அம்மா எழுதிய தொல்காப்பியம்


அம்மாவின் அட்டகாசங்கள் - 06

******
அப்பா எனக்கு தமிழ் வராது என்று முடிவெடுத்திருக்கவேண்டும். அவர் எனக்குத் தமிழ் கற்பித்ததே இல்லை. புத்திசாலி.

பெற்ற கடனுக்காக அம்மாதான் எழுத்தறிவித்தார்.

«பார்த்தேன்» என்பதை «பார்தேன்» என்று எழுதும்போதெல்லாம் «டேய், த்தன்னாவை மறக்காதே» என்று அழகாக உச்சரித்து அதைத் திருத்துவார். ஈசாப்புநீதிக்கதைப் புத்தகத்தில் இருந்து பந்திகளை எழுதவிடுவார்.

அம்மாவின் கையெழுத்து அச்சுப்போன்றது. அதைப்போன்று நானும் எழுதவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டது எனது தவறு அல்ல. அப்பாவுக்கும் எனக்கும் சுந்தரத்தமிழில் இருந்த ஒரே ஒரு ஒற்றுமை இருவரினதும் கோழிக்கிறுக்கல்தான்.

நான் பலகாலம் விடுதியில் தங்கியிருந்து படித்தேன். அப்போது அம்மாவுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருதடவை «வந்து என்னை அழைதுப்போங்கள்» என்று கடிதம்போடுவேன். அந்த அழைத்துப்போங்களில் த்தன்னா இருக்காது. அதை பதில்க் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பார் அம்மா.

அம்மாவின் பின் என் தமிழாசான் எங்கள் ஈஸ்வர சர்மா சேர். அவரும் தலைகீழாக நின்று பார்த்தார். அவராலும் அடியேனின் எழுத்துப்பிழைகளைத் திருத்தமுடியவில்லை.

2009இல் அவரைப்பற்றி எழுதிய ஒரு பத்தியை யாரோ அவருக்குக் காண்பித்திருக்கிறார்கள். எனக்குத் தொலைபேசி எடுத்து «எக்கச்சக்கமான எழுத்துப்பிழை» என்று பாராட்டினார்.

சரி, இன்றைய அம்மாவின் அட்டகாசத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது. வாருங்கள் அந்தக் கதைக்குள் போவோம்.

குசினிக்குள் பெருஞ் சத்தம் கேட்டது. அம்மா சண்டைபிடிக்கும் ஆள் இல்லையே என்று நினைத்தபடியே கட்டிலால் எழும்பிவந்தேன். «ய் யன்னா எங்கே, ஒற்றைக்கொம்பு எங்கே» அதை யார் எடுத்தது என்று அம்மாவின் குரல் கேட்டது. குரல் சற்று சூடாகவும் இருந்தது.

என்னடா வில்லங்கம் இது. அம்மா யாருடன் கதைக்கிறார் என்று மெதுவாய் எட்டிப்பார்த்தேன்.

அம்மாவுக்கு உதவி செய்பவர் ஒருவர் நின்றிருந்தார். அவர் அதிகம் படிப்பறிவில்லாதவர். அம்மா தனக்குத் தேவையான பொருட்களைக் கூற, இவர் பட்டியலில் எழுதிக்கொண்டிருந்தார்.

அம்மா அவருக்கு «தேங்காய் எண்ணை» வாங்கவேண்டும் என்று கூற, அதை அவர் அதை «தேங்கா என்னய்» என்று எழுதியிருந்தார் என்று பின்பு அறிந்துகொண்டேன்.

இங்குதான் அம்மாவுக்கும் அவருக்குமாக பிரச்சனை தொடங்கியிருக்கிறது.

‘இப்படி பிழை பிழையாக எழுத ஏலாது’ இது மாணிக்காத்தாரின் 84 வயதுப் புத்திரி


‘--------’ தலையைச் சொறிகிறார் உதவியாளர்

‘எத்தனை தரம் சொல்லித் தந்திருக்கிறேன்’ என்று குரலை உயர்த்துகிறார் அம்மா.

உதவியாளர் இப்போதும் தலையைச் சொறிகிறார்.

நான் கூத்துப்பார்ப்பதற்காக ஒளிந்து நின்றுகொண்டேன்.

‘தேங்காய் எண்ணைய்க்கு ய்யன்னா வரவேணும், எண்ணை மூன்று சுழியுடன் எழுதவேணும் சரியா?

விளங்கியதா? இப்ப எழுதுங்க பார்ப்போம்’ என்றுவிட்டு பக்கத்திலேயே நின்றுகொண்டார்.

அவர் அம்மாவை பரிதாபமாக பார்த்தார். அம்மா தேங்கா… ய் எ….ண்…ணை.. ய் என்று அறுத்து உறுத்து உச்சரிக்கிறார். ண் ணண்ணாவை அழகாக நாக்கை உள்நோக்கி மடித்து உச்சரிக்கிறார்.

அவர் மீண்டும் பிழையாக எழுத… அம்மா திருத்த என்று ஐந்து நிமிடம் பெருங்கூத்து நடக்கிறது.

இப்போது அவரை அம்மா சரியாக எழுதவைத்துவிடடார்.

இப்போது உதவியாளர் ‘அம்மா, வேறு என்ன வேணும்’ என்று அவர் கேட்டபோது…. இந்த ஆள் பொல்லு கொடுத்து அடிவாங்குகிறாறே என்று அவருக்காக பரிதாபப்படத்தான் முடிந்தது.

«அங்கர் பால்மா» என்றார் அம்மா.

இந்த இடத்தில் உதவியாளரின் விதி அவரைப்பார்த்து பெரிதாய் சிரிக்கத் தொடங்கியது.
‘எழுதுங்க’

‘இல்லை அம்மா, அது நினைவில இருக்கு அம்மா’ இது அவர்.

ஆனால், அம்மா விடுவதாக இல்லை.

‘இல்லை, நீங்க மறந்துவிடுவீங்க’. அ..ங்..க..ர் என்று ஆறுதலாக உச்சரித்து எழுதுங்க என்றார்.

அவர் ‘அன்கர’ என்று சுந்தரத் தமிழில் எழுத.. அம்மா ‘என்னது அன்கர் ஆ? A..n..c..h..o..r என்று ஆங்கிலத்தில் உச்சரித்தபோது அவர் அழுவதுபோன்று அம்மாவைப் பார்த்தார்.

எனக்கு இருந்த பயமெல்லாம் எங்கே இந்தக் கிழவி அவரை ஆங்கிலத்தில் எழுதச்சொல்லிவிடுவாரோ என்பதுதான்.

அப்படி அழிச்சாட்டியம் பண்ணினால் இடையில் புகுவது என்று நினைத்தபோது அம்மாவிற்கு தாகமெடுத்தது. தண்ணீரைத் எடுத்து குடித்துவிட்டு நிமிர்ந்தார்.

இப்போது நான் குசினி வாசலில் நின்றேன். அம்மா உதவியாளரைப் பார்த்து இவனுக்கு தமிழ் படிப்பித்தது நான்தான் என்றார்.

அவர் என்னை பெரும் தமிழ் மேதாவி என்று நினைத்திருக்கக்கூடும். அவரின் அந்த ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை. அம்மாவும் நான் இப்போது பிழைவிடாது எழுதுகிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பார்.

சீத்தலைச்சாத்தனார் போன்ற ரோசக்காரன் நானில்லை என்பது அம்மாவுக்கும் தெரியாது, அம்மாவின் உதவியாளருக்கும் தெரியாது.

#அம்மாவின்_அட்டகாசங்கள்

செத்தான்டா முனா



அம்மாவின் அட்டகாசங்கள் - 05


******


நேற்று மாலை அம்மாவுடன் ஒரு சிறு நடைப்பயணம் செல்வதற்கு முன் வீட்டிற்கு என்ன என்ன தேவை என்று ஒரு பட்டியல் எழுதினார்.

ஊதுபத்தி
நெருப்பெட்டி
இட்டிலி மா
சிக்னல் பற்பசை


அந்தப் பட்டியலை நான் எடுத்துக்கொண்டேன். வீட்டில் இருந்து 20 மீற்றருக்குள் இருக்கிறது அம்மாவின் ஆஸ்தானக் கடை.

கடையின் முதலாளியை நான் இந்தக் கதையில் «முனா» என்றே அழைக்கவிருக்கிறேன் என்பதை அறிக.

அம்மாவின் ஆஸ்தான கடையின் முனா, அம்மாவைக் கண்டதும் ‘அம்மா, வாங்கோ. உங்களைக் கன நாட்களாகக் காணவிலலை’ என்றார்.

அம்மாவின் காதுகளில் அவரின் கதை விழவில்லை.

முனாவிற்கு அம்மாவையும், அம்மாவின் பீ.ஏ ஆகிய எனது மருமகளையும்;, அம்மாவிற்கு உதவிசெய்பவர்களையும் நன்கு தெரியும். நான் அம்மாவின் மகன் என்பது மட்டும் அவருக்குத் தெரியாது.

அம்மா, என்னைப் பார்த்து ‘என்ன வாங்கவேண்டும் என்று எழுதிக்கொண்டுவரவில்லை மறந்துவிட்டேன்’ என்றபடியே யோசித்துக்கொண்டிருந்தார். அம்மா தான் எழுதிய பட்டியலை மறந்துவிட்டார் என்பதை உணர்ந்துகொண்டேன்.

‘அம்மா, என்ன வேணும்’ இது முனா.

‘ஊதுபத்தி, நெருப்பெட்டி, இட்டிலி மா, சிக்னல் பற்பசை’ என்றேன் நான்.

‘இது மட்டும்தானா அம்மா’ இது முனா

இப்போது கடைக்குள் ஒரு தம்பதிகள் வருகிறார்கள்.

‘அய்யா, அம்மாவின் கணக்கைச் சொன்னால் பணம் தரலாம்’ என்றேன்,

கணக்கை எழுதினார். 401 ரூபாய் வந்தது. பணத்தை எண்ணி அவர் கையில் கொடுப்பதற்கு முன், அவர்...

அம்மாவைப் பார்த்து ‘அம்மா, சிக்னல் பற்பசை சிறியதா? பெரியதா? என்றார்.
‘பெரியது’ என்றார் அம்மா.

இப்போது முனா கடைக்குள் வந்த தம்பதியினருக்கு பொருட்களை எடுத்துக்கொடுத்தார்.

அம்மா, முனாவிடம் ‘தம்பி, ஒரு லக்ஸ் சோப் வேணும்.’

‘சரி, அம்மா’ என்றுவிட்டு தம்பதிகளின் கணக்கை முடித்து அனுப்பினார்.

மேசைக்கு லக்ஸ் சோப் வந்தது. விலை 401 இல் இருந்து சற்று அதிகரித்தது.

அய்யா கணக்கைச் சொல்லுங்கள் என்று நான் வாயை மூடவில்லை

அம்மா ‘நல்ல உழுந்து இருக்கிறதா?’ என்றார்.

ஒரு கிலோ உளுந்து மேசைக்கு வந்தது.

‘அம்மா நல்ல அரிசி’ இருக்கிறது என்று முனா ஒரு அரிசி மூட்டையை அம்மாவிற்குக் காட்டினார்

‘அரிசி ஒரு கிலோ’ என்றார் அம்மா. அதுவும் மேசைக்கு வந்தது.

இப்போதும் முனா கணக்கை முடிப்பதாய் இல்லை.

இதற்கிடையில் அம்மா, பினாயில் (pynol) தேவை என்றார். அதுவும் மேசைக்கு வந்தது.

முனா இப்போதும் கணக்கை முடிப்பதாய் இல்லை.

எனக்கு உள்ளுற சற்றுச் சூடாகத்தொடங்கியது.

‘அம்மா, வாங்கோ போவோம் என்றேன்’

‘தம்பி ஒரு பாண் வேணும்’ என்றார் அம்மா.

பாணும் வந்தது.

பயறு, கடலை, இன்னொருவிதமான சவர்க்காரம், நீலம் என்று அம்மா கடையையே விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தார். முனா கடைக்குள் பம்பரமாய் சுளன்றபடி புதிய புதிய பொருட்களை அம்மாவுக்கு காட்டினார். அம்மாவும் வாங்கினார்.

வீட்டுக்கு அவசியமானவையாக்கும் என்று நானும் எதுவும் பேசவில்லை.

இப்போது அம்மா மீண்டும் அரிசி ஒரு கிலோ என்றார்.

இப்போதும் முனா அதே அரிசியை மேசைக்கு எடுத்துவந்தார்.

அப்போதுதான் எனக்கு முனாவின் விளையாட்டுக்களின் அற்புதம் புரிந்தது.

‘இந்த அரிசி வேண்டாம்’ இது நான்.

‘அம்மா அரிசி வேண்டாமோ’ என்றார் முனா

‘வேணும்’ இது அம்மா

நான் கண்ணால் முனாவை எரித்தேன்.

முனா அதையும் கணக்கில் எழுதினார்.

அம்மா கடையையே வாங்குவதில் மும்மரமாய் இருந்தார்.

‘அம்மா, வாருங்கள் போவோம் என்று அழைத்தேன்.

முனா ‘அம்மா, பால்மா வாங்கேல்லயோ’ என்றார்.

‘ஓரு அங்கர் பால் பெட்டி’ என்றார் அம்மா.

எனது இரண்டு காதாலும் புகைந்தது.

முனாவைப் பார்த்துக் கடும் கறாரான குரலில் ‘இது காணும். பில்லைத் தருகிறீரா, இல்லை இவ்வளவு சாமானையும் உள்ளே எடுத்துவைக்கிறீரா’ என்று அம்மாவிற்கு கேட்காத குரலில் கூறினேன்.

முனா கல்குலேட்டரைவிட வேகமாக இயங்கினார். அய்யா இந்தாருங்கள் 1930 ரூபா வருகிறது என்று பற்றுச்சீட்டை நீட்டினார்.

பணத்தைக் கொடுத்தேன்.

பின்புறத்தில் “சஞ்சயன்.. நாளைக்கு தோசை செய்து தருகிறேன். தோசைமா வாங்கவேண்டும் என்றார், அம்மா.

முனா தோசை மாவை எடுத்தார். கண்ணால் எரித்தேன் அவரை.

‘அம்மா, நாளைக்கு நான் விரதம் என்றுவிட்டு அம்மாவை இழுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

‘என்ன விரதமடா’ என்றார் அம்மா.

‘ஓஸ்லோ முருகனுக்கு விரதமிருக்கிறேன்’ என்றேன்

‘யாரடா அது’ என்றார் அம்மா

வீடு வந்தோம்.

வீட்டினுள் வந்து உட்கார முன் மருமகள் தொலைபேசியில் வந்தாள்.

‘மாமா, எங்கே போயிருந்தீர்கள்?

‘கடைக்கு’

‘எந்தக் கடைக்கு?’

‘முனாவின் கடைக்கு’

‘அய்யோ மாமா, நேற்றுத்தானே ஒரு மாதத்திற்குரிய பொருட்களை வாங்கிக் கொடுத்தேன்’ என்றாள்

செத்தான்டா முனா.






#அம்மாவின்_அட்டகாசங்கள்

அம்மா ஒரு அற்புதமான கதைசொல்லி

அம்மாவின் அட்டகாசங்கள் - 04
******
ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் வரும்போது ஒரு புத்தகத்தோடு வருவதுண்டு.

அன்னா கரீனினா, ராமகிருஸ்ணன் கதைகள் என்று அளவில் பெரிய புத்தகங்களாக இருந்திருக்கின்றன அவை.

அப்புத்தகங்களைக் கண்டதும் ”எனக்குத் தா. நான் வாசிக்கவேண்டும்” என்று வாங்கிக்கொள்வார்.

இம்முறை ஓரான் பாமூக் இன் “பனி“ எடுத்துவந்தேன்.
இன்று அம்மா அதைக் கண்டார், எடுத்தார், தலைப்பை இருதடவைகள் வாசித்தார், நோபல்பரிசு பெற்ற நாவல் எனக்குத்தா, வாசிக்கவேண்டும் என்றிருக்கிறார்.

”முதல் தந்த புத்தகங்களை வாசித்துவிட்டீர்களா” என்றேன்.

“என்ன புத்தகம், எப்போ தந்தாய்?“ என்று மிகப்பிரபல்யமான கேள்விகளால் மடக்கினார்.

ஒரு அலுமாரினுள் பல புத்தகங்களுக்கு கீழ் இருந்து அன்னா கரினீனாவையும், எஸ். ராவையும் மீட்டு எடுத்து அம்மாவிற்கு காட்டினேன்.

அதையும் தா வாசிப்போம் என்று வாங்கி வைத்திருக்கிறாள் கிழவிச் செல்லம்.

தங்கைக்கும் எனக்கும் வாசிக்கும் நல்நோய் தொற்றியது அம்மாவினால்தான். உண்ணும்போதும் அவருக்கு வாசிக்கவேண்டும். இப்போதும் காலையில் குறைந்தது இரண்டு பத்திரிகைகளை மேய்வார்.

தம்பிக்கும் எனக்கும் அவர் வாசித்த கதைகள் ஏராளம். அம்மா அருமையான ஒரு கதைசொல்லி. அழகாக வாசிப்பார்.

அம்மாவை இப்போது முதுமையும், மறதியும் பற்றிக்கொண்டிருக்கிறது.

அம்மாவை ஓரிடத்தில் இருத்தி அவருக்கு வாசிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அம்மாவுக்கு நான் இப்படி கிறுக்குகிறேன் என்று யாரோ வத்திவைத்துவிட்டார்கள். “நீ எழுதியதைக் காண்பி, வாசிக்கவேண்டும்“ என்றிருக்கிறார்.

அம்மாவின் வாசிப்புப் பழக்கத்திற்கு முடிவு எனது பத்திகளை வாசித்துத்தான் வரவேண்டும் என்று விதியிருக்கிறதோ என்னவோ?

#அம்மாவின்_அட்டகாசங்கள்

அம்மாவா கொக்கா



அம்மாவின் அட்டகாசங்கள் - 03


******


நோர்வேக்கும் அம்மாவுக்கும் நேரவித்தியாசம் 4.30 மணிநேரங்கள். நான் தூங்குவதோ சாமத்தில். அதாவது இலங்கை நேரப்படி ஏறத்தாள காலை 6 மணியாகிவிடும்.

நேற்றுத்தான் அப்பாவின் அழகிய ராட்சசியிடம் வந்தேன்.

இரவு 10 மணிக்கு அம்மா மின் விளக்குகளை அணைத்துவிட்டு குந்தியிருந்தார். ‘அம்மா, நீங்க நித்திரை கொள்ளுங்கள்’ என்றேன். ‘இல்லை, நீ படு. நான் பிறகு படுக்கிறேன்’ என்றார்.

அம்மாவிற்கு நோர்வேயின் நேரவித்தியாசத்தை மிக ஆறதலாக விளக்கிக் கூறினேன்.


‘பறவாயில்லை, களைத்திருப்பாய். போய் படு’ இது அம்மா.


சரி, நானும் படுக்கிறேன் என்றுவிட்டு இரண்டு மின்விசிறிகளை இயக்கியபின், 180 பாகையில் சரிந்தேன். அம்மாவும் தூங்கிப்போனார்.


கையில் தொலைபேசியுடன் நேரம் போனது. 12 மணிக்கு அம்மா எழும்பிவந்தார்.

‘இன்னும் படுக்கலியா’

‘இல்லை’

அம்மாவிற்று நோர்வேயின் நேரவித்தியாசத்தை மீண்டும் மிக ஆறதலாக விளக்கிக் கூறினேன்.

‘அப்ப நீ நித்திரை கொள்ளமாட்டாயா?’ என்றார்.

‘அம்மா, நித்திரை வரும்போது படுக்கிறேன்’ என்றேன்.

அம்மாவிற்கு மனம் ஆறவில்லை.

‘ராசா, உனக்கு ஏதும் சுகயீனமா, ஏதும் பிரச்சனையா, பிள்ளைகளின் நினைப்பா, நுளம்பு கடிக்கிறதா’ என்று தனது சந்தேகங்களைக் கேட்டார்.

அருகே இருத்தி நேரவித்தியாசத்தை மீண்டும் விளங்கப்படுத்தினேன். முதல் இரண்டு மூன்று நாட்கள் இப்படி இருக்கும் இது வழமை என்றேன்.

தலையை ஆட்டினார். கண்ணில் சந்தேகம் தெரிந்தது.

இப்படி மணிக்கொருதடவை வந்து கேட்டார். நானும் மணிக்கொருதடவை அம்மாவிற்று நோர்வேயின் நேரவித்தியாசத்தை மீண்டும மீண்டும்; மிக ஆறதலாக விளக்கி விளக்கி களைத்துப்போனேன்.

காலை 5 மணிக்கு அம்மா எழும்பிவரும்போது எனக்கு நித்திரை வந்தது. அம்மா நித்திரை வருகிறது. படுக்கப்போகிறேன் என்றேன்.

ஆத்தாவுக்கு கோபம் வந்தது.

என்ன கெட்ட பழக்கம் இது? எங்கே பழகினாய்? காலை 5 மணிக்கு படுக்கிறது கூடாது. எழும்பு, குளி, சாமியைக் கும்பிடு, தேத்தண்ணி போடுகிறேன் என்று சூடாகினார்.

எனக்கு 5 மணி என்பது சாமம் என்பதை எனதன்பு ரௌடிக் கிழவிக்கு எப்படி புரியவைப்பேன்?

ஒருவாறு 8மணிபோல் தூங்கிப்போனேன்.

“மதியம் பத்துமணியாகிவிட்டது எழும்பு“ என்று நச்சரித்து நச்சரித்து என்னை எழுப்பி விட்டிருக்கிறாள் கிழவி.

என்ட ஒஸ்லோ முருகா.... என்னைக் காப்பாத்தய்யா.

#அம்மாவின்_அட்டகாசங்கள்

பொம்பளை ரௌடி

அம்மாவின் அட்டகாசங்கள் - 02
******
அம்மா இப்போது அதிகம் வெளியே நடந்து திரிவதில்லை. என புலனாய்வுத்துறை அறிவித்தது. எனவே அம்மாவை அழைத்தபடி ஒரு சிறு நடை நடப்போம் என்று நினைத்தபடியே..
“அம்மா வாங்கோ ஒரு சிறு நடைப்பயணம் போவோம்“ என்றேன்.
“என்னத்துக்கு“ என்றார்.
“கோத்தபாயவை சந்திக்கவேண்டும்“ என்றேன்
“யார் அது... உன்னுடன் படித்த யாருமா?“ என்று சீரியசாகவே கேட்டார்.
ஏதும் விதண்டாவாதமாகக் கதைத்து, அம்மா வரமாட்டேன் என்றால் என்ன செய்வது என்பதால், கடைக்குப்போவோம் என்றேன்.
மாணிக்கம் தங்கமுத்து தம்பதிகளின் 84 வயதுப் புத்திரியும் அந்த புத்திரியின் மூத்த புத்திரனும் நடந்து காலிவீதியை வந்தடைந்தோம்.
காலிவீதியின் மறுபக்கத்திற்குச் செல்லவேண்டும். மாலைநேரமாகையால் போக்குவரத்து வீதியை விழுங்கியிருந்தது. பாதசாரிகளுக்கான போக்குவரத்து மின் சமிக்ஞைவிளக்கு சிவப்பாக எரிந்ததுகொண்டிருக்க.. அம்மா வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் எதிரே இருந்த சாப்பாட்டுக்கடையைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு திரும்பினேன். அம்மாவைக் காணவில்லை.
நிமிர்ந்துபார்த்தேன். கிழவி கிடு கிடுவென்று வாகனங்களுக்கு “நில்“ என்று கையைக் காட்டியபடி, காலி வீதியை ஊடறுத்துத் தாக்கி வீதியின் மறுபக்கத்திற்கு போய்விட்டாள். வீதியில் வாகனம் தாறுமாறாய் வருகிறதே என்ற எண்ணம் சற்றும் இல்லை, அவருக்கு.
நானும் வீதியில் காலை வைத்தேன். ஒரு பேருந்து பெருச் சத்தத்துடன்.... ”மவனே செத்தாய்” என்று எச்சரித்தது. பயத்தில் நின்றுகொண்டேன்.
பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிந்ததும் பாதையைக் கடந்துபோனேன்.
அப்போது அம்மா கேட்டாரே ஒரு கேள்வி....
”இவ்வளவு நேரமும் என்ன செய்தாய்?”
இந்தப் பொம்பிளை ரௌடியுடன் இனிமேல் காலிவீதியைக் கடப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.
அப்புறமாய் ஒரு கடைக்குப்போனோம்.
அங்கு நடந்தது, வீதியைக் கடந்ததைவிட பெருங் கூத்து.
அதை நாளை எழுதுகிறேன்.

அம்மாவின் அட்டகாசங்கள் - 01

இருபது வருடமாக எனது அழகிய தலையின் வெளிப்புறத்தில் எதுவித மாற்றமும் இல்லை. ஏதோ ஒன்று இரண்டு முளைத்திருக்கலாம் அல்லது நாலைந்து விழுந்திருக்கலாம்.
இன்று, அம்மா என்னைக் கண்டதும், 
 “என்னடா முழு மொட்டையாகிவிட்டது என்று மிக மனவருத்தத்துடன்“ கேட்டார்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதானே, என்று நினைத்தபடியே பொறுத்துக்கொண்டேன்.
சற்று நேரத்தின் பின் அப்பாவின் படத்தைக் காண்பித்து “பார், அப்பாவுக்கு தலைமயிர் இருக்கிறது என்றார்“
எனக்கு சுர்ர்ர் என்றது.
அவரின் தலையில் ”வறண்டுபோன குளத்தைச் சுற்றி நாலு புல்லு முளைப்பதில்லையா என்று அதுபோல நாலு மயிர் இருக்கிறது” என்றேன்.
“வந்திட்டான், குதர்க்கம் கதைக்க என்று முணுமுணுத்தார்“, அம்மா.
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு“ என்றேன்.
அடிப்பதற்கு கையை ஓங்குகிறாள் கிழவி.
----------
காலை இடியப்பம் படைக்கப்பட்டது. சாப்பிட்டேன்.
சாப்பிட்டு இன்னும் ஒரு மணிநேரம் ஆகவில்லை.
தம்பி, நீ இன்னும் சாப்பிடவில்லை, சாப்பிடு சாப்பிடு என்று கலைத்தபடி இருக்கிறார். நானும் ”ஆத்தா, ஆளைவிடு தாயி“ என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்.
திருவிழா ஆரம்பித்திருக்கிறது.
“வெள்ளவத்தை விசா பிள்ளையாரே உனது *Oslo தம்பியின்* பக்தனைக் காப்பாற்று..

”நண்பேன்டா குடும்பம்”

என் நண்பருக்கும் சக்கரைவியாதி. எனக்கும் சக்கரைவியாதி.

நண்பரின் பாரியார் ஒரு வைத்தியர். நண்பருக்கு இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்த வைத்தியருக்கும் எனக்கு சக்கரை வியாதி இருப்பது தெரியும்.

நண்பர் கொழும்பில் இருந்து தேன்குழல் கொண்டுவந்திருக்கிறாா். ”வா தேத்தண்ணி குடிப்போம்” என்று அழைத்தார்.

அரை மணிநேரத்தில் அவரது சோபாவில் குந்தியிருந்தேன்.

நண்பர் இலங்கையில் இருந்து கொணர்ந்த இனிப்பு வகைகளை மேசையில் அடுக்கினார். தேனீர் எடுத்துவந்தார்.

அவர் வருவதற்கிடையில் நான் 4 தேன்குழல்களை விழுங்கியிருந்தேன்.

நண்பர் வாயை நாக்கினால் சுற்றி நக்கியபடி, தேன் குழலை எடுத்து வாய்கருகில் கொண்டுசெல்லும்போது ஒரு அசரீரீ கேட்கிறது இப்படி
”அப்பா! தேன் குழல் வந்திருக்கிறவருக்கு மட்டும்”

குரலின் உரிமையாளர்....நண்பரின் உரிமையாளர்.

நண்பர் கையில் எடுத்த தேன் குழலை என்னிடம் நீட்டினார். நான் விழுங்கினேன்.

வந்திருப்பவன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்னும் நண்பரின் பாரியாரின் பெரிய மனதை அவதானித்தீர்களா?

இதைத்தான் ”நண்பேன்டா குடும்பம்” என்பது

Oslo முருகனும் அவனது குருவிகளும்

நேற்று Oslo முருகனின் தீர்த்த நாள். அங்கு நின்றபோது, நண்பரின் பதின்மவயது மகள் ”அப்பா, ”இந்தக் குருவி” என்னை சுற்றி சுற்றி வருகிறது” என்றாள். நண்பரோ ”சும்மா இருடி...அது கடிக்காது” என்றார்.
கண்கலங்கிய கண்ணுடன் அவள் என்னிடம் ”மாமா.... குருவி” என்று ஆரம்பித்தாள்.
நான் குருவியைப் பார்த்தேன். அது அளவில் சிறியது. இலங்கையில் நாம் அதை தேனீ என்போம்.
இவ்வளவு விடயத்தையும் ஒரு பதின்மவயதுக் காளை அவதானித்துக்கொண்டிருந்தது. அவரையும் நான் நன்கு அறிவேன்.
நான் அந்தக் குருவியை கையால் தட்டிவிட்டபின், ”அடியேய், ஏன் குருவி உன்னைச் சுத்துகிறது தெரியுமா?” என்றேன்.
”இல்லை மாமா”
”அம்மா... நீங்க முகத்தில பூசியிருக்கும் ”மேக்கப்” பொருட்களில் ஒரு வித சீனிப்பதார்த்தம் உண்டு. குருவிக்கு அது பிடித்தமான உணவு. அதை உண்பதற்குத்தான் அது வருகிறது” என்று காற்றில் அள்ளிவிட்டேன். அவளின் முகத்தில் கிலிபடர்ந்தது.
இப்போதும் அந்தக் காளை என்னைக் கவனித்துக்கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் அவளின் காதில் குருவி குத்திவிட்டது. காதைப்பிடித்தபடி ஓடி வந்தாள் என்னிடம். அவளின் பின்னால் நண்பிகள் கூட்டமும் வந்தது. இவளின் காது சிவந்து, வீங்கியிருந்தது.
”அம்மா இனிமேல் கோயிலுக்கு மேக்கப்புடன் வராதே.... கடவுளுக்கும் மேக்கப்பிடிக்காது.... குருவிக்கும் பிடிக்காது” என்றேன்.
”நண்பிகளும், உண்மையா என்றார்கள்?
 ”அடியேய் ஆண்களை குருவி சுற்றுகிறதா என்று பாருங்கள்” என்றேன். எனது அதிஸ்டத்திற்கு ஆண்களை குருவி சுற்றவில்லை.
”இல்லை.. ஆண்களைச் சுற்றவில்லை” என்றார்கள்.
இதையும் அவதானித்துக்கொண்டிருந்த அந்தக் காளை, என்னிடம்......
”மாமா .. உங்களுக்கு ஏன் இந்த வேலை? மேக்கப்போட்டால் ஆபத்து என்பதால், இவள்கள் இனி கோயிலுக்கே வரமாட்டாள்கள்” என்றான் கவலையாய்.
அவசரப்பட்டு இளைஞர்களுக்கு துரோகியாகிவிட்டேனோ?
என்ட Oslo முருகா....

6 விரல் தேவதையும் ஒரு விசரனும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வே தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப்போட்டியின்போது அவசர அவசரமாக சென்றுகொண்டிருந்த ஒரு 5 வயது அழகியை வழிமறித்து:
«அம்மா உங்கட பெயர் என்ன என்று» என்று கேட்டேன். «சொல்லமாட்டேன்» என்றுவிட்டு ஓடினாள்.
மீண்டும் அதே வழியால் அவள் வந்தபோது «ஏன் நீங்கள் நகத்திற்கு lipstic அடித்திருக்கிறீர்கள்» என்று கேட்டேன்.
«போடாங்» என்பதுபோன்று ஒரு நக்கல் பார்வையை வீசிவிட்டுச் சென்றாள்.
மீண்டும் அதேவழியால் வந்த போது «நீங்கள் ஏன் உதட்டுக்கு nail polish போட்டிருக்கிறீர்கள் என்றேன்.
இப்போது என்னை பரிதாபமாக மேலும் கீழும் பார்த்துவிட்டுச் சென்றாள்.
சற்று நேரத்தின்பின் மீண்டும் அகப்பட்டாள் அவள்.
«அம்மா உங்கட கையில் 6 விரல் இருக்கிறது» என்றேன்.
சிங்கம்.. சற்று நிதானித்து, கைவிரல்களை எண்ணியது.
1 2 3 4 5 என்று எண்ணியபின் «உங்களுக்கு ஒன்றும் தெரியாது» என்றாள்.
நமக்குத்தேவை தேவதைகளுடனான உரையாடலே என்பதனால், «கையைக் காட்டுங்கோ» என்றேன். காட்டினாள்.
அவளின் கையைப்பிடித்து வேகமாக எண்ணி 6 என்று முடித்தேன்.
சிங்கம் சற்று யோசித்தது. மீண்டும் எண்ணி 5 விரல்தான் என்றாள்.
நான் மிகவும் ஆறுதலாக எண்ணினேன். இரண்டு என்று சொல்லும்போது முதலாவது விரலைத்தொட்டு எண்ணி 6 என்று முடித்தேன்.
என்னருகில் உட்கார்ந்துகொண்டு நிலத்தில் கையைவைத்து 1 2 3 4 5 என்று எண்ணினாள்.
நான் 6 என்று எண்ணி, மறுகையிலும் 6 எண்ணினேன்.
அதுமட்டுமல்லாது எம்மை கடந்து சென்ற சிலரின் கைவிரல்களை எண்ணி அவர்களுக்கு 5விரல் உங்களுக்கு மட்டும் 6 விரல் என்றேன்.
"அப்பாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று துள்ளியோடினாள்.
சற்றுநேரத்தில் திரும்பிவந்தாள். கையில் இனிப்புப் பண்டம் இருந்தது. எனக்கு ஒன்றைத் தந்தாள்.
«அப்பா எனக்கு 5 விரல் என்றார்» என்று கூறியபின் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தாள்.
அவளின் அழகிய சுறுள் முடி, நிரம்பி வழிந்த கன்னம், கன்னத்தில் விழுந்த குழி, கண்களில் ஒளிர்ந்த குழந்தைத்தன்மை, ஓயாத கதைகள் என்பன என்னை ஒரு அற்புத உலகத்தினுள் அழைத்துப்போயிருந்தது. பல காலங்களுக்குப் பின்னான ஒரு அழகழய உரையாடல் அது.
அவளின் தோழிகள் அவளைத் தேடி வந்தார்கள். அவர்களுக்கு எத்தனை விரல்கள் என்று எண்ணச்சொன்னாள்.
அவர்களில் ஒருத்திக்கு 7 விரல் என்று எண்ணிக் காட்டினேன். இல்லை 5 விரல்தான் என்று என்னுடன் சண்டைபோட்டார்கள்.
அப்புறமாய் விளையாடப்போகிறோம் என்றுவிட்டு எழுந்துபோனார்கள்.
என்னைக் கடந்து சென்ற அந்த முதலாவது பெண்குழந்தை சற்றுத்தூரம் சென்றபின் என்னைநோக்கி ஓடிவந்தாள்.
«என்னம்மா?» என்றேன்.
«ஏன் உங்களுக்கு தலையில் முடி இல்லை» என்று ஒரு கேள்வியை சாதாரணமாக வீசிவிட்டு எனது பதிலுக்காகக் காத்திருந்தாள்.
நான் இப்போதும் அதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

தீராப் பேச்சுக்கள்

ஏறத்தாள 29 வருடங்களாக ஒருவரை அறிவேன். இப்போது அவருக்கு 70 வயதிருக்கலாம். அன்றில் இருந்து இன்றுவரை அவர் எப்போதும் உரத்துப் பேசியபடியே இருக்கிறார். வாழ்வின் சந்தோசங்களை அவர் பேசி நான் கேட்டதில்லை. அவரது மனதின் ஆதங்கங்களே எப்பொதும் பெருமழைபோன்று அவர் வாயில் இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறன.

தனது காலம் முடிந்துபோவதற்குள் எல்லாற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் என்ற பெரும் அவசரம் அவரது மனதை அலைக்கழிக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அவரது வழக்குகள் பேசித்தீர்க்க முடியாதவை என்பதை அவர் இன்றும் அறிந்துகொள்வில்லை.
நானும் அவரும் 1987ம் ஆண்டுகாலத்தில் நோர்வேயில் ஒரே அகதிகள் முகாமில் பல மாதங்கள் ஒன்றாக வசித்திருந்தோம். சந்தித்த முதல் நாளில் இருந்தே அவர் வித்தியாசமானவராகவே இருந்தார். அதிகம் பேசினார். அதிகம் அமைதியாக இருந்தார். அதிகம் நடந்தார். அதிகம் யோகாசனம் செய்தார், அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டார். அதிகமாகவே திட்டித்தீர்த்தார்.
அண்மையில் அவரைச் சந்தித்தபோது 29 வருடங்களுக்கு முன் கூறிய கதைகளில் பலதை மீண்டும் உரத்துப் கூறிக்கொண்டிருந்தார். நான் அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா என்று அவசியம் அவருக்கு முன்பும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. தான் நினைத்ததைக் கூறுவார். நிறுத்தாமல் தொடர்வார். அவர் நினைத்தபொழுதில் கதை புதிய திருப்பத்தில் நுழைந்து வேறு பாதையில் தொடர்ந்துகொண்டிருக்கும். அவர் நினைக்கும்போது மட்டும்தான் கதை நிற்கும்.
அன்றொரு நாள் தமிழர்கள் அதிகம் வந்துபோகும் பல்பொருள் அங்காடியினுள் நண்பர்களுடன் நின்றிருந்தேன். அங்கு யாரோ உரத்துப்பேசுவது கேட்டது. குரலும் பரீட்சயமானதாய் இருந்தால் காதைக் கொடுத்தேன். 29 வருடங்களுக்கு முன் எங்கள் அகதி முகாமில் அவருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடந்த ஒரு வழக்கைக் காற்றுக்குக் கூறி நியாயம் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே வந்துபோன பெயர்களில் எனது பெயரும் ஒன்று. என்னிடம் அவருக்கு சிறு பட்சம் உண்டு என்பதை அறிவேன் நான்.
ஏன், எப்படி அந்த பட்சம் வந்தது என்பதை நான் அறியேன். காரணம் தேடக்கூடாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
என்னைக் காணும் இடங்களில் சஞ்சயன் என்று கையைப்பிடித்து உரையாடுவார். அவருடன் அதிகம் உரையாடிய ஒரே காரணத்தால் 29 வருடங்களுக்கு முன்பே ‘விசரன்’ என்று பட்டத்தையும் நண்பர்கள் தந்திருக்கிறார்கள். அதெல்லாவற்றையும் கடந்து எனக்கு அவரில் ஒருவித ஈர்ப்புண்டு என்பதை மறைப்பதற்கில்லை.
அவரின் பேச்சுக்களில் அறிவார்த்தமான விடயங்கள இருக்கும். விசாலமான தமிழிலக்கிய அறிவுடையவர். ஆங்கிலப்புலமை உண்டு. சிங்களமும் அறிந்தவர், 1970களில் யாழ்ப்பாணத்தின் முக்கிய மேடைப்பேச்சாளர் என்றும் கூறக்கேட்டிருக்கிறேன்.
இத்தனை இருந்தும் என்ன அவரின் பேச்சின் நீளத்தினாலும், தொடர்பின்மையாலும் அவரது புலமை அடிபட்டுப்போய்விடும். அவருடன் உரையாட அதீத பொறுமைவேண்டும்.
நோர்வேயில் வடமேற்குப்பாகத்தில் வாழ்ந்திருந்த தமிழர்கள் 1987இல் தொடர்ச்சியாக ஒரு கையெழுத்துப்பிரதியொன்றை வெளியிட்டிருந்தோம். அதில் ”தமிழின் தொன்மை” என்ற தொனியிலான ஒரு தொடர் கட்டுரையை எழுதினார். நாம் வாழ்ந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் யாப்பினையும் இவரே எழுதியதாகவே நினைவிருக்கிறது.
நாம் வாழ்ந்திருந்த அகதிமுகாமில் அந்நாட்களில் இளைஞர்களே நிறைந்திந்தார்கள். ஒரு மனிதரை கேலிபேச, சேட்டைவிட இளைஞர்களுக்கு யாரும் கற்பிக்கவேண்டியதில்லையே.
எனவே இந்தக் கதையின் நாயனுக்கும் இளைஞர்களுக்கும் எப்போதும் அன்பான மோதல்கள் நடக்கும். சமத்துவபானம் உட்புகும் நேரங்களில் மோதல்கள் எல்லைமீறியதுமுண்டு.
அன்றொரு நாள், இளைஞர்கள் அவரை எல்லைமீறிக் கலாய்த்துக்கொண்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார், ஒரு கட்டத்தில் அவரது பொறுமை காற்றில் பறந்தது. நாற்காலியில் இருந்து எழுந்தார். இளைஞர் கூட்டம் ‘ஓ’ என்று பெரிதாய் ஆரவாரித்தது.
‘டேய்……………., வேசைமக்களே…………! உங்களுக்கு ஒரு சவால்’ என்றார்.
இளைஞர் கூட்டம் நக்கலாய் தங்களுக்குள் பார்த்துக்கொண்டபின் சிரிக்கவும் செய்தது. யாரோ விசில் அடித்தார்கள்.
‘என்ன சவால்? யார் கூட தண்ணியடிக்கிறது என்றா?’ என்றது ஒரு இளசு.
ஏளனமாக அவனைப்பார்த்தபடியே ‘நான் செய்வதை நீங்கள் செய்தால், இனிமேல் நீங்கள் எப்படியும் என்னை நக்கல்பண்ணலாம்’ என்றார்.
பெரும் ஆரவாரம் எழுந்தது. அதுவே சவாலுக்கு நாம் தயார் என்று அறிவித்தது.
சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுணர்ந்தபின் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி கால்களை மேலே தூக்கிக்கொண்டு நின்றார்.
‘இதுவா….. போட்டி, எவ்வளவு நேரம் நிற்கவேண்டும் ?’ என்று ஒரு இளசு கேட்டது.
தலைகீழாக நின்றபடியே நடந்துபோனார். மாடிப்படிகளுக்கு அருகில் சென்றவர், இரண்டாம் மாடிக்கு லாவகமாக கைகளால் ஏறிப்போனார். அப்புறமாய் இறங்கியும் வந்தார். வந்தவர் காலை ஊன்றி நிமிர்ந்தார்.
இளைஞர்கள் சபை அதிர்ந்துபோய் ஆளையாள் பார்த்துக்கொண்டது. பெரும் அமைதி நிலவியது.
அவர் எதுவும் பேசவில்லை. ஆறுதலாக அனைவரையும் ஊடுருவிப்பார்த்தார். பின்பு விறுவிறு என்று தனது அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டார்.
இதன்பின்பும் இளைஞர்கூட்டம் அவரைக் நக்கலடித்தது. ஏளனமாய் அவர்களைப் பார்த்துச் சிரிப்பார்.
சில மாதங்களுக்கு முன் அவரை ஒரு வைத்தியரின் கந்தோரில் சந்தித்தேன். மனைவியுடன் வந்திருந்தார். அங்கு அவர் நொண்டி நொண்டி நடந்தார். டாக்டர் வந்து இருவரையும் அழைத்துப்போனார். அவர் தனது முதுமையுடன் போராடிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.
சில தினங்களுக்கு முன்னர் வந்த ஒரு தொலைபேசி அவரின் மனைவி இறந்துவிட்டதாக அறிவித்தது. வீடுதேடிப்போனேன். இப்போதான் வெளியே சென்றார் என்றார்கள். நான் அங்கு நின்றிருந்தபோது அவர் வரவில்லை. மறுநாள் நல்லடக்கம் முடிந்து அவரைச் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாகக் கலைந்தபின் அவரருகே சென்றேன். எனது முழங்காலில் அறுவைச்சிகிச்சை நடந்திருப்பதால் ஊன்றுகோல்களின் உதவியுடனேயே நடந்தேன்.
கண்டதும் ‘சஞ்சயன், என்ன நடந்தது’ என்றார். நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் வழமைபோன்று பேசத்தொடங்கியிருந்தார். நான் அமைதியாய் நின்றிந்தேன். பலர் அவரிடம் கைலாகுகொடுத்து விடைபெற்றார்கள். அவர் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவருக்கு அவரது பேச்சே முக்கியமாய் இருந்தது.
அவரது மகள் வந்து அவரை அழைத்துப்போனார். அப்போது அவர் என்னைப் பார்த்து ‘வந்து சாப்பிட்டுவிட்டுப் போ’ என்றார். ‘நிட்சயமாய்’ என்றேன்.
உணவருந்தும் இடத்தில் எனது மேசை காலியாக இருந்தது. எனைய மேசைகளில் பலர் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னைத் தேடிவந்து என்னருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். தனது குடும்பம் நோர்வேக்கு வரமுன் அனுபவித்த அல்லல்களை கூறிக்கொண்டிருந்தார். கண்கள் பிற்காலத்தில் அலைந்துகொண்டிருந்தன. பலர் வந்து விடைபெற்றார்கள். தலைமட்டும் அசைந்தது. பேச்சு நிற்காமல் தொடர்ந்தது.
உணவருந்தியபடியே அரைமணி நேரத்திற்கும் அதிகமாக பேசியிருப்போம். நான் புறப்படவேண்டும் என்றேன்.
கையைப்பிடித்தார். ‘சஞ்சயன், எனக்கு இனி ஒருவரும் இல்லை. அவளும் போய்விட்டாள். ஒருவருக்கும் இனிமேல் பாரமாக இருக்கக்கூடாது. எனது பெரிய பிரச்சனையே நான் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதுதான்’
‘ம்’
‘இனி நான் பேசப்போவதில்லை. வாயை மூடிக்கொள்ளப்போகிறேன்’ என்றார்.
நான் எதுவும் பேசவில்லை. ஆனால், அவரால் அது முடியாதது என்பதை நான் அறிவேன்.
உட்கார்ந்திருந்த அவரது தோளைப்பற்றி ‘அண்ணை, நான் விடைபெறுகிறேன்’; என்றேன்
தோளில் இருந்த எனது கையின்மேல் தனது கையைவைத்தார். முதுமையான அந்தக்கைகள் நடுங்கியதை உணர்ந்தேன்.
கடலுக்கு அலைகள் வேண்டியிருப்பதைப்போன்று மனிதனுக்கு பேசிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமிருக்கிறது.
கடலின் அலைகளை ஏற்றுக்கொள்ளும் கரைகளைப்போன்று மனிதர்களின் பேச்சுக்ளை கேட்டுக்கொண்டே இருக்கத்தான் எவருமில்லை.

'இவருக்கு ஒன்றும் தெரியாது'

நேற்று பலரின் மத்தியில், கையில் தேனீருடன் சிவனே என்று தனியே குந்தியிருந்தேன்.
நீண்ட வெள்ளைநிறச் சட்டையுடன் முன்பின் அறியாத சிறுமி வந்தாள். புன்னகைத்தாள், அருகில் இருந்த நாற்காலியை இழுத்து உட்கார்ந்தாள்.
அவள் ஒரு இரகசியம் பகிர்ந்தாள்.
அவளின் அம்மாவின் வயிற்றில் ஒரு பேபி இருக்கிறதாம். என்றுவிட்டு அழகிய புன்னகையுடன் மறைந்துபோனாள்.
***
இதன்பின் இரண்டு சிறுவர்கள் அருகில் வந்தார்கள். என்னைப்பார்த்தார்கள். நின்றார்கள்.
விசாரணை ஆரம்பமாகியது.
“பெயர் என்ன?“
”சஞ்சயன்“
“ம்“
கைத்தொலைபேசியில் ஒரு விளையாட்டைக் காண்பித்து
“இது விளையாடுவாயா“ என்றார்கள்
“இல்லை“
“உனக்கு என் அப்பாவைத் தெரியுமா?“ என்று ஒருவன் என்னைக் கேட்டபோது மேலுமொரு சிறுவனும் அங்கு வந்தான்.
“இல்லை அய்யா, எனக்கு அவரைத் தெரியாது“
“ம், அம்மாவைத் தெரியுமா?“
“இல்லை“
இப்போது இரண்டாமவன் கேட்டான்.
'என் அப்பாவைத் தெரியுமா?“
“தெரியாது“
“அங்கே பார், கறுப்பு உடையுடன் நடனமாடுகிறாறே, அவர்தான்“
அவரைப் பார்த்தபின் “ இல்லை அய்யா, அவரையும் தெரியாது“ என்றேன்.
அம்மாவைத் தெரியுமா?
இல்லை ராசா, தெரியாது
மூன்றாமவன் தொடங்கினான்
'என் அப்பாவைத் தெரியுமா?“
“தெரியாது“
”அம்மாவைத் தெரியுமா?”
”இல்லை அய்யா...”
உனக்கு ஒருவரையும் தெரியாது என்றபடியே, மேலும் இரு சிறுவர்களை அழைத்துவந்து அதே கேள்விகளைக் கேட்டார்கள். நானும் ”இல்லை, தெரியாது என்றேன்”
ரவுண்டு கட்டி நின்று சிரித்தார்கள்.
அதைத் தாங்கலாம்... ஆனால்...
அப்புறமாய் என்னைக் கடந்துசென்ற எல்லோரிடமும்
”இவருக்கு ஒருவரையும் தெரியாது என்பதற்குப்பதிலாக, இவருக்கு ஒன்றும் தெரியாது, இவருக்கு ஒன்றும் தெரியாது என்று ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களும் என்னை பரிதாபமாகப் பார்த்தபடியே கடந்துபோனார்கள்.
இதைத்தான் தாங்கமுடியவில்லை.
அடேய்... நான் சிவனே என்றுதானே உட்கார்ந்திருந்தேன். நீங்களாகவே வந்தீர்கள், கேள்வி கேட்டீர்கள், உண்மையான பதிலைச் சொன்னேன்.
அதற்காக இப்படியா விழா முடியும்வரையில் ரணகளப்படுத்தி ஒலிபரப்புவீங்க...
நேற்றில் இருந்து 5 இல் இருந்து 10 வயதுச் சிறுவர்களுக்கு பதிலே சொல்வதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்.
எங்கே இருந்தடா வருகிறீர்கள்?
என்ட Oslo முருகா.... ”ஏனப்பா உன் பக்தனை இப்படி” சோதிக்கிறாய்?
************************
வாழ்க்கையின் அற்புதக் கணங்கள் இவைதான்.
இதுவே பேரின்பம்.
இங்குதான் வாழ்வின் நிலத்தடி நீர் இருக்கிறது.

23. oktober