டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?



கதாநாயகன்:
சர்மா சேர் என்று அழைக்கப்பட்ட எங்கள் ஈஸ்வரசர்மா சேர்

வில்லன்கள்:
7B அல்லது 8B படித்துக் கொண்டிருந்த நானும்எனது வகுப்பு அறிவுக் கொழுந்துகளும்

இடம்:
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி

காலம்:
1977 அல்லது 1978 இல் ஒரு நாள்

நேரம்:
மதியமிருக்கும்


வெய்யிலில் நொண்டிப் பிடித்து விளையாடி, பாடசாலை மணியடித்தபோது வகுப்புக்குள் வேர்த்து வழிந்தபடியே, ஓடிவந்து, உட்கார்ந்து, நேர அட்டவணையைப் பார்த்துஐயோ.. சமூகக் கல்விடா ... கிழிஞ்சுதுடா டோய். சர்மாசேரின்ட பாடம்டாஎன்றான் எனது நண்பர் அமீர் அலி.

சர்மா சேர்இந்தப் பெயர் போதுமானது எனக்கு மட்டுமல்ல அவரிடம் தமிழ் கற்ற அனைவருக்கும்.

வகுப்பின் மொனிட்டர்பொன்ஸ்என்றழைக்கப்படும் பொன்னையா, யார் யார் கதைக்கிறார்கள் என்று சர்மாசேரிடம் சொல்வதற்காக கதைப்பவர்களின் பெயர்களை பட்டியலிட்டுக்கொண்டிருந்தான்.  எங்கள் பெயர் தினமும் அவனின்  பட்டியலில் இருக்கும் என்பதால் நண்பர்களாகிய  அமீர் அலி, ராஜேந்திரன், நான் ஆகியோர் அவனைக் கண்டுகொள்வதில்லை. அவனுக்கு இரண்டு பிரச்சகைகள் இருந்தன. கதைப்பவர்களின் பெயர்களை எழுதாவிட்டால், ‘சர்மா சேர்அவனைச் சும்மா விடமாட்டார். எங்களின் பெயர் எழுதினால் நாம் அவனை சும்மா விடமாட்டோம். மத்தளத்தின் நிலை அவனுக்கு.

எமக்கு முன்வரிசையில் வேணன் என்னும் உயர்ந்த மாணவன் உட்கார்ந்திருப்பான். வகுப்பில் உயரமானவனும் அவனே. அவனில் சிலருக்கு பயம் இருந்தது. அவனும் அமைதியான அடக்கமான பிள்ளை இல்லை எங்களைப்போன்று.

வேணன், பொன்ஸ்ஐடேய், கொன்னை’ (பொன்னையாவுக்குக் கொஞ்சம் கொன்னை இருந்தது) என்ட பெயர எழுதிப் பாரு.. கொல்லுவன்என்று வெருட்டிக் கொண்டிருக்கும்போது, வகுப்பு வாசலில் நின்றிருந்த உருவத்தைக் கண்டதும் போலீசைக் கண்ட திருடன்போன்று அமைதியாயிற்று வகுப்பு.

Good Afternoon Sir! என்று எழுந்து நின்று ஒரு கோரஸ் ஆக நாங்க பாடிமுடிக்க,
சரி, சரி இருங்கோடாஎன்றார் சர்மாசேர், மட்டக்களப்பு வெக்கையில் வடிந்துகொண்டிருந்த வியர்வையின் எரிச்சலில்....
பொன்ஸ்இடமிருந்து லிஸ்டை வாங்கிப் பார்த்தவர்

வேறு யாரின் பெயர் இதில் இருக்கும்? என்றபடியே தலையாட்டிக் கொண்டுடே எம்மை எட்டிப் பார்த்தார். நாங்கள் ஏதும் நடவாதது போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தபோது, “கொஞ்சம் பொறுங்கோடா, வந்து தாறன்என்றார் சுத்தமான யாழ்ப்பாணத்துத் தமிழில்.
சரி, கொப்பிய எடுங்கோடாஎன்றவர் ஏதோ திடீர் என்று ஏதோ நினைவுக்கு வரந்தபோதுவேண்டாம் வைய்யுங்கோ” என்றாா்

போன கிழமை வகுப்பில் என்ன படித்த நாங்கள்?” என்றபடியே தனது குறிப்பேட்டினைப் பார்த்து சற்றே யோசித்தவர், “டேய்! கண்டிய எப்படா ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள்? என்று சொல்லுங்கோஎன்றார்.
மற்றய நேரங்களில்பீக்கு முந்திய குசுபோன்றுசேர், கேள்வி கேட்கும் முன்பே பதில் சொல்லும் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் அறிவாளிகள் கூட அமைதியாக இருந்தனர், அன்று.

என்ன, நான் சொன்னது கேக்கேல்லியோடாஎன்றார் கொஞ்சம் கடுமை கலந்து குரலில் கடுமையைச் சற்று அதிகரித்தவாறே.

கரண்ட் இல்லாத ஸ்பீக்கர் கடைபோன்று எங்கள் வகுப்பில் இருந்து சத்தமே வரவில்லை.

கதிரையிலிருந்து எழும்பி, மேசைக்கு முன்னால் வந்து நின்று வகுப்பைப் பார்த்தார். அப்பார்வையில் எலியுடன் விளையாடும் பூனையின் தோரணை இருந்தது. மேசையில் இரு கைகளையும் ஊன்றி, எம்பி, மேசையில் உட்கார்ந்துகொண்டார். கால்கள் மேசையின் கீழே ஆடிக் கொண்டிருந்தன. பிரம்பைத் தன் கையில் தட்டியபடி, தலையையும் காலின் ஆட்டத்துக்கு ஏற்றவாறு ஆட்டியபடியே வகுப்பை ஒரு நோட்டம் விட்டார்.

இப்போது நான் உங்களுக்கு எனது வகுப்பைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும்.

நாங்கள் ஏறத்தாள 32 பேர், 4 வரிசைகள். ஆகவே, ஒரு வரிசையில் 8 அறிவாளிகள். முன்வரிசையில் தங்களை மற்றையவர்களைவிட  அறிவாளிகள் என்று நினைப்பவர்கள் குந்தியிருப்பார்கள். இவர்கள்தான் பரீட்சைகளின்போது அதிக புள்ளிகள் எடுத்து வகுப்பின் முதல் 10 இடங்களுக்குள் வருவார்கள். அதிகமாக பெரிய வீட்டுப்பிள்ளைகள்.

முன்வரிசையின் ஆரம்பத்தில் இருந்தவர்களை பிரம்பால் காண்பித்து, புருவத்தை மேலே உயர்த்திநீ சொல்என்றார் வாய் திறக்காமலே.

வழமையாகவும், சேர் இப்படித்தான் கேள்விகளைக் கேப்பார். முன் வரிசயில் இருக்கும் அறிவுக் கொழுந்துகள் பதில் சொல்லி எங்களைக் காப்பாற்றிவிடுவார்கள் அல்லது சேர் கடைசி வாங்கில் குந்தியிருக்கும் எங்களிடம் வருவதற்கிடையில் வகுப்பு முடிந்ததற்கான மணியடித்தும் எங்களை காப்பாற்றிவிடும்.

இருப்பினும், சேர் எங்களையும் அவ்வப்போது கேள்வி கேப்பார் ஆனால் பதிலை அவரேதான் சொல்லவேண்டியிருக்கும். எங்களுக்கு தெரியுமா என்ன? நாங்கள் படிக்கத்தானே பள்ளிக்கூடத்திற்கு வந்திருக்கிறோம், சேருக்கு தானே இவை தெரிந்திருக்கவேண்டும். ஏன் எங்களிடம் கேட்கிறார், என்கிற புரட்சியாளர்கள் நாங்கள். இடையிடையே அடிவிழும், ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பாஎன்பது போல நாங்களும் அவரோடு கோவிப்பதில்லை.

இம்முறை, சேர் கேட்ட கேள்வி முன்வரிசை அறிவாளிகளையும் ஆட்டிப் போட்டது என்றால் எங்கட நிலையைச் சொல்லவா வேண்டும்?

நண்பர் புரொபசர் அமீர் அலி, மேசைக்கு கீழே தனது கொப்பியைப் பிரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார். அவனப் பார்க்க எனக்குப் பாவமாயிருந்தது.

ஏனென்றால், எனக்குத் மட்டும்தான் தெரியும் அந்தக் கொப்பில் அவன் என்ன எழுதியிருப்பான் என்று. எம்.ஜி. ஆர் வாழ்க சிவாஜி ஒழிக, எதாவது ஒரு சினிமாபாட்டு (அன்பு மலர்களே, (நாளை நமதே படப் பாட்டு)) மற்றும் பாத்திமாவைப்பற்றிய பதின்மப் பிதற்றல்கள். இதைவிட அரபி மொழியில் ஏதோ எழுதியிருப்பான். அது நிட்சயமாகபாத்திமா, லவ் யூஎன்பதாகத் தான் இருக்கும். அவனிடம் இருக்கும் ஒரே ஒரு கொப்பியும் அது. வகுப்பில் நடைபெறும் 8 பாடங்களுக்கும் ஒரு கொப்பியை பாவிக்கும் கலை அவனிடம் இருந்தது. அப்படியான பேரறிவாளி அவன். அதில், எங்கே கண்டியப்பற்றி இருக்கப் போகிறது? எழுதினால் அல்லவா அது அங்கு இருக்கும்?

சர்மாசேரின் மீதான பயத்தில் பொடியனுக்கு தன் கொப்பியில் என்ன எழுதினேன் என்பதே மறந்துபோனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

இதற்கிடையில் சர்மா சேர்நீங்க சொல்லுங்கோ அய்யா!, நீங்க சொல்லுங்கோஎன்று குசும்பும், நக்கலும் கலந்து, எங்களின் உயிருடன் விளையாடிக்கொண்டிருந்தார். உடம்பெல்லாம் உதறத்தொடங்கியிருந்தது.
அப்ப, உங்களுக்கு உந்தக் கேள்விக்கு பதில் தெரியாதுஎன்றார், மீண்டும் சுத்தமான சத்தமான யாழ்ப்பாணத் தமிழில்.

சாதாரண நேரமாயிருந்தால், அமீர் அலிஉந்த, குந்தஎன்று யாழ்ப்பாணத் தமிழை நக்கல் பண்ணியிப்பான், ஆனால் பெரும் புயலை எதிர்கொண்டிருக்கும் இந்த நிலையில் அவனுக்கு நக்கலடிப்பதைப்பற்றி சிந்திக்கவே நேரமிருக்கவில்லை.

சர்மா சேரின், ‌கேள்வி எம்மிடம் வருவதற்கு, இன்னும் 22 அறிவாளிகளைக் கடக்கவேண்டும். இது எனக்கு ஒரு வித மனத்தைரியத்தைத் தந்தாலும், மனதுக்குள் ஒரு சிறுயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் கிறிக்கட்இல் துடுப்பெடுத்தாடுபவர்கள் ஆட்டமிழந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்ததுவகுப்பின் நிலை. பதில் சொல்லக் கூடயவர்கள் அவுட்டாகி விட்டார்கள், இனி மீதி இருப்பதை நம்பிப் பயனில்லை என்ற நிலை.

இந்த மனிதரிடம் இன்று அகப்பட்டால், இன்று வகுப்பு தொடங்குவதற்கு முன் கதைத்தற்க்கும், நேற்று வீட்டுப்பாடம் செய்யாததற்கும், இந்தக் கேள்விக்குப் பதில்சொல்லாததுக்கும் சேர்த்து தோலை உரித்து விடுவாரே என்று மனம் கணக்குப் போட்டது. தப்புவதற்கு வழிதேடிக் கொண்டிருந்தேன்.

திடீர் என்று மூன்றாம் வரிசையில் உட்கார்ந்திருந்த வேணன்சேர்என்றான்.

மெதுவாய்த் திரும்பி, என்ன என்பதை வாய் திறக்காமல் கண்ணால் கேட்டார்.

சர்மா சேர்பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும்.

முன்பு குறிப்பிட்டதுபோன்று, அவரது பூர்வீகம் இலங்கையின் வடபகுதி. அந்நாட்களில் தான் அவருக்கு வேலை கிடைத்திருந்தது. திரைப்பட நடிகர்கள் போன்று அழகானவர். மீசை வைத்துக்கொள்ள மாட்டார். மனிதரிடம் ஒருவிதமான அழகான ஸ்டைலும் இருந்தது, அந்நாட்களில். 1977, 1978 இல் அவர் புது மாப்பிள்ளையும் கூட. சைக்கிலில்தான் பாடசாலைக்கு வருவார்.

வேணண், சர்மாசேரிடம்ஒண்டுக்கு போக வேணும் சேர்என்றான். “ஆஹா, எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்என்று நான் சிந்திக்கும் போதே, சர்மாசேர்  அப்பிடியே, அடக்கேலாம இருக்குமேஎன்கிறார் நக்கலாய், ’ஓம்என்பது போன்று தலையை ஆட்டுகிறான், வேணன்.

பறவாயில்ல, உதிலயே போஎன்றார் சர்மாசேர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். வேணனிடம்டேய், எங்களாலேயே இந்த மனிசனை ஏமாத்தேலாமல் இருக்கிறது. நீ ஏன்டா வாய த்திறக்கிறாய்என்று சொல்ல ஆசைப்பட்டாலும், அதன் ஆபத்தை உணர்ந்து, அடக்கிக் கொண்டேன். இப்போது இரண்டாவது வரிசையையும் எழுப்பி விட்டிருந்தார் சர்மா சேர்.

அன்பு ஒழுக, “பொன்னையா! இங்க வாங்கோஎன்றார். அருகில் வந்த பொன்னையாவைப் பார்த்துச் சொன்னார்போய், மூன்று நல்ல பிரம்பு எடுத்திட்டு வா”.

ஏனைய நாட்களில் இப்படியான வேலைகளுக்கு துள்ளிக் குதித்து ஒடுபவன் பொன்னையா. ஆனால் இன்று மட்டும் விருப்பமின்றியே கடமையைச் செய்யப் புறப்பட்டான். காரணம் அவனும் ஏற்கனவே எழும்பி நிற்கும் அறிவாளிகளில் ஒருவனாய் இருந்ததே.

டேய்! எத்தின தரமடா உங்களுக்கு சொல்லுறது, படிக்க ஏலாட்டி மாடு மேக்க போங்கோடா எண்டுஎன்றார் சர்மாசேர்.

வீட்டுல விடுறாங்க இல்ல, சேர்என்று சொல்வோமா என்று யோசித்தேன் என்றாலும் இதையும் அடக்கிக்கொண்டேன். அடுத்து மூன்றாவது வரிசையையும் கேட்டுப் பார்த்தார்.

அதில் ஒருவன் சேர், 1935 என்றான். எனக்கே அதுபிழை என்று தெரிந்திருந்தது. ”டேய்! நான் என்ன உன்ட கொப்பர் பிறந்த ஆண்டையே கேட்டனான்என்றார் சர்மாசேர், மகா எரிச்சலுடன்.

குசும்பும், நக்கலும் அவருக்கு கைவந்த கலை. அதை வைத்தே மனிதர் எங்களை குற்றுயிராக்கியிருக்கிறார் பல தடவைகள். இன்றும் அதுவே நடந்துகொண்டிருந்தது.

பிரம்பெடுக்கச் சென்ற பொன்னையா ஒன்றுக்கும் உதவாத 3 பிரம்புகளைக் கொண்டுவர, “டேய் பொன்னய்யா, இங்கவாஎன்றார்.

கொன்னையும், பயமும் ஒன்றாய் சேர, 10 தரம் சே.. சே.. சே.. போட்டுக் கடைசியாய்ர்போட்டான். அவன் சேர் சொல்லி முடியும்வரையில் பொறுமையாய் இருந்த சர்மா சேர், “டேய், நீ என்ன எமாத்ததேலாது, கையை நீட்டுஎன்றார் அவனைப் பார்த்து.

அவன் கொணர்ந்த பிரம்பால் அவனுக்கே 2-3 போடு போட்டார், பொன்னையா கையை உதறிக்கொண்டு நின்றபோதுபோய், கெதியா நல்ல பிரம்பாக் கொண்டு வா, இல்லாட்டித்தெரியும் தானேஎன்றார்.
வழமையாக,   நாங்கள் அடிவாங்குவதற்காக பெரிய பிரம்பு எடுத்துக் கொடுக்கும் பொன்னையா, கையை உதறி உதறிப் போவதைப் பார்த்தபோது சந்தோசமாகத்தான் இருந்தது, எங்களுக்கு. நாம் ஆளையாள் பார்த்துச் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டோம்.

அந்த நேரம் பார்த்து, அருகில் இருந்த வகுப்பில் கற்பித்த மோசஸ் டீச்சர், சர்மாசேரிடம் எதையே கேட்பதற்கு வந்தார். சேர், டீச்சருடன் கதைக்கத் தொடங்கினார்.

இது தான் சமயம் என்று சில அறிவுக் கொழுந்துகள் டிஸ்கஷன் நடத்திதினார்கள். “டேய் 1700 டாஎன்றான் ஒருவன். “இல்லடா 1800க்கு பிறகுஎன்றான் இன்னொருவன்”. “இல்ல 1600 இருக்குமா?” என்று முதலாமவன் கேட்க, “அது ஒல்லாந்தர்டாஎன்றான் இன்னொருவன். “டேய் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் ஒண்டுடா மடையாஎன்றான்வேணண். (நல்லவேளை அது சர்மாசேரின் காதில் விழவில்லை. அதற்காக மனிதர் கொலையே செய்திருப்பார், அவனை).

டீச்சர் வந்த வேலை முடிந்து போனதும், “டேய் நான் டீச்சருடன் கதைக்கேக்க, உதுக்குள்ள இருந்து குசு குசுத்து கதைத்தவங்கலெல்லாம் முன்னுக்குவாரீங்களோடாஎன்றார் மிகுந்த மரியாதையுடன். பலியிடப்போகும் ஆட்டுக்கு மரியாதை செய்வது போல இருந்தது அது.

ஓருவரும் முன்னே செல்லவில்லை

டேய்! பேர் சொல்லி கூப்பிடடோனுமோடா உங்கள? கெதில முன்னுக்கு வாங்கோஎன்றார் கடுங் குரலில். மூன்று பலியாடுகள் முன்னோக்கி நகர்ந்தன. “வேடா! நீயும் வாஎன்றார் வேணணிண் பட்டப்பெயரைக் கூறியபடியே. வேணணுக்கு தலைசுற்றத் தொடங்கியிருந்தது.

பெயர் கூறி அழைத்தபின்பும், நகராது நிற்பது தற்கொலைக்கு சமம் என்பதுவேணணுக்கு தெரிந்ததால், அவனும் முன்னால் சென்றான். “முழங்கால்ல இருங்கோடாஎன்று கட்டளை வந்தது, சமூகக்கல்விச் சக்கரவர்த்தியிடம் இருந்து.

சக்கரவர்த்தியின் முன் மண்டியிட்டார்கள் நால்வரும்.

இந்த நேரம் பார்த்து பிரம்பு தேடச் சென்ற பொன்னையா
மூன்று நீண்ட பச்சைப் பிரம்புகளை கொண்டு வந்து மேசையில் வைத்தான்.

பிரம்புகளை ஒரு தரம் காற்றில் விசிறிப் பார்த்து தரக்கட்டுப்பாடுசெய்து திருப்திப்பட்டுக் கொண்டார்.

திடீர் என மூன்று பிரம்பையும் ஒன்றாகப் பிடித்து வேணணின் இடுப்புக்குக்கீழே, ஆனால் பின்னந் துடைக்கு மேலே உள்ள சதைப்பிடிப்பான பகுதியை நோக்கி அவர் பிரம்பை இறக்கவும் வேணண்சேர், சேர் நோகுது நோகுதுஎன்று எழும்பி நின்று கத்தவும் சரியாய் இருந்தது.
டேய், நோகுறத்துக்குத்தான் அடிக்கிறன், அதுசரி, உன்னை எழும்பச் சொன்ன நானே இப்ப?” என்று கேட்டு அவனை மீண்டும் மண்டியிட வைத்தார்.

அடுத்தது எங்கள் வரிசை மட்டுமே பாக்கியிருந்தது. அருகில் வந்தவர்அட, மும்மூர்த்திகள் மூன்றுபேரும் மிச்சமிருக்கிறீங்கள்என்றார்.

அவரின் குரலில்110 வீதம் நக்கல் கலந்திருந்தது. “உன்ட கொப்பர் போலீஸ், அம்மா ஒரு டொக்டர், மகன் கடைசிவரிசையில குந்தியிருக்கிற ஒரு குரங்குஎன்றார் என்னைப் பார்த்து.

எனக்கு, நாக்கும் தொண்டையும் வறண்டது. காதுக்குள் இரைச்சல் கேட்டது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. நான் தற்கொலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன். கையில் சயனைட்குப்பி இருந்திருந்தால் சத்தியமாக கடித்திருப்பேன். என் இதயம் வெளியில் வந்து விழவா என கேட்டுக் கொண்டிருந்தது.

அமைதியாய் தலைகுனிந்தபடியே நின்றிருந்தேன்.
உனக்கு வெக்கமில்லையே என்றார்?” “சேர்..அப்படி என்றால் என்னஎன்று கேட்க நினைத்தாலும் வார்த்தைகள் வெளியே வரமறுத்தன

சர்மாசேர், புரொபசர் அமீர் அலியிடம் சென்றார்.
அய்யா நீங்கள் சொல்லுங்க பார்ப்போம்?  என்றார் அமீர் அலியைப்பார்த்து, பயங்கர நக்கலாய்.

கடைக்கண்ணால் பார்த்தேன். எங்களின்தலைவர் அமீர் அலிதலைகுனிந்து நின்றிருந்தார். மீண்டும்டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?” என்றார் அவனிடம்.

இப்படிப்பட்ட அவசியமற்ற கேள்வியை அவனிடம் கேட்காது, எந்த ஊரில், எந்தத் தியட்டரில், என்ன படம், எத்தன மணிக்கு ஓடுகிறது என்பதைக் கேட்டிருந்தால், வீரகேசரி பத்திரிகையில் இருக்கும் கடைசிக்கு முன் பக்கத்தைப் பாக்காமலே சொல்லக் கூடிய திறமை அவனிடம் இருந்தது. வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி வரை இருந்த அனைத்து திரையரங்குகளும் அவனுக்கு அத்துப்படியாய் இருந்த காலமது.

அவனிடம் இருக்கும் அறிவுக்கு ஏற்ற கேள்வியைக் கேக்காதது சர்மாசேரின் தவறா? அல்லது அவனின் தூரதிஸ்டமா? அப்படி எதுவும் இல்லை. அது விதியின் விளையாட்டு.

அடுத்தது ராஜேந்திரன். “அட, சோழச் சக்கரவர்த்தி, நீங்களாவது சொல்லுங்கோஎன்றார் அவனைப் பார்த்து. அவனுக்கு ஒரு பெருஞ் சக்கரவர்த்தியின் பெயரை அவனது அப்பா, வைக்காமலே இருந்திருக்கலாம். அவன் குனிந்த தலை நிமிரவில்லை.

இப்போது முழு வகுப்பும் எழும்பி நிற்கிறது.

சர்மாசோரின் வெள்ளை நிற முகம் சிவந்திருக்கிறது. ஏமாற்றம் தந்த கடும்கோபத்தினாலும், தான் கற்பித்ததை மாணவர்கள் ஞாபகம் வைத்திருக்கவில்லை என்பது அவரை அதிகமாக பாதித்திருந்தது என நினைக்கிறேன்.

அந்த ஏமாற்றம், அவரைக் கடுங் சினம் கொள்ளச்செய்தது. எந்தவொரு ஆசிரியருக்கும் வரவேண்டிய நியாயமான கோபம் தான் அது. அது அன்றுபுரியவில்லை, இன்று நன்கு புரிகிறது.

தனது ஏமாற்றத்தையும், தார்மீகமான கோபத்தையும் கலந்து அடிஅடி என அடித்தார். அன்று கிடைத்த அடி வாழ்க்கை முழுக்க முடியாதது.

பாவம் பெடியள்! மோட்டுத்தனமாக அடித்துப்போட்டேன்என்று சுயர்விமர்சனம்செய்து கொண்டாரோ என்னவோ தெரியாது, அது தான் சர்மா சேர் கடைசியாகப் பயங்கரமாக அடித்தது. அதன் பின்பும் அடித்திருக்கிறார் ஆனால் அவை அந்தஒரு நாளைப் போல பயங்கரமானவை அல்ல.

சர்மாசேர் பற்றிய சில குறிப்புகள்:

எனது மெதடிஸ்த மத்திய கல்லூரிக் காலத்துப் பேரன்பு மிக்க ஆசான்களில் முக்கியமானவர். 1977 அல்லது 1978 தொடக்கம் 2006-2007 வரை மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்காக தன்னையே தந்த ஆசான்.

பிரபல கிறீஸ்தவ பாடசாலை எனினும் சைவசமய நிகழ்வுகள் அதிகளவில் மிகச்சிறப்பாக நடைபெற இவரே காரணம். சரஸ்வதிப் பூசை என்றால் அவர் தான் சக்ரவர்த்தி. வேட்டியுடன் உலா வருவார். இரவிரவாக திட்டமிட்டு, கட்டளையிட்டு அடுத்த நாள் எல்லாம் முடியும் வரை ஓயாமல் ஓடிக் கொண்டிருப்பார். வேட்டியைமடித்துக் கட்டிக் கொண்டு புக்கை கிண்டவும் செய்வார். ’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாஎன்ற பாட்டு அவருக்கு மிக விருப்பமான பாடல்.

எங்கள் Holtom இல்லத்தின் தலைமை ஆசிரியரும்அவர் தான். அருகில் வந்து வந்து, ரகசியமாய்டேய் தோக்கப்படாதுடா என்னஎன்பார், அடிக்கடி.

இவரின் அடிக்குப் பயந்து, நான் மட்டக்களப்பு 'ஆனைப்பந்திக் கோயில் பிள்ளையாரிடம், இந்த மனிசனை மட்டும் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றிவிடு என்று 25 சதத்துக்கு நேர்த்தி வைத்திருந்தேன். அதை விட ஒவ்வொரு வெள்ளியும் 5 சதம் உண்டியலிலும் போட்டேன். ஆனைப்பந்திப் பிள்ளையார் உதவி செய்யவே இல்லை.

ஒரு நாள் நவனீதனை வெருட்டி (அவனின் தந்தை புண்ணியமூர்த்தி சேர்தான் பள்ளிக்கூடத்துக்கு டைம்டேபிள் போடுவார்) சர்மாசேரை வேறு வகுப்பிற்கு மாற்றிவிட முயற்சித்தோம், நாம் மூவரும்.
அடுத்த நாள் புண்ணியமூர்த்தி சேர் எம்மை தனியே அழைத்து, காதைத் திருகி அனுப்பினார். பின்பு நாம் நவனீதனுக்கு அடி போட்டது வேறு கதை

32 ஆண்டுகளின் பின்னான ஒரு நாளில் Facebook இல் உலா வந்துகொண்டிருந்த போது கண்ணில் பட்டது "Students of Sarma Sir" என்னும் பக்கம். அதுவும் கனடாவிலிருந்து. ஒரு நப்பாசையில் புகுந்து பார்த்தால், அது எங்கள் சர்மா சேர்.

குடும்பத்தில் இருந்து பிரிந்த உறவொன்றை நீண்ட காலத்தின் பின் மீண்டும் கண்டு கொண்டதுபோலிருந்தது எனக்கு. தினம் தினம் பல மாணவர்கள் வந்து வாழ்த்திவிட்டு செல்கிறார்கள்அவரை. பொறாமையாய் இருக்கிறது அவரைப் பார்க்கும் போது. நான் ஆசிரியனாக ஆகாததையிட்டு மனம் வருந்துகிறேன்.

சேர் சுகமாயிருக்கிறீங்களா? என்னை தெரிகிறதா? நான தான் அவன், நான் தான் இவன், இப்படி எத்தனை எத்தனை மரியாதைகள், கேள்விகள்,என்ன அன்பு, என்ன வாஞ்சை. ஆண்டுகள்கடந்த பின்பும் சேர், சேர் உருகி மீண்டும் குழந்தையாய்மாறி நிற்கும் அவரின் மாணவர்கள். குடுத்து வைத்த மனிதன் சேர் நீங்கள். இதை விடவேறென்ன வேணடும் ஒரு மனிதனுக்கு?

சர்மாசேர் விசில் அடித்தால் உலகம் முழுவதிலிருந்தும்சர்மா சேர் படையணிஒரு நிமிடத்தில் தயாராக நிற்கிறதே.

அமெரிக்க ஜனாதிபதிக்கும்கூட ஒய்வுபெற்றபின் இப்படியான மரியாதை இருக்குமா?

இறுதியாக, கட்டாயம் நான் இதை சொல்லியே ஆக வேண்டும்...

கடைசிவரிசை 3 குரங்குகளில்

அமீர் அலி கொழுப்பில் கடை வைத்திருப்பதாக அறிந்தேன். இப்போதும் படம் பார்ப்பதை நிறுத்தவில்லையாம். பாத்திமாவுக்கு எங்கிருந்தாலும் வாழ்க என்று 10ம் வகுப்பிலேயே பாட்டுப்பாடி விட்டான். அவன் ஆசிரியனாக இருப்பதாகவும் ஒரு கதையுண்டு. அவனா, ஆசிரியனா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உலகில் பேரதிசயங்களும் நடக்கலாம் அல்லவா?

சோழச்சக்கரவர்த்தி, ஞானம் மாஸ்டர் என்ற பெயரில் கிழக்கிலங்கை இஸ்லாமிய சமூகத்தவரிடையே மிகவும் அதிகமாய் நேசிக்கப்படும் ஒரு மனிதனாயும், புலம் பெயர்ந்த சமூகத்தில் கிழக்கு மாகாணத்ததிற்காகக் குரல் கொடுப்பவனாயும் வாழ்ந்து வருகிறான், புத்திஜீவி என்கிறார்கள் அவனை.

ஹி ..ஹி,  என்னைப் பற்றி என்னத்தைச் சொல்ல...
இப்போதும் எழுத்துப் பிழைகளுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வேணண் 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தில் கரைந்துபோனானாம்.