உயிரூட்டும் சித்திரங்கள்


எனது அறையின் கதவருகில் ஒரு சித்திரம் தொங்குகிறது. பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகிறேன் அதை.

அச் சித்திரத்தில், வானம் நீலமாய் இருக்கிறது. வெள்ளைநிற முகில்கள் இருப்பது போல வானம் அமைக்கப்பட்டிருக்கிறது. வட்டமான மஞ்சல் நிறச் சூரியன், அதன் கதிர்கள் ஒன்று பெரிதாயும் அடுத்தது சிறிதாயும் சூரியகைச் சுற்றி கதிர்வீசிகொண்டிருக்கின்றன. கதிர்கள் சிவப்பாயும், மஞ்சலாயும் இருக்கிறது.

நிலம், புற் பச்சை நிறமாயிருக்கிறது. அந்தச் சித்திரத்தில் இரண்டு கரையிலும் பச்சை நிறத்தண்டுடன் சிவப்பு நிறத்திற் கூடிய இரண்டு ரோஜாப்பூக்கள் இருக்க, அவற்றிற்கு நடுவில் உலகத்தின் அழகையெல்லாம் தன்னகத்தே கொண்ட ஒரு குழந்தை, இரட்டைப்பின்னல், pink  நிறச் சட்டை, நீல நிற காலுறை, பச்சைச் சப்பாத்துடன், நீல நிறக் காட்சட்டையுடன், ஊதாநிற மேலுடையுடன், பச்சைச் சப்பாத்துடன் நிற்கும் ஒருவரின் கையை கோர்த்தபடி நிற்கிறாள்.

இருவரும் பெரிதாய் சிரிக்கிறார்கள். அவளின் உதடுகளுக்கு சிவப்புச் சாயம் பூசப்பட்டிருக்கிறது. அவர்களைச் சுற்றி பெரிதொரு இதயம் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டிருக்கிறது. இதயத்தினுள் "Adsayaa+Appa" என்று எழுதப்பட்டிருக்கிறது..

இச்சித்திரத்தின் பின்பக்கத்தில் அட்சயாவால் அப்பாவுக்கு கொடுக்கப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது. Leonardo வின் Mona Lisaவை இதனுடன் ஒப்பிடப்படும் போது Mona Lisa பெறுமதியில்லாததாகிறது, எனது வாழ்வு மதிக்கப்படமுடியாதளவு பெறுமதியுடையதாகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் எனது பூக்குட்டி எனக்கு வரைந்து தந்த படம் இது.

தினமும் அதைக் கடந்து போகும் போது நினைவுப் புன்னகை ஒன்று பரிசாய்க் கிடைக்க என் வாழ்வும் அழகாகிறது.

வாழ்வினை சிறு சிறு கணங்களும், செயல்களுமே அழகாக்குகின்றன என்பதற்கு இதுவே ஆதாரம்.

கரு கருவென்று எனக்கு முடியிருக்கிறது இந்தச் சித்திரத்தில்... ஏன்?

சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை. எனவே இந்தக் கேள்வியையும்பதில் கிடைக்காத கேள்விகளுடன் சேர்த்துவிடுகிறேன்.


இன்றைய நாளும் நல்லதே!

தனிமையின் யாத்திரைகள்

சில லவாரங்களுக்கு முன்னான ஒரு பின் மதிய நேரத்தில் வெளியே நடந்து செல்வொம் என்று புறப்பட்டேன். குளிர் குறைவாக இருந்தது.

மெதுவாய் தொடர் மாடியை கடந்து நடைபாதையை அண்மித்த போது முன்பொருநாள் நாள் நான் சைக்கில் திருத்திக் கொடுத்த சோமலியச் சிறுவன் நண்பர்களுடன் அவ்விடத்தில் சைக்கில் ஓடிக்கொண்டிருந்தான். அவன் என்னை அடையாளம் கண்டு புன்னகைப்பான் என்று நினைத்தேன். அதையே மனதும் விரும்பியது. ஆனால் அவனுடைய உலகில் நான் சஞ்சரிக்கவில்லை என்பது அவனின் நடவடிக்கைகளில் புரிந்தது. சென்ற வருடத்தை விட நன்கு வளர்ந்திருந்தான். கண்களில் குறும்பு குடிவந்திருந்தது. அவனையும் அவனது தோழர்களையும் அவர்களது சைக்கில் ஓட்டங்களையும் ரசித்தபடியே நடக்கத் தொடங்கினேன்.

நான் நடந்துகொண்டிருந்த நடைபாதையில் சில ஆண்டுகளுக்கு முன் எனது
பூக்குட்டி சைக்கில் ஓடிய நினைவுகளும், அவளின் குறும்புச் சேட்டைகளும்,
அதீதக் கேள்விகளும் நினைவில் வந்துபோயிற்று.

நடந்து கொண்டிருந்த பாதை சற்றுப்  பள்ளமாய் இருந்தது. தூரத்தே யாரோ
ஜாக்கிங் வருவது தெரிந்தது. அருகில் அவரது நாயும் ஜாக்கிங் வந்து
கொண்டிருந்தது. என் அருகில் வந்த போது அது ஒரு பெண் என அறிந்து கொண்டேன். அவர்கள் என்னைக் கடந்த போது நாய் மட்டும் நின்று திரும்பிப்
பார்த்துவிட்டு ஓடத்தொடங்கியது.
சற்று நேரத்தில் ஒரு இளம் தம்பதியர் இடையிடையே ஒருவரின் வாயை மற்றவர் தின்றபடியே கடந்து போயினர். எனக்கு ”கடுப்பேத்துறார் மை லாட்” என்னும் முகப்புத்தக நண்பர் நினைவில் வந்தார்.

குழந்தைகளின் விளையாட்டுத் திடல் ஒன்று வந்தது. ஒரு பக்தாத் பேரழகி தனது முழு பேரழகையும் கறுப்புத் துணியினால் மூடி கண்ணை மட்டும் நெட் போன்றதுணியீனூடாகத் தெரியும் படி நின்றிருந்தாள். அருகில்  2, 3, 4, 5
வயதளவில் நான்கு குழந்தைகள் நின்றிருந்தன. அவருடையதாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அத்தனை குழந்தைகளும் அழகாயிருந்தன.

அதில் ஒரு குழந்தை அடித்த பந்து என்னை நோக்கி வர அதை நான் எடுத்து அதன் கையில் கொடுத்தபடியே அவளின் தலையைக் கோதிவிட்டேன். புரியாத மொழியில் தாய் ஏதோ சொன:ன போது அக் குழந்தை நோர்வேஜிய மொழியில் நன்றி சொல்லியபடியே ஓடிப்போய் தாயினருகே நின்றகொண்டது. தாய் என்ன சொல்லியிருப்பார் என்று யோசனை ஓடியபோது சிரிப்பு வந்தது.

குழந்தைகளை ரசித்தபடியே நடந்து கொணடிருந்தேன். சைக்கில்கள் இரண்டு கடந்து போயின. வயோதிபத் தம்பதிகள் வணக்கம் என்று சொல்லிப் போயினர். திடீர் என்று எனது மனது மட்டும் தனிமையை உணர்வதாய் தோன்றிற்று. அது பற்றி சிந்தித்த போது கரகோஷமும், பலத்த குரல்களும் கேட்க ஆர்வத்துடன் குரல் வந்த திசை நோக்கி நடந்தேன். அருகில் இருந்த வியையாட்டுத் திடலில் குழந்தைகளுக்கான கால்ப்பந்துப் போட்டி நடந்து கொண்டிருந்தது.

என்னை மறந்து அந்தச் சிறுவர்களின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்.
பெற்றோரின் அட்டகாசம் தாங்க முடியாதிருந்தது. முக்கியமாய் தந்தைமார் தமது குழந்தைகளை குழந்தைகளாக உணராமல் பெரிய விளையாட்டு வீரர்களாகக் கருதிக்கொண்டார்கள். ஆ .. ஊ  என்று குதித்தார்கள். தலையில்
அடித்துக்கொண்டார்கள். சிறு பிழை விட்டாலும் துள்ளிக் குதித்தார்கள்.
தாய்மார் மட்டும் நன்றாக விளையாடுகிறாய், மீண்டும் முயற்சி செய் என்று
ஊககுவித்தார்கள்.
காலில் அடிபட்ட குழந்தையொன்று தாயினை நோக்கி ஓடிவந்து தாயினை அணைத்தபடியே ஆறுதல் தேடியது. நடுவரோ விசில் மூலமாக அக் குழந்தை கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அக் குழந்தையோ அல்லது அவனின் தாயோ நடுவரின் விசிலைக் கவனித்ததாயில்லை. அவர்கள் ஓருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடியே ஆறுதலடைந்து கொண்டிருந்தார்கள்.  நடுவர் பொறுமை இழந்து ஆட்டத்தை ஆரம்பிக்கக் கட்டளையிட்டார்.

 எனது மகள் காவியாவின் கால்பந்தாட்ட அணிக்கு நான் பயிட்சியாளனாய் இருந்த காலத்தில் நாம் கிழமையில் இரு நாட்கள்  பயிற்சி செய்வோம். எனது மகள் நாம் பயிட்சிக்கு வரும்போதே தனது அணிக்கு யார் யாரை தெரிவு செய்யவேண்டும் என்று கட்டயைிடுவாள். அவர்கள் அனைவரும்  எமது அணியின்  சிறந்த வியையாட்டு வீரர்களாக இருப்பார்கள். ஒரு அணிக்கு மட்டும் சிறந்த வியைாட்டு  வீரர்களை வழங்குவது என்பது நியாயமல்ல என்பதை அவள் ஏற்றுக்கொள்வதில்லை. இதனாலேயே
நாம் பயிற்சி முடிந்த வீடு திரும்பும் போது முகத்தை உம் என்று
வைத்துக்கொள்வாள், கோபத்தில். இப்படியான பல காலப்பந்தாட்ட நினைவுகளுடன் அந்த மைதானத்தைக் கடந்தபடியே நடக்கலானேன்.

தனிமையில் நடக்கும் போது உள் மனதுடன் மிக நெருக்கமாக உறவாட முடிகிறது. உண்மைகளை அலசிக் கொள்ளவும், நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்வுமுறைகள் சரியா என்று இடையிடையே ஏற்படும் மனக்குழப்பங்களையிட்டு மனதுடன் உரையாடி, சமரசமாகிக்கொள்ளவும், என்னை நானே ஆறுதல்படுத்திக்கொள்ளவும், சில வேளைகளில் என்னில் ஆத்திரப்பட்டுக்கொண்டு என்னை நானே திட்டிக்கொள்ளவும்
இந்த நடைப்பயணங்கள் உகந்ததாக இருக்கின்றன. ஒரு அறையினுள் அடைபட்டு இருப்பதை விட இப்படி காலாற நடக்கும் போது மனதும் உடலும் இலகுவாகிறது.

எனக்கு நன்கு அறிமுகமான ஒரு நோர்வேஐியர் ஒருவர் கடந்த வருடம் ஸ்பெயின் நாட்டில், தொடர்ச்சியாக  3 வாரங்கள் கிறீஸ்தவ தேவாலயங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். ஏறத்தாள 500 கிலோமீற்றர்கள் மலைகளிலும், காடுகளிலும், நகரங்களிலும் ஒரு குழுவினருடன் நடந்து சென்றதாகக் கூறினார். அவரின் அனுபவங்களைக் கேட்ட பின் எனக்கும் யாத்திரை போனால் என்ன என்ற ஆசை வந்திருக்கிறது.

1970 களின் நடுப்பகுதியில், நாம் பிபிலையில் வசித்திருந்த காலங்களில் எனது தந்தையாரும் அவரது நண்பர் போடியாரும்  கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றிருந்தார்கள்.  அவர்கள் சென்றவழியில் யானைகள் வந்த போது பந்தங்கள் எரித்து யானைகளைக் கலைத்ததாகவும், மரங்களின் கீழ் படுத்துறங்கி,  ஆறு குளங்களில் குளித்து கதிர்காமத்தில் காவடியாடி வந்த கதைகளை அப்பாவின் நண்பர் சொன்ன போதே என் கண்கள் கனவு காணத் தொடங்கியிருந்தன.

இவை பற்றி சிந்தித்துக் கொண்டே எறத்தாள ஒரு மணிநேரம் நடந்து, வீடுவந்து சேர்ந்தபோது யாத்திரை செல்லும் ஆசை பல மடங்கு அதிகரிததிருந்தது.

கனவுகள்தானே நனவுகளாகின்றன.  எதுவும் எப்பவும் நடக்கலாம்..  நானும் யாத்திரை போகலாம்..

இன்றைய நாளும் நல்லதே!

அப்பாவின் சைக்கில்


செயின் அறுந்து,
டயர் தேய்ந்து,
நெளிந்த மட்காட்டுடன்
வால்டியூப் உருகி
காற்றுப் போயிருந்த சைக்கிலைக் காட்டி
டேய் பெரிய தம்பி
இது இனி
உனக்குத் தான்  என்றார் அப்பா
(அப்படியே கட்டிப்பிடிக்க ஆசையாக இருந்தாலும் பயம் தடுத்தது)

அம்மாவிடம் ஓடி
கெஞ்சிக் கூத்தாடி
காசு வாங்கி
ஏறாவூர் பிள்ளையார் கோயிலடி
பம்மியடியானின் சைக்கில் கடையில்
பழைய செயின் போட்டு
புது வால் டியூப் போட்டு
பெடலுக்கு சன்னம் வைத்து
பச்சை, மஞ்சல், நீல நிறத்தில்
றிம்முக்கு பூ போட்டு
மெயின் றோட், கோயிலடி சுற்றி
அவள் வீட்டருகிலும் ஒரு சுற்றுச் சுற்றி
பால்ய சினேகங்களிடம்
காட்டி விட்டு
வந்த போது
இருட்டத் தொடங்கியிருந்தது
ஏன்டா இவ்வளவு நேரம் என்றார்
அப்பா, வ‌ழமை போல

அடுத்து வந்த புதுவருட கைமுழுத்தக் காசில்
பம்மியடியானிடம் கொடுத்து
கழுவிப் பூட்டி
16 மைல் சைக்கில் ஓடி
பாடசாலை போய் வந்த போது
எனக்கும் சைக்கிலுக்கும்
நெருக்கம் கூடியிருந்தது

சந்திரா ஆன்டி, தம்பிக்கு
புதிய பிளையிங் பிஜின்
சைக்கில் வாங்கிக்‌ கொடுத்த போது
இருந்த எரிச்சல்
அதை கள்ளமாய்
ஓட்டிப் பார்த்து
எனது சைக்கில்
better என்றறிந்த போது
கரைந்து போயிருந்தது

பின்பொரு நாள்
அப்பாவை
டபிள் ஏத்திக் கொண்டு போகும் போது
தம்பி இது 1965 இல்
பொன்னையாவிடமிருந்து
150 ரூபாவுக்கு வாங்கினது
ஒரு ஒட்டும் (welding)
ஓட்டேல்ல
கவனமா பாவி
என்ற போது
நானும், சைக்கிலும் இன்னும் நெருங்கியிருந்தொம்

1980 இல்
அப்பா
கிட்டத்தட்ட 500 ரூபாய்க்கு
புது ரிம்
மட்காட்
செயின் பெட்டி
ஜப்பான் செயின்
ரிம்முக்கு பூ
ஹான்டிலில் புத்தகம் வைக்க சின்ன கரியர்
எல்லாம் வாங்கித் தந்தார்

பம்மியடியான் தான்
பூட்டித் தந்தார்
காற்றில் சருகாய் மாறியிருந்தேன்
அடுத்து வந்த காலங்களில்

மஞ்சல் துணி கொண்டு
தினம் தினம் துடைத்தேன்
கண்ணாடி பூட்டி அழகு பார்த்தேன்
மட்காட்ஐ களட்டி
ரேசிங் சைக்கிலாக்கினேன்
பெயின்ட் அடிப்பித்தேன்
இந்தியன் பிரேக் கட்டை மாத்தி
ஜப்பான் பிரேக் கட்டை போட்டேன்

ஒரு நாள்
அப்பா தன்னை கோயிலடியில்
இறக்கி விடு என்ற போது
100 கிலோ தாண்டும் அப்பா
பஞ்சாய் இருந்தார்
சைக்கில் பாரில்

அடுத்த வருடம்
அப்பா
மாரடைப்பால் போய்ச் சேர்ந்த போது
ஐரிட்டயும்,
கடைக்கும்
அதுக்கும்
இதுக்கும்
ஓடியதும்
அந்தச் சைக்கிலில் தான்

தயாவுக்கு
சைக்கில் ரேஸ் ஓட
சைக்கில் கொடுத்த போது
முதல் 3 மைலுக்கும் முதலாவதாய் வந்து
முடியும் போது கடைசியாய் வந்தான்.
ஏன்டா என்ற போது
சைக்கில் சரியில்லை
என்றான் (ஆடத் தெரியாதவனுக்கு ......போல)

ஆனால் அடுத்த முறை தம்பி ஓடி
மூன்றாவதாய் வந்தான்

16 வயதில்
பால் இனக்கவர்ச்சி வந்த போது
ரோட்டு, கோயில், பஸ் ஸ்டான்ட்
என்று ஓடி
அவளைப் பார்த்துருகி
நின்றதும்
அதே சைக்கிலில் தான்

டியூசனுக்கு போனதும்
சந்தைக்கு போனதும்
படத்துக்கு போனதும்
தங்கையை பள்ளிக்கூடம் கூட்டிக் கொண்டு போனதும்
தம்பிக்கு சைக்கில் பழக்கியதும்
83ம் ஆண்டு சிங்கள நண்பர்களுடன் ஏறாவூரிலிருந்து மூதூர் வரை போனதும்
பாரில் ஒருவன், ஹான்டிலில் ஒருவன், பின்னால் ஒருவன் இவை தவிர நான்
இப்படி புன்னைக்குடா போய் குளித்ததும்
அந்தச் சைக்கிலில் தான்

சைக்கிலில் ஒட்டியிருந்த
புலி ஸ்டிக்கரை
அம்மா பயத்தில் களட்டி எறிந்த போது
அம்மாவுக்கும் எனக்கும்
சண்டை வந்தது

1985 இல்
சைக்கிலைப் பூட்டி வை
களவெடுக்கிறாங்களாம் என்று
அம்மா சொன்ன போது
ஒம் என்று சொல்லி
பூட்ட மறந்து
காலையில்
ஓரெல்லாம் தேடி
ஓய்ந்து
பொலீஸ் ஸ்டேசன் போய்
என்ட்றி போட்டு
நடந்து
வீட்ட வந்த போது
கனத்துக் கிடந்தது
மனமும் காலும்

சோர்ந்து போய்
கதிரையில் விழுந்திருந்த போது
புன்னகைத்துக் கொண்டிருந்தார்
சுவரிருந்த அப்பா