வெறிகாரர்களும், வெறிகாறிகளும் ஒரு கதைசொல்லியும்

நானும் எத்தனையோ குடிகாரர்கள், வெறிகாரர்கள், வெறிகாறிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன்.

1980ல் செங்கலடியில் முதலாவது அனுபவம் கிடைத்தது. அன்று அந்த நண்பன் குடித்தது பிளேன் டீ நிறத்தில் இருந்த தென்னஞ்சாராயம்.  ஆனால் எடுத்த வாந்தியோ ஈஸ்மன்கலர் சித்திரமாய் இருந்தது.

பின்பு 1986 இல்  இந்தியாவில் இரண்டு, முன்று புதிய குடிகாரர்களுடன் தினமும் இரவில் மொட்டைமாடியில் பெரும்பாடுபட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவன் எனது மடியில் படுத்திருந்தே குடித்தான். சிரித்தான். காதலில் உருகினான், அழுதான். வாந்தியெடுத்தான். நான் தினமும்  அவனையும் கழுவி, மொட்டைமாடியையும் கழுவிய நாட்கள் அவை.

பின்பு நோர்வே வந்தபின்னும் வெறிகார்களுக்கும் எனக்குமான உறவு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறது. போத்தலும் கிளாசும் போன்று. 

எத்தனையோ இம்சையரசர்களை சந்தித்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். மணிக்கணக்காக அலட்டல் கதைகளை  கேட்டுமிருக்கிறேன். வாந்திகளை சுத்தப்படுத்தி, தலைக்கு தேசிக்காய் தேய்த்து குளிப்பாட்டியுமிருக்கிறேன்.

தங்களை TMS, பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் என்று நினைத்த கழுதைகளின் பாட்டுக்கச்சேரிகளை எனது விதிய‌ை நொந்தபடியே கேட்டிருக்கிறேன்.

சோமபானம் தந்த வீரத்தால் போலீசுக்குச் சென்றவர்களை மீட்டு அழைத்துவந்திருக்கிறேன். அந்த வீரர்களின் அழகிய ராட்சசிகள் உண்மையான ராட்சசிகளாகமாறியதையும் கண்டிருக்கிறேன்.

கடும் பனிக்காலத்தில் சாரத்தைக் (கைலி) களற்றி காது குளிர்கிறது என்பதனால் தலையில் சுற்றியபடியே தெருவில் அழகிய அங்கங்கள் ஆட ஆட நடந்த பெருமனிதர்களோடும் பழகியிருக்கிறேன்.

ஒரு மாலைப்பொழுதில் 99 பெண்களுக்கு முத்தமிடடுவிட்டேன் என்று கூறி, பினபு 100 பெண்ணைத் தேடித்திரிந்தவரை சமாளித்து வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறேன்.

ஒரே ஒரு விஸ்க்கிப்போத்தலால் ஈழத்தின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்ட பெரும் அரசியல்வாதிகளையும் சந்திக்கக்கிடைத்திருக்கிறது.

குடியும் குடித்தனமுமாய் இருந்து போய்ச்சேர்ந்த நண்பனை  சுடுகாடுவரை அழைத்தும்போய் அவன் எரிந்துருகியதையும் கண்டுமிருக்கிறேன்.

ஆனால், நேற்று ஒருவர் சற்று பதத்தில் இருந்துபோது காட்டிய கூத்து கொஞ்ச நஞ்சமல்ல.

நேற்றைய மனிதர் என்னை 
கடித்துக் குதறி,
சப்பி,
மென்று,
தின்று,
குற்றுயிராக்கிவிட்டார்.

என்ட ஒஸ்லோ முருகன் சத்தியமாகச் சொல்கிறேன்

நேற்றைய மனிதர்போன்று எவரையும் நான் சந்தித்ததில்லை. இன்று காலை எழும்பியபோது காது வலித்தது, தலையணையில் சிவப்பாய் ஏதோ இருந்தது. ரத்தமாய் இருக்குமோ?

அல்ப்பமான ஒரு கிளாஸ் பழரசத்தைக் குடித்துவிட்டு இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுவதெல்லாம் அநியாயம்.  குடிகாரர்களின் சரித்திரத்துக்கே இழுக்கு. அதுவும் ஒரு தொலைபேசியினூடாக இரண்டரை மணிநேரமாக  இந்த அழகான அப்பாவியை இம்சைப்படுத்துவதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம்.

மறுபிறவியல் ஒரு சொட்டு சோபானமும் கிடைக்காதிருப்பதாக என்று அவரை நான் சபிக்கிறேன்.

#நண்பேன்டா!

ராசு அன்டி - நினைவுக் குறிப்புகள்


இன்று காலை விமானநிலையத்தினுள் புகுந்து கொண்டபின்புதான் எனது தொலைபேசியை வாகனத்தினுள் மறந்துவிட்டிருப்பதை உணர்ந்துகொண்டேன்.

அது ஒரு புதுமையான ஆனால் பயங்கர அனுபவம். இன்னும் 3 நாட்களுக்கு எனக்கு தொலைபேசி இருக்காது. எதுவித தொடர்பிலக்கங்களும் என் நினைவில் இல்லை, அம்மாவுடையதைத் தவிர்த்து.

அத்துடன் எனது தொலைபேசியின் உறையினுளே எனது வங்கி அட்டையும் உள்ளதை நினைத்துப் பார்த்த போது மனது சற்றே நடுங்கத்தான் செய்தது. ஒரு பிச்சைக்காரனின் மனநிலையில் நான் இருந்தேன். பெருவெளியில் தனித்து  நிற்கும் பயம் போன்றதொரு உணர்வு மெதுவே எனக்குள் ஊறத்தொடங்கியது. நெஞ்சு அடித்துக்கொண்டது. ஒருவித அசௌகரீயத்தை உணர்ந்தேன்.  பாதுப்பற்றது போன்றதான உணர்வு அதிகரித்தது.

கையில் சிறிது பணம் இருந்தது. பயனத்தை ரத்துச்செய்துவிட்டு அடுத்த விமானத்தில் புறப்படுவோமா என்று சிந்தித்தேன். சிலவேளை அவ்விமானத்தில் இடம் கிடைக்கவில்லை என்றால், அல்லது பயணச்சீட்டின் விலை பல படமடங்கு அதிகமாக இருந்தால் என்று சிந்தனையோடியது.

நாளை எனது இளையமகளுக்கு பிறந்தநாள். கட்டாயமாக அவளைப் பார்க்க விருப்புகிறேன். பல வருடங்கள் அவள் என்னுடன் வாழாவிட்டாலும்  இன்றுவரை அவளின் பிறந்தநாளன்று அவளைச் சந்திக்க கிடைத்திருக்கிறது. இம்முறையும் நான் அதற்காகவே புறப்பட்டேன்.மனதைத் திடப்படுத்திக்கொண்டேன். பயணிப்பது என்று முடிவு செய்து, விமானத்தில் ஏறி லண்டன் வரும்வரை என்னை மறந்து தூங்கிப்போனேன். நல்லவர்கள் செல்லுமிடமெல்லாம் மழைபெய்கிறது என்கிறார்கள். லண்டனில்  நான் இறங்கியபோது மழை பெய்யவில்லை ஆனால்  துறிக்கொண்டிருந்தது.

லண்டனில் இறங்கியதும் நோர்வேஜியப்பணத்தை கொடுத்து இங்கிலாந்து பணத்தை மாற்றிக்கொண்டபோதுதான் உணர்ந்தேன் எனது கையில் இருக்கும் பணத்தின் அளவை. இதற்கு முன் இந்தளவு குறைந்த அளவு பணத்துடன் என்றும் நான் பயணித்ததில்லை. எப்போதும் வங்கியில் பாவிக்கும் மட்டை அட்டை இருப்பாதால் பயம் இருந்ததில்லை, முன்பு.

நேற்று மாலை அம்மா, தொலைபேசியில் ”ராசா … ராசுவின் கணவர் இறந்துவிட்டார். நீ லண்டன்போகும் போது  ராசுவை எனக்காக சந்திக்கவேண்டும்” என்றார். தாய் சொல்லல்லவா, எனவே தட்டமுடியாது. சரி என்றேன். அப்போதுதான், அம்மாவின் நெருங்கிய தோழி ராசு அன்டி தானே எனக்கு உலகப்புகழ்பெற்ற சஞ்சயன் என்று பெயரை வைத்தவர் என்பது நினைவுக்கு வந்தது.

பாரதப்போரில்தான் சஞ்சயன் இருந்தான் என்று நேற்று மாலைவரை நினைத்திருந்தேன். நேற்றைய இலக்கியப் இலக்கியப்பூங்கால் பேராசிரியர் ரகுபதி, சிலப்பதிகாரத்திலும் ஒரு சஞ்சயன் இருந்தான் என்றும், அவன் மன்னிடம் வந்தபோது பல நூறு பெண்கள், நூற்றுக்கணக்கான விகடகவிகள், ஆயிரக்கணக்கான போர்வீர்ர்களுடன் வந்தான் என்று கூறி எனது பெயரின் மகிமையை நோர்வேயின் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்கூறிக்கொண்டிருந்தார். நான்  நெஞ்சை நிமிர்த்தி உட்கார்திருந்தபடியே அவரின் விளக்கங்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.

இரயில் டிக்கட் எடுத்தபோது நான் எதிர்பார்க்காத விலைகேட்டார்கள். திடுக்கிட்டு இவ்வளவு விலையா என்றேன். ஆம் என்று கூறி எனது கையில் இருந்த பணத்தை லபக் என்று உருவி பையில் போட்டுக்கொண்டார் பயணச்சீட்டுவழங்கும் அதிகாரி.

எனது மறதியை திட்டியபடியே புகையிரதத்தில்,சுரங்க ரயிலில், மீண்டும் புகையிரத்தில் என்று ஏறி இறங்கி இறுதியாக ஒரு வாடகை மோட்டார்வாகனத்திலும் ஏறி இறங்கியபோது அம்மாவின் தோழியியான ராசு அன்டியின் வீடு என்முன்னே நின்றிருந்தது.

ராசுஅன்டி பற்றிய  நினைவுகள் 70களின் நடுப்பகுதியில் இருந்தே ஆரம்பிக்கின்றன. கொழும்பு வெள்ளவத்தையில் இருந்தது அவர் வீடு. அது பெரிய வீடு. மாமா ஒரு பெரிய வைத்தியர். சாதாரண  வைத்தியர் அல்ல. மனநலவைத்தியர். அவரது வீட்டைப்போன்று மாமாவும் பெரியவர். அவர்களிடம் ஒரு வோல்க்வெகன் மோட்டார் வாகனம் இருந்தது. அதை கரோலிஸ் என்னும் சிங்களவர் ஓட்டுவார். அவர் அதை ஓட்டாத நேரங்களில் அதை கழுவிக்கொண்டிருப்பார். நாங்கள் அவரை கரோலிஸ் மாமா என்று அழைத்தோம். எங்களுக்கு அவ்வபோது ஜஸ்சொக் வாங்கித்தருவார் அவர்.

ராசு அன்டியின் வீட்டில் சிங்கம் போல ஒரு நாய் இருந்தது. அதன் கூடு ‌கொழும்பு மிருகக்காட்சிச்சாலையில் உள்ள சிங்கத்தின் கூட்டைப்போன்று மிகப்பெரியது. அந்த நாய்க்கு ராசு அன்டி ”சிக்கோ” என்று பெயர் வைத்திருந்தார். அது குரைத்தால் நெஞ்சு அதிரும். நான் கூட்டுக்கு சற்றுத் தள்ளி இருந்து அதற்று ”நெளிப்பு” காட்டுவேன். அப்போது அது அதிகமாகக் குரைக்கும்.  சிக்கோவைப் போன்றே தமிழ்பட நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரன் படங்களில் எலும்பு சப்புவார் என்று எனக்கு பின்புதான் தெரியவந்தது.

”சிக்கோ” என்னைக் கண்டால் மிகப் பலமாய் குரைத்து,  தனது கூட்டில் காலைவைத்தபடியே குரைக்கும். அது தமிழ்ப்படங்களில் நம்பியார் வரும் காட்சிகளைவிட மிகப்பயங்கரமாக இருக்கும். ராசு அன்டி ”சிக்கோ” என்று அதட்டினால், அது நாய் போல வாலைஆட்டும். அன்டியுடன் நான் சிக்கோவுக்கு உணவுவைப்பேன். அது வாலைஆட்டியபடியே, குனிந்து  சாப்பாட்டாடில் மூழ்கியிருக்கும்போது அதன் முதுகை டக் என்று தடவிவிட்டு ராசு அன்டியின் பின்னால் நின்றுகொள்வேன்.

ராசு அன்டியின் வீட்டில்தான் நான் முதன் முதலில் இரண்டு பெரிய வட்டங்களில் நாடா சுற்றியிருக்கு‌ம் அந்த டேப்ரெக்கொர்டர்ஜ கண்டேன். அன்டி அதில் பக்திப்பாடல் போடுவார். அவர்கள் வீட்டிலேயே கசட் பிளேயர், தொலைக்காட்சிப்பொட்டி ஆகியவற்றை முதன் முதலாகக் கண்டேன். ராசு அன்டி என்னை பேசவைத்து ஒலிப்பதிவு செய்து போட்டுக்காட்டினார். வெட்கமாக இருந்தது எனது இனிமையாக குரலைக்கேட்டபோது.

மாமாவின் அப்பாவும் அங்குதான் வசித்தார். நாம் அவரை பாட்டா என்று அழைத்தோம். அவர் ஒரு பெரிய கணிதமேதையாக இருந்தவர் என்பார்கள். எப்போதும் சாய்மனைக்கதிரையில் உட்கார்ந்திருந்தபடியே எதையாவது எழுதிக்கொண்டிருப்பார். வெள்ளைத்தும்பு போன்றிருக்கும் அவரின் தலைமயிரும் தாடியும். அவருக்கும் எறும்புக்கும் நடைப்போட்டி வைத்தால் எறும்பு வென்றுவிடும் அளவுக்கு மிக வேகமாக நடப்பார் பாட்டா.

அவரிடம் ஒரு அட்டவணை இருந்தது. அது வட்டமாக இருக்கும். அதில் ஒரு பெரிய வட்டமும், சிறிய வட்டமும் இருந்தது. பிறந்த திகதியை அந்த அட்டவணையில் உள்ள சக்கரத்தில் குறிப்பிடும்போது அந்த அட்டவனை நீங்கள் வாரத்தில் எந்த நாளில் பிறந்தீர்கள் என்பதைக் காட்டும். அதைவைத்தே தாத்தா வீட்டுக்கு வரும் எல்லோருக்கும் அவர்கள் வாரத்தில் எந்த நாளில் பிறந்தார்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். அவரிடம் இருந்து அட்டவணையைக் கேட்டேன். மனிதர் அசையவே இல்லை.

ராசுஅன்டி அழகானவர். மிக மிக அழகானவர். நீண்ட தலைமுடி இருந்தது அவருக்கு. மாமாவும் அன்டியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களுக்கு குழந்தை கிடைத்தபோது அவர்கள் திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்திருந்தன. ராமாயணத்தில் வரும் படகோட்டித் தலைவனின் பெயரை தனது மகனுக்கு வைத்தார் ஆன்டி. எனது பெயரையும், மகளின் பெயரையும் வைத்துப்பார்க்கும் போது  ராசுஅன்டி இலக்கியங்களில் ஆர்வமுடையவர் என்று எண்ணத்தோன்றுகிறது.

ராசுஅன்டி கலைநயம் மிக்கவர். அவர் வீடு மிக மிக அழகாக இருக்கும். சமயலறையில் குளிர்சாதனப்பெட்டி இருந்தது. பல விதமான சமயலறைச் சாதனங்கள் இருந்தன. பல நாடுகளின் அலங்காரப் பொருட்கள் அவர் வீட்டில் இருந்தது. விலையுர்ந்த இருக்கைகள் இருந்தன.

1980களுக்குப் பின் ராசுஅன்டியை நான் ஒரே ஒரு தடவை அதுவும் 18 – 19 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் சந்திது்திருந்தேன். அப்போது அன்டி முன்பைப் போலவே அழகாக இருந்தார்.

வாடகை வாகனத்தில் இருந்து இறங்கிக்கொண்டேன். ராசு அன்டியின் வீட்டு ஜன்னலின் ஊடாக அவரின் வீட்டு மேசையில் இருந்த அனுதாப அட்டைகள் தெரிந்தன. அன்டியின் வீட்டில் அழைப்பு இருக்கவில்லை. ஒரு கைபிடி இருந்தது. அதனைத் தட்டினேன். பதில் இல்லை.

மீண்டும் தட்டினேன். எனது தலையை சரிசெய்துகொண்டேன். உடையை சீர்செய்துகொண்டேன்.  எனக்குள் ஒரு குழந்தையின் குதூகலம் வந்திருந்தது. ராசுஅன்டியுடன் அன்டியின் அக்காவும் இருப்பதாய் அம்மா நேற்று கூறியிந்தார். அன்டியின் அக்கா கனடாவில் இருந்து மரணவீட்டிற்காக வந்திருந்தார்.

கதவருகே யாரோ நடமாடுவது தெரிந்தது. மெதுவாய் கதவினை ராசுஅன்டி திறந்தார்.  என்னைப் பார்த்து நீயார்? என்று கேட்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். வா வா என்றார். எனக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது.

என்னைத்தெரியுமா என்றேன். ராசு அன்டி சிரித்தார். உள்ளே வா என்றார்.
உள்ளே நுளைந்தபோது அன்டியின் அக்கா நெற்றியில் கையைவைத்து கண்ணைச்சுருக்கி  ”யார் என்றார்”. அவரைப்பார்த்து தெரியுமா என்னை என்றேன், அவராவது தெரியாது என்பார் என்ற நப்பாசையில்.
அம்மாவின் சிரிப்பு அப்படியே இருக்கிறதே, எப்படி இருக்கிறாய் சஞ்சயன் என்றார் ராசுஅன்டியின் அக்கா.
 
ராசுஅன்டியின் அக்காவும், ராசுஅன்டியும் வெள்ளவத்தையில் அருகருகே குடியிருந்தனர். அந்நாட்களில் ராசுஅன்டியின் அக்காவின் கணவருடன் ராசுஆன்டியின் அக்காவாகிய அன்டிக்கு முறுகல்நிலை இருந்தது. மாமா குடியும் குடித்தனமுமாயும் சற்றே குதிரையில் பந்தயம் கட்டுபவராயும் இருந்தார். இதுதான் பிரச்சனையின் சாரம். மாமாவுடன் அன்டி கதைப்பதில்லை. ஆனால் நேரத்துக்கு சாப்பாடு மேசையில் இருக்கும். மாமா  ஜாலியான மனிதர். சாப்பாட்டுவிடயத்தில்  ஆன்டியுடன் கோபிப்பதில்லை. வஞ்சகம் இல்லாது அன்டியின் சாப்பாட்டை ஒருகைபார்ப்பார். பின்பு மீண்டும் பத்திரிகையுடன் ஒதுங்கிவிடுவார். மாலையில் தேனீர் மேசையில் இருக்கும். மாமா ராஜவாழ்க்கை வாழ்ந்தார். அன்டி எப்போதும் ஓடியாடி வேலைசெய்துகொண்டிருப்பார். அவருக்கு ஆஸ்துமா இருந்தது போலான நினைவிருக்கிறது.

மாமாவுக்கும் அன்டிக்கும் இரண்டு பையன்கள். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். நான் அங்கு சென்றால் அவர்களின் வீட்டுக்கு அருகே ரமணண் என்று ஒரு பையன் இருந்தான். நாம் இருவரும் அருகில் உள்ளவர்களை சேர்த்து கிறிக்கட் விளையாடுவோம்
.
ஒரு நாள் நான் அடித்த பந்து அன்டியின் பக்கத்துவீட்டில் உள்ள கூரையில் தங்கிவிட்டது. அதை எடுப்பதற்காக கூரையில் ஏறியபோது அருகில் இருந்த வீட்டுப் பெண் கூச்சலிட்டு ஊரைக்கூட்டி, ஓடு உடைவதற்கு நான்தான் காரணம் என்றார்.  மாமாதான்  அவருடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எம்மை மீட்டார். அதற்கு கப்பமாக நாங்கள் பந்துவீச மணிக்கணக்காய் மாமா அவுட் ஆகாமலே சில நாட்கள் கிறிக்கட் விளையாடினார். இந்த ஆன்டியின் வீட்டில்தான் நான் விளாம்பழ ஜாம்முடன் பாண் சாப்பிடப்பழகினேன். இன்றும் அப்பழக்கம் இருக்கிறது.

ராசுஅன்டியின் வீட்டின்னுள்ளே சென்று உட்கார்ந்துகொண்டேன். ராசு அன்டி என்முன்னால் உட்கார்ந்திருந்தார். அவரை முதுமையும், நோய்மையும் உருக்குலைந்திருந்தது. முகம் தோல்காய்ந்து சுருங்கிய பேரீச்சம்பழம் போன்று சுருங்கியிருந்தது. கண்கள் குழிவிழுந்திருந்தன. ஆனால் ராசு அன்டியின் குரலில் வசீரம் குறையவில்லை. ராசு அன்டி கூனத்தொடங்கியிருந்தார். தலைமுடி உதிர்ந்திருந்தது. மிக மிக மெதுவாய் நடந்தார். அடிக்கடி உட்காந்துகொண்டார்.

ராசுஅன்டியின் அக்கா அப்போதும் நாம் இருந்த அறைக்கதவை கடந்துவந்திருக்கவில்லை.  அன்றைய காலத்தில் பாட்டா நடந்து திரிந்த வேகத்தில் இன்று அன்டி நடந்து கொண்டிருந்தார்.

மாமாவின் இறுதிக்காலங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ராசுஅன்டி அடிக்கடி எழுந்துசென்று மாமாவின் படத்துக்கு முன்னாலிருந்து விளக்கில் எண்ணை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார்.

ராசுஅன்டியின் அக்காவின் ஞாபகசக்தி அவரைவிட்டு விடைபெற்றுக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. 86 வயதாகிறது அவருக்கு. எங்கே இருக்கிறாய் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார். இடையிடையே அம்மா, அப்பா, எங்கள் குடும்பத்தினர் அவரின் நினைவில் வந்து திடீர் என்று மறைந்துபோயினார்கள். நானும் இயன்றவரையில் அவரின் நினைவுக்கு நினைவூட்ட முயற்சித்துக்கொண்டிருந்தேன். எனது அம்மம்மாவின் அக்காவின் மகன் ஒருவர் 70 களில் இங்கிலாந்து வந்து, ஊரைமறந்துபோனவர். அவருடன் எனது அம்மாவுக்கு மட்டும் தொடர்புண்டு. அவர் இங்கிலாந்து அரச பரம்பரை குடும்பத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்திருப்பதாக ஒரு கதையுண்டு. எல்லோரும் அதை நம்புகிறார்கள். என்னைத் தவிர.

ராஜபரம்பரையில் உள்ள எனது ராஜகம்பீர மாமாவை நான் இன்னும் சந்தித்ததில்லை. அம்மா நான் அவரைச் சந்திப்பதை விரும்பவில்லை. அன்றொருநாள் ”நீ அவனிடம் விசர்க்கேள்வி கேட்பாய்”, அவன் அரச குடும்பத்தை சேர்ந்தன். அவனுக்கு அது பிடிக்காதுபோகலாம் என்றார். நான் அவரைச் சந்திக்கும் பொன்நாளுக்காய் காத்திருக்கிறேன்.

இந்த ராஜபரம்பரை மாமாவை ராசுஅன்டியின் அக்காவுக்கு நினைவிருந்தது. அவன் இப்போ அரசகுடும்பத்தவன் என்றார். பல்லைக் கடித்துக்கொண்டு ஓம் ஓம் அன்டி அவர் அரச பரம்பரை என்றால் என்ட அம்மாவும், எனது சகோதர சகோதரிகளும், நானும் கூட அரச பரம்பரை என்றேன் எள்ளலான குரலில். அன்டி  வார்த்தைஏதும் பேசாது தலையை ஆட்டி ‌ஆட்டி அதை ஆமோதித்தார். அவருக்கு  என் எள்ளல் புரியவில்லை.

அவனை, உனது அம்மா இங்கிலாந்து வந்த போது போய் சந்தத்தபோது ”சோதி அக்கா, என்னைப் பார்க்க வந்தீர்களே” என்று பெரிதாய் அழுதானாமே என்றார். ஆன்டி. நான் வார்த்தைஏதும் பேசாது தலையை ஆட்டி ‌ஆட்டி அதை ஆமோதித்தேன்.

திடீர் என்று ”நீ எங்கே இருக்கிறாய்” என்றார், மறுபடியும். இம்முறை ராசுஅன்டிக்கு கோபம் வந்தது. ” அக்கா, உனக்கு மறதி கூடீட்டுது” என்றார். நான் நோர்வேயில் என்றேன்.

அன்டி இருமினார். மீண்டும் மீண்டும் இருமினார். ராசு அன்டி ”தண்ணீர் குடி” என்றார். அன்டி தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து தண்ணீர்குடிக்கச் சென்றவர், குசினியில் இருந்தபடியே ” எங்க என்னுடைய செருப்பு” என்று கூவவது கேட்டது. ராசு அன்டி தலையை ஆட்டியபடியே அவரை நோக்கி நடந்தார். அப்போதுதான் கவனித்தேன் அன்டியின் ஒரு செருப்பு, ஆன்டி உட்காந்திருந்த இடத்தில் இருப்பதை. அதை எடுத்துப்போய் கொடுத்தேன். எங்கே இருந்தது என்றார். பதில் சொன்னேன். ”வயது பொயிட்டுதுடா” என்றார். எனது வயதான காலத்தை நினைத்துப் பார்த்தேன். குலை நடுங்கியது.

ராசுஅன்டியிடம் கரோலிஸ் மாமாவைப்பற்றிக்கேட்டேன். உனக்கு அவரை நினைவிருக்கிறதா என்றார். அவர் கெகாலையில் இருப்பதாகச் சென்னார். மாமாவின் மரணம் பற்றி அறிவித்தபோது அழுதாராம் என்றார்.
முதுமை ராசுஅன்டியிடம் மட்டும்  குடிவந்திருக்கவில்லை, அவரது வீட்டிலும் ஒரு வித முதுமை தெரிந்தது. வீட்டில் இருந்த பொருட்கள், படங்கள், கலைப்பொருட்கள், தளபாடங்கள் அனைத்திலும் முதுமை தெரிந்தது. வீட்டின் சுவர்கள்கூட முதுமையின் மொழியினை பேசிக்கொண்டிருந்தன.
சுவரில் ஒரு கறுப்புவெள்ளை படததில் மிக இளமையாக ராசு அன்டியும், மாமாவும் சிரித்துக்கொண்டிருந்தனர். ஏறாளமாக புகைப்பட ஆல்பங்கள் தூசுபடிந்துபோய் கிடந்தன. சுவற்றில் பன்னிரெண்டு ராசிகளின் படங்களும் ஒரு பெரிய நெசவுவேலைப்பாட்டில் நெசவுசெய்யப்பட்டிருந்தது. பழைய புத்தகங்கள் புத்தகஅலுமாரியில் இரைந்து கிடந்தன. இதில் உள்ள ஏதாவது தமிழ்ப் புத்தகங்கள் நூலக நிறுவனத்திற்கு பயன்படுமா என்று சிந்தனையோடிதையும் மறைப்பதற்கில்லை.

ராசுஅன்டி சாப்பிடு என்றார். மறுக்கமுடியவில்லை. புட்டும் கத்திரிக்காய் பெரித்துக் குழம்பும், பருப்பும் ருசியாக இருந்தது. உணவினை சூடுகாட்டும் இயந்திரத்துக்கருகில் சாயிபாபாவின் படம் இருந்தது. நான் அவரைப்பார்த்தேன். அவரோ என்னை பார்க்க விரும்பாதது போன்று, எதுவும் பேசாது எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். ராசு அன்டி சாயிபாபா பக்தை என்பதை புரிந்துகொண்டேன்.  வயதானவர்களை கலாப்பது அழகல்ல என்பதால் வாய்நுனிவரை வந்ததை அடக்கிக்கொண்டேன்.

இதற்கிடையில் ராசுஅன்டியின் அக்கா மேலும் நாலைந்து தடவைகள் நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டுவிட்டார்.  ராசுஅன்டியும் எங்களது சம்பாசனையில் கலந்துகொள்ள ராசுஅன்டியின் அக்கா ”உனது குழந்தைகள், மனைவி எப்படி இருக்கிறார்கள்?” என்று நான் விரும்பாத ஒரு சிக்கலான கேள்வியை எடுத்துப்போட்டார்.

நான் தனியே வாழ்வதையும், அவர்கள் வேறு நாட்டில் வாழ்வதையும் விளக்கிக்கூறுவது சிக்கலானது என்பதால் சிரித்து சமாளிப்போம் என்று நினைத்தேன். எனது சிரிப்பில் ராசுஅன்டி சமாதானமாகியது போலிருந்தது. ஆனால் ராசு அன்டியின் அக்கா மீண்டும் அதே கேள்வியை கேட்டார்.
உனது மூளையின் ஒரு பகுதி அதிவேகக் கணிணியின் வேகத்தில் பதில்களை தயா‌ரிக்க இன்னொரு பகுதி அப் பொய்கள் பிடிபடுமா என்பதை கணித்துக்கொண்டிருந்தன. இவர்கள் நான் சென்றதும் அம்மாவுடன் உரையாடுவார்கள். உண்மையை சொன்னால் பலருக்கு மனவருத்தம். உடனே ஒரு உண்மையான பொய்யை மனக் கணிணி கணித்துச் சொல்லியது.
அவர்கள் இருக்கிறார்கள். சுகமாக இருக்கிறார்கள். என்றேன். அப்போது தொலைபேசி மணியடித்தது. ராசுஅன்டி வெளியேசென்று தொலைபேசியில் பேசினார்.

நான் ராசுஅன்டியின் அக்காவுடன் நின்றிருந்தேன். அவரோ கேள்விகளை அடுக்கடுக்காக வீசிக்கொண்டிருந்தார்.  பிள்ளைகளின் பெயர், வயது, படிப்பு அவர்கள் வெள்ளையா கறுப்பா என்று குடைந்தபடி இருந்தார். நானும் சமாளித்துக்கொண்டிருந்தேன்.

திடீர் என அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றார். அவருக்கு பொய்சொல்வது மனதுக்கு சங்கடமாயிருந்ததால் அவர்கள் இங்குதான் இங்கிலாந்தில் அவர்களின் தாயாருடன் இருக்கிறார்கள் என்றேன். மனது அடுத்த கேள்வி என்னவாயிருக்கும் என்று அவரின் முகத்தைப்பார்த்தபடி இருந்தது.

ராசுஅன்டி மீண்டும் வந்து உட்கார்ந்துகொண்டார். நான் துலைந்தேன் இன்று, இவர்களுக்கு முழுக்கதையும் சொல்லவேண்டிய நிலை வரப்போகிறது என்பதால் உண்மைக்கதையை மனதுக்குள் பயங்கரமாய் எடிட் செய்துகொண்டிருந்தேன்.

ஆனால், ஒஸ்லோ முருகன் என்னைக் கைவிடவிடவில்லை. ராசுஅன்டியின் அக்கா எல்லாவற்றையும் மறந்துபோய் மீண்டும் எனது அரச பரம்பரை மாமாவை அம்மாவைக் கண்டதும் அழுத கதையை ஆரம்பித்தார். நானும் என்பாகத்துக்கு அரச பரம்பரையினர் அழக்கூடாதே என்று அள்ளிவிட்டுக்கொண்டிருந்தேன். அன்டி வேறு உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.

அன்டியின் மாமாவைப்பற்றி விசாரித்தேன். அவர் மூத்தோர் கவனிப்பகத்தில் ஜாலியாக இருப்பதாயும், அவருக்கு இரத்த அழுத்தம் இருப்பதால் அவர் உப்பு உண்ணுவதில்லை என்றும், ஆனால மிகவும் தேகாரோக்கியமாக இருப்பதாயும் கூறினார். மாமாவுக்கு எத்தனை வயது என்றேன். ”92 முடியுது” என்றார், அன்டி. ஏறத்தாள 35 – 40 வருடங்களுக்கு முன் அவுட் ஆக ஆக, ஆவுட் ஆகாமலேயே கிறிக்கட்விளையாடிய அவரது அட்டகாசம் நினைவுக்கு வந்தது. அவரை பார்க்கும் ஆசையும் ஏற்பட்டது.

இடையிடையே தொலைபேசியில் மாமாவின் மரணத்தை கேள்விப்பட்டவர்கள் தொடர்புகொண்டு உரையாடினார்கள். ராசுஅன்டியின் அக்கா  மேலும் இரண்டுமாதங்களுக்கு ராசுஅன்டியுடன் தங்கியிருப்போவதாகக் கூறினார். ராசுஅன்டியை நினைக்க பாவமாய் இருந்தது.
 
தொலைபேசி உரையாடல் முடிந்ததும் மாமாவின் படத்தினருகே சென்று விளக்கு எரிகிறதா என்று பார்த்தார், ராசுஅன்டி. என்னிடம் எண்ணைய் இருக்கிறதா என்று கேட்டு உறுதிசெய்துகொண்டார். நான் புறப்படவேண்டும், ஒரு வாடகை வண்டியை அழைத்துத்தாருங்கள் என்றேன். ராசுஅன்டி தொலைபேசியை நோக்கி நடந்தார். அவரின் அக்கா நூற்றி ஓராவது தடவையாக நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

வாடகை வண்டி வந்ததும் புறப்பட்டேன் ராசுஅன்டியின் அக்கா கதிரையில் இருந்தபடியே அணைத்து இரு கன்னத்திலும் முத்தமிட்டார். மனது ஏனோ கனத்தது. வாசலருகில் ராசு அன்டியும் அணைத்துமுத்தமிட்டார். திரும்பி ராசுஅன்டியின் அக்காவைப்பார்த்தேன். அவர் மெதுவாக கதிரையில் இருந்து எழும்பிக்கொண்டிருந்தார். இவர் வாசலுக்கு வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களாகுமாகையால் கையைக்காட்டி விடைபெற்றுக்கொண்டேன்.

லண்டனின் செல்வச்செளிப்பான குடியிருப்புப் பகுதியினூடாக வாடகை வண்டி ஓடிக்கொண்டிருந்தது. ராசு அன்டியின் வெள்ளவத்தைவீடு, மாமா, பாட்டா, ராசுஅன்டியின் மகன், கரோலிஸ்மாமா, ராசு அன்டியின் கார், சிக்கோ, மாமாவின் சமாதானப் பேச்சும், அவரின் அவுட் ஆடாகத கிறக்கட் ஆட்டமும், விளாம்பழ ஜாமும் என்று பல நினைவுகள் மனத்திரையில் கறுப்பு வெள்ளை நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தன.

சஞ்சயன் என்று பெயர்வைத்து என்னைப் பெருமைப்படுத்திய ராசு அன்டிக்கு இது சமர்ப்பணம்.
 
 இதை எழுதி இரண்டுநாட்களின்  பின்பான ஒரு காலைப்பொழுதில் அம்மா தொலைபேசினார். ”ராசா! தேவி அன்டி நேற்றிரவு காலமாகிவிட்டார்” என்று கூறியபோது, மெளனமாக இருப்பதைவிட வேறெதுவும் செய்யமுடியவில்லை.