பெருமைந்தர்களின் பெருந்தன்மைகள்


30.09.2012 இன்று எனக்குப் பிறந்த நாள். இன்றைய நாள் பிறந்தபோது, அதாவது 00:01 மணியின்போது முதலாவது தொலைபேசி வாழ்த்து வந்தது. குறுஞ்செய்திகளும் வந்தன. நேற்றைய மாலை மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததனால், என்னை நான் சற்று குஷிப்படுத்திக்கொண்டேன். அதன் காரணமாக நடுநிசி கடந்து சில நிமிடங்களில் தூங்கியும் போனேன்.

நேற்றை நாள் ஒஸ்லோவில் யாழ் மகஜனா கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. பொ.கனகசபாபதி அவர்களின் இரு புத்தகங்களின் அறிமுகவிழா நடைபெற்றது. ”எம்மை வாழவைத்தவர்கள்” என்னும் புத்தகத்தில் திரு கனகசபாபதி அவர்கள் தன்னைக் கவர்ந்த பாடசாலை அதிபர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இவ் பற்றிப் நண்பர் உமைபாலன் அறிவித்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு பெரும் கேள்வி இருந்து கொண்டே இருந்தது. புத்தகம் தனியே யாழ்ப்பாணத்து அதிபர்களை மட்டுமே உள்ளடக்கியிருக்குமா? அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா? அப்படி இருந்தால் இலங்கை முழுவதும் பலராலும் மிகக் கடுமையானவர், மிக மிக நேர்மையானவர் என்று அறியப்படும் எங்கள் பாடசாலையின் முக்கிய அதிபராகக் கருதப்படும் Prince G. Gasinader அவர்களன் பெயரும் இருக்குமா என்று சிந்தனையோடிக்கொண்டிருந்தது.

அறிமுகவிழாவின் இடைவேளையின் போது முதலாவது ஆளக நீன்று புத்தகத்தை வாங்கிக்கொண்டேன், ஒரு முலையில் நின்றபடியே எனது பேராசானின் பெயரைத் தேடினேன். அது அங்கு இருக்கவில்லை. மனது கனத்துப்போனது. பொ. கனகசபாபதியின் மேல் சற்று எரிச்சலும் வந்தது. எவ்வாறு இவரால் Prince G. Gasinader அறியமுடியாது போனது? இவர் யாழ்ப்பாணத்தையே முன்னிலைப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத்தோன்றியது.

மனதுக்குள் இந்தக் கேள்வியை அடக்கிவைப்பதில் மனதுக்கு சம்மதம் இருக்கவில்லைவில்லையாதலால், புத்தகத்தில் கைழுத்து வாங்கிக் கொண்ட பொழுதினைப் பயன்படுத்தி நீங்கள் ஏன் Prince G. Gasinader ஐப் பற்றி எழுதவில்லை என்று கேட்டேன். கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்த பொ. கனகசபாபதி அய்யா வெள்ளை நிறமான நேர்த்தியாக வாரப்பட்டிருந்த முடியுடனான தனது  முகத்தை நிமிர்த்தி, என்னைக் கூர்ந்து பார்த்தார். அவரின் கண்கள் என்னை அளவிட்டன. பின்பு மெதுவாய் கையெழுத்திட்டு புத்தகத்தைத் தந்தார்.

நான் அவரருகிலேயே நின்றிருந்தேன். நிமிர்ந்து பார்த்தார்.  அவரிடம் படித்தவனா நீ என்றார். ஆம் என்றேன் பெருமையுடன். தலையை ஆட்டிக்கொண்டார். எனது புத்தகத்தில் எழுத விரும்பிய முக்கிய மனிதர் அவர். அவரிடம் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசினேன். அவர் தனது விபரங்களை அனுப்புவதற்குத் தாமதமாகியதாதலால் இப் பதிப்பில் அவர் பற்றிய விபரங்கள் இடம்பெறவில்லை என்றார். அத்துடன் அவர் கூறிய S.V.O. Somanader இன் விபரங்களையே நான் இங்கு பதிந்திருக்கிறேன் என்னும், Prince G. Gasinader ஐப் போன்ற அதிபர்கள் தற்போது இல்லாதிருப்பது மிகவும் துயர்தரும் விடயம், அவர் ஒரு மிகப் பெரிய மனிதர் என்றும் கனகசபாபதி அய்யா கூறிய போது ”மடையா இந்த பெரிய மனிசனையே சந்தேகப்பட்டியே” என்று மனச்சாட்சி கத்தியது. பெருமக்கள் பெருமக்களே என்பதை மீண்டும் உணர்ந்திருந்தேன்.

நேற்றைய அவ் விழாவினில் அறிமுகவிழாக்களில் இருக்கும் சம்பிரதாய முகமன்கள், தூக்கிப்பிடிக்கும் உரைகள், துதிபாடல்கள் எதுவுமின்றி மிகவும் அன்னியோன்னியமான விழாபோலிருந்தது. அதற்குக் முக்கிய காரணம் ஒரு பாடசாலையின் பெருமைமிக்க அதிபர், அவரை  மனதார நேசிக்கும் பழையமாணவர்கள். அவர்களுக்கிடையில் போலியான உறவுவோ, பாசாங்குகளோ இருக்கமுடியாதல்லவா. இப்படியான நிகழ்வுகளே மனதுக்கு அமைதியையும் ஆறுதலையும் தருகின்றன.

விழா முடிந்து வீடு நான் திரும்பிய போதும், பழையமாணவர்கள் தங்கள் அதிபரைச் சுற்றி நின்று அளவளாவிக்கொண்டிருந்தார்கள். ஒரு விதத்தில் பொறாமையாய் இருந்தது எனக்கு. ஆசிரியர்களுக்கு இந்த உலகத்தில் எந்தத் தொழிலுக்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய கௌரவம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அவர்களுக்கு உலகெங்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். தங்கள் ஆசிரியர்களை தங்கள் பெற்றோர் போல் நடாத்துகிறார்கள். ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளைப் போல் மாணவர்களை நடாத்துகிறார்கள்.

காலம் மாணவர்களை, பழைய மாணவர்கள் என்ற நிலைக்கு மாற்றும் போது,  மாணவனுக்கும் ஆசிரியர்க்கும் இடையே இருந்து உறவு பலமுள்ள ஒருவித நட்பாகவே மாறுகிறது.  ஆசிரியரிடம் இருந்த பயம் பக்தியாக மாறுகிறது. ஆசிரியரும் பல ஆண்டுகளை கடந்துவிடுவதால் இவர்களுக்கிடையில் ஒரு பரிசுத்த நட்பு ஏற்பட்விடுகிறது.

எனது அதிபருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு நாள், அவர் கூறினார்: தான் ஓய்வுபெற்று மிகவும் வயதான காலத்தில் என்னருகில் எனது குழந்தைகள் இல்லையே என்று வருந்துகிறேன் என்று ஒரு முறை தனது மனைவியிடம் கூறானாராம். அதற்கு அவர் உங்களுக்குத் தானே தினமும் குறைந்தது 5 பழைய மாணவர்கள் வந்துபோகிறார்கள், தவிர உலகெங்கும் உங்களின் மாணவர்கள் பரந்திருக்கிறார்கள், உங்களுக்கு என்னக குறை என்று கூறினாராம் என்று.

உண்மைதான் மாணவர்களின் மனதில் சில ஆசிரியர்கள் சிம்மாசனம் போட்டு ஏறி உட்கார்ந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்போதும் அச் சிம்மானத்தை இழப்பபதேயில்லை. நான் ஒரு ஆசிரியனாக வரவில்லையே என்ற ஏக்கம் மாணவர்களின் மனதை வென்ற ஆசிரியர்களைக் காணும் போது ஏற்படுவததை மறுப்பதற்கில்லை.

இன்று காலை தொலைபேசி சிணுங்கியோது நேரத்தைப்பார்த்தேன். நேரம் 05:30 என்றிருந்தது. இந்த நேரத்தில் எனக்கு தொலைபேசி எடுப்பது எனது தாயார் மட்டுமே. நான் பல தடவைகள் நோர்வே நேரங்கள் பற்றி அவரிடம் கூறிய பின்பும் அதை அவர் கவனிப்பதேயில்லை. தான் உரையாடி முடிந்ததும் ”சரி மகன்,  நான் வைக்கிறன் நீ படு” என்பார்.

இன்று எனது பிறந்த நாள் என்பதால் அதற்கு வாழ்த்து தெரிவிக்க எடுத்திருக்கிறார். அவர் வாழ்த்தி முடிந்ததும் அம்மா நித்திரை வருகிறது படுக்கவிடுங்கள் என்று அவரிடம் இருந்து விடைபெற்று போர்வையினுள் புகுந்து, ஆழந்த தூக்கம் ஆட்கொள்ளும் வேளை மீண்டும் தொலைபேசி அடித்தது. நிட்சயம் அம்மாதான் சாப்பிட்டியா என்று கேட்க எடுக்கிறார் என்று நினைத்தபடியே சற்றுக் காரமாக ஹலோ என்றேன்.

மறு புறத்தில் My son  என்று தொடங்கி கடவுள் உன்னை  ஆசிர்வதிப்பாராக என்று ஒரு குரல் ஆங்கிலத்தில் கூறியது.  வார்த்தைகள்  காதிற்குள் புகுந்து முளையை எட்டுவதற்கு முதல் அக் குரலினை அடையாளம் கண்டுகொண்டேன். என்னையறியாமலே துள்ளி எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டேன். அதற்குள் அவர்  தனது வாழ்த்தினை தெரிவித்துவிட்டு, நான் யார் என்ற சொல் பார்ப்போம் என்றார் ஆங்கிலத்தில் .

திகைப்பின் உச்சியில் நின்று, ஆச்சர்யத்தில் திண்டாடியபடியே தெரியும் Sir, என்றேன். அப்ப நீ இன்னும் இந்தக் கிழவனை இன்னும் மறக்கலியா என்றார் அவர்.

மறக்கக்கூடிய குரலா அது.  ஏறத்தாள 8 வருடங்கள் தினமும் கேட்டுப்பழகிய அளப்பரிய ஆளுமை மிகுந்ததோர் குரல் அது. எந்த நெஞசினை துளைத்துச்செல்லும் கம்பீரமான சக்திஇந்தக் குரலுக்கு உண்டு. 87வயதிலும் தன்னிடம் கல்விபயின்ற ஒரு மாணவனின் பிறந்தநாளினை நினைவிற்கொண்டு வாழ்த்துவதற்காய் தூரதேசம் தெலைபேசி எடுத்த ஒரு பேராசானின் குரல்.

ஆம், எங்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், எனது பேராசானுமாகிய Prince G. Casinader மறுபக்கத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

தூக்கத்தின் கலக்கம் மறைந்து சிறுகுழந்தை போலானது மனது. அவர் தொடர்ந்தார். என்னை நீ ஒரு முறை தான் வந்து பார்த்தாய் இவ் வருடம் இலங்கை வந்திருந்த போது, மீ்ண்டும் உரையாட வருவதாகக் கூறியிருந்தாய். என்னிடம் இருந்து விடைபெறாமலே சென்றுவிட்டாய், இது அழகான பழக்கமில்லை, உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார் 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்து அதே கண்டிப்பான குரலில்.

மன்னித்துக்கொள்ளுங்கள் Sir, நினைத்திருந்ததை விட வேலைகள் அதிமாகிவிட்டன அதனால் வரமுடியவில்லை என்றேன். இருப்பினும் மனிதர் விடுவதாயில்லை. தொலைபேசியாவது எடுத்திருக்கலாம் என்பது அவரது ஆதங்கம். உண்மை தான் தவறு என்னுடையது தான் Sir  என்றேன்.

பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். நேற்று ‌நடைபெற்ற பொ.கனகசபாபதி அவர்களின் புத்தக அறிமுக விழாவைப்பற்றிக் பற்றிக் கூறினேன். My son,  என்று ஆரம்பித்தார்: நீ நினைப்புது போல் நான் ஒன்றும் மகான் அல்லன் . நீயும் உன்னைப்போல என்னிடம் கல்விகற்ற பலரும் என்னை பெரிய மனிதனாகப் பார்க்கிறீர்கள். என்னை விடப் எவ்வளவோ பெரியவர் S.V.O. Somanader. அவரைப் போன்றவர்களைப் பற்றி எழுதப்படுவதே சிறந்தது. எனவே தான் அவரைப்பற்றிய தகவல்களைக் கொடுததேன் என்றார்.

எனது மாணவன் நீ. உன்னுடன் நீ வரும் நேரங்களில் மனம்விட்டுப் பேசியிருக்கிறேன். வாழ்க்கை என்னை பாலைவனங்களுக்குள்ளாலும், ரோஜாத்தோட்டம் போன்ற மாணவர்களினூடாகவும் நடத்திப்போயிருக்கிறது. எனது அந்திம காலத்தில் நானிருக்கிறேன். அடுத்தமுறை நீ வரும்போது நான் இருப்பேனோ தெரியாது. ஒன்றை மட்டும் அறிந்துகொள் பல மாணவர்களுக்கு நான் ஆசிரியனாக இருந்திருக்கிறேன். சில மாணவர்களுக்கு ஆசிரியனாக இருப்பதற்கு நான் ஆசீர்வதிக்ப்பட்டிருக்கிறேன். நீயும் அவர்களில் ஒருவன் என்ற போது என் கண்கள் கலங்கி பேசமுடியாதிருந்தேன். இதை எழுதும் போதும் நெஞ்சமெல்லாம் பெருமையை உணர்கிறேன்.

பலதையும் பேசியபின் உரையாடலை முடித்துக்கொண்டோம். என்னால் தொடந்து உறங்க முடியவில்லை. பேராசானின் நினைவுகளில் நனைந்துகொண்டிருந்தேன். எத்தனையோ வருடங்களின் பின், எனக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவதற்காக தொலைபேசி இருக்கிறார். என்றுமே கேட்காத பெருமை தரும் வார்த்தைகளால் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். நேற்றைய நாளுடன் இன்றைய நாளை ஒப்பிடும் போது மனதுக்குள் சுகமானதோர் உணர்வு என்னை ஆட்கொள்கிறது.

பல மாணவர்களைப் பெற அவர் தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றாரல்லவா? ஆனால் எனக்கேதோ நாங்கள் தான் அவரை ஆசிரியனாய்ப் பெற ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு?


இன்றை நாள் மிக மிக அழகானது.



இடுப்பிற்கு கீழ் இயக்கமற்ற ஒரு போராளியின் வாழ்க்கைப் போராட்டம்

இன்று சந்திக்கப்போகும் போராளியின் வாழ்க்கை மிகவும் வேதனையான நிலையில் இருக்கிறது என்றும், அவர் குடும்பத்திற்கு மட்டக்களப்பில் வருமானம் இல்லாததால் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கு கூலிவேலை செய்து வருவதாகவும் நண்பர் கூறியிருந்தார். அவர்கள் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார்கள். அவர்களின் நண்பர்களின் வீட்டில் அவர்கள் தங்கியிருப்பதால் அவர்களை அங்கு சந்திப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். நண்பர் மட்டக்களப்பிற்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். மாலை நேரம். இருள் ஊருக்குள் குடிவந்திருந்தது.

இரண்டு வேலிகளுக்கு இடையே அமைந்திருந்த ஒரு சிறு மணற்பாதையூடாக ஒரு வீட்டினை அடைந்தோம். எம்மை வரவேற்றார் அந்தப் போராளி. அவரால் எழுந்த நிற்கமுடியவில்லை. கதிரையில் உட்கார்ந்திருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டு நண்பர்கள் நாகரீகம் கருதி  அகன்றுகொண்டார்கள்.  மங்கலான மின் குமிழ் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிறிய குழந்தைகள் தாயின் அருகில் நின்றிருக்க  முத்த மகள் மட்டும் தந்தையின் கதிரையின் கைப்பிடியில் அமர்ந்திருந்தாள்.

பொதுவான அறிமுகங்களுடன் ஆரம்பதித்த பேச்சு அவர்களின் வாழ்க்கை நிலமை பற்றித் திரும்பியது.  மட்டக்ளப்பில் இருந்து பல வருடங்களுக்கு முன் முக்கியமானதொரு படையணிக்காக வன்னி சென்று, கிழக்கின் பிரிவின்போதும் வன்னிக்கே விசுவாசமாய் இருந்திருக்கிறார். களத்தில் பல காயங்களை பெற்றிருந்தாலும் முதுகெலும்பை தாக்கிய ஒரு செல் துண்டு அவருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று அவர் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் இருக்கிறார். தனது கைகளை ஊன்றியே அவரால் வீட்டுக்குள் நடக்க முடிகிறது.  வெளியல் செல்வதாயின் சக்கரநாற்காலி இருக்கிறது.

இவர் காயப்பட்டிருந்த காலங்களில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், உதவிகள் பற்றிப் பேசினார்.  தனக்கு 2009ம் ஆண்டு சித்திரை மாதம் வரையில் விடுதலைப் புலிகளின் மாதாந்தக் கொடுப்பனவு இவரின் குடும்பத்திற்கு கிடைத்திருக்கிறது. அதன் பின் முள்ளிவாய்க்கால் நாட்களைக் கடந்து மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்த பின் வருமானமின்றி தடுமாறத்தொடங்கியிருக்கிறார்.

அவர் மீன்பிடித்தொழில் தெரிந்தவராகையால் நண்பர்கள் யாராவது அவரை வீட்டில் இருந்து தூக்கிச்சென்று, ஒரு வாகனத்தில் இருத்தி, வாவிக்கரையில் இருக்கும் தோணியில் உட்கார உதவுவார்கள் எனின் அவர் வாவியில் மீன்பிடித்துத் திரும்புவார். மீண்டும் அவரை யாராவது வீட்டுக்குச் செல்ல உதவும் வரை தோணியிலேயே காத்திருக்கவேண்டும். வீடு சென்ற பின்‌பு மனைவி அவர் பிடித்த மீன்களை விற்பனைசெய்ய சந்தைக்குச் செல்லவேண்டும்.

மற்றவர்களின் உதவிகள் கிடைப்பது அவ்வளவு இலகுவல்ல. எனவே வருமானமும் குறைவாகவே இருந்திருக்கிறது.  எனவே அவர்கள் வன்னியில் முன்பு வாழ்ந்திருந்த பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறர்ர்கள். அங்கு கிடுகு பின்னும் வேலை பார்த்திருக்கிறார் அவரது மனைவி. அவர்களுடைய ஒரு நாள் வருமானம் ஏறத்தாள 250 ரூபாய்.  ஐந்துத மனிதர்களின் வயிற்றினை 300  ரூபாவால் எப்படி நிரப்பினார்கள் என்பது எனக்கு இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.

குழந்தைகளின் பட்டினி, மருந்துகள், உடல் உபாதைகள், என்று அவர்களின் இன்றைய நிலையைக் கூறிய போது அவர் அழுதுவிட்டார். மக்களின் விடிவுக்காகவே நாம் இரண்டுபேரும் போராட்டத்திற்குச் சென்றோம். ஆனால் இன்று எம்மை மக்கள் தீண்டத்தகாதவர்கள் போல் பார்க்கிறார்கள், எம்முடன் மிகவும் நெருங்கிய நண்பாகளைத் தவிர வேறு எவரும் பழக விரும்புவதில்லை. எமது குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன. இதற்காவா நாம் எமது வோழ்க்கையை போராட்டத்திற்கு அர்ப்பணித்தோம்? ஏன் எமக்கு உதவுவதற்கு எவரம் முன்வருகிறார்கள் இல்லை? இப்படி அவர் கேள்விகளை அடுக்கிக்கிய போது எதுவும் பேச முடியாது தலையைக்குனிந்திருப்பதை தவிர வேறுவழி எதுவும் தெரியவில்லை.

அதன் பின் எமது உரையாடலில் பெரும் கனதி படிந்துபோயிருந்தது. இந்தப் போராளியின் மனைவியும் முன்னாள் போராளி.  அங்கவீனமானவர்களின் மீது இருந்து பரிவின் காரணமான  இந்தப் போராளியை மணமுடித்திருக்கிறார்.  விடுதலைப் புலிகளின் தலைவர் மீதும், அவர்கள் இவர்களை நடாத்திய விதத்திலும் பெரு மதிப்புக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அங்கவீனமானவர்களை மிகுந்தத கவனத்துடனும், கௌரவத்துடனும் நடாத்தியது மட்டுமல்ல அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள் என்பதை அவர் எடுத்துக்கூறிய பல சம்வங்களினூடாக அறியக் கிடைத்தது. 2009  ஏப்ரல் மாதம் வரை ஊட்டச்சத்துள்ள உணவுகள், மருந்துகள், மாதாந்தக் கொடுப்பனவு என்பன இவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்திருக்கின்றன.

இவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை எனது நண்பர் முன்பே கூறியிருந்ததால் அவுஸ்திரேலியாவில் வாழும் ஒருவரிடம் இவர்களுக்கு உதவ முடியுமா என்று கேட்டிருந்தேன். ஆம் என்று பதில் கிடைத்தது.

இன்று அவர்களின் குடும்பத்திற்கு  சிறுகைத்தொழில் முயற்சி ஆரம்பிப்பதற்கான  உபகரணங்கள் இரண்டு கொள்வனவு செய்யப்பட்டு, அவர்களை முறையான பயிற்சிவகுப்பிற்கு அனுப்பி, அவர்களை மேற்பார்வைசெய்து மேலும் வளர்ச்சியடைய உதவுவதற்குகான அறிவுரையாளாகளை ஒழுங்கு செய்து அவர்களின் வாழ்வினை சற்றே மாற்ற முடிந்திருக்கிறது. குழந்தைகள் பாடசாலைக்குச் செல்கிறார்கள்.

இவர்களும் ஏனைய முன்னாள் போராளிகளுடன் நாம் சென்றிருந்த சுற்றுலாவிற்கு வந்திருந்தார்கள். கணவனை சிறு பிள்ளையைப் போல் பராமரிக்கும்  மனைவின்  மனப்பாங்கும், தாயார் தந்தையாரை கவனிக்கும் நேரங்களில் தன் இரண்டு சிறிய தங்கைகளையும் 9 வயதேயான பெண்குழந்தை கவனித்துக்கொண்ட விதமும்  சுற்றுலா சென்றிருந்த எல்லோரையும் கவர்ந்தது. கணவன், குழந்தைகள் என்று அந்தப் பெண் எப்போழுதும் அயராது உழைத்துக்கொண்டே இருந்தார்.

நாம் புறப்பட்ட போது வீதி வரை வந்த அந்தப் பெண் ” உங்களின் உதவியால் இனி என்ட பிள்ளைகள் பட்டினி கிடக்காதுகள் அண்ணண்” என்ற போது, அது என்னால் அல்ல, அது உங்களுக்கு உதவி செய்த குடும்பத்தினரையே சாரும் என்றபடியே மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டேன்.  மனதுக்குள் இனம்புரியாதவொரு அமைதி குடிவந்திருந்தது. நண்பர் மட்டக்களப்பை நோக்கி மோட்டார்சைக்கிலை செலுத்திக்கொண்டிருந்தார். தூரத்தே நிலவு தெரிந்துகொண்டிருந்தது.


கடலில் காவியமான அப்பாவுக்காய் காத்திருக்கும் பாலன்

இந்தப் படத்திலிருப்பர்கள் இக்கதையின் உரிமையாளர்கள்
...................................................................................

நாளை காலை நாம் நீண்டதொரு பயணம் செய்கிறோம். ஏறத்தாள 3 மணிநேரம் மோட்டார்சைக்கில் பயணம்.  எனவே மனதையும் உடலையும் தயாராக வைத்திருங்கள் என்றார், எனது வழிகாட்டி.
 
கடந்த சில நாட்களாக இவருடனே எனது காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஏழ்மையிலும் சேவையையும் நேர்மையும் கொண்டிருக்கும் இம் மனிதரை எனக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கிறது. அவரின் கருத்தை உள்வாங்கியபடி ”சரி” நாளை காலை சந்திப்போம் என்றபடியே விடைபெற்றுக்கொண்டேன்.

மறு நாள் காலை 7 மணியளவில் அவரின் மோட்டார்சைக்கில் மட்டக்களப்பு, பிள்ளையாரடி, ஏறாவூர், சித்தாண்டி என்று கடந்து கொண்டிருந்தது. காலைப்பொழுதில் கடந்து போன பஸ்கள், பாடசாலை மாணவர்கள் என்பன எனது பால்யத்தை நினைவுபடுத்த அவற்றில் லயித்தபடியே இடைக்கிடையே போத்தலை எடுத்து நீர் அருந்தியபடியே மோட்டார் சைக்கிலில் குந்தியிருந்தேன். வீதிகள் மிகவும் அழகாக செப்பனிடப்பட்டிருந்தன.

நண்பர் இடையிடையே ஹெல்மட்டுக்குள் தொலைபேசியை சொருகிக்கொண்டபடியே பேசிக்கொண்டிருந்தார். பாசிக்குடாவுக்கு செல்லும் வீதியையும் கடந்து சென்று கொண்டிருந்த போது எம்மை நிறுத்தினார்கள் வீதிக் கண்காணிப்பில் இருந்த போலீசார். நண்பரிடம் வாகனத்திற்கான பத்திரங்களை பரிசோதித்த பின் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிததனர்.

நேற்று எமக்குக் கிடைத்த ஒரு தொலைபேசிச் செய்தி, மட்டக்களப்பில் இருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு இடத்தில் ஒரு கேர்ணல் தரத்திலான போராளியின் குழந்தையும் மனைவியும் மிகுந்த வறுமையில் வாழ்கிறாகள் என்று அறியக்கிடைத்தது. அவரின் குடும்பத்தில் 5 உறுப்பினர்களை அவர்கள் இறுதியுத்தத்தில் இழந்திருக்கிறார்கள். அவர்களைச் சந்திப்பதற்காகவே நாம் சென்றுகொண்டிருக்கிறோம்.

மனம் இனம்புரியாதவோர் வெறுமையில் உளன்றுகொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக கேட்டும், பார்த்தும், உணர்ந்தும் கடந்துவந்த மனிதர்களின் கதைகள் என்னை பலமாகவே உலுக்கியிருக்கின்றன. எவருடனும் மனம் விட்டு பேச முடியாததால் மனதுக்குள் பெரும் பாரம் கனத்துக்கொண்டிருக்கிறது. சந்தித்த குழந்தைகளின் கண்களும், அவற்றின் ஏக்கங்களும் அடிக்கடி மனக்கண்ணில் வந்துபோகின்றன. ஒரு வித இயலாமையை, வெறுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு மணிநேர பயணத்தின் பின் ஒரு கடையில் நிறுத்தி குளிர்பானம் அருந்தி களைப்பை தீர்த்துக்கொண்டோம். மீண்டும் நீண்டதோர் பயணம். ஏறத்தாள 11மணிபோல் அவர்களின் வீடு இருந்த இடத்திற்கருகில் மோட்டார்சைக்கிலை நண்பர் நிறுத்தினார்.  வீட்டை விசாரித்து அறிந்துகொண்டோம். நாம் அங்கு சென்று போது இரண்டு பெண்கள் எம்மை வரவேற்று அவர்களின் குடிசையினுள் அழைத்துச்சென்றனர். என்னால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. மேலிருந்து தகரத்தினூடாக வெப்பம் தகித்துக்கொண்டிருந்தது. குடிசைக்கு வெளியிலும் அமர்ந்திருக்க முடியாது. காரணம்  உளவாளிகளின் கண்கள் எங்கிருக்கும் என்று எவருக்கும் தெரியாத நிலை அங்கிருந்தது. எனவே எம்மை அவர்களின் குடிசையினுள்ளேயே இருக்கும்படியே கேட்டுக்கொண்டார்கள்.

வியர்வையில் நனைந்து கொண்டிருந்தேன். மிகவும் அசௌகரீயமாக இருந்தாலும் அவர்களின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. அந்த குடிசையில் 3 குழந்தைகள், மூன்று தாய்மார், அவர்களின் தங்கை, அவர்களில் ஒருவரின் கணவர் 8 மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள். நிலம் கழிமண்ணினால் அமைக்கப்பட்டிருந்தது. சுவாமியறையில் சுவாமிகளுடன் பல மனிதர்களின் படங்களும் இருந்தன. குழந்தைகள் ஓடித்திரிந்துகொண்டிருந்தாகள். ஒரு அடைக்கோழி வீட்டுக்குள் வரமுயற்சித்துக்கொண்டிருந்தது. அவர்கள் அதை கலைத்துக்கொண்டிருந்தார்கள்.

குழந்தைகளுடன் மெதுவாய் நட்பாகிப்போனேன் எனது வழிகாட்டி நண்பரை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அவரை அண்ணண் அண்ணண் என்று அவர்கள் உரிமையுடன் கொண்டாடியது என் மனதுக்குள் சற்று பொறாமைய் தந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அவர்களுடன் பல காலம் வாழ்ந்திருக்கிறார். ஆனால் ஏறத்தாள 10 வருடங்களின் பின் இன்று சந்திக்கிறார்.

நண்பர் மெதுவாய் பேச்சை ஆரம்பித்த போது ஒரு பெண் அழுதபடியே தனது கதையைக் கூறத் தொடங்கினார். வன்னியில் வாழ்ந்திருந்த காலத்தில் அவாகள் குடும்பத்தில் மூவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இரண்டு மாப்பிள்ளைகள் போராளிகள். ஒருவர்  மிக உயர்ந்த பதவியில் இருந்தவர். பெற்றோர்கள் மற்றும் 6 சகோதர சகோதரிகளுடன்  வாழ்திருக்கிறார்கள். திருமணமான ஒருவருக்கு  முதுப்பகுதியில் குறைபாடு இருக்கிறது. எனவே அவரை அவரின் நெருங்கிய உறவின‌ரே திருமணம் செய்திருக்கிறார்.

இந்தக் குடும்பத்தில் தற்போது இரண்டு முன்றரை வயதுப் பாலகர்கள் இருக்கிறார்கள். அதாவது 2009ம் ஆண்டு ஆரம்பத்தில் பிறந்த குழந்தைகள். முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்து குழந்தைகள். இந்த இரண்டு குழந்தைகளினதும் தந்தையர்களில் ஒருவர் இறுதி யுத்தத்திலும், ஏனையவர் இறுதியுத்தத்தின் போது கடலிலும் உயிரிழந்தவர்கள். கடலில் இறந்தவரின் உடலம் கிடைக்கவில்லை.

இக்குடும்பத்தாரின் பெற்றோரும் இரண்டு சகோதரிகளும் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு கப்பலில் வரும் போது கடற்படையினரின் தாக்குதலில் உயிர‌ிழந்துள்ளனர். அவர்கள் ‌தம்முடன் வைத்திருந்த காணி உறுதிகள், நகைகள், பணம் அனைத்தையும் கடல் எடுத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு சகோதரியும் கணவனும் முள்ளிவாய்க்கால் காலங்களின் பின்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் ஏனைய குடும்பத்தினருடன் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பூர்வீக நிலம் அரசால் பறித்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரை ஒரு திருச்சபை பொறுப்பெடுத்து தங்குமிட வசதியும் கல்வியும் பெற்றுக்கொடுக்கிறார்கள்.

கடலில் காணாது போன கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எனது நண்பரின் கூற்றுப்படி அவர் தப்பியிருந்தால் எப்படியாவது தொடர்புகொண்டிருப்பார் என்றும் கைது செய்யப்பட்டிருந்தால் ”நிட்சயாமாய் உயிருடன் வெளியே விட முடியாதவர்களின் பெயர்ப்பட்டியிலில் அவர் பெயர் இருப்பதால் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்றும் கருதுகிறார்.

குழந்தையிடம் அப்பா எங்கே என்றால் கடலில் நிற்கிறார் என்று பதிலளிக்கிறான். அதையே தாயாரும் விரும்பகிறார். தாயாரின் சுயநம்பிக்கை பெரிதும் காயப்பட்டிருக்கிறது. நாம் அங்கு நின்றிருந்து முழுநேரமும் அவர் கண்கலங்கியபடியே நின்றிருந்தார்.

இவர்களின் குடும்பத்திற்கு  அரசு தண்ணீர் இல்லாத ஒரு குடியேற்றத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. அந்துக் குடியேற்றத்தில் நீர் வசதி இல்லை என்ற காரணத்தினால் அங்கு எவரும் குடியேறவில்லை. தமது கட்டளையை மறுத்ததால் இலவகமாகக் கொடுத்த உணவுப்பொருட்களையும்  அரசு நிறுத்தியிருக்கிறது.

தற்போது சகோதரி ஒருவரின் கணவர் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி விற்பனை செய்து உழைக்கும் 450 ரூபாயிவில் அக்குடும்பத்தின் உள்ள 8 மனிதர்களின் தினசரி வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது.  வறுமையின் காரணமாக குழந்தைகளின் கல்வி, ஒரு சகோதரியின் கல்வி என்பன தடைப்பட்டுவிடும் அபாயம் தேவைக்கு ‌அதிகமாகவே இருக்கிறது.

நாம் அங்கு தங்கியிருந்த இரண்டு மணிநேரத்தில் வீட்டில் இருந்த ஒரு கோழி அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. கீரை, முருக்கங்காய் ஆகியவற்றுடன் நாட்டுக்கோழிக்கறியுடன் அன்பும் கலந்து பரிமாறினார்கள். அமிர்தமாய் இருந்தது உணவு.

இவர்களிடம்  நாம் செல்வதற்கு முதலே இவர்களின் பிரச்சுனைகளை நான் அறிந்திருந்ததால், நோர்வேயில் இருந்த ஒரு நண்பரிடம் இவர்களுக்கு உதவமுடிமா என்று கேட்டிருந்தேன். ஆம் என்று அவர் கூறியிருந்தார் எனது நண்பர்.

கல்விகற்பதற்கு வசதியாக முதலில் இவர்களை அந்த இடத்தில் இருந்து இடம் பெயரச்செய்து, வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை திடப்படுத்த ஒரு கைத்தொழில் முயற்சியையும் உருவாக்கித்தர எனது நண்பர் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார். வாடகை வீடுகளின் முற்பணம் ஏறத்தாள 120.000 ரூபாக்கும் அதிகமாக இருக்கிறது. 3 தொழிலாளர்களை உள்ளடக்கிய கைத்தொழில் ஆரம்பிக்க ஏறத்தாள 75.000 ரூபாயும், அதுவரை அவர்களின் வாழ்வாதரத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகை என அவர் அந்தக் குடும்பத்திற்கு செய்யும் உதவி அளப்பெரியது.  திருச்சபையில் பாதிரியாரின் கவனத்தில் வளரும் அவர்களின் தம்பியும் இன்னும் சில நாட்களில் அவர்களுடன் வாழத் தொடங்கிவிடுவார். 3 குழந்தைகள், 6 வளர்ந்தவர்களின் வாழ்க்கைச் சுமையை ஏற்றுக் கொண்ட அந்த நண்பரின் மனிதநேயம் மிகப்பெரியது. அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்படியான நண்பர்களைப் பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு நான் இன்னொருவரிடம் உதவி கேட்டபோது நான்  புதிய கார் வாங்கவேண்டும் நீ எனக்கு உதவுகிறாயா என்று நக்கலாக கேட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். மனிதர்களின் மனம் விசித்திரமானது.

இவர்களை சந்தித்து சில நாட்களின் பின் நான் சந்தித்த முன்னாள் போராளிகளை அழைத்துக்கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம். அந்தச் சுற்றுலாவின் போது நாம் கடலில் குளிப்பதாகவும் ஒப்பந்தமாகியிருந்தது. இன்று நான் சந்தித்த குடும்பத்தில் இருந்து கடலில் காவியமான தனது அப்பாவுக்கு என்று இரண்டு காகிதக் கப்பல்களுடன் வந்திருந்தான் அவரின் மகன். நானும் அவனும் இந்து சமுத்திரத்தில் இரண்டு கப்பல்கள் விட்டோம்.

குழந்தைகள் கடலுடன் விரைவில் நட்பாகிப்போனார்கள். ஆனால் அந்தக் குடும்பத்தின் இருந்த வளர்ந்தவர்களுக்கும் கடலுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளியே இருந்தது. அவர்களில்  ஒருவர் கடலை நம்ப மறுத்தார். தனது குழந்தையை கரையில் இருந்து குளிக்கவும் அவர் அனுமதிக்க மறுத்தார். பலத்த சிரமத்தின் பின் அவர் அவரது தம்பியின் கையை பற்றியிருக்க நாம் பலர் குழந்தைக்கு அருகில் அரண்போல் நின்றிருக்க குழந்தையின் கையைப் பிடித்தபடியே அவனை குளிக்க அனுமதித்தார். சற்று நேரத்தில் குழந்தை கதறக் கதற  உடைமாற்றி அவனை கடல் மண்ணிலேயே உட்கார்த்தி வைத்திருந்தார்.

ஏன் அவனை இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் கடலில் குளிக்கவிடுகிறீர்கள்  , இல்லை என்று கேட்டேன். ” அண்ணண், என்ட குடும்பத்தில இருந்து 5 உறுப்பினர்களை இந்தக் கடல் எடுத்திருக்கிறது. நான் கடலை நம்புவதற்கில்லை என்றார். எதுவும் பேச முடியவில்லை என்னால்.

அவர்களுடன் உணவருந்தி உரையாடிக்கொண்டிருந்த போது அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு நண்பர் முன்வந்துள்ள‌தை அறிவித்தேன். மகிழ்ச்சியும் ஆனால் சிறு அவநம்பிக்கையும் தெரிந்தது அவர்களிடம். வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்த மனிதர்களின் அவநம்பிக்கை அது என்பதை புரிய அதிக நேரம் நேரம் செல்லவில்லை எனக்கு. சில நாட்களின் பின் நண்பரின் உதவி அவர்களை சென்றடைந்ததும் அவர்களின் அந்த அவநம்பிக்கை அகன்று போனது.

மதியம் போல் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டோம். வெளியே வெய்யில் அனல் போல் காய்ந்துகொண்டிருந்தது. நண்பர் மோட்டார்சைக்கிலை இயக்கினார். பின்னால் குந்திக்கொண்டேன். சற்றுத் தொலைவில் ஒரு குடிசையின் வாயிலை அடைத்தபடியே கைகாட்டிக்கொண்டிருந்தனர் 8 மனிதர்கள்.

நண்பர் புழுதியை சுவாசித்தபடியே கடமையில் கண்ணாயிருந்தார். இன்னொரு மனிதரினூடாக இவர்களின் வறுமைக்கும், துன்பங்களுக்கும் ஓரளவாவது உதவ முடிந்த மகிழ்ச்சியில் என் மனம் பெரும் மகிழ்ச்சியில் இருந்தது.




ஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண் போராளி

அன்று காலை ஹோட்டலைவிட்டு காலை 9 மணிபோல் வெளியே வந்ததும் இன:றைய நாள் தரப்போகும் வேதனைகளுக்கு முன்னுதாரணமாக தாங்கமுடியாத வெம்மையும், பழுக்கமும் முகத்திலடித்தது.

இன்று ஒரு முன்னாள் போராளியினை சந்திக்கச் செல்வதாக எனது வழிகாட்டி கூறியிருந்தார். நாம் நாளை நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும், செல்லும்  வழியில் கடைகள் பெரிதாக இருக்கமாட்டாது எனவே நீங்கள் உணவு, நீர் போன்றவற்றை எடுத்துவாருங்கள் நேற்று விடைபெற்ற போது அறிவித்திருந்தார்.

நானும் அதற்கேற்றவாறு தயாராகவே நின்றிருந்தேன். நண்பர் வந்ததும் மோட்டார்சைக்கிலில் ஏறிக்கொண்டேன்.  வாவிவீதியினூடாக நாம் சென்றுகொண்டிருந்தோம். வாவிவிதி கடந்ததும் வெள்ளைப்பாலத்தைக் கடந்து மட்டக்களப்பு பஸ்நிலயத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது மோட்டார் சைக்கில்..

நீல நிறத்தில் புதிய பஸ்நிலையம் அழகாக இருந்து. நண்பர் மோட்டார்சைக்கிலை நிறுத்திக்கொண்டார். சற்று நேரத்தில்  புழுதியை இறைத்தபடியே ஒரு பஸ் வந்தது. பலரும் அதிலிருந்து இறங்கினர். சில இளம் பெண்கள் மட்டும் ஆட்டோக்களில் ஏறிக்கொள்ள அந்த ஆட்டோக்கள் மார்க்கட் பகுதிநோக்கி விரைந்தன.

நண்பர் அர்த்தமுள்ள ஒரு பார்வையை என்மீது வீசினார். தலையை ஆட்டினேன் நான்.  நேற்று மாலை எமக்கு கிடைத்த தகவலின்படி படுவாங்கரைக் கிராமங்களைச் சேர்ந்த பெண்களும், முன்னாள் போராளிகளும் மட்டக்களப்பில் பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறாகள் என்று கூறப்பட்டது. அச்செய்தியில் குறிப்பிட்ட  இந்த பஸ் பற்றியும் கூறப்பட்டது. அதை உறுதிசெய்யவே இங்கு வந்திருந்தோம்.

மார்க்கட் நோக்கிச் சென்ற ஆட்டோக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு செல்வதால் அவ்விடத்தில் நாம் ஒரு நண்பரை நிறுத்தியிருந்தோம். தொலைபேசியில் வந்த நண்பர் ஆட்டோக்களின் வருகையை உறுதிப்படுத்தினார்.  எனவே நேற்றுக் கிடைத்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்.

நான் மீண்டும் மோட்டார் சைக்கிலில் உட்கார்ந்துகொண்டேன்.

விமானநிலைய விதியால் சென்று புதூரினூடாக மோட்டார்சைக்கில் சென்றுகொண்டிருந்தது. எமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ட்ராக்டர் இன் புழுதி எங்கள் முகத்தில் படிந்துகொண்டிருந்தது.

ஏறத்தாள இரண்டு மணிநேர மோட்டார் சைக்கில் ஓட்டத்தின் பின்பு ஒரு மிகவும் பின்தங்கிய கிராமத்தில் நின்றிருந்தோம். எனது நண்பர் குறிப்பிட்டஒருவரின் பெயரைக் கூறி விசாரித்துக்கொண்டிருந்தார்.

சிலர் முகத்தைச் சுளித்தனர். அசிங்கமான வார்த்தைகளில் திட்டினர். ”அவளுக்கு என்னத்துக்கு உதவி செய்யிறீங்க  ஊருக்குள வேற ஆட்கள் இல்லையா” என்ற வார்த்தைகளும் காதில் விழுந்தன. எம்மீது விழுந்த சிலரின் பார்வையில் சந்தேகம் குடியிருந்ததையும் அவதானிக்கமுடிந்தது.

இறுதியில் நாம் தேடிவந்த வீட்டினை அடையாளம்காட்டினான் ஒரு சிறுவன். உள்ளே இருந்து  ஒரு வயதான பெண் வெளியே வந்தார். நண்பர் அவருடன்  எம்மைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார்.” மனே ஓடிப்போய் முன் வீட்டுல ரெண்டு கதிர வாங்கிவாடா”  என்று கட்டளையிடப்பட்டது, அவளுக்கு. கிழிந்த ஊத்தையான துணியினை உடுத்தியிருந்த ஒரு பெண்குழந்தை படலையைத்தாண்டி ஓடினாள்.

மேலாடைமட்டும் அணிந்திருந்த ஒரு சிறுமி அப்பெண்ணருகிலேயே நின்றிருந்தாள். அப்போது  செயற்கைக்கால்களை பொருத்திய ஒரு பெண் வீட்டுக்குள் நுளைந்துகொண்டிருந்தார். அவரது மற்றைய கால் முழங்காலுக்கு கீழே சிதைந்திருந்தது. காயங்களில் இருந்து இரத்தமும் நீரும் வழிய கொசுக்கள்  அவர் காலை மொய்த்துக்கொண்டிருந்தன.

மெதுவாய் உள்ளே நுளைந்த அவரைப் பார்த்தேன் 30 அல்லது 33 வயது கடந்திருக்கமுடியாது என்று கூறியது உணர்ச்சிகளற்ற அவர் முகம். கடின வாழ்வின் இறுக்கம் அவரது முகத்தில் தெரிந்தது.

அந்நேரம் பார்த்து கதிரைகள் இரண்டினை இரு சிறுவர்கள் தலையில் சுமந்து வந்தனர்.  எம்மை உட்காரச்சொன்னார்கள். உட்கார்ந்து கொண்டோம். பெரும் அமைதி அங்கு பேசிக்கொண்டிருந்தது. நான் அங்கிருந்த பெண்குழந்தையை அருகில் அழைத்தேன். அம்மாவின் பின்னால் மறைந்துகொண்டாள் அவள்.

செம்பில் எமக்கு நீர் வழங்கப்பட்டது. அண்ணாந்து குடிக்க சற்றே சிரமப்பட்டேன். அதைக் கண்ட குழந்தைகள் சிரித்தார்கள். சேர்ந்து சிரித்தேன். அதுவே எமக்கிடையில் ஒரு வித நட்பை ஏற்படுத்தியது.

அதன் பின் அங்கிருந்த நேரமனைத்தும் என் வாழ்வினில் மறக்கமுடியாத நேரங்களாகப்போகின்றன என்பதை அறியாமல் அங்கு நின்றிருந்தேன். அப் பெண் பேசத் தொடங்கினார்.

குழந்தைப் போராளியாய் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டு, பயிட்சி கொடுக்கப்பட்டு சில ஆண்டுகளின் பின்பு கண்ணிவெடி அகற்றும் போது அது வெடித்ததினால் ஒரு காலையும் மறு காலில் முழங்காலுக்கு கீழேயும் காயப்பட்டிருக்கிறார். சிறந்த வைத்திய வசதி இல்லாததனால் பாதிக்கப்பட்ட ஒரு காலில் இன்றும் புண்கள்  வருகின்றன.காயப்பட்டு ஏறத்தாள 12 ஆண்டுகளாகின்றன.

திருமணம் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கிழக்கின் பிரிவின் பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கணவன் காணாமல் போய்விட்டார். இரண்டு  பெண் குழந்தைகள் இருக்கின்றன. தாய் தந்தையருடன் வசித்து வருகிறார். தந்தைக்கு 70 வயதாகிறது. சிங்களப் பகுதிகளில் வெள்ளாமை (வயல்) வெட்டும் தொழில் புரிகிறார்.

முதலாவது குழந்தைக்கு 9 வயதாகிறது. அவளிடம் அவளின் பெயரைக் கேட்டேன். சிரித்தாள். அப்போது அவளின் தாய் அவளால் ‌பேச முடியாது என்றார். அன்றைய அதிர்ச்சிகளின் ஆரம்பம் அது. அக் குழந்தை இன்று வரை பாடசாலைக்குச் செல்லவில்லை. செவிப்புலனற்றவர்களின் பாடசாலைக்கு  வாரத்தில் ஒரு தடவை அவளை அழைத்துச் சென்று வருவதற்கு அவர்களுக்கு 40 இலங்கை ருபாய்கள் தேவைப்படுகிறது. அத் தொகை அவர்களிடம் இல்லையாகையால் இன்றுவரை அக் குழந்தை பாடசாலைக்குச் செல்லவில்லை. அவளுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவள் அருகில் உள்ள ஒரு பாடசாலைக்குச் செல்கிறாள்.

அவர்களின் வீட்டில் ஒரு முலையில் ஒரு மீன் வலை இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைக் கண்ட அவர் அது தனது தந்தை வீடு திரும்பும் நாட்களில் மீன்பிடிக்கும் வலை என்றார்.  அவரின் தாயார் மகளின் சோகமான வாழ்க்கையின் சில பகுதிகளையும் தாம் அனுபவித்த வேதனைகளையும் பகிர்ந்து கொண்ட போது கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது, அவருக்கு.

கணவர்  கைது செய்து காணாமல் போன பின் வாழ்க்கை அதிகமாய் இவரை ஆட்ப்படைத்திருக்கிறது. ஒரு அரச பிரபலத்தை சந்திதது உதவி கேட்டபோது சரி, பார்ப்போம் என்றாராம்.

வறுமை தறிகெட்டு ஓடியகாலங்களில் அங்கவீனமான உடலுடன் பால்வினைத்தொழில் செய்திருக்கிறார். அதன் காரணமாக கருவுற்று ஒரு குழந்தைக்கு தாயாகியும் இருக்கிறார். தன்னால் வளர்க்க முடியாது என்பதனால் அக் குழந்தையை  நல்ளுள்ளம் படைத்த ஒரு குடும்பத்திடம்  தத்துக்கொடுத்திருக்கிறார்.

தற்போது ஊர் மக்கள் இது பற்றி அறிவதால் இவர் குடும்பம் தீண்டத்தகாத குடும்பமாகியிருக்கிறது. ஓதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார். கூலித்தொழிலும் கிடைப்பதில்லை. தாயார் அவவப்போது மீன்பிடித்து குடும்பத்தை காப்பாற்றிவருகிறார்.

இவரின் கதைகளை பேசிக்கொண்டிருந்த போது அவரின் குழந்தைகள் நட்பாகிப்போகின என்னுடன். ‌நாம் அங்கிருந்து புறப்பட்ட போது ஒரு சிறுமி எனது கையைப்பற்றியிருந்தாள், எனது கையை விடுவித்துக்கொண்ட போது என் கண்களைச் சந்தித்த அவளின் பார்வையை நேரே சந்திக்கமுடியாததால் தலையைக் குனிந்து கொண்டேன்.

மோட்டார்சைக்கில் புறப்பட்டபோது  காயும் வெய்யிலையும், புழுதியையும் பொருட்படுத்தாது எம்மெதிரே ஓடினார்கள் அக் குழந்தைகள். சற்று நேரத்தில் நாம் அவர்களைக் கடந்த போது அவர்களை நிமிர்ந்து பார்க்க திராணியற்றதனால் helmet இனுள‌்  முகத‌்தை மறைத்துக் கொண்டேன்.

மீண்டும் மோட்டார்சைக்கில் படுவான்கரைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.


மேலே உள்ள படம் குறிப்பிட்ட குடும்பத்தவர்களின் கால்களையே காட்டுகிறது.

மனச்சாட்சியுடன் நட்பாயிருங்கள்


கடந்து போன சில கனதியான நாட்களின் மீண்டும் உயிர்திருக்கிறேன் இன்று. நேற்றைய இரவின் ஞானம் என்னை எனக்கு மீட்டத் தந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

என்னை மீடடுக்கொண்ட பரவசத்தில் இருந்து மீள முதலே அதை பகிர்ந்து கொள்வதற்காய் இந்தப் பதிவை எழுதத்தொடங்கியிருக்கிறேன்.  இது ஒருவித பரவசமான பதிவு.

சில நாட்களுக்கு முன் நண்பர்கள் சிலர் என்னை, எனது குறிப்பிட்டதோர் செயலுக்காய் மிகக் கடுமையாய் விமர்சித்தார்கள்.

மனம் கனத்தும், சிறுத்தும் போனது. வெட்கித் தலைகுனிந்திருந்தேன், மனச்சாட்சி விரோதியாகிப்போனது, அமைதியற்ற மனம் தறிகெட்டுப் பாய, தூக்கமற்று என்னை முழுவதுமாய் இழந்திருந்தேன்.

என் செயலால் பாதிக்கப்பட்டவர்களின்  மனம் பெரும் சஞ்சலத்துக்கும் வேதனைக்கும் உள்ளானது.  மனங்கள் காயப்பட்டும், உறவுகளில் விரிசலும் ஏற்பட்டன. நட்புகளை இழந்து அனாதரவானது போலணுர்ந்தேன். பாதுகாப்புணர்வினை இழந்துபோனேன்.

கொட்டப்பட்ட வார்த்தைகளை  எப்படி அள்ளியெடுக்கமுடியாதோ அப்படிப்பட்ட நி‌லை அது.  மற்றவர்கள் பாதிக்கப்படவார்கள் என்று நினைத்தோ, மற்றவர்களை காயப்படுத்தும் நோக்கத்துடனோ அல்லது மற்றவர்களை ஏமாற்றும் நோக்கத்துடனோ செய்யப்பட்ட செயல் அல்ல. அன்றைய நிலையில் அது தவறாய்ப் புரியவில்லை, ஆனாலும் இன்று அது தவறு என்று புரிந்திருக்கிறது.


நான் குற்றமற்றவன் என்று எப்போதும் கூறியதில்லை. தவறுகள் செய்யாது இருக்க நான் ஒன்றும் தெய்வப்பிறவியும் அல்ல, உணர்ச்சிகள் இன்றி வாழ நான் ஜடமுமல்ல. நானும் நன்மை தீமைகள், ஆசாபாசங்கள் கொண்ட சாதாரண மனிதனே. நன்மையும் தீமையும் இங்கும் உண்டு எங்கும் உண்டு.

மற்றவருக்கு  என்னாலும், எனக்கு மற்றவர்களாலும் துன்பம் ஏற்படாமல் வாழவே விரும்புகிறேன். என் மனட்சாட்சியுடன் பூசலின்றி வாழ்தல் முக்கியம் எனக்கு. தற்போது அது  சாத்தியமாயிருக்கிறது.

என் தவறுகளை தவறு என்று ஏற்றுக்கொள்ளவும், தயக்கமின்றி மன்னிப்புக்கோரவும், அவற்றில் இருந்து பலதைக் கற்றுக்கொள்ளவும் என்னால் முடிகிறது.

கடந்து போன நாட்கள், கடந்து போனவையே. கடந்த நாட்களில் இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ள முடியாது என்பது புரியும் அதே வேளை அத் தவறுகளில் இருந்து வாழ்வினைக் கற்றல் இன்னும் சாத்தியமாயிருக்கிறது, எனக்கு.

கற்றலால் உயிர்க்கலாம் என்பதையும் அனுபவித்துணர்ந்திருக்கிறேன்.

என் தவறுகளை தவறு என்று, அவற்றை ஏற்று, தவறுகளை மன்னிக்கமுடியுமா என்று மனதாரக் கேட்டு  நிமிரும் போது, மனமானது சுமந்துகொண்டிருந்த கனதிகளை இழந்து, என்னுள் புயலுக்கப் பின்னான தென்றலைப்போன்றதோர் பெரும் அமைதியையும், சுகத்தையும் தந்து போகிறது.  இழந்து போன நிம்மதியும், சுய நம்பிக்கையும், சுயமும் முன்பைவிட பல மடங்கு அதிகமாக எனக்குள் ஊறிக்கொண்டிருப்பதை உணருகிறேன்.

சில நாட்களின் பின், மனச்சாட்சி என்னுடன் மீண்டும் நட்பாய் தோளில் கைபோட்டு தோழமையுடன் பேசுறது.  முள்ளாய் குத்திய படுக்கையும், தொலைந்து போன சுகமான தூக்கமும், நிம்மதியற்று தறிகெட்டு ஓடிய சிந்தனைக் குதிரையும், கூனிக்குறுதியிருந்த மனமும் தந்த வேதனைகளைக் கடந்து, மனமாது, சீழ் வடிந்த ரணத்தின் ஆறுதலையும், சுகத்தையும் உணர்ந்திருக்கிறது.

முன்பைவிட என்னில் எனக்கு பலமான பாதுகாப்பான உணர்வும், நம்பிக்கையும ஏற்பட்டுள்ளதுடன் அன்பான, தவறுகளை மறந்து மன்னிக்கும் மனிதர்களிலும், நண்பர்களிலும் பெரும் நம்பிக்கையும் எழுந்திருக்கிறது. மனித உறவுகள் பலப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நண்பர்களை பெற்ற நான் அதிஸ்டசாலியே.

தவறுகள் தவறாயிருப்பினும், தவறுகளினால் கிடைக்கும், ஞானத்தின் சுகத்னை அனுபவித்துணரும் போது, என்னை நான் பல காலங்களின் பின் மீண்டும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன். மனம் காற்றில் சருகாயிருக்கிறது.

நண்பர்களே! மனச்சாட்சியுடன் நட்பாயிருங்கள். அதுவே யாதுமாகிறது.


பல நாட்களின் பின் இன்றைய நாள் மிக மிக அழகாயிருக்கிறது.



படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ?


முழு  நிலாவின் ஒளி மட்டக்களப்பு வாவியில் மினுங்கிக் கொண்டிருந்தது. நண்பரின் மோட்டார்சைக்கிளில் உட்கார்ந்திருந்தேன், நான். மீண்டும் படுவான்கரைப்பக்கமாக ஒரு காணாமல் போன போராளியின்  மனைவியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தோம். இரவு எமக்கு முன்பாகவே ஊருக்குள் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது.

தார் ஊற்றப்பட்ட வீதிகளைக் கடந்து கிறவற் பாதைகளினூடாக அவர்கள் வாழும் இடந்தை அடைந்த போது மணி ஏழிருக்கும்.  அவர்களின் ஒழுங்கையினுள் நாம் நடந்து போது நாய்கள் எம்மை வரவேற்றன. பயந்தபடியே  நண்பரின் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். அவரோ மிக அலட்சியமாய் இருட்டில் வழி தெரிந்தவர் போல் நடந்துகொண்டிருந்தார்.

அவர்கள் வீட்டருகே நாம் சென்றதும், நண்பர் உள்ளே சென்று உரையாடிய பின் என்னை அழைத்தார். வீட்டினுள் நழைந்ததும் முதலில் என் கண்ணில் தெரிந்தது சுவாமி விளக்கும் அதன் பின்னே எப்போதும் சிரிக்க மட்டுமே தெரிந்த முருகனும், அவரின் குடும்பப்படமும்.

அயல் வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் கதிரைகள் கொண்டுவந்து போடப்பட்டன. குப்பி லாம்பின் வெளிச்சத்தில் எங்களைக் குசினுக்குள் இருந்த இரண்டு பெண்கள் கவனிப்பது தெரிந்தது. அவர்களுடன் மேலாடையற்ற ஒரு சிறுவனும் நின்றிருந்தான். எம்முடன் உட்கார்ந்திருந்த அவர்களின் தாய் பேசத்தொடங்கினார்.

திருமணமாகி சில வருடங்களின் பின் இவரின் வாழ்வு தடுமாறத் தொடங்கியிருக்கிறது. சிலம்பாட்டம் மற்றும் கராட்டி ஆகியவற்றில் விற்பன்னரான கணவர் மதுவிற்கு அடிமையாகி இருக்கிறார்.  மனைவியால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நண்பர்கள் அவரை இயக்கத்தில் இணைத்துள்ளனர். அந்த நாட்களில் இயக்கத்தில் திருமணமானவர்கள் இணைக்கப்படாததால் அவரை திருமணமாகாதவர் என்று கூறியே இணைத்திருக்கிறார்கள். அவரும் இயக்கத்தில் இணைந்து வன்னி சென்றிருக்கிறார்.  மதுப்பழக்கமும் அவரைவிட்டு அகன்றிருந்தது.

களமாடிய அவரைத் தேடிச்சென்ற மனைவி குழந்தைகளை சந்தித்த அவர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் தாய் தந்தையரை இழந்த ஒரு முன்னாள் போராளியின் குழந்தையை தத்தெடுத்திருக்கின்றனர். பின்னர் அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். அதன் பின்பு மீண்டும் மட்டக்களப்பிற்கு திரும்பி சாதாரணவாழ்வினை மேற்கொள்ள முயற்சித்த காலங்களில், கிழக்கின் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அப்போதும் வன்னித் தலைமைக்கு விசுவாசமாய் நடந்து கொண்டதனால் இவரது குடும்பத்தவர்கள் பலத்த சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டு, ஊரைவிட்டு வெளியேறுமளவுக்கு சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இருப்பினும் அவர் சிரமத்தின் மத்தியில் குடும்பத்தினரை இயக்கத்தின் கட்டப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து அங்கு வாழ முயற்சித்த முயற்சியும் இராணுவத் தாக்கதல்களினால் தோல்வியடைய மீ்ண்டும் குடும்பத்தினரை அவரின் பூர்வீக நிலப்பகுதிக்கு அனுப்பி அதன் பின் அவரும் இயக்கத்தைவிட்டு வெளியேறி சாதாரண வாழ்வினை வாழ முற்பட்ட வேளையில் ஒரு நாள் இரவு முகமூடி மனிதர்களால் கடத்தப்பட்டு இன்றுவரை காணாமல்போயிருக்கிறார்.

வருமானம் இன்மையினால் வெளிநாடு புறப்பட்ட அவரை குழந்தைகள் தடுத்தி நிறுத்தியுள்ளனர். கல்லுடைக்கும் தொழில்புரிகிறார். நாள் வருமானம் 500 ரூபாய். நிரந்தர வருமானம் இல்லை. தம்பியின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.

மூத்த மகள் மாவட்ட ரீதியில் மரதன் ஓட்டப்போட்டிகளில் முதலாமிடத்தையும், மாகாண ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தாலும் போசாக்கின்மையால் தற்போது போட்டிகளில் கலந்துகொள்ளும் வலுவை இழந்திருக்கிறர். கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் பாடசாலை வழங்கும் இலவசச்சீருடை ஒன்றுடனேயே இவர்களின் காலம் கடந்துகொண்டிருக்கிறது.

பின்தங்கிய பாடசாலைகளில் கல்விகற்பதனாலும் குழந்தைகளுக்குத் தேவையான டியூசன் வகுப்புக்களுக்கு அனுப்பும் வசதியில்லை என்பதனாலும் அவர்களின் மேற்கல்வியின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

தனது இளைய புத்திரனை தன்னால் வளர்க்க முடியாது என்பதனால் உறவினர்களிடம் தத்துக்கொடுத்திருக்கிறார். ஆனால் தான் தத்தெடுத்த முன்னாள் போராளியின் குழந்தையை இன்றும் தன்னுடனேயே வளர்த்துவருகிறார். அதை அவர் கூறிய போது ”இது உன்னால் முடியாது” என்றது எனது மனச்சாட்சி.

நாம் பேசிக்கொண்டிருந்த போது குப்பி லாம்பில் படித்துக்கொண்டிருந்தாள் அவரது மகள். அந்த வீட்டின் காற்றிலும் வறுமை படிந்து போயிருந்தது. இருப்பினும் எமக்கு வழங்கப்பட்ட தேனீரின் சுவை அபரிமிதமாயிருந்தது.

இடையிடையே ஏதும் பேச முடியாது மௌனமாய் கடந்து போயின பல நிமிடங்கள். கதைகளில் மட்டும் கேட்டறிந்திருந்த வறுமை பற்றிய கதைகளைவிட மிக மோசமாக கதைகளை நேரில் கண்டும், அம் மனிதர்களுடன் பேசிப் பழசி அறிந்துகொள்ளும் போதும் மனது பலமாய் களைத்தும், கனத்தும் போகிறது.

எனக்கு கிடைத்திருக்கும் வாழ்வினை இவர்களுடன் ஒப்பிடுவது தவறு எனினும் அத்தகைய வாழ்வினைப் பெற்றிருக்கும் நான் அதன் வளத்தினை அறியாது இருப்பது மட்டுமல்லாது அதன்  மூலம் இவர்களின் வாழ்க்கையை வளமாக்க நான் என்ன செய்திருக்கிறேன் என்னும் கேள்வி என் முகத்தில் அறைந்து போனது.

அவர்களுடமிருந்து உரையாடிய பின்பு மீண்டும் மோட்டார்சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்தோம். முன்னாலிருந்த நண்பர் கடந்து போகும் பகுதிகளைக் காட்டியும் அங்கு ஒரு காலத்தில் நடந்த வீரக்கதைகளை சிலாகித்தபடிபடியும் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தார்.

மின்விளக்குகள் இல்லாத, மண் மற்றும் கிறவற் பாதைகளால் சென்றுகொண்டிருந்தோம். எங்கும் எதிலும் இருள். கிழக்கின் வசந்தம் என்பது ஒளியற்ற வெறும் வார்த்தை ஜாலமே தவிர வேறோன்றுமில்லை என்பதும் புரிந்தது.

கறுப்பாய் ஊரெங்கும் படிந்துபோயிருந்த இருளினைக் கிழித்தபடியே, இருட்டினை ஓளியாக்கி மோட்டார்சைக்கிளை செலுத்திக்கொண்டிருந்தார் நண்பர்.  பிரமிப்பாய் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ?