Oslo முருகனும் அவனது குருவிகளும்

நேற்று Oslo முருகனின் தீர்த்த நாள். அங்கு நின்றபோது, நண்பரின் பதின்மவயது மகள் ”அப்பா, ”இந்தக் குருவி” என்னை சுற்றி சுற்றி வருகிறது” என்றாள். நண்பரோ ”சும்மா இருடி...அது கடிக்காது” என்றார்.
கண்கலங்கிய கண்ணுடன் அவள் என்னிடம் ”மாமா.... குருவி” என்று ஆரம்பித்தாள்.
நான் குருவியைப் பார்த்தேன். அது அளவில் சிறியது. இலங்கையில் நாம் அதை தேனீ என்போம்.
இவ்வளவு விடயத்தையும் ஒரு பதின்மவயதுக் காளை அவதானித்துக்கொண்டிருந்தது. அவரையும் நான் நன்கு அறிவேன்.
நான் அந்தக் குருவியை கையால் தட்டிவிட்டபின், ”அடியேய், ஏன் குருவி உன்னைச் சுத்துகிறது தெரியுமா?” என்றேன்.
”இல்லை மாமா”
”அம்மா... நீங்க முகத்தில பூசியிருக்கும் ”மேக்கப்” பொருட்களில் ஒரு வித சீனிப்பதார்த்தம் உண்டு. குருவிக்கு அது பிடித்தமான உணவு. அதை உண்பதற்குத்தான் அது வருகிறது” என்று காற்றில் அள்ளிவிட்டேன். அவளின் முகத்தில் கிலிபடர்ந்தது.
இப்போதும் அந்தக் காளை என்னைக் கவனித்துக்கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் அவளின் காதில் குருவி குத்திவிட்டது. காதைப்பிடித்தபடி ஓடி வந்தாள் என்னிடம். அவளின் பின்னால் நண்பிகள் கூட்டமும் வந்தது. இவளின் காது சிவந்து, வீங்கியிருந்தது.
”அம்மா இனிமேல் கோயிலுக்கு மேக்கப்புடன் வராதே.... கடவுளுக்கும் மேக்கப்பிடிக்காது.... குருவிக்கும் பிடிக்காது” என்றேன்.
”நண்பிகளும், உண்மையா என்றார்கள்?
 ”அடியேய் ஆண்களை குருவி சுற்றுகிறதா என்று பாருங்கள்” என்றேன். எனது அதிஸ்டத்திற்கு ஆண்களை குருவி சுற்றவில்லை.
”இல்லை.. ஆண்களைச் சுற்றவில்லை” என்றார்கள்.
இதையும் அவதானித்துக்கொண்டிருந்த அந்தக் காளை, என்னிடம்......
”மாமா .. உங்களுக்கு ஏன் இந்த வேலை? மேக்கப்போட்டால் ஆபத்து என்பதால், இவள்கள் இனி கோயிலுக்கே வரமாட்டாள்கள்” என்றான் கவலையாய்.
அவசரப்பட்டு இளைஞர்களுக்கு துரோகியாகிவிட்டேனோ?
என்ட Oslo முருகா....

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்