செத்தான்டா முனா



அம்மாவின் அட்டகாசங்கள் - 05


******


நேற்று மாலை அம்மாவுடன் ஒரு சிறு நடைப்பயணம் செல்வதற்கு முன் வீட்டிற்கு என்ன என்ன தேவை என்று ஒரு பட்டியல் எழுதினார்.

ஊதுபத்தி
நெருப்பெட்டி
இட்டிலி மா
சிக்னல் பற்பசை


அந்தப் பட்டியலை நான் எடுத்துக்கொண்டேன். வீட்டில் இருந்து 20 மீற்றருக்குள் இருக்கிறது அம்மாவின் ஆஸ்தானக் கடை.

கடையின் முதலாளியை நான் இந்தக் கதையில் «முனா» என்றே அழைக்கவிருக்கிறேன் என்பதை அறிக.

அம்மாவின் ஆஸ்தான கடையின் முனா, அம்மாவைக் கண்டதும் ‘அம்மா, வாங்கோ. உங்களைக் கன நாட்களாகக் காணவிலலை’ என்றார்.

அம்மாவின் காதுகளில் அவரின் கதை விழவில்லை.

முனாவிற்கு அம்மாவையும், அம்மாவின் பீ.ஏ ஆகிய எனது மருமகளையும்;, அம்மாவிற்கு உதவிசெய்பவர்களையும் நன்கு தெரியும். நான் அம்மாவின் மகன் என்பது மட்டும் அவருக்குத் தெரியாது.

அம்மா, என்னைப் பார்த்து ‘என்ன வாங்கவேண்டும் என்று எழுதிக்கொண்டுவரவில்லை மறந்துவிட்டேன்’ என்றபடியே யோசித்துக்கொண்டிருந்தார். அம்மா தான் எழுதிய பட்டியலை மறந்துவிட்டார் என்பதை உணர்ந்துகொண்டேன்.

‘அம்மா, என்ன வேணும்’ இது முனா.

‘ஊதுபத்தி, நெருப்பெட்டி, இட்டிலி மா, சிக்னல் பற்பசை’ என்றேன் நான்.

‘இது மட்டும்தானா அம்மா’ இது முனா

இப்போது கடைக்குள் ஒரு தம்பதிகள் வருகிறார்கள்.

‘அய்யா, அம்மாவின் கணக்கைச் சொன்னால் பணம் தரலாம்’ என்றேன்,

கணக்கை எழுதினார். 401 ரூபாய் வந்தது. பணத்தை எண்ணி அவர் கையில் கொடுப்பதற்கு முன், அவர்...

அம்மாவைப் பார்த்து ‘அம்மா, சிக்னல் பற்பசை சிறியதா? பெரியதா? என்றார்.
‘பெரியது’ என்றார் அம்மா.

இப்போது முனா கடைக்குள் வந்த தம்பதியினருக்கு பொருட்களை எடுத்துக்கொடுத்தார்.

அம்மா, முனாவிடம் ‘தம்பி, ஒரு லக்ஸ் சோப் வேணும்.’

‘சரி, அம்மா’ என்றுவிட்டு தம்பதிகளின் கணக்கை முடித்து அனுப்பினார்.

மேசைக்கு லக்ஸ் சோப் வந்தது. விலை 401 இல் இருந்து சற்று அதிகரித்தது.

அய்யா கணக்கைச் சொல்லுங்கள் என்று நான் வாயை மூடவில்லை

அம்மா ‘நல்ல உழுந்து இருக்கிறதா?’ என்றார்.

ஒரு கிலோ உளுந்து மேசைக்கு வந்தது.

‘அம்மா நல்ல அரிசி’ இருக்கிறது என்று முனா ஒரு அரிசி மூட்டையை அம்மாவிற்குக் காட்டினார்

‘அரிசி ஒரு கிலோ’ என்றார் அம்மா. அதுவும் மேசைக்கு வந்தது.

இப்போதும் முனா கணக்கை முடிப்பதாய் இல்லை.

இதற்கிடையில் அம்மா, பினாயில் (pynol) தேவை என்றார். அதுவும் மேசைக்கு வந்தது.

முனா இப்போதும் கணக்கை முடிப்பதாய் இல்லை.

எனக்கு உள்ளுற சற்றுச் சூடாகத்தொடங்கியது.

‘அம்மா, வாங்கோ போவோம் என்றேன்’

‘தம்பி ஒரு பாண் வேணும்’ என்றார் அம்மா.

பாணும் வந்தது.

பயறு, கடலை, இன்னொருவிதமான சவர்க்காரம், நீலம் என்று அம்மா கடையையே விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தார். முனா கடைக்குள் பம்பரமாய் சுளன்றபடி புதிய புதிய பொருட்களை அம்மாவுக்கு காட்டினார். அம்மாவும் வாங்கினார்.

வீட்டுக்கு அவசியமானவையாக்கும் என்று நானும் எதுவும் பேசவில்லை.

இப்போது அம்மா மீண்டும் அரிசி ஒரு கிலோ என்றார்.

இப்போதும் முனா அதே அரிசியை மேசைக்கு எடுத்துவந்தார்.

அப்போதுதான் எனக்கு முனாவின் விளையாட்டுக்களின் அற்புதம் புரிந்தது.

‘இந்த அரிசி வேண்டாம்’ இது நான்.

‘அம்மா அரிசி வேண்டாமோ’ என்றார் முனா

‘வேணும்’ இது அம்மா

நான் கண்ணால் முனாவை எரித்தேன்.

முனா அதையும் கணக்கில் எழுதினார்.

அம்மா கடையையே வாங்குவதில் மும்மரமாய் இருந்தார்.

‘அம்மா, வாருங்கள் போவோம் என்று அழைத்தேன்.

முனா ‘அம்மா, பால்மா வாங்கேல்லயோ’ என்றார்.

‘ஓரு அங்கர் பால் பெட்டி’ என்றார் அம்மா.

எனது இரண்டு காதாலும் புகைந்தது.

முனாவைப் பார்த்துக் கடும் கறாரான குரலில் ‘இது காணும். பில்லைத் தருகிறீரா, இல்லை இவ்வளவு சாமானையும் உள்ளே எடுத்துவைக்கிறீரா’ என்று அம்மாவிற்கு கேட்காத குரலில் கூறினேன்.

முனா கல்குலேட்டரைவிட வேகமாக இயங்கினார். அய்யா இந்தாருங்கள் 1930 ரூபா வருகிறது என்று பற்றுச்சீட்டை நீட்டினார்.

பணத்தைக் கொடுத்தேன்.

பின்புறத்தில் “சஞ்சயன்.. நாளைக்கு தோசை செய்து தருகிறேன். தோசைமா வாங்கவேண்டும் என்றார், அம்மா.

முனா தோசை மாவை எடுத்தார். கண்ணால் எரித்தேன் அவரை.

‘அம்மா, நாளைக்கு நான் விரதம் என்றுவிட்டு அம்மாவை இழுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

‘என்ன விரதமடா’ என்றார் அம்மா.

‘ஓஸ்லோ முருகனுக்கு விரதமிருக்கிறேன்’ என்றேன்

‘யாரடா அது’ என்றார் அம்மா

வீடு வந்தோம்.

வீட்டினுள் வந்து உட்கார முன் மருமகள் தொலைபேசியில் வந்தாள்.

‘மாமா, எங்கே போயிருந்தீர்கள்?

‘கடைக்கு’

‘எந்தக் கடைக்கு?’

‘முனாவின் கடைக்கு’

‘அய்யோ மாமா, நேற்றுத்தானே ஒரு மாதத்திற்குரிய பொருட்களை வாங்கிக் கொடுத்தேன்’ என்றாள்

செத்தான்டா முனா.






#அம்மாவின்_அட்டகாசங்கள்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்