பால்யத்துத் திருட்டுக்களும் இன்றைய பரவசங்களும்

அப்போ எனக்கு 10 - 12 வயதிருக்கும். விடுமுறைக்கு விடுதியிலிருந்து வீடுவந்திருந்தேன்.

அம்மா எனது கையெழுத்து ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காய் தனக்குத் தெரிந்த தமிழையெல்லாம் எழுது எழுது என்றும் சொல்வதெழுதல் எழுது என்றும் பாடாய்படுத்திக்கொண்டிருந்தார். அப்பாவோ தமிழின்பால் திரும்பியும் பாராதவர். அது ஒன்று தான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு. ஆங்கிலமும், கணிதமும் அவர் கரைத்துக் குடித்த பாடங்கள். என்னையும் கரைத்துக்குடி குடி என்று என் உயிரை எடுத்துக்கொண்டிருப்பார்.  அவரால் முடியாது போன காரியங்களில் இதுவும் ஒன்று.

விடுமுறைக்கு வந்தால் அப்பாவின் சகோதரிகளிடம் அழைத்துப்போவார்கள். நெடுந்தூரப்பயணம் அது. பஸ், ரயில், இறுதியில் அப்பய்யாவின் சோமசெட் கார் என்று அப்பயணம் முடிவுறும். இம்முறையும் அப்படியே முடிவுற்றிருந்து எங்கள் பயணம்.

அப்பாவின் தங்கைகளின் ஒருவர் ஆங்கில ஆசிரியை. அவர் சமயபாடம் கற்பித்திருக்க வேண்டியவர் தவறி ஆங்கிலம் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்பப்பா.. விடிந்து இரவு தூங்கும்வரையில் கடவுள் பக்தியில் உருகிக்கொண்டிருப்பார். என்னைக் கண்டால் அவருக்கு தனது ஆங்கலப் புலமை ‌தலைக்கேறிவிடும். ஆங்கிலத்தில் சொல்வதெழுதல் எழுதச்சொல்வார். எனது ஆங்கிலப் புலமை  மட்டுப்படுத்தப்பட்டதாயே இருந்தது, இருக்கிறது. எனது ஆங்கிலப் பேரறிவைக் கண்ட அப்பாவின் அக்கா எனது அப்பாவிடம் ”தம்பி! இவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று ‌கூறுவார். அப்பாவின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பது அவர் அன்று பாவித்திருக்கும் பதார்த்தத்தைப் பொறுத்திருக்கும். அவர் என்னை ”கவனிக்காது” விட்டால் அவரின் அன்பு அக்கா  அப்பாவுக்கு ”தம்பி! நீதான் இவனுக்கு செல்லம்கொடுத்துக் கெடுக்கிறாய்” என்பார். இதைக் கேட்டு அப்பர் சிலிர்த்தெழும்பினால் அதன் பின் என்கதி அதோகதியாகும் வரை நிறுத்தமாட்டார்.

அந்த விடுமுறையில் ஒரு நாள் மாமியுடன் நாம் ஒரு கோயிலுக்குச் செல்வதென்று முடிவாகியது. அம்மாவும் வந்தார். அப்பா வரவில்லை. அன்று அவர் வராதது  தண்டவாளத்தில் நான் படுத்திருக்கும் போது ரயில் வராதது போன்ற அதிஸ்டம் என்றே நினைக்கிறேன்.

அப்பாவின் இரு தங்கையர், அக்கா, அவரின் மகள், அம்மாவும், தம்பியும், நானும் கோயிலுக்குப் புறப்பட்டோம். அது ஏறத்தாள  1 -2 மணி நேரத்துப் பயணம். பஸ்ஸில் ஏறியபின் அம்மாவினருகே குந்திக்கொண்டேன். தம்பியிடம் இருந்து யன்னலோரத்தையும் கைப்பற்றிக்கொண்டேன். எவ்வளவு நேரம் தான் ஒரு டெக்னீஷியன் புதினம் பார்ப்பான். எனவே கையில் பட்டதையெல்லாம் நோண்டிக்கொண்டிருந்தேன்.

அந் நாட்களில் இருக்கைக்கு அருகில் ஒரு மின்சாரவிளக்கு இருந்ததாகவே நினைவில் இருக்கிறது. அவ்விளக்கினைச் சுற்றி ஒரு கம்பி வலை இருந்தது. அவ்வலையினை இரு ஆணிகளைக் கொண்டு பொருத்தியிருந்தார்கள். அவற்றில் ஒரு ஆணி வெளியே வந்திருந்து. மெதுவாய் இழுத்தேன். அசைந்தது. சற்றுப்பலமாய் இழுத்தேன் கழன்றுவந்தது. கம்பி‌வலையை அகற்றி மின்குமிழைக் களற்றி எடுத்தேன். அம்மா தூங்கிக்கொண்டிருந்தார். ஆங்கில ஆசிரியையோ பஸ்ஸின் முகட்டைப் பாத்தபடியே குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். மின்குமிழை மெதுவாய்க் களற்றியெடுத்து காற்சட்டை பையினுள் வைத்துக்கொண்டேன்.

பயணம் முடிவுற்றதும் அம்மாவும், அப்பாவின் அருமை சகோதரிகளும் தூக்கம் கலைந்து எழும்பி எம்மை இழுத்துக்கொண்டு இறங்கினார்கள். கோயிலுக்குச் சென்று தேவைக்கு அதிகமாகவே தேவாரம் பாடியபடியே மாமி நடந்துகொண்டிருந்தார். அம்மா, ஏனைய மாமிமார் என்று ஒரு நீண்ட வரிசை மாமிக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தது. நான் கடைசியாக வந்துகொண்டிருந்தேன்.  அந்த மின்குமிழ் என்து முழுக்கவனத்தையும் ஈர்த்திருக்க அதை கையில் வைத்துப்பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன். அந்த மின்குமிழை வீட்டில் பூட்டி அது எப்படி ஒளிர்கிறது என்று கற்பனையில் பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். திடீர் என்று பல்ப் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். அருகில் அப்பாவின் அழகிய ராட்சசி நின்றுகொண்டிருந்தார். அவரருகில் அப்பாவின் அன்புச் சகோதரி (அப்பாவின் அக்கா).

அம்மா ”இதை எங்கயடா எடுத்தனீ ?”என்றார்
நானாவது பதில் சொல்வதாவது என்பது போல் வாயை திறக்காதிருந்தேன்.
அம்மா குரலை உயர்த்தினார். (எனக்குள் சிரித்துக்கொண்டேன்)
அப்பாவிடம் சொல்லுவேன் என்றார் (சொல்லவே மாட்டார் என்று தெரியுமாதலால் அமைதியாயிருந்தேன்)
அப்போது தான் அப்பாவின் அக்கா தனது கடைசி ஆயுதத்தை எடுத்தார். நீ இப்ப சொல்லாவிட்டால் அப்பாவிடம் சொல்வேன் என்றார். இனியும் மெளனம் காப்பது உயிருக்கு ஆபத்து என்பதால் ”பஸ்ஸில் இருந்து களட்டினேன்” என்றேன். அம்மா அதிர்ந்துவிட்டார். மாமியோ ”டேய் உன்ட கொப்பன் ஒரு போலீஸ், நீ களவெடுக்கிறியோடா” என்றார். அப்பாவிடம் சொல்வதாகவும் கூறியதனால் எனது உடல் மெதுவாக ஆட்டம்காணத் தொடங்கியிருந்தது.

கோயிலில் இருந்து பஸ் நிலையத்துக்கு வந்ததும் அம்மா என்னை அழைத்துக்கொண்டு பேருந்துநிலயத்தின் காரியாலயத்திற்கு அழைத்துப்போனார். மின்குமிழைக் கையில் தந்து அங்கிருந்த ஒரு அதிகாரியை காண்பித்து அவரிடம் மின்குமிழைக் கொடுத்து களவெடுத்தற்கு மன்னிப்புக் கேள் என்று கூறிவிட்டு அங்கிருந்த கதிரையில் உட்கார்ந்துகொண்டார்.

நிமிர்ந்து அந்த அதிகாரியைப் பார்த்தேன். கறுப்பு நிறமான யானைக்கு காக்கி உடை அணிவித்தது போன்று கதிரையையும் அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரின் மீசை அவரைவிடப் பெரிதாகவிருந்தது. வெற்றிலை சப்பியபடியே எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

கொடுக்காவிட்டால் அப்பாவிடம் அடியுதை, கொடுத்தால் இம்மனிதர் என்ன செய்வாரோ என்று தெரியாததால் முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு அம்மாவைப் பார்த்தேன். அதிகாரியிடம் போ என்று கையைநீட்டிக்காட்டினார். அழுதேன். அம்மா மசியவில்லை. இப்படியே நேரம் சென்றுகொண்டிருந்தது. இறுதியில் அம்மா என்னை அழைத்துப் போனார், காக்கிச்சட்டை யானையிடம்.

அவரும் அம்மாவின் வாக்குமூலத்தை கேட்டபின் என்னை நோக்கி கையை நீட்டினார். எனக்கேதோ தும்பிக்கையொன்று நீண்டுவந்தது போலிருந்தது. மின் குமிழ்  கைமாறியது. என்னை நிமிர்ந்து பார்த்தார். போலீசுடன் தொடர்பு கொள்ளப் போகிறேன் என்றார். நான் அழுதபடியே அம்மாவை கட்டிக்கொண்டேன்.

களவு கூடாது என்று அறிவுரை கூறி, அம்மாவைப் பாராட்டி அனுப்பினார். வெளியில் அப்பாவின் சகோதரி தங்கள் பரம்பரையிலே கள்ளன் இல்லை என்றும், பரம்பரையின் மானம் கப்பலேறிவிட்டது என்றும் புலம்பிக்கொண்டிருந்தார்.

எனது தம்பியின் கையிலும், மச்சாளின் கையிலும் ஐஸ்கிறீம் இருந்தது. அது எனது மனநிலையை மிகவும் பாதித்தது. கௌரவத்துக்கும் ஏற்றதாயிருக்கவில்லை. அம்மாவிடம் அடம்பிடித்து ஐஸ்கிறீம் கேட்டேன். இல்லை என்றார். அழுது அழிச்சாட்டியம் பண்ணினேன். வாங்கித்தராவிட்டால் வீட்டிற்கு வரமாட்டேன் என்று அறிக்கை விட்டேன். எனது அரசியல் அறிக்கைய‌ை அம்மா கவனத்திலேயே எடுக்கவில்லை.

பஸ் வந்ததும் எல்லோரும் ஏறி உட்கார்ந்தார்கள். நான் வெளியில் நின்றேன். அம்மா வருவார், ஜஸ்கிறீம் வாங்கித்தருவார் என்ற நம்பிக்கையில். அவர் வரவில்லை. பஸ்புறப்பட்ட போது ஏறி அம்மாவின் மடியில் குந்திக்கொண்டேன். அணைத்தபடியே இனி களவெடுக்கக்கூடாது என்றார். அப்பாவிடம் சொல்லவேண்டாம் என்று மாமியிடம் கூறும் படி கேட்டுக்கொண்டேன். அம்மா சிரித்தபடியே மாமியைப் பார்த்தார். மாமி வாயைப்பளந்தபடியே குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். மாமியின் பற்கள் பயத்தை உண்டுபண்ணின.

வீடு வந்ததும் நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அப்பாவின் அக்காவின் கணவர் (மாமா), பின்பொருநாள்  மாலை, சோமபானததின் மயக்கத்தில் ”அடேய்! எடுத்தால் பஸ் இன்ஜினை களவெடுக்கணும். பல்ப் ஒன்றுக்கும் உதவாதுடா” என்று  கூறியபோதுதான் உணர்ந்தேன் எனது பிரச்சனை சர்வதேசப்பிரச்சனையாக உருவெடுத்திருப்பதை.

அன்று வீடு வந்ததும் அப்பாவின் இன்னொரு தங்கை இரகசியமாக என்னை அழைத்து ஜ்ஸ்கிறீம் வாங்கவும், சகோதரன் முறையான ஒருவருடன் படம் பார்க்கவும் பணம் தந்தார். அன்று இந்தப் பூலோகத்தில் அவர் மட்டுமே அன்பான மனிதராக இருந்தார்.

அன்றிரவு நாகம்ஸ் திடய்டரில் ஜக்கம்மா பார்த்தோம். வீடு வரும் போது அந்த கறுப்பு யானை போன்ற மனிதரை ஜக்கம்மா படத்தில் வருவது போல மரத்தில் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடவேண்டும் என்று கற்பனையோடியது.
......



அப்பாவின் அக்காளாகிய எனது புவனேஸ் மாமிக்கு இது சமர்ப்பணம்.


இன்றைய நாளும் நல்லதே!

தெய்வீகத் தூக்கங்கள்

இன்று மாவீரர் நாள். எனது தென்னிந்திய நண்பரெருவர் தெற்கு நோர்வேயில் இருந்து வந்திருந்தார். அவருடன் மாவீர்நாளுக்கு செல்வது என்று முடிவாகியிருந்தது.

இன்று மதியம் அவரைச் சந்தித்தபோது அவரின் குழந்தையும் அவருடன் இருந்தாள். அவளும் நானும் ஏற்கனவே ஒருவரை ஒரு‌வர் ஓரளவுக்கு அறிவோம். கண்டதும் மயக்கும் ஒரு புன்னகை புரிந்தாள். ”பிடி” என்று கூறியபடியே அவளைத் துரத்திப்பிடிக்க வருவது போல ஓடினேன். முத்துக்கள் கொட்டியது போல் சிரித்தபடியே ஓடினாள். அவளின் அழகிய சிரிப்பிலும், அழகிய பல்வரிசையிலும் உலகின் அழகெல்லாம் தெரிந்தது.

அவர்களின் வாகனத்தில் மாவீரர்விழா நடைபெறும் இடத்துக்குச் சென்றபோது நோர்வேஜிய மொழியிலும், அழகான தென்னிந்தியத் தமிழிலும் பேசியபடியே வந்தாள். அவளின் குறும்பும், சிரிப்பும் என் குழந்தைகளை நினைவூட்டின.

விழாமண்டபத்தில் என்னருகில் அவளை உட்காரவைத்தேன். இல்லை அப்பாவின் ம‌டியே பாதுகாப்பனது என்பது போல் தந்தையின் மடியில் குந்தியிருந்து என்னுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். எமது பேச்சு அவளின் நண்பர்களைப்பற்றியதானபோது ”என்னருகில் வந்தால் உனது நண்பர்களின் பெயரைச் சொல்லுவேன்” என்று கூறினேன். கண்கணை அகலமாக விரித்தபடியே ”உனக்கு அவர்களை தெரியுமா?” என்றாள் நோர்வேஐிய மொழியில்.

அவனைத் தூக்கி எனது மடியில் வைத்துக்கொண்டேன். எனது இளைய மகளின் சகல நண்பிகளையும் நான் மிக நன்றாக அறிவேன். முத்தவளின் நண்பிகளையும் அறிவேன். எனவே அவர்களின் பெயர்களைக் கூறியபடியே, ”இதுவா உன் நண்பியின் பெயர், இதுவா உன் நண்பியின் பெயர்?” என்று கேட்கலானேன். அவளும் என் மடியில் இருந்தவாறே இல்லை, இல்லை என்று சிரித்தபடியே கூறிக்கொண்டிருந்தாள். நான் பிழையாக பெயர்களை கூறியபோது அவள் அழகாகக் கண்களால் சிரித்தாள். அவளின் சிரிப்பு மயக்கும் அழகாய்இருந்தது. இப்படியான தெய்வீகச் சிரிப்புக்களுடனேயே, சில வருடங்களுக்கு முன், எனது நாட்களும் இருந்தன. குழந்தைகளின் சிரிப்புக்கு இணையான பொருள் இவ்வுலகில் எதுவுமில்லை என்று வாழ்க்கை என்க்குணர்த்திப் போன நாட்கள் அவை.

சற்று நேரத்தில் இவள் தந்தையின் மடியிலேறி உட்கார்ந்து தந்தையின் கழுத்தைக் கட்டிப்பிடித்தவாறு துங்கிப்போனாள்.

என் குழந்தைகள் என் கழுத்தைக்கட்டியபடியே தூங்கிப்போன நாட்களில் நான் என்னை மறந்து அவர்களை ரசித்திருக்கிறேன்.

என் நெஞ்சில் காற்றின் மிருதுடன் சாய்ந்திருக்கும் அவர்களின் உடல்,
கழுத்தில்படும் அவர்களின் வெம்மையான மூச்சுக்காற்கு,
எவ்வித ஆரவாரத்தையும் கவனிக்காது பாதுகாப்பாய் உறங்கும் அவர்களின் நம்பிக்கை,
குழந்தைகளின் கையினுள் எமது விர‌லொன்றை வைத்தால் அதை தூக்கத்திலும் பொத்திப்பிடிக்கும் அதிசயம்,
‌அவ்விரலகளின் வெம்மை,
தூக்கத்தில் ”அப்பா” என்றழைக்கும் போது பெருமையில நிரம்பும் என் மனது,
அவ்வப்போது அவர்களின் தலையைக் கோதிவிடும் என் கைகள் என்று என் குழந்தைகள், என்னுடன் தூங்கிப்போன கணங்கள் ஒரு நெடுங்கவிதைபோல் எனக்குள் இருக்கிறது. அக் கவிதையை மீண்டும் வாசிப்பது போலிருந்தது, அவள் என் பக்கமாக பார்ததபடியே தனது தந்தையின் மார்பில் தூங்கிய பேரழகு.

என்னையறியாமலே அவள் தலையைக் கோதிவிட்டேன். அவளின் கண்களுக்குள் வழிந்துகொண்டிருந்த தலைமுடியை ஒதுக்கினேன்.
தந்தையின் கழுத்தை கட்டியிருந்தன அவள் கைகள்.
அவள் நித்திரை குழம்பிவிடக் கூடாது என்று மனம் பதபதைத்துக்கொண்டிருந்து.

சற்று பொறாமையாயும் இருந்தது அவளின் தந்தையில், உலகின் பேரழகை கையில் வைத்திருக்கிறாரே என்று.

அவளைப் பார்ப்பதும், முகத்தை வருடுவதும், தலைமுடியை கோதிவிடுவதுமாய் இருந்தேன் சில நிமிடங்கள்.

இப்போது அவள் தந்தையின் கழுத்தை கட்டியிருந்த கைகளை விடுவித்து, கைகளை தொங்கவிட்டபடியே பெருந்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

என்னையறியாமலே அவளின் கையினுள் எனது ஆட்காட்டி விரலை வைத்தேன். அவளின் கையின் வெப்பம் எனது குழந்தைகளின் வெப்பததைப்போலிருப்பதாய் உணர்ந்தேன்.

அப்போது தெய்வம் என் விரலை இறுக்கமாய் பற்றிக்கொண்டது. நான் மோட்சமடைந்திருந்தேன், அடுத்துவந்திருந்த சில கணங்கள்.

என் மனம் பல ஆண்டுகளுக்கு முன்பான நாட்களில் நனைந்துகொண்டிருக்க அவளின் முகத்தை மெதுவாய் வருடினேன். தெய்வீகமாய், அவள் தூக்கத்தில் சிரித்தாள்.


இன்றைய நாள் மிக மிக நல்லது.


இது அதித்தி என்னும் அக் குழந்தைக்குச் சமர்ப்பணம்.


பிரிந்தது ஓர் உயிர்

அவன் எனக்கு அறிமுகமாகியது 2008ம் ஆண்டு யூலைமாதம் என்றே நினைவில் இருக்கிறது. என்னைப் போல் அவனும் கறுப்பன்.

காலம் எம்மை பலமாய் இணைத்துப்போட்டது. நான் எங்கு சென்றாலும் அதிகமாக என்னுடயே வருவான். நானின்றி அவன் எங்கும் சென்றது கிடையாது. எனது சுமைகளை எதுவித முகச்சுளிப்பின்றியும் தாங்கிக்கொள்ளும் பெரிய மனது அவனிடமிருந்தது. நானும் அவனின் சுமைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவனையும் நிட்சயமாகக் கண்டிருப்பார்கள்.  அவ்வளவு ஒற்றுமை எம்மிடையே இருந்தது.  நாம் இணைந்து வெளிநாட்டுப் பயணங்களும் செய்திருக்கிறோம்.

நான் களைத்துப்போகும் போதெல்லாம் அன்புடன், தோளில் கைபோட்டு எதையாவது உண் அல்லது குடி என்று கூறும் நண்பன் அவன். இன்று என்னை தெம்பூட்டும் நண்பனை இழந்திருக்கிறேன். வாழ்க்கை என்பது நிலையில்லாது என்பதை வாழ்க்கை மீண்டும் எனக்கு கற்பித்திருக்கிறது. மரணத்தைப் போன்றதோரு ஒரு சிறந்த ஆசான் எதுவுமில்லை. அது, தன்னை பல மனிதர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து போகிறது. என் நண்பனின் பிரிவும் அப்படியானதே.

நான் அவனை முதன் முதலில் சந்தித்தபோது மிகவும் திடகாத்திரமான உடம்புடன் தான் இருந்தான். காலப்போக்கில் சில பல நோய்கள் அவன் உடல்நிலையை பலவீனமாக்கின. மருந்து மாத்திரைகளில் நாட்டமற்ற மனிதன் அவன்.

அவன் எப்போதுமே ஆழமான மௌனத்தைக் கடைப்பிடிப்பவன். என்னைப் போல் அலட்டித்திரியும் குணம் அவனிடமில்லை. அவனுக்குள் பலதும் இருக்கும். பலதையும் உள்ளடக்கியவனே அவன். முக்கியமாய் புத்தகங்களை தன்னுடன் எப்போதும் வைத்திருப்பான். இறுதியாய் அவன் வைத்திருந்த புத்தகம் புஸ்பராணியின் ”அகாலம்”. அவன் காலமும் அத்துடன் அகாலமாகியது தான் வேதனை.

ஒரு நாள் ஒரு நண்பன் தலையிடிக்கிறது என்றான். இந்தா என்று குளிசையை நீட்டினான். வேறொரு நாள் நாம் ஆப்பிள் சாப்பிடும் போது எமக்குக் கிடைத்த அப்பிள் பழத்தை இரண்டாக வெட்‌டவேண்டியேற்பட்டது. தன்னிடம் இருந்த சிறு கத்தியை நீட்டினான். இன்னொரு நாள் ஒரு நண்பர் எழுதுவதற்காக பேனை தேடினார், அதுவும் அவனிடமிருந்தது. குடை, நீர்,  கணணி இப்படி எதையும் தன்னோடு கொண்டலையும் அற்புதமான ஜீவன் அது.

முடியாது என்று அவனிடம் இருந்து வார்த்தை வெளிப்பட்டது இல்லை. எதையும் தன்னை வருத்தியென்றாலும் செய்யும் குணம் நான் அவனை சந்தித்த முதல்நாளில் இருந்தே அவனிடம் இருந்தது. அவனிடம் இருந்து நான் கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது.

ஒரு வருடத்திற்கு முன் அவனுடம்பில் ஏற்பட்ட சில காயங்கள்  அவனது உடலை பலமாய் பாதித்தது. ஒரு காயம் ஆறுவதற்கு முன் மறுகாயம், அது ஆறுவதற்கு முன்  இன்னொன்று என்று விதி அவனுடன் விளையாடிக்கொண்டே இருந்தது. அவனின் கட்டுமஸ்தான உடலும் காலப்போக்கில் வலுவிழந்து அவனை முன்பைப்போல் சுகதேகியாய் நடமாட முடியாது முடக்கிப்போட்டது. இருப்பினும் என்னுடன் அலைந்து திரிந்தான்.

நானும் என்னாலானதைச் செய்து பார்த்தேன். விதி சில முடிவுகளை எடுக்கும் போது நான் அல்ல யார் எதைச் செய்தாலும் அது விதியின் படியே செல்லும் என்று நான் கடந்துவந்தபாதை எனக்கு அறிவித்திருக்கிறது. நண்பனின் வாழ்க்கையிலும் அப்படியே நடந்தது.

நண்பனும் நானும் இரண்டு நாட்களுக்கு முன் ஒஸ்லோவின் வீதியொன்றில் நடந்து கொண்டிருந்து போது எனது ஒரு பக்கத்து தோளில் கையை ஊன்றியபடியே வந்துகொண்டிருந்தான். அவனின் சுகயீனத்தின் கனத்தை நான் எனது தோளில் உணர்ந்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தோளில் இருந்து அவன் கை சறுக்கியதை உணர்ந்து திரும்பிப்  பார்த்தேன். மூச்சுப் பேச்சற்று வீதியில் கிடந்தான். அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டேன் அவனை. உடல் குளிர்ந்தது போலிருந்தது. எம்மைக் கடந்து சென்றவர்கள் பரிதாபத்துடன் என்னைப் பார்த்தார்கள்.

அவனைத் தூக்க சிலர் உதவினர். நெஞ்சோடு அணைத்தபடியே அருகில் இருந்த கடைத் தொகுதிக்குள் அவனைக் கொணடுபோனேன் போனேன். பலரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். உதவிக்கு எவரும் வரவில்லை.

அருகில் இருந்த கடைக்குள் அவனைக்கிடத்தினேன்.

அக் கடையில் அமர்ந்திருந்த அழகி நட்புடன் புன்னகைத்தாள். ஏதும் உதவி வேண்டுமா என்றாள். ஆம் என்று தலையாட்டினேன். அருகில் உட்கார்ந்து நண்பனை பரிசோதித்தாள். மௌனமாய் நிமிர்ந்து பின்பு உதட்டைப் பிதுக்கினாள்.

உனது தோள் பை (rucksack) இனிபாவிக்க முடியாதளவுக்கு கிழிந்துவிட்டது. இதனால் இனி எதுவித பிரயோசனமும் இல்லை என்றாள். அத்துடன் பயப்படாதே, அங்கே பல புதிய தோள்பைகள் (rucksack) இருக்கின்றன என்றாள்.

அவள் காட்டிய திசையில் சென்று, நான்  எனது புதிய நண்பனை தேடத்தொடங்கினேன்.

எனது பழைய தோள் பை (rucksack)யின் ஆத்மா சாந்தியடையக் கடவதாக!

நீங்கள் என்னை கொல்லாமலும் இருக்கக் கடவதாக!

புறக்கணிப்பின் கால்கள் புகைபோன்றது

அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது அவர் மிகவும் நலிந்த மனநிலையில் இருந்தார். இருவரும் உரையாடிக்கொண்டே இலையுதிர்காலத்து மாலையிருட்டில் நடந்துகொண்டிருந்தோம். மழையும் குளிருமாய் இருந்தது ஒஸ்லோவின் வீதிகள். எங்காவது உட்கார்ந்து தேனிரருந்தியபடியே பேசலாம் என்றபடியே நடந்துகொண்டிருந்தோம்

ஒரு ஒதுக்குப்புறத்துத் தேனீர்க்கடையொன்றில் அமர்ந்து தேனீர் தருமாறு கேட்டுவிட்டு உட்கார்ந்து, இருவரும் குளிர் காலத்து உடைகளை களற்றி கதிரையில் வைத்துத்ததும் உடலில் இருந்து பெரும்பாரம் இறங்கியது போலிருந்தது. இன்னும் 5 மாதத்துக்கு குளிர் தான் என்று அங்கலாய்த்தார் நண்பர். நானும் அதை ஆமோதித்தேன்.

இருவரின் பேச்சும் வாழ்க்கைபற்றித் திரும்பியது. வாழ்கையில் புறக்கணிப்பு என்பது எந்தளவுக்கு ஒரு மனிதனை பாதிக்கிறது என்று ஆரம்பித்த நண்பர் பேசி முடித்த போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும் தான். எங்களில் எத்தனை மனிதர்கள் எத்தனை எத்தனை அந்தரங்கங்‌களை மௌனமாய்ச் சுமந்தபடி அலைந்து திரிகிறோம்? வாழ்க்கையின்பால் பலத்த ஏமாற்றத்தில் இருந்தார், அவர். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பவாழ்க்கை, பொதுவாழ்க்கை எங்கும் புறக்கணிப்பின் நிழல் அவரைத் தொடர்ந்துகொண்டிருந்தது.

புறக்கணிக்கப்படுவதன் வலியையும், புறக்கணிக்கப்படும் போது ஏற்படும் குரூர இன்பம் இவையிரண்டையும் தான் அனுபவித்திருப்பதாயும், இவையிரண்டாலுமே தனது வாழ்க்கைத்துணையுடனான நட்பு, அன்பு, அன்னியோன்யம், புரிந்துணர்வு, சில மனிதர்களுடனான நட்புகள் ஆகியவை தொலைந்துபோயின என்ற போது நானும் அவரின் கருத்துடன் உடன்பட்டிருந்தேன்.

எப்போது புறக்கணிப்பு மனிதர்களுக்கிடையே ஆரம்பிக்கிறது? எவ்வாறு அது ஒரு நெருக்கமான உறவுக்குள் புகுந்து, அவ்வுறவுகளைப் பிளவடையச்செய்கிறது? இதில் இருந்து மீண்டுகொள்ள முடியாதா? என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

அடுப்பங்கரையின் புகைபோன்று புறக்கணிப்பு எதுவித ஓசையும் இன்றி மனிதர்களின் வாழ்வுக்குள் புகுந்து, நிறைந்து, நிமிர்ந்து பார்க்கமுடியாதளவுக்கு வாழ்வினை சிரமப்படுத்துகிறது. ஏமாற்றங்களில் தான் புறக்கணிப்பின் பிறப்பு நிகழ்கிறது. அதன் பின் அது எங்களுடனேயே வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. அது தன் சுமையைச் சுமக்கும் பொறுப்பை அது எங்கள் மீது சுமத்திவிட்டு அது எங்கள் மேலேயே சவாரிசெய்கிறது.

நண்பரின் சரிதத்துடன் நானும் என் வாழ்வினை ஒப்பிட்டுப்பார்த்தால், புறக்கணிப்பு என் வாழ்வின் எந்தக் காலகட்டத்தில் உட்புகுந்தது என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாதிருக்கிறது. திருமணமாகி காதல்கசிந்துருகியபோதா? காமம் வடிந்ததோடியபின்பா? குடும்பம் குட்டி என்றாகியபோதா? அல்லது எனது சுயம் மறுக்கப்பட்டபோதா? வாழ்வின் எல்லா படிநிலைகளிலும் புறக்கணிப்பினை உணர்ந்ததாகவே நினைவு பதிலளிக்கிறது. அதேபோல் நானும் தெரிந்தும் தெரியாமலும் மற்றையவரை புறக்கணித்திருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்வதில் எதுவித வெட்கமும்இல்லை, எனக்கு.

வாழ்வின் எல்லாபடிநிலைகளிலும், ஏமாற்றங்கள் என்னை அல்லது மற்றையவரை சுழ்ந்த கணங்களில், புறக்கணிப்பின் புகை எம்மிருவருக்குமிடையில் புகையத்தொடங்கியிருக்கவேண்டும். அதை நாம் நுகர்ந்தறியத் தவறியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். புறக்கணிப்பிற்கு, புரிந்துணர்வு என்பதை புரியாதிருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்றே எண்ணத் தோன்றுகிறது. புரிந்துணர்வு இருப்பின் ஏமாற்றங்கள் குறையுமல்லவா. புரிந்துணர்வு என்பது இருபாலாருக்குமே அவசியம்.

நீண்டகால புறக்கணிப்புக்கள் மனித உறவுகளின் மென்மைத்தன்மைகளை, ஈரலிப்பை மரத்துப்போகச் செய்கிறது. ஒருவரின் மென்மையான உணர்வுகளைப் பற்றி மற்றையவர் உணரும் தன்மையை இழந்துபோகிறார். இதுவே ஒரு உறவின் முடிவின் ஆரம்பம். கண்களில் அன்பு மறைந்து குரோதம் குடிவந்துவிடுகிறது. குரலில் அன்பின் ஈரம் வறண்டு காய்ந்துபோகிறது, வெறுப்பும் எரிச்சலும் தெறிக்க ஆரம்பிக்கிறது . செய்கைகளில் அலட்சியமும், சினமும் தெரிய ஆரம்பிக்கிறது.  அவர்களுக்கிடையே பேச்சற்ற நிலை வரும் போது புறக்கணிப்பு தனது முழுவெற்றியையும் கொண்டாடிக்கொண்டிருக்க ஒரு மனிதஉறவு தொலைந்துபோயிருக்கும்.

நானும் இப்படியானதொரு நிலையைக் கடந்துவந்தவன். என்னைப்போல் பலரும் இப்படியானதொரு வாழ்வினை வாழ்ந்துகொண்டிப்பதை நன்கு அறிவேன். விழுங்கவும் முடியாது மெல்லுவும் முடியாது போன்ற மிகவும் கொடுமையான வாழ்வுதான் அது. எனது நண்பரும் வாக்குமூலத்தின் சாரமும் இவற்றையே கூறின..

எனது நண்பர் தேனீரை ஊறுஞ்சியபடியே என்னைப் பார்த்து இப்படியான ஒரு உறவில் தொடர்ந்தும் வாழவேண்டுமா என்றார். நான் அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்வதினால் உனது ”வாழ்க்கைத் தரம்” உயர்கிறது என்று நினைக்கிறாயா என்றேன். மெளனமே பதிலாயிருந்தது அவரிடம்.

மனிதர்களால் மீண்டும் புறக்கணிப்பற்ற அன்பின் ஆரம்பகாலத்திற்குச் செல்லலாம் என்னும் நம்பிக்கை என்னிடம் இல்லை. அப்படியான பொறுமையும், நற்குணமும் என்னிடமில்லாதிருக்கலாம். ஆயினும் எனது பலவீனங்களுடனேயே நான் எனது வாழ்வினை வாழப்பழகிக்கொண்டிருக்கிறேன். அது ஒருவிதத்தில் பெருத்த ஆறுதலைத்தருகிறது.

புறக்கணிப்பு என்பது புரையோடிய புண்போன்று ஆறாது தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆம், எனக்கு அப்படித்தான் இருக்கிறது என்றேன், நண்பரிடம். தலையைக் குனிந்தபடியே இருந்த அவரின் தலை மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருந்தது.

வீடு, வசதி, வங்கியிலே இருப்பு, ஊருக்குள் பெயரும் புகழும் என்று புறவாழ்வு நிம்மதியாருந்தாலும் அகவாழ்வானது நிம்மதியின்றி இருக்கும் தன்மையின் தார்ப்பர்யத்தை நான் நன்கு அறிவேன். எனது நண்பரும் அதை ஆமோதித்தார். வாழும் வாழ்க்கையின் தரம் என்பது மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடுகிறது. தேடுதல் இருப்பவர்கள், அது பற்றிய புரிதல் இருப்பவர்களே பல சிக்கல்களை, மனப்போராட்டங்களை கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. தனது அகவாழ்வின் வாழ்க்கைத்த்தரம்பற்றி அலட்டிக்கொள்ளாதவர்கள் ஒருவிதத்தில் பல சிக்கல்களில், மனப்போராட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்கிறார்களாஎ ன்ற கேள்வி எம்மிருவரிடமும் இருந்தது.

தன் வாழ்வில் இப்படியானதொருநிலை வரும் என்பதை நண்பர் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும், இப்போது என்ன செய்வது என்று தடுமாறிக்கொண்டிருப்பதாயும், முறிந்துபோன மனங்களை சீர்செய்வது சாத்தியமற்றது என நன்கு அறிவதாயும் கூறினார். மௌனமாய், அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவரின் இல்வாழ்வு தோல்வியடைந்திருப்பதை ஏற்கும் மனம் இதுவரை அவருக்கு வாய்க்கவில்லை என்பது புரிந்து. பெற்றோர், சகோதர சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள், சமூகம் என்று பலருக்காகவும் அவர் பயந்துகொண்டிருப்பதை உணர்த்தியது அவர் பேச்சு. இது ஒன்றும் புதிதில்லை. எமது சமுதாயத்தில் பலரும் கடந்துகொள்ளும் ஒரு படிநிலைதான் இது, ஆனால் மனமுறிவுகளை ஆழ்மனரீதியாக, உணர்வுபூர்வமாக அவர் சீர்படுத்திக்கொள்ளமுடியாதுபோயின் சிரமமான மன அழுத்தங்களுடன் நீங்கள் இருவரும் வாழும்நிலை ஏற்படலாம் அதற்குத் தயாரா என்றேன். எங்களுக்கிடையில் சில மௌனமான கணங்கள் கடந்துபோயின. இருவரினதும் தேனீர்க்கோப்பைகளும் காலியாகியிருந்தன.

என்னசெய்யலாம் என்றார் என்னிடம்.

மனதுடன் உரையாடு, மீண்டும் மீண்டும் உரையாடு. பதில் கிடைக்கும். எப்போ என்று என்னிடம் கேட்காதே. ஆனால் நிட்சயமாய் ஒரு நாள் பதில் கிடைக்கும் என்றேன்.

அர்த்தமாய் புன்னகைத்தபடியே எழுந்து குளிர்காலத்து உடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டோம். வெளியே குளிர் முகத்திலடித்தது. விடைபெற்றுக்கொண்ட நண்பர் எதிரே இருந்த வீதியில் இறந்கி நடக்கத்தொடங்கினார். நடையில் தளர்வு தெரிந்தது.

நிலக்கீழ்தொடருந்து நிலயத்தைநோக்கி நடக்கலானேன், நான். மனதுக்குள் நண்பரின் மனதுக்கு என்ன பதில் கிடைக்கும் என்று சிந்தனையோடிக்கொண்டிருந்து.
 
 

மாவீரர் வாரத்தில் களியாட்டவிழா - வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது


நான் 23.10.12 அன்று The Srilankan assosiation of norway மாவீரர் நாட்கள் நடைபெறும் காலப்பகுதியில் ஒரு களியாட்டவிழாவினை ஒஸ்லோவில்  தமிழர்களை இணைத்து நடாத்துவது பற்றி எனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவிட்டிருந்தேன்.


பார்க்க:
முகப்புத்தகப் பதிவு

23ம் திகதி எழுதிய பதிவுக்கும் இன்றைக்கும் (15.11) இடையிலான காலப்பகுதியில் எனக்குக் கிடைத்த தகவல்கள் சிலவற்றை நான் பகிரவும், எனது சில தனிப்பட்ட கருத்துக்களை பதியவும் விரும்புகிறேன்.

  1. நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் சமூகமளித்த, தமிழர்கள் கூடும் பொது இடமொன்றில் இந் நிகழ்வு பற்றிய விளம்பரங்களை இணைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தூதுவராலயத்திற்கும் இந் நிகழ்விற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது புலப்படுகிறது.
  2. The Srilankan assosiation of norway அமைப்பினரால் இந் நிகழ்வு வருடாந்தம் கார்த்திகை மாத இறுதி வாரத்தில் நடைபெறும நிகழ்வு அல்ல.
  3. இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துடைய சில தமிழர்கள், தாம் ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் எமது சமுதாயத்தின் நலன் கருதியும், மாவீரர்களைக் கொண்டாடும் எம்மவர்களின் கருத்துக்களை மதிப்பதாலும் தாம் இந் நிகழ்வினில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்திருக்கிறார்கள்.
  4. தாம் இக் களியாட்டவிழாவினைத் திட்டமிட்டபோது மாவீரர் தினம் வருவது தமக்கு தெரியாது என்றும், தற்போது நுளைவுச்சீட்டுக்கள் விற்றபின் இந் நிகழ்வினை நிறுத்தமுடியாது என்றும், எனினும் அனைவரின் ஒற்றுமையையுமே தாம் விரும்புவதாகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
  5. தற்போது Roots  இசைக்குழுவினர் இந்நிகழ்விற்கு இசையமைக்கவில்லை. தனிப்பட்ட சில தமிழர்கள்  இவ்விழாவிற்கு இசையமைக்கிறார்கள்.

எனது கருத்துக்கள்:

The Srilankan assosiation of norway அமைப்பினர் சில தமிழர்களைகளை உள்வாங்கியும், சில தமிழ் இசைக்கலைஞர்களை இணைத்தும் இந்நிகழ்வினை திட்டமிட்டபோது, அத்தமிழர்கள் மாவீரர்தினம் பற்றி கூறவில்லை என்றும், The Srilankan assosiation of norway க்கு வருடாந்தம் நடைபெறும் மாவீரர் தினம் வருவது தெரியாது என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனக் கொள்வோம்.

அதேவேளை இக்களியாட்டவிழா பற்றிய தமிழர்களின் விசனம் பற்றி எனது நண்பர்கள் The Srilankan assosiation of norway க்கு அறிவித்திருந்தார்கள். அவை 23ம் திகதியளவிலேயே அறிவிக்கப்பட்டன.

ஏறத்தாள விழா நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, விழாபற்றிய அறிவிப்பு வெளிவந்து மிகக் குறுகிய காலத்தில் இது பற்றி தமிழர்களால் அறிவிக்கப்பட்டும், இந் நிகழ்வினை  பின்போட்டிருக்கமுடியாதென்று கூறுவது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

இவ்விழாபற்றிய அறிவித்தல் கிடைத்து ஒரு சில நாட்களுக்குள் நுளைவுச்சீட்டுக்கள் விற்றுவிட்டன, அதனால் திகதியை மாற்றமுடியாது என்னும் கருத்தை கூறுவது நியாயமா என்பதையும், ஒரு மாற்றுத்திட்டத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா என்னும் கேள்விக்கான விடையை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

பிளவுண்டிருக்கும் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டை, ஒற்றுமையை மதிக்கும் எவரும்  தமிழர்களின் உணர்வுரீதியான முக்கிய விடயம் சுட்டிக்காட்டப்படும் போது அது பற்றி சிந்திக்காது தொடந்தும் கசப்புணர்வுகளை வளர்க்கும், காயங்களைக் கிளரும்,  நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

சமூகங்களுக்கு இடையே நட்புறவையும், ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கவேண்டும் என்று கூறும் மனிதநேயமுள்ள தமிழர்கள், தமிழ்பேசும் மக்கள், பெரும்பான்மையினத்தவர்கள் ஆகியோர்  ஈழவிடுதலைப் போடாட்டத்தில் பங்குபற்றிய அனைத்து விடுதலைப் போராளிகளும் தமிழர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பர்கள் அனைவரின் மனங்களிலும் தியாகிகளாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அவர்களிடம் சக மனிதனின் மனதையும், அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மையும் இருக்கிறது.

இன ஒற்றுமையையும், சமத்துவத்தையும் விரும்பும் The Srilankan assosiation of norway க்கு சக மனிதனின் மனதையும், அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மையும் இல்லாதிருக்கிறது என்பதையே அவர்களின் இந் நடவடிக்கை காட்டுகிறது. அத்துடன் அவர்கள் தமிழர்கள் மத்தியில் தமக்கிருக்கும் நற்பெயரையும் சிதைத்துக்கொள்கிறார்கள் என்பதயையும் அவர்கள் உணராதிருக்கிறார்கள்.

இனங்களுக்கிடையில் நல்லுறவைப் பேணுகிறோம் கூறப்படும் கருத்துக்களை இலங்கைத் தூதுவராலயம் நேர்மையாக முன்னெடுக்கிறது என்றால், அவர்களுக்கிருக்கும் ”சகிப்புத் தன்மையுடன், நட்புறவுடன், பெருந்தன்மையுடன்” இவ் விழாவினைப் பின்போட்டிருக்கலாமல்லவா?

இலங்கைத் தூதுவரே இவ்விழாபற்றி தமிழர்கள் கூடுமிடத்தில் விளம்பரம் செய்வது எதைக்காட்டுகிறது? இதுவா அவர்களால் கூறப்படும் சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, நட்புணர்வு, இணக்கப்பாடு?

எனக்கு பெரும்பான்மையினத்தவருடன் எதுவித விரோதமோ குரோதமோ இல்லை. ஆனால் விழா நடைபெறும் காலம் தவறு என்பதே எனது கருத்து.

தவிர இவ்விழாவின் மூலம் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின், பெரும்பான்மையினரை வேண்டுமென்றே சீண்டுவது போலவும், அச் சமூகத்தை அச் சமூகத்தவரைக்கொண்டே மேலும் பலவீனமாக்குவதையும், பிளவுபடுத்துவதையும் மிகவும் தெளிவாக காணக்கூடியதாகவிருக்கிறது. பிரிததாளுதற் தந்திரமே இது. இதை வேறு என்னவென்று கூறுவது?

விடுதலைப் புலிகளின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களைக்கொண்டிருக்கும் ஒஸ்லோவாழ் ஏனைய தமிழ் இயக்கத்தவர்கள் கூட, தமக்கு இவ் விழாவிற்கான அழைப்புக் கிடைத்த போதும், அதனை எமது சமூகத்தின் நலம் கருதி, அழைப்பினை ஏற்கமுடியாது என்றும் அதற்கான காரணத்தை விளக்கியும் உள்ளார்கள்.

இவ்விடயம் பற்றிய எமது சமூகத்தின் அதிர்வுகளை உள்வாங்கி, Roots இசைக்குழு இவ்விழாவிற்கு இசையமைக்காது தவிர்த்துள்ளது பாராட்டத்தக்கது. கலைக்குழுக்களுக்கும் சமூகம் பற்றிய பிரஞ்ஞை இருக்கிறது, எமது சமூகத்தின் கருத்துக்களுக்கு அவர்கள் மதிப்பளிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஆனால் வேறு சில தமிழர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள், இசையமைக்கவும் செய்கிறார்கள்.

இவ்விழாவில் கலந்து கொள்ளும் தமிழர்களுக்கு மாவீரர்நாள் பற்றிய பிரஞ்ஞை இல்லாதிருக்கலாம் அல்லது அவர்கள் மாவீரா்நாளில் ஏற்புடையாதவர்களாக இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அதில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.

ஆனால் அவர்கள் அவ் விழாவில் கலந்துகொள்வதால், எமது சமூகத்தில் ஏற்படும் விசனங்களையும், கசப்புணர்வுகளையும், பேரினவாதிகளின் பிரச்சாரங்களுக்கு அவர்கள் துணைபோவதையும்  அறியாதிருப்பது மிகவும் தூரதிஸ்டவமானது.

இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் தமிழர்கள் பெரும்பான்மை தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும். கருத்துவேற்றுமை இருப்பினும் தமிழர்கள் சில விடயங்களில் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள் என்னும் எண்ணத்தை பலருக்கும் புரியவைக்கவேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறத்தலாகாது.

வெளிப்படையான சுயலாபமும், பிரபல்யமும், ஏனைய வசதிகளுக்காகவும் பேரினவாதத்தின் இப்படியான திட்டங்களுக்கு துணைபோவதன் அபாயத்தை தமிழர்களாகிய நாம் நன்கு உணரவேண்டும்.

இந் நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் தமிழர்களே, தமிழ்பேசும் மக்களே, பெரும்பான்மையினத்தைச்சேர்ந்தவர்களே! இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்பதை நாங்களும், நீங்களும் அறிவோம்.

வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது என்பதை மறக்காதிருப்போமாக!

கருத்தில் உடன்படுகிறீர்கள் எனின் ஏனையவர்களுடன் பகிர்ந்தால் மகிழ்ச்சி.


தோழமையுடன்
சஞ்சயன்