வரிக்குதிரையாக மாறிய இளம் பெண்

இன்று காலை நிலக்கீழ் பேரூந்தில் இருந்தபடி சுற்றாடலை ரசித்தபடி இருந்திருந்தேன். குழந்தைகள், சிறுவர்கள், விடலைகள, பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரும் அங்கிருந்தனர். 

அடுத்து வந்த நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் ஒரு பெண் உள்ளே ஏறினாள். அவளைக் கண்டதும் என்மனதில் வரிக்குதிரையின் நினைவே வந்தது. அவள் வரிக்குதிரை போல் கறுப்பில் வெள்ளை நிற சட்டையணிந்திருந்தாள். மெலிந்து நீண்ட முகம், வரிக்குதிரையின் மூக்கு போன்று வழவழப்பான மூக்கு, நீண்ட காது, திடமான தசையுடைய கைகள், கால்கள், வரிக்குதிரை வால் போன்ற பழுப்பு நிறமான கூந்தல், புடைத்த கழுத்து என அவளுக்கும் வரிகுதிரைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருந்ததாய் தெரிந்தது எனக்கு. மிக அலட்சியமாக அவள் நின்றிருந்த விதமும் வரிக்குதிரையின் தன்மையையே காட்டிற்று.

அவளையே பார்த்திருந்தேன். ஏன் எனக்கு இவள் வரிக்குதிரையாய் தெரிய வேண்டும் என்று சிந்தனையோடிக் கொண்டிருந்தது.

அதன் பின் எனக்கு முன்னால் இருந்த ஒரு ஆணிண் மேல் என் கண்கள் சென்ற போது திடுக்கிட்டு விட்டேன், நான். அவர் ஒரு பனிக்கரடி போலிருந்தார். பழுப்பு நிறமான உடை. தலை மட்டும் தெரிய  உடலின் மற்றைய பகுதிகள் மறைக்கப்ட்டிருந்தன.  பருமனான முகத்தில் கூர்மையான கண்கள். பருத்த திடமான சப்பாத்து,  செழித்து வளர்ந்த உடம்பு என இருவர் உட்காரும் இடத்தை பிடித்தபடி உட்கார்ந்திருந்தார் அவர்.

மனம், குழம்பி என்னையும் குழப்பியது. ஏன் நான் இவர்களை மிருகங்களுடன் ஒப்பிடுகிறேன் என புரியவில்லை. எனது சிந்தனையையும் மீறி மனது மற்றைய மனிதர்களையும் மிருகங்களுடனும், பறவைகளுடனும் ஒப்பிட்டது. சில வேளைகளில ஏற்படும் சிந்தனைகள் விசித்திர‌மானவையாகவே இருக்கின்றன. காரணம் என்ன என்று புரியவில்லை.

எனக்கு முன்னால் ஒரு தாயும் இரு குழந்தைகளும் இருந்தார்கள். குழந்தைகளின் சேட்டைகளை அனுபவித்தபடியே தாய் ஐன்னலுக்கப்பாலிருந்த உலகில் தன்னை மறந்திருந்தார். எனக்கேதோ அவர் ஒரு கிழட்டுச் சிங்கம் போலவும் குழந்தைகள் சிங்கக் குட்டிகள் போலவும் இருந்தனர். பெண்ணிண் உடல்வாகு கிழட்டுச் சிங்கத்தை ஒத்ததாகவும், குழந்தைகளின் உடம்பு சிங்கக் குட்டிகளை ஒத்ததாகவும் இருந்தது. குந்தைகள் அவர் மீதி ஏறி வியைாடினர். தம்மை தானே தள்ளி விளையாடினர். தாய் எங்கொ பார்த்திருந்தாலும் கவனம் குழந்தைகளில் இருந்தது. இடையிடையே குழந்தைகளை தம் கட்டுப்பாட்டி்ற்குள் அழைத்துவந்தார். சிங்கம் போல் பெரிதாய் கொட்டாவியும் விட்டார்.


இவர்களுக்கு அருகில் அழகிய பஞ்சவர்ணக் கிளியொன்று தேவைக்கு அதிகமான உதட்டுச்சாயத்தை கண்ணாடியில் பார்த்தபடி அப்பிக் கொண்டிருந்தது. தலைமயிர் இளஞ்சிவப்பாயும், தோடுகள் பஞ்சை, மஞ்சல் நிறத்திலும், தலைச்சோடனைகள் இன்னும் பல நிறங்களிலும். உடை மெ்ல்லிய பச்சை, மஞ்சல், நீல நிறத்தில் இருந்தன. யாருடனோ தொலைபேசினாள். குரலும் கீச்சுக்குரலாயிருந்தது.

இன்னுமொருவர் சற்று தள்ளி அமர்ந்திருந்தார். மெல்லிய நீண்ட உடம்பு, வழுவழுத்து மினுங்கும் உடை. அவரைப் பார்த்ததும் பாம்பு மாதிரி இருந்தார். பாம்பாட்டியின் மகுடியை பார்த்திருக்கும் பாம்பு மாதிரி தனது கையில் இருந்து iPhone இல் லயித்து அதைத் தவிர வேறு எதிலும் கவனம் இன்றியிருந்தார். iPhoneஐ பறித்தால் பாய்ந்து கொத்திவிடுவாரோ என்று என் சிந்தனையோடிற்று.

அடுத்து வந்த புகையிரத நிலையத்தில் அந்த வரிக்குதிரைப் பெண் இறங்கி அழகாய் நடந்து போனாள். அவளின் பின்புறம் மட்டுமே தெரிந்தது எனக்கு. அதுவும் வரிக்குதிரை மாதிரியே இருந்து.

அன்று, என்னுடன், அந்த நிலக்கீழ் புகையிரதத்தில் பயணித்த யாராவது,
என்னடா இது .. என்னருகில்
அண்டங்காக்கை நிறத்தில்
பேத்தைகளின் வண்டியுடன்
டைனோசர் முட்டை‌ போன்ற தலையுடன்
பன்றியின் அசிங்க அழகோடு
கிழட்டுக் குரங்கு வயதில்
ஒருவன் குந்திருந்து என்னை ஆந்தைக் கண்ணால் பார்க்கிறானே என்று நினைத்திருக்கக் கூடுமோ?

இருக்கலாம் ....

யாமறியோம் பராபரமே!


.

சேர்ந்து சிந்திப்போமா?

இன்று (26.06.11) ஒஸ்லோவில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழாவிற்கு மாலை போல் சென்றிருந்தேன். குழந்தைகள், சிறுவர் சிறுமியர், வளர்ந்தோர் என்று பலரும்  மகிழ்ச்சியாய் இளவெனில் காலத்தின் சுகத்தினை அனுபவித்தவாறு நின்றிருந்தனர். நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியாகவே நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இவ்விளையாட்டுப்போட்டியில் மாவீரரை கௌரவப்படுத்தும் விதமாக அரசியல், கருத்து பேதமின்றி அனைத்து தமிழ்த் தரப்பினரும் பங்குபற்றியது மனநிறைவான விடயம். இவ்விழாவினை ஒழுங்கு செய்தவர்களும், அதில் பங்கு பற்றிச் சிறப்பித்தவர்களும் பாராட்டுக்குரியவர்களே!

நிகழ்ச்சிகளின் முடிவில் பரிசளிப்பு விழாவிற்கு முன்பாக ஒரு உரை  நிகழ்த்தப்பட்டது. அவ்வுரையை வழங்கியவர் இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள், அம் மீறல்கள் பற்றி நாம் ஏன் இந்நாட்டு மக்கள், மனிதநேய நிறுவனங்கள்,  அரசியற் கட்சிகள் என்பனவற்றிற்கு எடுத்துக்கூற வேண்டியதற்கான அவசியம் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஒருவர் அவரருகில் சென்று வாதத்தில் ஈடுபட்டார். அவ்விடத்தில் நின்றிருந்த சிலர் அவர் அவரை அகற்ற முற்பட, அவர் விவாதிக்க அவ்விடத்தில் விரும்பத்தகாத சலசலப்பு உருவாகியது. இறுதியில் அவரை சில பார்வையாளர்கள் வந்து அழைத்துப் போயினர். அதன் நிகழ்ச்சியும் இனிதே நடந்து முடிந்தது.

மேற் கூறிய சலசலப்பின் போதும், அதன் பின்பு நடைபெற்ற ஒரு சம்பவமும் என் மனதை எரிச்சலுற வைத்தது. அது பற்றிய எனது பார்வையே இந்தப் பதிவு.

முதலாவது சம்பவம்: சலசலப்பு.

அச் சலசலப்பை உருவாக்கியவரின் செயல் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல நாம் அனைவருமே வெட்கப்படவேண்டியது. எம்மக்களுக்காக நடைபெறும் விழாவில் அதுவும்  எமது விடுதலைப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் நடைபெறும் விளையாட்டுவிழாவில்  நாம் இவ்வாறு இடையூறு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அநாகரீகமானது, கண்டிக்கத்தக்கது.

அவரின் கருத்து எந்தவித கருத்தாக இருப்பினும் அதை நாகரீகமான முறையில் விளையாட்டு விழா முடிந்த பின்பு முன்வைத்திருக்கலாம் என்பது எனது கருத்து.

இவ் விளையாட்டு விழாவினை யார் நடாத்துகிறார்கள் என்ப‌தனை அறிந்த பின்பு தானே அவ்விளையாட்டில் பங்கு பெறவோ, அல்லது அந் நிகழ்வினை பார்வையிடவோ வருகிறோம். எம் கருத்துக்கு ஒவ்வாதவரின் நிகழ்வு எனின் நாம் அங்கு செல்வதனை தவிர்க்கலாம், அல்லது அங்கு சென்றாலும் அந் நிகழ்வுக்கு இடையூறு செய்யாடமலிருப்பதே நியாயம், தார்மீகம்.

ஒரு மகிழ்ச்சியான விளையாட்டுவிளையாட்டு விழாவின் போது, எமது குழந்தைகளுக்கு முன், அவர்கள் தங்களின் பரிசில்களுக்காக மிக மகிழ்ச்சியாக காத்திருக்கும் வேளையில் இவ்வாறான நடத்தைகள் அவசியம் தானா? இதனால் என்ன பயன் கிடைக்கிறது? சற்றும் சிந்திக்காமலே இவ்வாறான நடத்தைகள் எவ்வித நன்மையையும் பயக்கப்போவதில்லை என்பதனை நாம் அறிவோம்.

விளையாட்டுக் குழுக்களுக்கு பொறுப்பானவர்களும் தங்கள் அங்கத்தவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளை கண்டித்து, குறிப்பிட்ட நபர்களுக்கு  அதன்  பாதகங்களை எடுத்துக் கூறாதவிடத்து அவர்களும் ஒரு தவறுக்கு மறைமுகமாக உடைந்தையாகிறார்கள் என்பது எனது கருத்து.

இரண்டாவது சம்பவம்: விரும்பத்தகாத வசனம்.

இது மேற் கூறிய சம்பவம் நடந்த போது அவ்வுரையை ஆற்றியவர் தனது உரையை முடித்ததும் விளையாட்டுப் போட்டியினை நடாத்தும் குழுவில் உள்ள முக்கிய பணியாளர் ஒருவர் ஒலிவாங்கியில் பின்வரும் தொனியில் உரையாற்றினார்.
”தமிழ் மக்களின் பெரும் ஆதரவோடு இவ் விளையாட்டுவிழா நடைபெறுகிறது. இவ் விழாவினை  அசம்பாவிதங்கள் இன்றி நடாத்த அனைவரினதும் உதவி தேவை” என்றார்.

இக் கூற்று வரவேற்கத்தக்கது. பலரும் வரவேற்பார்கள் அதை. நான் உட்பட.

ஆனால் தொடந்து வந்த வார்த்தைகளை அவர் சற்று சிந்தித்த பின் பேசியிருக்கலாம் என்பேன் நான்.
அவர். ”நாம் எவருக்கும் பயப்படமாட்டோம்” என்றார்.

இவ் வார்த்தைகள் அவசியம் தானா? இது ஒரு வித மறைமுக சவால் போன்றல்லவா இருக்கிறது. இதனால் ஏற்படும் வடுக்கள், வலிகளை நாம் அறியாதவர்களா என்ன?

அவரின் மனநிலையை நான் நன்கு உணர்கிறேன். எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில், பலரின் அளவற்ற உதவிகளோடு, எவ்வித தனிப்பட்ட நலனுமின்றி இந்த விளையாட்டுவிழாவினை நடாத்துகிறார்கள். அதன் போது வேண்டுமென்றே தகாத நடத்தைகள் மூலம் இந் நிகழ்வு குழப்பப்படுவதை அதில் பங்குபெறும் எவராலும் தாங்கமுடியாது என்பதை நான் அறிவேன்.

இருப்பினும் மேற் கூறப்பட்ட காரணத்திற்காக அவரின் கூற்று ”நியாயமானது” என்று என்றால் ஏற்க முடியாதிருக்கிறது.

ஏன்னெனில், காலாகாலமாக எமக்குள் ஏற்பட்ட பிரிவுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் எமது சகிப்புத் தன்மையற்ற தன்மையே காரணம் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. இன்றும் பிளவுகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந் நிலையில் பலரின் மனங்களையும் ரணமாக்கும் வார்த்தைகள் தேவைதானா?

அவர் அந்த வார்த்தைகளை தவிர்த்திருப்பார் எனின் மறப்போம், மன்னிப்போம், முன் நகர்வோம் என அவர் நடந்து கொள்கிறார் என அர்த்தப்பட்டிருக்கும். ஆனால் அவரது வார்த்தைகளின் தொனி சவால் விடுவது போல் இருப்பது தமிழர்களுக்கு நன்மை பயக்குமா என்பதே எனது கேள்வி. இல்லை என்பதே எனது பதிலாகவும் அமைகிறது. இவ்வார்த்தைகளை நான் மட்டுமல்ல அங்கு நின்றிருந்த பலரும் ரசிக்கவில்லை என்பதை அவர்களின் முகபாவனைகள் காட்டின.

பல தமிழர்களை, தமி‌ழர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படு்த்தும் TCC அமைப்பினர் மத்தியிலிருந்து இவ்வாறான சவால்கள் அவசியம் தானா? அதுவும் நாம் சிதறுண்டு போய்கொண்டிருக்கும் இன்றை காலகட்டத்தில்.

இது பற்றி விவாதிக்கப்படும் பல இடங்களில் அவரின்  கூற்று ஒரு தனிப்பட்ட மனிதனின் கூற்றாக  பார்க்கபட மாட்டாது. அது TCC அமைப்பினரின் கூற்றாகவே பார்க்கப்படும். அது  எமக்கு சாதகமானதா? நிட்சயமாக இல்லை.

சிறு கண நேர உணர்ச்சி பலரின் மனங்களையும் ரணமாக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். இவ்வாற தவறுகள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைப்புக்களிடம் இருந்து வருவது விரும்பத்தக்கதல்ல. உரியவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்புகிறேன்.
----------------------------------------

இது பற்றி யாராவது விவாதிக்க விரும்பினால் உங்கள் கருத்துக்களை தனிப்பட்ட பெயர்களை தவிர்த்து, நாகரீகமான முறையில் விவாதிக்கலாம். அநாகரீகமான முறையில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் அகற்றப்படும் என்பதனையும் அறியத் தருகிறேன்.

அனுமதி பெற்ற ‌பின்பே இப் பதி‌வினை பிரதி எடுக்கலாம்.

நன்றி
நட்புடன்சஞ்சயன். செ

33 வருடங்களின் பின்னான பிராயச்சித்தம்

மாலைப் பொழுதொன்றில் மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன். சிறிதாய் மழை தூறிக்கொண்டிருந்த போது வீதியோரத்தில் நின்றிருந்தது ஒரு சிட்டுக்குருவிக் குஞ்சு அதை மிக அருகில் கடந்தபோது அது பறப்பதைத்  தவிர்த்து ஆர்வமாய் வீதியில் இருந்த எதையோ கொத்தியபடி தன்னை மறந்திருந்தது. கடந்து சில அடிதூரம் சென்ற பின்பு திரும்பி்ப் பார்த்தேன். அக் குருவி இப்போ வீதியின் நடுவில் நின்றது. அதனை வேகமாக கடந்து போன சைக்கிலையும் அது சட்டைசெய்யவில்லை. அடுத்து வந்த காரின் சக்கரத்தையும் அது ச‌ட்டை செய்யவில்லை. வீதிக்கு நானே அதிபதி என்பது போல் அநாயசமாக நடந்து திரிந்து கொண்டிருந்தது, பயமறியா இளங்கன்று போல். பறப்பதற்கு கற்றுக் கொள்ளாத குருவிக் குஞ்சு அது.

நான் எனது நடையை நிறுத்தி குருவியைப் பார்ப்பது போல ஒரு பெண்ணும் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரின் எண்ணமும் ஒன்றாய் இருந்திருக்க வேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் குருவிக்கருகில் நின்றோம். நாம் குருவியை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விடலாம் என பேசிக் கொண்டதால் காரியத்திலும் இறங்கினோம்.

நான் வீதியின் குறுக்கே நின்று வாகனங்களை நிறுத்துவதாகவும், அவர் குருவியை பிடிப்பது என்றும் ஒப்பந்தமாயிற்று.  விதியின்  நடுவில் கத்தரி வெருளி போன்று கைகளை அகட்டியபடியே இருபுறத்தாலும் வந்த வாகனங்களை நிறுத்தினேன். வாகனமோட்டிகளின் முகங்களில் எனக்கேதும் சுகயீனமோ என்ற சந்தேகம் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.


அப் பெண் குருவியைப் பிடிக்கப் பார்த்தார். அது பிடிபடும் போல் பாவ்லா காட்டியபடியே பிடிபடாமல் இருந்தது.

எங்கள் நிலையைக் கண்ட இன்னொரு பெண்ணும் எம்முடன் சோர்ந்து கொண்டார். இப்போ குருவியின் உயிகை் காப்பாற்ற மூவர் முயன்று கொண்டிருந்தோம் குருவிக் குஞ்சு மீண்டும் வீதியோரத்துக்கு சென்றிருந்தது. வாகனங்களில்  சென்றவர்கள் புதினம் பார்த்தனர். குருவியை பிடிக்க முயற்சித்த பெண் குருவியை பிடிப்பார் ஆனால், குருவி அவரின் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியினால் அவரது கையை விட்டு தப்பி வெளியே வந்தபடியே இருந்தது.


நான் வீதியோரத்தில் இருந்த ஒரு மட்டையை எடுத்து அதை  குருவிக் குஞ்சின் கீழ் வைத்து குருவிக் குஞ்சை தூக்க முயற்சித்தேன். குருவி அதில் எறுவது போல் நடந்து வரும் ஆனால் எறாது. இப்படி அவரும் நானும் சிரமப்படுவதை உணர்ந்து எம்முடன் சேர்ந்து நான்காவது பெண் எம்மை விலகச் சொல்லி ஒரு அமுக்கில் குருவிக்குஞ்சை பிடித்து மரங்களுக்கு நடுவில் அதனை விட்டுவிட்டு வந்தார்.

நாம் தாய்க்குருவி அருகில் வருகிறதா என்று பார்த்திருந்தோம். அருகில் ஒரு குருவியின் குரல் கேட்டது. சரி இனி அது வாகனங்களால் அரைக்கப்பட்டு உயிரை இழக்காது என்றப‌டியே கலைநது போனோம்.

இதன்  பின் தொடரூந்தில் உட்கார்த்திருந்த போது ஏறத்தாள 33 வருடங்களுக்கு முன் எனக்கும் ஒரு சிட்டுக்குருவிக்கும் இடையில் நடைபெற்ற கதை ஒன்று நினைவிலாடியது.

விடுதிவாழ்க்கையில் இருந்து பாடசாலை விடுமுறைக்கு வீடு சென்றிருந்தேன். விடுமுறையின் போது ”கட்டபொல் (catapult)” கட்டுவதுதே பெரும் திட்டமாயிருந்ததால் கொய்யா மரம் தேடி கையுக்கு அடக்கமான Y வடிவலான ஒரு சிறு கொப்புடன் வீடுவந்து அதை அளவாய் வெட்டி, சீவி காயவைத்து, சைக்கில் கடைக்கராரிடம் ஒரு டியூப் துண்டு வாங்கி, சப்பாத்து திருத்தும் கடையில் ஒரு தோல் துண்டு எடுத்து அதை கல்லால் தேய்த்து மிருதுவாக்கி ஒரு கட்டபொல் உருக்கிய போது மனது காற்றில பறந்து திரிந்தது.

catapult  உருவாக்கியாகியாகிவிட்டது. ஆனால்  நான் குறிபார்த்து அடிக்கிறேன் எதுவும  எனது கல்லினால் தாக்கப்படுவாய் இல்லை. தி‌டீர் என்று ஆட்டுக்கொட்டிலுக்கு மேலே ஒரு சிட்டுக்குருவி நிற்பது தெரிய எனக்கு தெரிந்த முறையில் குறிபார்த்து அடித்தேன். சில இறகுகள் காற்றில் பறக்க சுறுண்டு விழுந்தது குருவி. குறிபார்த்த போது இருந்த சந்தோசம் மாறி மனதினுள் இனம்புரியாத பயம் குடிவந்திருந்தது. அருகில் சென்று பார்த்த போது பரிதாபமான கண்களினால் என்னைப்பார்த்தபடியே பறக்கமுடியாது கிடந்தது குருவி. அதை தூக்குவதற்கு பயமாயிருந்தது.  உரு சிறு தடியால் தட்டிவிட்டேன்.  அப்போதும் அது பறக்கவில்லை.

வீட்டில் இருந்து சற்று சோறும், தண்ணீரும் கொணர்ந்து வைத்தேன். இது நடந்த  போது நேரம் மதியமிருக்கும். மாலைவரை குருவி அசையவில்லை. நான் வைத்த சோற்றையும், நீரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனம் முழுவதும் கல்லைக் கட்டிவிட்டது போல் கனத்திருந்தது. குருவியினருகே காவலிருந்தேன். எனது  பொறுமையும் கரைந்திருக்க மெதுவாய் கம்பினால் குருவியினை தூக்க முயற்சித்த போது உயிர் பெற்று பறந்தோடி மறைந்தது அந்தக் குருவி.

பல ஆண்டுகளுக்கு பின்னான இன்று ஒரு சிறு சிட்டுக்குருவியின் உயிரைக்காப்பாற்றி அன்று செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டேனோ என்று யோசிக்கிறேன்.

அப்படியாயும் இருக்கலாம். எது எப்படியோ மனது மகிழ்ச்சியாயிருக்கிறது.


இன்றைய நாளும் நல்லதே!


உலகத்திலுள்ள சகல சிட்டுக் குருவிகளுக்கும் இது சமர்ப்பணம்.

.

நொதிக்கும் கள்ளூறும் நினைவுகள்

நான் எனது பதின்மக் காலங்களில் சில பெண்களிடம் காதல் வயப்பட்டிருக்கிறேன். அவர்களில் முதலாமவள் காதலுக்கான அர்த்தங்கள் புரியாததோர் பருவத்தில் திடீர் என்று கூடும் மழைமேகங்கள் போல் வந்தாள், அடைமழையாய் பொழிந்தோய்ந்தாள். நனைந்திருந்த காலங்களில் தூறலாய் மாறி பின்பு மறைந்து போனாள். இன்றும் அவள் முகமும், பளுப்பு நிறமான அவளின் வெள்ளைப்பாவாடையும், அவளின் உருக்கமான தேவாரங்களும் இன்றும் நினைவிலாடுகின்றன. (பார்க்க: 33 வருட ரகசியம்: அவளும் கோயிலும் நானும்)

அதேபோல் இன்னுமொருத்தி விடயங்கள் புரியத் தொடங்கிய காலங்களில் பூரண நிலாவின் அழகுடன் வந்து போனாள். எம்மிருவருக்கும் இருவருக்கும் இது இனக்கவர்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது, இன்று. இது நடந்து, சிறிது நாட்களில் அவளுக்கு ஒரு காதலனும், இன்னும் சிறிது காலத்தில் அவனே கணவனாகவும், அதன் பின் குழந்தை என்றும் ஆகிப்போயிருந்த, எனக்கு இன்னொருத்திமேல் பருவக்கவர்ச்சியற்ற காய்ச்சல் வந்து, தசாப்தங்களாய் நீண்டழிந்த பெருஞ் சரித்திரமது.

பதின்மவயதில் காதலின் அவஸ்தையை அதை அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளலாம். ஆனால், பலரும் அவ்வவஸ்தையை தாண்டி வந்தவர்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. கண்ணீரின் சுமை சுகமாக இருக்கும் காலமது. காமம் எனபது துளியும் கலக்கப்படாத காலங்கள் அவை. ஒரு வித பரிசுத்தத்தின் சுகத்தினை தினமும் உணரக் கூடியதாக இருக்கும், புதிது புதிதாய் பிறக்கும் அந் நாட்களில் காத்திருப்பும், தவிப்பும், தரிசனமும் வெவ்வேறான உணர்வுகள் என்றாலும் மொத்தத்தில் அவை சுகமானவை என்பதே உண்மை. தவித்து தவித்து, தவம் செய்த காலமது.

வாழ்வின் பாதியை கடந்த பின்பு, களைத்தொதுங்கும் நேரங்களில் இன்றும் நெஞ்சினை மயிலிறகால் நீவிப் போகும் நினைவுகளவை.

வாழ்வின் வரைபடங்களை அறிந்து களைத்தோயும் சுமைதாங்கியாக இருப்பதற்காகவே உருவாக்கப்பட்ட காலங்களோ அவை என்று நினைக்கத் தோன்றுகிறது இன்று.

நான் விரும்பிய பெண்களுமுண்டு, என்னை விரும்பிய பெண்களுமுண்டு. எல்லா மனிதரிடத்திலும் இப்படியான ரகசியங்கள் நிட்சயம் இருக்கும். எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்த மிட்டாயை, எடுத்துண்ணும் விறுவிறுப்பு கலந்த சுவை போன்றது அந்த ரகசியங்களின் நினைவுகள்.

நாம் விரும்பப்படுவதன் சுகமே தனி. காற்றல் பறப்பது போன்ற உணர்வது. பெருமை என்னும் கடலில் மிதக்கும், மனக் கப்பல். நம்மை காற்றில் நடக்கவைக்கும். அதே போல் நாம் விரும்பப்படவேண்டும் என்று நினைக்கும் போது நாம் விரும்பப்படாவிட்டால் கல்லாய் கனக்கும் மனம். ஊன் உருகி கண்ணீராய் கரையும். அதிலும் சுகம் என்பவர்களும் உண்டு.

புதின்மகாலத்து நட்பின் சுகமும், தூய்மையும் வாழ்வின் பிற்காலங்களில் கிடைப்பதில்லை. எனக்கும் இப்படியான நட்பு வாய்த்திருந்தது. வேறு சிலருக்கும் நான் அப்படியானதோர் நட்பாய் வாய்த்திருந்தேன். நினைத்தாலே இனிக்கும் நட்புகள் அவை.

வாழ்வின் வேகத்தில் மூச்சடைத்து நிமிரும் காலங்களில் பலதும் தொலைந்து போயிருக்கிறது. நட்பில் இருந்து காதல் வரை.

தோழமையாய் சுகத்தையும், சோகத்தையும் பகிரக்கூட எம்மில் எத்தனை பேர் அலைந்து திரிகிறோம். ஏன்?
விடைதெரியா வினாக்களுக்குள் இதையும் சோர்திருக்கிறேன் இந் நாட்களில்.

வாழ்வினை கடக்கும் போது உற்ற நண்பன் ஒருவனை அருகில் கொண்டிருப்பவர்கள் அதிஸ்டசாலிகள். பலருக்கு ஏனோ அந்து அதிஸ்டம் வாய்ப்பதில்லை என்பது ‌அவர்களின் தூரதிஸ்டமே. எனக்கு பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே தோமைமையை பகிர்ந்து கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திக்கும் அந்த ஒரு சில நாட்களின் போது நட்பின் சுவையை முழுவதுமாய் அனுபவிக்கமுடிவதில்லை. சுடு உணவை ஏதோ அவசரத்தில் உண்டது போலிருக்கும் அது. ருசியும், ஆத்மதிருப்தியும் அங்கிருப்பதில்லை. தொலைபேசியினூடாக பேசிக்கொள்ளலாம் நட்பின் அருகாமையையும், உயிர்ப்பையும் அனுபவிக்க முடியாதென்பேன் நான்.

தேடிப்போய், ஊர்க்காற்று உண்டபடி ‌எதையெதையோ பகிர்ந்து அழுது தீர்க்க துடிக்கிறது மனது. அங்கும் அப்படியாயே இருக்கும். வாழ்வு எவருக்கும் பொதுவானதல்லவா? வாசல்படி அங்குமுண்டு இங்கமுண்டு.

காதலையும் சுவைத்திருக்கிறேன், நட்பினையும் சுவைத்திருக்கிறேன். வாழ்வின் அர்த்தம் புரியத் தொடங்கும் இந் நாட்களில் ஏனோ, காதலை விட நட்பே பல காலம் தோளோடு தோளாய் வருகிறது போலிருக்கிறது எனக்கு. உங்களுக்கு?


இன்றைய நானும் நல்லதே!


தொலையாதிருக்கும் நட்புக்கு இது சமர்ப்பணம்.


.

விடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா

இன்று (18.06) மாலை இயக்குனர் பாலாவின் ”அவன் - இவன்” திரைப்படம் பார்க்கச்சென்றிருந்தேன். படம் முடிந்து வெளியேறிய பின் இயக்குனர் பாலாவிடம் எனக்கு இருந்த மரியாதை தொலைந்திருக்கிறது.

படத்தில் ”ஹைனஸ்”  (பெருமரியாதைக்குரியவர் - மேதகு) என்னும் பெயரில் ஒரு கதாபாத்திரம் உள்ளது. இவர் காட்டில் வேட்டையாடுவது போலவும், அவர் புலிப்பொம்மையை தன் காலடியில் வைத்திருப்பது போலவும் ஒரு காட்சி வருகிறது. இதை விட படத்தில் ராஜபக்சே என்று ஒரு சொல்லும் வந்து போகிறது.

திரு ”ஹைனஸ்”  கொலை செய்யப்படுகிறர். இவர் கொலை செய்யப்பட முன் நிர்வாணமாக்கப்பட்டு வில்லனினால்  சேற்றினுள்  ஓட விடப்பட்டு அடித்துக் கொல்லப்படுகிறார். கொலை செ்யப்பட்ட பின் அவர் நிர்வாணமாக ஒரு மரத்தில் தொங்கவிடப்படுகிறார்.அவரின் உடம்பு மழுவதும் சேறு அப்பிக் கிடக்கிறது. கதாநாயகன் அவரை மரத்தில் இருந்து இறக்கியெடுக்கிறார்.

இந்தக் காட்சிகளைப் பார்க்கும் எவருக்கும் இக்காட்சிகளின் பின்புலம் எதைச் சுட்டுகிறது என்பது மிகத் தெளிவாகவே புரியும். தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறுதி நிமிடங்கள் எவ்வாறு இருந்திருக்கும் என்று கூறப்படும் சில கருத்துக்களை உள்ளடக்கியும், அவர் கொலைசெய்ப்பட்ட பின் காண்பிக்கப்பட்ட உடலில் இருந்த சேறு,  மிகக் குறைவான உள்ளுடுப்புக்கள்  போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் இக்காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, இயக்குனர் பாலா ”அங்கு” நடந்ததை இங்கு சிம்பாலிக்காக காட்டுகிறார்.

ஈழத்தமிழர்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது வைத்திருந்த மரியாதையை நாம் அறிவோம். தவிர, அவர் மேதகு (”ஹைனஸ்”) என்னும்  சொற்களைப் பாவித்தும் அழைக்கப்பட்டார் என்பதையும் நாம் அறிவோம். விடுதலைப் பலிகளின் மேல் பற்றுளவராய் இருப்பதோ, இல்லாதிருப்பதோ அவரார் சிந்தனைக்குட்பட்ட செயல். மனிதனாக எவனும் சகமனிதனின் கருத்துக்களை மதிக்க வேண்டும் என்பது மானுடத்தின் எழுதாத விதிகளில் ஒன்று. கருத்துவேறுபாடுகளை தாண்டியும் நண்பர்களாய் இருக்க முடியும் என்பது எனது கருத்து.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும், தமிழீழ விடுதலைப்பலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதும் ஈழத்தமிழரில் பெரும் பகுதியினரின் மனநிலையை மிகக் கடுமையாக பாதித்திருக்கும் இந் நாட்களில்,  இயக்குனர் பாலா இவ்வாறு தனது திரைப்படக் காட்சிகளை அந் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி காண்பித்திருப்பது மிகவும்  அநாகரீகமான, பண்பற்ற, கண்டிக்கத்தக்க செயல்.

சில வேளைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன  மீது இயக்குனருக்கு பலத்த விமர்சனம் இருக்கலாம். அதையே அவர் இப்படிக் காட்ட முயற்சித்திருக்கலாம். எம்மில் பலருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பலத்த விமர்சனங்கள் இருக்கின்றன. மாற்றுக்கருத்தாளர்கள், தமிழீழ விடுதலைப்பலிகளின் விமர்சகர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கூட இயக்குனர் பாலா செய்தது போன்ற அநாகரீகமான செய்கைகளை இக் கால கட்டத்தில் செய்யவில்லை. பலரும் ஏனைய ஈழத்தமிழரின் வலிகளை புரிந்து கொண்டு மனிதாபிமானமாகவே நடக்கிறார்கள். அதுவே புரிந்துணர்வுள்ளவர்களின் பண்பு. இவர்களுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இயக்குனர் பாலாவுக்கு இல்லாதிருக்கிறது என்பது மிகவும் வேதனையாகது.

இயக்குனர் பாலாவோ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலை மிகச் செவ்வனே செய்திருக்கிறார் என்பது எனது கருத்து. அச் செயலை நான் பலமாகவே கண்டிக்கிறேன்.

ஈழத்தமிழ் மக்களை  ஏளனம் செய்யும் பல தென்னிந்திய கலைஞர்கிளின் வரிசையில் இயக்குனர் பாலாவும் இணைத்திருப்பது வருத்தத்துக்குரியது.

இப்படியேதும் செய்தால் தான் மத்திய அரசிடம் இருந்து தேசியவிருது கிடைக்குமோ?  மக்களின் மனம்நொந்த விருது எதுவும் கலைஞனுக்கு பெருமை சேர்க்காது என்பது நான் சொல்லித்தானா இயக்குனர் பாலாவுக்கு புரியவேண்டும்.

இப் பதிவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டதல்ல. சகமனிதனின் வலிகளை புரிந்து கொள்ளாமல் அவர்களின் மனதினை புண்படுத்தும் இயக்குனர் பாலாவின் செய்கையை நான் ஆதரிக்கவில்லை என்பதற்காகவே எழுதப்பட்டது.


.

இருண்ட கண்ட ம் இருளாத மனிதம்

அன்று ஒஸ்லோவில் கடும் மழை. மிகக் கடுமையான மழை. ஒஸ்லோ வீதிகளின் பாவங்களை கழுவி, பாதாள சாக்கடையினுள் தள்ளிக் கொண்டிருந்தது, மழை. சிலர் மழையில் நனைந்தடிபடியே நடந்து கொண்டிருந்தனர். அவர்களின் பாவங்களும் கழுவப்பட்டிருக்கலாம்

குடையுடன் மழையை ரசித்தபடியே மெதுவாய் ஒஸ்லோவின் முக்கிய வீதியை ஒன்றை கடந்து கொண்டிருந்தேன்.

ஹலோ ஹலோ என்று யாரோ என்னை அழைப்பது கேட்டு நிமிர்ந்த போது, முன் பின் அறிந்திராத ஒருவர் என்னை நோக்கி கை காட்டிக் கொண்டிருந்தார். ஆச்சர்யமாக இருந்ததால் என்னையா என்று சைகையில் கேட்டேன். ஆம் என்று அங்கே பார், என்று ஒரு கடையின் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினார்.  முதல் பார்வையில் எதும் புரியவில்லை. உற்றுப் பார்த்தேன். இருட்டாக இருந்து உள்ளே.  அருகில் சென்று பார்த்த போது ஆபிரிக்க நண்பர் அலாவுதீன் (Aladin) கை காட்டிக் கொண்டிருந்தார்.  எனக்கு அலாவுதீனைக் கண்டது அற்புதவிளக்கைக் கண்டது போல் மகிழ்ச்சியாய் இருந்தது. புதிய நண்பருக்கு நன்றி கூறி பழைய நண்பரை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

ஒரு கையை நெஞ்சில் வைத்து, மறு கையால் என் கையை குலுக்கியபடியே How are you man?  என்று ஆபிரிக்க ஸ்டைலில் குசலம் விசாரித்தார் நண்பர். ஏதோ  இருக்கிறேன் என்று சொல்லி சம்பாசனையை ஆரம்பித்து பேசிக்கொண்டிருந்தோம்.

அவரைக் கண்டு  ஏறத்தாள 5 -6 மாதங்களாகின்றன. இவரைப் பற்றி முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன். (பார்க்க ஒரு தாதாவும் சாதாரணமானவனும்). ஆபிரிக்காவுக்கு அவர் விடுமுறைக்கு செல்லவிருந்தார் நாம் இறுதியாக சந்தித்த போது. அங்கு ஒரு internett cafe திறப்பதற்காக நோர்வேயில் பல பழைய கணணிகள் வாங்கி என்னிடம் திருத்துவதற்கு தந்திருந்தார். நானும் திருத்திக் கொடுத்தேன். அந் நாட்களில் அவரிடம் பணம் இல்லாததால் எனது சேவைக்கான பணம் 500$ டாலர்களை பின்பு தருவதாக தெரிவித்த போது நானும் அதை ஏற்றுக் கொண்டிருந்தேன். அதன் பின் எமது தொடர்பு அற்றுப் போனது.

எனக்கு பணத்தேவை எற்பட்ட போது பல முறை அவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி இலக்கம் பாவனையில் இல்லை என்ற பதிலே கிடைத்தது.  எனது 500$ களும் அம்பேல் தான் என்று எண்ணியிருந்தாலும் மனதின் மூலையில் அது கிடைக்கும் என்ற எண்ணம் சற்று இருந்தது.

இன்று அவர் ஒரு தேனீர்க் கடைக்குள் இருக்கிறார் என்பதை அறியாமல் நான் வீதியால் நடந்து கொண்டிருந்த போது, என்னைத் தேடிவந்து, அழைத்து, தன் முன்னே உட்காரவைத்து, எனது சுகம் விசாரித்து, நான் உனக்கு தரவேண்டிய பணத்தை தருவேன், சில நாட்கள் நீ பொறுப்பாயா என்று கேட்கிறார் அம் மனிதா். ”இல்லை” உடனே வேண்டும் என்று கூறும் நிலையில் நான் இருக்கவில்லை. அவரின் நேர்மை மிகவும் பிடித்திருந்தது. எனவே வசதி வரும் போது தாருங்கள் என்றேன். Thank you My friend  என்று கையை பற்றி கண்ணால் நன்றி சொன்னார்.

பேசிக் கொண்டிருந்தோம். அவர் தனது கணணிகளை ஆபிரிக்காவுக்கு அனுப்ப கொடுத்தவர் அதை அனுப்பவில்லை என்றும், அதனால் தனது திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாது போய்விட்டதாக மனவருத்தப்பட்டார். அவர் என்னிடம், ஆபிரிக்கனை ஒரு போதும் நம்பாதே என்ற போது எனக்கு  சிரிப்புத் தான் வந்தது.

முழுப் பூசணியை சோற்றுக்குள் புதைப்பது போல கண் முன்னேயே நம்பிக்கைக்கான ஆதாரம் இருக்கும் போது என்னை ஆபிரிக்கனை நம்பாதே என்கிறாறே என்று யோசிக்கலானேன்.

தொடர்ந்து, அவர் ஆபிரிக்காவாலில் இருந்த நாட்களி்ல் நோர்வேயில் அவரது வீடு களவு போயிருக்கிறது என்றார்.  உங்கள் நிலமை பறவாயில்லை நீங்கள் ஆபிரிக்காவில் நின்ற போது களவு போயிருக்கிறது, ஆனால் தமிழன் ஒஸ்லேவெில் நிற்கும் போதே களவு போகிறதே என்று அவரை சற்று ஆறதல் படுத்தினேன். பலமாய் சிரித்தார்.

விடைபெற்ற போது உனது பணத்தை சத்தியமாய் திருப்பித் தருவேன் என்றார். தயக்கமெதும் இன்றி அது  எனக்குத் தெரியும் என்றேன். இருவரும் கை குலுக்கிக்கொண்டாம். மிக இறுக்கமாக கையைப் பற்றிக் குலுக்கினார். விடைபெற்றுக் கொண்டோம்.

வெளியில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. என் மனமோ அவரின் நேர்மையின் ஈரத்தில் நனைந்து சிலிர்த்திருந்தது. சக இனத்தவர் ஒருவர் 40 $ க்காக என்னை கண்டால் தலை தெறிக்க ஓடுகிறார், அவர் ஓடும் போது தடுக்கி விழுந்துவிடுவாரோ என பயமாயிருக்கிறது. மனிதர்கள் பலவிதம்.

உண்மையான, ஈரமான மனமுடையவர்களினாவேயே இந்த உலகு இயங்குகிறது என்பது புரிந்திருந்தது எனக்கு, மீண்டும்.

எனக்கு வாய்க்கும் நண்பர்கள் பலரும் இப்படியானவர்களாகவே இருக்கிறார்கள். நான் அதிஸ்டசாலியோ?

 இல்லை, பேரதிஸ்டசாலி.


இன்றைய நாளும் நல்லதே!



.

விதைத்ததும் அறுத்ததும்

அன்றொரு நாள் இரவு 8:30 மணியிருக்கும் தொலைபேசி சிணுங்கிய போது, எதிர்முனை ”கணணிஉதவி தேவை உடனே வா” என்றபோது பணம் என்பதால் இந்தப் பிணமும் வாயைப் பிளந்தது.

அவர் வீட்டை தேடிப் பிடித்த போது நேரம் 9.30 இருக்கும். தொடர்மாடி வீட்டின் அழைப்பு மணியை இசைத்த போது கதவு தானே திறந்து கொண்டது. Lift க்காய் காத்திருந்த போது ஒருவர் Lift இன் உள்ளே வந்தார். நான் 5ம் மாடிக்கு சென்ற போது அவரும் 5ம் மாடிக்கு வந்தார். 503 ம் இலக்கத்தை அடைந்த போது அவரும் அங்கு வந்தார். பார்த்துச் சிரித்தார். சிரிக்க வேண்டும் என்பதற்காய் சிரித்தேன்.

என்னைச் சிலர் உளவாளி என்பதாய் அறிகிறேன். எனவே, இவர் என்னைப் பின்தொடர்கிறாரே என்று நினைத்த போது வீட்டின் உரிமையாளர் விற்பனை செய்யவிருந்த ஒரு பெரிய  ”Sofa” ஒன்றை அவர் வாங்க வந்திருப்பதாக அறியக்கிடைத்தது. அவர் இந்த இருக்கையை தூக்க முடியாமல் தூக்கியும், இழுத்துக்கொண்டும் வெளியேறினார். ஏனோ அவருக்கு உதவவேண்டும் என்று தோன்றவில்லை.

என்னை அழைத்தவர் தனது கணணி புதிதாய் வாங்கி வந்த mouse மற்றும் keybord ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்றார். அவரின் கணணி அருங்காட்சியகத்தில் இருப்பதற்கான சகல தகுதிகளையும் கொண்டிருந்தது. எப்போ இந்தக் கணணியை வாங்கினீர்கள் என்ற போது, ஏறத்தாள 8 - 9  வருடங்கள் இருக்கும் என்றார். இந்தக் கணணி மிகவும் பழசாகிவிட்டது என்றேன். அவருக்கு அது பிடிக்கவில்லை என்பது அவரின் பார்வை நிரூபித்தது. நான் இதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை தான் திறப்பேன். அதுவும் எனது அரை மணிநேரம் தான் பாவிப்பேன். நான் பாவிக்காமல் கணணி எப்படி பழசாகும் என்று போர்க்கொடி தூக்கினார்.

அப்போதுதான் அவரைப் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன் அவர் ஒரு அழகிய பெணாய் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது தனது அழகிய, கவர்ச்சியான காலங்களையெல்லாம் அவர் கடந்து பல தசாப்தங்களாகியிருந்தன. அவருக்கு பற்கள் இருக்கின்றனவா என்று பட்டிமன்ற தலைப்பு வைக்குமளவுக்கு பற்கள் இருந்தன. கண்ணுக்கு கண்ணாடி போட்டாரா அல்லது மூக்குக்கு கண்ணாடி போட்டாரா என்று சந்தேகமாய் இருந்தது. குரலும், குளிரில் நடுங்குபவரின் குரல் போன்றிருந்தது.

நீங்கள் உங்களை பாவிக்காமலே உங்களுக்கு வயதாவதில்லையா என்று கேட்க நினைத்தேன். இருப்பினும் அவரின் வயது காரணமாக எனது எண்ணத்தை கைவிட்டேன்.

மிகவும் ஆறுதலாகவும், விளக்கமாகவும் கணணியுலகத்தையும் கணணிகளின் வளர்ச்சிகளையும் பற்றி இலகுவான முறையில் எடுத்துரைத்தேன். 8 - 9 வருடத்தில் கணணியுலகத்தில் குறைந்தது 3 - 5 கணணிப்பரம்பரம்பரைகள் தோன்றி மறைத்திருக்கின்றன என்ற போது, நான் தவறான நிறத்தில் இருந்ததாலோ என்னவோ அவர் என்னை நம்புவதாக இல்லை. இருப்பினும், ஏறத்தாள 30 நிமிடங்கள் கணணியுடன் கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் செய்து அவரின் mouse மற்றும் keybord ஐ இயங்க வைத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக
”பார்த்தாயா எனது கணணி பழசாகவில்லை” என்றார்
என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் என் பல்லை நெருமிக்கொண்டு புன்னகைத்தேன். பணம் தந்தார். பெற்றுக்கொண்டு வெளியேறினேன்.

Lift ஆல் இறங்கியதும்  அந்த sofa மனிதர் sofaஐ கதவிற்கு அப்பால் எடுத்துச் செல்ல பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தார்.  sofa நான் உன்னுடன் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தது. நான் கணணி திருத்திய 30 நிமிடங்களையும் இவர் இந்த கதவினால் வெளியே செல்ல முயற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார் என்பதே எனக்கு அவர் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

பொறுங்கள் நான் ஒரு பக்கத்தில் பிடிக்கிறேன் என்றேன். நன்றி என்றார். இருவருமாய் அவரின் வாகனத்தினுள் Sofaஐ வைத்தோம். இவ்வளவு நேரமாய் இதனுடனா மாரடித்தீர்கள் என்றேன். ஆம், இது வயோதிபர்கள் வாழும் இடம் என்பதால் எவரும் உதவிக்கு வரவில்லை என்றார். பின்பு இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.

நான் விடைபெற்ற போது, எங்கே போகிறாய்? நான் என்னை உன் வீட்டில் விடுகிறேன் என்றார். எனது வீடு இருக்கும் இடம் மிகவும் தூரம் என்ற போதும் கட்டாயப்படுத்தி என்னை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்.

வாகனம் ஒஸ்லோவின் இரவினூடாக எம்மை அழைத்துப் போய்க்கொண்டிருந்தது. நாம் அவரின் பேச்சில் இருந்து இவர் ஒரு வழக்கறிஞர் என்றும், இளைஞர் சங்கமொன்றிற்காக இந்த Sofaவை வாங்கிச் செல்வதாயும் அறிந்து கொண்டேன். அவரின் இடம் ஒஸ்லோவிற்கு தெற்கில் இருந்தது. நானோ வடக்கில் வசிக்கிறேன். எனக்காக ஏறத்தாள 40 கிலோமீற்றர்கள் அதிகமாக வாகனமோடுகிறார். நான் இடையில் இறங்கிக் கொள்வதாகச் சொன்னேன். இல்லை இல்லை... ஒருவர் உதவி செய்தால் அதை நாம் மறத்தலாகாது, தவிர உன்னுடன் பேசுவது மகிழ்ச்சியைத் தருகிறது என்றபடியே என் வீட்டிற்கு அருகில் என்னை இறக்கிவிட்டார். வாகனத்தால் இறங்கிய போது கைகுலுக்கிக் கொண்டோம். உங்கள் உதவிக்கு நன்றி. நீங்கள் இல்லாவிட்டால் நான் இப்போழுதும் அங்கு தான் நின்றுகொண்டிருப்பேன் என்று சொல்லியபடியே புறப்பட்டார்.

நீங்கள் இல்லாவிட்டால், நான் வீடு வந்து சேர இரண்டு மணிநேரமாகியிருக்கும் என்பதற்கிடையில் அவரின் வாகனம் என்னைக் கடந்துவிட்டிருந்தது.

வினை விதைத்தால் வினையும் தினை விதைத்தால் தினையும் அறுக்கலாம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருந்தது எனக்கு.

இன்றைய நாளும் நல்லதே!


.

இதமான மனிதனும் பதமான சொல்லும்

லண்டன் மாநகரத்தில் ஒரு பஸ்தரிப்பிடத்தில் எனது இளைய மகளுடன்  நின்றிருந்தேன். கடையில் என்ன என்ன வாங்க வேண்டும் என்று பட்டியலிட்டபடியே நின்றிருந்தாள் அவள். அவள் கண்ணில் இருந்த ஆர்வத்தின் அழகைப் பார்த்தபடியே நின்றிருந்த போது, பஸ் வந்தது.  நின்றது.

கதவு தானாகவே திறந்துகொள்ள மகளிள் கையை பிடித்தபடியே உட்புகுந்து டிக்கட்‌ஐ சரியார்க்கும் கணணிமயப்படுத்தப்பட்ட இயந்திரத்தில் டிக்கட்ஐ வைக்கிறேன் ”குட் மோர்னிங் சேர்” எனனும் கணீர் என்ற குரலால் திடுக்கிட்டு நிமிர்ந்த போது கண்ணாடிக் கூண்டின் உள்ளே இருந்து நட்பாய் புன்னகைத்தபடி தலையாட்டினார் சாரதி. எனது மகளுக்கும் ”குட் மோர்னிங் லிட்டில் லேடி” என்றார். அவள் சிரிக்க, நாம் குட் மோர்னிங் என கூறியபடியே அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம். எமக்கு பின்பு பஸ்ஸில் ஏறிய எல்லோருக்கும் ”குட் மோர்னிங்” சொன்னார் அந்தச் சாரதி.


அனைவருக்கும் அது புதுமையாக இருந்தது என்பது அவர்களின் முகபாவனையில் இருந்து அறியக்கூடியதாயிருந்தது. இயந்திரத்தனத்தில் பஸ்ஸில் ஏறி, சிந்தனை எங்கோ சென்றிருக்க சாரதியை கடந்து போகும் எல்லேரையும் ”இதோ உங்கள் சாரதி, நானிருக்கிறேன்” என்பது போலிருந்தது அவர் நடவடிக்கை.

இறுக்கமான முகத்துடன் வந்தவர்களும் புன்னகைத்தார்கள் அவருக்கு. அவரைக் கடந்து போன அனைவரும் அவரை திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்கள். அவரும் புன்னகைத்தபடியே இருந்தார்.

சாரதியின் நடவடிக்கைகள் புதினமாயிருந்ததால் அவரை அவதானிக்கலானேன். நாம் இறங்கும் இடம் வரை அவர் தனது காலை வணக்கத்தை தனது பஸ்ஸில் ஏறிய அனைவருக்கும் கூறிக்கொண்டே வந்தார்.

அவரின் நடவடிக்கையினால் பஸ்ஸில் ஒரு வித புன்னகை பரவியிருந்தது. சிலரின் முகங்கள் அவரை வினோதமாகப் பார்த்தன.

சக மனிதனுக்கு வணக்கம் சொல்பவனை வினோதமாகப் பார்ப்பது சாதாரணமாகவும், சக மனிதனுக்கு வணக்கம் சொல்லாது இருப்பது  வழமையாகவும்  இருக்கிறதே என்று எனது சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

நாம் இறங்கும் இடம் வந்து நாம் இறங்கிய போது கைகாட்டி விடைபெற்றார். மகளும் மகிழ்ச்சியாக கை காட்டினாள். நான் தலையாட்டினேன்.

அதன் பின் இந் நிகழ்ச்சியினை நான் மறந்து போயிருந்தேன், அன்று மாலை மகள் அதை நினைவுறுத்தும் வரை. அவளுக்கும் அது ஆச்சரியமாய் இருந்திருக்க வேண்டும்.

அந்த சாரதி ஒரு வித்தியாசமானவர் என்றாள். ஏன் என்ற போது ஏனைய சாரதிகள் இப்படி வணக்கம் சொல்வதில்லை ஆனால் இவர் சலிக்காமல் எல்லோருக்கும் சொல்கிறாரே என்றாள். ஆம் என்று சொல்லி புன்னகைத்தேன். ”ஐ லைக் தட், ஐ லைக் ஹிம்” என்றாள் மகள். நானும் தான் என்றேன். மயக்கும் புன்னகை பதிலாய் கிடைத்தது.

அறிமுகமில்லாத அனைவருக்கம் வணக்கம் சொல்லி நட்பாகும் அவரை எனக்கு ஏனோ பிடித்துப்போயிற்று. பலரின் பாரங்களை கண நேரமாவது இறக்கிவைக்கிறது அவரின் வணக்கம். எத்தகைய பெருந்தன்மையான சேவையது?

முகத்தை இறுக்கமாக வைத்தபடியே தினமும் எத்தனையோ மனிதர்களை கடந்து போகிறேன். இன்று கூட பஸ் நிலையத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் அழுதபடியே தொலைபேசிக்கொண்டிருந்தாள். தொலைபேசிய பின்பும் அவளின் அழுகை நின்றதாயில்லை. அருகில் நான் நின்றிருந்தாலும் ஆறுதலாய் எதுவும் கூறவில்லை. சக மனிதனுக்கு கஸ்டத்திலும் கைகொடுக்க மறுக்கிறதோ என் மனது? ஏன்? என்ற கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை

ஆனால் அம் மனிதர்ஒரு சொல்லினூடாக குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை புன்னகைக்க வைக்கிறார். பலரின் ஏக்கங்களுக்கு அவர் வடிகாலாயிருக்கிறார். எதிர்பாராத நேரத்தில் எமக்குக் கிடைக்கும் அன்பான உபசரிப்பு போல் மனதுக்கு இதமாயிருக்கிறது அவரது ஒற்றை வார்த்தை. ஒரு வார்த்தையால் அவ்விடத்தில் உள்ள பலரையும் மனதுக்குள் புன்னைக்கவைக்கிறார்.

இவை நடந்து இரண்டு நாட்களின் பின் ஒரு கடும் மழை நாள், நனைந்த உடுப்புடன், 10 - 15 நிமிடங்களாய் பஸ்ஸூக்கு காத்திருக்கிறேன். உடம்பும் மனதும் மழையின் கனத்தில் நனைந்து சோர்ந்து போயிருந்தது. எப்படா வீடு போவேன் என்றிருந்த போது பஸ் வர, அதில் ஏறிக்கொண்ட போது ”குட் ஈவ்னிங், சேர்” என்ற குரல் கேட்க நிமிந்து பார்த்தேன். புன்னகைத்தபடி உட்கார்ந்திருந்தார் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த அதே சாரதி. என் மனமும் உடலும் நீர் பிழியப்பட்ட பஞ்சாகிப் போயின.

”குட் ஈவ்னிங் சேர், குட் ஈவ்னிங் மேடம்” என்று எல்லோரையும் வாழ்த்திக் கொண்டிருந்தார் அவர்.
பஸ் ஓடிக்கொண்டிருந்து.
வெளியே மழை உலகத்தை கழுவிக்கொண்டிருந்தது.
உள்ளே அம் மனிதர் மிக மிக அழகாயிருந்தார்.

இன்றைய நாளும் நல்லதே!


.

நினைவுக் கடலின் முத்துக்கள்

ஏறத்தாள 33 - 34 வருடங்களுக்கு முன்னான நினைவுச் சிப்பிக்குள் முத்தாய் ஒளிந்திருந்த கதை இது. ஏனோ இன்று நினைவில் கரை தட்டியது.

காலம் 1976 -77 கள். மட்டக்களப்பு மாவட்டத்தின்  பிரபல்யமான பாடசாலையாகிய மெதடிஸ்த மத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற  கனாக்காலம்.

என்னுடன் பதுளையில் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் படித்த நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் என்னுடன் விடுதியில் தங்கியிருந்தார்கள். ஆரம்ப காலங்களில், மட்டக்களப்பு மண்ணின் புழுதி, மனத்தையும் உடலையும் ஆட்கொள்ள முதல் எனக்கு நண்பனாக ப‌ழைய பதுளை நண்பன் மட்டுமே இருந்தான்.

இவர்களின் பதுளைத் தமிழ் மட்டக்களப்புத் தமிழுக்கு புதிதாய் இருந்ததால் இவர்களின் தமிழ் வேடிக்கையாய் இருந்தது பலருக்கு. நக்கலுக்கும், கிண்டலுக்கும் உட்பட்டார்கள்.  காலப் போக்கில் மொழிவேறுபாடுகள் மறைந்து போயின. விடுதி வாழ்க்கை என்பது ஒரு வித இயந்திரத் தன்மையான வாழ்க்கை. நேரம் தவறாமால் எல்லாமே நடக்கும். சூரியன் உதித்து மறைவது போல.

காலையில் எழும்பி மாலையில் மயங்கும் வரை எல்லாமே அட்டவணையிடப்பட்டிருக்கும். மாணவ தலைவர்களின் மிரட்டல்களுக்கும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கும், இவ்றையெல்லாம் மீறி ”முற்றும் உணர்ந்த” எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரின் ”கழுகுக் கண்களையும்” மீறி எம்மால் எதையும் செய்ய முடியாதிருந்த காலம் அது.

காலையில் மேற் பக்கம் கருகியிருக்கும் ஒரு றாத்தல் பாண் மூன்றாக வெட்டப்பட்டு சம்பலுடன் பரிமாறப்படும். அன்றைய காலையுணவுக்கு பொறுப்பானவர்கள் எமது நண்பர்கள் எனின் மூன்றில் ஒன்று என்னும் விதி யாருக்கும் தெரியாமல் மீறப்பட்டு, எம்மிலும் சிறியவன் ஒருவனுக்கு காலையுணவு ஏறக்குறைய இல்லாது போயிருக்கும்.  பசியின் முன் நியாயம் அடிபட்டுப்போகும் என்பதை முதன் முதலில் உணர்த்திய இடம் எமது உணவுச்சாலையே.

அப்போதெல்லாம் பாடசாலை இரு நேரங்கள் நடைபெற்றது. மதிய இடைவேளை நீண்டிருக்கும். வெட்டி எடுத்த தண்டவாளத்தில் இரும்புத் துண்டால் அடித்து சாப்பாட்டு நேரம் அறிவிக்கப்பட்டதும் உணவுச் சாலையின் கதவுக்கருகில் வரிசையில் நின்று மாணவர் தலைவர்களின் கட்டளைப்படி உட்புகுந்து எனக்கு என்று வழங்கப்பட்ட இடத்தில் எனது அலுமீனிய தட்டில் இடப்பட்டிருக்கம் சோற்றின் அளவையும் கறிகளின் அளவையும் கண்கள் அளவெடுக்கும் வரை மனம் பெரும் பாடு படும். அன்று உணவு பரிமாறுவது எமது நண்பர்களில் ஒருவராக இருந்தால் எமது பாடு கொண்டாட்டம் தான். இல்லையேல் திண்டாட்டம். கொண்டாட்டமும் திண்டாட்டமும் . இரவையும் பகலையும் போல் மாறிக் கொண்டேயிருந்தது.

மாதத்தில் ஒரு நாள் அதாவது முழு நிலவன்று இரவு கல்வி நேரம் இல்லாதிருக்கும். விளையாட்டுகள் களைகட்டும். மகிழ்ச்சியின் உச்சத்தில் கண்ணயரும் வரை கொண்டாட்டமாய் கழியும் ஒரே ஒரு இரவு, அந்த முழு நிலவின் இரவொன்றே. இந்த ஒரு நாளுக்காவே வாழ்ந்திருந்த காலங்கள் அவை.

இவ்வாறு நானும் எனது பதுளை நண்பர்களும் விடுதி வாழ்க்கைக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம். எனது வகுப்புத் தோழனும் இன்றைய காலத்தில் பாரீஸ் நகரத்தில் வசிப்பவருமாகிய நண்பர் ராஜேந்திரன் என்பவரும் எம்முடன் விடுதியில் தங்கியிருந்தா(ன்)ர்.

எங்களின் பெற்றோர்கள் விரும்பியதை நாம் பாடசாலையில் செய்தோமோ நானறியேன். ஆனால் நாம் விரும்பியதை தேவைக்கதிகமாகவே செய்தோம். நானும், எனது பதுளை நண்பர்கள் இந்துக்கள். இந்த ராஜேந்திரன் ரோமன் கத்தோலிக்கவர். பகலில் உயிர் நண்பர்களாய் இருந்த நாம் அதிகாலையில் மட்டும் எலியும் பூனையுமாய் இருக்க வேண்டிய காலம் எமக்குத் தெரியாமலே எம்மை சூழ்ந்து கொண்டது.

இந்துக்களின் சுவாமியறை ஒரு மண்டபத்தின் வலது கோடியிலும், ரோமன் கத்தோலிக்கத்தவரின் ஜெபி்க்கும் அறை இடது கோடியுலும் இருந்தது. இந்து மாணவதலைவர்கள் என்னிடம் தினமும் பூப்பறித்து சுவாமிப்படங்களை அலங்கரிக்கும் பொறுப்பை தந்த போது ரோமன் கதோலிக்கத்து பூஜையறையை மலர்களால் அலங்கரிக்கும் பொறுப்பு ராஜேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.

தினமும் யார் முதலில் பூப்பறிப்பது என்று பெரும் போட்டி ஆரம்பமாயிற்று. சிவனே என்று மணியடிக்கும்வரை தூங்கும் கும்பகர்ணனின் தம்பி நான்.  நான் எழும்பும் போது பூக்கள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க ஜெபமண்டபத்தில் யேசுநாதரையும், புனித மரியாளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கும். முருகனும், சிவபெருமானும் பூக்கள் இன்றி பரிதாபமாய் இருப்பார்கள். இந்த சரித்திர தோல்வியை இந்து மாணவதலைவர்களால் தாங்க முடியாதுபோயிற்று.

என்னிடம் இருந்த பொறுப்பு பறிக்கப்பட்டு பதுளை நண்பர்களிடம் கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் காலை யேசுவுக்கும், புனித மரியாளுக்கும் பூ இருக்கவில்லை. முருகனில் இருந்து சரஸ்வதி வரை என்று எல்லோரும் பூவினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள்.

எங்கள் கடவுளின் மானம் காப்பாற்றிய வீரர்களாக எனது பதுளை நண்பனும் அவனின் சகோதரர்களும் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்ட்டார்கள். அவர்களுக்கு உட்சாகம் கரைபுரண்டோடியது.

இந்த தோல்வியை ரோமன் கத்தோலிக்க பக்கத்தில் ஈடு செய்ய நண்பன் ராஜேந்திரன் பணிக்கப்பட்டான். அன்றில் இருந்து  தொடங்கியது பெரும் யுத்தம். யார் முதலில் எழும்புகிறானோ அவன் எல்லா பூக்களையும் பறித்து தனது கடவுளுக்கு படைத்தான். மற்றவன் பூக்கள் தேடி விடுதியை விட்டு அலைய  வெளியே செல்ல வேண்டியேற்பட்டது.

5.30 க்கு எழும்பி பூ பறிக்கும் இவர்களின் போட்டியால் இவர்கள் எழும்பும் நேரம் காலை 5 மணியாகி, பின்பு 4 மணியாகி, அதன் பின்பு 3 மணியாகி இறுதியில்  சாமமாகியது. சாமத்தில் பூக்கள் பூக்காது என்பதால் இவர்கள் பூக்களின் மொட்டுக்களைப் பிடுங்கி தண்ணீரில் போட்டு சாமியறையில் வைக்கத் தொடங்கினார்கள். இதுவே நாளைடைவில் இரவு 10மணிக்கே பாடசாலை எல்லைக்குள் இருந்த நாளை பூக்க வேண்டிய சகல மொட்டுக்களும் பறிக்கப்பட்டு தண்ணீரில் இடப்பட்டு மறுநாள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டது.

பூக்கள் தேவைப்படாத இஸ்லாமிய நண்பர்களை இருபகுதியினரும் சமமாகப் பிரித்து எடுத்து நீ எங்களுக்கு பூ பறித்து தர வேண்டும் என்ற கூத்தும் சில காலம் நடந்தது. அவர்களும் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வரும் போதெல்லாம் இரு பகுதியினருக்கும் பூக்களை வெளியில் இருந்து கொண்டு வந்தது தந்தனர். மத ஒற்றுமையின் உச்சம் அது.

நான்  மாணவர் தலைவராகி, பின்பு சிரேஸ்ட மாணவ தலைவராக வந்த பின்பும் இதே கூத்து தொடர்ந்தது. நானும் ரோமன் கத்தோலிக்க மாணவர்களை கட்டுப்படுத்தி என் பங்குக்கு என் தெய்வங்களுக்கு பூ பறிக்க வசதிசெய்து கொடுத்‌து புண்ணியம் தேடிக் கொண்டேன்.

ஏறத்தாள 33 வருடங்களின் பின் ஓர் நாள் எனது கல்லூரிக்குள் நுழைந்து எங்கள் கால்களின் தடங்களை தேடி நடந்து கொண்டிருந்தேன். மனம் காற்றிலும் கடுகி 33 வருடங்களைத் தேடி ஓட ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதை சொல்லிற்று.

மேசையில் சப்பாணி போட்டு இருந்து சங்கீதம் கற்பித்த மகாலிங்கம் மாஸ்டரின் வகுப்பறை, அதனருகே தண்ணீர்ப் பைப், பழைய கன்டீன். கன்டீனின் அருகே ‌அதே பழைய மணியடிக்கும் தண்டவாளத் துண்டு. அதற்கங்கால் விடுதியின்  உணவுச்சாலை, அதற்கப்பால் விடுதியாசிரியர் சுந்திரலிங்கம் அண்ணணின் அறையும், புகை படிந்து கரிய நிறத்திலிருக்கும் குசினி. கழிவு நீர் தேங்கி நிற்கும் கான். அதற்குப் பின்னால் குளிக்கும்  தண்ணீர்த் தொட்டிகள்,  தண்ணீர் டாங்க், கிணறு.

இப்படி எல்லா இடங்களையும் மனதால் நுகர்ந்து திரிகிறேன். என்னைக் கடந்தோடும் இன்றைய மாணவர்கள். அவர்களிடமும் ‌ எம்மிடமிருந்த அதே குறும்பு, குசும்பு, சேட்டைகள். விடுதியின் சுண்ணாம்புச் சுவற்றை தடவி சுகம் காணும் என்னை குறும்புக்கண்களால் அளவெடுத்துப் போகிறார்கள் சிலர். இங்கே படித்தீர்களா? Old boy?  என்று குசலம் விசாரித்தவனின் தலைகோதி புன்னகைத்து தலையாட்டினேன் வார்த்தைகள் ஏனோ வர மறுத்தன.

கெதியில இங்க ”புது பில்டிங்” வருது. பழைய hostel ஐ உடைக்கப்போறாங்களாம் என்றான் அவன். புன்னகைத்து ”தெரியுமய்யா” என்றேன்.

அதிபரின் கந்தோர் கதவினருகே நின்ற போது என்னையறியாது கழுத்து வரை மேற்சட்டை பொத்தான்களை கை தன்னிச்சையாக பூட்டிய பின்பே நான் என்ன செய்கிறேன் என்பது புரிந்து. பாடசாலை நாட்களில் மேற்சட்டை பொத்தான்கள் இன்றி இந்தக் கந்தோருக்குள் உட்புகுவது தற்கொலைக்குச் சமம். அவ்வளவு கடுமையான அதிபர் எமது பிரின்ஸ் சேர். இன்றோ நிலமை வேறு. இருப்பினும்  தன்னிச்சையாக பூட்டப்பட்ட பொத்தான்களை களட்ட விரும்பமின்றி உட்புகுந்தேன்.

கண்ணாடிப் பெட்டியினுள் எமது காலத ”பெரு மண்டபத்தின்” இரு அத்திவாரக் கற்கள் ஞாபக சின்னங்களாய் இருக்க, இன்றைய அதிபர், பெருமையாய் தன் காலத்தில் கட்டப்பட்ட புதிய மண்டபத்தைப் பற்றி விபரித்தர்ர். மகிழ்ச்சியாய் இருந்தாலும் எதையோ இழந்தது போலிருந்தது எனக்கு.

அங்கிருந்து வெளியேறிய போது, போட்டி போட்டு பூப்பறித்த செம்பரத்தை, மல்லிகை, நந்தியாவட்டைப் பூ மரங்களை கண்கள் தேடின. புதிது புதிதாய் பூத்திருந்த சீமெந்துப் பூக்களின் சுவர்களின் மத்தியில் எங்களின் நட்பூக்கள் எமது எதையும் காணக்கிடைக்கவில்லை.

கடந்து ஓடிய மாணவர்களின் வேகத்தில் கிளம்பிய புழுதி மட்டும் பாடசாலையின் வாசனையுடன் இருந்தது.

...........

பூப்பறிப்பதில் கில்லாடியும், அதற்குப் பின்னான காலங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட ”பதுளை நண்பன்”  ஒருவனுக்கு இது சமர்ப்பணம்.


.