அம்மா எழுதிய தொல்காப்பியம்


அம்மாவின் அட்டகாசங்கள் - 06

******
அப்பா எனக்கு தமிழ் வராது என்று முடிவெடுத்திருக்கவேண்டும். அவர் எனக்குத் தமிழ் கற்பித்ததே இல்லை. புத்திசாலி.

பெற்ற கடனுக்காக அம்மாதான் எழுத்தறிவித்தார்.

«பார்த்தேன்» என்பதை «பார்தேன்» என்று எழுதும்போதெல்லாம் «டேய், த்தன்னாவை மறக்காதே» என்று அழகாக உச்சரித்து அதைத் திருத்துவார். ஈசாப்புநீதிக்கதைப் புத்தகத்தில் இருந்து பந்திகளை எழுதவிடுவார்.

அம்மாவின் கையெழுத்து அச்சுப்போன்றது. அதைப்போன்று நானும் எழுதவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டது எனது தவறு அல்ல. அப்பாவுக்கும் எனக்கும் சுந்தரத்தமிழில் இருந்த ஒரே ஒரு ஒற்றுமை இருவரினதும் கோழிக்கிறுக்கல்தான்.

நான் பலகாலம் விடுதியில் தங்கியிருந்து படித்தேன். அப்போது அம்மாவுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருதடவை «வந்து என்னை அழைதுப்போங்கள்» என்று கடிதம்போடுவேன். அந்த அழைத்துப்போங்களில் த்தன்னா இருக்காது. அதை பதில்க் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பார் அம்மா.

அம்மாவின் பின் என் தமிழாசான் எங்கள் ஈஸ்வர சர்மா சேர். அவரும் தலைகீழாக நின்று பார்த்தார். அவராலும் அடியேனின் எழுத்துப்பிழைகளைத் திருத்தமுடியவில்லை.

2009இல் அவரைப்பற்றி எழுதிய ஒரு பத்தியை யாரோ அவருக்குக் காண்பித்திருக்கிறார்கள். எனக்குத் தொலைபேசி எடுத்து «எக்கச்சக்கமான எழுத்துப்பிழை» என்று பாராட்டினார்.

சரி, இன்றைய அம்மாவின் அட்டகாசத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது. வாருங்கள் அந்தக் கதைக்குள் போவோம்.

குசினிக்குள் பெருஞ் சத்தம் கேட்டது. அம்மா சண்டைபிடிக்கும் ஆள் இல்லையே என்று நினைத்தபடியே கட்டிலால் எழும்பிவந்தேன். «ய் யன்னா எங்கே, ஒற்றைக்கொம்பு எங்கே» அதை யார் எடுத்தது என்று அம்மாவின் குரல் கேட்டது. குரல் சற்று சூடாகவும் இருந்தது.

என்னடா வில்லங்கம் இது. அம்மா யாருடன் கதைக்கிறார் என்று மெதுவாய் எட்டிப்பார்த்தேன்.

அம்மாவுக்கு உதவி செய்பவர் ஒருவர் நின்றிருந்தார். அவர் அதிகம் படிப்பறிவில்லாதவர். அம்மா தனக்குத் தேவையான பொருட்களைக் கூற, இவர் பட்டியலில் எழுதிக்கொண்டிருந்தார்.

அம்மா அவருக்கு «தேங்காய் எண்ணை» வாங்கவேண்டும் என்று கூற, அதை அவர் அதை «தேங்கா என்னய்» என்று எழுதியிருந்தார் என்று பின்பு அறிந்துகொண்டேன்.

இங்குதான் அம்மாவுக்கும் அவருக்குமாக பிரச்சனை தொடங்கியிருக்கிறது.

‘இப்படி பிழை பிழையாக எழுத ஏலாது’ இது மாணிக்காத்தாரின் 84 வயதுப் புத்திரி


‘--------’ தலையைச் சொறிகிறார் உதவியாளர்

‘எத்தனை தரம் சொல்லித் தந்திருக்கிறேன்’ என்று குரலை உயர்த்துகிறார் அம்மா.

உதவியாளர் இப்போதும் தலையைச் சொறிகிறார்.

நான் கூத்துப்பார்ப்பதற்காக ஒளிந்து நின்றுகொண்டேன்.

‘தேங்காய் எண்ணைய்க்கு ய்யன்னா வரவேணும், எண்ணை மூன்று சுழியுடன் எழுதவேணும் சரியா?

விளங்கியதா? இப்ப எழுதுங்க பார்ப்போம்’ என்றுவிட்டு பக்கத்திலேயே நின்றுகொண்டார்.

அவர் அம்மாவை பரிதாபமாக பார்த்தார். அம்மா தேங்கா… ய் எ….ண்…ணை.. ய் என்று அறுத்து உறுத்து உச்சரிக்கிறார். ண் ணண்ணாவை அழகாக நாக்கை உள்நோக்கி மடித்து உச்சரிக்கிறார்.

அவர் மீண்டும் பிழையாக எழுத… அம்மா திருத்த என்று ஐந்து நிமிடம் பெருங்கூத்து நடக்கிறது.

இப்போது அவரை அம்மா சரியாக எழுதவைத்துவிடடார்.

இப்போது உதவியாளர் ‘அம்மா, வேறு என்ன வேணும்’ என்று அவர் கேட்டபோது…. இந்த ஆள் பொல்லு கொடுத்து அடிவாங்குகிறாறே என்று அவருக்காக பரிதாபப்படத்தான் முடிந்தது.

«அங்கர் பால்மா» என்றார் அம்மா.

இந்த இடத்தில் உதவியாளரின் விதி அவரைப்பார்த்து பெரிதாய் சிரிக்கத் தொடங்கியது.
‘எழுதுங்க’

‘இல்லை அம்மா, அது நினைவில இருக்கு அம்மா’ இது அவர்.

ஆனால், அம்மா விடுவதாக இல்லை.

‘இல்லை, நீங்க மறந்துவிடுவீங்க’. அ..ங்..க..ர் என்று ஆறுதலாக உச்சரித்து எழுதுங்க என்றார்.

அவர் ‘அன்கர’ என்று சுந்தரத் தமிழில் எழுத.. அம்மா ‘என்னது அன்கர் ஆ? A..n..c..h..o..r என்று ஆங்கிலத்தில் உச்சரித்தபோது அவர் அழுவதுபோன்று அம்மாவைப் பார்த்தார்.

எனக்கு இருந்த பயமெல்லாம் எங்கே இந்தக் கிழவி அவரை ஆங்கிலத்தில் எழுதச்சொல்லிவிடுவாரோ என்பதுதான்.

அப்படி அழிச்சாட்டியம் பண்ணினால் இடையில் புகுவது என்று நினைத்தபோது அம்மாவிற்கு தாகமெடுத்தது. தண்ணீரைத் எடுத்து குடித்துவிட்டு நிமிர்ந்தார்.

இப்போது நான் குசினி வாசலில் நின்றேன். அம்மா உதவியாளரைப் பார்த்து இவனுக்கு தமிழ் படிப்பித்தது நான்தான் என்றார்.

அவர் என்னை பெரும் தமிழ் மேதாவி என்று நினைத்திருக்கக்கூடும். அவரின் அந்த ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை. அம்மாவும் நான் இப்போது பிழைவிடாது எழுதுகிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பார்.

சீத்தலைச்சாத்தனார் போன்ற ரோசக்காரன் நானில்லை என்பது அம்மாவுக்கும் தெரியாது, அம்மாவின் உதவியாளருக்கும் தெரியாது.

#அம்மாவின்_அட்டகாசங்கள்

1 comment:

  1. தலைப்பின் பெயர் வித்யாசமா இருக்கு

    http://www.viyanpradheep.com/

    ReplyDelete

பின்னூட்டங்கள்