எங்களை மறக்காதீங்க நாங்களும் குழந்தைகள்தான்

அண்மையில் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகளின் பிறந்த நாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். குழந்தையின்  ஒரு வயதினை அவர்களின் நெருங்கிய உறவினர்களுடனும், உற்ற நண்பர்களுடனும்  சிறியதொரு மண்டபத்தில் அடக்கமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். 

சிறிய குழந்தைகளின் ஆடல் பாடல் என்று விழா களைகட்டியிருந்தது. புதிதாய் பூத்த பூக்களைப் போன்று குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் குழந்தை 6 வயதிருக்கும் அவளுக்கு. நட்பாகிப் போனாம் நானும் அவளும். அவளாலும் ஏனைய குழந்தைகளாலும் அழகாகிப்போனது எனது நேற்றைய மாலைப் பொழுது.

விழா முடிந்து வீடு வந்துசேர்ந்தேன். விரைவாய் தூங்கியும் போனேன். காலை எழும்பி அண்மையில் சேகரித்து வைத்திருந்த Podcast களை கேட்டபடியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். 

சக மனிதனை மனிதனாய் மதித்தல் பற்றி ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவர் ஒரு மனிதன் மனிதனாக மதிக்கப்படுவதே அவனது அடிப்படையான மனிதவுரிமை என்றும், மற்றைய மனிதனின் துயரத்தை யார் ஒருவர் உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறார்களோ அவர்கள் இறைவனுக்குச் சமமானவர்கள் என்னும் தொனியில் இருந்தது.

நேற்றைய விழாவில் என் கவனத்தை இரு விடயங்கள் ஈர்த்தன. முதலாவது  மாற்றுத்திறணாளியான ஒரு இளைஞன் அவ் விழாவில் கலந்துகொண்டது. அவரை காண்பவர்களால் அவர் ஒரு மாற்றுத்திறணாளி என்பதை அவரின் நடையுடை பாவனைகளினூடாக அறியக்கூடியதாகவிருந்தது.

இரண்டாவது, பிறந்த நாள் கொண்டாடும் குழந்தையின் தாய்வழிப் பாட்டனார் தனது பேத்தியின் பிறந்த நாளினை, போரில் பெற்றோரினை இழந்த அல்லது சிறையில் வாழும் பெற்றோரினைக் கொண்ட எறத்தாள 350 குழந்தைகள் வாழும் குழந்தைகள்காப்பகம் ஒன்றில், அவர்களுக்கு ஒரு நேர உணவு வழங்கி  தனது பேத்தியின் பிறந்தநாள் மகிழ்ச்சியினை கொண்டாடிய ஒளிப்படம் ஒன்றைக் காண்பித்தார். அவர்களுக்கு அன்று மிகச் சிறப்பான உணவு அன்று வழங்கப்பட்டிருந்தது.

அவர் அந்த குழந்தைகள் காப்பகத்தைப் பற்றிப் பேசிய போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவவேண்டியது எமது கடமை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். வெளிநாட்டு பிறந்தநாள்விழாக்களின் போது நாம் எமது உறவுகளை நினைத்து அவர்களுக்கு ஒரு வேளை சிறந்த உணவினை வழங்க முன்வரவேண்டும் என்பது அவரின் கோரிக்கையாய் இருந்தது. குழந்தைகள் காப்பகங்களில் தினமும் மிகச் சிறந்த உணவு வழங்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் மாதத்தில் ஒரிரு முறையாவது அவர்களும் மகிழ்ச்சியாக உணவருந்த நாம் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விழாவில் கலந்து கொண்ட எத்தனை உள்ளங்களை அவரது செய்தி சென்றடைந்தது என்பது கேள்விக்குறியே. இருப்பினும் பெரியவரின் கோரிக்கையில் பலத்த நியாயம் இருப்பதாகவே எனக்குப்படுகிறது.

வெளிநாட்டு வாழ்க்கையின் விழாக்கள் பற்றி பல பக்கங்கங்கள் எழுதலாம். வாரத்திற்கு குறைந்தது 2 - 3 விழாக்கள் என்பது சர்வசாதாரணம். இவ் விழாக்களில் ஆடம்பரங்களுக்கும் பஞ்சமில்லை. ஆடை அணிகலன்களில் இருந்து, உணவு, சோமபானம், விழாமண்டபம், நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் ஆடம்பரம் மிதமிஞ்சியிருக்கும்.

600 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டு 400 மட்டுமே கலந்து கொண்டு குறைந்ததது 150 பேருக்கான உணவு குப்பையில் கொட்டப்பட்ட கதையும் உண்டு.

இப்படியான விழாக்களுக்கு மத்தியில் அந்தப் பெரியவரின் செய்கை ஒரு சிலரையாவது சிந்திக்கத் தூண்டியிருக்குமானால் மகிழ்ச்சியே. யார், மற்றைய மனிதனின் வேதனையறிந்து தாமாகவே முன்வந்து உதவுகிறார்களோ அவர்களின் மனிதம் மதிக்கப்படவேண்டியது. அதே போல் அவர்களின், முன்பின் அறியா மனிதனையும் சக மனிதனாக மதித்து நடாத்தும் தன்மையும் பாரட்டப்படவேண்டியது, போற்றப்படவேண்டியது. மற்றயவர்களின் பசியை நாம் உணர்வது என்பது இலகுவல்ல. அதற்கு மற்றவர்களை உண்மையான மனதுடன் புரிந்து கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகிறது.

எல்லோராலும் இப்படி மற்றவர்களை புரிந்து கொள்ளமுடியாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது.

அந்த மாற்றுத்திறனாளி இளைஞனை நான் ஆரம்பத்தில் இருந்தே அவதானித்துக்கொண்டிருந்தேன். உள்ளே வருவதும் வெளியே செல்வதும், அங்கும் இங்கும் நடப்பதுமாய் இருந்தான். வெளியே நின்றிருந்த வளர்ந்த இளைஞர்கள் பலர் அவனை கவனித்ததாகவோ, அவனுடன் பேசியதாகவோ தெரியில்லை. ஆனால் அவர்கள் அந்த இளைஞன் பற்றி ஏதோ குசுகுசுத்துக்கொண்டிருந்தார்கள்.

இவர்களின் குசுகுசுப்பு பற்றி அவன் கவலைப்பட்டதாயில்லை. அவனோ இறுகிய முகத்துடன் அவனது உலகில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் தனியே உலாவித்திரிந்தது எனது  மனதை சற்று பிசைந்தது. வளர்ந்தவர்கள் எவரும் கூட அவனிடம் பேசியதாகத் தெரியவில்லை. நானும் ஏனோ அவனுடன் பேச்சுக்கொடுக்கவில்லை.

சற்று நேரத்தின் பின் அந்த இளைஞனைக் காணவில்லை. ஆச்சர்யமாக இருந்தது. அப்போது தான் அவதானித்தேன் அவனைச் சுற்றி சில இளைஞர்கள் நின்றிருந்தார்கள். அந்த இளைஞனின் குழந்தைத்தனமான உலகில், அவர்களும் அவனுடன் சேர்ந்து பயணித்துக்கொண்டிருந்தததை அவர்களை கடந்து சென்ற போது அறிய முடிந்தது. சிறுமிகள் இருவர் அவனுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனின் முகத்தில் இருந்த இறுக்கம் அகன்று மகிழ்ச்சி குடிவந்திருந்தது. அவனது நடவடிக்கைகளில் குதூகலமும் விளையாட்டும் தெரிந்தன.

இளைஞர்கள் கூட்டங்கள் இப்படியான மாற்றுத்திறணாளி மனிதர்களை இலகுவில் தங்களுடன் இணைத்துக்கொள்ளச் சங்கடப்படுவார்கள். ஆனால் இந்த இளைஞர்களோ எவ்வித தயக்கமும் இன்றி அந்த இளைஞனின் உலகில் அவனுடன் குதூகலித்துக்கொண்டிருந்தது மனதுக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது மட்டுமல்ல அந்த இளைஞர்கள் மீது பெருமதிப்பும் ஏற்பட்டது.

அந்த விழா எதை எதையோ எனக்கு போதித்துப் போனது என்றால் அது மிகையில்லை.

இன்றைய நாளும் நல்லதே.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்