இலக்கியச் சந்திப்பில் ஒரு விசரன்

2011ம் ஆண்டு மாசிமாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பாரீஸ் நகரத்துக்கு போவதற்காக விமானநிலையத்துக்கு பயணிக்கும் போதே தொ(ல்)லைபேசியூடாக வந்த சகுனம் அபசகுனமாக இருந்தது. இருப்பினும் பிரச்சனைகள் இன்றி பாரீஸ் விமானநிலையத்தை வந்தடைந்தேன். அங்கு வந்திறங்கிய பின்பு தான் நான் வந்த விமானத்தில் மேலும் 5 பேர் இலக்கியச் சந்திப்பிற்கு வந்திருப்பது புரிந்தது. அதில் ரவூப் நானாவை தவிர்த்து ஏனையவர்கள் புதியவர்களாகவே இருந்தனர். தங்கம் அண்ணணின் புண்ணியத்தால் நண்பர் ஞானத்தின் வீட்டினை சென்றடைந்த போது நேரம் ஏறத்தாள இரவு 10 மணியிருக்கும்.

அங்கு நின்றிருந்தவர்களில் எனக்கு இருவரைத் தவிர எனையவர்கள் புதியவர்கள். ”கட்சுறா” என்று வாய்க்குள் புகாத பெயருடன் ஒருவர் அமெரிக்கக்கண்டத்தில் இருந்து வந்திருந்தார். வேறு பெயர் இல்லையா.. இப் பெயரை உச்சரிப்பது அசௌகரீயமாக இருக்கிறது என்ற போது ” உனக்கு அசொளகரீயமாக இருக்குதென்பதால் என் பெயரை நான் மாற்றுவதா” என்று அவர் பார்த்த பார்வை சொல்லிற்று. ஆனால் அவருடன் பழகிய சிலர் ஒரு மனிதப்பெயர் கொண்டு அவரை அழைத்தனர். ஆனால் என்னை அவர் அந்தப் பெயரை பாவிக்க அனுமதிகவில்லை. அவரின் ஆசையை கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம் என்பதால் நான் கற்சுறா என்று அழைக்க முயன்றுகொண்டிருக்கிறேன். நகைச்சுவை என்னவென்றால் இந்தச் சுறாவுக்கு இந்த விசரனை ஏறத்தாள 21 வருடங்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பது இந்த விசரன் அறிந்திராத விடயம்.

மறுநாள் காலை, நேரத்துடன் போட்டிபோட்டு தூங்கப் பழகிவிட்ட சோவியத் நாட்டு சர்வதிகாரி ஒருவரை கற்சுறாவின் உதவியோடு எழுப்பி, மிகவும் ருசியான இறால் சொதியுடன் பாண் சாப்பிட்டு இலக்கியச் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு விரைந்தோம். எமக்கு முன்பே சிலர் இங்கு கூடியிருந்தனர். நேரம் 09.30 இருக்கும். நானும் ஓரமாய் ஒரு கதிரையை பிடித்து உட்கார்ந்து கொண்டேன். நோரம் 09.45, 10.00, 10.30ஆகிய போது சில முணுமுணுப்புக்கள் பெண்கள் பக்கத்தில இருந்து கேட்டது. எனது பொறுமையும் எல்லை கடந்து கொண்டிருந்த போது ” உள்ளுக்கு போங்கோ தொடங்குவோம்” என்று சொன்னார்கள். நிகழ்ச்சி தொடங்கிற்று.

அறிமுகம் நடைபெற்றது. ஒலிவாங்கி தன்னிஸ்டத்துக்கு இயங்கியது, அடிக்கடி இயங்க மறுத்தது. அந்த ஒலிவாங்கி அங்கிருந்த இரண்டு நாட்களும் தனது எதிர்ப்பை அடிக்கடி காட்டியபடியே இருந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் இதை கவனித்து வேறு ஒழுங்குகள் செய்திருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

‘ஒடுக்கப்பட்டோர்’ நூல் திறனாய்வு நடந்தது. ஒலிபெருக்கியின் அட்டகாசத்தால் இதை முற்றாக ரசிக்கமுடியாது போயிற்று. ”திரு நீல சதிர் (crossing blue)” நாவல் எழுதிய அரவிந்த் அப்பாத்துரை அங்கு வந்திருந்தார். ஏனோ அவரின் நாவல் பற்றிய விமரர்சனம் நிகழ்ச்சிநிரலில் குறிப்பிட்டிருந்ததைதப்போல இடம்பெறவில்லை. (இந்த நாவலை வாசித்திதேன். ஒரு வித்தியாசமான முயற்சி என்றாலும் இன்னும் யதார்த்தமாய் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்பது எனது கருத்து)

திரு. யோகரட்ணத்தின் தீ்ண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் என்னும் நூல் அறிமுகம் நடந்தது. என்னைப் பொறுத்தவரை என்னைக் கவர்ந்த நிகழ்ச்சிகளில் இதுவுமொன்று. இந் நிகழ்ச்சியில் நான் பெற்றுக்கொண்டவை என்று பின்வருவனவற்றைச் சொல்லலாம்.
  • யாழ்ப்பாண வாசிகசாலை எரித்தற்கும் புத்தூரில் ”பள்ளனுக்கு என்னத்துக்கு படிப்பு” என்று பள்ளி சென்ற சிறுவனின் புத்தகங்களை எரித்ததற்கும் தார்மீரீதியில் பாரிய வேறுபாடு இல்லை.

என்ட சிற்றறிவுக்கு இது நியாயமாக இருந்தது. ஆமா ஆமா எனறு தலையையும் ஆட்டினேன்.

தவிர நம்மினம் நம்மினத்தவர்களுக்கே சுததந்திர மறுப்பு செய்தபடியே நாம் இன்னொரு இனத்திடம் உரிமை கேட்டிருக்கிறோம். அதற்கு வலுவான சாட்சியங்களாவன:

  • எழுதுமட்டவானில்ஒரு குறிப்பிட்ட சாதியிர் ஒருரை குளத்தில் குளிக்கப்போன போது வெட்டிக் கொலை செய்தது.
  • கைதடி. பனைமரத்தில் இருந்தவரை மரத்தை வெட்டிச் சாய்த்ததன் மூலம் கொலை செய்தது.
சாதீயம் பற்றி எதையும் ஊட்டி வளர்க்காத, அது என்னவென்றே அறிவிக்காத என் பெற்றோரையும், எம்மை வளர்த்த சிங்களத் தாயையும் நினைத்து பெருமைகொள்ளும் அதே வேளை சமத்துவம் கற்பித்த எனது தாயாருக்கும், எனது கல்லூரிக்கும் ஒரு பெரிய நன்றியை தெரிவிக்கிறேன்


இதன் பின் சிங்கள நண்பர் ஒருவரின் போர்க்காலத்தில் சிங்கள இலக்கியம் என்னும் தொனியிலான நிகழ்ச்சியில் அவர் கூறிய சில கருத்துக்கள்:

  • இரண்டு இன மக்களும் இன்னும் ஒரு வளர்ந்த நிலையை அடையவில்லை.. ஒன்றாக இருந்து பேசுவதற்கு.
  • தமிழர்களின் பிரச்சனைகளைகளுக்கு குரல் பல கொடுத்தும் சிங்கள இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை உருவாக்கியவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.

எனது மட். மெதடிஸ்த மத்திய கல்லூரி நண்பரும், 7 வருட சக வகுப்புத்தோழனும், விடுதி நண்பனுமாகிய ஞானம் (எம். ஆர். ஸராலின்) ”தமிழீப் புரட்டு” என்று புத்தகத்தை வெளியிட்டார். புத்தகம் தமிழர்களுக்கு எதிரானது என்று தலைப்பைப் பார்த்து முடிவுகட்டி வீடாதீர்கள். இந்தப் புத்தகம் சர்ச்சயை கிளப்பும் என்பதில் ஒரு வித சந்தேகமும் எனக்கில்லை. (புத்தகத்தை இன்னும் வாசித்து முடிக்கவில்லை)

மதிய சாப்பாடு நன்றாக இருந்தது. Fruitsalad பரிமாறப்பட்டது. ஒருவருக்கும் தெரியாமால் 2 கப் எடுத்துச் சாப்பிட்டேன். இதன் பின்பு பாரீஸ் அறிவாலயத்திற்கு போகவேண்டியிருந்ததால் நண்பரின் மகன் ”சிற்பி”யின் உதவியுடன் போய் வந்தேன். வரும் வழியில் 4-5 பீடாவும் வாங்கிக் கொண்டேன்.

சாப்பாடும், Fruitsalad ம், பீடாவும் என்னை மயக்க நித்திரை வந்தது. ஒரு ஓரமாய் போய் குந்திக் கொண்டேன். அருகே வந்தாள் ஒரு அழகிய தேவதையொருத்தி. சிரித்து கையைக் காட்டினேன். வெட்கித் தலைகுனிந்தாள். மெதுவாய் இழுத்து மடியில் இருத்திக் கொண்டேன். அழகாய்ச் சிரித்தான் மூன்று வயது ”அன்னம்” என்றழைக்கப்படும் சிறுமி. அவளைப்போலவே அழகாய் கடந்து போனது அதன் பின்பான நேரங்கள்.

யுத்தத்தின் பின் பெண்கள் எனும் தலைப்பில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உரையாற்றினார். பலரின் வாழ்வு இன்னும் விடியவில்லை என்பதும் இப்போதைக்கு அவை விடியப்போவதில்லை என்பதும் பரிந்தது.

மாலை லாச் சப்பல் கடைவீதியினூடாக நடந்து வந்த போது எனக்கு கொழும்பில் நடந்து திரிகிறேன் போலிருந்து. (நோர்வேயில இப்படி இருந்தா நல்லாயிருக்குமே.. முதலாளிமாரே யோசியுங்க)

இரவு பல மணிநேரமாகியது விவாதங்களும், கடிகளும், ஏனையவைகளும் முடிந்தோய.

ஞாயிற்றுக்கிழமை கற்சுறாவின் (இதெல்லாம் ஒரு பெயர்... தாங்க முடியடா சாமீ) ‘நாங்களல்ல நீங்கள்’ எனும் நிகழ்வை கேட்டமுடியவில்லை. இந்த நிகழ்ச்சியை அவர் ஆரம்பித்தது பேசிய முதல் வசனம் பலராலும் மறக்கமுடியாதிருந்தது. அவரின் மனத்துணிவிற்கு அது சாட்சி.

இதற்கிடையில் பாரீஸ் அறிவாலயத்திற்குப் போய்

  • ஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்
  • நிழல் வீரர்கள் (இந்திய புலனாய்வுத்துறை பற்றியது)
  • முத்துலிங்கம் அய்யாவின் வம்சவிருத்தி, வடக்கு வீதி
  • போரும் வாழ்வும்
  • ஈழம் ‌தேவதைகளும் கைவிட்ட தேசம்
  • எஸ. ராவின் சில புத்தகங்கள்
  • நான் வித்யா (திருநங்கை வித்யாவின் சுயசரிதம்)

இப்படி இன்னும் பல புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.

அங்கு நின்றிருந்த முன்பின் தெரியாத ”நாகேஸ்” என்னும் நண்பர் பல புத்தகங்கள் பற்றி எனக்கு அறிவுறித்தினார். அவர் நிறையவே வாசித்திருக்கிறார் என்பது புரிந்தது. அவருக்கு எனது நன்றிகள்.

இலக்கியச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டு விசா கிடைக்காததனால் லிவிங் ஸ்மைல் வித்தியாவுடனான உரையாடல் Skype மூலம் நடந்தது. தெளிவில்லாத ஒலியினால் நிகழ்ச்சியினை ரசிக்க முடியவில்லை.

எனக்கு அது ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. காரணம் வித்யாவின் சுயசரிதத்தை நான் பாரீ்ஸ் அறிவாலயத்தில் வாங்கிவந்ததில் இருந்து வாசிக்கத் தொடங்கி அன்று மாலைக்குள்ளே படித்து முடித்திருந்தேன். அப்பப்பா எத்தனை எத்தனை வலிகளையும், அவமானங்களையும் கடந்திருக்கிறார் அவர். நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது. நெஞ்சுரமிக்க பெண் அவர்

’பேய்’ என்றும் ஒரு நாடகம் மேடையேற்றப்பட்டது. புலி எதிர்ப்பாளர்களின் கூச்சல் என்றே நினைக்வேண்டியிருக்கிறது அதை. இன்னும் செத்தபுலியை அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. மாற்றுக்கருத்தாளர்கள் தங்களின் ”புலியெதிர்ப்பு” என்றும் தளத்திலேயே இனியும் தாளம்போட்டுக்கொண்டிருந்தால் அவர்கள் ”பாவம்” என்றே எனக்கு நினைக்கத் ‌ தோன்றுகிறது.

இறுதியாக மே 18 பின்னரான இலங்கை-புகலிட அரசியல் என்ற உரையாடல் நடைபெற்றது. இங்கும் ஒலிபெருக்கி தனது எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்தது. தவிர அவர்கள் பேசியது எதுவும் என்னையும் அங்கிருந்த வேறு பலரையும் கவரவில்லை.

அய்யாமாரே, அம்மாமாரே இலக்கியச் சந்திப்பில் ஊறிப்போயிருக்கும் அரசியல் வெடுக்கு சற்றே குறைக்கப்பட்டு இலக்கிய நறுமணத்தை சற்று அதிகமாக பரவவிடுங்கள் என்பதே எனது வேண்டுகோள். நல்ல நாடகங்கள், கவிதை, நூல் அறிமுகங்கள், ஆய்வுகள், கருத்துள்ள விவாதங்கள் போன்றவற்றை கனடாவில் நடக்கவிருக்கும் அடுத்த இலக்கியச் சந்திப்பில் எதிர்பார்க்கிறேன்.

இன்னும், இனியும் நினைவில் நிற்பவை

  • நண்பர் பாபுவின் மீன்பொரியல்
  • விஐியின் இரால் சொதி
  • எஸ்.எம்.எம். பசீர் வீட்டு வட்டிலப்பம்
  • அழகாய் சிரித்து ஏகாந்தம் தந்த அன்னம் என்னும் தேவதை
  • ஒரு guide மாதிரி வழிநடத்திய சிற்பி (வயது 10),
  • எனது மடியில் தூங்கிப் போன குவேனி
  • பாரீஸ் அறிவாலயம்
  • நண்பர்கள் (பெயர் கேக்கப்படாது .. மறந்துட்டேன் .. ஹி ஹி)
  • லாச் சப்பல் பீடா
  • நோர்வேக்கு குடிபெயர்வதாய்ச் சொன்ன நண்பர்
  • ஒரு கிளாஸ் அப்பசுலுட்


குறை நிறை இருப்பினும் ”இலக்கியச் சந்திப்பு”, ”இலக்கியச் சந்திப்புத்” தான்.



இன்‌றைய நாளும் நல்ல‌தே!



.

1 comment:

பின்னூட்டங்கள்