவன்களுக்கு? என்று மடக்கினார். என்னிடம் இல்லை, ஆனால் இவன் வைச்சிருக்கிறார்ன் என்றேன். அக்கினிப் பார்வை ஒன்றை வீசினார். அதுல கனக்க பொம்பிளையளும் வருவினம், எல்லாரும் கதைப்பினம், வீடியோவிலயும் பார்ப்பினம் என்று நான் கூறி முடிக்கமுன்பே, ”அதுதானோ மாப்பிள ரூமுக்குள்ள போயிருந்து கொம்பியூட்டர் பாவிக்கிறவர்” என்றார் மனைவி.

நண்பன் என்னை ” நண்பேன்டா” என்று கூறி தலையைக் குனிந்தபடியே ஆட்டிறைச்சியில் கவனத்தை செலுத்துவது போன்று நடித்துக்கொண்டிருந்தார்.

இனி எனக்குப் பக்கத்தில இருந்து தான் கொம்பியூட்டர பார்க்கலாம் இல்லாவிட்டால் தொடப்படாது என்னும் ரீதியில் தனது பத்ரகாளித் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருந்தார் மனைவி.

அதன் பின் பல வாரங்கள் இவ் விடயத்தை மறந்து போயிருந்தேன்.
ஒரு நாள் நண்பரின் மகனின் பிறந்த நாள் வந்தது. என்னை அழைத்திருந்தார்கள்.

”இந்த ஆள், ஒழுங்கா படம் எடுக்காது, நீங்க எடுங்கோ அண்ணை” என்றார் நண்பரின் மனைவி. நண்பர் என்றும்போல் அன்றும் குனிந்த தலை நிமிராதிருந்தார்.

கமரைவை செக் பண்ணிப்பார்த்தேன். மெமரிக்கார்ட்ஐ காணவில்லை. அது எப்படி அங்கு இருக்கும்? அன்று நான் அதை எனது கணணியில் இட்டு படங்களை பிரதி செய்த பின் அது எனது கணணியிலேயே இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது.

”எங்க மெமரிக்கார்ட்?” என்றேன். அப்படி என்றால் என்ன அண்ணண் என்றார் நண்பனின் மனைவி.
என்னிடம் கனக்க இருக்கு எடுத்துவருகிறேன் என்று புறப்பட்டேன். எனது அருமை நண்பருக்கு பலத்த அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது.

அவர்களன் மெமரிக்கார்ட்ஐ ‌ கொண்டுவந்து கமராவினுள் புகுத்தி படம் எடுத்துக்கொடுத்தேன்.

அன்றும் ”கல்யாண சமையல் சாதம்” பிரமாதமாயிருந்தது.

எனினும் மனச்சாட்சி உறுத்திக்கொண்டிருந்ததால் ஒரு வெள்ளி மாலை நண்பனை அழைத்து நீராகாரம் படைத்தேன். பழரசத்தில் இருந்து, ருஸ்யநாட்டுப் பானம் வரை அருந்தி இருவருக்கும் மதிமங்கும் நிலையில் முழுக்கதையையும் நண்பணுக்குச் சொன்னேன். நண்பர் என்னை விட மிக மிக அதிகமாகவே சுருதிசேர்த்திருந்தார். எனவே அவர் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்து, இப்படிச் சொன்னார்:

”அவளுக்கு கொம்பியூட்டரைப்பற்றித் தெரியாது, சரியான நாட்டுக்கட்டை, அவள் தான் அழித்திருப்பாள். உன்ட புண்ணியத்தால படம் கிடைச்சிட்டுது, மச்சான். நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” என்றார்.

நண்பருக்கு ருஸ்யநாட்டுப்பானம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்பது புரிந்தது.

நானும் ”மச்சான் கொம்பியூட்டர் கிங்க்கு ஒரு சியெர்ஸ்..டா” என்று அவனின் கிளாசுடன் எனது கிளாசை முட்டினேன்.

இன்றும் அவர்களுக்கு நான்தான் கொம்பியூட்டர் கிங். என்ட மனிசனார் அழித்த படங்களை எடுத்துத் தந்தவர் என்று ஊருக்குள் நண்பரின் மனைவி ஏகத்தக்கும் புழழ்ந்துகொண்டிருக்கிறார், என்னை. நண்பருக்கு முகப்புத்தகத்தினுள் நுளைவதற்கும் தடை போட்டிருக்கிறார்.




7 comments:

  1. என்னிடம் இல்லை, ஆனால் இவன் வைச்சிருக்கிறார்ன் என்றேன்//// இந்த குசும்பு உங்களுக்கு ஆகாது.

    ReplyDelete
  2. நடந்தத அப்படியே சொல்லியிருக்கீங்க...

    வாழ்த்துகள்... அந்த ரசிய நாட்டு பானம் உங்களுக்கு வேலை செய்யாம பாத்துக்குங்கோ!!!

    ReplyDelete
  3. >வேலை முடிந்ததும், நண்கரிடம் கூறினேன். நண்பரோ தான் மிகுந்த நிதானத்துடன் இருப்பதாக நினைத்து, எனது கதவினில் சாய்ந்தபடியே, நிதானமாகப் புன்னகைகிறேன், என்று நினைத்து கோணலாகப் புன்னகைத்தார்.

    இது நண்பர் செய்ததா அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சஞ்சயன் செய்ததா?

    ReplyDelete
  4. கொம்பியூட்டர் கிங்க்கு ஜெ ஜெ.

    ReplyDelete
  5. வாழ்க கம்ப்யூட்டர். அருமையான எழுத்தாற்றல் உங்களுக்கு.

    ReplyDelete
  6. வாழ்க கம்ப்யூட்டர். அருமையான எழுத்தாற்றல் உங்களுக்கு.

    ReplyDelete
  7. Very interesting narration! Made my day Mr.Visaran

    ReplyDelete

பின்னூட்டங்கள்