புண்ணியமூர்த்தி சோ் (மாஸ்டர்)

முதன் முதலில், 1976 இல், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அறிமுகமாகிய ‌ஆசான், எனது வழிகாட்டி. 1984 வரை தினமும் சந்தித்த சரித்திரம், அவர்.

பரந்த முகம். அந்தக்காலத்து ரவிச்சந்திரனின் மீசை போன்ற மெல்லியதோர் மீசை. சற்றே பெரிதான பற்கள், லைட்- கரியர் பூட்டிய சைக்கில், வெள்ளைசேட் வௌ்ளை கால்சட்டை, மிகுந்த எளிமை, இது தான் அவர்.

இவற்றைவிட அவரை அடையாளம்காண அவரின் குரல் போதுமானது.

சில குரல்கள், அவர்கள் சொல்லாமலே எம்மை கீழ்படிய வைக்கும். ஆனால் புண்ணியமூர்த்திசேரின் குரலில் ஒன்றும் அப்படி ஒரு வசீகரமும் இல்லை.

ரோட்டோரத்தால் நடக்கும்போது காதுக்குள்வந்து ஒலியெழுப்பும் பாரவூர்தியின் ஹோன் போன்றது அவரது குரல். கீழ்ப்படியச் சொல்லாது, சும்மா ஒரு பயத்தை மட்டும் தற்காலிகமாய் தந்து போகும், அவ்வளவுதான்.
ஆனால் மாணவர்களின் காதுமட்டும் கிழிந்து தொங்கும், சில நிமிடங்கள்.

விளையாட்டுப்போட்டிகளின்போது பல ஆசிரியர்களுக்கு ஒலிபெருக்கி தேவைப்படும், ஆனால் எங்கள் புண்ணியமூர்த்திசேர் அதைத் தூக்கி நான் கண்டதே இல்லை. அவருக்கு அது தேவையும் இல்லை.

அவரிடம் இருந்த ஒரேஒரு கெட்டபழக்கம் மூக்குத்தூள் போடுவதுதான். அவரின் கைலேஞ்சியின் நிறம், வேண்டாம் அது பற்றி நாம் பேசவேண்டாம், இவ்விடத்தில். ஆனால் அவரின் கைலேஞ்சியை யார் அவருக்குத் தோய்த்துக்கொடுத்தார்கள் என்ற சந்தேகம் இன்றும் எனக்குண்டு. அவரே தோய்த்தாரா? இல்லாவிட்டால் மனைவி தோய்த்தாரா? மனைவியிடம் கொடுத்திருந்தார் எனின் புண்ணியமூர்த்திசோ்ருடன் எனக்கு மிகுந்த கோபம் வரும்.

காலைப் பொழுதுகளில் அவர் முதற்பாடம் கற்பிக்கும் போது அவரது வெள்ளைக் கால்சட்டையின் பொக்கட் வாயில்கள் இரண்டும் வெள்ளையாய் இருக்கும், ஆனால் கடைசிப் பாடம் எடுக்கும் போது ஐயோ!!!!!!! அதைக் கேக்காதீர்கள். ஆனால் தினமும் தோய்த்து வெள்ளையாய் மினுங்கும் காட்சட்டையை அணிந்துவருவார்.

ஒரு முறை, எங்களுடன் பாடசாலை விடுதியில் தங்கியிருந்த மனோகரன், இளங்கோஅண்ணண் கோஸ்டியிடம் அவர் மூக்குத்தூள் வாங்கக் குடுத்தபோது, அவர்கள் சிறிது மிளகாய்த்தூள் கலந்து...
அதை அவர் கண்ணை மூடி, தன்னை மறந்து
மூக்கினுள் ஊறுஞ்சியிழுத்து
சற்று நேரத்தின் பின்
தும்மித் தும்மிக் களைத்து
நிதானம் காற்றில் பறக்க
கோபத்தில் முகம் சிவக்க

மனோகரன், இளங்கொ அண்ணர்களின்
காது கிளியக் கிளிய
கத்தி அனுப்பியது
மட்டக்களப்பு மத்திய கல்லூரி
எமக்குத் தந்தனுப்பிய
மறக்க முடியாத
சிரிப்பலைகள்.

அன்பான,  பண்பான மனிதர். கத்துவாரே தவிர, அடிக்க மாட்டார். மனிதம் நிறைந்த மனிதர், அவர்.

வறுமைப்பட்ட மாணவர்களுக்கு தன் செலவில் பஸ் சீசன் டிக்கட் எடுத்துக் கொடுத்தவர்.

சுகாதாரம், விளையாட்டு, சாரணீயம், சிரமதானம், பள்ளிக்கூடத்திற்கு நேரஅட்டவனை தயாரிப்பது போன்றவையே அவரின் அடையாளங்கள். அவர் இல்லாதிருந்தால் எங்கள் பேராசான் பிரின்ஸ் சேர்கூட ஆட்டம் கண்டிருப்பார் என்பேன் நான். பாடசாலையின் சகல செயற்பாடுகளிலும் அவர் இருந்தார்

அவர்
பாடசாலைக்கு டைம் டேபிள் போடும் அழகு
அலாதியானது.
புள்ஸ்க்கைப்பேப்பர் நான்கு எடுத்து
அவற்றை, ஒன்றோடு ஒன்றோடு
வேப்பம் பிசின் போட்டு ஒட்டி
மஞ்சல்நிற மரத்திலான அடிமட்டத்தினால்
பல கோடுகளைக்
குறுக்கும் நெடுக்குமாய் போட்டு
அழித்து
மீண்டும் போட்டு

x அச்சில் வகுப்புகளின் பெயர் எழுதி
y அச்சில் ஆசிரியர்களின் பெயர் எழுதி
அப்பப்பா, பாடசாலைக்கே
குறிப்பு எழுதும் சாத்திரி போல
அடிக்கடி மூக்குத் தூள் போட்டபடி
தலையை அந்தப் பேப்பருக்குள்
பூகுத்தி வைத்திருப்பார்.
அந்த நேரத்தில்
”சோ்” என்று கூப்பிட்டால்
அவரின் வாய் கத்தாது
ஆனால், கண் கத்தும்.
எப்படியோ
எல்லோருக்கும்
பொருந்தக் கூடிய
நேர அட்டவணையைத் தயாரித்து
அவரின் கந்தோரில் ஒட்டி வைத்திருப்பார்.
(யாராவது அதை ஆவணப்படுத் தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன். இருக்குமா?)

அவரின் மூத்த மகன் நவனீதன் (பட்டப் பெயர் ”பூனை”) எங்களுடன் தான் படித்தான். மிகுந்த அமைதியானவன் தான். ஆனால் ஒரு முறை விவசாயத்தில் நாம் ”மரங்களை ஒட்டுதல்” பற்றிப் படித்த போது ”பூனை”  வீட்டிற்குப்போய் ரோசாப்பூ மரத்தை வெட்டி, வீட்டில் இருந்த பப்பாசி மரத்தோடு ஒட்டி, விவசாயப்புரட்சி செய்திருக்கிறான்.
 
அடுத்தநாள் இந்த விவசாயப்புரட்சியை எங்கள் அரசவையில் புண்ணியமூர்த்தி சேர் அறிவித்ததால்,  பாவம், பூனை, நொந்து நூலாய்ப் போனான்.

சுகாதாரப் பாடம் நடத்துவார். இனப்பெருக்கம் என்றால் சொல்லவா வேணும் கேட்கவா வேண்டும், அந்த காலத்தில்.

எங்கள் கேள்விகளுக்கு நக்கலும், குறும்பும், குசும்பும் கலந்து பதிலளித்து லாவகமாய் பாடம் நடாத்துவார்.

எங்கள் பின்வரிசைக் கதாநாயகனான அமீர்அலி, ஒரு முறை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த போது, வின்சர் தியட்டரருகில் இருந்த பெட்டிக்கடையில் வாங்கிய ”பலான” புத்தகத்தை முழு வகுப்பும், இனிப்பை மொய்த ஈக்கள் போல சுற்றியிருந்து பார்த்தது.

நாம், உலகம் மறந்து ”உயர் இலக்கியம்” படித்துக்கொண்டிருந்த போது மெதுவாய் வந்து
ம்..ம் என்று கனைத்தார்
வேர்த்து விறைத்து நின்ற போது
ம் என்று கைய‌ை நீட்ட
”உயர் இலக்கியம்” கை மாறியது
தலையங்கம் பார்த்து
சிரித்தவர்
யாரும் வாசிக்காதவர்கள்
இருந்தால்
வந்து கேளுங்கோ
தாறேன், என்று சொல்லி எடுத்துச் சென்றார்.
‌அதே நாள்
பாடம் நடாத்த வந்த போது அதைப் பற்றி
தெரியதது போல‌வே பாடம் நடாத்தினார்.

வீட்டில் மாடு வளர்த்தார். அந் நாட்களில் அவர்தான் பாடசாலை விடுதிக்கும் பொறுப்பாயிருந்தார். விடுதி குசினிக் கழிவுகளை வீட்டிற்குக் கொண்டு  செல்வார். அந்தக் காலத்திலேயே recycle பற்றி தெரிந்து வைத்திருந்த மனிதரவர்.

பாடசாலையின் ஒவ்வோரு நிகழ்விலும் அவரின் அடையாளமும், ஆளுமையும், உழைப்பும் இருக்கும். இரவு பகல் பாராது பாடசாலைக்கு என உழைத்த மனிதரவர். பிரின்ஸ் காசிநாதரின் ஆட்சிக் காலத்தில் அவரின் வலதுகரமாய் இருந்தவர்.

அன்றிருந்த மட். மத்திய கல்லூரியின் மிடுக்கும், செருக்கும் இன்று இல்லாதது வலிக்கிறது. மிகவும் வலிக்கிறது. ‌மிக நெருங்கிய உறவொன்று தொலைந்துபோனது போன்றதோர் வலி அது.

நான், வழிதடுமாறிய நேரங்களில் தோளில் கைபோட்டு, நண்பனாய் மாறி மனச்சாட்சியுடன் உரையாடக் கற்றுத்தந்தவர் அவர். எனது ஆடோகிராப் இல்
”உண்மையாய் இரு. உண்மை உன்னை உயர்த்தும்” என்னும் தொனியில் அவர் எழுதியிருந்தது நல்ல இன்றும் நினைவிலிருக்கிறது.

பாடசாலைவாசலில் நாம் நின்றிருந்தால் ” டேய் என்னடா சுளட்டுறீங்களோ” என குறும்பாய்க்கேட்டு தானே வெடித்துச் சிரிப்பார். (பெண்கள் பாடசாலை அருகிலேயே இருந்தது)

இப்போ அவர் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன. அவரின் மகன் (பூனை) ஜேர்மனியில் வசிப்பதாய் அறிந்தேன். மற்றைய மகன் மட்டக்களப்பில் இருக்கிறார். பலமுறை சந்தித்திருக்கிறேன்.

கடைசியாய் எனது தம்பி அவரைச் சந்தித்த போது அவர் வாயிலிருந்த ஒரே ஒரு பல்லும் ஆடியபடி
உன்ட அண்ணண் எப்படி இருக்கிறான்? என்று அவர் கேட்டதை
வீடியோவில் பார்த்த போது
சத்தியமாய், கண்கலங்கியிருந்து
எனக்கு

இறுதியாய்

புண்ணியமூர்த்தி சேர், உங்களை மூக்குத்தூள் என்று பல தரம் திடடித்துலைத்திருக்கிறேன். மற்றவர்களுடன் கதைக்கும் போது கூட உங்கள் பெயரைப் பாவித்ததில்லை. மூக்குத்தூள் என்று தான் உங்களை குறிப்பிட்டு கதைத்திருக்கிறேன்...

மனிதமே........மன்னிப்பாயா?

புண்ணியமூர்த்தி மாஸ்டரின் நினைவுகளுடன்
சஞ்சயன்
23.10.2009

வட நோர்வேயில் வேற்றுக் கிரகத்து மனிதன்

இதுவும் எனது வாழ்வை அலங்கரிக்கும் அழகிய தோரணங்களில் ஒன்று
21 வருடங்களுக்கு (1989) முன) நடந்த கதை

எனது வாழ்வை அலங்கரிக்கும் அழகிய தோரணங்களில் இதுவும் ஒன்று:

முன்னொரு காலத்திலே (24 வருடங்களுக்கு முன்பு) நான் வடக்கு நோர்வேயில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எமது பாடசாலையில் இருந்து சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்துக்கு கரப்பாந்தாட்டப்போட்டியில் பங்குபற்றுவதற்காகச் சென்றிருந்தோம்.

அங்கு ஒரு சிறிய பையன் (7 -8 வயதிருக்கும்) நான் அங்கு நின்றிருந்த இரண்டு நாட்களுமே என்னைத் துப்பறியும் போலீஸ் போன்று பின் தொடர்ந்தான். என்னையே பார்த்தபடியேசிந்தித்துக்கொண்டிருந்தான்.

எங்கு போனாலும் பின்னால் வந்தான். சிறுநீர் கழிக்கச் சென்றாலும் வெளியில் காத்துக்கிடந்தான்.

உற்று உற்றுப் பார்த்தான்.
மேலும் கீழுமாக ஆராய்ந்தான்
சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான்

தன் நண்பர்களிடம் என்னைக் காட்டி ஏதோதோ பேசினான்

அந்த இரண்டு நாட்களும் அவனின் கதாநாயகன் நானாகவே இருந்தேன்
என்னடா வில்லங்கம் இது, என சிந்திக்கவைத்தது அவனது பார்வையின் ஆழம்

விளையாட்டு முடிந்து நாம் புறப்படும் நேரமும் வந்தது

நான் எமது பேருந்துக்கு அருகில் நின்றிருந்தேன். எமது பேருந்துக்கு அருகில் வருவதும், என்னருகில் வருதும் தயங்குவதும், பின்வாங்குவதுமாய் நின்றிருந்தான்.

எமது பேரூந்துக்குள் நான் ஏற முயற்சித்த போது ஓடிவந்து என் கையை வந்து பிடித்தான்.
என்ன என்றேன்?

நீ என்ன அதிக நேரம் சூரிய ஒளியில் படுத்திருந்தாயா? அது தான் நீ இப்படி எரித்திருக்கிறாயா? அது தான் இவ்வளது கருகியிருக்கிராயா? என்றா‌ன்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறினேன். பின்பு சற்றே என்னைச் சுதாரித்துக்கொண்டு, இல்லை, நான் வேறு நாட்டவன், என்னினம் இப்படியான நிறத்தையுடையுது,  எங்களில் பலர் கறுப்பு நிறத்தையுடையவர்கள் என விளக்கினேன்.

அவனுக்குப் புரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

இருந்தாலும் ஓகே, ஓகே என்றான்.

அவனின் தலையைத் தடவிவிட்டு பேரூந்தில் ஏறி யன்னலோர இருக்கையிலிருந்து வெளியே பார்த்தேன்
அப்பொழுதும் என்னனப் பார்த்தபடியே இருந்தான்.

பேரூந்து புறப்பட்ட போது பேரூந்தின் பின்புறமாய் ஓடிவந்து கைகாட்டிபடியே கரைந்து போனான்.

வேற்றுலக மனிதனுடன் இன்று கதைத்தேன் என தாயாரிடம், நண்பர்களிடமும் சொல்லி மகிழ்ந்திருப்பானோ? அல்லது நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்தானோ?

ஆனாலும் அவனின் கற்பனை என்னை பல நாட்கள் பாதித்தது. இன்றும் அவனை என்னால் மறக்க முடியாதிருக்கிறது.

அவன் முன்பு இத்தனை அழகான ஒரு கறுப்பனைக் கண்டிருக்கவில்லை என்பதே உண்மை.

எல்லாவற்‌றையும் விட அவனின் தேடல் குணம் மிகவும் பிடித்திருந்தது.

யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா?

என்னை பரவசப்படுத்திதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.  அந் நாட்களில்  நான் ஒஸ்லோவிலுள்ளு ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும்  தொழில் செய்துகொண்டிருந்தேன்.

அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து  உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன்.

மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும்,  நான் யார் யாரை ‌எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார்.
எனது வேலையைத் தொடங்கினேன்.

முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது.

நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும்.

85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்..கண்பார்வை  மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார்.  தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர்.

மிகவும் குசும்புபிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால்  எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார்.இல்லை, இல்லை என்று அசட்டுச்சிரிப்பு சரித்தபடியே  அன்று அவரிடம் இருந்து தப்பினேன்.

அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன்.

அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன்.

இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும்.

எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம்.

அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது.

நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப்பக்கமாக எறித்துக்கொண்டிருக்கிறது.

ஜன்னல் கண்ணாடியில் ‌சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன.

இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன்.

இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள்.

என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது.

அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை

அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள்.

அம் முதியவரின்  கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின்ன் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன

மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன்.நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார்.
மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன்.

தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார்.

மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன.

அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது.

சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்...

”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று

எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது,  கைகளை மெதுவாய் நீவிவிட்டேன்.

அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார்.

மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது.

ஏனையவர்கள‌ை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு.

எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது.

நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று.

இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா.

கடவுடன் வாழ்ந்த ரணமற்ற நாள்

தலையங்கம் பார்த்து பயப்படாதீர்கள்.

மனைவியும், மூத்த மகளும் ஒஸ்லோவுக்கு அரங்கேற்றம் ஒன்றிற்காகப் போயிருக்கிறார்கள். நானும் அட்சயாவும் வீட்டில் இருப்பதாக முடிவாகியது.

அவர்களை விமான நிலையத்தில் விட்டு வெளிக்கிட்டதும்......

பப்பாஆஆ என்றார் (இப்படி கடவுள் அழைத்தால் பக்தன் உருகிவிடுவான் என்பது கடவுளுக்கு நன்றாகவே தெரியும்)
என்னய்யா? என்றேன்
கண்ணால் சிரித்து, பக்தனை உருக்கிய படியே மீண்டும் பப்பாஆஆ என்றார்
சொல்லுங்கம்மா என்றார்...
அது, அது, அது என்று பத்து அது போட்டு நீ எனக்கு ஒரு ”சொக்கா” கடன் (மீளத்) தரவேணும் ஞாபகம் இருக்கா? என்றார் நோர்வே மொழியில்
அப்படியா? எப்போ கடன் வாங்கினேன் என்றேன்?
அது, அது, அது போன மாதம் என்றார்
கடவுளின் தந்திரம் புரிந்தது...
எனக்கு சுகர் ப்ரி சோடாவும் வாங்கி, அவரின் கடனையும் அடைத்‌தேன்.
வரும் வழி முழுக்க காரை தமிழாலும், நொஸ்க்காலும், கல கல வென்ற முத்துக்களாலும் கொட்டி நிறைத்தார்

சோடா குடித்து பெரிதாய் நீண்டதோர் ஏவறை விட்டேன்
அப்பாஆஆ! என்றார் மிகக் கடுமையாய்
கண்ணை சிமிட்டியபடியே என்ன? என்றேன்
உனக்குத் தெரியும்! என்றார் பெரிய மனிசி போல
மீண்டும் ஏவறை விட்டேன்
நிறுத்து!! என்றார் நொஸ்க மொழியில்.

உலகிலேயே ஆழமான கடல் கீழ் சுரங்கம் எங்கள் இடத்திற்கு அருகில் உண்டு. அது தாண்டித் தான் வீட்ட வரவேணும். சுரங்கத்தில் நாம் கடல் நீர் மட்டத்தின் கீழ் போகுமிடத்தை நீலமான ‌லைட் ஆல் மார்க் பண்ணியிருக்கிறார்கள்.

பப்பாஆ, நீந்து, நீந்து கடலினுள் போய் விட்டோம் என்றார்.
தானும் நீந்துவது போல் கையை ஆட்டினார்.
அந்தா மீன் போகுது என்றார்...
சேர்ந்து சிரித்தோம்

(சம்பாசனை தமிழிலும், நொஸ்க்கிலும் நடக்கிறது)

இதுதான் உலகிலேயே நீளமான சுரங்கமா? என்றார்
இல்லை, ஆழமானது என்றேன்
அப்ப நீளமான சுரங்கம் எவ்வளவு நீளம்?
தெரியாது... கிட்டத்தட்ட 40 கி.மீ என்று அறிந்ததாக ஞாபகம் என்றேன்
அது எவ்வளவு தூரம்?
உனது வீட்டில் இருந்து 40 தரம் உனது பாடசாலைக்குப் போகும் தூரமிருக்கும் என்றேன்
அவ்வளவு தானா? என்று அலுத்துக் கொண்டார்

பிறகு முன்னுக்கு போன காரை ஓவர்டேக் பண்ணு என்றார்...
வேண்டாம் என்றேன்
அதிசயமாய் ஓகே என்றார்.

சுரங்கம் முடிந்து வெளியே வந்ததும். முகில்களற்ற வானமும், பச்சையான உயரமான மலைகளும், நீலமான கடலும் எங்ளை வரவேற்றன.

பப்பாஆ! உலகத்தில் வடிவான இடமெது என்றார்
எனன சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது
பதில் சொல்! என்றார் நொஸக் மொழியில்
நீ தான் என்றேன்
இல்ல, எந்த இடம்? என்று கேள்வியை தெளிவுபடுத்தினார்
தனக்கு, நாம் வாழும் ஊரின் பெயரைக் கூறி அதுதான் வடிவு என்றார்..
பெருமையாக இருந்தது

கடந்து போகும் மலைகளைக் காட்டிய படியே
அந்த மலை ஏறியிருக்கிறாயா? இந்த மலை ஏறியிருக்கிறாயா என்று கொண்டே வந்தவர் திடீர் என தனக்கு தலைஇழுக்க பிரஸ் வாங்கனும், ஜக்கட் வாங்கனும், உடம்புக்கு போட கிறீம், சொக்கா வாங்கனும் என்றார்...

சுதாரித்துக் கொண்டு என்ன சொக்காவா என்றேன்.. கல கல என்று முத்துக்களைக் கொட்டினார். அவரின் கண்ணும் சிரித்தது.

திடீர் என காரி்ல் இருந்த எல்லா பட்டன்களையும் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்....
பிறகு அவற்றையெல்லாம் நிறுத்தி விட்டு ஸ்டியரிங்கை பிடித்து என்னுடன் சேர்ந்து காரோடினார்.
ஸ்டியரிங்கை வலப்பக்கமும், இடப்பக்கமும் (ஷிக் ஷாக் போல) ஆட்டி ஆட்டி தானும் அதே போல் ஆடினார்.
வேண்டாம், பின்னுக்கு கார் வருது என்றேன். நிறுத்தினார்.

தலையிழுக்கும் பிரஸ் வாங்கும் கடையினுள் சாதாரணமாய் நடந்து போய் தனக்கு ப்ரஸ் வாங்க வேனும். எங்க இருக்கு என்றார்?
விற்பனையாளர் வந்து காட்டினார்.
இது தான் வேணும் என்றும், தன்னிடம் இப்படி யொன்று இருந்ததாகவும் அது துலைந்ததால் புதிது வாங்குவதாகவும் விற்பனையாளருக்கு சரித்திரம் வளக்கினார்.
அவரும் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தார்
சரி காசைக் குடு என்னும் தொனியில் பார்வையால் கட்டளையிட்டார்
கார்ட்ஐ இழுத்தேன்

கையை பிடித்த படி, பையை சுற்றியபடியே துள்ளித் துள்ளி வந்தார் காருக்கு

உன் நண்பின் வீடு வருகிறது.. அவள் வெளியில் நின்றாள் ”ஹோன்” அடிப்பமா என்றேன்
துள்ளலுடன் ”யா” என்றார்
நண்பின் வீட்டிற்கு வெளியில் அவர்களின் நண்பிகள் கூட்டமே நின்றிருந்தது
ஓ.. யெஸ் என்றார்
காரை நிறுத்தக் கட்டளையிட்டார்
நிறுத்தினேன்
இறங்கியோட எத்தனித்த போது
ஜக்கட், கிறீம் வாங்க வில்லையா? என்ற போது
அதை மற! என்னும் தொனியில் பதில் வந்தது
சரி என்றேன்
நின்று கொஞ்சம் யோசித்தவர், இல்ல கடைக்கு விடு காரை கடைக்கு என்றார்
கெதியா போ என்றார் நொஸ்க் மொழியில்
நீ 60 வேகத்தில் இல் போறாய் 100வேகத்துக்கு க்கு போ என்றார்
இல்லை என்றேன்
போ போ என்று விரட்டினார்
கடையில் அவசர அவசரமாய் ஜக்கட், கிறீம் வாங்கினார்.
அதற்கிடையில் நண்பின் தந்தையுடன் என்னை ஒப்பந்தம் செய்யச் சொன்னார்
செய்தேன்
ப்பாஸ்ட், ப்பாஸ்ட் என்று நொஸ்க் மொழியில் உட்சாகமாய் துள்ளியபடியே காரில் வந்தார்.

காரை நிறுத்தியதும் கழுத்தை கட்டி லஞ்சம் தந்தார்
கண நேரத்தில் என்னை மறந்து காற்றில் பறந்தார்

ஒப்பந்த நேரம் வந்தது.. கூப்பிடப் போனேன்
கடவுளின் நண்பியின் தங்கை சிட்டாய் பறந்து வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு தூக்கு என்றாள். பக்திப்பரவசத்தில் அள்ளி எடுத்தேன்... கடவுள் சற்றுத்தள்ளி என்னை ஓரக்கண்ணால் அவதானிப்பது தெரிந்தது.

வாரீங்களா ஐயா? என்றேன்
பப்பாஆ, ப்பப்பாஆஆஆ என்றார்
புரிந்தது கடவுளின் எண்ணம்
அங்கு வந்ததிருந்த இன்னொரு நண்பியின் வீட்ட போகவா என்றார்.
ஐம்பதெட்டு பப்பாஆ க்கள் காற்றில் வந்த வண்ணமிருந்தன
அந்த நண்பியோ, எனது பதிலை எதிர்பாக்காமல் தனது தாய்க்கு தெலை‌பேசியில் இலக்கங்களை தடடிக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்து பதில் வரவில்லை.
கடவுள்களுக்கிடையில் ரகசிய பேச்சு வார்த்தை நடந்தது
சமாதானத் தூதும் (கட்டளையாய்) வந்தது

அதாவது நண்பியை அவரின் வீட்டில் இறக்கிவிட வேண்டுமாம்.
சரி என்றேன்
இரண்டு கடவுள்களுடன் உள் ரோட்டு ஒன்றில் பயனித்தேன்
புதிய கடவுளின் பளிங்கு போன்ற நீலக் கண்களும், காற்றில் அசைந்தாடிய சுருட்டை முடியையும் கொள்ளை அழகாயிருந்தது (அவளின் பெயர் ”ஆர்ல”. நான் ”பர்ல” என்றே அழைப்பேன் (பர்ல என்றால் முத்து என்று பொருள் படும்)
எனது கடவுள், அப்பா ஷிக் ஷாக் ஆக காரை ஓட்டுங்கள் என்றார்.
ஓடினேன்
கார் போன போன போக்கில் கல கல என சிரித்து, ஆடினார்கள். எனது நெஞ்சையும், காரையும் பெருமைப்படுத்தினார்கள்
முஸ்பாத்தியாய் இருந்ததாகவும், நன்றி என்றும் சொன்னார்கள்

முத்தின் வீடு வந்தது
முத்துக் கடவுள் சிட்டாய் பறந்து போய், அனுமதி பெற்று வந்தார்
எனது கடவுளை கைகோத்து அழகாய் அழைத்துச் சென்றார்.
வீட்டுக் கதவை பூட்ட முதல் மறக்காமல் கை காட்டினார்கள் கடவுள்கள்..
பூக்கள் சையசைப்பது போலிருந்தது

மீண்டும் வீடட வந்தேன்.
ரீவியில் புட்போல் மாட்ச் ஓடிக்கொண்டிருந்தது....

திடீர் என தொலைபேசில் கடவுள் வந்தார்
என்னய்யா என்றேன்
தனது பொம்மைகள் உடனடியாக வேணும் என்றார்
”என்ன” என்றேன் சிறுது எரிச்சலில்
தனது பொம்மைகள் உடனடியாக வேணும் என்றார், எனது எரிச்சலை சற்றும் கவனிக்காமல்
தவிர, பப்பாஆ! நண்பி என்னை இன்றிரவு தங்குமாறு ‌கேட்கிறாள் என்றார்
புரிந்தது சகலமும்..
பொறு, பெரிய இடத்திற்கு போன் பண்ணி கேட்டு சொல்கிறேன் என்றாள்
ஐ லவ் யூ என்றாள் நொஸ்க் இல்

போண் பண்ணினேன் பெரிய இடத்திற்கு... வேண்டாம் என்றார்
பாவம் கடவுள் என்றேன். வாதாடியதனால்.. சரி ஓகே என்றார்

போண் பண்ணி முத்துக் கடவுளின் தாயாரிடம் பேசி
எனது கடவுளிடமும் சொன்னேன்
அவரின் துள்ளல் தெலைபேசியினூடாகத் தெரிந்தது

சிகக்ல் ஒன்று இருந்தது.. (கடவுளின் பொம்மைகள் எல்லாம் ஒரு பெட்டியில் போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது)
சொன்னேன் சிக்கலை கடவுளுக்கு
அந்த பார்பி, கறுப்பு பார்பி, அந்த சின்ன பார்பிஐ மட்டும் கொண்டு வா என்று அடுக்கிக் கொண்டே போனார்
இறுதியாக எல்லாத்தையும் கொண்டு வா என்றார்
ஐயா! என்று இழுத்தேன்
பாய்! என்று சொல்லி தொலைபேசி இணைப்பை துண்டித்தார் கடவுள்

இரவு உடுப்பு, அவரின் கடடிப்பிடித்து படுக்கும் ”உடுப்பு போடட கரடிப் பொம்மை”, அவர் தடவிக்கொண்டே படுக்கும் அம்மாவின் பழைய டெனிம் ஜீன்ஸ, பல் துலக்க பிரஸ் எல்லாம் எடுத்து வைத்தேன்.
கட்டிவைத்த பொம்மை பெட்டியை இறக்கினேன்.
பொம்மைகளின் நிறங்களும் வடிவங்களும் கடவுள் சென்ன மாதிரி இருக்கவில்லை. தலை சுத்தியது.
கடவுளுக்கு போன் பண்ணினேன்...
என்ன? என்றார் (‌போன் பண்ணியதை அவர் விரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது)
ஐயா! பார்பிகள் கனக்க இருக்கு என்று இழுத்தேன்...
மீண்டும் அந்த பார்பி, கறுப்பு பார்பி, அந்த சின்ன பார்பிஐ மட்டும் கொண்டு வா என்று அடுக்கிக் கொண்டே போனார்
கஸ்டம் அம்மா என்றேன்..
அப்பா, அப்ப அந்த பெட்டியை பொண்டுவாங்கோ என்றார்
வெடித்துச் சிரித்து ஓகே என்றேன்

முத்துக் கடவுளின் வீட்டில் கார் நிற்க முதலே கடவுள்கள் ஓடிவருவது தெரிந்தது
பெட்டியைக் கிண்டி இது தான், இது தான் என்று எடுத்தார்
உடுப்பு பையில் கர‌டி பொம்மை இருக்கா, அம்மாட டெனிம் இருக்கா என்றார்?
ஓம் என்று சொல்லி... ஐயா போன் பண்ணுங்கோ, காலமைக்கு புட்போல் மாட்ச் இருக்கு, வெள்ளன வருவேன் என்றேன்... அதற்கிடையில் கடவுள்கள் கல, கல முத்துக்களை சிந்தியபடியே வீட்டுக் கதவை மூடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

வீட்ட வந்தேன்...
கடவுளில்லா இரவு என்முன் விரிந்து கிடந்தது
கடவுள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தமிருக்கும்..

இவ்வளவும் எழுதிவிட்டு பிழை திருத்திக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைத்தது

மறுபக்கத்தில் கடவுள்
என்னய்யா? என்றேன்
வாங்கோ என்று தழுதழுத்தார்
ஏனய்யா என்றேன்
வாங்கோ எனக் கட்டளையிட்டார்

அங்கு போன போது
முத்துக்கடவுளின் கண்ணகளில் ஏமாற்றமும், நித்திரை வழிந்தோ‌டிக்கொண்டிருந்தது

எனது கடவுள் காரில் ஏறியதும்
பப்பாஆ என்றார்
ஏன்னய்யா என்ற போது
கண நேரம் முழித்திருக வேண்டினார்
மறுக்கமுடியுமா?
சரி என்றேன் (நாளை ஞாயிறு என்பதால்)

இப்ப
கடவுள் என்னருகிலிருக்கிறார்
இல்லை இல்லை
நான் தான் கடவுளுக்கருகிலிருக்கிறேன்

கடவுள் எது செய்தாலும் அதில் அர்த்தமிருக்கும்..கடனையும்

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தந்தை

மூத்த மகள் வளர்ந்து விட்டாள். பதின்மக் காலம் அவளுடயத்தாகிவிட்டது. அப்பா, அப்பா என்று என்னைக் கதாநாயகனாய் கொண்டாடிய அவள், தானே கதாநாயகி என்னும் தொனியில் ஆடுகிறாள், நடக்கிறாள், கதைக்கிறாள், ஏன் பேசவும் செய்கிறாள் என்னை.
மவுசு குறைந்த தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். இந்த வேதனையைக் கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் தாயுடன் சினேகிதியாகி விட்டாள் என்பதை ஜீரணிக்க கஸ்டமாக இருக்கிறது.
ஒன்றாய்
உலா வருகிறார்கள்..
பச்சை எரிச்சலாய் இருக்கிறது.

உடுப்புக் கடை,
சப்பாத்துக்கடை,
கோப்பி சொப்,
சினிமா
என்று
சுற்றித் திரிகிறாகள்...

என்னோடு
கார் ஓடியதையும்,
மலை ஏறியதையும்,
பந்தடித்ததையும்,
எனது கழுத்திலிருந்து ஊர் சுற்றியதையும்,
யானை மேல் என்னுடன் இருந்து
இளவரசி போல் உலா வந்ததையும்
மறந்து விட்டாள் போல இருக்கிறது அவளது நடவடிக்கை.

இருப்பினும் அவளுக்கு தெரியாமல் ரசிக்கிறேன் அவளின் அலட்சிய பார்வையையும், பேச்சையும். பேரானந்தம் அது..

பிறந்த போது கூட நான் தான் முதலில் அவளைக் கண்டேன்... அதன் பின் தான் தாயிடம் போனாள். இன்று நான் என்று ஓருவன் இருப்பது போல காட்டிக் கொள்கிறாள் இல்லை. முன்பெல்லாம் கேட்காமல் கிடைக்கும் அவளின் முத்த மழையில் சளிப்பிடித்து கிடந்திருக்கிறேன். இப்ப வரண்ட புமியாய் எனது முகம்..... நானே கேட்டுப்போனாலும் யானைப்பசிக்கு சோளம் பொரி போல சின்னதாய் ஒன்று பட்டும் படாமலும் தருகிறாள்.

எனது உலகம் இப்படியாய் போய்க் கொண்டிருந்த போது ஒரு நாள் எனது பிறந்த நாள் வந்தது. பரிசாய் ஒரு புத்தகம் தந்தாள்..

முத்தை (முகத்தை) தொலைத்து விட்டேனோ
என்று
நடுங்கியிருந்த போது
முத்தமிட்டு
மெதுவாய்த் தந்தாள்
நோர்வேஜிய மொழியில்
”என் தந்தை”
எனறொரு தலைப்பிட்ட
ஒரு பொக்கிஷத்தை
அதிலிருந்து
மொழிபெயர்த்த சில வரிகள்

முதல் பக்கம்

30. புரட்டாதி. 2009...
என் அப்பாவுக்கு!
அன்பிலும் அன்பு
கொண்டுள்ளேன் உன்னில்.
தந்துள்ள
பொக்கிஷத்தை பாதுகாப்பாய்
என்னும் நம்பிக்கையில்
காவியா......

பொக்கிஷத்தில் இருந்து சில வரிகள்
நான்
என்றென்றும்
நன்றியுடையவள்
உனது
சிரிப்பு
பொறுமை
அன்பு
நட்புக்கு
.........................
நீ
வீராதி வீரன்
கடமையிலும்
அன்பிலும்
........................
எனது
தந்தை
நீ
இருப்பினும்
குழந்தைப் பருவத்தில்
நீ
பரிமாறிய சிரிப்புக்கும்,பொறுமைக்கும்
நாம்
ஒன்றாய் செய்த செயல்களுக்கும்
தந்த ஆறுதலுக்கும்
ஆயிரம் ஆயிரம்
நன்றிகள்
........................
என்னுடன்
நடையபின்று
உலகத்தை
காண்பித்தாய்
அதன் மீதான
பார்வைவை
பெருப்பித்தாய்
.........................
தந்‌தையே
நீ
பலமானவன்
புத்தி உடையவன்
ஆனால்
நினைக்காதே
உன்
வாழ்வு
சாமான்யமானதென்று
........................
காலச்சக்கரம் ஓடுகிறது
ஆனால்
ஏமாற்றமலும்
வற்றாமலும்
இருக்கிறது
உனதன்பு.
மாறாத
உன் வாஞ்சை
மூச்சைப்
போன்றதெனக்கு
..........................
நன்றி.
நீ
எனதுறுதியில்
கொண்ட
நம்பிக்கைக்கு
...........................
வேதனை
வலித்தது
நீ
தவறிழைத்த போது.
அதன்
தாக்கம் மரித்த போது
உண்மை தெளிந்து,
புரிந்தது
நீ
சாதாரணமானவன்
அல்லவென்று
...........................
கற்பித்தாய்
தவழ
எழும்ப
நடக்க
ஓட
விடா முயற்சி
சுயகட்டுப்பாடு
பாராட்டு
ஊக்கம்
ஆர்வம்
மேலும்
கற்கவும்
மெதுமையும்
பொறுமையும்
மரியாதையும்
நட்பும்
அன்பும்
கற்பித்தாய்
.........................
வாழ்வும்
வாழ்க்கையும்
மாறலாம்.
கனவுகள்
கானலாகலாம்
அவை பெரிதல்ல
என் மீது நீ கொண்ட அன்பும்
உன் மீது நான் கொண்ட அன்பும்
வாழ்ந்திருக்கும் வரை.
..........................
முதன் முதலில்
உலகம் கண்ட போது
உயரத்தில்
உன்
தோள் மேலிருந்தேன்
நீ
மெதுவாய் ஆடி
நடக்கையில்
வாழ்க்கை
பெருத்தது
அரைத் தூக்கத்தில்
நீ என்னைத்
தோளில் சுமந்தது
போல்
சுமந்து
மறவேன்
உன்னையும்
நீ
தந்த
குழந்தைப் பிராயத்தையும்
............................
எனதன்புத் தந்தையே
என்றென்றும்
நான் உன்னுடையவள்
............................

பொக்கிஷத்தை
பார்த்தபின்
ஈன்ற பொழுதினும், பெரிதுவந்த
தந்தையாய்
கண் கலங்கி
நெஞ்சு விம்மி
நின்றிருந்தேன்
திருப்தியான நாள்
.................
பின் பொருநாள் மெதுவாய் கேட்டேன் ”அய்யா அந்த புத்தகத்தை வாசித்து விட்டா வாங்கித் தந்தாய் என்று ”அதிலென்ன சந்தேகம்” என்றால் அலட்சியமாய்...
மீண்டும் உயிர்த்திருந்தேன்....அவளின் பதிலால்
.