9c Oslo திரைப்படம் பற்றிய எனது பார்வை

நேற்று (10.10.14) நோர்வே கலைஞர்கள் தயாரித்து, இயக்கி, இசையமைத்து, நடித்து, விநயோகித்த ”9c Oslo” திரைப்படத்தை பார்க்கக்கிடைத்தது. அது பற்றிய எனது பார்வை இது.

ஒரு துறைசார்அனுபவமில்லாத ஒரு சிறு சமூகத்தில் இருந்து ஒரு படைப்பு வருகிறது என்றால் அதனை திரைப்படம் பற்றிய விமர்சனத்திற்கு அப்பால் அதனை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வரவேற்பது சமுகத்தின் கடமை. அது ஏன் என்பதற்கான காரணத்தை கூறவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அதையே  ஒஸ்லோ தமிழ்மக்கள் செய்திருக்கிறார்கள். ஆம், நேற்றும் இன்றும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக இத்திரைப்படம் காண்பிக்கப்படுகிறது. 

இப்படியான ஆதரவை இனிமேலாவது எமது சமூகம் எம்மவர்களின் திரைப்படங்களுக்கு வழங்கவேண்டும். உலகத்தரம்மிக்க எம்மவரின் திரைப்படங்கள் மிக மிக சொற்பமானவர்களுடன் காண்பிக்கப்பட்டது மனதை நெருடியதாலேயே இதைக்கூறுகிறேன்.

உலகின் தமிழ்த் திரைப்படச் சூழலில் பேய்ப்படம் என்று அழைக்கப்படும் Horror film எடுப்பது என்பது படு ஆபத்தான ப்ராஜெக்ட் என்பதை அனைவரும் அறிவோம். அதையே நோர்வே தமிழ்ச் சூழலில் எடுத்தது, இயக்குனருக்கு தேவைக்கு  அதிகமான ”தில்” இருப்பதையே காட்டுகிறது. சோபாசக்தியின் விடுதலை இயக்கங்களுக்கு எதிராக சிறுகதைக‌ளைப்போன்று, சமூகத்தின் விருப்புக்களுக்கு எதிராக தன் படைப்பை நம்புபவர்களால் மட்டுமே இவறைறை சாதிக்கமுடிகிறது. இவர்களை ஏனோ எனக்கு பிடித்தும்போகிறது. படத்தின் முதலாவது வெற்றி இது.

எங்கள் சமூகத்து திரைப்பட ரசிகர்களை இரண்டு அல்லது முன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது; சாதாரண ரசிகன். இவர்கள் நுணுக்கமாக படத்தினை ஆராயாதவர்கள். படம் பிடித்திருந்தால் விசிலடிக்கும் ரகம் அல்லது திட்டுவார்கள். இரண்டாவது, முன்றாவது ரகமானவர்கள் படத்தின் நுணுக்கங்களை ஆராய்ந்து, ஒவ்வொறு Frame ஐயும் ரசிக்கும் கூட்டம், அது மட்டுமல்ல படத்தைப்பற்றி, தொழில்நுட்பங்களைப்பற்றி, கதையை, இசையை, ஒளிப்பதிவை, எடிடிங்ஐ உரையாடும், விவாதிக்கும் கூட்டம். 

முதலாவது ரகத்தினர் எமது சமூகத்தில் பெரும்பான்மை. இரண்டாவது, முன்றாவது ரகம் சிறுபான்மை. இப்படத்தை பார்த்தபின் மேற்கூறிய இருபகுதியினருடனும் உரையாடக்கிடைத்தது. முதலாவது ரகத்தினர் படத்‌தை ரசித்திருந்தனர். எனவே இதுவும் திரைப்படத்தின் வெற்றியே.
இரண்டாவது மூன்றாவது ரகத்தினர் பின்வருபவற்றினை பாராட்டினார்கள்.
  • நோர்வேயின் இளம் கலைஞர்கள‌ை முதன்மைப்படுத்தியது.
  • ஆற்றலுள்ள கலைஞர்களை அடையாளம் கண்டது.
  • கலைஞர்களின் ஆற்றலை வெளிக்கொணர்ந்தது.
  • பலரும் படம் எடுக்கத்துணியாத கருவை துணிந்து தொட்டது.
  • NT pictures நிறுவனத்தின் ஏனைய படங்களைவிட  இப்படத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் உண்டு.
  • திரைப்படத்தில் காணப்படும் வசனங்கள்.
இங்கும் பல வெற்றிகள் காணப்படுகின்றன. அதற்காக விமர்சனங்கள் இல்லை என்று இல்லை.


ஆனால் விமர்சனங்களை நாம் ஒருவித filter கண்களுடனேயே பார்க்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஒரு துறைசார் அனுபவற்ற சமுகத்தில் இருந்து வெளிவரும் படைப்பு இது. இதை ஹாலிவூட், கோலிவுட் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசமுடியாது, பேசவும் கூடாது. அவர்களிடம் உள்ள வளங்களை எம்மவரின் வளங்களுடன் ஒப்பிடவும்முடியாது. தவிர இப்படத்தில் பணியாற்றிய மனிதர்களின் உழைப்பையும், ஆர்வத்தையும் நாம் கடுமையாக கவனத்தில்கொள்ளவேண்டும். தவிர குடும்பங்கள் அனுபவித்த சிரமங்களையும் நாம் இலகுவாக மதிப்பிடலாகாது. படைப்பாளியின் குடும்பச்சுமை பற்றி நான் கூறத்தேவையில்லை. எத்தனை சமரசங்களை அவன் சந்திக்கவேண்டும் என்பதை படைப்பாளி மட்டுமே அறிவான்.

எனவே விமர்சனங்களை மேற்கூறியவற்றினை கருத்தில்கொண்டே முன்வைப்பதே நியாயமானது. அதேவேளை அனைத்து கலைப்படைப்புக்களும் விமர்சனங்களுக்கு உட்படுவதும், உரையாடவும், விவாதிக்கப்படுவதும் அவசியம். அப்போதுதான் அது கலைப்படைப்பாகிறது. நான் இத்திரைப்படத்தை இவற்றை அடிப்படையாகக்கொண்டே நோக்குகிறேன். எனவே இத்திரைப்படம் பற்றிய நுணுக்கங்களைப்பேசும் ஒரு உரையாடல் ஏற்படுத்தப்படவேண்டும் என்பது எனது அவா.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழர்களுக்கு என்று ஒரு திரைப்பட உரையாடற் சமூகம்  இருக்கிறது. அங்கு வளமான உரையாடல்கள் நடைபெறுகின்றன. அப்படியான நிகழ்வுகள் ஒஸ்லோவில் இல்லை. பல வருடங்களுக்கு முன் இதுபற்றி உரையாடிய சந்தர்ப்பங்களில், திரைப்படத்துறையில் உள்ள சில நண்பர்கள் அப்படியானதோர் உரையாடற் சமூகத்தினை ஒஸ்லோவில் ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆயினும் பல ஆண்டுகளான பின்பும் அவை இன்றுவரை சாத்தியப்படவில்லை என்பதே உண்மை. ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் மகிழ்வேன். எனது ஆதரவு நிட்சயம் உண்டு. ஒஸ்லோவில் உள்ள துறைசார் நண்பர்கள் இதனை கவனத்தில் எடுக்கவும்.

இனி படத்தில் எனக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்?
  • நடிகர்களின் தேர்வு.
  • அனுபவமற்ற நடிகர்களை நெறிப்படுத்திய விதம்.
  • இளையோரின் அசாத்திய நடிப்புத் திறமை. (சிரம்தாழ்த்திய வாழ்த்துக்கள்)
  • கதையின் கருத் தெரிவும், அதுபற்றிய துணிவும்.
  • ஆங்காங்கே மிளிரும் உரையாடல்கள்.
  • படத்தின் டைட்டில் காட்சிகள்.
  • ஆங்காங்கே மிளிர்ந்த இசை.
  • திரைப்படத்தின் முடிவு. (கண்ணடிக்கும் காட்சி தவிர்த்து).
  • ‌முற்றிலும் நோர்வே கலைஞர்களையும், விநயோகஸ்தர்களையும் நம்பியமை.
  • திரைப்படக்குழுவினரின் ஆர்வமும், அர்பணிப்பும்.
  • அரங்கத்தை நிரப்பிய எம்மவர்கள்.
நோர்வே தமிழ்பேசும் சமூகத்தில் இது குறிப்பிடத்தக்க ஒரு இடத்தை மேற்கூறிய காரணங்களினால் இத்திரைப்படம் பிடித்துக்கொண்டிருக்கிறது என்றே நம்புகிறேன். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்குள் வளர ஆம்பிக்கிறது.

இத்திரைப்படம் பல பெரும் கருத்துமுரண்பாடுடைய பல மனிதர்களையும் அவர்களின் கலையார்வம் என்னும் ஒரே நோக்கத்தினூடாக சேர்ந்தியங்கவைத்திருக்கிறது. இது மிகவும் வளமான சிந்தனையும், செய்கையும் ஆகும்.

கருத்துவேறுபாட்டையும் கடந்து, பொதுவெளியில் இருபகுதினருக்கும் பொதுவான ஒரு ‌நோக்கத்திற்காக சேர்ந்தியங்கும் பண்பு எம்மவர்களிடத்தில் இல்லை. இதை செய்கையில் காட்டியதற்காகவும் நாம் இவர்களை பாராட்டவேண்டும். இந்தப் பண்பினை எங்கள் மக்களமைப்புக்களை நடாத்துபவர்கள் கற்றுக்கொண்டால் எமது சமூகத்திற்கு அது பெரும் பயனளிக்கும்.

மிகுதியுள்ள நாட்களிலும் அரங்கத்தை நிரப்பி ஆதரவைத்தெரிவியுங்கள் நண்பர்களே. எங்கள் கலைஞர்கள். ஆதரவளிப்பது எமது கடமை.

அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .

நாட்டாமை தீர்ப்பை மாற்று


 நேற்று முன்தினம் எனது மூத்தமகள் என்னுடன் நிலத்தில் தூங்குவதாகவும், சின்னச் சிறுக்கி கட்டிலில் தூங்குவதாகவும் ஒப்பந்தமாயிற்று.

நான் தூங்கியும் போனேன். சாமம் எழும்பியபோது மகளைக் காணவில்லை. தங்கையின் கட்டிலில் இருவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

அன்பாக அக்காளையும் தன்னுடன் தூங்க அனுமதித்திருக்கிறாளே என்று மனது பெருமைப்பட்டது.

மீண்டும் தூங்கியும்போனேன்.

காலை பெருஞ் சத்தம் ஒன்று கேட்டது. என்னடா விடயம் என்று விசாரித்தால், தங்கை ஒரு உதை விட்டிருக்கிறாள். அக்காள் கட்டிலால் கீழே விழுந்துவிட்டாள்.

வழக்காடு மன்றத்திற்கு தலைவன் நானல்லவா. வழக்கு விசாரிக்கப்பட்டது.

இன்று கட்டிலில் தூங்குவது எனது முறை. இவ ஏன் இங்க வரணும் என்று செல்லத்தமிழில் வழக்காடிய அழகில் மயங்கிப்போனேன். தீர்ப்பு தங்கைக்கு சார்ப்பாக இருந்ததனால் அக்காள் இப்படிச் சொன்னாள்.

”அப்பா! உங்களாலதான் இவ்வளவு பிரச்சனையும்” என்றாள்

ஙே.... என்று முழுசியபடியே ...”எப்படியம்மா” ... என்று கேட்டேன்.

”நேற்றிரவு நான் படுத்திருந்து வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு ”குருவி” வந்து எனது கையில் நின்றது. என்றாள்.

”என்னது குருவியா” என்று கேட்டேன்.

”You know Appa, அது like a big butterfly so உங்களை எழுப்பினேன் நீங்க a dead man மாதிரி படுத்திருந்தீங்க, எழும்பல, அதுதான் அவட கட்டிலில் படுத்தேன்”, என்றபடியே நாட்டாமை தீர்ப்பை மாற்று என்பதுபோல கடுமையாய் என்னைப் பார்த்தாள்.

சரி சரி .. இப்ப அப்பம்மாட கட்டில்ல படுங்க என்று சமாளித்தபடியே வந்து அந்த "like a big butterfly"ஐ தேடினேன்.

மகளின் பாயின் அருகே ஒரு சற்று பெரிய ஈசல் கிடந்தது. அதுதான் அந்த "like a big butterfly".

பயமின்றி பாம்பைத் தூக்கி படம் எடுக்கிறாள். நேற்று ஒரு முதலைக்குட்டியை கையில் வைத்தும் படம் எடுத்தாள். 100மைல் வேகத்திலும் அதிகமாக தண்ணீரில் விரைவு ஸ்கூட்டர் ஓடுகிறாள். யாரும் ஒருமாதிரி பார்த்தால் ஆங்கிலத்தில் படுதூஷணத்தில் திட்டி சண்டைக்கு போகிறாள்....
பெருமையாயும், மகிழ்ச்சியாயும் இருக்கிறது.

ஆனால், எறும்புக்கும், ஈசலுக்கும் பயப்படுவதைதான் ஒரு அப்பனாக தாங்கமுடியாதிருக்கிறது.

----------------------------------
இவ்வருட விடுமுறையின்பொது நடந்த கதை

எனது சிறுக்கிகளின் ஒரு கூத்து

சிவனே என்று நிம்மதியாக சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தபடியே படுத்திருந்தேன். ஏகாந்தமான மனநிலை வாய்த்திருந்தது.

அப்போது Ohhh noooooooooo என்று இளையமகள் கத்துவது கேட்டது. சரி, அக்காவுக்கும் தங்கைக்கும் இடையில் போர் தொடங்கிவிட்டது என்று நினைத்தபடியே கண்ணைமூடித் தூங்க முனைந்தேன்.

Appamma, Do have ice cubes?என்பது கேட்டது. சரி, வெக்கை என்பதால் எதையோ குடிக்கப்போகிறாள் என்று நினைத்தேன்.

அப்போது Ohhh noooooooooo என்று மூத்தமகளும் கத்துவது கேட்டது.

அடியேய் சண்டைபிடிக்காதிங்கோ என்று சொன்னபோது ..
Appa, don't be silly என்று எரிச்சல்பட்டபடியே உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றாள் பெரியவள். அடங்கிப்போனேன்.

யாரோ நண்பிகள் தங்களை bucket challengeக்கு அழைத்ததனால்தான் இவர்கள் Ohhh noooooooooo என்று கத்தினார்கள் என்றும் கூறினார்கள்.

அதன்பின் தொடங்கியது கூத்து
அப்பா எழும்பு

அப்பம்மாவிடம் video camera இருக்கா?

I need a big towel

அப்பா, wakeup

என்று ஆரம்பித்து வீட்டை இரண்டாக்கிக்கொண்டிருந்தாள்கள்.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஙே .. என்று முழுசிக்கொண்டிருந்தேன்.
அப்பம்மா பேத்திகளின் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தார். 3ம் மாடி வீட்டுக்குவெளியே இரண்டு வாளிகள் நிறைய தண்ணீர் இருந்தது. இன்னுமொரு வாளிக்குள் அம்மாவிடம் குளிரூட்டியில் இருந்த அனைத்து ice cubes மற்றும் கொதித்து ஆறி நன்கு குளிரூட்டப்பட்ட நீர் 4 லீட்டர் என்று இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

”அப்பா! இதுகலை கீல கொண்றுபோங்கோ” என்று சுந்தரத் தமிழில் இளையவள் கட்டளையிட்டாள். நான் படுத்திருந்தேன். If you don't wakeup, I will punch you என்றாள். அவள் சொன்னதைச் செய்யக்கூடியவள். எனவே எழும்பினேன்.

வீதி வெளிச்சத்திலும், டோர்ச் லைட் வெளிச்சத்திலும் ஒருத்தியின் தலையில் இன்னொருத்தி ice cubes கலந்து குளிர்நீர் கலந்து தண்ணீரைக் கொட்டினார்கள். நான் வீடியோ எடுக்கப் பணிக்கப்பட்டேன்.

முதலில் அக்கா. குளிர் தண்ணீர் உடலில் பட்டதும் அவள் கத்திய கத்தலில் அனைத்துவீட்டு ஜன்னல்களிலும் தலை தெரிந்தது. நண்பர்களின் பெயர்களை கூறி ஏதோ challenge என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அதன் பின் தங்கையின் தலையில் அக்காள் ice cubes கலந்து குளிர்நீர் ஊற்ற அவளும் கத்தினாள். இவளும் நண்பர்களின் பெயர்களைக் கூறி ஏதோ challenge என்றாள்.

குளிருது என்று கத்தியபடியே மேலே ஓடினார்கள்.

நான் வாளிகள், டோர்ச் லைட், கமரா சகிதமாக 3 மாடி ஏறிவந்து வீட்டுக்குள் வருவதற்கு முன்பே

Appa, where is the laptop என்று கத்துவது கேட்டது. நான் களைத்துப்போயிருந்தேன். சாய்மனைக்கதிரையில் சாய்ந்துகொண்டேன்.
I am first, no no, I am first என்று சண்டை நடந்து அக்காள் முதலாவது என்று சமாதானமாகினர்.

அவர்கள் தலையில் தண்ணீரைக் கொட்டிய video வீடியோவை பதிவேற்றினார்கள். அதற்கு நான் video edit செய்து கொடுத்தேன்.
இருவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்துகொண்டிருந்தார்கள்.

மூத்தவள் அருகில் வந்து You are a cool Appa என்றாள். அதைக் கேட்ட கிழவி நான் கேட்டால் ஒன்றும் செய்யமாட்டான். பிள்ளைகள் கேட்டால் தலைகீழாக நிற்கிறான் என்றார்.

அதைக் கேட்ட இளையவள் அப்பம்மா நீங்க உங்கட அப்பாட்ட கேளுங்க அவர் செய்வார் என்றார். கிழவி சிரித்தாள். நான் சிரித்தேன். வீட்டில் இருந்த அனைவரும் சிரித்தோம்.

யாரிந்த bucket challengeஐ ஆரம்பித்தது? ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தைத் தந்த அந்த மனிதருக்கு பெரு நன்றி.

------------------------------------
இந்த வருட விடுமுறையின்போது நடந்த கதை

வாழ்க்கையை அழகாக்க ஒரு பின்னல் போதுமானது.

மகள்கள் இருவரும் மீண்டும் என்னுடன் தங்கியிருக்கிறார்கள். இளையமகள் வரும்போதே ”அப்பா எனது தலைமயிரைப் பாருங்கள்” என்றபடியே வந்தாள்.
சரி, ஏதோ நிறம் அடித்திருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளின் தலைமயிர் இடியப்பத்தைப்போல் சிக்கலாய் இருந்தது.

”என்னடி, இப்படி இடியப்ப சிக்கலாய் இருக்கிறதே” என்றேன்.

முகத்தை சுளித்தபடியே ”நீங்க சிக்கு எடுக்கணும். But நோகக்கூடாது” என்று கட்டளையிட்டாள்.


ஒரு கதிரையில் இருத்தி சிக்கு எடுக்க ஆரம்பித்தேன்.

”நீ விடு, உனக்கு ஒன்றும் தெரியாது” என்றபடியே வந்தாள், கிழவி.

எனக்கு கடுப்பாகிவிட்டது. ” அம்மா, அங்கால போங்கோ” என்றேன்.

கிழவி புதிதாய் ஒரு சீப்புடன் வந்து எனக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்து சிக்கெடுக்க ஆரம்பித்தாள்.

ஒரு முறாய்ப்பு முறைத்தேன்.

”சரி, நீ சிக்கு எடு, நான் பின்னிவிடுகிறேன்” என்று சமாதானத்திற்கு வந்தார்.

”நீங்கள் ஒரு பின்னல், நான் ஒரு பின்னல். யார் வடிவா பின்னுறது என்று பார்ப்போம்” என்றேன்.

”மொட்டையரின்ட பந்தயத்தை பாரன்” என்பதுபோல் என்னை ஏளனமாகப் பார்த்தபடிய, சரி என்றாா்.

அரைமணிநேர சிக்கெடுப்பின் பின்பு அம்மா அழகாகப் பின்னி ரிப்பனும் கட்டிவிட்டார்.

அம்மா பின்னிய பின்னலை கண்டதும் எனக்கு உள்ளூற உதறலெடுத்தது.

முன்பெல்லாம் தினமும் நான்தான் இரண்டு மகள்களுக்கும் பின்னுவேன். அது ஆறு வருடங்களுக்கு முன். அப்பா நோகாமல் தலை இழுத்து பின்னுவார் என்ற பெருமை எனக்கிருந்தது.

இளையவளின், தலைமயிரை முறுக்கி முறுக்கி இறுக்கமாகப் பின்னினேன். மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வந்தது.

”எங்க பார்ப்பம்” என்று வந்தாள் கிழவி.

வந்தவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

”எப்படியடா இவ்வளவு வடிவா பின்னுகிறாய்”என்று பாராட்டினார்.

சற்று நேரத்தின்பின் அக்காவிடம் தங்கை ”அப்பா இப்பவும் வடிவா பின்னுறான்” என்றாள் செல்லத் தமிழில்.

இந்த இரண்டு பாராட்டுக்களும் என்றை காற்றில் தூக்கிப்போகின்றன.

வாழ்க்கையை அழகாக்க ஒரு பின்னல் போதுமானது.
------------------------------------------

இந்த வருட விடுமுறையின்போது நடந்த கதை

ஒரு புடவையால் நான் பட்டபாடு

அம்மா வீட்டை கழுவித் துடைத்தபோது, வீட்டில் ஒரு புதிய புடவை இருந்திருக்கிறது.அதன் காரணமாக என்னைச் சுற்றி பெரும்புயல் அடிக்கிறது. புயல் மையம் கொண்ட இடம் அம்மா.

”இதை யாருக்கு குடுக்க வாங்கினாய்” என்று கேட்டபடியே என்னை வீடு முழுக்க கலைத்துக்கொண்டிருக்கிறார் அம்மா.

”ஓம்... அம்மா கேட்டபது சரிதானே, யாருக்கு வாங்கினீங்க அண்ணா” என்கிறாள் தங்கை.

அம்மாவிடம் உங்களுக்கு புது மருமகள் வரப்போகிறாள் என்கிறார், மச்சான்.
”டேய் மருமகன் சொல்லுறது உண்மையா?” என்று பயந்துபோய்க்கேட்கிறார், அம்மா.

”இல்லை அம்மா, அப்படி ஒரு நாசமறுப்பும் இல்‌லை” என்று தலையடித்து சத்தியம் பண்ணியிருக்கிறேன்.

என் ஒஸ்லோ முருகன் சத்தியமாக நான் அந்த புடவையை வாங்கவில்லை. அப்படி புடைவை வாங்கிக்கொடுக்குமளவுக்கு எனக்கு யாரும் இல்லை.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்னும் தீவீரவாதி நான். தவிர, புடவைக்கடை என்றாலே எனக்கு அலர்ஜி இருக்கிறது. அங்கு சென்றாலே இரத்தக்கொதிப்பும், தலைசுற்றும், வாந்திபேதியும் வரும்.

இரண்டு நாட்களாக அம்மாவின் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் எல்லா சாமிப்படங்களின் முன்பும் சத்தியம் பண்ணிவிட்டேன். அம்மா ஓய்ந்ததாய் இல்லை.

தங்கையிடம் நீ வாங்கினாயா என்றேன். இல்லை என்கிறாள்.

மச்சானும் அப்படியே.

அம்மா கடைக்கே போகவில்லை.

நானும் வாங்கவில்லை.

அப்ப எப்படி இந்த புடவை வீட்டுக்கு வந்தது என்று‌ யோசித்தபடியே நேற்று தூங்கினேன்.

சாமம்போல் பொறிதட்டியது ....

அம்மாவின பிறந்த நாளுக்கு வந்தவர்கள் அம்மாவுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு அது.

இப்போதெல்லாம் அம்மாவின் மறதி உலகப்பிரசித்தமானது.
”இருடி... விடியட்டும்” என்று கறுவிக்கொண்டிருக்கிறேன்.


இந்த வருடம் விடுமுறையின்போது நடந்த கதை இது

Watchtower திரைப்படம் - எனது பார்வை

அவ்வப்போது எதிர்பாராமல் சிறந்த படங்களைக் காணக்கிடைக்கும். அப்படித்தான் Watchtower என்னும் படமும். இது துருக்கிய நாட்டுப் படம்.

சமூகத்தின் பேசாப்பொருளாய் இருக்கும் கருக்களில் ஒன்றை மிக அழகாக ஆர்ப்பாட்டம் இன்றி படமாக்கியிருக்கிறார் இயக்குனரான Pelin Esmer.

படத்தின் வெற்றியே அதன் யதார்த்தம் நிறைந்த எளிமை, மிகைப்படுத்தப்படாத நடிப்பு முக்கியமாக கதையின் கரு.

வாழ்க்கை தந்த கசப்புக்களால் சுற்றாடலில் இருந்து விலகி வாழ்க்கையைத்தேடும் இரு மனிதர்களின் கதையே இந்தப் படம். விறுவிறுப்பு இல்லை. ஆனால் படத்தின் யதார்த்தம் எம்மைக் கௌவிக்கொள்கிறது.
திருமணமாக முன் கர்ப்பமுற்ற ஒரு பெண் பேருந்து ஒன்றில் கடமையாற்றுகிறாள். பெற்றோர் அவள் பாடசாலை விடுதியில் வாழ்கிறாள் என்றே நம்புகிறார்கள்.

அதே ஊருக்கு விபத்தில் தன் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்த ஒருவர் காட்டுஇலாகா அதிகாரியாக வருகிறார்.

அந்தப்பெண் தனது தாயிடம் சென்ற ஒருநாள் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று கூற தாய் மௌனத்தையே பதிலாகக்கொடுக்கிறார். அப்பெண் சீற்றத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

அவள் பேருந்தில் இருந்து வேலையைமாறி அதே நகரத்தில் ஒரு சிற்று+ண்டிச்சாலையில் வேலைசெய்யும் ஒருநாள் அவளுக்கு பிரசவ வலி எடுக்கிறது. காட்டுஇலாகா அதிகாரி இப்பெண் வலியுடன் சிற்றூண்டிச்சாலையில் இருந்து வெளியேறுவதை அவதானிக்கிறார். சற்று நேரத்தில் அவள் குழந்தை ஒன்றை பிரசவிக்கிறாள்.

குழந்தையை ஓரிடத்தில் மறைத்துவைத்த பின் அவள் அவ்வூரைவிட்டு வெளியேறுவதை அவதானிக்கும் காட்டிலாகா அதிகாரி அவளைப் பின்தொடர்ந்து செல்லும்போது அவள் பிரசவித்திருக்கிறாள் என்பதை கண்டுகொள்கிறார். அவள் மிகவும் சோர்வாக இருப்பதனால் தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று அவளுக்கு சிகிச்சையளித்தபின் குழந்தையையும் கண்டுபிடித்து அப்பெண்ணிடம் ஒப்படைக்கிறார்.

குழந்தையைப் பராமரிப்பதிலும் அப் பெண்ணைப் பராமரிப்பதிலும் அவர் உதவுகிறார். ஒருநாள் குழந்தையை விட்டுவிட்டு அப்பெண் தப்பிஓட, முயலும்போது அவர் அப்பெண்ணை தேடிப்பிடிக்கும்போது நடக்கும் உரையாடலில் தனது தாயாரின் அண்ணணால் பாலியல்துஸ்பிரயோகம்செய்யப்பட்டதால் உருவான குழந்தைஇது என்று அவள் கூறுகிறாள். காலப்போக்கில் அவர்களுக்கிடையில் ஒரு உறவு மலர்வதாய் படம் முடிவுறுகிறது.

சமூகத்தின் இருண்டதொரு பக்கத்தை மிகவும் அழுத்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

இப்படம் பல திரைப்படவிழாக்களில் பங்குபற்றியிருக்கிறது என்பது இப்படத்தின் தரத்தையும் சிறப்பையும் கூறுகிறது.

Raspberry Flavoredன் திருவிளையாடல்


நேற்றிரவு, அம்மாவுக்குத் தெரியாமல் Raspberry Flavored அருந்திவிட்டு, மோகன், நதியாவை நோக்கி ”மலையோரம் வீசும் காற்று” என்று பாடுவதை கேட்டபடியே, காற்றில் நடந்துகொண்டிருந்தேன்.

கணிணி சிணுங்கியது..

”அண்ணை ஸ்கைப்புக்கு வாங்கோ”, என்றான்” பேரன்புக்குரிய தம்பியொருவன்.

”இல்லையப்பு, அண்ணை கன நாளைக்கு பிறகு மந்தகாரமான மூட்ல இருக்கிறன்” என்றேன்

”அண்ணை விளையாடாதீங்க, முக்கியமான விடயம் கதைக்கணும், உடனவாங்க” என்றான்.

”நதியா பாடுறாள் பார்க்கவிடுடா” என்றேன்.

”You tube எங்கயும் போகாது, அது அங்கதான் இருக்கும். அதைவிட நீங்க நதியாவ பார்த்து உங்கட நெஞ்சு நிண்டுபோனால்... ” என்று பயமுறுத்தினான்.
ஸ்கைப்ல வந்தான்.

கதைத்தான்.

நானும் கதைத்தேன். என் முகத்தில் சற்று காற்று படப் பட நான் என்ன கதைத்தேன் என்பதோ, அன்புத் தம்பி என்ன கதைத்தான் என்பதோ, நதியாவுக்கு என்ன நடந்தது என்பதோ எல்லாமே காற்றில் எழுதியதுபோலாகியது.

Raspberry Flavoredஉம், கருவாட்டுப்பொரியலும் முடிந்து, வதக்கிய வெங்கயமும் முடிந்தபோது, நான், மேகங்களுக்குள் நடக்கும் ஆற்றலையும், ஒரு பொருள் இரண்டு, முன்றாகத் தெரியும் ஆற்றலையும் பெற்றிருந்தேன்.

தம்பியானவன், புத்தகம் சமுகம் வாசிப்புபற்றி எதையோ படு சீரியசாக சொன்னான் என்றே நினைக்கிறேன். நானும் அவன் பாடுகிறான் என்று நினைத்தபடியே அப்படியே அயர்ந்துவிட்டேன்.

தம்பி அயரவில்லை. அவன் அயரக்கூடிய ஆளுமில்லை.
இடையிடைய அண்ணை, அண்ணை என்று 10 முறை அழைப்பான். நான் 10வது முறை சற்று நனைவுதிரும்பி ” ம்... ம்” என்பேன்.

 ”அண்ணை முக்கியமாக விசயமண்ணை, கேளுங்கோண்ணை, வடிவாகக் கேளுங்கோ அண்ணை” தம்பி என்பான்.

நான் ம்..ம் என்றுவிட்டு என்னையறியாமலே தூங்கிவிடுவேன்.

இரவு 2 மணிபோல், திடீர் என்று நினைவுதிரும்பியபோது, என்னடா கணிணி குறட்டை விடுகிறதே என்று பார்த்தேன்.
 
ஸ்கைப் இயங்கிக்கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தம்பி களைத்து தூங்கியிந்தான்  இருந்தான்.


மன்னித்துக்கொள் ராசா!

எல்லாம் Raspberry Flavored திருவிளையாடல்..
யாவும் கற்பனையல்ல.

நாலாம் பிறையும் நாயலைச்சலும்

பல மாதங்களின் பின் நேற்று நிலக்கீழ் தொடரூந்தில் ஏறினேன். வெளியே இலையுதிர்காலத்தின் இருளும், குளிரும் குடிவந்திருந்தது.
நான் உட்கார்ர்ந்திருந்த ஆசனத்திற்கு பின்புறமான ஆசனத்தில் இரு ஆன்டிகள். ஆம் இலங்கைத் தமிழ்ப்பெண்கள். சற்றே வயது முதிர்ந்தவர்கள். நாற்பதுகளின் இறுதியில் இருக்கலாம் அவர்களின் வயது. மெதுவாய் பேசுவதை விரும்பாதவர்களாய் இருக்கவேண்டும்.

அவர்களின் உரையாடல் எனக்கு மிக நன்றாகக் கேட்கிறது.
ஊர்க் கதைகள், சரஸ்வதிப் பூசை, சுகயீனங்கள், சீட்டு என்று கதை சென்றுகொண்டிருந்தது.

வெளியே வானத்தில் பிறை மிக அழகாக இருப்பதைக் கண்ட ஒரு ஆன்டி மற்றவரிடம்:

”அங்க பாருங்க பிறை எவ்வளவு வடிவா இருக்குது”

மற்றையவர் பிறையைப் பார்க்காமலே ” நாசமாப் போச்சு, நாலாம் பிறை என்றால் நாயலைச்சல், அத பார்க்காதீங்கோ”

மற்றையவர் பலமாய் சிந்தித்தபின் தொடர்ந்தார்..
.
”எங்கட வீட்டிலயும் ஒரு நாலாம்பிறை இருக்கு”

”யாரைச் சொல்கிறீங்க”

”வேற யார்? என்ட மனிசன்தான்

அப்பிடியென்றால் என்ட வீட்டிலயும் நாலாம்பிறை இருக்கு... அது வெளியிலபோனா லேசில வீட்ட வராது. அலை அலையென்று அலைஞ்சு போட்டுதான் வரும்.

இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாகள்.
..
..
எனது காதுக்குள் வடிவேலுவின் ”ஆஹா” கேட்டது.

அபிநயாஞ்சலி 2014 - எனது பார்வை

இன்று அபிநயாஞ்சலி 2014 நிகழ்ச்சியை காணக்கிடைத்தது. மிகவும் ரசித்தேன். நோர்வே மாணவர்களின் திறமை மெருகேறியபடியே இருக்கிறது. ஒஸ்லோ இளையோருக்கும், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் ஒஸ்லோவில் பல அழகிய கலைநிகழ்வுகளைக் காணக்கிடைக்கிறது. மகிழ்ச்சி.

இது அபிநயாஞ்சலி 2014 பற்றிய எனது பார்வை. இது நடனம்பற்றிய துறைசார் நிபுணத்துவம் அற்ற ஒரு மனிதனின் பார்வை. எனவே நடனங்களின் சரி பிழைகளோ, சாஸ்திரநுணுக்கங்களோ இங்கு உரையாடப்படப்போவதில்லை. மாறாக என் மனதை கவர்ந்த, சிந்திக்கத்தூண்டிய, எழுதத்தூண்டிய விடயங்களை பகிரவே நினைத்திருக்கிறேன். உரையாடவிரும்புவோர் உரையாடற் விழுமியங்களுக்கு உட்பட்டு உரையாடலாம்.

தரமான மேடை, துறைசார் நிபுணர்களினால் (டெக்னீஷீயன்கள்) நிர்வகிக்கப்பட்ட ஒலி, ஒளியமைப்புக்கள் ஒரு நிகழ்வின் வெற்றிக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்று இன்றைய நிகழ்வு ஒரு உதாரணம். நேர்த்தியான, ஆர்ப்பாட்டமில்லாத மேடையமைப்பும் நிகழ்விற்கு சிறப்புசேர்த்தன. இருப்பினும் இதே மேடையலங்காரத்தை பலதடவைகள் கண்ணுற்றிருக்கிறேன் என்பதை மறைப்பதற்கில்லை.

ஒலிபரப்பாளர்களின் நேர்த்தியான தமிழும், நோர்வேமொழியும் கேட்பதற்கு இதமாகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருந்தது. கேதீஸ்வரனின் குரல் கம்பீர வசீகரமானது. அவரது நிகழ்ச்சித்தொகுப்பினை நான் காண்பது இதுவே முதற்தடவை. பரதநாட்டிய நிகழ்வுகளுக்கு என்று ஒஸ்லோவில் சில ஜாம்பவான்கள் உண்டு. கேதீஸ்வரனும் காலப்போக்கில் அவர்களுடன் சேர்ந்துகொள்வார் என்றே நினைக்கிறேன். போட்டி நிகழ்வினை நெறிப்படுத்திய நிதுலாவின் தமிழும் அழகு. நோர்வே குழந்தைகளின் தமிழக்கு நான் அடிமை. மெளனிஷாவின் நோர்வேமொழியானது மீனுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா ரகம்.

சம்பிரதாயமான வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. மாணவியரின் பயிற்சியின் பலனை மேடையில் காணக்கூடியதாய் இருந்தது.‌ தாண்டவ நடனமானது பரதம், மோகினியாட்டம், கதக் என்ற நடனவகைகளை உள்ளடக்கி வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. பலரும் இந் நடனத்தை ரசித்தார்கள் என்றே கருதுகிறேன். கரகோஷம் அதையே கூறியது. ஆடையலங்காரங்களும் நேர்த்தியாக இருந்தன. குழந்தைகளின் அசைவுகளும், நகர்வுகளும் சமச்சீராகவும் ரசிக்கத்தக்கனவாகவும் இருந்தன. சாதாரண ரசிகர்களின் மனதைக்கவர்ந்த நடனம் இது.

கண்ணண் வருகை“இன் குட்டிக் கண்ணண்கள் நிகழ்வினை அழகாக்கினார்கள் என்றே கூறவேண்டும். அத்துடன் கண்ணண் நின்றிருந்த தேர் நகர்ந்த காட்சியமைப்பும் அழகு. உடை மற்றும் உருவ அலங்காரங்கள் ஒரு நிகழ்வின் தரத்தை மேற் தளத்திற்கு நகர்த்துவதற்கு முக்கியமானவை. இப்போதெல்லாம் நாம் இப்படியான நுணுக்கங்களில் அதிக கவனத்தையும், நேர்த்தியையும் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறோம். அது மகிழ்ச்சிக்குரியது.

பிரிவுத்துயரை கூறும் ஒரு பாரதியின் பாட்டிற்கு தாலாட்டு அபிநயம் ஏன்? அவற்றிற்கான தொடர்பு என்ன? நான்தான் அதை பிழையாக விளங்கிக்கொண்டேனோ நானறியேன். தவறு எனின் மன்னித்துக்கொள்ளுங்கள்.

போட்டி நிகழ்வுகளில் முடிவுகனளப் பற்றிய சர்ச்சைகள் வராதிருந்தாரல்தான் ஆச்சர்யம். வெற்றி தோல்வியை அனைவராலும் ஒரேவிதமாக ஏற்றுக்கொள்ளமுடிவதில்லையே. முக்கியமாக பெற்றோருக்கு.

கடந்த ஆண்டின் போட்டிகளின்போது தோல்வியுற்ற மாணவியின் அழுகை இந்த ஆண்டு வெற்றியின் அழுகையாக மாறியிருந்தது. தோல்விகளையும் வெற்றிகளாக மாற்றலாம் என்பதை நினைவூட்டியது இச்சம்பவம்.

நாட்டிய நாடகத்தின் ஆரம்ப காட்சியமைப்புகள் அழகாக இருந்ததை நான் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். கல்யாணத்தின்போது ஒரு பெண் மணமக்கள், நண்பர்களுடன் Selfie எடுப்பது போன்ற காட்சியை மிகவும் ரசித்தேன். இன்றைய யதார்த்தம் அது.

நாட்டிய நாடகம் என்று அறிந்ததும் நான் மகிழ்ந்ததென்னவோ உண்மைதான். நாட்டிய நாடகம் நான் எதைக் கருதினேன் என்று கூறியபின் தொடர்வதே சிறந்தது என்று நினைக்கிறேன். அதற்கு முன், இன்றைய நாட்டிய நாடகத்தின் கருவைக்கொண்ட Theme dans  ஒன்றினை நடன ஆசிரியை மேரி ஒளிவிழா ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் செய்திருந்தார் பதிவுசெய்கிறேன். ஒரு கருத்தை பலவிதங்களில் செய்வதொன்றும் தவறில்லை. மூலக்கதை ஒன்றாக இருப்பதாலேயே இதை இங்கு குறிப்பிடுகிறேன்.

பரதநாட்டிய அசைவுகள், அபிநயங்கள், வசனங்களின் அடிப்படையிலான ஒரு நடன நாடக நிகழ்வு என்றே நினைத்தேன். அதனாலோ என்னவோ என்னால் நாட்டிய நாடகத்துடன் ஒன்ற முடியவில்லை. அதுமட்டுமல்ல என்னைப்பொறுத்தவரையில் நாட்டிய நாடகத்தின் கதை நகரும் பாகங்களின் முக்கியதுவத்தை அறிந்து அதற்கேற்ப காட்சிகளை, நடனங்களை, கதையின் கனத்தை காண்பிக்கவேண்டும் எனக் கருதுபவன் நான். இந்த நடனத்தை போன்ற நடனவகைகளை நாட்டிய நாடகம் என்று கூறாமல் Theme dans என்றால் அது பொறுத்தமாயிருக்கும் என்றே நினைக்கிறேன். உதாரணமாக மானாட மயிலாட நிகழ்ச்சியில் இவ்வாறான Theme dans நடைபெறுவதைக் கூறலாம்.

இன்றைய நாட்டிய நாடகத்தின் கரு ”பெற்றோர்களின் பிரிவினால் குழந்தைகள் படும் அவலம்”. சிறந்ததொரு கரு. இது புலம்பெயர் சமூகத்தின் சாபங்களில் ஒன்று. நாட்டிய நாடகம் பற்றி, நிகழ்வின்பின், நண்பர்களுடன் உரையாடிபோது பிரச்சனைக்கான தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்று வாதம் வந்தது. எனனைப்பொறுத்தவரையில் பிரச்சனையை சமூகத்திடம் கொண்டுசெல்வதும் முக்கியமானதென்பேன். அதைத்தான் மாணவியரும் செய்திருந்தார்கள்.

ஆனால் நாட்டிய நாடகத்தின் ஆரம்பகாட்சிகளான காதல், அதன் பின்னான திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறத்தல், வளர்தல்பற்றிய காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவமும், சினிமா பாணியும், நேரமும், மிகச் சிறப்பாக இருந்தாலும் கதையின் அதி முக்கிய கருவான ”பாதிப்புறும் குழந்தையின் மனநிலை”க்கு என்னும் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஆரம்பக்காட்சிகள் கதையின் கரு அல்லவே. கதையின் கரு முக்கியத்துவம் பெறும் இடம் நாட்டிய நாடகத்தின் இறுதிப்பாகமே.

எனவே அப்பகுதி அதிக கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கவேண்டும் என்பது எனது கருத்து. இந் நாட்டிய நாடகத்தை ஒரு தராசில் இடுப்பார்த்தால் கதையின் கரு இருக்கும் பாகம் கனம் குறைந்திருப்பதாகவே தோன்றும். இதனாலே என்வோ எனக்கு நாட்டிய நாடகத்துடன் ஒன்றிப்போக முடியவில்லை. தாலியைக் களற்றி கணவனின் முகத்தில் எறிந்ததை பலரும் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள் என்பது முரண்நகை.

நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய ராதா சர்மாவின் உரையானது இடம், பொருள், ஏவல் உணர்ந்த மிகவும் பண்பட்ட, இளையோராலும் புரிந்துகொள்ளக்கூடிய ‌மொழியிலான உரை. அவர் ஒரு தலைசிறந்த நடன ஆசிரியர் என்பதை அவரது உரை காட்டிற்று.

சுயம்பு ஹரிகரனின் வாய்பாட்டு அருமை. ஒஸ்லோவில் அவர் இருப்பது எமக்குப்‌ பெருமை. இன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் முக்கிய கவனத்தைப்பெற்றவர்கள் இசையை வழங்கிய எமது இளையோர்கள். இவர்களில் பலருடன் திறமையை இவ்வருடம் நோர்வே தமிழ்ச் சங்கம் நடாத்திய கர்நாடக இசைக்கச்சேரியில் கண்டிருந்தேன். சிறப்பாகவும், விரைவாகவும் வளரும் கலைஞர்கள் இவர்கள். இவர்களுக்கு பெரியதொரு பாராட்டு என் சார்பில். இவர்களுள் மெய்சிலிர்க்வைக்கும் பிறவிக் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

ஒரு சிறு குசும்பு:   :)
குத்துவிளக்கேற்றல் நிகழ்வில், பலவருடங்களின் பின் ஒஸ்லோவின் முக்கிய தமிழ்பிரமுகர்கள் ஒரே மேடையில் தோன்றியதை காணக்கிடைத்தது. அரசியல், கால, சூழ்நிலை மாற்றங்களின் அறிகுறியா இது? அதுவும் மகிழ்ச்சியானதே. காலம் பதில்கூறட்டும்.

பிரதமவிருந்தினர் ஒருவரின உரை என்பது ஒரு நிகழ்வின் முக்கிய உரையாகக் கருதப்படும். ஆனால் நேற்றைய நிகழ்விற்கு திருஸ்டி கழிப்பதற்காகவே பிரதமவிருந்தினரும், கொளரவ விருந்தினரான லண்டன் ஆசிரியையும் உரையாற்றினார்கள் என்றே நினைக்கிறேன். இதைவிட மிச்சிறப்பாக சமூகம் சார்ந்த கலை, சார்ந்த பிரக்ஞையுடன் உரையாற்றக்கூடியவர்கள் இங்கு இருக்கிறார்களே. இவ்வளவு அழகான நிகழ்வில் இவ்வளவு மோசமான, தவறான உள்ளடக்கமுள்ள உரைகள் தேவைதானா?

ஒருகேள்வி: ஏன் அனைத்துக் கலைக்கூடங்களும் அதிகமாக இந்துமதத்தின் புராணக்கதைகளை மட்டுமே  நடனங்களாக மாற்றுகிறார்கள்? இது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் பொருந்தும். நடனமாட வேறு கருக்களே இல்லையா? அல்லது இது எமது கற்பனை வறட்சியைக் சுட்டிக் காட்டுகிறதா?

இனி எழுதப்போகும் விடயம் சர்ச்யைத் தரலாம். அச்சர்ச்சை ஒரு வளமான உரையாடலாக மாறும் எனின் மகிழ்வேன்.

இலண்டன் நகரத்தில் இருந்து வந்திருந்த சிறப்புவிருந்தினர் உரையாற்றியபோது ”இந்த பட்டமளிப்பு விழாவானது பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவுக்கு சமனானது என்ற தொனியில் கூறினார். இக்கூற்று எந்தவிதமான சமிக்ஞைகளை குழந்தைகளுக்கும், சமூகத்துக்கும் கொடுக்கும் என்பதை அவர் அறியாமலா அவ்வாறு உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் ”இல்லை, எமது பட்டமளிப்பினை  பல்கலைகழக பட்டமளிப்புடன் ஒப்பிடுவது தவறு என்று கூறியிருந்தாலாவது அவ்வுரையின் தவறும் அதன் தாக்கமும் குறைந்திருக்கும். ஆனால் எவரும் மறுத்துரைக்காதது இப்போது நிகழ்சியின் பொறுப்பாளர்களும் அதே கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தையல்லவா தருகிறது?

இந்தக் குழந்தைகளின் நடனம்பற்றிய கல்வியை நாம் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழாவுடன் ஒப்பிடலாமா? மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி அங்கு இருக்கிறதே. பல்கலைக்கழக்கல்வி என்பது  எத்தனை ஆழமானது, விரிவானது. ஏறத்தாள 3 - 4 ஆண்டுகள் முழுநேரமாக, ஆய்வுகள், விரிவுரைகள், பெரும் பரீட்சைகளின் பின் கிடைப்பதே பல்கலைக்கழகப் பட்டமும், பட்டமளிப்பும். அதிலும் முதுமானிப் பட்டம், கலாநிதிப் பட்டம் என்றால் அவற்றின் கனம் வேறு.

அப்படிப்பட்ட பட்டமளிப்புடன் இக்குழந்தைகளின் பட்டமளிப்பை ஒப்பிடுவதும், அவை இரண்டும் ஒரே தகுதியுடையவை என்னும் தொனியில் உரையாற்றுவ‌தும் குழந்தைகளின் மனதிலும், பெற்றோர்கள் மனதிலும்  தேவைக்கு அதிகமான எண்ணங்களை வளர்க்காதா? நான் கற்றுத்தேர்ந்துவிட்டேன் என்ற எண்ணத்தையும் துளிர்க்கவைக்காதா? ஆங்காங்கே தலைக்கனத்தையும் தராதா? இது வளமானதா? இவற்றிற்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

புலம்பெயர் நாடுகளில் பரதக்கலையை கற்பது இலகுவல்லை. கற்பதை பாராட்டுவது அவசியம். ஆனால் இப்படியான போலியான புகழ்ச்சிகளும், பேச்சுக்களும், செயல்களும் எமது கலையின் தரத்தினை உயர்த்துமா? கலையின் தரம் என்பதில் எப்பொழுதும் சமரசம் இருத்தலாகாது. அவ்வாறு செய்யப்படும் சமரசங்கள் கலையின் வளர்ச்சிக்கு தடங்கலாகவே இருக்கும் என்பதை நாம்எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்.

குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்காக பட்டங்கள் வளங்கப்படுகின்றன என்றே நான் எண்ணுகிறேன். எனவே அப்பட்டங்களை பல்கலைக்கழப்பட்டங்களுடன் இணைத்து சிந்திப்பதும், உரையாற்றுவதும், எம்மை நாமே குழப்பிக்கொள்ளுவதும் எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளவதற்குச் சமம்.

இவரது உரையானது மிகவும் மலிமானதாகவே இருந்தது. அவரது பல கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை. உரையில் போலித்தன்மை அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது.
பிரபல மற்றும் பல ஆண்டு அனுபவமுள்ள ஆசிரியர், லண்டன் ஓரின்டல் பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர் இவ்வாறு உரையாற்றியது ஆச்சயர்மாகவும், வேதனையாகவும், துக்கமாகவும் இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் நாம் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஆனால் எனது அனுபவத்தின்படி முகஸ்துதி செய்பவர்கள் நண்பர்களாகவும், விமர்சனத்தை முன்வைப்பவர்கள் எதிரிகளாகவும் நினைக்கும் சமூகம் எம்முடையது. போலியான முகஸ்துதியில் எனக்கு ஏற்பில்லை. அது வளமற்றது என்பதில் அதீத நம்பிக்கையுடையவன் நான்.

ஆனால் உரையாடலில் நம்பிக்கையுள்ளவன்.

தோழமையுடன்
சஞ்சயன்