ஒரு பாலமும் பால்யத்து திருவிளையாடல்களும்

மட்டக்களப்பில் பழைய கல்லடிப்பாலத்திற்கு அருகில் புதிய கல்லடிப்பாலத்தைக் கட்டியிருக்கிறார்கள். அது அண்மையில் பாவனைக்கு விடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாலத்திற்கும் எனக்கும் இடையில் நடந்த சம்பவம் பற்றியதே இந்தப்பதிவு.
 
1980களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்ற காலமது, விடுதியில் தங்கியிருந்தேன். விடுதியின் தலமை மாணவர் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தேன்.

விடுதி வாழ்க்கை என்பது இலகுவல்ல. சிறிய வகுப்பு மாணவர்களுக்கு அது மிகவும் கடுமையானது. அன்பு ஆதரவு இல்லாத இடம். பசியும் தன் பங்கிற்கு வீடுபற்றிய ஏக்கத்ததை தரும். எனவே சிலர் வீடுகளுக்கு தப்பி ஓடுவதுண்டு.
 
சில மாணவர்கள் கல்லடிப் பாலத்தைக் கடந்தே இவர்களின் வீடுகளுக்குச் செல்லுவேண்டும். அப்படி விடுதியி்ல் இருந்து வீடுகளுக்குத் தப்பியோடும் மாணவர்களை நாம் மடக்கிப்பிடிக்கும் இடம் கல்லடிப்பாலம்தான். 
 
மிகவும் விறுவிறுப்பான கள்ளன் போலீஸ் விளையாட்டு போன்றது, தப்பியோடும் மாணவர்களை மடக்கிப்பிடிப்பது.

ஒரு முறை ஒரு பொடிப்பயல் விடுதியில் இருந்து தப்பிவிட்டான் என்ப‌தை உளவுத்துறை செய்தியறிவித்தது. பேரூந்து நிலையத்திற்கு ஒரு போலீஸ் படை, தனியார் பேரூந்து நிலையத்துக்கு ஒருபடை, நான் தனியே பாலத்துக்கு என்று சென்றோம். தொலைத்தொடர்பு சாதங்கள் இல்லாத காலம். நான் பாலததின் பாதசாரிகள் நடக்கத்தொடங்கும்ஆரம்பத்தில் நின்றிருந்தேன்.
வெய்யிலின் அகோரம், அத்துடன் இந்தப் பொடிப்பயல் தப்பிய கதை அதிபருக்குத் தெரிந்தால் எனக்குக் கிடைக்கவிருக்கும் பூசை என்று எல்லாம் சேர்ந்து பொடிப்பயலின்மேல் எனக்கு கெட்டகோபம் வந்திருந்தது.
சற்று நேரமாய் பாலத்தின் வாயிலில் நின்றிருந்தேன். அவனைக் காணவில்லை.  ஒரு வேளை அவன் பாலத்தை கடந்துவிட்டிருப்பானோ என்ற எண்ணத்தில், நான் பாலத்தைக் கடந்துகொண்டிருந்த வெள்ளைச்சீருடை அழகிகளைப் பார்த்துக்கொண்டிந்த நேரததில் அவன் என்னைக் கடந்து பாதசாரிகள் நடக்கும் பகுதியினுள் நடப்பதை சற்று நேரத்தின் பின்பு தான் கண்டேன்.
நான் கடுங் கோவத்துடன் அவனின் பெயரைக் கூறிக் கத்தினேன்: கத்தியது மட்டுமல்லாது அவனைத் துரத்தவும் தொடங்கினேன். எனது குரலையும், என்னையும் கண்டவன் ஓடத் தொடங்கினாான். இருவரும் ஓடிக்கொண்டிருந்தோம். நான் அவனை நெருங்கிக்கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபடியே ஓடியவன்,  தப்ப முடியாது என்று அறிந்துகொண்டான். ஓடுவதையும் நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தபடியே நின்றான்: அவன் ஓடியதை நிறுத்தியதும் நானும் மூச்சுவாங்கியபடியே ஓடியதை நிறுத்தி அவனை நோக்கி ஆறுதலாகத நடக்கலானேன்.
சட்டென்று பாதசாரிகள் நடக்கும் பகுதில் இருந்து வாகனங்கள் செல்லும் பகுதிக்கு பாலத்தின் மேல் ஏறி அங்கிருந்து இரும்புத் தூண்களை பற்றி பற்றி நகரத் தொடங்கினாான்.
அவனின் இந்த திடீர் தந்திரோபாயத்தினால் நான் தடுமாறியதல்லாமல் பயந்தும் போனேன். அவனோ ஒரு சிறுபையன். பாலத்தின்  நடுவே உள்ள கம்பிகளினான இடைவெளியை அவன் கடந்துசென்றால் வாகனங்கள் ‌செல்லும் பகுதி. அதைக் கடக்கும்போது இவன் வாவியினுள் விழுந்துவிடுவானெனின், வாவியின் பெரும் ஆழமான பகுதியில் விழுந்துவிடுவான். இவ்வாறு நான் பயந்திருந்த போது ஒரு குரங்கினைப் போன்ற லாகத்துடன் பாலத்தின் நடுப்பகுதியை கடந்து கொண்டான் அவன்.

இப்போ எம்மால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது. ஆனால் அவனை என்‌னால் பிடிக்க முடியாதிருக்கிறது. நான் ஒரு பக்கம் ஓடினால் அவன் மறுபக்கமாய் ஓடினான். அவன் பக்கமாய் ஓடினால் மறுபக்கமாய் ஓடினான்.
சரி இவனை அவன் ஊர் பக்கமாக விட்டால்தானே பிரச்சனை என்பதால் அவன் ஊர்ப்பக்கமாய் ஓடத்தொடங்கினேன். அப்போ அவன் என்னை சற்றுத் தூரம் ஓடவிட்டவன் மீண்டும் பாலத்தால் நடைபாதைப் பகுதிக்கு பாலத்தினை கடந்து வந்தான். என்னைப் பார்த்தபடியே நின்றீருந்தான்.

எனவே நானும் பாலத்தின் மறுகரையின் எல்லையிலேயே நின்றுகொண்டேன். இப்போ அவனால் எப்பகுதியாலும் என்னைக் கடக்கமுடியாது.  ஒரு மணிநேரம் கடந்திருக்கும் அவன் பாலத்தின் நடுவில் நின்றுகொண்டிருக்க நான் பாலத்தின் எதிர்க்கரையில் நின்றிருந்தேன்.
எனது அதிஸ்டத்துக்கு என்னைத் தேடி பேரூந்து நிலையத்திற்கு சென்ற மாணவர்கள் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் பொடிப்பயல் மீண்டும் பாலத்தில் ஏறி வாகனங்கள் கடக்கும் பகுதிக்குள் பாய்ந்து கொண்டான்.
நாம் இரு குழுக்களாகப் பிரிந்து இரு பகுதிகளினாலும் சென்றுபோது அவன் தனது திருவிளையாடல் முடிவடையும் நேரம் வந்துவிட்டதையுணர்ந்து அழத்தொடங்கினான்

அவன் அழ அழ வீதியால் அவனை இழுத்துவந்து, அவனை பாடசாலை விடுதிக்குள் அழைத்து வந்ததும் எனது கோபம் அனைத்தையும் சேர்த்து அவனின் முகத்தில் அறைந்தேன். அவனை சில மாணவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள்.

அன்று மாலையே விசாரனைக் கமிஷன் ஆரம்பித்ததது அதிபரின் தலைமையில். நான் வெற்றிபெற்ற போர்வீரனைப்போல் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தேன். அவன் கூனிக்குறுகி நின்றிருந்தான்
விசாரணையின் பின் அவனுக்கும் பேச அனுமதி கிடைத்தது. பசியினாலும், அம்மாவை பார்க்கவேண்டும் என்பதாலும் தான் ஓடியதாகச் சொன்னான்.
அத்துடன் சஞ்சயன் அண்ணண்
நான் அறைந்ததையும் சொன்னான்.
அதிபர் அவனை கடுமையாக எச்சரித்து முகத்தில் இரண்டு அறைவிட்டு அவனை அனுப்பினார்.
பின்பு எனக்கு இரண்டு அறைவிட்டார். பின்பு இப்படிக் கூறினாா்.
உனக்கு மாணவர்களை அடிப்பதற்கு உரிமையில்லை. உன்னைப் பார்த்து மற்றவர்களும் பழகுவார்கள்.
அவன் பாலத்தை குறுக்காகக் கடந்த போது நீ அவனை துரத்துவதை நிறுத்தியிருக்கவேண்டும்.அவனுக்கு ஏதும் ஆபத்து நடந்திருந்தால் யார் பொறுப்பு என்பதாயும் இருந்தது  அதிபரின் வாதம்.
பொடிப்பயலை எதிர்வரும் வாரவிடுமுறைக்கு வீட்டுக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.  மனதுக்குள்  ‌பொடிப்பயலைக் கறுவியபடியே, பெரியவருக்கு தலயைாட்டியபடியே வெளியேறினேன்.
அடுத்து வந்த வாரவிடுமுறையில் அவன் வீடு சென்றபோது என்னைப்பார்த்து சிரித்தது, என்னை கிண்டல் பண்ணுவது போலிருந்தது.
பி.கு: 
சஞ்சயன் அண்ணணுக்கு விடுதியிலும், பாடசாலையிலும் பலத்த செல்வாக்கு இருந்தது. அதனால் ஒரு ஆயுதமற்ற விசுவாசிகளின் குழுவும் இருந்தது. அந்த விசுவாசிகளைக் கொண்டு அந்தப் பயலை அவன் விடுமுறையால் வந்தபின் நான் சில நாட்கள் கவனித்துக்கொண்டேன்.
விசுவாசத்தைக் காட்டிய விசுவாசிகளுக்கு பாடசாலைக்கு அருகில் இருந்து வீ்ட்டுக்கோழிகள் விருந்தாகின.
30 ஆண்டுகளின் பின்பான ஒரு நாள் அதிபரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது இது பற்றிக் கூறிய போது ”நீ  இவ்வளவு மோசமான ஆள் என்று எனக்குத் தெரியாதே” என்று கூறிச் சிரித்தார்.
உங்களுக்குத் தெரியாதது எவ்வளவோ இருக்கு சேர், என்று எனக்குள்ள சொல்லிக்கொண்டேன்.



1 comment:

  1. பள்ளி ஞாபகத்தை மீளவும் கிளரிவிட்டீர்கள் விசரன் அண்ணா!

    ReplyDelete

பின்னூட்டங்கள்