”மலை” கேட்ட கேள்வி

 நான் நோர்வேயில் வாழ்ந்து கடந்திருக்கும் 23 வருடங்களில் 18 வருடங்களை Hareid என்னும் ஒரு கிராமத்திலேயே வாழ்ந்திருந்தேன். மிகச் சிறிய கிராமம். அதிகமாய் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். எனது குழந்தைகளும் இங்கு தான் பிறந்து வளர்ந்தார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்திருக்கிறோம். இருப்பினும் குழந்தைகளுக்கு இதுவே தாய்மண் என்னுமளவுக்கு ஒன்றிப்போயிருக்கிறார்கள் இந்த கிராமத்துடன். நாங்களும் தான். தற்போது விடுமுறைக்கு வந்திருக்கிறோம் இங்கு.

நேற்று மாலையே இன்று  மலையில் சாரணர் இயக்கமும், கிறீஸ்தவ இளைஞர் சங்கமும், உள்ளூர் விளையாட்டுச்சங்கமும் சேர்ந்து மலை உச்சியொன்றில் திருப்பலிப்பூசை வைப்பதாக அறிந்து கொண்டேன்.

 நான் பிறப்பால் இந்துவாயிருந்தாலும் பால்யத்து நட்புகள் எல்லாம் இஸ்லாம், கிறீஸ்தவர்கள், பௌத்தம் என்றிருந்ததாலும், எனது கல்லூரியும் எம்மதமும் சம்மதம் என்று போதித்ததாலும் நான் எங்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கிறோ அதையே அதையே கோயிலாகப் பார்க்கிறேன்.

காலையில் நண்பர்களின் குடும்பத்துடன் வாகனத்தி்ல் மலையடிவாரத்தை சென்றடைந்து நடக்கத் தொடங்கிய போது முதலில் கண்ணில் பட்டான் ஒரு பையன். எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அருகிலிருந்த பெற்றோரை வைத்து இன்னார் என அடையாளம் கண்டு கொண்டேன். எனது மகளின் வகுப்பில் படித்த பையன் அவன். இரண்டாண்டுகளில் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான். இப்படி பலரையும் காணவும் சந்திக்கவும் கிடைத்தது.

 மலை உச்சையை சென்றடையும் வரையில் சிறுவர்களும், இளைஞர்களும் பைபிள் வசனங்களை எழுதி மரங்களில் கட்டித் தொங்கவிட்டிருந்தனர். மலை ஏறும் எல்லோருக்கும் ஒரு வாக்கியம் கெடுக்கப்பட்டது. எனக்கு கிடைத்த வாக்கியம் இப்படியிருந்தது.
”தேவனே! நான் அறியாமல் செய்யும் தவறுகளையும் மன்னிப்பீராக”
என்னையறியாமலே புன்னகைத்துக்கொண்டேன். தேவனும் என்னைக் கவினிக்கிறார் போலிருக்கிறது.

மலையுச்சியை சிறியவர்கள், பெரியவர்கள், வயோதிபவர்கள் என எல்லோரும் ஏறி ‌புல் வெளியொன்றில் குந்தியிருக்க பாதிரியார் இரண்டு தடிகளினால் செய்யப்பட்ட ஒரு சிலுவையின் கீழ் நின்று பிரசங்கம் நிகழ்த்தினார். அதன் உள்ளடக்கம் உன்னைப்போல் மற்றவனையும் நேசி என்றிருந்தது.

பல சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் ஓடியாடி தேவையான வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.


திருப்பலி முடிந்து இறங்கிவரும் போது வெளிநாட்டு இந்துக் கோயில்களில் எங்காவது இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த எமது சமுதாயத்தினர் ஆர்வமாக வேலைசெய்கிறார்களா என்னும் கேள்வி மனதிலடித்தது.

நாம் எங்கோ பிழைவிடுகிறோம் என்பது மட்டும் நன்கு புரிந்தது.


பி.கு: இந்த பதிவில் உள்ள படங்கள் மலையில் நடந்த திருப்பலியின் போதும், அதன் பின்பும் எடுக்ப்பட்டவை.

.

தொலைந்துபோகாமல் போகும் பாதை

இன்று என்னை அதிகமாகவே பாதித்த ஒரு சம்பவம்  பற்றிய கதை தான் இது.

சிறுவயது முதல் இன்று வரை நான் வழி தவறி தடுமாறும் போதெல்லாம் ஏதோ ஒன்று என்னை கைபிடித்து சரியான வழியைக் காட்டாவிட்டாலும் இங்கு தான் உன் பாதை இருக்கிறது என்று சமிக்ஞை தந்து கொண்டேயிருக்கிறது. இன்றும் அந்த சமிக்ஞை கிடைத்தது. இன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

எனது 9, 10 வயதுகளில் பதுளையில் குடும்ப நண்பர்ரொருவரின் வீட்டில் தங்கியிருந்து பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் படித்தேன். தினமும் கிட்டத்தட்ட ஒரு மணிநேர நடைப்பயணம் பாடசாலைக்கு. காலப்போக்கில் ஒரு வண்டில் ஓட்டும் ஒருவர் நட்பாகிப்போனார்.. (அவருக்கு 30க்கு மேற்பட்ட வயது). வண்டில் பயணம் எமக்கு அவருக்கு பேச்சுத் துணை. அவர் மூலமாக பீடி பிடிக்கும் பழக்கம் வந்தது (நாம பிஞ்சில பழுத்தவுணுங்கோ). ஆனால் எப்படியோ ஒரிரு மாதங்களில் பீடிப்பழக்கமும் போய், வண்டில் பயணமும் துலைந்து போயிற்று. என்ன நடந்தது என்று ஞாபகமில்லை. இப்படித்தான் வாழ்வு எனக்கு முதன் முதலில் துலைந்திருந்த போது இது தான் உன் பாதை என்று சமிக்ஞை செய்தது.

விடலைப்பருவ காலங்களிலும் பல தடவைகள் வழி தடுமாறிய போது வாழ்வு ஆசிரியர்கள் என்னும் பெயரில் வந்து பாதை காட்டிற்று. முக்கியமாய் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆசிரியர்களையும், கணிதடியுசன் தந்த ரட்ணராஜா மாஸ்டரையும், பின்பு மேல் வகுப்பில் டியுசன் தந்த சுபா ரீச்சரையும் ”வாழ்க்கை” துணைக்கழைத்து வந்து பல தடவைகள் எனக்கு வழி காட்டியிருக்கிறது.

நட்புகளுடன் இந்தியாவில் மொக்கைபோட்டுத்திரிந்த காலத்திலும் பல தடவைகள் எனது ”பாதைகள்”  செப்பனிடப்பட்டிருக்கின்றன. அதற்கான முழுப் பெருமையும் அந்தக்காலத்து இயக்கங்கள், ஒரு இயக்கத்தின் தத்துவாசிரியர், போதைப்பொருள் கடத்தியவரொருவர், வயிற்றில் சுகமாகாத புண்ணுடன் அலைந்து கொண்டிருந்த ஒரு அண்ணண் ஒருவர் என பலரைச் சாரும்.

புலத்திலும் கூட பெற்ற தாய் தந்தை போல் வழி காட்டிய ஒரு நோர்வேஐிய குடும்பத்தவர்களும், நட்புக்கு இலக்கணமாய் இருந்த நோர்வேஜியர்களும், சில தோழமைகளும் நான் விழுந்த போதெல்லாம் கைதந்து எழுப்பிவிட்டு வழிகாட்டியிருக்கிறார்கள்.

ஏன், எனது குழந்தைகள் கூட அவ்வப்போது நான் விழுந்து, துலைந்து போகும் போதெல்லாம் அசரீரியாய்  எழும்பு, உன்னால் முடியும், இனிமேல் இதுதான் உன்வழி என வழிகாட்டியிருக்கிறார்கள்.

இப்படி வாழ்வு என்னை கவனமாக கவனித்துக்கொண்டிருந்திருக்கிறது, இன்றுவரை.

மட்டற்ற அவதியான இந்த உலகில் அமைதியாய், நிதானமாய் எனக்கான பாதையை தேடிக்கொள்ள தினமும் முயற்சிக்கிறேன்.

வினை விதைத்தால் வினையும், தினை விதைத்தால் தினையும் கிடைக்கும் என்பதை பரிபூர்ணமாய் உணர்ந்திருக்கிறேன். எனவே வினையைக் கண்டால் என்னை நெருங்க முயற்சிக்காதே என்று சொல்லி விலகி திடமாய் நடக்கவும், தினையைக் கண்டால் கைகோர்க்கவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால் வாழ்வின் சூட்சுமங்கள் புரிந்திருக்கின்றன, புரிந்துகொண்டுமிருக்கின்றன.

சத்தியமாய் வாழ்வு மிக மிக அழகாயிருக்கிறது. அமைதி தருகிறது, பல நேரங்களில்.

இனி... இன்று நடந்த கதை.

காலை ஒரு வேலை நிமித்தமாக ஓரு இடம் போயிருந்தேன். வாகனத்தை போக வேண்டிய இடத்திற்கருகில் நிறுத்திய போது உடம்பெல்லாம் அசௌகரீயம் உணர்ந்தேன்.
தலை சுற்றியது
இதய படபடப்பு வந்து போனது
நாவறண்டது
கண் இருண்டது
வாகனத்தினுள் தண்ணீர் தேடினேன், கிடைக்கவில்லை. சற்று நேரம் அமைதியாய்  உட்கார்ந்திருந்து சற்று சக்தி சேர்த்து வாகனத்தால் இறங்கி பணப்பையை (wallet)ஐ தேடினேன் ஏதும் வாங்கி உண்பதற்காய்.

எனக்கு நீரழிவு நோயிருப்பதையும், இன்று காலையில் ஏதுவும் சாப்பிடாததையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்)

அப்போது தான் நான் அவசரத்தில் பணப்பையை (wallet) வீட்டில் மறந்துவிட்டிருந்தது தெரிய வந்தது.

வாகனத்தினுள்ளும் சில்லறை ஏதுமில்லை. பொக்கட்டை துளாவினேன், அங்கும் ஏதுமில்லை.

ஏதும் உண்ணாமல் எழுந்து நிற்க முடியாத நிலை நெருங்கிக் கொண்டிருந்தது. மெதுவாய் வாகனத்தினுள் உட்கார்ந்திருப்போம் என நினைத்து வாகனத்தினுள் ஏற முயற்சித்த போது தோளில் நட்பாய் ஒரு கை விழுந்ததை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.

எங்கோ பார்த்த முகம். யார் என்று ஞாபகம் வரவில்லை.
என்னைத் தெரிகிறதா என்றான்
ஆம், இல்லை என்று இழுத்தேன்

எனக்கு நீ கணணி திருத்தித் தந்திருக்கிறாய். அன்று என்னிடம் பணமிருக்கவில்லை. நீ பிறகு தா என்று சொல்லிப் போனாய் என்று சொல்லி தான் வாழும் புறநகர்ப்பகுதியின் பெயரையும் சொன்ன போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. பாக்கிஸ்தான் நாட்டு அன்பர் அவர்.  பல மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் அது. முற்றிலும் மறந்துவிட்டிருந்தது.

கால்சட்டை பொக்கட்டினுள் கைவிட்டு காசு எடுத்து, எனது கைபிடித்து இந்தா உனது பணம், உனது தொலைபேசி இலக்கம் துலைந்து விட்டதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சிரமத்துக்கு மன்னித்துக்கொள் என்று சொல்லி தன் நெஞ்சில் கைவைத்து,  தலைசாய்த்து விடைபெற்றார்.

நான் வாயடைத்துப் போயிருந்தேன்.

மனம் நிரம்பியதால் களைப்பும், சோர்வும் கலைந்துபோயிருந்தது. மனம் முழுவதும் பரவசம் உணர்ந்தேன்.

சற்று ஆறி, மெதுவாய் நடந்து போய் வயிற்றை ‌நிரப்பிக் கொண்டேன்.

இன்றைய நாள் முழுவதும் மனம் இச் சம்பவத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

அதேவேளை நான் நடந்து கொள்ளும் விதம் பற்றி சிலர் கூறும் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்பதை வாழ்க்கை எனக்கு அறிவித்த விதத்தையும், நான் போகும் பாதை சரியானது என்பது பற்றி வாழ்க்கை எனக்கு தந்த சமிக்ஞையையும் யோசித்துப்பார்த்தால் தொலைந்துபோகாத ஒரு பாதையில் நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

இன்றைய நாளும் நல்லதே..


.

சீக்கிரம் மறையும் துக்கம்

நேற்றிரவு ஜெயமோகனின் காடு நாவல் வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ரெசாலம் என்பவர் ஒரு தேவாங்கு வளர்க்கிறார். ஓரு நாள் தேவாங்கை ஒரு சிறுத்தை பிடித்துக் கொண்டுபோய்விடுகிறது. ரெசாலம் உடைந்துபோய்விடுகிறர். இந்த இடத்தில் குட்டப்பன் என்னும் பாத்திரம் இப்படிச் சொல்கிறார்.  ”துக்கங்களில் சீக்கிரம் மறையும் துக்கம் மரணம்”
இவ் வசனம் என்னை நேற்றிவு பலமாய் யோசிக்கவைத்தது.

யோசித்துப் பார்த்தால் குட்டப்பன் சொன்னது உண்மை என்றே படுகிறது. மரணத்தின் வீரியம் பலமானது தான். ஆனால் அது மிக விரைவில் எம்மைக் கடந்து போய்விடுகிறது.

எனது தகப்பனார் மரணித்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரிரு வாரத்தில் கவலை மறந்த விடலையாய் சுற்றத் தொடங்கியிருந்தேன் 1981 இல். எம்மை வளர்த்து ஆளாக்கிய எம்மியின் (பார்க்க தாயினும் மேலான தாய்) மரணமும் இப்படியே. இடையில் இரு நட்பூக்களையும் இழந்திருக்கிறேன். அவர்களும் ஓரிரு வா‌ரங்களில் கடந்து போய்விட்டார்கள். முள்ளிவாய்க்காலில் கரைந்து போன ஆயிரமாயிரமான உறவுகளைக் கூட கணப்பொழுதில் மறந்த மனிதக் கூட்டமல்லவா நாங்கள்.

துயரத்தில் பலவகைகள் உண்டல்லவா? நோய்களின் துயர், பிரிவுத் துயர், தோல்வியின் துயர்,  துரோகத்தின் துயர், மரணத்துயர் என்று ‌நீண்டுகொண்டேபோகும் இத்துயர்களின் பட்டியல்.

குட்டப்பன் சொன்னது போல் மரணம் மட்டுமே இத் துயரங்களில் விரைவாக எம்மை கடந்து போகிறது.

நோயின் துயர் நோயிருக்கும் வரை தொடர்கிறது...
பிரிவின் துயரும் நீண்டதே. காலம் பிரிவைத்துயரை செப்பனிடும் வரை அது தொடர்கிறது.
தோல்வியின் துயரும் இப்படியே. சில தோல்விகள் கல்லில் எழுத்து போல் வாழ்நாள்வரை தொடர்கிறது.
ஆனால் மரணத்தின் துயரை மட்டும் நாம் ஒரு சிறு ஓடையைக் கடப்பது போல் பாய்ந்து கடந்து விடுகிறோம்.

எப்படி இது சாத்தியமாகிறது?

மரணம் என்பது சர்வநிட்சயமானதொன்று, மாண்டவர் திரும்புவதில்லை என்னும் யதார்த்தமான உண்மையை நாம் மனதார ஏற்றுக்கொள்வதாலா நாம் இந்த மரணத்தை இலகுவாக கடந்து கொள்கிறோம்? இருக்கலாம்.

நான் போய்ச்சேர்ந்த பின்பும் இது தான் நடக்கப்போகிறது. ஆக.. இறந்த பின்பாவது நான் மற்றவர்களை கஸ்டப்படுத்தமாட்டேன் என்பது மட்டும் நன்கு புரிகிறது.

யாதார்த்தம் அறிவித்த குட்டப்பனுக்கு எனது நன்றிகள்.


.

தியானம் தந்த குழந்தை

பல ஆண்டுகளின் பின் இன்று என் கையில் தூங்கியது ஒரு குழந்தை. குழந்தை தூங்குவது ஒரு சாதாரண விடயம் தான், ஆனால் அக் குழந்தை தந்த பரவசமானதோர் நிலை எத்தனையோ ஆண்டுகளின் பின் இன்று மீண்டும் கிடைத்தது. குழந்தை தூங்கியின் நான் ஏதோ ஒரு ஏகாந்த உலகத்தில் இருந்தேன்.

எனது இளையமகளுக்கு 10 வயதாகிறது.. ஆக அவள் குழந்தையாக இருந்து ஏறத்தாள ஏழு, எட்டு வருடங்களாகின்றன. மணிக்கணக்காய் தூங்கியிருக்கிறாள் என்கையில். நானும் தூங்கிப்போயிருக்கிறேன் பல நாட்கள் அவளருகில். அவளுக்கு என்று ஒரு பாட்டு இயற்றியிருந்தேன்.
அப்பாட செல்லம்
அம்மாட செல்லம்
அக்காட செல்லம்
என்று ஆரம்பித்து நெருங்கிய குடும்பத்தவர்கள் அளனவரும் வந்து போவார்கள் எனது பாட்டினுள். சில நேரங்களில் நான் யாரையும் மறந்து போனால் அவர்களையும் சொல்லச் சொல்வாள் மகள்.இப்பவும் சில வேளைகளில் இப்பாட்டை பாடச்சொல்வாள்.

எனது பாட்டை ரசித்த பெருந்தன்மையான இரு உயிர்கள் எனது குழந்தைகள் மட்டுமே. எனது பாட்டின் இனிமையில் தூங்கினார்களா அல்லது சொல்லத் தெரியாமல் அபசுரத்தை தாங்கினார்களா என்பது இன்றுவரை புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.

இன்றும் இப்படித்தான் .. நண்பரின் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் பண்ண மெதுவாய்த் தூக்கி பல்கனிக்கு கொண்டுவந்து புதினம் காட்டியபடியிருக்க அழுகை மெதுவாய் நின்று போனது. விக்கி விக்கி அழுததனால் சற்று தேம்பிக்கொண்டிருந்தாள் குழந்தை. மெதுவாய் ஒரு கொட்டாவியும் வந்தது குழந்தையிடமிருந்து. குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து ம்ம்ம் ம்ம்ம் என்று எனது ”சுப்பர் சிங்கர்” குரலால் ஹம் பண்ணிக்கொண்டிருந்தேன். குழந்தையும் கண்ணைச் சொருக அரம்பிக்க என்னையறியாமலே நான் எனது இளையமகளுக்கு இயற்றிய பாட்டு வாயில் வந்தது. என் சொந்தங்களில் அரைவாசியைக் கடந்த போது தான் உணர்ந்தேன் இப்பாட்டை நான் படித்துக் கொண்டிருப்பதை. நான் மீண்டும் ம்ம்ம் ம்ம்ம் என்று பாடி நிறுத்திய போது குழந்தை தூங்கியிருந்தாள்.

குழந்தை தூங்குவதை ஆறுதலாக அவதானிக்க ஆரம்பித்தேன். அயர்ந்து தூங்கிய குழந்தையின் முகத்தில் அசாத்திய அழகும், ஆழ்ந்த அமைதியுமிருந்தது. இடைக்கிடை கண்களைச் சுருக்கியும், முகத்தின் அசைவுகளினாலும், அழகிய புன்னகையுடனும் பாருடனோ ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் தூக்கத்தில். இதைத்தான் கடவுளுடன் குழந்தை பேசுகிறது என்பதா? அப்படியாய்த்தானிருக்கும்.

பெரியவர்கள் தூங்குவதற்கும், குழந்தை தூங்குவதற்கும் இடையில் தான் எத்தனை வித்தியாசம். சிலர் தூங்குவதை பார்க்கவே முடியாது. அவ்வுளவு பயங்கரமானதாய் இருக்கும். அது அவர்கள் தூக்கத்துடன்  சண்டைபிடிப்பதை போல பயங்கர மூச்சும், குறட்டையும், விகாரமான முகமாயும்,அகலத் திறந்த வாயுனும், கைகால்களை அகட்டிப்போட்டபடி அட்டகாசம் பண்ணிக்கொண்டிருப்பார்கள். இவர்களின் அருகில் நிற்க‌வே பயமாக இருக்கும்.

ஆனால் இக் குழந்தையின் தூக்கம் எந்தளவு அமைதியைக் கொண்டிருந்ததோ அதைவிட அதிக அமைதியைத் தந்தது எனக்கு. பார்த்துக் கொண்டேயிருந்தேன், குழந்தையை.என் மனதில் பரவசத்தின் அளவு  கூடக்கொண்டே போயிற்று. தியானம் போல். மனம் பஞ்சாயிருந்தது.

இதற்காகத்தானா குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள்? அப்படியானால் அது சத்தியமான உண்மை.


இன்றைய நாளும் நல்லதே


.

ஜன்னலில் ஒரு பூ

 நான் ஒரு தொடர்மாடியில் குடியிருக்கிறேன். எங்கு செல்லவேண்டுமென்றாலும் அருகிலிருக்கும் தொடர்மாடியை கடந்தே செல்லவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் பல புதிய தமிழ்முகங்கள் அருகிலிருந்த தொடர்மாடியில் அடிக்கடி நடமாடியதை அதைக் கடந்து போனபோதெல்லாம் அவதானித்தேன். புதிதாய் குடிவந்தவர்களாக இருக்கலாம் அவர்கள்.

இதற்குப் பின்னான நாள் ஒன்றில் அந்த தொடர்மாடியை கடந்துகொண்டிருக்கிறேன்..

ஹாய்! என்றதொரு குரல் கேட்டு நிமிர்ந்தேன். இரண்டாம் மாடியில் கையில் ஒரு பொம்மையை  அணைத்தபடி ஜன்னலில் நின்றிருந்தாள் ஒரு சிறுமி. 4-5 வயதிருக்கும். சுறுண்ட தலைமுடி, அழகான கண்கள், இவையுடன் புன்னகை அணிந்து, மிக மிக அழகாய், எனது இளையமகளின் குழந்தைப்பருவத்தை நினைவூட்டும்படியாக நின்றிருந்தாள்.

எனக்கு மனதிலிருந்த கனத்த சிந்தனைகள் எல்லாம் மறைந்து உலகம் கணப்பொழுதில் அழகாகியது.

மேலே பார்த்து ஹாய் என்றேன்.

”நீ தமிழா” என்றாள் நோர்வேஜிய மொழியில்
”இல்லை”
”அப்ப”
”நீ என்ன நினைக்கிறாய்”
”சிறிலங்கா”
”இல்லை” என்றேன் சம்பாசனையை தொடர்வதற்காய்

சற்றே யோசித்தவள்
தெரியாது என்றாள்
பின்பு
ஆபிரிக்கா என்றாள்
ஆம் என்பது போல் தலையாட்டினேன்
சிரித்தாள் அழகாய்

பெயர் கேட்டாள்
வேண்டுமென்று ரவி என்றேன்
பலமாய் சிந்தித்தவளின் கண்கள் ஏதோ புரிந்தது போல் ஒளிகொண்டன
”நீ பொய் சொல்கிறாய்”
”நீ தமிழ்” என்றாள்

ஆம், நான் தமிழ் என்றும் எனது பெயர் சஞ்சயன் என்றேன்
உங்களின் பெயர் என்ன என்ற போது
ஏதோ ‌”லா”வில் தொடங்கிய பெயர் சொன்னாள்
லாவண்யா போலிருந்தது எனக்கு. அவளைப்போலவே அவளின் பெயரும் அழகாயிருந்தது.

தான் இந்த வீட்டில் வசிப்பதாயும்
தான் வெளியில் விளையாடும் போது வந்தால் தன்னுடன் விளையாடலாம் என்றும்,
தன்னிடம் புதிய சைக்கில் இருப்பதாயும்,
அன்று மாலை கோயிலுக்கு போவதாயும்
ஏதோ தனது உற்ற நண்பனுக்கு விபரிப்பது போல் விபரித்தாள்
சரி என்றேன்

அவளின் அழகான தமிழ் தெளிவாயும், வெளிநாட்டு வாடையற்றதாயும் இருந்தது. அவளின் வார்த்தைகள் மழைக்குப்பின்னான வானம் போல் அழகாயும், தெளிவாயும் இருந்தன.

விடைபெற்ற போது..
நாளை வருவாயா என்றாள்
ஆம். தினமும் இவ் வழியால் தான் போவேன்  என்றேன்
மிக அழகாய்ப் புன்னகைத்தாள்.

கைகாட்டி விடைபெற்ற போது கைகாட்டினாள்..
தொடர்மாடி மறைய முதல் திரும்பிப் பார்த்தேன்
எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தாள்
கை காட்டினேன்
ஜன்னலில் ஒரு பூ அசைவது தெரிந்தது

............................

வாழ்வில் நாம் தேடுபவைகளை நாம் தேடாமலே எமக்கு கிடைக்கச் செய்கிறது ஏதோ ஒரு சக்தி. இதை கடவுள் என்றும் சொல்லலாம் அல்லது எனது பாஷையில் லாவண்யா என்றும் சொல்லலாம்.

இன்றைய நாளும் நல்லதே.


.

பரிசாய்க் கிடைத்தது தேவனுக்கு பிணமொன்று

Hans Børli என்னும் ஒரு நோர்வேஜியக் கவிஞரின் கவிதைப் புத்தகத்தில் இருந்து மொழி பெயர்த்த கவிதைகள். நோர்வேயின் முக்கிய கவிஞர்களில் ஒருவர் இவர் என்கிறார்கள்.


அவரைப்பற்றி வீக்கிபீடியா இப்படிச் சொல்கிறது:
பார்க்க http://en.wikipedia.org/wiki/Hans_B%C3%B8rli

..............................................................................................











எல்லாம் நல்லதற்கே


”உயிர்” பரிசாய்க் கடைத்தது
தேவனிடமிருந்து.

வாழ்வுக்கு அடிமையாய் வாழ்ந்து
தீர்த்தான்.


தேவனுக்கு பரிசாய்க் கிடைத்தது
பிணமொன்று

வாழ்வு தின்றழித்த உடலை
பூமியினுள் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்

எல்லாம் நல்லதற்கே என்கிறார்
பாதிரி


.

மச்சாங்... கடல குலிக்க போறது

ஒவ்வொரு சனி மாலையும் ஏறாவூர் யுனைடட் மைதானத்தில் நாம் விளையாடி ஓய்ந்து கலையும் போது ”மச்சாங் நாலிக்கு.. கடல குலிக்க போறது” என்று சொல்லிக் கலைந்து போவான் மார்க்கட்டில் வியாபாரம் செய்யும் மோகன என்னும் சிங்கள நண்பன்.

அவனுக்கு கடலில் குளிப்பதொன்றால் பெரிதாய் பிடிக்காது ஆனாலும் கடற்கரைக்கு அவன் போயே ஆகவேண்டும். அங்கு  களவெடுத்துத் தின்னும் இளநீரும், தேங்காய்ச்சொட்டின் மீது அப்படியொரு கெலியிருந்தது அவனுக்கு.

ஞாயிறு மதியம் 10 மணிக்கு வீடுவீடாய் போய் விளையாடும் அனைவரையும் ”மச்சாங் வா கடல குலிப்பம்” என்பான். ல, ளி யை கொலைசெய்வது பற்றி கவலைப்படாத தமிழறிஞன் அவன்.  எப்படியோ 4, 5 சைக்கில்களில்  15 பேராவது வெளிக்கிடுவோம்.

முக்கியமாய் தென்னைமரம் ஏறத் தெரிந்த தயா வலு மரியாதையுடன் அழைத்துவரப்படுவான். அவனில்லாமல் கடல்குளிப்பில்லை எமக்கு, அந்தக்காலத்தில். குரங்காய் பிறந்திருக்க வேண்டியவன் ஏனோ ஜெயப்பிரகாசத்தாரின் மூத்த மகனாய் பிறந்திருந்தான். எந்த மரமும் அவனுக்கு ஒரு பிரச்சனையுமில்லை. மரத்துக்கு தான் அவனால் பிரச்சனை.

ஒரு சைக்கிலில் 3 பேர் பயணிப்போம். சில வேளைகளில் இடமில்லை என்றால் நான்குபேரும் ஒரு சைக்கிலில் பயணித்த காலங்களுமுண்டு. சைக்கில் ஹான்டில்இல் ஒருவன், பாரில் ஒருவன், சீட்டில் ஒருவன், பின் சில்லின் இரு கரையிலும் கால்வைத்து சீட்டில் இருப்பவனின் தோள் பற்றியபடி ஒருத்தன் என நட்பின் நெருக்கம் சுவைத்தபடியே புன்னக்குடா செல்லும் 3 மைல் தூரமும் ஒரு நட்புத்தொடரூந்து போய்கொண்டிருக்கும்.

நீண்ட போகும் தார் இல்லாத தார்ப்பாதையில் ஒரு இடத்தில் திரும்பிதும் தூரத்தே நீலமாய் கடலும், வெள்ளை மணலும், சில குடிசைகளும் தெரியும். கடற்கரைக்கருகில் காட்டுக்குள் சைக்கில்களை ஒளித்துவைத்துவிட்டு மண்தெறிக்க கடலை நோக்கி ஓடும் போது மோகன மட்டும் தயாவை கெஞ்சிக் கொண்டிருப்பான் மச்சாங் இலனி வெனும், இலனி வேனும் என்று.  தயா அதை கண்டு கொள்ளவே மாட்டான்.

தயாவின் அலட்சியம் கண்டு சினம் கொண்ட மோகன ஒரு தரம் மரம் ஏறி உள்ளம் தொடையில் தோலுரிந்து நின்றிருந்தான். இன்னொரு முறை நன்கு வளைந்திருந்த மரத்தில் ஏறி இறங்கத் தெரியாமல் முழுசிய போது நாம் கஸ்டப்பட்டு இறக்கியெடுத்தோம்.

கடலுக்குள் குதித்ததும் வாயெல்லாம் உப்புக்கரித்து, கண்ணெரிந்து சகஜமாக சற்று நேரமெடுக்கும். அதன் பின் ஆடி அலுக்கும் வரை கும்மாளம் தான்.

இவனை அவன் தண்ணீக்குள் தாழ்ப்பதும்,
அவன் இவனை தாழ்ப்பதும்,
மணிக்கட்டை மேல்நோக்கி மடக்கி தண்ணீரை மற்றவர்களை நோக்கி கையால் இறைப்பதும்,
அதுவே கோஸ்டி போட்டியாக மாறுவதும்,
மோட்டார் படகில் ஏறிக் குதிப்பதும்
நட்பின் தோளில் ஏறி நீருக்கும் பாய்வதும்
சுளியோடுவதும்
அவனிவனின் காற்சட்டைகளை களட்டுவதும் என்று நேரம் போவதே தெரியாது.

மெதுவாய் வயிறு புகைக்கத் தொடங்கும் போது வெளியே வந்து ஒரு பிளேன் டீ வாங்கி அதை மூன்றாய் பிரித்து குடிக்க முதல் உப்பு படிந்த தலைமயிர் மட மடவென்று காய்ந்து போயிருக்கும். ‌

மெதுவாய் தென்னம் காட்டுக்குள் புகுந்து தயாவை மரத்தில் ஏற்றினால் மோகன கேட்ட இலனீயும், தேங்காயும் பசிசை ஆற்றும். வரும் வழியில் இருக்கும் கஜூ தோட்த்தினுள்ளும் போய்வரத் தயங்குவதில்லை நாம். கஜூப்பழத்தின் சுவையே தனி.


சைக்கிலில்
இருவர் பெடல் போட்டு
வீடுவந்து..
சிறிதாய் ஒரு  பேச்சு வாங்கி
வயிறு நிரப்பி
பந்தைக் கையில் எடுத்து
சைக்கிலை எடுத்து மிதித்தால்
மைதானத்தில் காத்திருக்கும்
காலையில் குளிக்கச் சென்ற
அதே விடலைக்கூட்டம்
பிறகென்ன
இருட்டில் பந்து தெரியாமல் போகும் வரை
உலகமே மறந்துபோகும்

கலைந்து போகும் போதும்
தான் தின்ற இலனி பற்றி புழுகிக்கொண்டு போவான் மோகன.


மீண்டும் ..... வாழும் நாள் வாருமா?


புலம் பெயர்ந்து பல ஆண்டுகளின் பின்னான  இன்று மாலை என்ன செய்வது என்று புரியாமல் அலுப்படித்திருந்தபோது நினைவலைகளினூடாக வந்து மையிலிறகால் நெஞ்சு நீவிப்போன அனைத்து பால்ய சினேகங்களுக்கும், விடுதலைக்காற்றில் கலந்துவிட்ட ”அருள்”க்கும், ஏறாவூர் யுனைடட் விளையாட்டுக்கழகத்திற்கும் இது அர்ப்பணம்.



.

அன்புள்ள காதலியே ஆசையில் ஓர் மெயில்

எனக்கு ஒரு காதல் கடிதம் வந்திருந்தது கூகில் மெயிலில். உடனே பதில் போட முடியவில்லை..  மன்னித்துக்கொள் அழகியே. இ‌தோ லவ் கடலில் மூழ்கி, மூச்சடக்கி முத்தெடுத்து உன்னவன் எழுதும் பதில்

கண்ணே,
மணியே,
கூகில் தந்த லவ்வே! ‌
மன்னித்துக் கொள்.
இதோ உனது லவ்வு நிரம்பிய கடிதத்துக்கு அழகான உன்னவன் எழுதும் பதில்.


ஆருயிர் ஆஞ்சலா! (இது தான் நம்ம ஆளின்ட பெயர்)..

அந்தக் காலத்தில் அகத்தின் அழகு முகத்தில் ‌ தெரியும் என்றார்கள். இந்தக் காலத்தில் அகத்தின் அழகு Mail id இல் தெரியுதோ என்னவோ? ஊர், பெயர், நிறம் , குணம் தெரியாமலே எனது email விலாசத்தை மட்டும் வைத்து நீ என்னைக் காதலித்திருக்கிறாய். என்னே அன்பு உனக்கு.. என்னைக் காதலித்த உன் அழகிய கால்களைக் காட்டு்ம்மா.. (வேற என்னத்தக்கு.. காலில விழுந்து கும்பிடத்தான்)

உயிரே! மெயில் அனுப்பப்பட்ட IP address ஐ பார்த்தேன் அது ரஸ்யா எனக் காட்டுகிறது. செல்லக்குட்டியே! எனக்கு உனது மொழி தெரியாது ஆனால் காதல் மொழி படித்த அனுபவம் இருப்பதால் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை  இருக்கிறது.

பேரன்புக்குரிய காதலியே!
உனது கடிதத்தை have a nice day என்று நீ முடித்திருந்தாய். எப்பபடியய்யா எனது நாள் நைஸ் டே ஆக இருக்கும் நீ இல்லாமல்? வைரமுத்து என்று ஒரு மீசைவைத்த ஒரு கறுப்புக் கவிஞர் சொன்னமாதிரியெல்லாம் எனக்கு நடக்கிறது எனக்கு.

ஏன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றியிருக்கிறது ( இனிமேல் கரன்ட் காசு மிச்சம்)
ராத்திரியின் நீளம் விளங்குகிறது (ஆமா ...ஆமா.. பயயயயயங்கரமாய் இருக்கிறது)
கண்ணிரண்டும் ஒளி கொண்டிருக்கிறது...
கண்ணாடியில் பார்த்தேன் என்னை இன்று..
மொட்டையான எனது தலை கூட அழககாகத்தான் இருக்கிறது. வண்டியை எக்கிப் பிடித்து நின்றால் செக்ஸியாகத் தான் இருக்கிறேன்.
எனக்கு ஏதோ நடந்து விட்டது எனதருமை சினியோரீத்தா..

அடிக்கடி புதிய காதல் பாடல்களை முணுமுணுக்கிறேன்.
இல்லாத தலைமயிரை இழுக்கிறேன்

அய்யோ.. என்ன நடக்குது இங்க.. யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ..

любящий девушка (ருஸ்ய மொழியில் ”காதல் பெண்ணே”
என்பதை இப்படித்தான் சொல்கிறார்களாம்) என்னைப்பற்றி நீ கேட்காதது உனது பெருந்தன்மை..
பெருமையடித்துக் கொள்வதே எனது தன்மை..
எனவே உனது காதல் மன்னவனைப் பற்றிச் சொல்கிறேன் கேட்டறிந்து கொள் செல்லமே.

பெயர் .... சஞ்சயன் என்கிறார்கள். (அதுவும் மற்றவர்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும்).
வயது அதிகமில்லை 45 தான்.
60 வயதில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறதாம்.. (ஆக.... நான் இன்னும் வாழத் தொடங்கவில்லை)


சொத்து விபரங்கள் சொல்லியே ஆக வேண்டும். உன்னை வாழவைக்கப் போவது அதுவல்லவா?
கொலஸ்ரோல் 13.3
சீனி 11.3
பிரசர் தேவைக்கு அதிகமாய் இருக்கிறதாம்
இதை விட எனது கண்மனிக்கு வீடு கட்டவேண்டும் என்றால் என்னிடம் கல்லும் இருக்கிறது.. ஆம் கிட்னி கல்லு எனக்கு அடிக்கடி வரும்.
குளிசைகள் பல நிறங்களில், பல வடிவங்களில் எக்கச்சக்கமாய் இருக்கிறது. விரும்பினால் கடையே போடலாம். உனது மெயிலைக் கண்டதும் ‌ நெஞ்சு படபடத்தது.. அதற்கும் கைவசம் குளிசை இருந்ததால் தப்பினேன்.

இவ்வளவு சொத்துகளின் அதிபதியாகிய என்னை நீ இழக்க விரும்பமாட்டாய் என்றே நம்புகிறேன். தவிர நீ அன்பைத் தேடியவள் என்பதால் சொத்தை(பல்லும் இருக்கிறது) பற்றி நீ கவனிக்க மாட்டாய் என்று தான் நினைக்கிறேன்.

இது தவிர என்னை விசரன் என்றும் சொல்கிறார்கள். பொறுப்பற்றவன், தெருப்பொறுக்கி, உதவாக்கரை, வழிசல் நாய், என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். ஒரு சிலர் எனது ஊரையும் இழுத்து எட்டப்..... என்றும் திட்டுவார்கள்.. ருஸ்யநாட்டழகியே! இதெல்லாம் உனது  காதல்வீரனுக்கு சகஜமடி .

நீ உனது கடிதத்தில் டியர் என்று எழுதியிருந்தாய். டியர் என்றால் கரடி என்று அறிந்திருக்கிறேன். என்னை நீ காதல் கரடியாக நினைத்தது என்னை கிளர்ச்சியுற வைக்கிறது. கண்மணியே நன்றி.

உனது கடிதம் பற்றி கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் நீ நோர்வேக்கு வந்து விசா அடித்த பின் என்னை கழட்டி விட்டுவிடுவாய் என்கிறார். வயித்தெரிச்சலில் கதைக்கிறார் அவர், மன்னித்துவிடு அவரை.
தேவை எனின் விசா தரக் கூடிய பிள்ளையாரையும் எனக்குத் தெரியும். எனவே டோன்ட் வொர்ரி.. be happy.

இன்னுமொரு நண்பரோ இது spam மெயில்... லவ் மெயில் என்டு குதிக்காதீங்கோ என்று தனது வயித்தெரிச்சலை தணித்துக் கொண்டார்.

அழகிய ராட்சசியே! உனது பதிலுக்காய் கணணிமேல் கண்வைத்துக் காத்திருக்கிறேன். கெதியில் வா... தாங்க முடியாதிருக்கிறது..

லவ்வூ கலந்த நீண்ட பெரும் முத்தங்களுடன் இக் கடித்தை முடிக்கிறேன்.


இவ்வண்ணம்

உன்மேல்
பெரும் காதல் கொண்டுள்ள
அழகான உன்னவன்

.

கடவுளின் சைக்கில் திருத்திய.. நான்


நான் வசிக்கும் தொடர்மாடியில் இருந்து சுரங்கரயில் ‌நிலையம் நோக்கி சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் நடந்து கொண்டிந்தேன். நோரம் மதியத்தை தொட்டுக்கொண்டிருக்க, ஏனைய நேரங்களில் அவ்விடத்தில் ஓடித்திரியும் பல நாட்டு சிறுவர்கள் எவருமில்லை. பாடசாலைக்கு போயிருப்பார்கள். ஊரே அமைதியாயிருந்தது

மெது குளிரை சுவைத்துக்கொண்டு நடக்கிறேன் புல் தரையில் தனது நீல நிறமான குட்டி சையிக்கிலை தள்ள முயற்கித்துக் கொண்டிருந்தார் இக் கதையின் கதாநாயகன். அது வரமாட்டேன் என்று அடம் பிடிக்க, இவர் முக்கி இழுக்க.. என்று சைக்கிலுடன் சண்டைபிடித்துக்கொண்டிருந்தான்.

சைக்கில் பெரிய சக்கரங்களைக் கொண்டிருந்தாலும், உதவிக்காக இரு குட்டி சக்கரங்கள் பின் சக்கரத்தின் இருபகுதியிலும் பூட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்தவுடன் நம்ம கதாநாயகன் சைக்கில் ஓடப்பழகுகிறார் என்றும் புரிந்தது.

அருகில் சென்று மெதுவாய் புன்னகைத்தேன். இறுகியிருந்த முகத்தினூடாக என்னைப் பார்த்தான். பிறகு மீண்டும் வராத சைக்கிலை இழுக்கத் தொடங்கினான். புல்லின் வழுக்கலில் பின் சக்க‌ரம் உருளாமல் இழுபடத் தொடங்கியது.

நான் பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்தவன் மெதுவாய் முனுகினான் சைக்கில் உடைந்துவிட்டதென்று.

நான் உனது சைக்கிலை திருத்தித் தரவா என்றேன். ஒளி கொண்டன அவன் கண்கள். அவனையும் மீறி தலை மேலும் கீழுமாக ஆடியது.

சைக்கிலை வாங்கி சக்கரத்தை நோக்கினேன். செயின் பின்பக்க சக்கரத்தில் இருந்து கழண்டு இறுகிப்போயிருந்தது. சிறு தடியொன்று தேடினேன். என்னுடனேயே நடந்தான் தடி தேடி.

உன் பெயர் என்ன என்றேன் முகம்மட் என்றான். அவனின் முகத்திலேயே எழுதியிருந்தது அவன் சோமாலியநாட்டுக் குழந்தையென்று. எனது பெயர் என்ன என்றான் பெரியமனிதன் போல். சஞ்சயன் என்றேன். உச்சரித்துப்பார்த்தான் முடியவில்லை. அமைதியானான்.

தடி தேடி எடுத்து செயினை நெம்பி சக்கரத்தில் மாட்டினேன். சீட்டை பிடித்துத்துத் தூக்கி பெடலை காலால் அமத்தினேன். சிக்கலில்லாமல்  உருண்டது.

இந்தாருங்கள் உங்கள் சைக்கில் என்றேன். அவசரமாய் ஏறிக் குந்தியவன் இருதரம் சைக்கிலை எழும்பி நின்று மிதித்தவன் மிக்க நன்றி சசே என்றான். மிக்க நன்றி என்பது புரிந்தது.. அது என்ன சசே? புரியவில்லை அது.

எனக்கு முன்னால்
பெருவேகத்தில் ஓடி
மடக்கித் திருப்பி
என்னைக் கடந்து
பின்னால் போய்
மீண்டும் என்னைக்
கடந்த போது
ர்ர்ர்...ர்ர்ர் புரும், புரும் என
சத்தம் வந்தது
அவன் வாயில்
ஆகா
கதாநாயகன்
கார் ஓடுகிறார்
என்றும் புரிந்தது.

அடுத்து வந்த நாட்களில் அவனை நான் மறந்து போயிருந்தேன். அன்றும் வழமைபோல் அவ்வழியால் பொய்கொண்டிருந்த போது என்னைத் தாணடிப் போய் நின்றது ஒரு சைக்கில். காலை நிலத்தில் ஊன்றியபடியே திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தான்.

ஹாய் முகம்மட் என்றேன்
புன்னகைத்தான் புதிதாய் மலர்ந்த ஒரு பூவாய்
சைக்கில் நன்றாக ஓடுகிறதா என்றேன்
தலை மேலும் கீழுமாய் ஆடியது. அதோடு பெரிதாயிருந்த அவன் சொக்கையும் ஆடியது.
நீ எங்கே போகிறாய் என்றான்?
வேலைக்கு என்றேன்.
நானும் வேலைக்கு போகிறேன் என்று சொல்லி எழும்பி நின்று சைக்கிலை மிதித்தான். எனக்கு முன்னால் சில தூரம் போய், சைக்கிலை திருப்பி பெரு‌வேகமெடுத்து என்னைக் கடந்த போது bye சசே என்று நோர்வேஜிய மொழியில் கத்தினான்.
ஆகா... சசே என்பது எனது பெயர் என்பது அப்போது தான் புரிந்தது.

இன்றும் புன்னகைக்கிறான், சசே அவனைக் கடக்கும் போதெல்லாம்.
பி.கு: உதவிச்சக்கரங்கள் அவனது சைக்கிலில் இருந்து அகற்ப்பட்டிருக்கின்றன


-

சிலுவைராஜ் சரித்திம்

வைகாசி மாதம் 25ம் திகதி என்று நினைக்கிறேன், ஒஸ்லோ கடையொன்றில் வாசிப்புப்பசிக்கு உணவு தேடி அலைந்து கொண்டிருந்தேன். கண்ணில் பட்டது சிலுவைராஜ் சரித்திம். பல தடவைகள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் விற்ப்படாமல் இருந்தது. போட்டிருந்த விலையில் 50 வீதமான கழிவில் தந்தார்கள்.

வாங்கிக் கொண்டு வரும் போதே நிலக்கீழ் சுரங்க ரயிலில் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக என்னுடன் நடந்து வந்த உற்ற நண்பனெருவனை இன்னும் சில நாட்களில் இழந்து விடுவேன் போலிருக்கிறது. ஆம், இன்னும் மிகச் சில பக்கங்களே மிச்சமிருக்கின்றன. முடிந்துவிடுமே என்று பயமாக இருக்கிறது எடுத்து வாசிக்க. 573 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தினூடாக என் மனதுடன் மிக நெருங்கியிருக்கிறான் சிலுவை.

அதற்குக் காரணம் ராஜ் கொளதமனின் எளிமையான எழுத்தும் சம்பவங்களும். அவர் சிலுவையின் கதையை சொல்லிக்கொண்டிருக்க நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பது போல இருக்கிறது அவரின் எழுத்து நடை. இப்படியானதோர் சுயசரிதமொன்றை நான் வாசிப்பது இதுவே முதல்த்தடவை. இப்புத்தகம் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது. மனிதரை ஒருதரமாவது சந்திக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இப் புத்தகத்தின் தொடர்ச்சியான ”காலச்சுமை",  "லண்டனிலிருந்து சிலுவைராஜ்" ஆகிய புத்தகங்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சிலுவையின் கதையில் இருக்கும் ”சாதிய அமைப்பின்” அநியாயங்கள், சோகங்கள், வலிகள் எல்லாம் எனக்குப் புதியவை. சத்தியமாக.

சிலுவையின் பெயரைப் போல அவனும் கத்தோலிக்க கிறீஸ்தவன். ஆனால் ”பறையர்” என்னும் சாதியைச் சேர்ந்தவன். அந்த சாதியில் எனதூரிலும் மனிதர்கள் இருந்தனர்.
ஆனால் சிலுவையைப் போல் என்னூரில் வாழ்ந்தவர்களும் கஸ்டப்பட்டிருப்பார்களா என்ற கேள்விக்கு என்னால் பதில் தேடிக் கொள்ள முடியாதிருக்கிறது. மனது ”இல்லை” என்றே அந்தப் பதில் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.

எனக்கு சிலுவை பட்ட வலிகளை கற்றுத் தராத எனது புனிதப் பூமிக்கு முழந்தாளிட்ட கோடி கோடி வணக்கங்கள்.

சிலுவையின் தாய், தந்தை, சகோதரங்கள், அவனின் பாட்டி என்று  எல்லோரும் எனது உறவினர்களாகிவிட்டிருக்கிறார்கள். சிலுவையின் சரித்திரத்துக்கும் எனக்கும் பல இடங்களில் ஒற்றுமையிருக்கிறது. முக்கியமாய் அவன் தந்தையிடம் அடி வாங்கும் இடங்களும், அவனின் பாடசாலை விடுதி வாழ்க்கையும், கடந்து போன வயதுக்கோளாறுகளையும், அவனின் குசும்பு, நக்கலையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

யுதார்த்தமான அவனது சிந்தனையும், குசும்புகளும், சமுதாயத்தை சாடும் ரௌத்தரமும் என்னை மிகவும் கவர்ந்தன. ஒரு உதாரண மனிதனாயிருந்திருப்பான் சிலுவை என்பது எனது கருத்து.
 
ஒரு வேதனையை சிலுவை கடந்தால் அடுத்த வேதனை அவனை மாலை மரியாதைகளுடன் வரவேற்க காத்திருந்திருக்கிறது. அந்த மாலையையும், மரியாதையையும் வாங்கி்க் கொண்டு அதையும் கடந்து வரும் அவனின் மனத்துணிவும் ,அலட்சியமும் எனக்கு எதையே கற்றுத் தந்திருக்கிறது. வாழ்வில் சிலவற்றை அலட்சியம் செய்யவும் கற்றுக்கொள் என்று எனக்கு போதித்திருக்கிறான் சிலுவை.. நன்றி நணபா.

கீறீஸ்தவர்களின வாழ்க்கை, மதம், அவர்களின் பங்குக்கோயில் என்பன அவர்களின் வாழ்க்கையில் எந்தளவு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதையும் சிலுவை மிக விளக்கமாகச் சொல்லித் தந்திருக்கிறான் எனக்கு.

மாம்பழம் களவெடுக்கப்போகும் சிலுவை,
நண்பர்களுடன் குளிக்கப் போகும் சிலுவை,
பாம்புபிடித்து கொல்லும் சிலுவை,
தியட்டருக்கு போகும் சிலுவை,
எம்.ஜி.ஆர் ரசிகன் சிலுவை
நண்பர்களுடன் ஒரு அறையில் குடியிருக்கும் சிலுவை
என்று எமக்குள் பலத்த ஒற்றுமையிருக்கிறது. ஆனால் சிலுவை மாதிரி தவளை பிடித்து நான் வெட்டிப்பார்த்ததில்லை எனது பால்யத்தில்.

சிலுவையின் காதல் தோல்விகள் மனதை சற்று வேதனைப்படுத்தினாலும் இனிவரும் பக்கங்களில், தொடர் புத்தகங்களில் அவனின் மிகுதி வாழ்க்கையை வாசிக்கும் போது  அவற்றையும் பகிர்ந்து கொள்வான் என்ற நம்பிக்கையிருக்கிறது. 

சிலுவையைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம். இருப்பினும் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

வாசிப்பில் ஆர்வமுள்ள வாசகர்களே! இப் புத்தகத்தை மறக்காமல் வாசியுங்கள். அணு அணுவாய் ரசிப்பீர்கள் என்பதை மட்டும் என்னால்நிட்சயமபய் சொல்லமுடியும்.

ராஜ் கொளதமன் அய்யாவுக்கு!
நாம் கட்டாயம் சந்திப்போம்.

திருப்பித் தருவதாக உறுதியளித்தால் இப் புத்தகம் இரவல் வழங்கப்படும்.


இவ்வண்ணம்
சிலுவையின் நட்பில் பெருமை கொள்ளும்
விசரன்


.

அழிந்து கொண்டிருந்தாலும் அவனும் போதிமரம்












நேற்றுமுன் தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் வழியில் ட்ராம்ப் எடுத்து எடுத்து, பின் சுரங்க ரயில் எடுப்பதற்காய் நடந்துவந்து கொண்டிருந்தேன், ஒஸ்லோ மாநகரின் முக்கிய வீதியொன்றினூடாக.

வெளியில் இரவு தனது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது. பலரும் தங்கள் தங்கள் வீடுகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்க. நேரம் நடுநிசியைத் தொட்டுக்கொண்டிருந்தது.

நானும் வழமைபோல் எனது விசர்த்தனமான சிந்தனைகளுடன் நடந்து சு‌ரங்க ரயில் நிலையத்தை அண்மித்து படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான் கவனித்தேன் அவனை.

முழங்காளிட்டு முதுகு வளைத்து தலையை மேல் படியொன்றில் வைத்தபடி சரிந்திருந்தான். எனது கண்கள் இதைக் கவனித்ததே தவிர மனம் அதில் லயிக்காதனால் அவனைக் கடந்து சில படடிகள் இறங்கிய போது தான் மனதில் ஏதோ உறைக்க, இறங்கிய படிகளை மீண்டும் ஏறி அருகில் போய்

உதவி தேவையா என்றேன். 
பதில் இல்லை.
ஏதொ முனுகினான்.
முதுகு தொட்டு குனிந்து உதவி வேணுமா என்றேன் மீண்டும்
பலர் ஒரு மாதிரியாய் பார்த்தடி கடந்து போயினர்.

மெதுவாய் தலையை உயர்த்தி
(f)பித்த (பு.... வார்த்தை)
(h)ஹெல்வத்த (நரகம் .. இதுவும் இங்கு தூஷண வார்த்தை)
இன்னும் பல துஷணத்தில் திட்டினான்.
(யாரை என்று கேக்காதீர்கள்... அழுதுடுவன்)

அவனின்
கண்கள் நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தன
கைகால்கள் நடுங்கின
நிற்கவே (குந்தியிருக்கவே) முடியாதிருந்தது அவனால்

நடுங்கிய கைகளினால்
கால்ச்டை பையினுள் இருந்து
கஸ்டப்பட்டு
வெளியில்  எடுத்தான்
ஒரு அலுமீனியப் பேப்பரை
அதன்மேல் ஏதோ கொட்டி
சூடாக்கி
ஊசி எடுத்து
அதை உறுஞ்சி
நடுங்கும் கைகையை
கயிறு ஒன்றினால்
இறுகக்கட்டி
புடைத்ததெழுந்த நரம்பில்
இரத்தம் சிந்திக் கொண்டிருக்க
குத்தி
உள் அனுப்பினான்

கண்கள் சொருகி
கனவுலகில்
வாழத்தொடங்கியிருந்தான்
நான்
படிகளில்
இறங்கிக் கொண்டிருந்த போது.

யார் பெற்ற பிள்ளையோ?
யாரின் காதலனோ?
யாரின் கணவனோ?
யாரின் தகப்பனோ?

வீடுவந்து
குளித்து
படுக்கையில் விழுந்து
நினைவிழக்கும் வரை
அவனே
நிறைத்திருந்தான்
என் மனதை

அவனும் எனக்கு போதிமரம்.

இன்றைய நாளும் நல்லதே


.

Norway Cup என்னும் மாபெரும் கால்ப்பந்தாட்டத் திருவிழா

ஓஸ்லோ மாநகரத்தில் தொடங்கியிருக்கிறது மாபெரும் கால்ப்பந்தாட்டத் திருவிழா. ஆம் நோர்வேயின் மிகப்பெரிய கால்பந்து சுற்றுப்போட்டி இன்று ஆரம்பித்திருக்கிறது. உலகக்கால்பந்தட்ட சுற்றுப்போட்டிகளில் மிகப் பெரியவை எனச் சொல்லக்கூடிவற்றில் இதுவுமொன்று.

இதன் சிறப்பு என்னவென்றால்
ஏறத்தாள 1500 க்கு மேற்பட்ட அணிகள்
50 க்கும் மேற்பட்ட நாடுகள்
40.000 வீரர்கள், வீராங்கனைகள்
4000 போட்டிகள்
350 நடுவர்கள்
1600 அதிகாரிகள்
700 க்கும் அதிகமான ஊடகவியளார்கள்

அதிகமான போட்டிகள் Ekebergslett என்னும் மாபெரும்வெளியில் உள்ளமைதானங்களிலேயே நடைபெறும்.

இனிவரும் 7 நாட்களும் நோர்வேயில் இதுவே பேச்சாயிருக்கும,பத்திரிகைளின் முதல் பக்கத்தை வெற்றியும் தோல்வியும், மகிழ்சியும் துக்கமும் ஆக்கிரமித்திருக்கப்போகிறது.

இந்த போட்டிகளுகக்கான ஒழுங்கமைப்பை Bækkelagets Sportsklub என்னும் கழகம் செய்து வருகிறது. இந்தப்போட்டிக்கான முழு ஒழுங்கையும் மக்கள் சிரமதானத்தின் அடிப்படையிலேயே செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.முதவாது போட்டி 1972ம் ஆண்டு 420 அணிகளுடன் நடைபெற்றிருக்கிறது.

முழுவதும் பதின்பவயதினர் பங்குபற்றும் போட்டிகள் என்பதால் இசைநிகழ்சிகள், நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள் என்று மைதானமும் அதைச் சுற்றியபகுதிகளும் ஒரே கொண்டாட்டமாய் இருக்கும். வியாபாரமும் களைகட்டியிருக்கும் ஒஸ்லோ முழுவதும்.

பல வருடங்களுக்கு முன் (1992 என்று நினைக்கிறேன்) இந்தப் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக Liverpool அணியினர் வந்திருந்தனர். எனக்கு liverpoolஅணியின் மீது 1980 களில் இருந்தே பெருங் காதலிருக்கிறது. இவர்களை எப்படியாவது தரிசித்தே ஆகவேண்டும் என்று மனம் பெருங்கூச்சல் போட்டது. இலங்கையில் இருந்த வரும் பத்திரிகையாளன் என்ற போர்வையில் நுளைவு அனுமதிக்கு விண்ணப்பித்தேன். கிடைத்தது அனுமதி. மைதானத்துக்குள் புகுந்து Ian Rush, Bruce Grobbelaar, Jan Mølby, Steve McManaman, கறுப்பு முத்து என்றளைக்கப்பட்ட John Barnes ஆகியோரை சந்தித்தது ஒரு பெருங்கதை.

 1993ம் ஆண்டு ஒரு நோர்வே இளைஞர் அணிக்கும், அங்கோலா நாட்டைச் சேர்ந்த நிலக்கண்ணி வெடிகளால் அவயங்களை இழந்தவர்களுக்கும் ஒரு போட்டி நடந்தது.அங்கோலா நாட்டவர்களினால் அன்று நிகழ்த்தப்பட்ட அதிசயம் இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.

கோலூன்றி அவர்கள் ஓடிய வேகம்.. அப்பப்பா
மந்திரக்காரர்களா அவர்கள் என்று என்றுமளவுக்கு பந்து அவர்களின் சொல்லுக்கு ஆடியது.
Technical football என்பதனை அன்று தான் கண்டேன்

மெதுவாய் விளையாடி, எதிரி இரண்டு கோல் அடிக்கும் வரை சும்மா இருந்தவர்கள்
பின்பு
சுழன்றார்கள்
சுழன்றாடினார்கள்
ஓடினார்கள்
எதிரியை சிப்பிலி ஆட்டி
3 - 2 என்ற வென்ற போது
மைதானமே பிரமித்திருந்தது
நான் மயங்கியிருந்தேன் அவர்கள் விளையாட்டின் அழகில்.

இம்முறையும் இவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் விளையாட்டை ரசிக்க நினைத்திருக்கிறேன்.


.

முருகா! நீதான் உன்ட சமயத்த காப்பாத்தனும்....

இந்து மதம் தழைத்து வளர வேண்டும், எதிர்காலச் சந்ததிகளும் அதைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கிலேயே இது எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்த அல்ல. நகைச்சுவையுடன் எனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறேன். தவிர நான் முக்கியமாக வெளிநாடுகளில் இருக்கும் கோயில்களையே கருத்தில் கொண்டே இதை எழுதியிருக்கிறேன். ஆனால் சில கருத்துக்கள் அனைத்துக் கோயில்களுக்கும் பொதுவானவை.

இந்த பதிவின் மூலப்பிரதி  2009 டிசம்பர் மாத யுகமாகினியில் வெளிவந்திருந்தது.


என்னைப் பொறுத்தவரை இந்துமதம்  சற்றேனும் இளசுகளை உள்வாங்கும் நடவடிக்கைகளைச் ஆரம்பிக்காவிடின் இன்னும் 20 வருடக்காலங்களின் பின் ”நம் மதம் இனி மெல்லச் சாகும்” என்று பாரதியின் style இல் நிச்சயமாகச் சொல்லலாம்.

முக்கியமாக வெளிநாடுகளில் பிறந்து வளரும் எமது இரண்டாவது சமுதாயத்தினருக்கு எமது மதத்தின் நெறிகளைகளையும், முறைகளையும் அவர்களின் பாஷையில் எடுத்தியம்ப நாம் மறந்திருப்பதனால் எமது மதம் மீது அவர்களுக்கு பற்றற்றிருக்கிறது.

ஆலயங்களில் ஏன் இளையவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது?

இளையவர்களை உள்வாங்கும் என்ன என்ன நடவடிக்கைகளை இந்தக் ஆலயங்கள் செய்கின்றன?

இளையவர்களின் யதார்த்தமான  மதம் சம்பந்தமான கேள்விகளுக்கு எவ்விதமாக பதிளிக்கிறோம்?

பணமே கடவுளாகிவிட்ட கோயில்களில் வாழ்வு, தியானம், நற்சிந்தனை போன்றவற்றை தொடர்ச்சியாக ஏன் இளையவர்களுக்கும், எங்களுக்கும் கொடுக்க மறுக்கிறோம்?

நாம் சற்றே சிந்திக்கவேண்டியிருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது எனக்கு.
உங்களுக்கு?
.......................................

எனக்கு கோயில்களைப் பிடிக்காமற் போன காரணம், அவர்கள் இன்னமும் பழசைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நைன்டீன் டுவன்டி யில பாடின அதே பஜனை ராகத்தில இன்னமும் கையைத் தட்டி Tractorக்கு பின்னால ஒரு பழசு கத்த மற்ற விசருகளும் ஜிங் ஜாங் தட்டி, தவளைகள் மாதிரி அந்த முதல் பழசு கத்தினதயே கத்துறது தான்.

பாரதி, சிறுமை கண்டு பொங்குவாய் என்று இதையும் சேர்த்து தான் பாடினான்.. எங்க விளங்குது எங்கட சனத்துக்கு அது.

இளசுகள் எப்படி அதுக்குள்ள வருங்கள்? அதுகள் இந்தக் காலத்தில காற்றின் சுதந்திரத்தை வேண்டி அறிவின் அடிப்படையில் சிந்திக்குதுகள். எங்கட பழசுகளின்ட கூத்துகள ”senior citizens” என்டதுக்காக மட்டுத்தான் பொறுத்துக் கொண்டிருக்குதுகள். அதுக்காக நீங்க செய்யுறது சரி எண்டு misunderstand பண்ணாதிங்கண்ணா...

பழைய பஜனையை யுவன் சங்கர் ராஜாவின் இசை மாதிரி இளைஞர்களின் மொழியில் மாற்றி அதை rap பண்ணிப் பாடி, hip pop dance கலந்து விட்டுப் பாருங்கள் கோயிலில் பழசுகளுக்கு நிற்க இடமிருக்காது.
அப்படி நடக்க விடுவாங்களே....விட மாட்டாங்கள் உந்த படிச்ச பூச்சாண்டிகளும், எங்கட கோதாரிவிழுந்த பழசுகளும்?

Let me talk today

இன்டைக்கும் கிருபானந்தவாரியார் மாதிரி சொற்பொழிவு ஆற்றினால்..இளசுகள்
Hey man, Who is his old guy?
Boring ya
He is killing me..ya

எண்டு சொல்லி வெளியால ஓடுங்கள்.

அதையே இளசுகளின்ட taste ஏற்ற மாதிரி linguistic language, body language மாற்றி, technology கொஞ்சம் கலந்து விட்டுப் பாருங்கள் சமயச் சொற்பொழிவுகளை இளமை கொண்டாடும். சைவம் தழைக்கும்.

come-on ya

வேட்டி, பாவாடை, தாவணி போட்டுத் தான் கோயிலுக்கு வரோணுமே? You know what? I think lord Shiva will love "Levis" jeans as our youngsters do.

To my generation and those who are older than us.....

கடவுள் மனதின் சுத்தத்தை மட்டும் தான் பார்ப்பார். உங்கட costly காஞ்சிபுர வேட்டியையும், மடிப்புக் கலையாத நடிகையின் பெயர் கொண்ட sareeயையுமே பார்க்கிறார்... வாயில நல்லா வருது...shut up and listen

உங்களில எத்தின பேர் கோயிலுக்கு வந்து உண்மையா கும்பிடுறியள்.... அங்க ஜொள்ளு விடுறதும், மற்றவளின்ட சாரியையும், சங்கிலியையும் தான் பார்க்கிறீங்க. What I mean is உங்கட மனது புழுத்து நாறுது. ஆனால் உங்கட costly வேட்டி and saree மட்டும் நல்லா இருக்கு... Got my point?... good

விடுங்கோ இளசுகளை அதுகளின்ட பாட்டில. அதுகளுக்குத் தெரியும் கோயிலுக்கு அரை நிர்வாணமா வரக் கூடாது எண்டு. அப்படி வந்தாலும் அதுகளின்ட மனது சுத்தம். ஆனா உங்கட கண்ணை bleach போட்டு கழுவி மனதை Dettol போட்டு கழுவ வேணும்.

ஒரு இனத்தவர் தான் கோயிலில பூசை செய்யோணுமோ? மவனே விசரக் கிளப்பாத. கடவுளுக்கு, நீயும் நானும் ஒன்று தான். அவர் மனிசரத் தான் படைச்சவர். கடவுளிட்ட கேட்டுப்பாருங்கோ... He will laugh at you.

இளசுகளிட்ட விட்டுப்பாருங்கோ...

மந்திரங்களை எங்களுக்கு புரியுற மாதிரி உங்கட டமில்ல தருவார்கள். உங்கள விட விசேடமாய் ஆங்கிலத்திலயும், frenchலயும், spanishலயும் சைவசமயத்தை ஆராய்ந்து, மற்ற சமயங்களோட விவாதித்து உலகம் வியக்கச் செய்வார்கள். மதங்களைக கை கோர்க்கச் செய்வார்கள். எங்கள மாதிரி இவன் சோனி, அவன் வேதக்காரன், அவன் பிக்கு என்டு விசர்த்தனமா பினாத்தாதுகள்.

Be quiet and let them play

என்ன கோயில் திருவிழாவோ? நோட்டீஸ் அடிக்கோணுமோ.. ஓம் ஓம் அதில பெருசா சாமிட படம் போட்டு old தமிழில் 50 தேவாரம் போட்டு (கனபேருக்கு விளங்காது) அதைவிட முக்கியமா ஆர் அந்த நோட்டீஸ் அடிச்சது என்று பெரிதா போட்டு பப்லிசிடி தேடுற உங்கட கூத்த 45 வருசமா பார்த்துக்கொண்டு தான் வாறன். I am getting tired of you guys..

இளசுகள் என்டால் ‌Hi, Let us start a website for our festival எண்டும்  linux serverல தொடங்கி Tomcat ல html ல எழுதி website போட்டு.  Facebook, twitter என்று ஆயிரம் செய்வான் (என்னது மந்திரம் மாதிரி இருக்கோ நான் கதைக்கிறது.. அது சரி நான் தான் கொஞ்சம் யோசித்திருக்க வேணும் மோட்டுப் பழசுகளோட கதைக்கிறன் எண்டு... Sorry guys)

உங்கட போஸ்டர் பக்கத்து ஊருக்கும் போகாதே (ஏன் என்றால் அது குறைந்த சாதிக்காரன்ட ஊரெல்லோ)

இளசுகளின்ட web site முழு உலகுக்கும் அறிவிக்கும் முருகனின் திருவிழாவை.

உங்கட போஸ்டருக்கு வழுவழுப்பான பேப்பரும் (அதை செய்ய 10 மரம் வெட்டணும்), கனக்க மையும் வேணும். அவன் environment friendly விசயத்தை simpleஆ முடிப்பான்... environment friendlyலியா? அது என்ன என்டு கேட்டால், I'll kill you man.

நீங்களெண்டால் உங்கட சாதிக்கு மட்டும் தான் சொல்லி கொண்டாடுவீர்கள். அவங்கள், முழு உலகுக்கும் அறிவிப்பார்கள் ”Come and celebrate with us” என்று.

நீங்களெடுத்த Video வெளிநாட்டில இருக்கிற உங்கட பிள்ளேட்ட போக மாதங்கள் வேணும். அவனோ live telecast, webcast என்டு உங்களுக்கு விளங்காத tecnologyல உடனுக்குடன் முருகனை உலகுக்கே காட்டுவான்.

I think you are getting scared, aren't you?
But, I am not going to stop here
I've got more stuff today
I want to talk

உங்கட தர்மகர்த்தா எண்ட பில்ட்அப் எல்லாம் அவர்களுக்கு பிடிக்காது கணக்கு வழக்குகளை ஒளித்துப் பித்தலாட்டம் பண்ணுவதும் பிடிக்காது. Hey guys! We are living in a democratic country, let everybody know about our accounts என்பான். காசு கணக்கு கேட்டவுடனே உங்களுக்கு மூத்திரம் போக வேணும் போல இருக்குமே இப்ப.

அதை விட உங்ளிட்ட இருக்கிற காசப் பார்த்து...Oh my god.. Do you have so much money? Why can't you build a home for poor kids in Vavuniya and Matara? என்பான்......என்ன ஒரு நாத்தம் அடிக்குது... ஓ உங்களுக்கு வயித்தகலக் கீட்டுது போல. அய்‌யோ பாவம்.

கோயிலுக்குள்ள அங்கவீனமுற்றவர்களும், அவர்களின் சக்கர நாற்காலிகளையும் வருவதற்கு ஏதும் செய்திருக்கிறீங்களே? என்னது....ஓம் ஓம் .... அந்த நொண்டிக்கு என்னத்துக்கு கோயில், செய்த பாவத்துக்கு தானே கடவுள் நல்லா கொடுத்திருக்கிறார் என்டு நீங்கள் முணுமுணுக்கிறது கேட்கிறது. Does anybody have a gun here?

இளமை என்ன சொல்லும் தெரியுமோ? Let make this temple available for everybody .

Install a lift என்பான்

காது கேளாதவனுக்கு ”அவர்களது பாசையில்” கோயில் சம்பந்தமான சகலதையும் விளக்குவான்
கண் தெரியாதவனுக்கு ”‌அவர்கள் மொழியில்” புத்தகமே செய்வான்

கேக்குது...... கேக்குது

உந்த சனியன்களைக் (என்னை) கோயிலுக்குள்ள விட்டதால தெய்வக்குற்றம் வந்திட்டுது என்று குசு குசுப்பது கேக்குது....மவனே! .. உன்ன கொல்லாம விட்டாத் தான் தெய்வக்குற்றம் வரும். Shut up and keep quiet.

திருவிழாவில பலி கொடுக்கப் போறியளோ சனம் நேர்ந்து விட்ட மிருகங்களை? அது சரி... மிருகங்களுக்கு எங்க உயிரின்ட அருமை தெரியப் போகுது. போட்டிக்கு 1001 ‌தேங்காயுடைச்சு புண்ணியம் தேடுற மனிசரெல்லே நீங்கள். ஹய்யோ..    ஹய்யோ

உன்ட வாரிசு என்ன சொல்லும் தெரியுமோ?

Be kind with animals too
Give the animals to our poor people எண்டும் சொல்லும்
தேங்காய அநியாயமாக்காம ஏழைகளுக்கு கொடு என்றும் சொல்லும்

மனிதம் மறந்த உனக்கெல்லாம் இது விளங்கவே போகுது.... Poor guys

உன்னைய மாதிரி உன்ட தாத்தா காலத்து ‌முட்டாள் வேலையை, ஏன் என்று கேள்வி கேக்காமல் கீறுப்பட்ட ரெக்கோட் (mp3 என்டால் உனக்கு விளங்காது) மாதிரி செய்ய மாட்டான் நீ செய்தெடுத்த உன்ட வாரிசு.....You old guys need some fresh air.இளசு பிள்ளையாருக்கு cosmetics operation செய்து.. diet போட்டு, exercise பழக்கி சூர்யாவின்ட six pack வயிறு மாதிரி ஆக்கி, trend பழக்கி They will make him look sexy (இந்த sexy என்ற சொல்லின் அர்த்தம் வேறு ஹி ..ஹி)

உங்க பாருங்கோ..... sexy எண்ட சொல் கேட்டு கோயிலில தூங்கி வழிந்த பழசுகளெல்லாம் எழும்பி இருக்கிறதை.. அய்யோ..

என்னது... பிள்ளையார சூர்யா மாதிரி sexy ஆக்கின மாதிரி சரஸ்வதியையும் நயன்தாரா மாதிரி உடுக்கச் சொல்லுறதோ?.....டேய் எடுங்கடா அந்த கத்திய.... bloody hell.
உந்த ரசன மட்டும் உங்ளிட்ட இருக்கு...

You know what? Young guys are going to start gymnastic classes at the temple.

டேய் யாராவது அந்த பழசின்ட செவிட்டு மெசின ஓன் பண்ணி விடுங்கோ.... சனியன், நான் class என்டத glass என்டு நினைத்து லைன்ல நிக்க எழும்புது

கொஞ்சம் பொறு....
இன்னொன்டு gym தேவையோ எண்டு கேக்குது? பின்ன ... பேத்தை மாதிரி வண்டியும், ரெண்டு படி ஏறினா இடுப்பை பிடித்துக் கொண்டு, ஓடிக் களைத்த குதிரை மாதிரி புஸ் புஸ் எண்டு மூச்சு விடுறதும், பத்து ஆஸ்பத்திரியில இருக்கிற எல்லா வருத்தங்களையும் ஒரு ஆளே வைத்திருக்கிறதும் யார்? அவங்களே? Seniors please don't ask silly questions.

Can you dance ருத்ரதாண்டவம் as lord Shiva, just for olny one minutes?.....only for just one minute? we might need an ambulance.. and ten doctors for you

கோயில் புக்கைய வயிறு முட்ட திண்டுட்டு பின்பக்கம் போய் diabetes குளிசை போடுறது இளசுகளில்லை.

We need healthy food
Shall we make some fresh smoothies? என்பான் அவன்

திருவிழா முடிய கோயில உன்னை மாதிரி பொதுக் கக்கூசாக மாற்றி வைக்க மாட்டான்
வடிவா ப்ளான் பண்ணி We need to be clean and save the environment என்பான்
உனக்கு தெரிந்த சேவ்....காசு மட்டுமாய் தான் இருக்கும்.. Oh god please help these guys

உனக்கும், உன்ட தர்மகர்த்தாவுக்கும், ஜால்ரா போடுற கூட்டத்துக்கும் சுய விமர்சனம் என்று என்று டமில்ல ஒரு சொல்லு இருக்கென்று தெரியுமோ?.... ஆனா I went to Oxford university in UK in 1960s என்று புழுத்துப் போன சுயபுராணம் படிப்பீங்கள்...Hey man! learn some self-criticism.

மற்றப் பக்கத்தில விட்டுப்பார்

பிழைகள் உணர்ந்து, திருந்தி, மன்னித்து, கை கோர்த்து நடப்பான்... (உங்களுக்கு மன்னிக்கவோ, கைகோர்க்கவோ தெரியாதே)

இன்டர் நெட்டில் வாதப் போர் நடாத்தி, கருத்துக் கேட்டு, எழுதி, பகிர்ந்து, அலசி ஆராய்ந்து Fasebook, Twitter என்று போய்....

வேண்டாம் உதெல்லாம் உங்களுக்கு விளங்காது.......... Come and visit your youngsters' world

என்ன ஒவ்வொரு நாளும் கட்டாயம் பஜனை நடக்குதோ?
எத்தன பழசுகள், எத்தன இளசுகள் அங்க இருக்கினம்?
ஓம்... ஓம்......... 15 பழசு மட்டுமோ..ஓ.கே

அமைதியான வாழ்வு, குடும்பம், தாம்பத்யம் பற்றி கதைக்கக் கூடாதோ கோயிலில? Then, how was lord Shiva able to produce two kids? Answer me please..

இன்னமும் ராமர் காட்டுக்கு போனார்.... ராவணன் கடத்தீட்டுப் போனான் என்டல்லோ கதைக்கிறீங்க.

இளசுகள் ராவணனைப் பார்த்து சிரிக்குதுகள்... buddy, see this ten head graphic man....எண்டு சொல்லி சிரிக்குதுகள்...ராவணன் என்ன software பாவிக்கிறார் என்று உன்ட மகன் இல்ல உன்ட கொள்ளுப் பேரன் கேக்கிறான்? பதில் சொல்லன்டா பழசு...Do you have a முட்டை in your mouth?

ஏதும் புதுசா செய்யமாட்டீங்களே கோயிலில?... உங்களால ஏலாது எண்டு சொல்லுங்கோ... accept it ..guys

ஊருக்குள்ள பாருங்க எத்தனை பிரச்சனை எண்டு. நீங்க என்ன செய்யுறீங்க சமுதாய வளர்ச்சிக்கு? ஆனா நாங்க கோயிலுக்கு வரணும், உங்கட உண்டியல நிரப்போணும்...bloody hell

என்ன....வாய மூடோ?
கனக்கக் கதைக்கிறனோ?
I hope "that buffollow god" with a rope in his hands ..I mean எமன் should come now

Please listen what your young bloods want to do

கோயிலும் சமூகமும் என ஆய்வு செய்வான்
மதம் விளக்குவான்.. (உன் மதம் அடக்குவான்).மனிதம் பேசுவான்
குடும்பம், தாம்பத்யம் பற்றி விளக்கி, யதார்த்தம் பேசி வெளிச்சம் தருவான்

I know that you can't tolerate this
Sorry buddy
But we don't care

At last

(ப‌ழசுகளுக்கு)
Give way for youngsters, unless சைவம் செத்துப் போகும் கெதியில

.