பேரன்புமிக்க ஆசான் பிரின்ஸ் சேர் - Prince G. Casinader






பிரின்ஸ் சேர் - Prince G. Casinader

45 வயதிலும் இந்தப் பெயரைக் கேட்டால் அன்பும் பயமும் கலந்த மரியாதை என்னை சுற்றிக் கொள்ளும். இதயம் தேவைக்கு அதிகமாக அடிக்காது; ஆனால் இடிக்கும்.

'ஏன்டா அந்தாளுக்கு இப்பவும் இப்படி பயப்படுகிறாய் என அம்மா இப்பவும் கேட்பதுண்டு.
அம்மா! அது பயமல்ல, பக்தி.

கொல்லன் பட்டறையில் இரும்பைச் சூடுகாட்டி, தண்ணீரில் நனைத்துக் குளிர வைத்துச், சுத்தியலால் அடித்து, வளைத்து, மீண்டும் சூடுகாட்டி தான் விரும்பும் விதத்தில் கத்தி செய்யும் கொல்லன் போன்று எம்மை வார்த்தெடுத்த (வாட்டி எடுத்த) மரியாதைக்குரிய எங்கள் ஆசான் அவர்.

இவருக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும், எனக்குமான உறவு 1976 தை மாதம் தொடங்கியது. 8 ஆண்டுகள் மட்டுமே ஆன நெருக்குமான எமது உறவு என் வாழ்வில் இத்தனை முக்கிய இடத்தைப் பெறும் என நான் கனவிலும் நினைத்ததில்லை.

எதை எழுத எதை விட என்று புரியவில்லை. தொண்டையில் ஏதோ அடைக்கிறது, உணர்ச்சியில் கண்கள் பனிக்கின்றன… என்னே பசுமையான நினைவுகள் அவை.

தாயின் மடி போலானது பாடசாலை நினைவுகள். அவை உங்களை தாலாட்டி தட்டிக்கொடுக்கும். வாழ்க்கை தரும் ரணங்களை இது போன்ற பசுமையான நினைவுகளால் செப்பனிட்டுக் கொள்கிறோம்.. உங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் நான் அப்படித்தான்.

1976 தை மாதம் 6B; வகுப்பில் சேர்ந்தேன். அன்றே பாடசாலை விடுதியில் என்னையும், தம்பியையும் சேர்த்து விட்டு அம்மா பிபிலைக்கு அடுத்த நாளே திரும்பியிருந்தார். பதுளை சரஸ்வதி மகாவித்தியாலத்தில் என்னுடன் படித்த ஒரு நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் மட்டுமே பரீட்சயமானவர்களாக இருந்தார்கள். மற்ற எல்லாமே புதிதாக இருந்தது, மொழி உட்பட.

அன்று மாலை சடுகுடு விளையாடிய போது என்னை வெ.. வெ…வெ..வெட்டையால போ என்ற போது மொழி புரியாமல் அவ்விடத்திலேயே நின்றதால் கன்னத்தைப் பழுக்க வைத்தார் புண்ணியமூர்த்தி அண்ணன். அவருக்கு கொன்னை என்பதால் வெட்டையால போ என்பதை 2, 3 வே வே போட்டு அப்படி சொன்னாராம். அதோடு வெட்டையால போ என்றால் வெளியே போ என்று அர்த்தம் என விளக்கம் கிடைத்தது அன்று மாலை.

இப்படியானதோர் புதிய உலகில் சஞ்சரித்துத் திரிந்து கொண்டிருந்த ஒரு இரவு studyhall இல் இருந்த போது வெள்ளைக்காரன் போல ஒருவர் அவ்விடத்தால் நடந்து போனார். திடீர் என்று எங்கும் மயான அமைதி. சத்தியமாக குண்டுசி விழுந்தால் கேட்டிருக்கும்.

என்ன நடக்குது என்று புரியவில்லை. அவர் போய் கன நேரம் வரை அந்த அமைதி குலையவே இல்லை. studyhall இல் இருந்த hostel master கூட வெளியில் போகவில்லை.

அது தான் One And Only Prince G. Casinader உடனான எனது முதல் அறிமுகம். மனிசன சும்மா பார்த்தாலே வெள்ளைக்காரன மாதிரித் தான். நிமிர்ந்த தலையும் நடையும், அளவான கட்டுடைய உடம்பும் ஆளப் பார்த்தால் ஒரு ஸ்டைலாகத்தான் இருக்கும். அவருடைய குரல்...இன்று வரை அப்படியான ஆளுமையுள்ள குரலை நான் கேட்டதில்லை. அவர் கட்டளையிட்டால் எமது மனது எமக்கு கட்டளையிடும் செய் அல்லது செத்து மடி என்று.. அப்படிப்பட்தோர் குரல் அவருடையது. அன்பு, ஆளுமை, கட்டளை கலந்ததோர் கம்பீரமான குரல் அது.

காலம் ஓடியது Prince Sir என்பது மந்திரச் சொல் என்று புரியத்தொடங்கியது. மனிசனின் பெயரை கேட்டால் முழு பாடசாலை மட்டுமல்ல, வாகரையில் இருந்து அம்பாறை வரையிருந்த பழைய மாணவர்களும், எங்கள் பாடசாலை ஆசிரியர்களும் கூட நடுங்கினார்கள்.

மனிதருக்கு டிசிப்ளின் என்ற சொல்லின் மேல் அப்படியொரு லவ்வு. அதைத்தான் மூச்சாக விட்டுக் கொண்டிருந்தார் பென்சன் எடுக்கும் வரை. இப்பயும் அதத் தான் விட்டுக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

டிசிப்பிளினுக்கு அடுத்ததாக அவருக்கு மிகவும் பிடித்தது சேக்ஸ்பியரும், ஆங்கில மொழியும் தான். ஆங்கிலத்தை அவர் மாதிரி கற்பிக்கக் கூடியவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. Free பாடம் என்றால் அவரிடம் இருந்த பயத்தையும் தாண்டி அவரிடம் போய் சேர் இங்கிலிஸ் படிப்பியுங்கோ என்று கேட்குமளவுககு ஆங்கிலத்தினுள் தேன் கலந்து ஊட்டக் கூடியவர் அவர். ஒரு காலத்தில் மட்டகளப்பு ஆசியர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் கற்பித்தார் விடு முறை நாட்களில்.

படு ஸ்மாட் ஆன ஆள், வெள்ளையும், கறுப்பும் அவருக்கு பிடித்த நிறம். கறுப்பு நிறத்தில் ஒரு கார் வைத்திருந்தார். பின்பு வந்த காலங்களில் ஒரு வெள்ளை ஸ்கூட்டர் மாதிரி ஒன்று வைத்திருந்தார். அதன் சத்தம் கேட்டாலே எங்களுக்கு உதறலெடுக்கும். அந்த சத்தத்தினால் நாம் உசார் அடைவதை அறி்ந்த மனிதர் பிறகு பிறகு பாடசாலையை நெருங்கும் போது இறங்கி ஸ்கூட்டரை தள்ளி கொண்டு வரத் தொடங்கினார். அவரின் உளவுத்துறை படு பயங்கரமானது. யாரிடமும் சேட்டை விடலாம் அந்த மனிசனிட்ட விட்டா அதோ கதி தான் என்பதால் பலதடவைகள் நாம் அடக்கியே வாசித்திருக்கிறோம்.

பல நேரங்களில் மதிலால் குதித்து வந்து ஒளிந்திருந்து புலனாய்வு வேலை செய்து, திங்கள் கிழமை அசம்பிளியில் வைத்து தாக்குதல் நடாத்துவார். முழு பாடசாலைக்கும் முன்னால் அடிவாங்குறதின்ட வலி வாங்கினவனுக்குத் தான்தெரியும்.. (நம்மளுக்கு அதெல்லாம் நல்லா தெரியுமுள்ள)

அவரின் சிந்தனையில் ” மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி” என்பதை விட வேறு எதுவும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பேன் நான். மனிதர் பாடசாலையை தனது குழந்தை போலவே நினைத்தார். அதன் நலனுக்காக எதையும் செய்யக் கூடியவராகவே இருந்தார். அதற்குரிய சக்தியும் அவரிடமிருந்தது. பெட்டிக்கடை வைத்திருப்பவரில் இருந்து அமைச்சர் வரை தொடர்பு வைத்திரு்தார். திடீர் திடீர் என வருவார்.... வசதிகளைப் பற்றி ஆராய்வார்.. பல நாட்கள் சாமம் கடந்தும் அவரின் அறையில் லைட் எரியக் கண்டிருக்கிறேன். (நாங்க படம் பார்த்திட்டு வரும்போது.. உஸ் உஸ்ஸ் ... சத்தம் போடாதிங்க.. இந்த வயதிலும் செவட்டையப் பொத்தி நாலு அறைவிட்டாலும் விடுவார் ... )

எமது கல்லலூரியில் படித்து, அங்கே ஆசிரியராக ஆரம்பித்து பின்பு அதிபராக ஏறத்தாள 40 ஆண்டுகளுக்கு மேலாக முடி சூடா மன்னனாக ஆட்சி செய்தவர் அவர்.

மட்டக்களப்பில் எத்தனையோ பெரிய பெரிய ஐம்பவான்களின் பாடசாலைகள் இருந்தாலும் அவர்கள் எவரிடமும் எமது Prince Sir ஐப் போல் ஒரு ஆளுமையுடைய அதிபர் இருந்ததில்லை என்பதை முழு மட்டக்களப்பும் அறியும். இதை முழு மட்டக்களப்பும் அறியும்.

அவரின் காலத்தை எமது பாடசாலையின் பொற் காலம் எனலாம். அந்த நாட்களின் மிடுக்கும், செருக்கும் அவற்றிற்கு சற்றும் குறையாத தரமும் அங்கு இருந்தது. பெற்றோர் மற்றவர்களிடம் மகன் சென்ரல்ல பிரின்ஸ் சேரிட்ட படிக்கிறான் என்று பெருமையாய் சொல்லித் திரிந்த காலமது. டிசிப்ளின் என்றால் சென்றல் தான் என்பார்கள் ஊரார்.

மனிதர் விளையாட்டிலும் கெட்டிக்காரர். டென்னிஸ் பிரியர். பாடசாலைக்கு நடுவே ஒரு டெனிஸ் கோட் செய்து வைத்திருந்தார்... நாங்கள் யாராவது மக்கன்றோ அல்லது பியோன் பேர்க் ஆக வரலாம் என்று நினைத்தாரோ என்னவோ... நமக்கு ஏதோ அந்த வெள்ளகார விளையாட்டில ஈடுபாடு வரவில்லை. ஒரே ஒரு நாள் எம்முடன் கால்பந்தாடினார்... மனிதரின் காலில் பந்தே படவில்லை... பாவமாயிருந்தது.

Prince Sir இன் காலத்தில் தான் சௌந்தரராஜன் சேர் எமது பாடசாலைக்கு விளையாட்டு ஆசிரியராக வந்து சேர்ந்தார் (Head hunting செய்தாலும் செய்திருப்பார் Prince Sir). அவரின் சாதனைகள் ஏராளம் ஏராளம்.. அதில் முக்கியமானது சங்கரப்பிள்ளை அண்ணணின் அகில இலங்கை சாதனைகளும், கிழக்கு மாகாண கால்பந்து வெற்றிக் கிண்ணமும்.

Prince Sir விளையாட்டுப் போட்டிகளின் போது யாரிட்டயும் தோக்கலாம் ஆனா சென் மைக்கல்ஸ்ட மட்டும் தோக்கக் கூடாது என்பார் மெதுவாய். (சென் மைக்கல்ஸை வெல்வது லேசான வேலையில்லை.. ஆனாலும் பல தடவைகள் வென்றிருக்கிறோம்) இப்பவும் எனக்கு அவர்களிடம் தோற்பது பிடிக்காது.

மட்ச்இல் வென்றால் சொந்தரராஜன் சேரயும், பிறகு பிரின்ஸ் சேரயும் தூக்கி தோளில் வைத்தபடி ஊர் உலா வருவோம்... Cap collection ஒரு இனிமையான அனுபவம்.. கொலிஜ் கொலிஜ், சென்றல் கொலிஜ் என்று மட்டக்களப்பு டவுனை ஒரு வழிபண்ணி விட்டுத்தான் ஓய்வோம்.. மனிசனும் எம்முடன் நடந்து திரியும்.. பூரித்த முகத்துடன்... வென்றது அவர் குழந்தைகளல்லவா..

ஒரு முறை, நாம் ஒரு மட்ச் வென்று கத்திய போது ஒரு தொண்டன் டவுன் டவுன் சென்மைக்கஸ் டவுன் டவுன் என்று கத்த அவனை கிட்ட கூப்பிட்டு ரெண்டு அறை அறைந்து, பேசி அனுப்பினார்.

அடுத்து வந்த அசம்பிளியில் தோற்பவனைப் பழிப்பது நன்றன்று என்றும் அவனின் நிலையில் உன்னை வைத்துப் பார் உனக்குப் புரியும் என்றும் போதித்தவரும் அவர் தான். எவ்வளவு பெரீய உண்மையது.

மட்டக்களப்பில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இலகுவில் பாடசாலையில் இடம் கொடுக்காத காலத்தில் hostel இல் தங்கியிருந்து படிப்பதற்கு வசதி செய்து கொடுத்து இஸ்லாமிய சமூகத்துக்கும் எமக்கும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியதும் இவர் என்றால் மிகையாகாது. இன்றைய சமூக அரசில் நிலையைப் பார்க்கும் போது Prince Sir எத்தனை ஆழமாகச் சிந்தித்து பல வித சமூகங்களையும் ஒன்றாய் படிக்க வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது. என்னுடன் படித்த இஸ்லாமிய நண்பர்களின் தந்தையர்கள் பலர் எமது பாடசாலையிலேயே படித்திருந்தார்கள்.. அதுவும் Prince Sir இடம்.

உன் அப்பன் என்ன தொழில் செய்தாலென்ன, யாராக இருந்தாலென்ன, எந்த சமயமாயிருந்தாலென்ன நீங்கள் எல்லோரும் மனிதர்கள் என்றும்; ஒற்றுமையின் முக்கியம் என்னவென்றும் எமக்கு கற்பித்தவர் அவர். ஒற்றுமை பற்றி அசம்பிளியில் கதை கதையாக சொல்லுவார். பல கதைகள் இன்னமும் ஞாபகம் இருக்கின்றன.

அவர் ஒரு சிரமதானப் பிரியர்... அடிக்கடி பாடசாலையில் சிரமதானம் நடக்கும். சிரமதானத்தின் வியர்வை இனிக்கும் என்பதைக் கற்றுத் தந்ததும் அவர் தான். அவரின் சிரமதானங்கள் பாடசாலையுடன் நின்றுவிடாது வெபர் ஸ்டேடியம், மாந்தீவு தொழுநோயாளர் ஆஸ்பத்திரி, தேவாலயம் என்று விஸ்தீரணமாயிருந்ததது, அவரின் மனதைப் போல.

அவரின் கந்தோருக்குள் பிரம்புச்சத்தம் கேட்பது குறைவு, அப்படி பிரம்புச் சத்தம் கேட்டால் அவர் உசாராக இல்லை என்று அர்த்தம். 8 வருடத்தில் அவர் பிரம்பெடுத்தது மிகக் குறைவு.

அவர் பிரம்பு எடுக்கத் தான் மாட்டார் ஆனால் அடிக்க மாட்டார் என நான் சொல்லவில்லையே. அவரின் கை பதம் பார்க்காத கன்னங்களே இல்லை எனலாம். ”இது கிட்டடிக்கும் சரிவராது” என்று சொல்லி கதிரையின் இரண்டு கைபிடியையும் பிடித்து எழும்பினார் என்றால் பிறகு என்ன வாசிப்புத் தான். மனிதர் நாயடி பேயடி அடிப்பார்.  சென்றல்ல படிச்சு பிரின்ஸ்சேரின் அறை வாங்கியிருந்தால் தான் மரியாதை...

பிரின்ஸ் சோ் மகா நக்கல் பேர்வழி... குசும்பு பிடித்தவர்.நல்லா நக்கலடிப்பார்...2004ம் ஆண்டு என்று நினைக்கிறேன். கொழும்பில் நடந்த பழையமாணவர் கூட்டத்தின் போது அவரும் வந்திருப்பதாக அறிந்து அங்கு போன போது (21 வருடங்களின் பின் சந்திக்கிறேன் அவரை) டேய் இங்க பாருங்கடா என்னட்ட படித்த ஒரு மொட்டை வருது என்றார் சபையோரிடம் என்னைப் பார்த்தவுடன்.. சபை கொல் என்று சிரிக்கிறது...(அவரின் பட்டப்பெயரும் மொட்டை) நீங்கள் ஏன் சிரிக்கிறீங்கள் என்று தெரியும் என்றார் சபையோரைப் பார்த்து சிரித்தபடியே. பயந்து பயந்து சிரித்தேன், அவருக்கு முன் நின்றபடி. இங்க வாடா என்று தோளில் கைபோட்டு பக்கத்தில் இருத்திக் கொண்டார். மெதுவாய் நடுங்கிக் கொண்டிருந்தது உடம்பு. 21 வருடங்களின் பின்பும் அவர் என்னை பெயர் சொல்லி அழைத்தது இன்னும் தித்திக்கிறது.

அன்று அதிக நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்,  என்னுடன்.  ஒரு ஆசிரியனாய் நான் தோற்று விட்டேன் என்றார். ஏன் எனக் கேட்டபோது என்னை ஒருவரும் நான் படிப்பித்த பாடங்களுக்காக ஞாபகம் வைத்திருக்கவில்லை எனவும், தான் கொடுத்த அடியாலேயே ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்றார். பாவமாய் இருந்தது அவரைப் பார்க்கும் போது.

சேர்.. உங்களின் அடியால் வந்த பக்தியல்ல இது. பல ஆசிரியர்களிடம் இல்லாத பல விடயங்கள் உங்களிடம் உண்டு. உங்களின் ஆளுமையின் வல்லமை பற்றி எத்தனையோ இரவுகள் கண்கள் பனிக்க யோசித்திருந்திருக்கிறேன். நீங்கள் ஆங்கிலம் கற்பிக்கும் அழகும், முறையும் அலாதியானவை. நீங்கள் தோல்வி கண்டவராக இருந்தால் நான் இதை எழுதிக் கொண்டிருப்பேனா.. எனவே ”அச்சம் தவிர்” குருவே

எனக்கும் அவருக்குமான உறவு அடியால் ஏற்பட்டதல்ல, பாடசாலைக்காலத்தில் மொட்டை மொட்டை என நானும் மற்றவர்களுடன் சேர்ந்து திட்டி, அவரின் அடிக்கு பயந்து திரிந்தவன் தான். அவரின் கணிப்பில் நான் மோசமானவானாக இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். இல்லை என்றால்  தலைமை மாணவர் தலைவராக, நியமித்திருப்பாரா? சில வேளை கள்ளனுக்குப் பொலீஸ் வேலை குடுத்தால் களவு குறையும் என்று நினைத்தாரோ என்னவோ?

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக திரு ராஜன் செல்வநாயம் இருந்த காலத்தில் நடந்த ஒரு சுவராசியமான விடயம் இது.

பாடசாலைக்கு ஒரு பெரிய கட்டிடத்தைத் திரு ராஜன் செல்வநாயம் கட்டித் தந்து கொண்டிருக்கிறார். கட்டிட வேலை நடக்கிறது. ஒரு நாள் திடீர் என திரு ராஜன் செல்வநாயம் கட்டிட வேலை நடக்குமிடத்தை பார்க்க வந்தார். அவர் கட்டடம் கட்டும் என்ஜீனியரிடம் போய் ஏதோ கதைத்துக் கொண்டிருப்பது பிரின்ஸ்சேருக்கு தெரிய வர.. அவ்விடம் வந்து சினம் கலந்த குரலில் இது எனது பாடசாலை.. உமது கந்தோரல்ல யாரிடமும் சொல்லாமல் உள்ளே வர என்றார்.
அன்று தான் இரண்டு பெரிய மனிதர்களை கண்டேன்..
ஒருவர் பிரின்ஸ் சேர்... தனது ஆளுமையின் வீரியத்தை காட்டுகிறார்
மற்றவர் திரு ராஜன் செல்வநாயகம் அய்யா
ஐ ஆம் வெரி சொறி சேர் என்று சேரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார். (அப்ப அவர் அமைச்சர் என்று நினைக்கிறேன்)
பிறகு இருவரும் கன்டீனில் பிளேன் டீ குடித்தது வேற கதை

இன்னொரு கதை

அதே ராஜன் செல்லநாயகத்தின் மகன் நாம் மாணவர் தலைவர்களாக (சிறப்புத் தளபதி மாதிரி) உலாவந்த காலத்தில் தினமும் இடைவேளையின் போது வெளியில் போய் வருவது தெரியவர மெதுவாய் சேரின் காதில் போட்டு வைத்தேன். அடுத்த நாள் இன்னொருத்தனை வேவு பார்க்க அனுப்பி செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார். பிறகு என்னையும், வேவு பார்க்க போனவனயும் (ராஜ்மேனன் என்று நினைக்கிறேன்) அழைத்து
ராஜன் செல்லநாயகத்தின் மகனை அழைத்து வரச் சொல்கிறார். நாமும் அவனை அழைத்து வருகிறோம்..
அவன் வந்தவுடன் அண்ணண்மார் நீ வெளியில போறாய் என்று சொல்கிறார்கள் உண்மையா என்றார்.
அவனோ பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு இல்ல சேர் என்றான்.
சரி நீ போ என்றார் அவனைப் பார்த்து..
அவரின் கந்தோரை விட்டு அவன் போகும் வரை சற்றே பொறுத்தவர்
ராஜன் செல்லநாயகத்தின் மகனை மிகவும் அன்பாக கூப்பிட்டு மிக பாசமாய் அப்பாவை பற்றி, அம்மா பற்றி, அவங்கட புதுக் கார் பற்றியெல்லாம விசாரித்து விட்டு சொன்னார்..
நாளைக்கு நீ வெளியில போகேக்க சப்பாத்து போட்டுட்டு போ.. இல்லாட்டி அப்பா எனக்கு பேசுவார் என்று
ஆகா.. மனிசன் கொக்கி போடுது என்பது அப்ப தான் எனக்கு புரிந்தது
இல்ல சேர் நான் சப்பாத்தோட தான் போற நான் என்றான் கள்ளன்.
எம்மை பார்த்து வெற்றிச்சிரிப்பு சிரித்தவர் மெதுவாய் எழும்பி கள்ளனுக்கு ரெண்டு அறை விட்டார்
பிறகு ராஜன் செல்லநாயகத்துக்கு போன் போட்டு உன்ட பெடியன் ஒழுங்கா இருக்காட்டி வெளிய கலைச்சுப்போடுவன் என்றார் ஆங்கிலத்தில்...

எங்களுடன் படித்த ரமேஸ் எதுக்கெடுத்தலும் ஒரு ”டக்” போட்டுத்தான் கதைப்பான்.. டக் எண்டு வாறன். டக் எண்டு போறன். இப்படி ஏகப்பட்ட டக் போடுவான். ஒரு நாள் ஆங்கில வகுப்பு நடக்கிறது... பிரின்ஸ் சேர் ரமேஸ்ஐ எதையோ வாசிக்கச் சொல்ல. ஓம் சேர் டக்கெண்டு வாசிக்கிறன் என்றான்... மனிதர் கரும்பலனையில் duck என்று எழுதி இனி இது தான் உனக்கு பெயர் என்றார். அவன் சொன்ன டக் வேற இந்தாள் சொன்ன டக் வேற.. இப்படி குசும்பு வேலையும் செய்வார்..

எவருக்கும் பயப்படாத மனிதன் அவர்.. மனதுக்குப் பட்டதை நேருக்கு நேர் சொல்பவர். பலர் வாங்கிக் கட்டியிருக்கிறார்கள் அவரிடம் ..

ஒரு முறை ஒரு ஆமி கொமான்டர் யாரையோ தேடி பாடசாலைக்குள் வர மனிசன் ரஜனி ஸ்டைலில் அவரை வழி மறித்து நல்ல பேச்சு குடுத்தார்-- (this is my school மட்டுமே விளங்கியது.. மிச்சத்தை விளங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.. ஆமி கொமான்டரும் ”சமாவென்ட மாத்தயா” ( மன்னியுங்கள் அய்யா ) சொல்லி தனது வாலைச் சுருட்டிக் கொண்டு வெளியேறினார். பெருமையாய் இருந்தது எனக்கு.

மனிதர் 2004 ம் ஆண்டு சுனாமியின் போது உயிர் தப்பிய விதம் மிகவும் சுவராசியமானது. 2006 ம் ஆண்டு மனிதரை கண்ட போது டேய் உனக்கு தெரியுமா என்ட கார் மட்டும் இ்லையென்றரால் நான் இப்ப ஆலையடிச்சோலையில (மட்டகளப்பின் பொது மயானம்) படுத்திருக்கவேண்டிய ஆள் என்றார்.. புரியாமல் கண்ணைச் சுருக்கிப் பார்த்தேன்..
விளக்கினார்..
அவர் அந் நாட்களில் கடற்கரைக்கருகில் வீடு கட்டி வாழ்ந்திருந்தாராம். 25ம் திகதி தேவாலயத்துக்கு குடும்பத்துடன் காரில் போயிருக்கிறார். கும்பிட்டு, எல்லோரையும் சந்தித்த பின் வீடு திரும்பும் போது கார்
நான் வரமாட்டேன் என்று அடம் பண்ணியிருக்கிறது. தனக்கு தெரிந்த முறையில் காரை திருத்திப் பார்த்தாராம் (நான் சிரித்தேன், அதைக் கண்ட அவரும் சேர்ந்து சிரித்தார்), பிறகு தன்னிடம் படித்த காராஜ் வைத்திருப்பவனை கூப்பிட்டிருக்கிறார். அவரும் தலையை உள்ளுக்குள் விட்டு 2 மனித்தியாலம் திருத்திப் பார்த்தாராம். கார் அசையவில்லையாம். களைத்துப் போய் குடும்பமாய் டவுனுக்குள் எங்கோ தங்கியிருக்கிறார். காலையில் மனிசன் எழும்ப முதல் கடல் அவரின் வீட்டை தன்னுடன் எடுத்துப் போயிருந்ததாம். (அவரின் வீடு இருந்த இடத்தில் தான் சுனாமியால் உயிரிழந்தவர்கன் அதிகம்) பார்த்தாயா என்ட கூஸ்ட காலத்தை என்றார்... குசும்பு கலந்த புன்னகையுடன்

காலப்போக்கில் வாழ்க்கை தந்த பாடங்களினாலும், யதார்த்தம் புரிந்ததாலும் அவரின் செயல்கள் (வேறென்ன அடி தான்) நியாயமானவையாகப் பட அவரின் மேல் இருந்த பயம் பக்தியாய் மாறியிருக்கிறது. எனக்குள் ஆல விருட்டசமாய் நிற்கும் மனிதர்களில் பிரின்ஸ் சேரும் ஒருவர். ஊருக்கு போனால் கட்டாயம் அவரை எட்டிப் பார்ப்பேன்... அன்பாய் சிரித்து கதைத்து வாசல் வரை வந்து வழியனுப்புவார். ஏனோ மனம், கெதியில் இன்னொரு தரம் போய் பார் என சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னிருக்கும். எனது பெயருக்கு தட்டச்சு (டைப் ரைட்டர்) இயந்திரத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் இலங்கையில் இருந்து வந்திருந்தது. அதை உடைக்க முதலே புரிந்தது கடவுள் கடிதம் போட்டிருக்கிறார் என்று.

அன்றிரவு முழுவதும் வெட்கித் தலைகுனிந்திருந்தேன். நகர மறுத்த பல இரவுகளில் அதுவும் ஒன்று. விடிய விடிய மனச்சாட்சி என்னைக் கொன்று தின்று கொண்டிருந்தது.

My dear Sanjayan என்று தொடங்யிருந்த கடிதத்தில் முதலில் நான் என் குடும்பமும் சுகமாயிருக்க கர்த்தரை வேண்டியிருந்தார். அடுத்து வந்த 3 பக்கங்கள் முதுமையும், தனிமையும் (மனைவி இறந்து பல வருடங்களாகின்றன) அவரின் சுகயீனம், இதய அறுவைச்சிகிச்சை, அதற்காக விற்ற வீடு, சுனாமியில் கரைந்து போன அவரின் வீடு, பென்சன் என்று எத்தனையோ சோகங்களை பகிர்ந்திருந்தார்.

என் மனச்சாட்சி கூரிய கத்தியுடன் என மேல் குந்தியிருந்து குத்திக் கொண்டிருந்தது.
நீயும் மனிதனா என்றது?
அவர் இல்லையென்றால் நீ இப்படி இருப்பாயா என்றது?
அந்த மெழுகுவர்த்தி அணையமுதல் சற்றே சிந்தி என்றது அது.

சிந்தித்து செயல்பட்டாலும் அது அவரின் துயர்ப் பெருங்கடலில் ஒரு சிறு துளியாய் மறைந்து விட்டது என்னுதவி.

எனதன்பு நட்பே!

குரு பிச்சையிடலாம் ஆனால் குரு உன்னிடம் கையேந்துவது இயற்கைக்கு புறம்பானதில்லையா? உன்னிடம் எதையும் நான் கேட்கப் போவதில்லை ஆயினும் உனது மனதுடன் சற்றே உரையாடுவாயா?

கொடியது இளமையில் வறுமை என்பது மட்டுமல்ல, முதுமையில் வறுமையும் கொடியது. அது மிகக் மிகக் கொடியது.

வேதனை என்னவென்றால் முதுமையின் தனிமையில், சுகயீனத்துடன் குறைந்த வருமானத்தில் வாழ்ககையை ஒட்ட அவர் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டியிருப்பது தான்.

அவருக்கு பல விதத்திலும் உதவும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது முழந்தாளிட்ட வணக்கங்கள். முக்கியமாக அவரைத் தினமும் ஒரு முறை சென்று அவரின் தேவைகளைக் கவனிக்கும் பெயர், முகம் அறியாத அந்த மனிதம் நிறைந்த மனிதனுக்கு!!
அவன் தான் மனிதன்.

இப்போது தனது 80 களில் குழந்தையாய் அவர்.. இன்னும் எத்தனை காலம் இருக்கிறது ஒரு சரித்திரம் சரித்திரமாவதற்கு?.. அதுவே வாழ்வின் யதார்த்தம் அது கசப்போ, இனிப்போ தவிர்க்க முடியாததாகிறது.


அன்புடன்
”ஓரு சரித்திரத்தின்” மாணவன் என்றும் பெருமையுடன்
சஞ்சயன்.

6 comments:

  1. Anna im really happy about this article.Al ur articles r very interesting..basically im nt frm central college..im frm michael's..bu i like prince sir..bcz he is my father's frnd..Prince Sir விளையாட்டுப் போட்டிகளின் போது யாரிட்டயும் தோக்கலாம் ஆனா சென் மைக்கல்ஸ்ட மட்டும் தோக்கக் கூடாது என்பார் மெதுவாய். (சென் மைக்கல்ஸை வெல்வது லேசான வேலையில்லை.. ஆனாலும் பல தடவைகள் வென்றிருக்கிறோம்) இப்பவும் எனக்கு அவர்களிடம் தோற்பது பிடிக்காது.
    BUT 2010 and last two big matches my school defeated ur school:)But we are accepting that victory in friendly manner.Bcz no central no michael's ..we love batticaloa

    ReplyDelete
  2. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இந்த வருட மட்ச் படு விறுவிறுப்பாயிருந்தது. அது பற்றிய ஆக்கம் ஒன்று விரைவில் வெளிவரும். பிரின்ஸ்சேர் ஒரு சரித்திரம்

    ReplyDelete
  3. ihsanullah, kattanududyAugust 08, 2010 9:03 pm

    As you have mentioned in your article, really he is a great man. He helped a lot to Muslim students. Even he allowed to celebrate Prophet Mohamed's birthday in MCC. I think it is better to share my following experience with all of you. One day morning(in 1983), Kalmunai-Trincomali express bus cnductor kicked me and my friend when we tried to get into bus and we felldown on road. This happened in kattankudi bus stand. About this incident we reported to Mr. Price G casinader. He asked us to sign in white sheets. we signed in three white sheets. After 3 or 4 weeks back, same bus conductor came to my home, to say sorry for the above incident. This all happened because this Great man. He should live long. Ihsanullah, kattankudy

    ReplyDelete
  4. Prince Casinader is a person rare to find.

    He is a person who will stand with oppressed, weak and needy.

    He will stand up for justice and would not worry about anything.

    Race, rich, class are nothing for him.

    During the political life I am aware that he spend for his people from his pocket without taking a penny as bribe from anyone.

    I learned millions of lessons from him with fear and honour.

    Even though I am half of his age, even after I became father, like Sanjayan I am also fearful to stand in front of this great man even today.

    Alavi Sheriffdeen
    Australia

    ReplyDelete
  5. He is one of the Great Gentlemen in Batti

    ReplyDelete
  6. Prince Casinader is a great man. I always think about his great speeches at the assembly. I wish him long & prosperous life.
    God bless you Sir.
    Bede Shivanthan Thalayasingham
    UK

    ReplyDelete

பின்னூட்டங்கள்