நோர்வேயில் ”பொங்குமாங்கடலின்” சாரல்

இப்போதெல்லாம், வாழ்க்கையில்  நடக்கும் சம்பவங்களுக்குள் ஏதோவொரு கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய தொடர்பு இருப்பதைப்பொல் உணர்கிறேன். அண்மையில் மழையின் வடிவங்களைப்பற்றி ஒரு பதிவில் எழுதிக்கொண்டிருந்தபோது, சாரல் என்பதும் ஒரு வித மழையா என்ற சந்தேகம் வந்தது.

எனக்கு இப்படியான சந்தேகங்கள் வரும்போது நான் ஒரு அற்புதமான மனிதரை தொடர்புகொள்வதுண்டு. அவர் தளும்பாத நிறைகுடம். ஆசிரியர்களுக்கு முன்னுதாரணம். இவருடனான அறிமுகம் கிடைத்து சில ஆண்டுகளேஆகின்றன. இவரது அறிமுகம் எனக்கு பலதையும் கற்றுத்தந்திருக்கிறது. ஒருமுறை பதிலை விளக்கிக்கூறுவார். அதன்பின் அவரது சித்தனையில், தேடலின்பின் ஏதும் புதிய தகவல்கள் கிடைத்தால் உடனே அவரே தொலைபேசி எடுத்து அதைக் கூறுவார். இப்படி அவராகவே 3 முறை தொலைபேசி எடுத்த சம்பவங்களும் உண்டு.

அன்றும் அவரைத் தொடர்பு கொண்டு சாரல் என்பதுபற்றிக் கேட்டேன். அப்போது அவர், சாரல் என்பதற்கு உதாரணமாக குற்றாலம் பகுதியில் தென்மேற்குப்பருவக்காற்றுக்காலங்களில் பெய்யும் மழையை சாரல் என்பதற்கு உதாரணமாகக்கூறலாம், சாரலினூடாக நடந்துசென்ற பின் முகத்தைத் துடைத்தால் கையில் சாரலின் நீரை உணரலாம் என்று விளங்கப்படுத்தினார். அத்துடன் சாரல் என்பது மலையாளவழிச் சொல் என்றும், அது மழையாளத்தி்ல் சாறு என்பதை அடிப்படையாகக்கொண்டது என்றும் அறியக்கிடைத்தது.

இந்த உரையடல் நடந்து ஏறத்தாள பத்து நாட்கள் இருக்கும். இன்று  நிலக்கீழ் தொடரூந்தில் உட்கார்ந்திருந்தபோது காந்தியுடன் உரையாடுவேன் என்னும் எஸ். ராவின் புத்தகத்தை எடுத்து வாசிக்கத்தொடங்கினேன். எஸ். ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அடுத்த வசனத்தை ஏன் எழுதினேன் என்பதை நீங்கள் பின்பு அறிந்துகொள்வீர்கள். இந்தியா வந்தால் கட்டாயம் சந்தியுங்கள் என்ற அவரது அன்புக்கட்டளையொன்றும் என்னிடம் இருக்கிறது.

அப்புத்தகத்தில் ”அருவிக்குத் தெரியும்” என்று ஒரு சிறுகதை இருக்கிறது. அந்தச் சிறுகதை குற்றாலத்தில் நடக்கிறது. அக்கதையின் நாயகன் குற்றாலத்துச் சாரலில் நனைந்து திரிகிறான். அத்துடன் அச் சிறுகதையில் குற்றாலத்தில் இருக்கும் பொங்குமாங்கடல் பற்றியும் ஒரு வரி எழுதப்பட்டிருக்கிறது.

எனக்கு முதன் முதலில் ‌குற்றாலத்தில் உள்ள பொங்குமாங்கடலை அறிமுகப்படுத்தியவர் எஸ். ரா. அவரது ஒரு அனுபவக்கட்டுரையில் குற்றால அருவியில் ஒருவர் இறந்துவிடுகறார். அவரின் உறவினர்களின் அலரல் பொங்குமாங்கடலின் இரைச்சலில் அடங்கிப்போவது போன்று எழுதியிருப்பா‌ர். அந்தக் கதையை வாசித்த அன்றே பொங்குமாங்கடல் என்னும் இடத்தை நான் பார்க்வேண்டும் என்று ஒரு எண்ணம் முளைவிட ஆரம்பித்திருந்தது.

இன்று எஸ். ராவின் அருவிக்குத்தெரியும் கதையை வாசித்தபோது, அக் கதையில் குற்றாலத்து சாரல் குறிப்பிடப்பட்டிருந்ததும், சாரல் பற்றி நான் சில நாட்களுக்கு முன் உரையாடியதையும், அப்போது சாரலுக்கு உதாணமாக குற்றாலத்துச் சாரல் குறிப்பிடப்பட்டதும் தற்செயலான சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் கடந்த சில காலமாகவே என்னைச் சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கிடையில் ஏதோவொரு மெல்லிய பிணைப்பு இருப்பதுபோன்றே உணர்கிறேன்.

மேற்கூறிய சம்பவங்களுக்கும், எஸ். ராவின் அன்பான அழைப்புக்கும், பொங்குமாங்கடலுக்கும், குற்றாலத்துச் சாரலுக்கும்
எதிர்காலத்தில் நடக்கப்போகும் பயணங்களுக்கும் இடையில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லியதொரு பிணைப்பு இருக்குமா? நிட்சயமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

வயதாகும்போது சில விடயங்கள் அடர்ந்த புகாரினுள் புலப்படும் காட்சிகள்போன்று மங்கலாகவும், தெளிவின்றியும் புலப்படத்தொடங்குகின்றன. அவைமீது ஒருவித ஆர்வமும், தேடலும் ஏற்படுவதையும் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.

இன்றைய நாளும் நல்லதே!

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்