எனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்தில் பெருத்த சந்தேகம் இருந்ததுண்டு

எனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்தில் பெருத்த சந்தேகம் இருந்ததுண்டு. ஏனோ அவர்களின் உடம்புப்பேச்சுஉம்(அது தான் பொடி லாங்வேஜ்), கற புற என்ற அரபி பாசையும், ஆணவம்மிகுந்த பார்வையும், மனிதர்களை மதிக்காத தன்மையும், ஒரு சிறு புன்னகையைக் கூட சக மனிதனுக்கு வழங்காத பிசினித் தன்மையும் இவர்களிடத்தில் ஈர்ப்பை ஏற்பத்தியதில்லை. இனிமேல் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

இன்று சிட்னி செல்லும் விமானத்தை காலநிலையின் சதி காரணமாக தவறவிட்டு விட்டு டுபாய் விமான நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறேன்…. சுற்றிலும் மனிதர்கள் முக்காடு போட்ட மியான்மார், பிலிப்பைன், இந்தோனேசிய பெண்களும், கடும் பச்சை நிறத்தில் தொப்பியும் சட்டையும் போட்ட நைஜிரிய பெண்களும், பல விதமான உடுப்பு போட்ட இந்தியர்களும், இவர்களையெல்லாம் தங்கள் ஆணவப்பார்வையால் ஏளனமாய் பார்க்கும் அரேபியர்களும், வெள்ளைகளும் என திருவிழா போல இருக்கிறது விமான நிலையம். ஒடித்திரியும் குழந்தைகள் மட்டும் இவர்களை சட்டை செய்யாமல் துய்மையான தமது உலகில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள், எப்போதும் போல.

பாம்பு போல வளைந்து வளைந்து போகும் வரிசையில் நின்று தாயே எனது நிலை என்ன என்றேன் வெள்ளை முக்காடுபோட்டு, கோட் சூட் போட்டு முகத்தில் அளவுக்கு அதிகமாக ஒப்பனை செய்திருந்த ஒரு இந்தோனேசிய (என்று நினைக்கிறேன்) பெண்ணிடம். பொறு என்று சொல்லி ஒரு அரேபிய மேலதிகாரியை அழைத்து எனது சிக்கலை விளக்கினான். அவனும் ஏதோ கர், புர் என்று ஏதோ சொல்ல வண்டில்மாடு தலையாட்டுவது போல ஆட்டி அவனின் பேச்சை ஆமோதித்தாள். வெயிட் 15 மனிட்;ஸ் என்றுவிட்டு கணணிக்குள் புகுந்து கொண்டாள். நான் அவ்விடத்தை விட்டு அகல எனக்கு பின்னால் இருந்தவர்களுக்கிடையில் எனது இடத்தையும், அவளின் கவனத்தையும் கைப்பற்ற ஒரு சிறிய யுத்தம் நடந்து அதி;ல் அதிகமான உடம்பையும், வாயையும் கொண்ட ஒரு ஆபிரிக்கப் பெண் வென்றாள்.

அவள் சொன்ன 15 மினிட்ஸ் முடிய எனது முகத்தை அப்பாவியாக மாற்றிக் கொண்டு அவளின் கவுண்டரில் நின்றேன். 15 நிமிடங்கள் 30, 45, 60, 75 என்று எகிறிக் கொண்டு போனது. அவளோ தெலைபேசியில் கதைப்பதும், கணணியை பார்ப்பதுமாய் இருந்தாள். நம்பினால் நம்புங்கள் கிட்டத்தட்ட 60 நிமிடங்கள் ஒரு கஸ்டமரின் பிரச்சனையையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த கஸ்டமர் அடிக்கடி தலையை ஆட்டி தனது அதிருப்தியை தெரிவித்த படி என்னைப் பாத்து சிரித்துக் கொண்டிருந்தார். நானும் அவரின் அதிருப்தியை ஆமோதித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு விதமாக அவரை அவள் அனுப்பிய போது கிட்டத்தட்ட 20 போர் தங்கள் டிக்கட்ஐ அவளை நோக்கி நீட்ட…ஹேய் மான் ஐ ஹாவ் ஒன்லி டூ ஹான்ட்ஸ் என்றாள்.
நான் ஹேய் வட் எபவுட் மீ என்றேன். நிமிர்ந்தவள் வெயிட் 15 மினிட்ஸ் என்றாள். வந்த விசருக்கு அவளை கொன்றிருப்பேன்..டுபாய் தண்டணைகள் பற்றி கேள்விப் பட்டிருப்பதால் அடக்கிக் கொண்டேன். கிட்டுத்தட்ட 45 நிமிடங்களில் மீண்டும் அவள் நிமிர்ந்தாள். பின்னால் இருந்த கியூ முன்பை விட கூடியிருந்தது.
எனதுடிக்கட்ஐ வாங்கிப் பார்த்தவள்
உனது விமானம் போய்விட்டது என்றாள்.
ஓம் தெரியும் அது தான் உன்னிடம் வந்திருக்கிறேன் என்றேன்.
விமானத்தை ஏன் விட்டாய் என்றாள்?
தாயே, நான் விமானத்தை விடவில்லை. காலநிலையின் சதி காரணமாக உங்கள் விமானம் கட்டார் போய் இங்கு வந்ததனால் எனது விமானத்தை தவற விட நேர்ந்தது என்றேன்.
என்னை நம்பாத மாதிரி இருந்தது அவள் பார்வை. எனது விமான இலக்கம் ஈ.கே 412 என்றேன். தட்டிப் பார்த்தாள் கணணியில். ஏதோ புரிந்தது போல் தலையாட்டினாள்
ஒரு மாதிரியாக 30 நிமிடங்களின் பின் புதிய போர்டிங் கார்ட், தங்க ஹோட்டல் எல்லாம் தந்து அனுப்பினாள். (கஸ்டமர் கெயர் என்றால் என்ன என்றே தெரியாத மனிதர்களும், அதிகாரிகளும்…முருகா நீ தான் எமிரேட்ஸ் கொம்பனியை காப்பாத்தனும்.)

சப்பாத்து வாங்குவதற்காக மிலேனியும் ஹோட்டலில் ஷட்டில் இருந்து பஸ்ஸில் சிட்டி சென்டருக்கு போனேன். 2 சப்பாத்து கடையில் பார்த்து ஒன்றில் காலுக்கு இதமான ஒன்றை வாங்கிய பின் பார்த்தால் நேரம் எக்கச்சக்கமாய் மிச்சம் இருந்தது. சரி ஊர் சுத்துவோம் என நினைத்து நகரத்துக்கு போகும் ஷட்டில் பஸ்ஸில் ஏறக் கொண்டேன். பஸ் புறப்புட்டதும் எங்கே இறங்குவது என்ற பிரச்சனை மண்டையை குடைந்த போது சாரதிக்கு பின் இருக்கை காலியாக இருந்ததனால் அதில் மெதுவாய் அமர்ந்து கண்ணை சாரதியின் பக்கத்திற்கு திருப்பிய போது சாரதிக்கு பக்கத்தில் தமிழ்த் தினசரிப் பத்திரிகை ஒன்று கிடந்தது. பிறகு என்ன…
நீங்கள் தமிழோ என்றேன்?
இல்ல சார், மட்றாஸ்,
நீங்கள் சிலோனா? என்றார் இந்தியத் தமிழில் அந்த சாரதி…. அப்பாடா என்றிருந்தது மனதுக்கு. ஊர், பெயர், தொழில், வருமானம் (12000 இந்திய ரூபாய்), குடும்ப நிலை எல்லாம் கதைத்தபடியே வாகனமோட்டிக் கொண்டிருந்தார் செல்லத்துரை என்னும் புதிய நண்பர். திடீர் என பின்னால் இருந்த ஒரு பெண் தான் இவ்விடத்தில் இறங்கவேணும் உடனே நிப்பாட்டு என்றார். அவரை கடுமையாய் பார்த்த சொல்த்துரை
நோ ஸ்டொப் …ஹியர்
வெயிட் வன் மினிட்
ஐ ஸடொப்
என்றார். ஆயினும் அந்த பெண் ஸ்டொப், ஸ்டொப் என்று கத்திக்கொண்டேயிருந்தாள்

யக்கா, நான் ஸ்டொப் பண்ணினா பொலீஸ் 5000 தினா பைன் அடிப்பான்;… உங்க ஊட்டுக்காரரா அத கட்டுவாரு என்று தமிழில் திட்டி முடிக்கவும் அவர் சொன்ன வன் மினிட் முடிந்து ஒரு பஸ் தரிப்பிடம் வந்த போது செல்லதுரையை செல்லமாக தனது பாசையில் திட்டியபடி இறங்கிப் போனாள் அந்தப் பெண்.

பார்தீங்களா சார்… அவுகளா பொலீஸ் பைன் அடிச்சா கட்டுவாங்க? நாம தான் கட்டணும். அந்தம்மா புரியாம திட்டிகுனுபோது என்றார். எனக்கு பாவமாயும் இருந்தது அத்துடன் அவர் எனக்கு எதையோ போதிப்பது போலவும் இருந்தது.

எங்க சார் போவணும்
தமிழ் புத்தகம் வாங்கனும் என்றேன்
என்ன புஸ்தகம்? சினிமா புஸ்தகமா என்றார் அப்பாவியாக
இல்ல என்று இழுத்தேன்
பேப்பரா? ஏன்றார்
இல்ல வேற புத்தகம் என்றேன்
நான் உங்கள தேரா துபாய்ல நம்ம ஏரியால எறக்கி உடவா என்றார்
தலையை ஆட்டினேன்
சார் ஒம்போது மணிபோல மிஸ்கோல் தாங்க நான் வந்து உங்கள ஹோட்டல்ல இறக்கிவுடுறன் என்றார்
எதையோ போசித்துக் கொண்டிருந்து போது கொழும்பு மெயின் ஸ்டீர்ட் மாதிரி சனநெருக்கடியான இடத்தில் இறக்கிவிட்டார். வீதியின் பெயர்ப்பலகை Al Sabkha Rd என்று காட்டிக் கொண்டிருந்தது. அந்த சந்தில போனா தமிழ் கட ரொம்ப இருக்கு சார் என்று கைகாட்டி இடம் காட்டிவிட்டுப் போனார்.

இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இவ்வளவு உபசாரமாக நடந்து கொண்டார்? தமிழன் என்பதாலா? இருவரும்சொந்த ஊரில் இல்லை என்பதால் மொழியும், இனமும் எம்மை நெருங்கிப்பழக வைக்கிறதோ என்னவோ… ஒஸ்லோவிலோ, லண்டனிலோ யாராவது ஒருத்தன் இப்படி உதவி செய்வானா? மற்றவர்கள் ஏன்? நானே இப்படி செய்ய செய்ய ஆயிரம் தரம் யோசிப்பன்..

ஏவரைப் பார்த்தாலும் தமிழ், சிங்கள முகங்களைப் போல இருந்தது. (இந்தியர்கள்)
சற்று நேரம் நடந்து பார்த்தேன். கொழும்பு வெள்ளவத்தை கடைகள் மாதிரியே இருந்தது. இந்தியாவிள் எல்லா மொழிகளையும் கேட்க முடிந்தது. நம்மூர் தமிழ் காதில் விழவேயில்லை நான் அங்கிருந்த 4 மணி நேரமும்.

முதலில் ஆர்வத்தை ஏற்படுத்தியது ”தமிழ்நாடு முடிதிருத்துமிடம்” என்னும் சலூன் தான். ஊரில் உள்ளது போல சிவப்பு நிறத்திலான மொத்தமான பிளாஸ்டிக் தோல் கதிரை.
அதன் இரண்டு கைபிடிகளுக்கும் குறுக்கே வைக்கப்புட்டிருந்த பலகையில் ஒரு சிறுவன்
அவன் முகத்தில் திட்டு திட்டாய் வெட்டப்பட்ட சுருட்டை மயிர்கள். அவனுக்குப் பக்கத்தில் அவனின் தந்தை. களைத்ததாலோ அல்லது தான் வளர்த்த முடி போய் விட்டதே என்ற துக்கத்திலோ காணப்பட்ட அவனது முகம் எனக்கு என எனது அப்பாவையும், நான் முடிவெட்டிய நாட்களையும் ஞாபகமூட்டின. (அந்த காலத்தில மயிர் இருந்தது சுதந்திரம் இல்ல இப்ப சுதந்திரம் இருக்கு ஆனா மயிர் இல்ல.. விதி

உள்ளே போனேன்
காட்டப்பட்ட கதிரையில் அமர்ந்தேன்
தம்பி நீங்கள் தமிழா என்றென்
ஆமா சார்… நீங்கள் தமிழா சார்? என்றார் ஆச்சரியமாக (விளங்கிவிட்டது… இவரும் எனது ப்ரௌன்(?) நிறத்தைப் பார்த்து நான் ஆபிரிக்கன் என்று நினைத்து விட்டார் என்று…ஒஸ்லோவில் என்னை கடந்து போகும் சோமாலிய நாட்டவர்கள் ”சலாம்மலைக்கும்” சொல்வார்கள். நானும் அலைக்கும்மசலாம் என்பேன் நெஞ்சில் கைவைத்தபடியே (ஏறாவூரில் வளர்ந்துவிட்டு இதையாவது சொல்லாட்டி எப்படி?)
(விமானத்தில் இருந்து எழுதுகிறேன் விமானத்தில் உள்ள டிவீ திரை நாம் இலங்கைக்கு மேலாக பறந்து கொண்டிருக்கிறோம் என காட்டுகிறது…. ஆகா என்ன டைமிங்…சரி சரி கதைக்கு வருவோம்)
ஏன் பார்த்தா அப்படி தெரியலையா என்றேன்
இல்ல சார் மொட்டையாயும், கறுப்பாயும் இருந்தீங்களா அதுதான் என்றார்
நக்கலடிக்கிறாரோ என எனது புலனாய்வுத்துறை ஆராயத்தொடங்கியதால் கண்ணாடியில் அவரின் முகத்தைப் பார்த்தேன்..
அப்பாவியாய் வெள்ளை உடுப்பில் என்னைப் பார்த்து நட்பாய் சிரித்தார்.
என்ன சார் செய்யட்டும் என்றார்… (என்ட தலையில் என்ன வெட்ட இருக்கு என்ற நக்கல் தான் அது ஹி ஹி)
சேவ் எடுத்து விடுங்களன் என்றேன்
எடுக்கலாமே என்றார்
வெள்ளைத் துவாயை இரண்டு மூன்று தரம் உதறினார். கழுத்தைச் சுற்றி கட்டி விட்டார்.
மேல சுவரில் ஒரு டீவியில் வடிவேலு களவெடுத்த ஒரு சைக்கிலை யாருக்கோ வித்துவிட்டு எஸ்கேப் ஆகிக் கொண்டிருந்தூர். கடையில் இருந்த ஏல்லோரும் வஞ்சகமின்றி மனதால் சிரித்தார்கள்.. நானும் தான். எனக்கும் வடிவேலின் இப்படியான அப்பாவித்தனமான அல்லது அடாவடித்தனமான இம்சைகள் பிடிக்கும்.
வெள்ளைத் துவாயால் என்னை சுற்றி கட்டினார்
முதுப்பக்கத்தில் இருந்து ஒரு சிறிய பலகையை மேலே இழுத்து எனது தலையை சாயவைத்தார்.
சாய்ந்தபடியே கண்ணாடியில் பார்த்தேன் என்னை. இப்படி சேவ் எடுக்கிறதில் உள்ள சுகம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். வீட்டில் சர் புர் என்று 30 செக்கனில் எடுக்கும் சேவ் எல்லாம் ஒரு சேவ்..வா?
குளிர் தண்ணிய ஸ்பிரே பண்ணிய என்னை இந்த உலகத்திற்கு கொண்டுவந்தார்
முழு முகத்தையும் இரு கைகளாலும் அமத்தி தேய்து விட்டார். மீசைப் பகுதியை விரலால் தேய்த்து விட்டார்.
இடக்கிடை மேல பார்த்தபடி வடிவேலின் லொள்ளுகளை பார்த்தபடியே இருந்தார்.
ஏதோ ஒரு கறீம் தடிவி கட்டையான மொத்தமான கைபிடி கொண்ட பிரஸ் ஒன்றை தண்ணியில் நனைத்து முகத்தில் இருந்த கறீமில் தடவ அது நுரைக்கத் தொடங்கியது.

உங்கட சலூனா என்றேன்
இல்ல சார்
கன நாளாக வேலை செய்யுறீங்களா என்றேன்
புரியல சார் என்றார்
ரொம்ப நாளா வேலை செய்யுறீங்களா என்றேன்
ஆமா சார். மூணு வருசம் என்றார்
10 -12 மணி நேரம் வேலை செய்வதாய் சொன்னார்.
12 மணிநேரம் நின்ற நிலையிலேயே வேலை...நினைத்துப் பார்க்கவே கால் நோந்தது எனக்கு. எப்படித் தான் சமாளிக்கிறாரோ?

இப்ப எனது முகத்தை கிறுஸ்மஸ்தாத்தாவின் தாடி மாதிரி வெள்ளை நுரை முகத்தை மூடியிருந்தது
ஒரு சதுரமான பழைய தமிழ் பேப்பர்துண்டு ஒன்றை எடுத்து வைத்தார் மேசையில். சவரக்கத்தில் இருந்த பழைய பளேட்ஜ களட்டி எறிந்தார். புதிய பிளேட் ஒன்றை எடுத்து மடித்து அதை இரண்டாக உடைத்து ஒரு பாதியை சவரக்கத்தியில் போட்டார். திரும்பி மேலே பார்த்தார் வடிவேலு பாருக்கோ ஆப்பு வைத்துக்கொண்டிருந்தார். வடிவேலுவை பார்த்தபடியே எனது களுத்தில் கத்தியை வைத்தார்

சரி எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்….ஆனால் கத்தி அசையவில்லை. வடிவேலுவின் விளையாட்டை ரசித்த பின்னரே தனது விளையாட்டை ஆரம்பத்தார். (தொழில்ல சுத்தமான ஆள் போல)

இரண்டு வளிப்பு வளிப்பார்…. பேப்பரில் துடைப்பார்
பிறகு இரண்டு வளிப்பு வளிப்பார்…. பேப்பரில் துடைப்பார்
இப்படியே தாடையை சேவ் எடுத்தார்
பெருவிரலால் சொக்கையை மேலே அமத்தி இழுத்தபடியே சேவ் பண்ணினார்

வாங்கு ஒன்றில் இருந்தவர்களில் ஒருவர் தனது மகனுடனான பிரச்சனையை சலூனே கேட்கிறது என்பதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் நண்பரிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். (மகன் உதவாக்கரையாம், குளப்படியாம்.. (நம்மளப் போல உலகத்தில கனபேர் இருக்கிறார்கள் என்று அறியக்கிடைத்தது ஆறுதலாயிருந்தது)

திடீர் என வடிவேலு டீவியில் இருந்து மறைய, சிக்னல் வரல என்ற படியே வேறு ஒரு தமிழ் டீவிசனல் ஒன்றை மாற்றினார்.

இப்ப எனது வாய்க்கும் நாடிக்கும் இடையிலான பகுதியை வழித்துக் கொண்டிருந்தார். நான் வாயை கொஞ்சம் உயர்த்திப் பிடித்தேன்.
இல்ல சார்.. நீங்க விடுங்க நான் வளிக்கிறன் என்றார். (அனுபவசாலி போல)

பின்னால் இருந்த பெரியவர் இப்போது மகனின் கதையை விட்டு விட்டு டீவியில் போகும் நாடகத்தின் நடிக்கும் வில்லியின் பூர்விகத்தை நண்பருக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது (ஏன் என்றால் அவருக்கு வயது 60 இருக்கும்). வில்லியை மிகவும் அன்னியோன்யமாக புரிந்து வைத்திருந்தார்…மனைவி பக்கத்தில் இல்லத ஊரில் வில்லியை புரிந்து வைத்திருப்பதில் ஏதும் தப்பு இருக்கிறதா? முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்..

எனது முகம் முழுக்க வளிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் தண்ணீர் ஸ்பிரே பண்ணி, கிறீம் புசி, கிறிஸ்மஸ்தாத்தாவாக்கி வழிக்கத்தெடங்கினார்.
சார் எங்க வேல செய்யுராப்புல என்றார்
நான் நோர்வே, விமானம், காலநிலை, டுபாய் என்று சுருக்கமாக சொன்ன போது
உங்க ஊர் எங்க சார் இருக்கு என்றார்
எனக்கு வெறுத்துவிட்டது…
நோர்வேயை தெரியவில்லை என்றது ஏதோ போலிருந்தது.
சமாளித்தபடியே, சுவீடனுக்கு பக்கத்தில் என்றேன்
இப்ப புரியுது சார் என்றார் (எனக்கு சுவீடன்காரர்களில் எரிச்சல் வந்தது)
என்ன வேலை, குடும்பம், பெற்றோர் எல்லாம் விசாரித்தார்.
திடீர் என்று ஆமா சார்
உங்க ஊர்ல சண்ட முடிஞ்சிறிச்சாமே என்றார்
ம் போட்டேன்
பிரபாகரன் செத்துடார்ம்ல என்றார்
இதற்கும் டிப்ளமடிக்காக ம் என்றேன்
இனி யார் சார் தமிழ காப்பாத்த போறாங்க என்றார்
என்ன சொல்லுறீங்க என்றேன் (பயந்து போய்)
இனி யார் சார் தமிழ காப்பாத்த போறாங்க.. என்றார்…அப்பாவியாக
ஏன் உங்கட கறுப்பு கண்ணாடிக் கிழவன் காப்பாத்த மாட்டாரோ என சத்தமாக கேக்க வேணும் போல இருந்தது என்றாலும் அடக்கிக் கொண்டு இதற்கும் ம் என்றேன் (நீங்கள் கறுப்புக் கண்ணாடியின் விசுவாசி என்றால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள.. சத்தியமா எனக்கு அந்தாளை பிடிக்காது)

பின்னால் இருந்த பெரியவர் இப்ப வில்லியின் கெட்டித்தனங்களை புகழ்ந்து கொண்டிருந்தார்.

முழுவதும் வளித்த பின்
தண்ணி ஸ்பிரே பண்ணி
மெல்லிய டீசூபேப்பரால் ஒத்தியேடுத்தார்
ஆப்டர்சேவ் போவா சார் என்றார்
பல்லை இறுகக் கடித்தபடியே ஆப்டர்சேவ் போட அனுமதித்தேன்..
சற்றே அதிகமாய் எரிந்தது
கிறீம் போட்டார்
பௌடர் போடவா சார் என்ற போது
வேணாம், வேணாம் என்று தடுத்தேன்
போத்தியிருந்த வெள்ளை துவாயை களட்டி விட்டார்
எவ்வளவு ஜயா? ஏன்றேன்
15 தினா என்றார்.. 20 தினா கொடுத்து ஏர்கொண்டிசன் சலூனில் இருந்து வெளியே வந்த போது துபாயின் வெக்கை முகத்திலத்தது.
திடீர் என்று இளைய மகளின் ஞாபகம் வந்தது… இப்ப அவரை முத்தமிட்டால் அப்பா குத்துது என்ற சொல்ல மாட்டார். ஆசை தீர கொஞ்சித் தள்ளளலாம்.

என்னைத் தாண்டி இரு இளைஞர்கள் கைகோர்த்து போனார்கள்…பிறகு அவர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு மறைந்து போனார்கள்…. மேற்குலத்தில் இதன் அர்த்தம் வேறு.. எனினும் நட்பின் நெருக்கத்தை தோளில் கைபோட்டு நடப்பதை விட வேறு எப்படி காட்டலாம்? திடீர் என எல்லா பால்ய ஸ்னேகமும் ஞாபகத்தில் வந்து போனது.

பசி வயிற்றைக் கிள்ள பக்கத்தில் இருந்த ஹோட்டலில் புகுந்தேன். அவர்களின் பேசிய மொழி மலையாளம் போலிருந்தது. பரோட்டாவும், ஆட்டு பொரியலும், ஏதொ ஒரு குழம்பும் வந்தது.
வாழ்க்கையில் இவ்வளவு எலும்பிருந்த (முள்ளிருந்த) ஆட்டை நான் கண்டதில்லை (இந்த ஆடு முற்பிறப்பில் வாழை மீனாக இருந்திருக்குமோ?) சாப்பிட்ட பின் கைகளுவும் இடத்திற்கு போனேன். எனக்குப் பக்கததில் கைகழுவ வந்தவர்
வந்ததும் பைப்பை திறந்தார்
காறித் துப்பினார்
கையில் தண்ணியெடுத்து வாயில் விட்டு
சத்தமாய் கொப்பளித்து, தொண்டை கழுவி
உலகிலேயே உயரமான நீர்விழ்ச்சி தனது வாயில் தான் இருக்கிறது என்பது போல
குனியாமலே நின்ற படியே கொப்பளித்த நீரை துப்பினார்
அது எனது கையையும் (அ)சுத்தப்படுத்தியது
பயந்து போய் அவரைப் பாhர்த்துக் கொண்டிருந்தேன்
மனிதர் தனது கருமத்தில் கண்ணாயிருந்தார்
மீண்டும் கொப்பளித்து துப்பினார்
பிறகு நின்ற படியே
மூக்கையும் சீறி சுத்தப்படுத்தினார் (சாப்பாடு நல்லா உறைப்பாக இருந்ததா என்று கேட்ட ஆசையாய் இருந்தது.. என்றாலும் அடக்கிக் கொண்டேன்
அந்த கலாச்சார அதிர்ச்சியில் இருந்து மீள சற்று நேரமெடுத்தது.
நான் எவ்வளவு தூரம் மாறிவிட்டேன் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்திச் சென்றது… ஊரில் வாழ்ந்திருந்தால் இது பற்றி சிந்தித்திருப்பேனா?

தேரா துபாய் அலைந்து திரிந்தேன். எங்கும் இந்தியர்களே தெரிந்தார்கள் அதுவும் 99 வீதம் ஆண்கள். ஒரு இளம் ஆபிரிக்க பெண் இறுக்கமான உடையணிந்து காதலுடன் கடந்து போன போது அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்த இளசுகள், பெரிசுகள், பழசுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. (அந்தப் பெண்ணின் அம்மா அவள் வீட்ட போனதும் கண்ணூறு சுற்றிப் போட்டால் அது குண்டு விழுந்த சத்தத்துடன் வெடிக்கும். (சிங்களவர்கள் கண்ணூறு சுற்றிப் போடும் போது அதில் உப்பு, போடுவார்கள். ஏதும் பெரிதாய் வெடித்தால் அதிகமாய் கண்ணூறு பட்டிருப்பகதாக சொல்வார்கள்)

ஒரு எலக்றோனிக் கடையில் போய் ”ஐபொட் நனோ” இருக்கா என்றேன். ஓம் என்று காட்டினார்கள் 5வது ஜெனரேசன் நனோ 8 ஜிபி உடையது 40 டொலருக்கு தருவதாக சொன்னான்.
(ஆப்பிள் சி. ஈ. ஓ இந்த விலையைக் கேட்டால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்)

பார்த்தால் எல்லாம் ஒரிஜினல மாதிரியே இருந்தது. ஆனால் விலை மட்டும் அது ஓரிஜினல் இல்லை என்றது. வேண்டாம் என்று போது பேரம் பேசவும் தயாராக இருந்தார்கள்.

இரண்டு சேட்கள் வாங்கிய பின் நண்பர் செல்லதுரைக்கு போன் பண்ணினேன். சார் நான் இறக்கிஉட்ட இடத்தில நில்லுங்க இப்ப வந்திர்றன் என்றார். சொன்ன மாதிரியே வந்தார்.
தனக்கு பக்கத்தில் இருத்திக் கொண்டார்.

என்ன சார், புஸ்தகம் கிடைத்ததா, சாப்பிட்டீங்களா? என்றார்.
புத்தகம் வாங்கவில்லை ஆனால் சாப்பிட்டேன் என்றேன்.
சார் உங்களுக்கு துபாய் காட்டுறன் என்று சொல்லி ஊர் சுற்றிக் காட்டினார்.
ஓரு துறைமுகத்தை காட்டினார். அங்கிருந்து தான் ஈரானுக்கு சாமான் ஏற்றுகிறார்கள் என்றார். அருகிலேயே அழகான சிறிய கப்பல்கள் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தது அழகாயிருந்தது.
தனது பூர்வீகம் விளக்கினார். தனது குடும்பத்தினர் திருநெல்வேலியில் இருப்பதாயும் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஊருக்கு போவதாயும், கிழமைக்கு 6 நாட்கள் பல மணிநேரம் வேலை செய்வதாயும், இரவு 12 மணியின் பின்பே சமைத்து உண்பதாயும் சொன்னார்.
என்னைப் பற்றியும் விசாரித்தார், சொன்னேன்.
ஏன் சார் அங்க வேலை எடுக்க முடியுமா என்றார். மிக மிக சிரமம் என்றேன்
வேதனையில் புன்னகைத்தார் போலிருந்தது எனக்கு.
தனது பஸ்ஸில் வரும் எல்லோரும் இலசமாக வருவதாயும் எனினும் ஒருவர் கூட ஒரு டீ குடிக்க கூட காசு தரமாட்டார்கள் என்றார். மனதுக்குள் ஏதோ நெருடிச் சென்றது

இந்த மனிதர் என்னை மிகவும் சிந்திக்க வைத்தார். நான் அனுபவித்தறியாத புதியதோர் வாழ்வின் வலி பற்றி அவர் கற்றுத்தருவது போலிருந்தது. மனம் கனத்துப் போயிருந்ததனால் வாய் அதிகமாய் பேசவில்லை.

எனது ஹோட்டலில் இறக்கிவிட்ட போது என்னாலான அன்பளிப்பை வழங்கிய போது கைபிடித்து தடுத்தார். மிகவும் வற்புருத்தி கொடுத்தேன். டுபாய் வந்தால் போன் பண்ணுங்க சார் என்றார்.

மேற்குலக வாழ்வோட்டத்தில் எதுவும் பணத்தை அடிப்படையாக வைத்தே கணீக்கப்படுகிறது மட்டுமல்ல அப்படியே செயல்படவும் செய்கிறது. நாமும் அதை சுயவிமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறோம், ஏற்றுக் கொண்டுவிட்டோம். நட்பு, மனிதநேயம், அன்பு எல்லாவற்றிகும் வெக்கப்படாமல் விலை குத்துகிறோம். தினம் தினம் பழகும் உறவுகளுக்கே நேரம் ஓதுக்காமல் இயந்திரமாய் சுழன்று திரிகின்றோம்.

ஆனால் வறுமையிலும் முன் பின்பறியாத எனக்கு நண்பனாய் வந்து போன இந்த மனிதர் நான் தொலைத்திருக்கும் எதையோ ஒன்றை உணர்த்திவிட்டுப் விட்டுப் போயிருக்கிறார்.
மறக்க முடியாதவர்களில் ஒருவராய் மனதுக்குள் குடிவந்திருக்கிறார் நண்பர் செல்லத்துரை.