வாய்ச்சொல் கோழைகளும், வாய்திறவா வீரர்களும்


ஒரு வாரத்திற்று முன்னான ஒரு மாலை, எனது வாகனத்தில், பயணித்துக்கொண்டிருந்தேன். வாகனத்தினுள் இருக்கும் வானொலி மெதுவாய் இயங்கிக்கொண்டிருந்தது. இலையுதிர்காலத்து இருட்டு ஊருக்குள் படிந்து‌போயிருக்க, மெது மழை தூறிக்கொண்டிருந்தது வெளியே. வானொலில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நோர்வேயில் உள்ள அனைத்து வேலைத்தளங்களிலும், சங்கங்கள், நண்பர்கள் நடாத்தும் ”நத்தார் வி‌ழாவைப்” பற்றி பேசிக் கொண்டிருந்தனர். (நோர்வேயில் இந்த விழா முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும்)

பலரும் விழாவைப்பற்றி புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தனர். ஒரு வயதான பெண் தனக்கு அப்படியான விழாக்களில் தற்போது ஈடுபாடில்லை என்று கூறினார். ஏன் என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தனக்கு வயதாகி விட்டது என்றும், அந்த விழாக்களுக்கு இளம் பெண்கள் அணிந்து வரும் ”குட்டைப்பாவாடை” இவ் வருடம் மிகவும் குட்டையாகிப் போயிருப்பது தனக்கு கவலையைத் தருகிறது  என்றார். பொறாமையாய் இருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன்.


அடுத்தடுத்து பலரையும் வானொலியில் பேட்டி கண்டனர். அனைவரும் அவ்விழாவினை மிகவும் விரும்புவதாகக் கூறினர். எனக்கும், இவ் விழாக்களில் பெருத்த விருப்பமுண்டு. இவ் விழாக்களின் போது ருசியான உணவு மட்டுமல்ல, அதனிலும் ருசியான பானங்கள் தொடக்கம் அழகான மனிதர்கள் வரை  அங்கிருப்பார்கள். ”வரம்புயர நீருயரும்” என்பது போல போதை ஏற ஏற விழா சிறப்புறும். அந்த குட்டைப்பாவைடை விடயமும் அப்படியாய் இருக்கக்கூடும்.

வானொலி நிகழ்ச்சி முடியுமுன் ஒரு வயதானவரை பேட்டி கண்டார்கள். அவருக்கு வயது 80. தனியே வாழ்கிறார். அவர் இப்படியான விழா ஒன்று நடைபெறுகிறது என்பதையே அறியாதிருந்தார் என்றார். வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளரால் அதை நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டார். வயதானவரோ ஒரே பதிலையே மீண்டும் மீண்டும் கூறினார்.

தொடந்து அவரை பேட்டிகண்ட போது அவர் கூறிய சில வார்த்தைகள் என்னை சிந்திக்கத்தூண்டின.
.
நான் தனிமையில் வாழும் மனிதன் என்றார். நாட்பது வருடங்கள் மாலுமியாக இருந்தார் என்றும், தனக்கு ஒரு  அழகான அன்பான மனைவி இருந்தார் என்றும் கூறினார். அத்துடன் அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அறியக்கிடைத்தது. ஆனால் மகள் தன்னிடம் வருவதில்லை என்றும், மனைவி இறந்துவிட்டார் என்றும் மிகவும் வருத்தத்துடன் கூறினார். கடந்த 20 ஆண்டுகளாக தான் தனியே வாழ்ந்து வருவதாயும், தனக்கு ஒரு நண்பர் ஏனும் இல்லை என்றும் கூறிய போது அவர் மீது பரிதாபமாய் இருந்தது எனக்கு.

தனிமை, கரையான்பூச்சிகளைப்‌ போல் பலரையும் எப்போதும் அரித்துக்கொண்டேயிருக்கிறது. தனிமை மட்டும் வாழ்ந்துகொண்டிருக்க  மனிதர்கள் மட்டும் அழிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒஸ்லோவில் ஒரு பாக்கிஸ்தானிய மனிதர் இருக்கிறார். அவர் வருடம்தோறும் ”தனிமையில்” வாழ்பவர்களுக்காக ஒரு மிகப் பெரிய நத்தார் விழாவை நடாத்துகிறார். பல நோர்வேஜியர்களும், நோர்வேஜிய பிரபலங்களும் அவரின் நத்தார் விழாவில் கலந்து கொண்டு, அங்கு  வந்திருக்கும் அனைவருடனுடம் குதூகலமாக பழகிப்போகின்றனர். ஒரு வருடம் நோர்வேயின் அரசகுடும்பத்தில் இருந்தும் சிலர் கலந்து கொண்டார்கள் என்றே நினைவிலிருக்கிறது.

நத்தார்கொண்டாட்டக் காலங்களும், அதற்கு முன்னைய காலங்களும் அதிக தனிமையை உணர்த்தக் கூடியவை என்பதை நானும் உணரந்திருக்கிறேன். எனது நண்பரான நோர்வேஜிய பாதிரியார் ஒருவர் வருடம் முழுவதும் ஒரு ”தொலைபேசி” திட்டமொன்றினை நடாத்திவருகிறார். அத் தொலைபேசிக்கு யாரும் தொடர்பு கொள்ளலாம், தமது பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளலாம். குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை பலர் தினமும் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். அவரிடத்தில் தினமும் 15 - 20 பேர் தொழில்புரிகின்றனர். 24 மணிநேரமும் அத் தொலைபேசி இயங்குகின்றது. அத் திட்டத்தில் தொழில் புரியும் அனைவரும் எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி இலவசமாகவே தொழில் புரிகிறார்கள். மற்றவரின் ரகசியங்கள் எங்கும் பதியப்படுவதில்லை. எவருடனும் பகிரப்படுவதில்லை. அவர்கள் இருவருடனேயே அவ்வுரையாடல் முடிந்துபோகிறது.

துன்பங்கள் பகிரப்படும் போது அவற்றின் உக்கிரம் பலமாய் குறைந்து போகிறது என்னும் வார்த்தைகள் உண்மையானவையே என்பதை பாதிரியாராகிய நண்பரின்  செயல் உணர்த்திநிற்கிறது.

தாய் தந்தையரின் சண்டைகள், குடி, வன்முறை, பாலியல் வன்முறை, வன்புணர்ச்சி, குடும்பச்சிக்கல்கள், நோய்மை, தனிமை இப்படி பல பிரச்சனைகளுடன் தினமும் பலர் தொலைபேசுகிறர்கள். காது கொடுத்து கேட்பதும், ஆறுதலாகப் பேசுவதும், அரச அலுவலகங்களின் தொடர்புகளை அவர்களுக்கு அறிவிப்பதுமே இவர்களது தொழிலாயாயிருக்கிறது. ஒரே மனிதருடன் நீங்கள் இரு நாட்கள் தொடர்ந்து பேசமுடியாது. தொலைபேசி இலக்கங்கள் இரகசியமாககப் பாதுகாக்கப்படுகின்றன. இப்படி பல வித பாதுகாப்புக்களுடன் பலருக்கும் அவர்களது வேதனையை கடந்து போக உதவுகிறார்கள்.

நான், ஆயுதங்களை விட வார்த்தைகளே கூர்மையானவை என்பதை  அண்மையில் மீண்டுமொருமுறை உணர்ந்து,  ”அவ் வேதனையை” கடந்த சில நாட்களாக  கடந்துகொண்டிருக்கிறேன். நண்பர்கள் சிலர் என்னை பேச அனுமதித்து, அமைதியாகவே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், இவர்கள் வீரர்கள. நானும் இவர்களுடன் பேசியதால் அமைதியடைந்துள்ளதாகவே உணர்கிறேன்.


மேற்கூறியவர்கள் போன்று மற்றவர்களை அரவணைக்கும் மனமுள்ள மனிதர்கள் மத்தியில் தான், சக மனிதனை, வார்த்தைகளாலும், கோழைத்தனமான செயல்களாலும், துன்புருத்தும் செயல்களாலும் ”உயிருடன் கொலைசெய்யும்” உறவினர்கள், நண்பர்கள் தொடக்கம் எதிரிகள் வரை நடமாடுகிறார்கள்.

ஜாக்கிரதையாக புதிய வருடத்தை கடந்து கொள்ளுங்கள் நண்பர்களே.. தோழர்களே.. தோழியர்களே!

ஒரு மனிதன், அவன் கட்டில், அவன் மனச்சாட்சி

சில நாட்களாகவே உடலும் உள்ளமும் கனத்துப்‌ போய் இருக்கின்றன. இது ஒன்றும் புதிதில்லை. பகலை விழுங்கிய பனிக்கால நாட்களில் நான் ஆண்டாண்டுகளாய் அனுபவிக்கும் ஒரு உணர்வு இது.

நேற்று, வெளியில் இருளும், குளிரும் தாராளமாய் விளைந்திருந்தன.  எனது அறையினுள் சாய்ந்திருந்தவாறே வாசித்துக்கொண்டிருந்தேன். யாரோ மெதுவாய் கனைப்பது போலிருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். எவருமில்லை. மீண்டும் வாசிப்பில் ஆழ்ந்து போகும் போது அதே கனைப்புச் சத்தம் கேட்டது. அறைக்குள் பாரும் இல்லை, அப்போ கனைப்பது யார்? என்று சிந்தித்த போது மிகவும் பரீட்சயமான குரலொன்று பேசிற்று. அது எனது கட்டிலின் ஆன்மாவின் குரல்.

”உன்னுடன் ஒரு பிரச்சனை பற்றிப் பேச வேண்டும்” என்றது அது.

நமக்கிடையில் பெரிதாய் எந்தவிதமான பூசல்களும் வருவதில்லை. இருவரும் பூசல்களை விரும்புவதுமில்லை. ஒருவரை ஒருவர் அன்பாய் கவனித்துக்கொள்கிறோம். இருவரும் தனித்தவர்கள். நான் தனியே உறங்குபவன். எனக்குத் துணை என் கட்டில். கட்டிலுக்கு  துணை நான்.

எனது கட்டிலுக்கு ஆன்மா இருக்கிறது. கட்டில் என்னும் சடப்பொருள் அதன் உடலாக இருக்கிறது. எனவே கட்டில் என்னை தனது ஆன்மாவுடனேயே பேசு என்றிருக்கிறது. அதுவும் ஒரு விதத்தில் ஆறுதலாகவே இருக்கிறது. கட்டிலின் ஆன்மா நான் பிறந்த நாள் தொடக்கம் என்னை பிரியாமல் வந்து கொண்டே இருப்பதால் அது நான் எங்கு தூங்கிப் போனாலும் தனக்கென்றொரு உடலை தற்காலிகமாக பெற்றுக்கொண்டு என்னுடன் சேர்ந்துறங்குகிறது. எனது நெருங்கிய நண்பனாயும் இருக்கிறது.

எங்கள் நட்புக்குள் மூன்றாமவர் ஒருவரும் இருக்கிறார். அது என் மனச்சாட்சி. அதற்கும் கட்டிலின் ஆன்மாவுக்கும் பெரிதாய் சொல்லிக்கொள்ளுமளவுக்கு நட்பில்லை. நான் மட்டும் மனச்சாட்சியுடன் நட்பாயிருக்க முயன்றுகொண்டிருக்கிறேன். ஆனால் மனச்சாட்சியோ எம்மிருவருடனும் நட்பாய் இருக்கவே விரும்புகிறது. கட்டிலின் ஆன்மாவோ,  உன் மகிழ்ச்சி எதுவோ அதையோ நானும் விரும்புகிறேன் என்கிறது, என்னிடம்.  கட்டிலின் ஆன்மாவுக்கு தெரிந்த, மனச்சாட்சிக்கு தவறாகப்படும் விடயங்களும் இருக்கின்றன. எனவே மனச்சாட்சியுடன் மோதாதே என்ருரைத்திருக்கீறேன் கட்டிலின் ஆன்மாவிடம்.

சற்று சிந்தித்த பின் ”பின்பொரு நாள் பேசுவோம்” என்று கூறினேன். கட்டிலின் ஆன்மா அமைதியாயிற்று.

அடுத்த நாள்:

அன்றைய பின்னிரவு மிகவும் அமைதியாய் இருந்தது. குளிர் கட்டுக்கடங்கியதாய் இருக்க, வானம் மட்டும் புகார்களை பரப்பிக்கொண்டிருந்தது ஊருக்குள் பரப்பிக்கொண்டிருந்தது. எனக்கு கட்டிலின் ஆன்மாவுடன் பேசும் ஆர்வம் இருந்தாலும் ஏனோ ஒரு பயம் மனதினுள் படந்தபடியே இருந்தது.

ஒரு கிளாஸ் கொன்யாக் எடுத்துக் கொண்டேன்.
5 - 10 நிமிடங்களின் பின் அமரிக்காவின் வான்படையையே எதிர்க்கும் தைரியம் வந்தமர்ந்து கொண்டது, என்னிடம். மெதுவாய் கட்டிலில் சாய்ந்து கொண்டேன்.

க்கும் .. என்று கனைத்துக்கொண்டேன்
” ஏதோ பேச வேண்டும் என்றாயே?,  பேசு, என்றேன்” கட்டிலின் ஆன்மாவிடம்.
எது வித பதிலுமில்லை.

எனது மனச்சாட்சி மட்டும் என்னை  பார்த்தபடியே உட்கார்ந்திருந்தது, பெரு அமைதியுடன். எனக்கு, அது இவ்வாறு அமைதியாய் இருப்பது பிடிப்பதில்லை. அது என் தோல்வியின் அறிகுறி. எனவே மீண்டும் கட்டிலின் ஆன்மாவை நோக்கி பெருஞ் சத்தமாய் ”ஏதோ கதைக்க வேண்டுமென்றாயே அது என்ன என்றேன்”

கட்டிலின் ஆன்மா மனச்சாட்சியினை நிமிர்ந்து பார்க்க அவர்கள் இருவதும் எதோ ரகசியம் பேசுவது போலிருந்தது எனக்கு. ”கொன்யாக்” போதை எனக்குள் எகிறிக்கொண்டிருந்தாலும் என்னையறியாத ஒரு ஒரு நிதானத்தை உணர்ந்திருந்தேன்.

தி்டீர் என கட்டிலின் ஆன்மா பேசத்தொடங்கிற்று. எனது மனச்சாட்சியோ அதன் கருத்துக்களை ஆதரிப்பது போன்றதொரு புன்னகையுடன் அமர்திருந்தது.

”உனது போக்கு சரியில்லை, குடித்திருக்கிறாய் என்றது கட்டிலின் ஆன்மா.

மனச்சாட்சி அதை ஆமோதிப்பது போல தலையை மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டது.

”சற்று சுயவிமர்சனம் செய்து கொள்” என்று மனச்சாட்சி உரைத்த போது அதன் கழுத்தை அப்படியே திருகினால் என்ன என்றிருந்தது எனக்கு. கடும் பார்வை ஒன்றை ஒன்றை வீசினேன்.

மெதுவாய் ஏளனப்புன்னகை செய்தது மனச்சாட்சி. மனச்சாட்சியை எரித்துவிடுவது போல் பார்த்தேன்.

என் காதுகளின் ‌செவிப்பறைகளில் கட்டிலின் ஆன்மா பேசுவது எங்கோ தொலைவில் ஒலிப்பது போல் ஒலித்துக்கொண்டிருந்து.

இன்னுமாரு ஒரு கிளாஸ் கொன்யாக் விழுங்கிக் கொண்டேன். சற்று கைத்தது. ஒரு ரொல்ஸ்ஐ கடித்துக் கொண்டேன்.

”பேசு” என்றது கட்டிலின் ஆன்மா. மனச்சாட்சி அமைதியாய் என்னைப் பார்த்தபடியே இருந்தது.

”நீதானே பேசவேண்டும் என்றாய்” என்றேன் நான், வீம்பாய்

”உன் மனதை நாம் அறிவோம்” என்றன கட்டிலின் ஆன்மாவும், மனச்சாட்சியும் ஒரே சமயத்தில்.

‌அவர்கள் இருவரும் எனக்கெதிராய் ஒற்றுமையானதை என்னால் தாங்கமுடியாதிருந்தது. இன்னுமொரு கிளாஸ்ஐ ஊற்றிக் கொண்டேன்.

”என்ன ” ..... ”  அறிவீர்கள்” என்றது உட்சென்ற கொன்யாக்.
.
அவர்களிருவரையும் என்னால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

நீ செய்யும் செயலை மன்னிக்க முடியாது என்றது கட்டிலின் ஆன்மா.

”நான் என்ன கொலையா செய்துவிட்டேன்” என்றேன். அவர்கள் இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். எனக்குள் எரிச்சல் பற்றியெரிந்து கொழுந்துவிட்டெரியத்  தொடங்கியது.

”இல்லை, ஆனால் என்னைக் கொடுமைப்படுத்துகிறாய்” என்றது கட்டிலின் ஆன்மா

”என்னையும் தான் என்றது” மனச்சாட்சி

”பேசுவதை தெளிவாய் பேசுங்கள்” என்றபடியே மேலும் ஒரு கிளாஸ்ஐ வாயினுள் கவிட்டுக்கொண்டேன்.

கட்டிலின் ஆன்மா பேசாதிருந்தது. மனச்சாட்சியோ .. என்னை ஊடுருவிப்பார்த்து.

தலையைக் குனிந்து கொண்டேன். பின்பு  மீதமாய் இருந்த கொன்யாக்ஐ குடித்து, கடைசித் துளியையும் நாக்கால் தட்டிக் குடித்தேன். பின்பு ”ரோல்ஸ்”ஐ கடித்தேன்.

சில நிமிடங்கள் ஓடியதும், அமெரிக்காவின் வான்படையை மட்டுமல்ல முப்படையையும் எதிர்க்கும் வல்லமை வந்தது போலிருந்தது.

கட்டிலின் மனச்சாட்சி ” நீ என்ன செய்கிறாய் என்று உனக்குத் தெரியும் என்றது”

எனது பொறுமை காற்றில் பறக்க ”என்ன மண்ணாங்கட்டியை செய்கிறேன்” என்று கத்தியபடியே மேசையில் ஒரு குத்து குத்தினேன். மேசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் அதிர்ந்து அடங்கின.

”மெதுவாய் பேசு, நிதானத்தை இழக்காதே” என்றது மனச்சாட்சி

நூல் அறுந்த பட்டம் போல், நிதானம் காற்றில பறக்க, பச்சைத் தூஷணத்தால் பேசினேன்.

மனச்சாட்சி என்னைப்பார்த்தபடியே மௌனித்திருந்தது. என்னால் மனச்சாட்சியை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. நிலத்தைப்பார்த்தபடியே கட்டிலின் ஆன்மாவிடம் புரியும்படி சொல் என்று புறுபுறுத்தேன்

ம்..  கொட்டிப‌டியே சொல்லிற்று கட்டிலின் ஆன்மா, இப்படி:

உனது கட்டில் விரிப்பையும், தலையணையுறையும், போர்வையும் தயவு செய்து சலவை செய்..... என்னால் தாங்கமுடியவில்லை.

உட்சென்ற கொன்யாக்கும், அமெரிக்க முப்படையையும் எதிர்க்கும் சக்தியும் கண நேரத்தில் காலியாகியிருந்தன.

கட்டிலின் ஆன்மா கண்சிமிட்ட, மனச்சாட்சி புன்னகைத்தது,

உச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்

மனதின் அதிர்வுகளும் உணர்ச்சிகளும் அடங்காத நிலையில் இருந்து இப்பதிவு எழுதப்படுகிறது என்று அறிக.

1999ம் ஆண்டு வெளிவந்த The Green Mile படத்தில்  கறுப்பனாக நடித்திருந்த John Coffey இன் மரணதண்டணை மனதை எந்தளவு பாதித்ததோ அதேயளவு, அல்லது அதற்கு மேலான உணர்ச்சிகளை உணர்ந்தேன் உச்சிதனை முகர்ந்தால் பார்த்த பின்.

கதை பயணிக்கும் நிலம் எனது ஊர் என்பதில் ஒருவித பெருமையிருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

படத்தின் கருவும், கதையும் அக்கதையினூடாக நான் புரிந்துகொண்டவையும், நான் இப்படத்தை மிகவும் ரசித்தேன் என்றே கூறவைக்கின்றன. தொழில்நுட்பம், இயக்கம், காட்சியமைப்பு, இசை இவைகள் பற்றி நான் பேசப்போவதில்லை. இப்படம் எனக்கு போதித்ததென்ன என்பதே எனக்கு முக்கியமாக இருக்கிறது. அனைத்து தமிழர்களுக்கும் முக்கியமாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.

முதலில் இப்படத்தினை தயாரித்த நேர்வேவாழ் ஐந்து தமிழர்களுக்கும் தலைசாய்த்து ஒரு வணக்கம். கருத்துவேறுபாடுகளைத் தாண்டி மனம் திறந்து பாராட்டவேண்டிய நேரம் இது. மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன். இப்படியான உங்கள் கலைப்பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சீமானுடன் மற்றும் தென்னிந்திய அரசியல்வாதிகளின் ”ஈழத்தமிழர் அரசியலில்” எனக்கு ஏற்பில்லை என்றாலும் சீமானுக்கு ஒரு சிறந்த கலைஞன் என்ற முறையிலும், சத்யராஜ், சங்கீதா மற்றும் சிறுமியின் தாய், சிறுமி, டாக்டர் என்று பலரும் நடித்திருக்கிறார்கள் அனைவருக்கும் ஈழத்தமிழன் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள்.

படத்தின் கதையை நகர்த்திப்போகும் சிறுமியின் நடிப்பு அபாரம். சிறுமியின் தாயாக வருபவரின் இயல்பான நடிப்பும், மட்டக்களப்புத் தமிழையும் ரசித்தேன். மட்டக்களப்புத் தமிழின் ”எலுவா”, ”மனே” என்னும் சொற்கள், திரைப்படத்தின் வசனகர்த்தா எந்தளவு நுணுக்கமாக பிராந்தியச் சொற்களை இணைத்திருக்கிறார் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றன.

முதன் முறையாக தென்னிந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழ் செயற்கைத்தன்மை இன்றி பேசப்பட்டுள்ளது. அதற்கான முழுப்பாராட்டையும் சிறுமியின் தாயா‌ராக நடித்தவரையே சாரும். (அல்லது டப்பிங் குரல் கொடுத்வருக்கு) சிறுமியின் தமிழில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கவேண்டும் என்பது எனது கருத்து. இருப்பினும் சிறுமியின் நடிப்பு மொழியாட‌லின் சறுக்கலை இல்லாது செய்கிறது என்றே கூறவேண்டும்.

2012 ம் ஆண்டு நோர்வே தமிழர் திரைப்படவிழாவில் விருது வழங்கப்படும் போது சிறுமியாக நடித்த சிறுமிக்கு ஒரு சிறப்பு விருது அறிவிக்கப்படவேண்டும் என்று முன்மொழிகிறேன். அவளுக்கு அதற்கான முழுத்தகுதியும் உண்டு.

தென்னிந்திய திரைப்படங்களில் கேலித்தனமாக சித்தரிக்கப்படும் திருநங்கைகளை, முதன் முதலில் மனிதநேயமுள்ள மனிதர்களாக காட்டிய முழுப்பெருமையும் உச்சிதனை முகர்ந்தாலுக்கு உண்டு. ஈழத்தமிழர்களின் படமே இப்படியானதொரு முற்போக்கான கருத்தை சொல்லுகிறது என்பதில் எமக்கும் பெருமையுண்டு.

இயல், இசை, நாடகம் என்று ஒரு அரசியல் நெடி படிந்த ஒரு வசனம் வருகிறது. அதை சீமானே சொல்கிறார். எனக்கேதோ இது ஒன்று தான் படத்தின் நகைச்சுவை போலிருந்தது. (சீமான் மன்னிப்பாராக).

படத்தின் பாடலாசிரியர், எனது பால்யகாலத்தில் எனது கதாநாயகனாக இருந்தவர். ”ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?” என்று பேசியே மட்டக்களப்பு சிறுவர்கள், இளைஞர்களை தன்வசம் இழுத்த பெரும் கவிஞன், ‌சிறந்த மேடைப்பேச்சாளர் அவர். கவிஞனான அண்ணண் காசியானந்தனிடம் எனக்கு பெருமதிப்புண்டு. பாடல்களில் அவரின் முத்திரைகளை நாம் காணலாம். உதாரணமாக ”ஊரில் நான் வளர்த்த கிளிப்பிள்ளை, மனதைவிட்டு பறக்கலியே” என்ற வரிகள்.

போலீஸ் நிலையத்தில் இருக்கும் இந்தியாவின் சின்னமான அசோக சின்னத்தை சிறுமி ” இந்த பொம்மையை நான் எடுக்கவா” என்று கேட்பது எத்தனையோ அர்த்தங்களை சொல்லிப்போகிறது. இயக்குனருக்கும், வசனகர்த்தாவுக்கும் எனது பாராட்டுக்கள்.

படத்தின் கதை பற்றி நான் இங்கு பேசவில்லை. பேசவும் போவதில்லை. மனதை கனக்கவைக்கும் கரு என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்படம் ஒரு செய்தியை மட்டும் சொல்லிப்போகவில்லை. மனிதஉரிமைமீறல், பாலியல் துன்புறுத்தல், வன்புணர்ச்சி, நோய், நோயின் கொடுமை, மரணம், பிரிவு, அன்பு, மனிதநேயம், ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் தமிழக மனிதர்கள் என்று பல செய்திகளை சொல்லிப்போகிறது.

படத்தில் ஒரு வசனம் வருகிறது, இப்படி: அவள் செத்துக்கொண்டே இருந்தா, நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தம்”. எனது நெஞ்சை சுரீர் என்று சுட்டது இவ் வசனம். எனக்கு இப்படத்தினை பிடித்துப்போவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த வசனம். என்னை சிந்திக்கத் துண்டியதும் இந்த வசனம் தான்.

படத்தைப்பற்றி எனது மனது கூறியதை பதிந்துவிட்டேன். எனது சிந்தனையில் தோன்றியதையும் எழுதிவிடுகிறேன்.
படத்தில் சிறுமியின் பெயர் புனிதா. அவளுக்கு உதவி செய்பவர் (சத்யராஜ்) பெயர் நடேசன். அந்த புனிதாவுக்கு ஒரு நடேசன் கிடைத்தார். ஆனால் இன்று அந்த புனிதாவைப் போல் பலர் உதவிக்காக காத்திருக்கிறார்கள். உதவுவதற்குத்தான் நடேசன்களுக்கு பஞ்சமாயிருக்கிறது. லட்சம் லட்சமாய் எத்தனையோ ஈழத்து நடேசன்கள் வெளிநாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் என்ன, அவர்களுக்கு புனிதாக்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

நண்பர்களே! நாம் ஒவ்வொருவரும் அல்லலுறும் ஒரு குடும்பத்தினை பொறுப்பேற்போமானால் எத்தனையோ குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள், வயோதிபர்களின் வலியை பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்கலாமல்லவா?

இன்று பதவிக்கும், பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு, பிரித்தாளுபவர்களின் சதிக்குட்பட்டு, எம்முறவுகளை மறந்திருப்பது எமது இன்றைய நிலைக்கு அவசியம் தானா? ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு எங்கோ கேட்ட ஞாபகம்.

இவ்வளவு உள்ளூர் விளம்பரங்களின் பின்பும் பல இருக்கைகள் காலியாய் இருந்தது மனதை நெருடியது என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

என்றோ ஒரு நாள் கேட்ட ஒரு கவிதையின் இறுதிவரிகளுடன் இப்பதிவு நிறைவுறுகிறது

ஒளி நிறைந்த கூடத்தில் இருந்து
எல்லோரும் கையசைத்து மகிழும் போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு
வாருங்கள்
நாமும் கையசைத்து மகிழ்வோம்.

இன்றை நாள் மிக நல்லது.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேயிருந்தாள்

1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன்.

கனிவான தாதியர், அமைதியான அறை, மெதுவான இசை, தாங்கொணா வேதனையில் ஒருவர், மற்றும் நான். மகப்பேற்றுத் தாதியின் கட்டளைகள், அன்பான வார்த்தைகளுக்கு மத்தியில் ஒரு அலரல். ஒரு பிரசவம் நடந்து கொண்டிருந்தது, அங்கு. இரத்தமும், ச‌தையும், நீரும் கலந்ததொரு குழந்தையை கையிலெடுத்து, தொப்புள் கொடியை ‌வெட்ட என்னை அழைத்த போது பயத்தில் மறுத்துவிட, ஒரு தாதி அதை வெட்டினார். குழந்தையை எடுத்துப்போய் சுத்தப்படுத்தி, தலையைச் சுற்றி தொப்பி போன்றதொன்றை இட்டு, அளந்து, நிறுத்து, ஊசி போட்டு என் கையில் தந்த போது முதன் முதலில் அவளை என்னுடன் அணைத்துக்கொண்டேன். வார்த்தைகளில் விபரிக்க முடியாத அனுபவம். பயமும், மகிழ்ச்சியும், தடுமாற்றமும் ஒன்றாய் கலந்த நிலை அது. நாமிருந்த அறையுனுள் ஒரு சிறிய நோர்வேநாட்டுக் கொடி வைக்கப்பட்டது.

அன்று மாலையே தனிஅறைக்கு மாற்றப்பட்டோம். குழந்தையையே பார்த்திருந்தேன். தூங்கிக் கொண்டிருந்தாள். தூங்கியபடியே இருந்தாள். ஒருவித பயம் என்னை சுழ்ந்துகொள்ள, மருத்துவத் தாதியை அழைக்கும் மணியை அமத்தினேன். கனிவான பார்வையுடன் வந்தார் ஒரு தாதி. குழந்தை கண்திறக்கவில்லை, தவிர ஒரே தூங்கிக்கொண்டிருக்கிறது என்றேன். ஆம் அதற்கென்ன என்றார் அலட்சியமாய். பின்பு, இது ஒன்றும் ஆபத்தில்லை, இப்படித்தான் எல்லாக் குழந்தைகளும் என்றபடியே அன்றுவிட்டார். என்னால் அவரை நம்பமுடியவில்லை. அடிக்கடி குழந்தை  மூச்சுவிடுகிறதா என்று பார்த்தபடியே இருந்தேன்.

அதே நாள், குழந்தை பால் குடித்த பின் அவளுக்கு விக்கியது. அவள் விக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு எனது நெஞ்சு வெளியே வருவது போலிருந்தது. குந்தையை துக்கியபடியே தாதிகளின் அறைக்கு ஓடினேன், குழந்தை விக்குகிறது என்றேன். எனது அவஸ்தையை சட்டைசெய்யாமலே விக்கல் தானாகவே அடங்கும், வீணாகக் குழம்பாதே என்றார்கள், என்னை திரும்பியும் பாராமல். சற்று நேரத்தில் விக்கல் அகன்று போனது.

மறுநாள் குழந்தைகளை எவ்வாறு நீராட்டுவது என்று கற்றுத் தந்தார்கள். பயந்து பயந்து கற்றுக்கொண்டேன். உடைமாற்றவும் கற்றுக்கொண்டேன். வீடு வந்த போது எனக்கு என்று சமைத்துக்கொள்ள முடியவில்லை. பத்திய சாப்பாட்டை எனக்கும் சேர்த்து செய்துகொண்டேன்.

குழந்தையை அடிக்கடி பார்ப்பதும், அவள் மூச்சு விடுகிறாளா என்று அவதானிப்பதுமாயிருந்தேன். வீடுவந்த பின்பும் ஒரே தூங்கிக் கொண்டிருந்தாள் குழந்தை. என்னை ஒரு தடவையேனும் பாக்கவில்லையே என்று ஒரு ஆதங்கம் குடிவந்துகொண்டது. கட்டிலின் அருகே குந்தியிருந்து பார்த்துக்கொண்டேயிருப்பேன். நான் அருகிலிருப்பதை அறியாது தூங்கிக்கொண்டிருப்பாள் அவள்.

நாட்கள் ஓட, ஓட அவளின் கண்பார்வை ஒரு இடத்தில் குத்திநின்று என்னைப் பார்த்துச் சிரித்த போது உலகமே மறந்துபோன நிலையில், நாள் முழுவதும் அவளுடனேயே ஓடிற்று. அவள் இரவில் தூங்க மறுத்த நாட்களில் அவளை காரில் வைத்து மணிக்கணக்காய் கார் ஓடியிருக்கிறேன். அவளும் தூங்கிப் போவாள். மீண்டும் வீட்டுக்குள் வந்ததும் அழத்தொடங்குவாள். அவளின் கையுக்குள் எனது சின்னவிரலை வைத்தால் பிஞ்சு விரல்களால் இறுக்கமாய் முடிக்கொள்வாள். அந்த ஸ்பரிசத்தில் மெய்சிலிக்கும். பால் குடித்தபின் ”ஏவறை” எடுப்பதற்காய் அவளை நிமிர்த்தி, எனது தோளில் அவள் தலை சாய்த்து, முதுகில் தட்டியபடியே ஏவறை வரும் வரை நடந்துகொண்டிருப்பேன். அவளுக்கு ஏவறை வராதிருந்தால், எனக்கு ஏவறை வராது அசௌகரீயப்படுவது போலுணர்வேன். இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள்.

விரைவில் என்னை பார்த்து சிரிக்கமாட்டாளா என்று நினைப்பேன். சிரித்ததும், உடம்பு திருப்புவாளா என்று காத்திருப்பேன். உடம்பு திருப்பியதும், உட்கார மாட்டாளா, தவழமாட்டாளா என்று கனவு ஓடிக்கொண்டேயிருந்தது. நாட்கள் மெதுவாய் கடந்து போவது போல் ஒரு பிரமை. அவளை அணைத்தபடியே தூங்கிப்போவேன். திடீர் என்று முழிப்பு வரும். அவளின் வசதியாகத் தூங்குகிறாளா என்று எழும்பியிருந்து பார்ப்பேன். நாட்கள் செல்லச் செல்ல அவளின் மெதுவான சத்தங்களுக்கெல்லாம் அர்த்தம் புரிந்தது. எது எது பசிக்கான, தூக்கத்துக்கான, சுத்தத்திற்கான, மகிழ்ச்சிக்கான சத்தங்கள் என்று தெரிந்த பின் அவளுடன் ஒரு வித தொடர்பாடல் கிடைத்ததுபோலாயிற்று.

மிருதுவான தலைமுடி, மெதுமையான கன்னங்கள், ஒளி கொண்ட கண்கள், உமிழ்நீரில் நனைந்தொழுகும் வாய், மடிப்பு விழுந்த கழுத்தும் வயிறும் தொடைகளும், மிருதுவான கால்கள் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்‌வொரு வாசனை, எல்லா வாசனைகளும் கலந்ததோர் இன்னுமொரு வாசனை. என்னால் இன்றும் அவ்வாசனைகளை உணர முடிகிறது.

5 - 6 மாதங்களின் பின்னான காலங்கள் மிகவும் இனிமையானவை. என்னை யார் என்று அடையாளம் கண்டு கொண்டாள். அன்னியர்கள் அழைத்தால் என் கழுத்தைக் கட்டிக்கொள்வாள். பெருமையில் நிறைந்து போகும் மனது. அப்பாவின் குழந்தை என்பார்கள், மகிழ்ச்சிக்கு அளவிருக்காது அந்நேரங்களில். 

”முட்டு முட்டு” என்றால் முட்டுவாள், ”சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” விளையாடுவோம். அவளை தூக்கியபடியே துள்ளினால் அல்லது ஓடினால் பெரிதாய்ச் சரிப்பாள். அவளின் எச்சில் கலந்த முத்தங்களினாலும், பல்லில்லா வாயினால் கடித்தும், பூப்போன்ற அவளது கைகளினால் அணைத்தும், அவளின் அன்பிளை அள்ளி அள்ளி பொழிந்திருக்கிறாள், என்மீது.

எமது வீட்டில் ஒரு சாய்மனைக்கதிரை இருந்தது. பின் மாலைப்பொழுதுகளில் அவளை என் நெஞ்சில் சாய்த்தபடியே தூங்கவைப்பேன். துங்கியதும், அவளின் அழகு தெய்வீக அழகாய் மாறிப்போகும். அவள் சுவாசத்தின் ஒலியினை ரசித்தபடியே அவளைப் பார்த்திருப்பேன். தூக்கத்தில் சிரிப்பாள், நானும் சிரிப்பேன். சில வேளைகள‌ில் அழுவது போல் விம்முவாள், அதை தாங்க முடியாது அவளின் தலைவருடி முதுகினைத் தடவி என்னுடன் அணைத்துக்கொள்வேன். சிறு சிறு சுகயீனங்களின் போது என்னுடனேயே இருப்பாள். சுருண்டு, தளர்ந்து போயிருக்கும் அவளைப் பார்ப்பதே பெரும் வேதனையாயிருக்கும். என் தோளில் சார்த்தியபடியே தாலாட்டுப்பாடுவேன். மெதுவாய் உறங்கிப்போவாள். இன்றுவரை என் தாலாட்டில் உறங்கிப்போனவர்கள் இருவர். அவர்களில் இவள் முதலாமவள்.

‌உடலைப் புறட்டி, உட்காந்து, தவண்டு, எழுந்து நின்று, தள்ளாடி நடந்த போது அவள் ஏதோ உலகசாதனை செய்தது போலிருந்தது எனக்கு. மாலைநேரங்களில் வீடு வரும் போது கதவருகில் காத்திருப்பாள். அள்ளி‌ கையில் எடுத்தால் அதன் பின்னான நேரங்கள் நீராய் கரைந்தோடும். அவளின் நீராட்ட நேரங்கள் மிகவும் மகிழ்ச்சியானவை. நீரினுள் விளையாடி அலுக்காது அவளுக்கு. உடல் துடைத்து, தலை துவட்டி, ஓடிகொலோன் இட்டு, உடைமாற்றிய பின் அழகியதோர் பொம்மையாய் மாறியிருப்பாள் அவள். தூக்கமும் வந்தமர்ந்திருக்கும், அவள் கண்களில். பால்போத்தலுடன் என்னருகில் தூங்கிப்போவாள். என்னை மறந்து ரசித்திருப்பேன் நான். அவளின் ஈரம் துவட்டிய ஒரு பருத்தித்துணியோன்று இன்றும் என்னிடம் இருக்கிறது. அதில், இன்னமும் அவளின் ஈரமும், வாசனையும் ஒட்டியிருப்பதாகவே உணர்கிறேன். அதைக் கையிலெடுத்து முத்தமிடும்  நாட்களும் உண்டு.

முதன் முதலில் ”அப்பா” என்று அழைத்த போது எமது நெருக்கம் மேலும் கூடிப்போனது. நெருக்கம் மேலும் அதிகரித்தது தன்னை தேற்றிக்கொள்ள அவள் என் கழுத்தையே கட்டிக்கொள்ளத் தொடங்கியதால். அந் நேரங்களில் அவளின் குழந்தையாய் மாறிப்போனேன் நான். அந் நாட்களில்,  அவளை அம்மா என்று அழைப்பதையே விரும்பினேன். எனது அம்மாவிடம் கிடைக்கும் ஆறுதல் அவளிடம் கிடைத்தது.

அவளின் வயது ஒன்று, இரண்டு, மூன்று என்று ஆகிய போது அவளே யாதுமாய் இருந்தாள். எமது நடைப்பயணங்கள், சைக்கில் பயணங்களில் அவளின்  ”ஏன்” என்னும் கேள்விகளுக்கு அவளுக்கு புரியும் படி பதில் ‌கூறமுடியாது தடுமாறியிருக்கிறேன். சில நேரங்களில் அவளின் கேள்விகள் சிந்திக்கத்தூண்டும்.

அவளின் தூக்கம் கலையும் நேரங்களில் அருகில் இருந்து தலைகோதி, முத்தமிட்டு, அள்ளி அணைத்து, தூக்கி, இறுக அணைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ”போர்” தான். நான் கெஞ்சி, அவள் மிஞ்சி அதன் பின்பு தான் எங்கள் போர் ஓய்நது போகும்.

அவளுக்கு மூன்று, நான்கு வயதாயிருக்கும் நாட்களில் படுக்கைக்கு செல்லும் முன் கதை சொல்லத் தொடங்கியிருந்தேன். தினம் தினம் புதிய புதிய கதைகள். பாட்டி வடை சுட்ட கதை, சொன்னதை செய்யும் சுப்பன் கதை, குரங்குகளும் தொப்பிகளும் கதைகளில் இருந்து தற்கால ”பார்பி”, ”டெலி டபீஸ்” மற்றும் ”ப்ராங்லின்” போன்றவர்களை வைத்து நான் இயற்றிய கதைகள் வரை தினமொரு கதை அவளுக்கு 10 வயதாகும் வரை கூறியிருக்கிறேன். அவளுக்கு பிடித்த ”கதைசொல்லி” நான் என்பதில் எனக்கு ஏகத்துக்கும் பெருமையுண்டு.

அவளுக்கு சைக்கில் ஓடப்பழக்கியது என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். இரண்டே நாளில் ”அப்பா கையை விடு, நான் இப்போ தனியே ஓடுகிறேன்” என்றாள். பயந்து பயந்து கையை விட்டதும் தடுமாறி தடுமாறி ஓடி, சற்று நேரத்தில் திடமாய் ஓடினாள். அவளின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள். பெருமையாய் நெஞ்சுவிம்பி நின்றிருந்தேன் நான். பனிச்சறுக்க விளையாட்டிலும் அப்படியே. அவளும் நானும் பனியில் நீண்ட தூரம் சறுக்கிச் செல்வோம். நேரம் மறந்து நீண்டு போகும் எமது விளையாட்டு.

வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்திய நாட்கள் அவை. தினம் தினம் உயிர்த்திருந்தேன். அண்மையில் ”அபியும் நானும்” திரைப்பட இயக்குனர் ராதாமோகனுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத் திரைப்படத்தைப்பற்றியும் பேசக்கிடைத்தபோது எனது வாழ்வின் ஒரு பகுதியை படம் பிடித்திருக்கிறீர்கள் என்றேன். புன்னதை்தபடியே ”தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா” என்னும் அப் படத்தின் பாடல் வரிகள் உண்மையானவை என்றார். என் நெஞ்சு விம்மியடங்கியது. ஆம், அந்த வரிகளின் உண்மையை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவே வாழ்வின் உச்சம்.

இருப்பினும், பெருங்குடி நன்மக்கள் சிலர், தந்தையர்க்கு குழந்தைகளின் மேல் பாசமில்லை என்கிறார்கள். ஏளனப் புன்னகையுடன் கடந்துபோகிறேன், அவர்களையும்.


காவியா என்னும் எனது காவியத்துக்கு இது  சமர்ப்பணம்.


பயணம், பெரும் பிரிவின் தொடக்கம்

1984 -85 ம் ஆண்டின் இறுதிக் காலங்கள், இழக்கப்போகும் பெறுமதிமிக்க  காலங்களைப் பற்றிய எதுவித அறிகுறிகளுமில்லாமல்  ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள் பிரச்சனைகள் மெதுவாய் தொடங்கியிருந்த காலம்.  19 - 20 வயதுக்கான எவ்வித முதிர்ச்சியும் இன்றி, எவ்வித கனவுகளும் இன்றி, பல்கலைக்கழக  அனுமதிக்கான பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தேன்.

சிங்கள நண்பர்கள் பலர் ஊரைவிட்டு மெது மெதுவாய் இடம் பெயர, இஸ்லாமிய நட்புகளும் பிரச்சனைகளின்  காரணமாக தொலைந்து கொண்டிருந்தன. இருப்பினும் துணிந்தவர்கள் சிலரின் நட்புகள் மங்கலான மாலைப் பொழுதுகளில் தொடரத்தான் செய்தன.

ஒன்றாய் பழகிய மூவின நட்புகளும் தனித்தனியே தொடர்பில்லாது தம்வழியே சென்றுவிட்டாலும், நட்பு என்னும் சொல் மட்டும் தனது தன்மையை இழக்காதிருந்தது என்பது பல ஆண்டுகளின் பின் தான் எனக்குப் புரியும் என்பது எனக்கு அன்று தெரியாதிருந்தது.

ஒரு புறம் தமிழ் முஸ்லீம் கலவரங்கள், இராணுவத்தினரின் கெடுபிடிகள், இயக்கங்ளின் வீரப்பிரதாபங்கள் என எமது ஊரின் காற்றில் கூட விறுவிறுப்பு கலந்திருந்த காலமது. கைதுகளும், மரணங்களும் பழகிப்போயின. நண்பர்கள் தீடீர் என காணாமல் போய் முறுகிய உடம்புடன் இறுகிய பார்வையுடன் 4 -5 மாதங்களின் பின் பின்மாலைப் பொழுதுகளில் வந்து சந்தித்தனர். ஒரு சிலர் இடுப்பில் இருந்த சில ஆயுதங்களையும் காட்டினர். சிலர் கொள்கைப்பரப்புரைகளும் செய்தனர். 

சகோதர முறுகுநிலை தொடங்கியிருந்தது. நண்பர்களாய் இருந்தவர்களும் முறாய்த்துக்கொண்டனர். அல்லது முறாய்க்க கட்டளையிடப்பட்டனர்.

ஒரு நாள் மட்டக்களப்பு ரஷீடியாஸ் குளிர்பானக்கடையினுள் எமக்கும் ஒரு ”அண்ணர்” வகுப்பு எடுத்தார். தமிழீழ விடுதலை ராணுவம் என்றார். அரசியற்பிரிவு, ராணுவப்பிரிவு, முழுநேரப் போராளி, பகுதி நேரப் போராளி என்றார். நான் பகுதி நேரம் என்றேன். எனது பெயர் விபரம் எழுதிப் போனார். பின்பொருநாள் ஏறாவூர் ரயில்நிலையத்தருகில் ஒரு கைத்துப்பாக்கியையும் காட்டினார். அதன் பின்பு அவர் வரவும் இல்லை. அவர் வரவில்லை என்று நான் கவலைப்படவும் இல்லை.

ஒரு முறை ”ஹர்த்தால்” என்று சுவரொட்டி எழுதவேண்டியேற்பட்டது. அழகான கையெழுத்தை கொண்டிருந்த ஒரு நண்பனை காட்டுக்குள் அழைத்துப்போய் சுவரொட்டியை எழுதவைத்தோம். அதுவே அவன் தொழிலாகியது பின்னாலில். எல்லா இயக்கங்களுக்கும் அவனே சுவரொட்டி எழுதினான். அந்த சுவரொட்டியை ஒட்டுவதற்கிடையில் நான்கு தடவைகள் மூத்திரம் போயிருப்பேன்.

தினமும் ஒருவர் வீதிக் கம்பத்தில் தலை சரிந்து கிடந்தார். ஊராரும் சிவப்பு நிறத்தில் இருந்த நோட்டீஸ்களை நம்பத் தொடங்கயிருந்த காலம். வீதிக்கம்பத்தில் சரிந்திருந்தவர்கள் எல்லோரும் குற்றவாளியாக்கப்பட்டார்கள். அவர்களை சரித்தவர்களின் குற்றங்கள் பற்றி யாரும் பேசமுன்வரவில்லை. எவரும் கொல்லப்பட்டவர்களின் வலியை கண்டுகொள்ளவும் இல்லை.  கொலைசெய்யப்படுவதற்கு முன்னான வினாடியில் கூட தான் மன்னிக்கப்படலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். துப்பாக்கியின் விசை அழுத்தப்படுதை காணும் போது அவர்கள் தமது குடும்பத்தை, குழந்தையை, காதலியை நினைத்திருக்கக்கூடும். சில வேளைகளில் ”நாசமாய்போவீர்கள்” என்றும் சபித்திருக்கவும் கூடும்.

ஒரு ‌முறை பெருங்கலவரம் மூண்டது தமிழர்களுக்கும், இஸ்லாமியர்க்கும் இடையில். எனது ஊர் எல்லையில் இருந்ததால், ஊரே இடம் பெயர்ந்தது. வந்தாறுமூலையில் உள்ள கிழக்குமாகாண பல்கலைக்கழகம் அகதிமுகாமனது. வீடு வீடாய் சென்று உணவு சேகரித்துவரக் கட்டளையிட்டார்கள் ”அண்ணா”க்கள். மாலையில் கத்தி, கோடாலி, அலவாங்கு, திருக்கைவால் போன்ற ஆயுதங்களுடன் செங்கலடிச்சந்ந்தியில் காவல் வேறு போட்டார்கள். நாங்கள் அருகே இருந்த ஒரு பேக்கரிக்குள் 304 விளையாடிக்கொண்டிருந்தோம்.

நண்பர்கள் சிலர் வெளிநாடு போயினர். சிலர் ”கப்பலுக்கு” போயினர். நாங்கள் சிலர் மட்டும் எங்கும் போகவில்லை. எங்கு போவது என்றும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை. நாம் குந்தியிருக்கும் சந்திக்கு ஆமி வரும்போது ஓடுவதும், அவர்கள் அங்கிருந்து அகன்றதும் நாம் திரும்பி வருவதும் வழமையாகியது.

இப்படியான நாட்களில் தான் ஊரில் இருந்தால் பிரச்சனை என்பதால் அம்மா என்னை இந்தியா அனுப்ப  யோசித்தார். இதை அறிந்த இரு நண்பர்களும் என்னுடன் இணைந்துகொள்ள இந்தியாப் பயணம் தொடங்கிற்று.

தெரிந்த பெரியவர் ஒருவருடன் நாம் கொழும்பு போய்,  அங்கிருந்து வீசா எடுத்து இந்தியா போவது போல் ஒப்பந்தமாகி நண்பர்களின் பெரும் பிரியாவிடையுடன் 1985ம் ஆண்டு கார்த்திகை  மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு நாள், காலைப் புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டடோம். புகையிரதம் எமது Eravur United விளையாட்டுத்திடலைக் கடந்த போது, தரிசாய் கிடந்த நிலத்தை மூவின நண்பர்களும் சேர்ந்து செப்பனிட்டு விளையாடிக்களித்த நாட்கள் நினைவிலாடியது.

அன்றைய  அந்தப் பயணம் , ஒரு பெரும் பிரிவின் தொடக்கம் என்பதும், அதுவே என் வாழ்வினை நிர்னயிக்கப்போகிறது என்பதும் எனக்கு புரிந்திருக்கவில்லை அன்று. ஒரு சாதாரணப்பயணம் போலிருந்தது அது. பெரும் பயணங்கள் அனைத்தும் சாதாரணமாகவே தொடங்குகின்றனவோ என்னவோ?

வெய்யில் காய்ந்து, காற்றும் காய்திருந்திருந்த தென்னைமர தோட்டங்களினூடாகவும், வெட்ட வெளிகளினூடாகவும் புகையிரதத்தின் வேகத்தில் தலைமுடி காற்றிலாட, காலம் செய்யப் போகும் கோலத்தினை உணராமல் பயணித்துக்கொண்டிருந்தேன். புகையிரதம் எதையும் கவனிக்காமல் கட கட கடவென ஓடிக்கொண்டிருந்தது, வாழ்வைப்போல்.

இருபத்திஏழு ஆண்டுகளின் பின்பான இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும் போது ஊரின் வாசனையையும் காட்சிகளையும், நட்பின் ஈரத்தையும், காற்றின் வெம்மையையும் மனம் நுகர்ந்ததை உணர்ந்தேன். ஏகாந்தமான அனுபவம். என் குழந்தைகளின் வாசனையை நான், குழந்தைகளின் அருகாமையின்றியே அறிவது போன்றது அது.

காலமும், வாழ்வும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நினைவுகளைச் சுமந்தபடி அவற்றுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன் நான். நீங்களும்தான்.

இன்றைய நாளும் நல்லதே!.




இரண்டு சுவாமிகளும் அவர்களின் திருவிளையால்களும்

சில நாட்களுக்கு முன் எனது முகப்புத்தகத்தில் ஒரு இனிமையான அதிர்ச்சி காத்திருந்தது. பால்யத்து நண்பர் ஒருவர் என்னைக் கண்டுபிடித்திருந்தார். ஏறத்தாள 25 வருடங்களின் பின் வேறொரு வாழ்க்கைப்பருவத்தில் மீண்டும் அறிமுகமாகிறோம். காலம் அவரை இந்தியாவிலும், என்னை நோர்வேயிலும் நிறுத்தியிருந்தது. அவருக்கு என்னுடன் தொடர்பு இல்லாதிருந்தாலும் BBC செய்திச்சே‌வை போன்று என்னைப்பற்றிய  சகலமும்  அறிந்திருந்தார். அது ஆச்சர்யமாய் இருந்தது எனக்கு. அவரைப்பற்றி ஒரு சிறு செய்தியேனும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இது ஆச்சர்யமில்லாத செய்தி.

ஒன்றரை மணிநேரமாக ”ஸ்கைப்” மூலமாக உரையாடினோம். பல பால்ய நண்பர்களுடன் அவருக்கு தொடர்புகள் இருந்தன. அவர் மூலமாக மூன்று பால்ய சினேகங்கள் அறிமுகமாகின.  இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை என பலரும் பல தேசங்களில் வேர்பதித்து கிளைவிட்டிருந்தார்கள். நான் பனிவிளை பூமியில் வேர்பதித்திருக்கிறேன்.

பரஸ்பர விசாரிப்புகளின் பின் இரகசியமான விடங்களுக்குள் எமது சம்பாசனை புகுந்த போது மீண்டும் பதின்மவயதுக்கள் புகுந்ததுகொண்டோம்.  ”அவள்”  என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டு அவள் எங்கே இருக்கிறாள் தெரியுமா? என்ற போது நான் 1980 - 83ம் ஆண்டுகளுக்குள் நுளநை்திருந்தேன். ”அவள்” என்பது நண்பனின் முதற் காதல். அது பற்றி நான் ” கொல்லாமல் கொல்லும் காதல்” என்று ஒரு பதிவு இட்டிருக்கிறேன். இது பற்றி நண்பரிடம் கூறியபோது ” அப்ப நீ என்னை மறக்கவில்லை” என்றார். குரலில் பெருமையும், குதூகலமும், நட்பின் நெருக்கமும் நிறைந்திருந்தது.

ஊரிலிருந்த அத்தனை அழகிய ராட்சசிகளும் அவர் நினைவில் இருந்தது ஆச்சர்யம்தான். அதை விட ஆச்சர்யம் அந்த ராட்சசிகளை அவர் வர்ணித்த அழகு.  ”டேய்! அவள்” .... என்று பால்யத்து மொ‌ழியிலேயே வர்ணித்தார். வாழ்வின் வலிகள், போராட்டங்கள் மறந்து மீண்டும் பதின்மவயதுக்குள் சென்று வந்த உணர்வைத் தந்தது அவருடனான உரையாடல். மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றுக்கொண்டோம். நண்பருடனான சம்பாசனை வாயில் ஒட்டிக்கொள்ளும் தேனீரின் சுவை போன்று ஒரு சுகத்தை தொடர்ந்து தந்து கொண்டேயிருந்தது அந்த மாலை முழுவதும்.

இன்று காலை முகப்புத்தகத்தில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது முகப்பத்தகத்தில். அவரும் பால்யத்து நண்பர் தான். எனது  முகப்பத்தக படம் ஒன்றில் அவர் தன்னை பதிவு (tag)  செய்திருந்தார். நட்பு அழைப்பு விடுத்திருக்கிறேன் அவருக்கும்.

இந்த நண்பரும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் திறமைக்கு அவரின் ”திருவாய்” மட்டுமே காரணமாய் இருந்தது. அவர் விளையாட்டில் அதி சூரன். கால்பந்து, கிறிக்கட், கரப்பந்து தொடக்கம் தென்னைமரம் ஏறுதல், நீந்துதல், போலி ஆங்கிலப்புலமை என்று அவரிடம் பல திறமைகள் ஒளிந்திருந்தன, 1980 களில். காதலிக்கிறேன் என்று ஒரு பில்ட்அப் வேறு.

எம்மிருவருக்கும்  இடையில் ஏராளமான இரகசியங்கள் உண்டு. யார் யார் உள்ளூர்க் காதல்கள் என்பது தொடக்கம், ஊருக்குள் நடந்த பலான சமாச்சாரங்கள்வரை  எமக்குத் தெரிந்திருந்தது. இதற்காகவே சில ஊர்ப்பெரிசுகள் எம்மிடம் வாலாட்டாதிருந்தார்கள். முக்கியமாய் மட்டக்களப்பு நகரத்து இளைஞர் கோஸ்டியிலிருந்த நபர் ஒருவர்.

குறிப்பிட்ட நபருக்கும் எமக்கும் ஏற்கனவே விளையாட்டுக்களின் மூலமாகவும், அவர்களின் டவுனில் நாம் அழகிய ராட்சசிகளை ரசித்ததாலும் ”ஆகாது” என்று ஆகியிருந்தது. ஏறத்தாள எம்.ஜி.ஆர், நம்பியார் நிலையிலிருந்தோம் நாம்.

அப்படியான நாட்களில் ஒரு நாள் குறிப்பிட்ட நபரின், முறுக்கேறிய வயதின் இம்சையால், அவர் மட்டக்களப்பு பஸ் ஸ்டான்ட் விலைமாதுகளின் ஒருத்தியுடன் மகிழ்ச்சியாய் இருக்க எம்மூர் காட்டுப்பகுதியை அவர் தெரிவு செய்ததனால் அதன் பின்னான பல காலங்களில் அவர் எம்மிடம் மிகுந்த மரியாதையாக நடக்க வேண்டியிருந்தது. இதற்கு எனது நண்பர் முக்கிய காரணமாய் இருந்தார்.

ஒரு முன் மாலை நேரம், அவர்கள் இருவரும் எம்மூர் காட்டுப்பகுதிக்கு செல்வதை கண்ட நண்பர், இருவரையும் அடையாளம் கண்டு கொண்டார். விரைந்து வந்து என்னையும், இன்னும் சிலருடனும் காட்டுப்பகுதியுனுள் காத்திருந்து ” சிவபூஜையில் கரடியாய்” புகுந்து ரகளை பண்ண, அவர்கள் ஓடித்தப்ப வேண்டியதாயிற்று. அதன் பின்னான காலங்களில் டவுன் அழகிகளை எவ்வித சட்டச்சிக்கல்களும் இன்றி நாம் ரசிக்க அனுமதி கிடைத்திருந்தது எமக்கு.

எனது நண்பரின் அங்கில மோகம் அலாதியானது. கிறிக்கட் மச்ட்களை ஆங்கிலத்திலேயே கேட்பார். அதே போலவே மீண்டும் ஒப்புவிப்பார். நண்பரை நன்கு அறியாதவர்கள் வந்தால் நண்பர் ஆங்கிலத்தில் மேதாவி என்றே நம்புவர். அந்தளவுக்கு வேகமாகவும், புதியவர்களுக்கு புரியாமலும் உண்மையிலேயே ஆங்கில மேதாவி போன்று பேசுவார்.

எமது ஊரில் ஒரு பாழடைந்த மில் இருந்தது. நெல் காயவைப்பதற்காக அங்கு பெரும் சீமெந்து நிலம் இருந்தது. அதற்கருகில் ஒரு தண்ணீர் டாங்க். நண்பரோ எம்மை அந்த சீமெந்துநிலத்தில் வட்டமாக சைக்கில் ஓடச் சொல்லுவர்ர். அவரோ தண்ணீர் டாங்க் இல் அமர்ந்த படியே ஆங்கிலத்தில் ”கார் ரேஸ்” வர்ணணை போன்று எமது சைக்கிலோட்டத்துக்கு வர்ணணை கொடுத்துக் கொண்டிருப்பார், ஆங்கிலத்தில்.  வர்ணணை செய்வதில் அவருக்கு அசாத்தியமானதோர் திறமையிருந்தது, ஆசையுமிருந்தது.

ஒரு முறை நாம் வேலி கட்டுவதற்காக பனையோலை தறிக்கச் சென்றிருந்தோம். அவற்றை ஏற்றிவர ஒரு வண்டிலையும் வாடகைக்கு அமாத்திக்கொண்டோம். பனைமரத்தில் ஏறி ஓலைகள‌ை தறித்துப்போட்டார் நண்பர். பின்பு கீழ் இறங்கி வண்டிலில் ஓலைகைளைக் வைத்து கட்டும் போது நண்பர் ஓலைகளுக்கு மேல் ஏறி நின்று கயிற்றை இழுக்க அது அறுந்து நண்பர் கீழே விழுந்தார். மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல நண்பர் விழுந்தாலும் விழுந்தார் கள்ளிமுள் பற்றையினுள். ஒரு விதமாக அவரை மீட்டு வெளியில் எடுத்த போது அது நண்பரா அல்லது முள்ளம் பன்றியா என்னுமளவுக்கு அவர் உடலில் கள்ளிமுட்கள் இருந்தன. எம்மால் முடிந்ததை அகற்றி டாக்டரான எனது தாயாரிடம் அழைத்துப் போனேன். உடனேயே ஆஸ்பத்திரியில் அனுமதித்து பல மணிநேரங்களாக முட்களை அகற்றி நண்பனின் முள்ளம்பன்றி அவதாரத்தை முடித்து வைத்தார் அம்மா. அதன் பின் பல காலங்கள் அம் முட்கள் அவருக்கு இம்சை தந்து கொண்டேயிருந்தன.

ஒரு முறை நாம் கிறிக்கட் விளையாடுவதற்காக எமது மைதானத்தில் ”பிட்ச்”  போட்ட போது அந்த ”பிட்ச்”ஐ சமப்படுத்துவதற்று மெயின் வீதியில் இருந்த ரோடு போட உதவும் ”ரோளரை” நண்பருடன் சேர்ந்து, நாம் ஐவர் இழுத்து வந்தோம். அத் திட்டத்தின் ”ப்ராஜெக்ட் மனேஜராக” இருந்தவரும் எனது நண்பர் தான்.

ஒரு இரவு ஒரு வீட்டுத் தோட்டத்தில் இரகசியமாய் இளநீர் பறித்துக்கொண்டிருந்தோம். (பிற்காலத்தில் வேரொரு நெருங்கிய நண்பர் அந்த வீட்டு மாப்பிள்ளையாவார் என்பது அன்று எமக்குத் தெரியாதிருந்தது). எங்களின் கெட்டகாலம், அவ் வீட்டு நாய்கள் விழித்துக்கொள்ள, வீட்டின் உரிமையாளர் டார்ச்லைட் சகிதமாக ஓடிவந்தார். நண்பர் மரத்தில் இருந்து இறங்கி ஓடும் போது இடுப்பில் இருந்த சாரத்தை களட்டி தலையை மறைத்து முக்காடு போட்டுக்கொண்டார். என்னால் அப்படி செய்ய முடிவில்லை, வெட்கமாய் இருந்ததால். ஓடத் தொடங்கினேன். பின்னால் வயதான ஒரு குரல் ”அது  டொக்கரம்மான்ட மூத்த மகன்” என்று கத்தும் கத்தம் கேட்டது.  அச் சத்தத்தின் எதிரொலி சில மாதங்களுக்கு முன் லண்டன் போன போது அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகிய எனது நெருங்கிய நண்பர் வீட்டிலும் எதிரொலித்தது.

ஒரு காலத்தில் ஏறாவூர் புகையிரதநிலைய அதிபருடன் தனவுவதையே தொழிலாகக் கொண்டிருந்தோம். அதற்கு முக்கிய காரணம் அந்த புகையிரநிலைய அதிபரின் மாமனார். எம்மை எங்கு கண்டாலும் திட்டடி்த்தீர்த்தபடியே இருந்தார். அவர் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்ற திமிரும் இருந்தது அவரிடம். எனது நண்பரின் பொறுமை எல்லை தாண்டியது ஓர் நாள்.  அன்று தொடக்கம் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு  செல்லும் ”இரவு தபால் ரயில்” ஏறாவூர் இரயில் நிலயத்தை நெருங்கும் போது ஏறாவூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுப் போகத்தொடங்கியது. ரயில் புறப்பட்டதும் மின்சாரம் மீண்டும்வந்து.  புகையிரநிலைய அதிபரினால் இந்த மர்மத்தை பல மாதங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை. நாம் ரயில் நிலைய மின்சார இணைப்பை  ”பியூஸ்ஐ” களட்டி இல்லாது செய்ததை அவர் அறிந்திருக்க சந்தர்ப்பமில்லை. ரயில் நிலைய அதிபர் பெரும் பாடுபட்டார், அவரின் மனைவியின் தந்தை எம்மை காணும் போதெல்லாம் திட்டித்தொலைத்தனால்.  பிற்காலத்தில் ரயில் நிலைய அதிபரின் மாமனாரை இயக்கங்கள் கடத்திச் சென்று கொலை செய்தது வேறு கதை.

இப்படி இந்த நண்பரின் அட்டகாசங்களும், திறமைகளும் எல்லையில்லாதிருந்தன. சிங்கள, இஸ்லாமிய, தமிழ் நண்பர்களிடத்தில் எனது நண்பர் மிகவும் பிரபல்யமாக இருந்தார். அந்தக் காலத்தில் அவர் ஒரு ஹீரோ என்றால் அது மிகையில்லை.

எமக்கு முதன் முதலில் பலான புத்தகங்கள், படங்கள், மற்றும் பலான விடயங்களை அறிமுகப்படுத்தியதும், அவர் தான். எங்களுக்கு பல விதத்திலும் அவரே குருவாயிருந்தார். நாமும் அவருக்கு அடங்கிய சீடர்களாயிருந்தோம்.

சென்ற வருடம் ஊருக்கு சென்றிருந்த போது நண்பரைத் தேடும் பணியை பலர் மூலமாகவும் முடுக்கிவிட்டேன். சாதகமான பதில்கள் எதுவும் வரவில்லை. ஒருவர் மட்டும் அவரைத் தேடாதீர்கள் அவர் பற்றி ஊருக்குள் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றார். மனவருத்தத்துடன் திரும்பினேன்.

நோர்வே வந்ததும் மீண்டும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டேன். நண்பரைப் பற்றிய தகவல் ஒன்று கிடைத்தது.

நான் கூறப்போவது சத்தியமான உண்மை. எனவே அதிர்ச்சியடையாதீர்கள்.

எனது நண்பர் ”சுவாமி” என்னும் அடைமொழியுடன் உலாவருகிறாராம், ஊரில்.

இதில் என்ன தப்பிருக்கிறது. ”சுவாமி” ஆகும் முழுத் தகுதியும் அவனுக்கிருக்கிறது.. மன்னிக்கவும் ... அவருக்கிருக்கிறது.

அவரின் சீடனாகும் தகுதி என்னிடம் இருக்கலாம்.

சஞ்சயானந்த சுவாமிகளுக்கும், அவரின் ”சுவாமி” நண்பருக்கும் ஒரு ”ஓ” போடுங்கள்.


இன்றைய நாள் மிகவும் நல்லது.




ஞானச்செருக்கும் கலைத்தாயின் குழந்தைகளும்

சில காலங்களுக்கு முன் இணையத்தில் ஒரு கவிஞரைப் பற்றி அறிக்கிடைத்தது. தற்போது சில நாட்களாக அவரைப்பற்றி எனக்குள் இருந்த நல்லபிப்பிராயங்கள் எல்லாம் சீட்டுக்கட்டு மாளிகைகள் சரிந்து விழுவது போல தற்போது சரிந்து விழுந்திருக்கிறது. காரணம் அவரின் ஞானச்செருக்கும், தற்புகழ்ச்சியும்.

ஞானச்செருக்கு இருக்கலாம், தப்பில்லை. எதற்கும் ஒரு அளவுண்டல்லவா? அதே போலத்தான் தற்புகழ்ச்சியும்.  அந்தக் கவிஞர் விருதுகள், பாராட்டுகள், தனது வெளியீடுகள், கலைப்பயணங்கள் என்று எல்லாவற்றையும் இணையமெங்கும் பேட்டிகளின் போதும், கட்டுரைகளிலும், முகப்புத்தகத்திலும் கூறிவருகிறார். அவரின் திறமை பற்றி நான் இங்கு பேசவில்லை. வேதனை என்னவென்றால் அவரின் திறமை அவர் காட்டும் தற்புகழ்சியினால் அடிபட்டப்போகிறது என்பதே.

பலரும் அவரை ஒரு தற்புகழ்ச்சிக் கோமாளி என்றே பார்க்கிறார்கள்.  இவர் பற்றி வீக்கிபீடியாவில் உள்ள கட்டுரை பலத்த தற்பெருமைகளைக் கொண்டுள்ளது போலிருக்கிறது என்று வீக்கிபீடியா கட்டுரையாளர் ஒருவர்  அவரின் கட்டுரையின் தொகுப்பு பகுதியில் குறிப்பிட்டுள்ளதை அவதானிக்கக்கிடைத்தது.

இவரின் கட்டுரையுடன் மு.மேத்தாவின் வீக்கிபீடியா கட்டுரையை ஒப்பிட்டால், மு.மேத்தாவின் கட்டுரை மிகவும் எளிமையாகவும் தன்னடக்கமானதாயும் இருக்கிறது.

”வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை” என்கிறார் வள்ளுவர். அதாவது எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது என்னும் பொருள் கொணட குறள் இது:

பெயர், புகழ், விருதுகள், பரிசுகள், பயணங்கள் என்பவற்றின் மீதான அவரின் விருப்பத்திற்கு அக் கவிஞரின் மிகக் குறைந்த வயதும் காரணமாயிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது எனக்கு. ஆனால் அண்மைக்கால அனுபவங்கள் ஏனோ வயதுக்கும் ஞானச்செருக்குக்கும் தொடர்பில்லை என்றும் உணர்த்துவது போலிருக்கிறது. ஏன்னெனில் வயதில் முதிர்ந்த கலைஞர்களும், அனுபவசாலிகளுமான பல கலைஞர்கள் தமது ஞானச்செருக்கினால் தமது தரத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். இது பற்றி அவர்கள் புரியாதிருப்பது வேதனையே

இல்ங்கையின் முக்கிய பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், புத்திஜீவிகள் என்னும் வரிசையில் இடம்பெறக்கூடிய பலருடன் அண்மைக்காலங்களில் பழகக்கிடைத்திருக்கிறது. அவர்களின் தன்னடக்கம் என்னை கவர்ந்திருக்கிறது. நிறைகுடங்கள் அவர்கள். அதேவேளையில் பல வெறும் பானைகளின் கூக்குரல்களும், போலியான பெரியமனிதத்தன்மைகளும், சுய நன்மைக்காக நிகழ்வுகளை தயாரிக்கும் தன்மைகளும், பொறாமை - போட்டிகளும், மற்றவரின் முன்னேற்றத்தை விரும்பாத்தன்மைகளும் கொண்ட சிலரையும் அண்மைக்காலங்களில் அறியக்கிடைத்திருப்பது வாழ்வின் அனுபவங்கள் என்றால் அது மிகையில்லை.

கற்றதை அப்படியே எவ்வித மாற்றமின்றி ஒப்புவிப்பவர்களும், புதிய தலைமுறையிருக்கு தங்கள் கலையினை சிறந்த முறையில் கற்பிக்காதவர்களும் பெருங்கலைஞர்களாக இருக்க முடியுமா? என்னும் கேள்வி எனக்குள் இருக்கிறது. இப்படியான கலைஞர்கள் பலர் பெருத்த ஞானச்செருக்குடன் உலாவருவதை பார்க்கும் போது வள்ளுவரின் மேற் கூறிய குறள் எவ்வளவு ஆழமானது என்பது புரிகிறது.

என்னைப் பொறுத்தவரை ஒரு கலைஞரின் தரத்தை மாணாக்கரின் எண்ணிக்கை முடிவுசெய்வதில்லை. அக் கலைஞர் எவ்வகையில் மாணாக்கருக்கு தனது கலையை முழு அர்ப்பணிப்புடனும் பயிற்றுவித்து தனது கலையை எதிர்வரும் சந்ததியினரிடம் ஒப்படைக்கிறார் என்பதிலும், மாணாக்கரின் திறமை வெளிப்படுவதிலுமே இருக்கிறது என்பேன் நான்.

ஞானச்செருக்கு இருக்கலாம், ஆனால் அதுவே கலையை அல்லது திறமையை மழுங்கடிக்குமானால் அதனால் என்ன பயன்? எனவே சுயவிமர்சனத்துடன் கூடிய தன்னடக்கமான ஞானச்செருக்கே சிறந்தது என்பேன் நான்.




பால்வீதிப் பயணங்கள்

அண்மையில் ஓர் நாள் குளிர் படிந்து போன ஒரு பின்மாலைப்பொழுதில் ஒஸ்லோவின் மையத்தில் அமைந்திருக்கும் பிரதான நடை வீதியில் நடந்து கொண்டிருந்தேன். குழந்தைகள், இளையோர், பெரியோர், முதியோர், செல்வந்தர்கள், பிச்சைக்காரர்கள், தெருப்பாடகர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் - விற்பனையாளர்கள், போலீசார், உரிமையாளரின் பின்னே செல்லும் நாய்கள்,  வீதியோர விற்பனையாளர்கள், கையில் மதுக்கிண்ணத்துடன் பாதையோர கடையின் வெளியே குந்தியிருப்பவர்கள், பாலியல்தொழிலாளர்கள் என்று சமுதாயத்தின் சகல அங்கத்தினரும் அப் பாதையை ஏதோ ஒரு விதத்தில் கடந்து கொண்டிருந்தார்கள். என்னைப் போல்.

எனது கால்கள் மட்டும் தன்னிச்சையாய் இயங்கிக் கொண்டிருந்தன. சிந்தனையோ ”வாழ்க்கை” பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. இந்த நகரத்துக்கும் எனக்குமான உறவு 1987இல் தொடங்கியது. அன்றில் இருந்து இன்று வரை என் மனதுக்கு அமைதி வேண்டியிருப்பின் இப் பாதையின் ஆரம்பத்தில் இருந்து நோர்வே அரசனின் அரண்மனை வரையில் மேலும் கீழுமாய் இரு தரம் நடந்து போவேன். மனம் இலகுவானது போலிருக்கும். அன்றும் அப்படித்தான் மனது சரியில்லை என்பதால் நடக்க வந்திருந்தேன்.

ஒவ்வொரு காலத்திற்கு ஏற்பவும் இந்த வீதி தனது நடையுடை பாவனைகளை எவருக்கும் தெரியாமல் மாற்றிக்கொண்டே இருக்கிறது. எந்தவொரு பொருளுக்கும் ஒரு உயிர் இருப்பது போல இந்தத் தெருவுக்கும் உயிர் இருப்பதை என்னால் உணர முடிகிறது. காலத்துக்கு காலம் அது தனது மகிழ்ச்சியையும், துயரத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்கிறது. நான் இந்த வீதியுடன் நட்பாயிருக்கிறேன். அதுவும் என்னுடன் நட்பாயே இருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எம்மால் பேசிக்கொள்ளவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் முடிகிறது. சத்தியமாய் எனக்கு பைத்தியமில்லை.

இந்த வீதியினூடே எனது இருகைகளிலும் இரண்டு குருவிகளுடன் என்னை மறந்து திரிந்த நாட்களில் இந்த வீதியும் என்னுடன் சேர்ந்து மகிழ்ந்திருந்தது. சில காலங்களுக்கு முன்பு கனத்த மனதுடன், நினைவுகளுடன் மட்டுமே நடந்த போது, நட்பாய் தோளில் கையுடனும், என் துயரத்தை தன்னுடன் சுமந்துமிருக்கிறது இவ் வீதி. தொழில் இன்றி, மன அழுத்தங்கள், மனப் பாரங்களுடன் வாழ்ந்த காலங்களிலும் இவ்வீதியில் பல தடவைகள் அலைந்து திரிந்திருக்கிறேன். அப்போதும் ‌கூட தன்னால் முடிந்ததை எனக்கு உபதேசித்திருக்கிறது இவ்வீதி.

பல மனிதர்களுக்கு இல்லாத நன்றும் தீதுமான பல பண்புகள் இவ் வீதிக்குண்டு என்பதை ஒவ்வொரு முறையும் இவ்வீதியை கடக்கும் போது கண்டு கொள்கிறேன். இந் நேரங்களில் எமது புரிதல்கள் மேலும் மேலும் எதையெதையோ உணர்த்துவதாய் இருக்கிறது. இவ்வீதியை நன்கு அவதானிப்பீர்களேயானால் அன்பு, கோபம், குரோதம், காதல், நட்பு, சிறு சினேகம், பசி, வெறி, மயக்கம், தாபம், காமம், வறுமை, தவிப்பு, பிணி, அறிவு, அதிகாரம், அலட்சியம், அநாதரவு, திமிர், நிறவெறித்தீண்டாமை இப்படி எத்தனையோ வகையான உணர்வுகளை கண்டுபோவீர்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது புது வடிவமான உணர்வுகளை உணர்த்துகிறது எனக்கு, இவ் வீதி.

தன்னைக்கடந்து போகும் மனிதர்களின் கதைகளை மௌனமாக விழுங்கிக்கொள்கிறது. தினமும் ஆயிரக்கணக்கில் புதிய புதிய கதைகளுடன் ஒரு முடிவில்லாத பெரும் புத்தகமாய் தினமும் வளர்ந்தபடியே இருக்கிறது, இவ் வீதியின் கதைகள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் கதைகள் இவ் வீதியின் கற்களிலும், சுவர்களிலும், காற்றிலும் படிந்து போயிருக்கின்றன. இருப்பினும் அன்று போல்... இன்றும், இனியும் இவ் வீதி தனது வாயைத் திறக்கப்போவதில்லை. ஆனால் தன்னோடு பேசுபவர்களுக்கு மட்டும் சில கதைகளை  பகிர்ந்து போகிறது.

இவ்வீதியில் ஒரு மூத்திர மூலை ஒன்று இருந்தது. தற்போது அதை புதுப்பித்திருக்கிறார்கள். அது தற்போது புதிப்பித்த மூத்திர மூலையாகவே இருக்கிறது. முன்போ அம் மூலையில், அதன் சுய வாசனையையும் மீறி அதற்குள், பனிக்காலத்தில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தூங்கிப்போயிருப்பதை கண்டிருக்கிறேன். இப்படியும் இவ் வீதி தனது ஒரு வித சமூகசேவைவையும் செய்து கொண்டு தான் இருக்கிறது.

இவ்வீதியின் அழகான காலம் இளவேனில் காலமே. தம்மை மறந்து ஓடியாடும் குழந்தைகள், இளைப்பாறும் முதியவர்கள், கையில் வரைபடத்துடன் அலையும் சுற்றுலாப்பயணிகள், முத்தமிடும் காதலர்கள், கண்களையும், பெண்களையும் கவரும் கடைக்கண்ணாடிகள், வெய்யிலின் சுகத்தை அனுவித்தபடியே பியர் குவளையுடன் அமர்ந்திருப்பவர்களும், இசைக்கலைஞர்களும், சர்கஸ் வித்தைக்காரர்களும், பிச்சை எடுப்பவர்களும், கண்ணால் வலைவீசி விலை பேசுபவர்களும் நிறைந்திருப்பார்கள். இவ் வீதியில் வீசும் காற்றுகூட அழகாயிருக்கும் அந் நாட்களில்.

இலையுதிர்க்கால மாலைகளும் இரவுகளும் மிகவும் சோகமானவையாகவே இருக்கும். கும் இருட்டும், சிணுங்கிக் கொண்டிருக்கும் மழையும், காலுக்குள் மிதிபடும் இலைகளும், காற்றையே நடுங்கவைக்கும் குளிரும் பாதையின் உயிர்ப்புத்தன்மையை, உணர்ந்து ரசிக்கும் மனநிலையை தர மறுத்துக்கொண்ருக்கும். சோகத்திலும் ஒரு அமைதியும் அழகும் இருப்பது போல் அந் நேரத்திலும் அமைதியான ஒரு அழகு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதைப் புரிந்து கொள்ள இவ் வீதியுடன் பேசும்கலையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

பனிக்கால இரவுகள் அழகானவை. வெள்ளையுடை அணிந்த பாதையின் அழகே தனி. பனிக்கால உடையணிந்து காலின் கீழ் உலர்ந்த பனி மிதிபட நடந்தபடியே அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த அலாதியான உணர்வை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். ஒரு வித பரிபூரணமான அழகும் அமைதியையும் உணரலாம். சில நாட்களில் நடு இரவின் பின்பு தன்னந்தனியே இவ் வீதியினை கடந்திருக்கிறேன். அந்த நேரத்து பேரமைதியினூடே வீதியுடன் பேசியபடியே நடக்கும் சுகமே அலாதியானது. அற்புதமானது. இரு நண்பர்கள் தன்னந்தனியே நடப்பது போன்றது அது.

இலைதுளிர் காலத்து நாட்களும் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியான குறுகுறுப்பையும், வரப்போகும் இளவேனில்காலத்தின் சுகத்தினையும் கொண்டிருப்பதால் அழகாய்த்தானிருக்கும். பனிக்கால நீண்ட இரவுகளை கரைத்து ஒதுக்கும் வெளிச்சத்தின் மென்சூடான கதிர்களை அனுபவித்தபடியே நடப்பதிலும் பெரும் சுகம் ஒளிந்திருக்கிறது.

இன்றும் குளிரை ரசித்தபடியே நடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு தாய் ஒரு குழந்தையை சுமந்து சென்றுகொண்டிருந்தாள். குழந்தைக்கு இரண்டு வயதிருக்கலாம்.  வாயிலே சூப்பியுடன், குளிரினால் சிவந்த கன்னங்களுடன் தாயின் தோளில் தூங்கி வழிந்துகொண்டிருந்தது. எனக்கு மிக அருகிலேயே அத் தாய் நடந்து கொண்டிருந்தாள். அக் குழந்தை எட்டித் தொடக் கூடிய தொலைவு தான். தெய்வீகமான அந்த அழகை என்ன மறந்து ரசித்தபடியே எனது நடையின் வேகத்தை குறைத்து அவர்கள் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தேன்.

என் மனது இக் குழந்தையை போலவே எப்போதும் சூப்பியுடன் என்னை வலம் வந்த எனது இளையமகள் அட்சயாவின் குழந்தைப்பருவத்தை நினைத்துக்கொண்டிருந்தது. அவளுக்கு சூப்பியின் மீது அப்படியொரு காதலிருந்தது. இக் குழந்தைக்கும் அப்படியாய் இருக்குமோ என்று நினைத்திருந்த போது, தூங்கியிருந்த அக் குழந்தை கண்விழித்துப் பார்த்தது. பார்த்தது மட்டுமல்ல என்னைப் பார்த்து தெய்வீகமாய் புன்னகைத்தது. மனது மயங்கி நானும் புன்னகைத்தேன். அவர்கள் ஒரு இடத்தில் திரும்பிய போது கையை அசைத்தேன், புன்னகைத்தபடியே கையசைத்தது அக் குழந்தையும். தனிமையுணர்வு அகன்று மனம் நிரம்பிப் போனது, எனக்கு. மனதுக்குள் ஒரு வித குதூகலம் குடிவந்திருந்தது.  வேகமாய் நடக்கத் தொடங்கினேன்

அவ் வீதியின் முடிவில் வீதியினை திரும்பிப் பார்த்தேன். நீண்ட வீதியின் இருபுறமும் தெருவிளக்குகளுடன் தூரத்தே அரசனின் மாளிகை தெரிந்தது. நான், எனது மாளிகை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ”வருகைக்கு நன்றி, மீண்டும் வா” பேச வேண்டும் உன்னுடன் என்றது வீதி, இரகசியமாய் என்னிடம்.

இன்றைய நாளும் நல்லதே.

புத்திஜீவிகளா புறம் கூறும் ஜீவிகளா?

ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பொய்யான கதைகளைக் காவித்திரியும் மனிதர்கள் பற்றிய பதிவு இது.

மனிதனுக்கு மற்றைய மனிதனைப் பற்றி தூற்றி பேசித்திரிவதில் இருக்கும் சுய இன்பம் எல்லையில்லாதது போலிருக்கிறது. வள்ளுவரும் இவர்களைப் போன்றவர்களை நன்கு அறிந்திருந்திருக்கிறார் என்பது அவரின் இநதக் குறளைப்பார்க்கும் போது புரிகிறது.

அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.


இதன் பொருள்:  நல்லறத்தை ஒழுகாது இருப்பினும் கூட புறம் சொல்லாமை எனும் ஒரே ஓர் ஒழுக்கம் இனிமையைக் கொடுக்கும் என்பதாகும்.

எம்மில் பலர் மனச்சாட்சியின்றியும், தீர விசாரிக்காமலும், ஆதாரங்கள் இன்றியும் மற்றவரை நோக்கி பல விடங்களுக்கு கைவிரலை நீட்டுகிறோம். ஆனால் எப்போதாவது நாம் பேசுவதற்கு முன் சில வினாடிகளாவது நமது செயலை அல்லது பேசும் பொருளைப் பற்றி ஒரு சுயவிமர்சனம் செய்து கொள்கிறோமா? சுய விமர்சனம் என்பது பற்றி என்று மேடை போட்டு பேசும் புத்திஜீவிகளும் தமக்கு என்று வரும் போது சுயவிமர்சனத்தை மறந்து விடுகிறார்கள்  என்பதை எனது அனுபவங்கள் காட்டிப்போகின்றன.

பேசுவதற்கு தலைப்பு இல்லாது போகும் போது ஒரு மனிதனையே தலைப்பாக எடுத்து பேசித்திரிகிறோம். இன்னொருவரைப் பற்றி நாம் பேசும் பேசும் போது எவ்விதமான சுயவிமர்சனமும் இன்றி வளையும் நாக்கின் போக்கில் பேசித்திரிவதின் அபாயம் பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அல்லது பேச்சின் சுவராஸ்யம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவை பலரை சுயவிமர்சனம் இன்றி மற்றவரைப் பற்றி பேசவைக்கிறது.

பலரும் அவர்களுக்கு ஒவ்வாதவர்களைப் பற்றி ஒரு கதையை கட்டவிழ்த்து விடுவதால் பலரும் ஒரு வித குரூரமான மகிழ்ச்சியை அடைகிறார்கள். ஆனால் அவற்றின் விளைவுகள் பற்றி எவரும் நினைத்துப் பார்ப்பதாய் இல்லை. அவர்களால் ஏற்படுத்தப்படும் வேதனைகள் பற்றி எவ்வித சிந்தனையும், மனக்கிலேசம், சுயவிமர்சனம் இன்றி பல மனிதர்கள் உலாவித்திரிகிறார்கள். எந்த வேதனையும் தனக்கு வரும்போது தான் புரியும் என்பது இங்கும் உண்மையாகத்தான் இருக்கிறது. அது வரை அவர்களால் அவ் வேதனைகளைப் புரிய முடியாதிருக்கிறது. எனக்கேதோ மற்றவரைப்பற்றி புறம் கூறுபவர்கள் ஒரு வித மனோவியாதிக்கு உட்பட்டிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படியான அனுபவங்கள் சில எனக்கும் இருக்கின்றன. அவை நடைபெற்ற காலங்களை திரும்பிப் பார்க்கும் போது இன்று அவை சிரிப்பை வரவழைத்தாலும் அன்று அவை தந்து போன துயரங்களையும், மன அழுத்தங்களையும், அவமானங்களையும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது.

சில மனிதர்களால் வேறொரு மனிதனின் மகிழ்ச்சியையும், வெற்றியையும், சாதனைகளையும் தாங்க முடியாத போது அவர்கள் தங்கள் காழ்ப்புணர்ச்சிகளையும் பொறாமையையும் மற்றவரைப் பற்றி அவதூறு பரப்புவதிலேயே காட்ட முயற்சிக்கிறார்கள், காட்டுகிறார்கள் என்பது வேதனைாயான உண்மை என்பதை மறைப்பதற்கில்லை.

இவ்வாறு அவதூறு பரப்புவர்களின் செயல்கள் எந்தளவுக்கு மற்றவரையும், அவரின் குடும்பத்தாரையும், சுற்றத்தையும் பாதிக்கும் என்பதனை இவர்கள் சிந்திக்கும் அளவுக்குக் கூட இவர்களிடம் மனச்சாட்சியோ அல்லது சிந்திக்கும் திறணோ இல்லாதிருக்கிறது என்பது வேதனையே.  சற்று ஆழமாக இது பற்றி சிந்திப்போமானால் அவதூறு பரப்புபவர்களினால் மற்றவரை வெற்றிகாண முடியாது என்பதனையே அவர்களின் செயல் காட்டுகிறது.

இவ்வாறான நாட்களிலேயே நான், வாழ்வில் உற்ற நண்பன் யார்? நட்பு என்னும் பெயரில் உலாவும் முதலைகள் யார், யார் என அடையாளம் கண்டுகொண்டேன். நெருங்கிய நட்பு என்று நினைத்திருந்தவர்களின் சுயரூபம் புரிந்த நாட்கள் அவை. தவறை தவறு என்று நேரே ஏற்றுக்கொண்டு மன்னித்துக்கொள் என்ற நண்பர்களும் உண்டு. இப்படியான நண்பர்களே நட்பின் இலக்கணமாகிறார்கள். தன் தவறை அவர் உணர்ந்திருந்தாலும் தனது செயல் சரியானது என்று  வாதிடும் நண்பர்கள், நண்பர்களே இல்லை என்பேன் நான்.

,சில வருடங்களுக்கு முன் இப்படித்தான், நண்பர் ஒருவரைப் பற்றி ஆதாரமற்ற ஒரு பொய்க்கதை ஊருக்குள் பரவிற்று. நண்பருக்கு அது தெரியவந்த போது மனமொடிந்து போனார். சற்றும் ஆதாரமற்ற, நியாயமற்ற கதை என்பதை அவருடன் பழகிய நாம் அனைவரும் அறிந்திருந்தோம்.

அதன் பின் நண்பரை பேசவைப்பதே பெருங்காரியமாய் இருந்தது. மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார். மழையில் நனைந்த கோழி போலானார் பல நாட்கள். அவரால் பல காலங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பமுடியவில்லை. பல உரையாடல்களின் பின் அவதூறு பரப்புபவர்களை அழைத்து நேரடியாகவே பேசுவோம் என்னும் முடிவுக்கும் வந்தார்.

அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டது. ஆனால் எவரும் நேரில் பேசுவதற்கு வரவில்லை. பேடிகள் போல் ஒளிந்து கொண்டார்கள். நண்பரிடம் நான், இதைவிட உன் நியாயத்தை கூற வேறு எதுவும் தேவையில்லை என்று கூறினேன். அவர்களின் வார்த்தைகளில் உண்மையிருந்தால் அவர்கள் இங்கு கூடிப் பேச முன்வந்திருப்பார்களே என்று வாதித்தேன். உண்மையும் அது தானே? அவரும் உண்மையான நண்பர்கள் யார் யார் என்பதை  இச்சம்பவம் உணர்த்தியிருக்கிறது என்றார்.

நண்பரின் மனது சமாதானமடையவில்லை என்பதனை நான் நன்கு அறிவேன். அவர் இவ் வேதனையான காலங்களில் இருந்து மீண்டு வர பல மாதங்களாகலாம். இருப்பினும் நாவினால் சுட்ட வடுக்கள் ஆறியதாய் அறிந்ததில்லை நான்.

சுகத்திலும் துக்கத்திலும் பங்கு கொள்வதே நட்பு. எல்லோருக்கும் இப்படியான நட்புகள் கிடைப்பதில்லை. கிடைத்தவர்கள் அதிஸ்டசாலிகள்.

அப்பாவின் அழகிய ராட்சசி

நேற்று, எனது அப்பாவின் அழகிய ராட்சசியும் எனது அம்மாவுமாகிய சோதிராணியுடன் பேசிக்கொண்டிருந்தேன் . எங்கள் சம்பானையின் சில பகுதிகளை பதிவிடுகிறேன்.


ரிங் போகிறது...
" ஹலோ சோதி  ஹியர்"
"நான் சோதின்ட லவ்வரின் மூத்தமகன் கதைக்கிறேன்"

சிரிக்கிறார்...

"சஞ்சயன் ... தம்பி சாப்பிட்டாச்சா?"
"ம்"
"என்ன சாப்பாடு"
"பாண்"
"கறி?"
"முட்டை"
"வேலைக்கு போறியடா இண்டைக்கு?"
"இல்லை"
"அப்ப என்ன செய்யப் போறாய்?"
" ஒரு தீபாவளி விழாவும், ஒரு partyம் இருக்கிறது அங்கு போய் தண்ணியடிக்க யோசிக்கிறேன்"
"டேய், நீ தண்ணியடிப்பியா"
"கொஞ்சம், ஏன் தண்ணியடிச்சா என்ன கூடாதோ?"
".."
"உங்கட புருசன் அடிக்கேக்க மட்டும் பேசாடமல் இருப்பியள் நாங்கள் அடிச்சா பிரச்சனையே?"
"டேய், நான் அவரோட எப்படியடா இதுகளைக் கதைக்கிறது"
"அது தான் அந்தாள் அப்பவே டிக்கட்  வாங்கீட்டார்"
"டிக்கட் என்டால் என்னடா?"
"அய்யோ.."

பிறகு கதை சற்று அங்குமிங்கும் அலைந்து இப்படித் தொடர்ந்தது

"நேற்று இங்கு ஒரு நல்ல சாத்திரியாரிட்ட உன்ட சாதகத்தை கொடுத்தனான்"
"ஏன் இன்னுமொருக்கா கலியாணம் பேசப் போறீங்களோ"
"உனக்கு 46 வயது, இன்னும் சின்னப் பெடியள் மாதிரித் தான் கதைக்கிறாய், வயதுக்கேற்ற மாதிரி கதையடா"
"சரி, சரி உங்கட சாத்திரியார் என்ன சொன்னவர்?"
"நல்ல காலமாம்"
"யாருக்கு அவனுக்காமே"
"டேய்" ( அதட்டுகிறாராம்)
"உனக்குத் தான்"
"அம்மா, அந்தாளுக்கு எவ்வளவு காசு குடுத்தீங்க"
"... "
 "அம்மா, அந்தாளுக்கு எவ்வளவு காசு குடுத்தீங்க"
 "... " " உன்ட பிரச்சனைகள் ஒரு வருசத்துக்குள்ள, கெதியில தீருமாம்"
"ஏன் அவர் தீர்ப்பாராமோ"
"டேய், விசரக்கதை கதையாதயடா,  கதையக் கேளுடா"
"ம்... சரி சொல்லுங்க"
"புதிய வேலை, சம்பள உயர்வு எல்லாம் கிடைக்குமாம்"
"வேற"
"நீ பெரியாளாகப் போறியாம்"
"சரி.. அவர் இப்ப எங்க இருக்கிறார்?"
"கொழும்பில தான்"
"அம்மா" ( பாசமாக உருக்கமாக அழைத்தேன்)
"என்னடா" ( அவரும் உருகிவிட்டார்)
"அந்த சாத்திரியார என்ட செலவில் ஒரு வருடம் நான் வைத்திருக்கப்போறேன்"
"ஏன்டா"
"அவர் சொன்ன மாதிரி ஒரு வருடத்தில என்ட பிரச்சனைகள் தீரா விட்டால், அவரின்ட தலையில குட்டி குட்டி கேள்வி கேட்கலாம் தானே.. அது தான்"
"பெரியாக்களை மதியடா" ( சற்று சூடாகிவிட்டார்)
"சரி சரி வேற என்னத்தை சொன்னான் சாத்திரி" ( எனக்குள் எரிச்சல் பிக்கப் ஆகிக் கொண்டிருந்தது)
"அவர் என்று கதை, இல்லாட்டி சாத்திரியார் என்று கதை" (குரலில் கோபம் தெரிகிறது)
"சரி .. சாத்தான் என்ன சொன்னார்"  (நக்கல் கலந்த குரலில்)
"நீ திருந்த மாட்டாய்"
சரி சரி அவர் வேறு என்னு சொன்னார்?
"உனக்கு பதவியுயர்வு நிட்சயமாக கிடைக்குமாம்"
"அதெப்படி இவ்வளவு நிட்சயமாய் சொல்கிறார்?"
"உன்ட சாதகத்தை வடிவா பார்த்து தான் சொன்னவர்"
"அம்மோய்" (மிகவும் உருக்கமாய்)
"என்னடா" ( என்னை விட உருக்கமாய்)
"சாத்திரியார் எனக்கு பதவியுயர்வு என்றது சிவலோகப்பதவியாக இருக்கலாம் தானே?"

கடக் என்று தொலைபேசியை அடித்து வைக்கும் சத்தம் கேட்டது.

அப்பாவின் அழகிய ராட்சசி கோபத்திலிருக்கலாம். ஆனால் நான் இன்று மாலை தொலைபேசி எடுத்தால் எல்லாவற்றையும் மறந்து
" டேய் எப்படா இங்க வருவாய்?" என்பார் ஆசையாய்.
இது தான் எல்லா அப்பாக்களினதும் அழகிய ராட்சசிகளின் அழகு.


கதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்

முன்பொரு காலத்திலே சஞ்சயன் என்றொருவர் நேர்வேயில் வாழ்ந்திருந்தார். இப்போதும் வாழ்கிறார். அவரின் மனச்சாட்சியாகிய நான் எழுதும் ஒரு பதிவு இது.

அவருக்கும் எனக்குமான உறவு ஏறத்தாள 46 வருடங்களானது. எங்களைப் போல் சண்டைபோட்டு சாமாதானமாகியவர்கள் யாராவது இருப்பார்களோ என்பது சந்தேகமே. நாம் நண்பர்களாகவும், எதிரிகளாகவும் இருந்திருக்கிறோம். நான் வென்ற நாட்களும் இருக்கின்றன. என்னை மிதித்து துவைத்து தனது குரோதங்களை, விரோதங்களை அவர் தீர்த்துக் கொண்ட நாட்களும் உண்டு. நன்றும் தீதும் பிறர் தர வாரா!

இன்றைய பதிவு முன்பொரு காலத்தில் எமக்குள் நடந்த யுத்தத்தினைப் பற்றியது. அதில் அவரே அன்று வென்றார். பல ஆண்டுகளின் பின்னான ஒரு நாள், நான் அச் சம்பவத்தைப் பற்றி எழுதப்போகிறேன் என்றேன். எழுது என்றார, சில வாரங்கள் சிந்தித்த பின். ஆக இறுதியில் அந்த யுத்தத்திலும் வெற்றி பெற்றது நான் என்பதில் எனக்குப் பெருமையிருக்கிறது. நான் என்றெல்லாம் வெற்றிபெறுகறேனோ அன்றெல்லாம் அவரும் வெற்றிபெறுவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் அவரால் அதை ஜீரணிக்க முடியாதிருக்கும் சில பல சந்தர்ப்பங்களில்.

அந் நாட்களில் அடிக்கடி தொழில் நிமித்தமாக வெளிநாடு பயணமாக வேண்டியிருக்கும் அவருக்கு. இன்று பலராலும் கஜனி அல்லது சஞ்சய் ராமசாமி என்று செல்லமாக அழைக்கப்படும் அவருக்கு, அந்தக் காலத்தலேயே ஞாபகமறதி என்னும் நோய் அவர் உடலினுள் மெல்லப் பரவியிருந்தது.

ஒரு முறை போலந்து நாடு சென்று திரும்பிக்கொண்டிருந்தார். விமானம் 6 - 7 மணிநேரம் தாமதமாகி வந்து சேர்ந்து. வீடு வந்து சேரும் போது மேலும் 2 மணிநேரங்கள் தாமதமாகியிருந்தன. நம்மவருக்கோ பலத்த அலுப்பு. வெய்யில் காலமாகையால் பயணக்களைப்பு, வெக்கை இரண்டும் சேர்ந்து உடனே குளிப்பதற்கு அவரை உந்திக் கொண்டிருந்தன.

நமது கதாநாயகன் தனது மறதியின் மீது கடும் பயம் கொண்டவர். எனவே பயணங்களின் போது எப்போதும் அவரது கடவுச் சீட்டு அவரது காட்சட்டை பையினுள்ளே இருக்கும். அது அவருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவதை மறுப்பதற்கில்லை. அன்றும் அப்படித்தான் கடவுச்சீட்டு காட்சட்டைப் பையில் இருந்தது. குளிக்க முதல் உடைகளை அகற்றி அவற்றை உடுப்புக்கழுவும் இயந்திரத்தில் இட முதல் மறக்காமல் கடவுச் சீட்டை எடுத்து உடுப்புக்கழுவும் இயந்திரத்துக்கு மேலே வைத்தார்.

அவரின் உடுப்புக்கழுவும் இயந்திரத்துக்கு மேலே உடுப்பு காயவைக்கும் இயந்திரம் இருந்தது. இவ் இரண்டு இயந்திரங்களுக்கும் இடையில் மிகச் சிறிய இடைவெளி இருந்தது. கடவுச்சீட்டை அங்கு தான் செருகி வைத்தார். வெளியில் அரைவாசியும் உள்ளே அரைவாசியுமாக கடவுச்சீட்டு இருந்தது. உடுப்பு கழுவும் சவர்க்கார தூளை இயந்திரத்தினுள் இட்டு இயந்திரத்தை இயக்கிவிட்டு குளித்து உடைமாற்றி, உண்டு களித்து, இளவரசிகளுடன் விடையாடி ஓய்ந்து தூங்கிப்போனார் நம்ம ஹீரோ.

உடுப்புக்கழுவும் இயந்திரம் இயங்க இயங்க கடவுச்சீட்டு மெல்ல மெல்ல நகர்ந்து இரண்டு இயந்திரங்களுக்கும் நடுவில் போய் ஔிந்து கொண்டது. நம்மவரும் கடவுச் சீட்டை  சுத்தமாக மறந்து போனார். நாட்கள் ஓடின. கடவுச்சீட்டு ஒளிந்த இடத்தில் இருந்த வெளியே வரவில்லை. இவரும் அதை தேடவில்லை. ஏறத்தாள ஓரு மாதத்தின் பின் திடீர் என்று ஒரு நாள் மீண்டும் வெளிநாடு போகவேண்டி ஏற்பட்டது.

கடவுச்சீட்டை தேடினார். தேடினார். வீட்டின் எல்லைவரை சென்று தேடினார். கத்தினார், குதித்தார், அவருக்கே உரித்தான பாணியில் குழந்தைகளை வெருட்டினார். குழந்தைகள் இது சோடா போத்தல் மாதிரி.. திறந்து சற்று நேரம் புஸ்ஸ் என்று காற்று வரும் பிறகு அடங்கிவிடும் என்பதை உணர்ந்தவர்கள். அவர்கள் இவரைக் கண்டுகொள்ளவே இல்லை.

அடுத்தது அதே வீட்டில் இன்னொருவர் இருந்தார். அவருக்கும் இவருக்கும் வீட்டுக்கு வீடு வாசல்படி போல அடிக்கடி வெடிக்கும, அடங்கும். கடந்த சில நாட்களாக வெடித்துக்கொண்டிருந்தது. அதையும் சோர்த்து
 ”நீ தான் எடுத்து அதை விற்றிருக்கிறாய் என்றார்” நம்மவர்
பதிலுக்கு பார்வையால் இவரை எரித்தார் அவர்
இவர் திட்டினார் அவரை
உனது தம்பியை வெளிநாட்டுக்கு எடுக்க அதை இலங்கைக்கு அனுப்பிவிட்டாய, உனது குடும்பமே கொள்ளைக்காரர்கள என்றதும் தொடங்கியது குத்தாட்டம்.
குழந்தைகள் போய் படுத்துவிட்டார்கள்.
நம்மவரின் வாயால் அன்று வந்த வார்த்தைகளை என்னாலேயே சகிக்க முடியவில்லை. எனவே அவற்றை தவிர்த்து விடுகிறேன் இங்கு.

மற்றவர் குற்றம் சாட்டப்பட்டு, வார்த்தைகளால் காயப்படுத்தப்பட்டு கண்ணை கசக்கியதும் நம்மவருக்கு வெற்றியின் வெறியும் மமதையும் அதிகமாகி அன்றைய நாளை தனது வாழ்வின் மறக்க முடியாத நாளாக மாற்றிக் கொண்டார். நானும் பேசிப் பார்த்தேன். பச்சைத் தூஷணத்தால் திட்டினார் என்னை. அடங்கிவிட்டேன் நான்.

போலிஸ் சென்று புது கடவுச் சீட்டு பெற்றுக் கொண்ட பின்பும்  இந்த கடவுச்சீட்டு விடயம் ஏறத்தாள பல மாதங்கள் ஏறக்குறைய தினமும் நடந்தது.   மற்றவரும் இப் பிரச்சனையை எடுத்ததும் தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டார். மற்றவரை எரிச்சல் மூட்ட இதையே  இதையே ஆயுதமாக எடுத்தார் நம்மவர்.

அதே வேளை நம்மவரின் வீட்டுக்கு ஒருவர் வந்து போவார். அவர் ஆட்கடத்தல் தொழிலில் இருந்ததாகவும் வதந்தயிருந்தது. நம்மவர் அவரையும் சந்தேகப்பட்டார். திட்டினார். அறுவான் என்றார். ஊருப்படமாட்டான் என்றார். பச்சைத் தூஷணத்தாலும் திட்டித் தொலைத்தார். நான் இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டேன்.

நான் பேச முற்படும் போது என்னையும் அநியாயமாய் அடக்கினார். ஆனால் நம்பவரின் வீட்டை விட்டு வெளியில் குறிப்பிட்ட நபரின் பெயரை மறந்தும் உச்சரிக்கவும் இல்லை, புறம் பேசவும் இல்லை.  ஆதலால் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன் என்பதும் உண்மைதான்.

பின் பொருநாள் நம்மவரின் உடுப்புகழுவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காய் வேறு இடம் மாற்றிய போது ஒளிந்திருந்த கடவுச்சீட்டு வெளியில் வந்த போது நம்மவர் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே. மனிதா் தலையைக் குனிந்துகொண்டார். நான் அருகில் சென்று தோளில் கை போட்டுநாம் சற்று பேசலாமா என்றேன்.  தர்ம அடி வாங்கிய வடிவேலு போல் மிகப் பரிதாபமாய் பார்த்தார் என்னை.

அவரை அழைத்துக் கொண்டு வெளியில் சிறு நடை சென்று வந்த பின் வீட்டில் இருந்த மற்றவரிடம் வேண்டா வெறுப்பாய்  மன்னித்துக்கொள் என்றார். மாபெரும் கொளரவப் பிரச்சனையல்லவா எனவே  ஒரு சொல்லுடன் அடங்கினார் நம்மவர். நானும் பெரிதாய் எதையும் பேசவில்லை. அவர் தன் தவறை உணர்ந்ததே எனக்கு போதுமானதாய் இருந்தது.

அதன் பின்னான காலங்களில் நம்மவர் மற்றையவரிடம் ” மறதில அங்க இங்க வைக்கிறது பிறகு என்ட குடும்பத்தை இழுத்து திட்டுறது” என்று வாங்கிக் கட்டும் போதெல்லாம் நம்மவர் குனிந்த தலை நிமிராதிருப்பார்.

இது நடந்ததன் பின் எவரையும் ஆதாரமின்றி திட்டுவதை நிறுத்தியிருக்கிறார் நம்மவர். எனவே நானும் அவரிடம் இவ்விடயம் பற்றி பேசுவதை நிறுத்தியிருக்கிறேன். இது பற்றி உங்களுடன் பேச நான் பல காலமாய் முயற்சித்திருந்தாலும் அனுமதி கிடைத்து சில நாட்களே ஆகின்றன. ஆக நம்மவர் நாள் போக போக சிறுது சிறிதாய் பண்படுகிறார் என்றே யோசிக்கத்தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு?

உங்களுக்குள்ளும் எனது உறவினன் ஒருவன் இருப்பதாக அறிகிறேன். விரும்பினால் பேச அனுமதியுங்கள்.

என்னைப் பேச அனுமதித்த அவருக்கும், கதையை கேட்ட உங்களுக்கும் நன்றி.


இன்றை நாள் மிகவும் நல்லது!

தலைப்பு பற்றி தயவு செய்து திட்டாதீர்கள். மன்னித்தருளுங்கள் .. கூல் மாமு கூல்

கொலையாகாமல் மீண்ட நட்பு

ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் சுயமாய் சிந்திக்க, இயங்க சுதந்திரமாய் மூச்சுவிடும் இடைவெளி வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். அதற்கேற்ப மற்றையவர்களின் பிரச்சனைகளுக்குள் தேவைக்கு அதிகமாக தலைபோடுவதில்லை நான். எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?

பெற்றோர்கள் - பிள்ளைகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி, நண்பர்கள் இப்படியான உறவு நிலைகளில் கூட தனிமனிதனுக்கு வேண்டிய மூச்சுவிடும் இடைவெளி இருப்பது அவசியம் என்பது என் கருத்து.

மற்றயவர்களின் வாழ்வை நாம் வாழ முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் எங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் மற்றவர்களிடம் திணிக்கக்கூடாது. நாம் ஒருவருக்கு அறிவுரை வழங்கலாம், நன்மை தீமை பற்றி விளக்கலாம், வழிகாட்டலாம் ஆனால் குறிப்பிட்ட விடயம் பற்றி முடிவெடுப்பது அவரின் தனி உரிமை. அதனுள் தலையிட நமக்கு உரிமையில்லை என்பதே எனது கருத்து. சிறு குழந்தைகளைப் பற்றி நான் இங்கு பேசவில்லை. வளர்ந்தவர்களைப் பற்றியே பேசுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரிடத்தில், ஒருவர் மிகவும் நாகரீகமற்ற முறையில் ஒருவரைப் பற்றி பேசுகிறார்.  இது பெரும் பிரச்சனையாக  வெடித்த போது குறிப்பிட்ட நபர் தனது வாழ்க்கைத்துணை தனக்கு சார்பாக பேசவேண்டும் என்கிறார். அவரின் வாழ்க்கைத் துணையோ இல்லை, எனது கருத்தின் படி தவறு உன் மீது இருக்கிறது, எனவே நான் எனது கருத்தையே வலியறுத்துவேன் என்கிறார். இதுவே பெரும் பிரச்சனையாக வெடித்து ஓய்ந்தது.

வாழ்க்கைத் துணை ஏதும் தவறு செய்யுமிடமிடத்தில் அதை பிழை என்று சொல்வதனால் குறிப்பிட்ட நபர் வாழ்க்கைத் துணையை ஆதரித்து தனது கருத்தை சொல்லவில்லை என்று கூறலாமா? அப்படி கூறினால் தான் அது உண்மையான உறவின் வெளிப்பாடா? இல்லை என்பேன் நான்.

எனக்கேதோ அதில் எற்பில்லை. செய்யப்பட்ட பிழையை ஒருவரின் பகுத்தறிவு பிழை என்கிறது. அவர் அதை நிமிர்ந்த நெஞ்சுடன் தனது துணைக்கு சொல்வதிலேயே உண்மையான புரிந்துணர்வும், நியாயமும் இருக்கிறது என்பேன் நான். அதைத் தவிர்த்து பிழையை சரி என்று வாதிக்கும் போது நியாயமும், உண்மையான அன்பும் தோல்வியுறுகின்றன அங்கு.

தவறை தவறு என்று சொல்வதில் தானே உண்மையான நட்பு, ஏனைய உறவுகள் பலமடையும்? இல்லையா?

இதே போன்று தான் சில நண்பர்களும் தமது நண்பர்கள் தமது தமது எத்தகைய செய்கையையும் ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர். ஒரு வேளை அவர்களின் நண்பர் அவர்களின் கருத்துக்கு எதிர்கருத்தினை கொண்டிருந்தாலே நண்பர்கள் கண நேரத்துக்களுள் பகைவர்களாகிப்போகின்றனர்.

மிகவும் ஆறுதலாக சிந்தித்துப் பார்த்தால் இப்படியான நேரங்களில் நாம் மற்றவர்களை சிந்தித்து செயற்பட அனுமதிக்கிறோம் இல்லை என்பதும் எமது கருத்தை ஒரு வித வன்முறையு‌டன் அவர்கள் மீது திணிக்கிநோம் என்பதும் புரியும். அதாவது அவர்களின் ”மூச்சுவிடும் இடைவெளியை” நாம் தடைசெய்கிறோம். இதனால் பல பிளவுகள் உறவுகளுக்கிடையில் ஏற்பட்டுவிடுதை நாம் மறுப்பதற்கில்லை.

இன்று நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத ஒரு பெருந்துன்பத்தில் மாட்டிக்கொண்டார் என்பது அறியக்கிடைத்தது. அப்போது நான் அவருடன் நின்றிருந்தேன். என் மனமோ அவர் அதைப் பற்றி என்னுடன் பேசுவார் என்று எதிர்பார்த்தது. அவரோ ஏதும் போசாமல் நான் விடைபெறுகிறேன், எனது மனது சரியில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

எனது மனம் காயப்பட்டுப்போனது. மிகவும் நெருங்கிய நண்பர். எம்மிடையே ஒளிவு மறைவு இல்லை. எனது  நாற்றங்கள் அனைத்தையும் அவர் அறிவார். அவரின் வாழ்க்கையின் சகல பாகங்களையும் நான் அறிவேன். இப்படி இருக்க இவர் என்னிடம் ஏன் இதைப் பற்றி கூறவில்லை என்று என் மனது என்னை கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தது. அவர் மீது பலத்த எரிச்சலும் வந்தது. பின்பு அவர் என்னிடம் பேசிய போது எரிந்து விழுந்தேன் ‌அவர்‌ மீது.

இது பற்றியே நாள் முழுவதும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். நெஞ்சு முழுவதும் ஏதோ ஒரு வித சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அவரின் செய்கையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பலத்த எரிச்சலில் உளன்றுகொண்டிருந்தேன். நண்பனிடம் பகிர முடியாத ரகசியம் என்ன இருக்கிறது. நம் நட்பு உண்மையான நட்பா என்று எனக்குள் புழுங்கிக் கொண்டிருந்தேன்.


சற்று நேரம் தூங்கி எழுந்ததும் மனம் சற்று இலகுவாய் இருந்தது. இருப்பினும் நண்பரின் செய்கை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். திடீர் என ஞானம் பிறந்தது போலிருந்தது எனக்கு.

நண்பரின் தனி மனித சுதந்திரத்துக்குள் நான் தாம்.. தோம் என்று குதித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். பிரச்சனை எனக்கில்லை. அவருக்குத் தான். அது பற்றி யாருக்கு சொல்வது என்பதை முடிவெடுப்பதும் அவர் தான் என்பது சிறிது சிறிதாய் முளைக்குள் புகுந்திருந்த போது மனம் இலகுவாகிப் போனது. எனது முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டேன்.

நண்பர் வேதனையில் வாடும் போது அதற்கு ஆறுதலாயிருப்பதே பண்பான செயல், அதைத் தவிர்த்து அவர் மீது அர்த்தமில்லா கோபத்தை காட்டுவது எனது நட்பை கேவலப்படுத்து போலானது என்பதை உணர்ந்துகொண்டேன். என் மனதும் இலகுவாகிப் போனது.

நண்பருக்கு ஒரு அழகிய பூங்கொத்து  பரிசளித்து உன் சிக்கல் தீர வாழ்த்துகிறேன் என்றேன். தொலைபேசியல் நேரம் வரும் போது நிட்சயமாய் இது பற்றி உன்னுடன் பேசுவேன் என்றார். அதை முடிவு செய்வது நீ என்றேன். அவரின் சிறிது நேர மௌனம் நம் நட்பும், உறவும் எத்தகையது என்று எனக்குணர்த்திப் போனது.

சில நேரங்களில் மெளனத்தின் மொழி பல வார்த்தைகளை விட அர்த்தமுள்ளதாகிறது.

மூச்சுவிடும் இடைவெளி என்பது எல்லோருக்கும் அவசியம். அதை மற்றவருக்கு வழங்குவதன் மூலம் நாம் உறவுகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு இன்றைய சம்பவம் ஒரு சாட்சியாகிறது.

இன்றைய நாளும் நல்லதே!

மனதின் எச்சரிக்கைகளும் சில மனிதர்களும்

மனிதர்களை எடைபோடுவது ஒரு கலை. அது எனக்கு இன்னும் முழுமையாக கைவரவில்லை போலவே இருக்கிறது. எவரைப் பார்த்தாலும் நம்பலாம் போலிருக்கிறது. அதிகமாக நம்பியும் விடுகிறேன். ஆனால் அந் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும்போது என்னில் எனக்கு பலத்த எரிச்சல் வருகிறது. ஆனால் சிலரின் கண்களைப் பார்த்தவுடனேயே மனது பலமாய் எச்சரிக்கை மணியடிக்கிறது, அடித்திருக்கிறது. அப்படி எச்சரிக்கை மணியடித்த பின்பும் நான் ஏமாந்திருக்கிறேன். இதன் காரணமாக மனிதர்களை நான் தேவைக்கு அதிகமாகவே நம்புகிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏமாற்றம் என்னும் சுவரில் அடிக்கடி மோதி மூக்குடைபட்டுக் கொண்டிருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் நோர்வேயி்ல் ஒரு இடத்திற்கு குடிபெயர நேர்ந்தது. அங்கு ஒரு தமிழர் இருந்தார். வரை நான் நேரடியாக சந்திக்க முதலேயே அவர் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஏனோ அவரின் மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் உருவாகவில்லை. அவரை சந்தித்த போதும் இருவரும் பெரிதாய் பேசிக் கொள்ளவும் இல்லை. நானும் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டேன். அவரும் என்னைக் கவனிக்கவில்லை.  இந் நிகழ்ச்சியும் அவர் பற்றிய எனது கணிப்பை உறுதி செய்வதாகவே இருந்தது. பல காலங்கள்அவர் மீதான எனது கணிப்பு மாறாமலே இருந்தது.

ஆனால் 15 வருடங்களின் பின் நான் அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்த பின்னால் அந்த 15 வருட வாழ்வினை நினைத்துப் பார்க்கும் போது அவரே எனது மனதுக்கு நெருங்கியவராக இருக்கிறார். நாம் நண்பர்களாவதற்கு சில காலங்கள் எடுத்தது. நெருங்கிய நண்பர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் எமக்கிடையே புரிதல் இருந்தது. நான் தடுமாறி விழுந்தெழும்பிய போதெல்லாம் கைகொடுத்துதவியவர். பேச்சுத் துணையாய், அறிவுரை கூறுபவராய், நண்பனாய் வந்து பேருதவி புரிந்தவர். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை நான் தவறாகக் கணித்திருந்தை நினைத்தால் எனக்கே என்மீது எரிச்சல் வருகிறது.

இன்னொருவர் இருந்தார், இருக்கிறார். நாம் நெருங்கிப்பழகுவதும் இல்லை. அடிக்கடி பேசிக்கொள்வதும் இல்லை. ஊருக்குள் மிகவும் பிரபல்யம் அடைந்தவர். வயதானவர், அனுபவமிக்கவர், நியாயமான மனிதராய் இருப்பார் என்று நினைத்திருந்தேன். அவரது தோரணையைப் பார்த்து. நடையுடை பாவனையும் அப்படியே இருந்தது.

எமக்குள் சில விடயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. இருப்பினும் இருப்பினும் மனிதன் சக மனிதனுடன் பேசலாம் என்னும் மிக இலகுவான சித்தாந்தத்தை பின்பற்றுபவன் நான். எனவே எவ்வித உள்நோக்கமும் இன்றி மிகவும் நட்பாகவே பழக விரும்பினேன். பழகினேன். பலர் என்னை எச்சரித்திருந்தாலும் தீர ஆராயமல், அவர் பற்றி ஒரு வித கெட்ட அபிப்பிராயத்தை அவர் மீது கொள்ள அன்று என் மனம் ஒப்பவில்லை.

ஆனால் சில காலங்களின் பின் அவரது நடவடிக்கைகள் இவரும் ஒரு பெரிய மனிதரா? இவரயா சமூகம் தூக்கிப்பிடிக்கிறது என்னுமளவுக்கு அவரது செயல்கள் இருந்தன.

தமது கருத்துக்களுக்கு மாற்றான கருத்தக்களை கொண்டவர்களை சற்றேனும் மதிக்க வேண்டும் என்பதையாவது அவர் உணர்ந்திருந்தால் நான்  ஆறுதல்பட்டிருப்பேன்.

ஆனால் அவர் மீது, அவரின் கொள்கைகள் மீது, அவரின் பெரிய மனிதத்தன்மையின் மீது நான் பரிதாப்படும் அளவுக்கு அவர் நடவடிக்கைகள் இருந்தன. முக்கியமாக ”புறம் சொல்லல் ஆகாது” என்பதை அவர் அறியாதிருந்தார். சிலவற்றை கேட்கக்கிடைத்த போது அவர் மீதிருந்த மரியாதை குறைந்து போயிருந்தது.

மேற்கூறிய இரண்டு  சம்பவங்களும் நான் மனிதர்களை பிழையாக எடை போட்டதையே காட்டுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சமயம் ஒருவரைக் கண்டதும் மனம் அருகில் செல்லாதே, தூர விலகிப் போ என்றது. ஆயினும் ‌ஒரு பெரிய மனிதரின் வேண்டுகோளுக்காக குறிப்பிட்ட நபருடன் பழக வேண்டியேற்பட்டது. அதுவும் ஒரு சில மணி நேரங்களே பழகினேன். என் மனது எச்சரித்தது சரி என்பதை உணர்த்திப் போனார் மனிதர் மிக குறுகிய நேரத்தில்.

அப்போது நான் இந்தியாவில் வாழ்ந்திருந்தேன். அம் மனிதரை ஒரு அலுவலகத்திற்கு அழைத்துப்  சென்று அவருக்கு தேவையான உதவியினைச் செய்யுமாறு என்னை ஒரு பெரியவர் கேட்டுக் கொண்டார். என்னால் மறுக்க முடியவில்லை. குறிப்பிட்ட நபருடன் புறப்பட்டேன். பஸ்ஸில் போவது என்று முடிவாகியது. அவரை பயணச்சீட்டு எடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஆம் என்று தலையாட்டினார்.  பஸ் பயணத்தின் போது டிக்கட் பரிசோதகர்கள் என்னிடம் டிக்கட் கேட்ட போது அவரைக் காட்டினேன். அவரோ தன்னிடம் எனது டிக்கட் இல்லை தன்னிடம் இருப்பது தனது டிக்கட் என்றார். அவமானப்பட்டு வீடு வந்த போது என் மனதின் எச்சரிக்கையை நான் கவனிக்காதிருந்திருக்கிறேன் என்பது நன்கு புரிந்திருந்தது. ஆனால் அவரை நான் சரியாக எடை போட்டிருந்தேன் என்பது தற்போதும் ஆறுதலைத் தருகிறது.

இப்போதெல்லாம் ஓரளவு என் மனதின் எச்சரிக்கைகளை கேட்கத் தொடங்கினாலும் மனிதர்களை நம்பி ஏமாறும் தன்மை மட்டு்ம் மாறாதிருக்கிறது இன்னும்.

அப்படியே இருந்து விட்டு போகட்டும் என்று உள்ளாற விரும்புகிறேனோ என்னவோ. பல மனிதர்களுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதே எனக்கு போதுமாய் இருக்கிறது.

இன்றைய நாளும் நல்லதே!

பிரபாகரன் மாவீரனா?


நேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர்.  புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து  தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar  போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து.

கார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த திகதி என்பதை விட, மாவீரர்களின் வாரம் என்னும் அடையாளத்தையே கொண்டிருக்கிறது. ஏன் இந்த திகதியை தெரிவு செய்தார்கள் என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு நாளாகவே அதை நான் பார்க்கிறேன். எனினும் பல ஆண்டுகளாய் என் மனதை நெருடும் ஒரு விடயமும் அதில் அடங்கியுள்ளது.

மாவீரர்கள் என்பதனை வரையறை செய்பவர்கள் யார்? விடுதலைப் புலிகளா? அப்படியாயின் ஏன் இன்னும் தமிழனின் விடுதலைப்போராட்டத்தை உலகெங்கும் அடையாளப்படுத்திய பிரபாகரனுக்கும் அவரது தளபதிகளுக்கும் ஏன்  இன்னும் மாவீரர் பட்டம் சூட்டப்பவில்லை? என்னைப் பொறுத்தவை விடுதலைப்புலிகளின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் இணையானவர்கள் எங்கும் இல்லை என்பதே எனது கருத்து. அவர்களின் அரசியல், சமுதாய அணுகுமுறைகளில் எனக்கும் மற்றும் பலரைப் போலவே  விமர்சனங்கள் இருக்கின்றன. அது வேறு, அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் மதிப்பது வேறு.

மாவீரர்கள் என்னும் பதத்தினை தமிழ்பேசும் இலங்கையர்கள் நாம் நான் வரையறுக்கவேண்டும். எம் இனத்தின் விடுதலைக்கு வித்தான அனைவரும் எனது பார்வையில் மாவீரர்களே.  *சிவகுமாரனில் இருந்து இறுதியாய் முள்ளிவாய்காலில் சாய்ந்த கடைசித்தோழன் வரையில் அனைவரும் இதற்குள் அடங்குவர். விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பத்தில் விடுதலைக்கு தங்களை அர்பணித்தவர்கள் எவராய் இருந்தாலும், எந்த இயக்கத்தை சேர்ந்தவராய் இருந்தாலும், எந்த கொள்கைளை பின்பற்றியவராக இருந்தாலும் அவரின் இலட்சியம் தமிழ்பேசும் மக்களின் விடுதலையாய் இருந்தது. எனவே அவர்களும் மாவீரர்களே.

சகோதர யுத்தங்களினால் எம்மை நாமே அழித்துக்கொண்ட போது கொலையுண்டவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டுவது எந்த வகையில் நியாயமாகிறது? எமது விடுதலைப்போரின் இநத முடிவுக்கு முக்கிய கா‌ரணமாய் அரசியல் சாணக்கியத்தனமின்னை கூறப்படுகறது. விடுதலையின் மீது பற்றுடன் தூரப்பார்வையுடன் அரசியல் பேசிவர்கள் என்னவானார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் துரோகிப்பட்டம் சுமத்தப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டார்கள்.  உண்மையில் அவர்கள் துரோகிகளா?  அவர்களின் குடும்பங்களின் வேதனைகளைப் பற்றி எப்போதாவது சிந்திருப்போமா? எட்டப்பன் என்றும், துரோகி என்றும் எள்ளி நகையாடி தூற்றித் தள்ளிய எமது இன்றைய நிலை என்ன? சக இயக்கங்கள் இல்லாதொழிக்கப்பட்ட போது  இல்லாது போன உயிர்கள் அனைத்தும் துரோகிகளா? சற்று நேரம் உங்கள் மனச்சாட்சியுடன் பேசிப்பாருங்கள் புரியும்.

ரணங்களை கிளருவது எனது நோக்கமல்ல. எனினும் தவறுகளை உணர்ந்து, திருத்தி, நிமிர்ந்து கைகோர்க்க வேண்டிய காலமிது. ஏனவே விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவரும் மாவீரர்களே என அறிவிக்கவேண்டிய கடமை விடுதலைப் புலிகளின் அமைப்புக்களுக்கும். அவர்களின் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு உண்டு. இவ்வாறான அறிவிப்பு பலரின் ரணங்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழர்களின் ஒற்றமைக்கு பலம் சேர்க்கும்.

கார்த்திகை 27ம் திகதியை தியாகிகளின் நாளாக ஒற்றுமையாய் கொண்டாடுவோம்.

பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஒரு கவிதையின் வரிகள் இது. நமக்கு எதையோ சொல்லிப்போகிறதாய் உணர்கிறேன்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களும்
சூரியனைப் பார்த்து கையசைத்து மகிழும் போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு
வாருங்கள் நாமும் கையசைத்து மகிழ்வோம்


 * சிவகுமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இவ் ஆக்கத்தை  வெளியிட்ட போது செல்வகுமாரன் என்று எழுதப்பட்டிருந்தது. பின்னூட்டம் ஒன்றில் இத் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பின்பு சிவகுமாரன் என்று மாற்றப்பட்டது.  (30.10.2011 - 06: 49 AM)

மரடோனாவின் கால்பந்தாட்ட இளவரசிகள்

Team Princesses

இன்றைய நோர்வேஜிய பத்திரிகைகளில் ஒரு காற்ப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் அவ்வணியின் பெறு‌பேறுகள் சிறப்பாக இல்லாததனால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார் என்று இருந்தது.

இறுதியாட்டத்தில் அவரின் அணி 2-1 என்று ரீதியில் தோல்வியுற்றதால் அவர் மீது நம்பிக்கை இழந்திருந்தார்கள் அவரின் மேலதிகாரிகள். காற்ப்பந்தாட்ட உலகில் இது ஒன்றும் புதிதில்லை. தினமும் நடக்கும் விடயம் தான்.  இன்றைய பத்திரிகைச் செய்தியை வாசித்ததும் என் மனதில் நான் ஒரு காலத்தில் ஒரு அணிக்கு பயிட்சியாளனாக இருந்த காலம் நினைவிலாடியது. அது பற்றிய பதிவு தான் இது.

அப்போ 2003 - 20004 ம் ஆண்டுகளாக இருக்கலாம்.  ஒரு நாள் எனது மூத்த மகள் பாடசாலையில் இருந்து வந்து ”அப்பா உங்களுக்கு கடிதம்” என்று கடிதத்தையும் தந்து மடியிலும் குந்திக் கொண்டாள். கடிதத்தைப் படித்தேன். அதில் மகளின் வயதொத்தவர்களுக்காக ஒரு கால்ப்பந்தாட்ட அணி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது பற்றி கலந்து பேச கால்ப்பந்து விளையாட விரும்பும் குழந்தைகளின் பெற்றோரை அழைத்திருந்தனர்.

நான் கடிதத்தை வாசித்து முடித்ததும் ”அப்பா நான் புட்போல் விளையாடப் போறேன்” என்றாள். எனக்கும் கால்ப்பந்துக்கும் மிகுந்த நெருக்கமிருந்தது. மரடோனாவைப் போல் விளையாட வேண்டும் என்று இப்போ‌தும் ஆசை இருக்கிறது. மகளின் வேண்டுகோள் மனதுக்குள் தேன் வார்த்தது. சரி விளையாடுங்க. நான் கூட்டத்துக்கு போய் என்ன சொல்கிறாகள் என்று பார்க்கிறேன் என்றேன்.  இப்படி சொன்னது தான் தாமதம் வீட்டுக்குள் இருந்த ஒரு பந்தை எடுத்து வந்து ”வா விளையாடுவோம்” என்றாள்.
எனக்கும் உசார் தொத்திக்கொள்ள விட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்தோம். பந்து பட்டு ஏதோ சரிந்து விழ, சர்வதிகாரி கத்த நின்று போனது எமது விளையாட்டு.

மறு நாள் குறிப்பிட்ட கூட்டத்திற்கு சென்றிருந்தேன். பலர் வந்திருந்தனர். உள்ளூர் விளையாட்டுக்கழகம் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. 7 வயதுப் பெண் குழந்தைகளுக்கு ஒரு கால்பந்தாட்டு அணி உருவாக்குவது பற்றி உரையாடினார்கள். பலரும் அதை ஆமோதித்தனர். நானும் அமோதித்தேன். உள்ளூர் வினையாட்டுக்கழகம் சிரமதான முறையிலேயே இயங்கி வந்தது. பயிட்சியாளருக்கு வருட முடிவில் ஒரு பூச்செண்டு கொடுப்பார்கள் அதைத் தவிர எவ்வித கொடுப்பனவும் கிடையாது. எனவே பலரும் பயிட்சியாளர் வேலையை விரும்பி ஏற்பதில்லை.

பயிட்சியாளர் தெரிவு நடைபெற்றது. நான் அமைதியாய் இருந்தேன். எவரும் முன்வரவில்லை. உள்ளூர் விளையாட்க்கழகத்தின் தலைவர் எனது தொழிட்சாலையில் தொழில் புரிபவர். என்னைப் போலவே அவரும் கால்பந்தில் உலகத்தை மறக்கும் குணமுள்ளவர். எனது கால்பந்து ஆர்வத்தையும் அறிந்தவர். அத்துடன் கிழடுகளுக்கான அணியில் என்னுடன் கால்பந்து விளையாடுபவர்.

“சஞ்சயன் நீ பயிட்சியாளராக இருக்கத் தகுதியுள்ளவன். இப்போது நீயும் இந்தப் பதவியை ஏற்காவிட்டால் இந்தப் பெண்பிள்ளைகளுக்கான அணியை ஆரம்பிக்க முடியாது”  என்று கூறினார்.

அணி ஆரம்பிக்கப்படவில்லை என்று மகளுக்கு சொல்லி அவளின் மகிழ்ச்சியை கெடுப்பதா? பயிட்சியாளராக மாறி எனது ஓய்வு நேரங்களை இழப்பதா? என்று மனதைக் கேட்டேன். மனது மகளுக்கு சாதகமாய் பதில் சொல்லிற்று. “சரி நான் பயிட்சியாளனாய் இருக்கிறேன்” என்றேன்.

என்னிடம் 10 பந்துகளையும், 15 சிவப்பு நிற பயிட்சி அங்கிகளையும்,ஒரு விசிலையும் தந்து, கையைக்குலுக்கி வாழ்த்துச் தெரிவித்தபடி சென்றார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்.

வீட்டுக்கதவை திறப்பதற்கு முன்பே மகள் வாசலில் நின்றிருந்தாள். கையில் இருந்த பந்துகளைக் கண்டதும் துள்ளிக் குதித்தாள். நான் பயிட்சியாளனாதில் அவளுக்கு ஏகத்துக்கும் பெருமை. நாளை வகுப்பில் இதைச் சொல்வேன் என்றாள். அன்று தூங்க முன் நாளைக்கு  கால்பறந்து விளையாட சப்பாத்து, காலுறை, காலுக்கு பாதுகாப்பு கவசம், தண்ணீர்ப்போத்தல் போன்றவை வாங்கவேண்டும் என்றும் அவை ரோசா நிறத்தில் இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டபடியே தூங்கிப்போனாள்.

எனது மனதுக்குள் மகள் கால்பந்தில் கில்லாடியாக வருவாள். உள்ளூர் கழகத்தில் விளையாடுவாள். பின்பு மாவட்ட, மாகாண அணிகளில் விளையாடுவாள். வளர்ந்ததும் நோர்வே அணிக்கு விளையாடுவாள். பெண்களுக்கான Liverpool அணியில்  விளையாடுவாள் என்றெல்லாம் கனவு ஓடிக்கொண்டிருந்தது.

மறு நாள் சப்பாத்து வாங்க கடைக்குப் போன போது தொடங்கியது பிரச்சனை. தன்னுடைய அளவுக்கு எல்லா சப்பாத்தும் கறுப்பாய் இருக்கிறதே என்று அங்கலாய்த்தாள். நான் கால்ப்பந்து விளையாடும் சப்பாத்து கறுப்பு நிறம் என்றேன். ” என்ன நக்கலா” என்னும் தொனியில் என்னைப் பார்த்து ஒரு சிவப்பு நிற சப்பாத்தைக் காட்‌டி ” அப்ப இது என்ன?” என்றாள். அடங்கிக்கொண்டேன் நான்.  முன்றாவது கடைக்குப் போனோம். அங்கும் கறுப்புநிறச்சப்பாத்துதான் இருந்தது. விலையைப் பற்றி அவள் துளியேனும் கவலைப்படவில்லை. ரோசாநிறமுடைய காலுறையும் வாங்கினாள். காலுக்கான பாதுகாப்பு கவசத்திலும் நிறம் தேடினாள். கிடைக்கவில்லை. முகத்தை தூக்கிவைத்தபடியே கடையில் இருந்ததை வாங்கிக் கொண்டாள்.

மறு நாள் 2ம் வகுப்பு பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் பயிட்சிகள் நாளை முதல் ஆரம்பம் என்று கடிதம் எழுதி மகளின் வகுப்பில் கொடுத்துவிட்டேன். புதிய காட்சட்டை, சப்பாத்து ஆகியவற்றை வீட்டிலேயே போட்டுப் பார்த்தாள். சர்வதிகாரிக்கு தெரியாமல் சிறிது நேரம் வீட்டுக்குள் விளையாடினோம். சிறுது நேரத்தின் பின் இளைய மகளுக்கு மூத்தவள் பந்தடிக்கப் ப‌ழக்கிக் கொண்டிருந்தாள். என் மனம் பெருமையில் மிதந்து கொண்டிருந்தது.

மறு நாள் ஐந்து மணிக்கு பயிட்சிகள் ஆரம்பிக்கவிருந்தன. நானும் மகளும் 4:30 மணிக்கே மைதானத்தில் இருந்தோம். வாகனத்தால் இறங்கியவள் புல்லில் உட்காந்துகொண்டே ”அப்பா சப்பாத்தை போட்டு விடுங்கள்” என்றாள். அவளைத்  தயார்படுத்தி முடியும் போது மேலும் இரண்டு சிறுக்கிகள் வந்தனர். அவர்களுடன் ஊஞ்சலுக்கு ஓடிப்போனாள் மகள். பந்தைப்பற்றி அவர்கள் கவனிக்கவே இல்லை. வந்திருந்த பெற்றோர்கள்  சிரித்தார்கள் நானும் அசடு வழிந்தபடியே சிரித்தேன்.

5 மணி போல் மேலும் சிலர் வர பயிட்சிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கை  6 ஆக இருந்தது. விசிலை பெரிதாய் ஊதி எல்லோரையும் அழைத்தேன். எலலோரும் வந்தார்கள் மகளைத் தவிர. அருகில் போய் அழைத்தேன். “அப்புறமாய் வருகிறேன்” என்றாள். உடனடியாக வருகிறாய் அல்லது உங்களை விளையாட்டில் சேர்க்க முடீயாது என்றேன். கோபத்துடன் வந்தாள்.

பயிட்சியின்போதான விதிமுறைகளை விளக்கிய பின் பயிட்சினை தொடங்கினோம். எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில நாட்கள் வரப்போவதை உணராமல் பயிட்சி முடிந்ததுக் கொண்டோம். வீடு வந்ததும் ”சப்பாத்தைக் கழட்டி விடுங்கப்பா” என்றாள். எதிர்கால நோர்வே நாட்டு வீராங்கனைக்கு இல்லாத உதவியா என்று நினைத்தபடியே களட்டிவிட்டேன். அன்று மாலை முழுவதும் கால்பந்து பற்றியே பேசினாள். நானும் கனவுகளுடன் தூங்கிப்போனேன்.

அடுத்த பயிட்சிநாள்  இன்று மொத்தமாக 8 பெண்குழந்தைகள் வந்திருந்தார்கள். ஆனால் எனது விசில் சத்தத்தை அவர்கள் மதிப்பதாய் இல்லை. பல முறை ஊதியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலிருந்தது அவர்கள் செய்கை.

இறுக்கமான குரலை வரவழைத்துக்கொண்டு எச்சரித்தேன். வந்தார்கள். பந்துகளை காலால் தட்டியபடியே ஓடுங்கள் என்றேன். முயற்சித்தார்கள். பந்து இவர்கள் தட்டியதும் தறி கெட்டு உருண்டோடியது. அவர்கள் பின்னால் ஓடினார்கள். ஆனால் ஒருத்தி மட்டும் மிகவும் திறமையாக பந்தினை கையாண்டாள். அவளிடம் கால்பந்து விளையாடுவதற்கான மிக அசாத்திய திறமையிருந்ததை கண்டுகொண்டேன்.

சிறுது நேரத்தில் இரு அணிகளாக பிரித்து விளையாடவிட்டேன். முன்பு குறிப்பிட்ட பெண் குழந்தை ஏனையவர்களின் காலில் பந்தை படவிடாமல் தனியேயே விளையாடி கோல் அடித்தாள். அவள் மட்டும் 4 - 5 கோல் அடித்ததும் தோல்வியுற்ற அணிக்கு பந்துக்காப்பாளராக நான் நின்று கொண்டேன். அப்போதும் அவள் 2 கோல் அடித்தாள். அன்றில் இருந்து எல்லோரும் அவளின் அணிக்கே செல்ல விரும்பினர். மகள் வீட்டிலேயே தன்னை அவளின் அணியில் விடும் படி கட்டளையிட்டாள். அவளின் விருப்பம் நிறைவேறாத நாட்களில் சண்டைபிடித்தோம். அவள் அழுதாள். நான் மனவருத்தப்பட்டேன்.

இதற்குப் பின்பான ஒரு நாள் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடைபெற்று கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்த கொள்ள விரும்பினார்கள் எனது அணியினர்.  அணிக்கு உடை தேவைப்பட்டது. விளையாட்டுக்கழகம் பழைய உடைகளை தந்தது. எனது அணியில் இருந்த அழகிகளுக்கு அவை அசிங்கமாக தெரிய, அதை உடுக்கமாட்டோம் என்று போராட்டம் ஆரம்பித்தார்கள். நண்பர் ஒருவர் ஒரு பெரிய கம்பனி வைத்திருந்தார். அவரிடம் எமது அணிக்கு உடைகள் ஸ்பான்சர் பண்ண முடியுமா என்றேன். அணியின் பெயர் கேட்டார். ”இளவரசிகள்” என்றேன். அவர்களுக்கில்லாத உதவியா என்று அன்று மாலையே 10 கால்சட்டைகளும், மேலுடைகளும் தந்துதவினார். (எனது வேலையில் இருந்து அவருக்கு சில கண்ட்ராக்ட்கள் என் மூலமாக போயிருக்கின்றன என்பது எவருக்கும் தெரியாது).

அடுத்து வந்து சனிக்கி‌ழமை கால்பந்து சுற்றுப்போட்டி நடைபெறவிருந்தது. மகளின் உட்சாகத்திற்கு அளவில்லை. கனவில் கோல் அடித்துக் கொண்டிருந்தாள். சனி காலை மிகவும் நேரத்துடன் எழும்பினாள் மகள். என்னையும் விட்டுவைக்கவில்லை. குடும்பம் சகிதமாய் புறப்பட்டு மைதானம் சென்றடைந்தோம். எமது அணிக்கான சீருடையில் இளவரசிகள் நின்றிருந்தார்கள். ஒரு படம் எடுத்துக் கொண்டோம்.

முதலாவது போட்டியில் தோல்வி. இரண்டாவதும் தோல்வி. இளவரசிகளுக்கோ இதைப் பற்றிய கவலையில்லை. பெற்றோரிடம்  பணம் பெற்று நொறுக்குத் தீனியில் உலகத்தை மறந்திருந்தனர். நானும் பல வியூகங்களை அமைத்து விளையாட வைத்தேன். எனது வியூங்கள் எல்லாமே தோற்றுப் போயின.

அடுத்த வாரமும் ஒரு கால்ப்பந்து சுற்றுப்பொட்டியில் கலந்து கொண்டோம். அங்கும் படு தோல்வி. அதையிட்டு எவரும் கவலைப்படவில்லை. பெற்றோர்கள் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் என்று குழந்தைகளை பாராட்டியபடியே கலைந்து போனார்கள். இது வரை நாம் ஒரு கோல் ஆவது அடிக்காதிருந்தது எனக்கு அவமானமாய் இருந்தது. அடுத்து வந்து சுற்றுப் போட்டியில் 0 - 0 என்று முடிவு வந்தது. இது எமக்கான வெற்றி என்று இளவரிகளை தெம்பூட்டினேன். அடுத்து வந்த போட்டியில் 2-1 என்ற விகிதத்தில் தோற்றோம். ஆனால் ஒரு கோல் அடித்த மகிழ்ச்சியில் இளவரசிகள் தோல்வியை மறந்து போனார்கள். நானும் தான்

இன்றைய பத்திரிகைச் செய்தியில் 2-1 என்று தோல்வியுற்றுமையினால் பதவியை இழந்து பயிட்சியாளர் போன்று எனது பயிட்சியாளர் பதவியும் 2-1 என்று ரீதியில் தோல்வியை சந்தித்த பின் இல்லாது போயிற்று.

எனது பயிட்சிக் காலத்தில் ஒரு கோல் ஆவது அடித்தோமே என்று மனதை தேற்றிக் கொண்டேன்.  ‌அதன் பின் மகளுக்கும் கால்பந்து ஆர்வம் போய் கராட்டி ஆர்வம் வந்திருந்தது. இப்போதெல்லாம் மகளின் கால்பந்து அணியின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் ஏதோ ஒரு ஏக்கம் சுழ்ந்து கொள்கிறது. இனிமேலும் அவள் கால்பந்து வீராங்கனையாக உருவாக சந்தர்ப்பம் இருக்கிறது என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன். அதிலும் ஒரு சுய இரக்கம் கலந்த சுகமிருக்கிறது.

இன்றைய நாளும் நல்லதே!

இரண்டு முருகபக்தர்களும் ஒரு விசரனும்


அப்பாவின் நெருங்கிய நண்பர், பெயர் கந்தப்போடியார். மட்டக்களப்பில் உள்ள சித்தாண்டி என்னும்  கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தம்பியும் நானும் வைத்த பெயர் சித்தாண்டி-அப்பு (காரண இடுகுறிப்பெயர்). அம்மாவும், அப்பாவும் அவரை போடியார் என்றே அழைத்தனர்.

உருண்டு திரண்ட தேகம், மங்கிய வேள்ளைவேட்டி, சந்தனம் புசிய, வெறுமனேயான மேல் உடம்பு, காதிலே சிவப்புக் கடுக்கன், வெற்றிலைப் பெட்டி, அவ்வப்போது வாயில் சுருட்டு, வாயிலே முருகன் தேவாரம் இது தான் சித்தாண்டியப்பு. காசைக் கூட வேட்டியில் தான் முடிந்து வைத்திருப்பார். தமிழ் படங்களில் வரும் பண்ணையார்கள் மாதிரி இருப்பார் அவர்.

இவருடனான எனது நினைவுகள் எனது 10 - 1 1 வயதில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அவரிடம் வெற்றிலை கேட்டால் ”நீ சின்னப்பிள்ளை கூடாதுடா தம்பி” என சித்தாண்டித்தமிழில்* சொல்லி வெற்றிலைக்காம்பை மட்டுமே தருவார்.

எக்கச்சக்கமான பிள்ளைகள், வயல், காணி, வீடு, பண்ணை மாடுகள்… இப்படி எல்லாமே எக்கச்சக்கம், அவருக்கு. நாம் பிபிலையில், அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் திடீர் திடீர் என தோன்றுவார், சில நாட்கள் தங்கியிருப்பார் பின்பு திரும்பிவிடுவார். அவர் வீட்டிற்கு சென்றால் உபசரிப்பாலேயே தனது அதீத அன்பைக் காட்டுவார். அவ்வளவு அன்புத் தொல்லை.

எனது தந்தையார் ஒரு மிகவும் பயங்கரமான முருக பக்தர். சித்தாண்டியப்புவும் அப்பாவுக்கு சளைத்தவர்ரல்லர். ஒரு முறை பிபிலையில் இருந்து அப்பாவும், சித்தாண்டியப்புவும் கதிர்காமம் நடந்து போனதாக ஞாபகம் இருக்கிறது. காட்டில் யானையைக் கண்டதாகவும் நெருப்பெரித்து பந்தம் காட்டி யானையை துரத்தினார்களாம் என்று சொன்னார் சித்தாண்டியப்பு.


நான் 4 - 5 வயதாக இருந்த காலங்களில் ஏறாவூரில் வசித்திருந்தோம். அப்போ எங்கள் வீட்டில் ஒரு சோடி மயில்கள் இருந்தன. எனது அப்பாவிற்கு அவர் வழங்கிய பரிசு என்று பின்னாலில் அறியக் கிடைத்தது.

அவருக்கு எங்கள் வீட்டில் பெரு மரியாதை இருந்தது. அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அப்பாவின் உறவினர்களும் அவரை மதித்தார்கள். ஓரிரு முறை நாம் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் சென்ற போது அவரும் வந்திருந்தார். எப்போதும்  நெல் அல்லது அரிசி முட்டையுடனேயே வருவார். யாழ்பாணம் சென்ற போதும் அப்படியே ஒரு முட்டை நெல்லுடன் வந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில்களை முடியுமானவரை தரிசித்தார். அவரின் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்தவர்களுக்கு புதினமானதொன்றாக இருந்தது. அவர் பெரும் சத்தமாய் உரையாடும்போது அவரின் மொழியினைக்கேட்டு அவருக்குத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிததார்கள்.


என் அம்மா வைத்தியராகக் கடமையாற்றிய காலம் வரை அவரிடம் மட்டுமே மருந்து எடுத்தார். நாம் பிபிலையில் வாழ்ந்திருந்த காலங்களில் சித்தாண்டியில் இருந்து பிபிலைக்கு வந்து எம்மு‌டன் சில நாட்கள் தங்கியிருந்து, அம்மமாவிடம் மருந்து வாங்கிப் போவார்.

அப்பாவின் இறந்த போது மரணவீட்டில் அமைதியாய் அப்பாவின் அருகில் நின்றிருந்தார். அடிக்கடி என்னை அணைத்து ஆறுதல்படுத்தினார். அப்பாவை எரித்த அன்று இரவு சாம்பல் அள்ளுவதற்காய் என்னுடன் வந்த பெரியவர்களில் இவரும் ஒருவர்.

இதற்குப் பின்னான காலத்தில் எமக்கு வயல் செய்வதற்கு காணியும், இயந்திர வசதிகளையும் செய்து தந்தவர். எமது வயலை தனது வயலைப் போல தனது மூத்தமகன் மூலமாக கவனித்துக் கொண்டார்.


1985ம் ஆண்டின் பின் நான் அவரை சந்தித்ததாக நினைவில் இல்லை. அடிக்கடி அம்மாவின் கடிதங்களில் பெரியதம்பியை கேட்டதாச் சொல்லியிருப்பார். 2005 இல் சித்தாண்டி போய் அவரைச் சந்தித்த போது முதுமை தன் அதிக்கத்தை அவரின் மேல் காட்டியிருந்தது. ஆயினும் சித்தாண்டியப்புவில் அத்தனை மாற்றம் தெரியவில்லை. அருகில் அழைத்து தம்பி உண்ட அப்பாவைப் போல இருக்கிறாய் என்று என் தலையை தடவிவிட்டு மெதுவாய் சிரித்தார். நானும் சேர்ந்து சிரித்தேன்.


”தம்பி வயது பெயித்துது, இதிலையே கிடக்கன், முருகன் கூப்பிரான் இல்லை” என்றார் சித்தாண்டி முருகன் கோயில் இருந்த திசையை பார்த்து கும்பிட்டபடி. என்னால் எதுவே பேச முடியவில்லை. அப்பாவைப் பற்றிப் பேசினார். எனது குடும்பத்தை விசாரித்தார்.  தனது ஒரு மகள் மணமுடிக்காமல் இருப்பது அவருக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது. ”அவளுக்கு உன்ர வயசிரிக்கிகும் இனி யாரு கட்டப்போறா” என்ற போது குரல் தளுதழுத்தது.


நான் அங்கிருந்த போது அவரின் பேரன் ஒருவர் விடுதலைப்போரில் விதையான செய்தி வந்தது. மகனின் மேலிருந்த கோவம் காரணமாக மரண  வீட்டுக்கு போகவில்லையாம் என்றார். ஆனால் இழப்பின் வேதனையை அவரால் மறைக்க முடியவில்லை. ஏதோ அவர் அங்கே போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

நான் புறப்பட்ட போது வெற்றிலை மடித்துத் தந்தார் (வளர்ந்துவிட்டேன் என நினைத்தாரோ?), புகையிலை வேணுமா என்று கேட்ட போது வேண்டாம் என்றேன், பல்லில்லா தன் சிவந்த வாயினால் எச்சில் தெறிக்க வெடித்துச் சிரித்தார்.

என்னை அருகில் அழைத்து முகத்தை தடவி ”தம்பி காலம் கெட்டுகிடக்கு கவனமா பெயித்து வா” என்றார்.

அடுத்த முறையும் சித்தாண்டியப்புவை போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்ததாக அம்மா கூறிய போது அம்மாவின் குரலும், எனது மனமும் கனத்திருந்தது.


..............

* சித்தாண்டித் தமிழ் கேட்டிருக்கிறீர்களா? மட்டக்களப்புத் தமிழின் இனிமையான ஒலிப்பிரிவுகளில் ஒன்று அது.
என்னவென்று அதை எழுத்தில் எழுதலாம் என்று தெரியவில்லை.. என்றாலும் முயற்சிக்கிறேன்: உதாரணமாக ”என்னடா தம்பியை”  ”என்ன்னடாம்பி” என்பார்கள் (அதற்கொரு ராகமுண்டு)

சித்தாண்டித்தமிழில் ஒரு தூஷன வார்த்தை அடிக்கடி பாவிக்கப்படுவதாக பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சித்தாண்டிஅப்பு அப்படியான வார்த்தைகளை பாவித்ததில்லை.