தேவதைகளின் பாதணிகள்

மனது சரியில்லாததால் இன்றைய நாள் மெதுவாக பல நினைவுகளுடன் கடந்துகொண்டிருந்தது. வாழ்க்கை ஏன் இப்படியானதாய் இருக்கிறது என்று சிந்திக்கவைத்தது மனது. இதே கேள்வி முன்பும் பலதடவைகள் மனதில் தோன்றியிருந்தாலும் இன்று வரை பதில் கிடைத்ததில்லை. இன்றும் அப்படியேதான்.

இளவேனிற்கால விடுமுறை கழிந்து பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளின் ஒலிகள் ஜன்னலினூடாக கேட்டுக்கொண்டிருந்தன. ஆண் பெண் குழந்தைகளின் சிரிப்பலைகள், உரையாடல்கள் என அந்த ஒலிகள் என்னை பல ஆண்டுகளுக்கு முன்னான நாட்களுக்குள் அழைத்துப்போயின.

ஏற்கனவே இருந்த மனச்சோர்வுடன், பழைய நினைவுகளும், தனிமையும் சேர்ந்துகொண்டபோது, இனியும் வீட்டுக்குள் இருப்பது நன்றன்று என்பதால்  வெளியில் புறப்பட்டேன்.

எங்கேபோவது என்பதையறியாமல் அரைமணிநேரம் அலைந்து தி‌ரிந்தேன். பின்பு ஒரு பெரிய பல்பொருள் அங்காடித்தொகுதியினுள் வாகனத்தை நிறுத்தியபின் அங்கிருந்து கடைகளினுள் புகுந்துகொண்டேன்.

புத்தகக்கடை, கணிணிக்கடை, இலத்திரனியற்பொருட்களை விற்கும்கடை என்று நேரம் கடந்துகொண்டிருந்தது. மனம் எதிலும் லயிக்கும் நிலையில் இருக்கவில்லை. தனிமையுணர்வினை  மிக நெருக்கத்தில் உணர்ந்துகொண்டிருந்தேன். ஈரமான உடையுடன் நடப்பதுபோன்றதான உணர்வில் இருந்தது மனது. எதையெதையோ நினைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

எதிரே ஒரு பாதணிக்கடையொன்றில் 50 வீதக்கழிவில் விற்பனை என்றிருந்து. கால்கள் அக்கடையினுள் புகுந்துகொண்டன. ஆண்களின் பாதணிகள், பெண்களின் பாதணிகள்என்பவற்றைக் கடந்தபின் குழந்தைகளின் பாதணிகள் இருக்கும் பகுதியில் பெண்குழந்தைகளின் பகுதி இருந்தது

பாடசாலை ஆரம்பிக்கும் நாட்கள் என்பதால் குழந்தைகளுக்கு பல புதிய புதியவகையான பாதணிகள் விற்பனைக்கு வந்திருந்தன.

சில பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் இரண்டு தேவதைகளுடன் பாதணிகடைகளில் பல மணிநேரங்களை கழித்திருக்கிறேன். பாடசாலைக்கான பாதணி, வெளியே விளையாடுவதற்கான பாதணி, உள்ளே விளையாடுவதற்கான பாதணி, மழைக்காலத்திற்கான பாதணி, பனிக்காலத்திற்கான பாதணி, விழாக்களுக்கான பாதணி, இளவேனிற்காலத்திற்கான பாதணி இப்படி பல பல சந்தர்ப்பங்களுக்கான பாதணிகள் தேவைப்பட்ட காலமது. இரண்டு இளவரசிகளுடன் பேரசனாய் வாழ்ந்திருந்த நாட்களவை.

ஆண் குழந்தைகளுக்கான பாதணிகளின் உலகம் மிக மிகச் சிறியது. பெண்குழந்தைகளின் பாதணிகளின் உலகம் மிகவும் பெரியது, வித்தியாசமானது, அழகானது. ரோசா, ஊதாப்பூ நிறங்கள் முக்கியமானவை. ஆரம்பத்தில் ரோசா நிறமாயும் காலப்போக்கில் ஊதாப்பூவின் நிறத்திலும் என்னவள்களின் பாதணித்தேர்வுகள் இருந்தன.

மழைக்காலத்துப் பாதணி என்றால் அது எவ்வளவு உயரமாய் இருக்கவேண்டும் என்பதில் இருந்து, நிறம், என்னவிதமான படங்கள் அதில் பதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது வரையில் அவர்களே தீர்மனிப்பார்கள். கடை கடையாக ஏறி இறங்கி ஏதும் வாங்காது வீடு திரும்பிய நாட்களில் அவர்களின் சோகம் என்னையும் பற்றியிருக்கும்.

குழந்தைகளுக்கான பாதணிகள் இருந்த பகுதியில் இருந்த ஒரு பாதணியின் மேற்பகுதியில் பல ஓட்டைகள் இருந்தன. அந்த ஓட்டைகளை பூக்கள், மிருகங்கள், பறவைகள் போன்ற சிறு சிறு உருவங்களால் மறைக்கலாம். அவ் உருவங்கள் தனியே விற்பனைசெய்யப்படும். அந்த பாதணியைக்கண்டதும் என் இளையமகள் அப் பாதணிகளுடன் செய்த அழகான அழிச்சாட்டியங்கள் நினைவுக்கு வந்தது.

என் இளையமகளுக்கு அந்தப் பாதணியில் பெருத்த காதலிருந்தது. ரோசா நிறத்தில் அப்படியான பாதணி ஒன்றினை வாங்கிக் கொண்டாள். அதற்கு பல நிறங்களில் பூனை உருவங்கள், குதிரை உருவங்கள் என்று வாங்கிக் கொண்டாள். வீட்டுக்குள்ளும் அதே பாதணிகளுடனேயே திரிந்தாள். யாராவது வீட்டுக்கு வந்தாலும் அதை காட்டுவதற்காவே அப் பாதணிகளை பாவித்தாள். மற்றவர்கள் அவளின் பாதணிகளை ஆச்சர்யமாகப் பார்த்தால் பூரித்துப்போவாள்.

ஒரு முறை லண்டனுக்குச் சென்றிருந்தோம். அந்நாட்களில் அங்கு பாதணியின் கீழ் ஒரு சிறிய சில்லு பூட்டிய பாதணிகள் பெரும் பிரபல்யமாய் இருந்தன. அப்படியான பாதணிகளின் உதவியுடன் வழுக்கி வழுக்கி நடக்கும் குழந்தைகளை பார்த்தபடியே நின்றிருப்பாள் எனது மூத்த மகள்.  தனக்கும் அது வேண்டும் என்றாள். அவளின் விருப்பத்தை தட்டமுடியுமா? வாங்கிக்கொடுத்தேன். அதன் பின்பு என் கையைப் பிடித்தபடியே வழுக்கி வழுக்கி ஓடப்பழகிக்கொண்டாள். அக்காள் வழுக்கி வழுக்கி ஓடுவதைப்பார்த்த தங்கையும் அடம்பிடித்து அவளுக்கும் அதே மாதிரியான பாதணிகளை வாங்கிக்கொண்டாள். சில நோரங்களில் இருவரும் எனது இருகைகளையும் பிடித்துபடி வழுக்கிக்கொண்டார்கள். அவர்களின் மகிழ்ச்சியில் வழுக்கிக்கொண்டிருந்தேன், நான். நோர்வே வந்தபின் அவர்களின் பாதணிக்கு பலத்த மவுசு இருந்தது. காலப்போக்கில் அப்படியான பாதணிகள் நோர்வேக்கு வந்த போது எனது குழந்தைகளுக்கு அந்தச் சப்பாத்தின் மீதான காதல் தொலைந்திருந்தது.

ஒரு முறை பனிக்காலத்தில் உறைபனியில் சறுக்கும் பாதணி வாங்கித்தா என்றாள் மூத்தவள். வாங்கிய பின் ”வா,‌ எங்கள் வீட்டருகில் இருக்கும் குளம் உறைந்துபோயிருக்கிறது. அங்கு போய் சறுக்கிவிளையாடலாம் என்றாள். சரி போகலாம் என்றேன். சற்று நேரம் அவளைக்கு உதவியிருப்பேன். அதன் பின்பு நீரில் நீந்தும் மின்குஞ்சு போலாகிவிட்டாள். அந்தப் பாதணிகளைப் போடவும், அவற்றை கழட்டவுமே அவளுக்கு உதவி தேவைப்பட்டது. அடுத்தடுத்த வருடங்களில் அவள் உறைபனியில் எப்படி சறுக்குவது என்று தங்கைக்கும் கற்பித்தாள். நான் குளத்தின் கரையில் நின்றபடியே அவர்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு முறை நத்தார் நாட்களின் போது  கடைக்குச் சென்றிருந்தோம். நடக்கும் போது நிறம் நிறமான வெளிச்சமும் கீச் கீச் என்று சத்தமும் வரும் பாதணி ஒன்றினை அணிந்தபடியே ஒரு குழந்தை நடந்துபோனாள். அப்படியான பாதணி வேண்டும் என்று கேட்டு, அழுது வாங்கிக்கொண்டாள் இளையவள். அன்று வீட்டுக்குள்ளும் அதனுடனேயே நடந்து திரிந்தாள். நித்திரையானதும் மெதுவாய் பாதணிகளை கழற்றி வைத்தேன். காலை எழும்பியதும் மீண்டும் அதனைப் போட்டுக்கொண்டாள்.

இளையவளின் முதலாவது பிறந்தநாள் லண்டனில் நடைபெற்றது. அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கியாகிவிட்டது. ஆனால் விரும்பிய பாதணிகள் மட்டும் கிடைக்கவேயில்லை. மாலை ஆறு மணிக்கு விழா ஆரம்பிக்கவிருந்தது. மதியம் 12 மணிக்கும் பாதணிகள் கிடைக்கவில்லை. இறுதியில் பல மணிநேர காரோட்டத்தின் பின் ”பலே” நடன உடுப்புகள் விற்பனைசெய்யும் ஒரு கடையில் மாலை 4 மணிபோல் பாதணிகளை வாங்கிக்கொண்டேன்.

ஒரு முறை விடுமுறையின் போது கட்டார் நாட்டிற்கு சென்றிருந்தோம். அங்கு பல பல அழகிய பாதணிகள் இருந்தன. வீடுமுறை முடிந்து திரும்பியபோது ஒரு பெட்டி நிறைய பாதணிகள் நோர்வேக்குள் கடத்தப்பட்டன.

பாடசாலைக்குச் செல்ல முன்பு ” அப்பா சப்பாத்து ஊத்தையாக இருக்கிறது துடைத்துத் தாருங்கள்” என்று கட்டளையிடுவார்கள். சுத்தமான பாதணியைப் பார்த்ததும் அவர்களின் கண்களில் தெரியும் அழகுக்காகவே எத்தனை பாதணியையும் கழுவலாம்.

எனது பாதணிகள் அசுத்தமானவை, அழகில்லாதவை, பழயவை என்றெல்லாம் ஆயிரம் விமர்சனங்கள் வரும். சில வேளைகளில் புதிய பாதணிக‌ளைப் பரிசளித்துமிருக்கிறார்கள். இனி பாதணிகள் வாங்கும் போது என்னை அழைத்துப் போ. உனக்கு அழகியல் பற்றி ஒன்றும் தெரியாது என்று அவர்கள் பாராட்டிய நாட்களும் உண்டு.

இன்று அந்த பாதணிக் கடைக்குள் ஒரு பெண்குழந்தை ஒரு சோடி ரோசா நிறமான பாதணிகளை தனது காலுக்கு பொருத்தமானவையா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் பெருங்கனவு தெரிந்தது, எனக்கு.

என்னிடம் எனது இரு குழந்தைகளும் 3 - 4 வயதில் பாவித்த ஒரு சோடிப் பாதணிகள் இருக்கின்றன. அவை எனது பொக்கிஷங்கள். சில நேரங்களில் அவற்றை எடுத்து நுகர்ந்து பார்ப்பேன். அப்போது, தேவதைகளின் பாதணிகளுடன் நான் காற்றில் நடந்‌துகொண்டிருப்பேன்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்