மணவிலக்கானவன் சமூகத்தை விமர்சிக்க அருகதையற்றவன்!

மணவிலக்கானவன் ஒருவன் சமூகம் சார்ந்து தனது கருத்துக்களை கூறுவதற்குரிய சுதந்திரத்தை இழந்துவிடுகிறான்; என்ற கருத்தை காத்திரமாய் முன்வைக்கும் சமூகத்தின் அங்கத்தவனாக இருந்து இதை எழுதுகிறேன்.

நான் மணவிலக்கானவன். நான் வாழும் சமூகம்பற்றி, அது பயணிக்கும் பாதை, அதன் செயற்பாடுகள், அவற்றின் தவறுகள், சிறப்புக்கள், நன்மை தீமைகள்பற்றி பல வருடங்களாகவே எழுதி வருகிறேன். இவ்வாறு சமூகத்தின் நன்மை தீமைகளை எழுதுபவர்கள் மிக மிகச் சிலரே நோர்வேயில் இருக்கிறார்கள்.

சமூகத்தைப் பற்றிய புரிதலோடு, எனது கருத்துக்களை துணிந்து எழுதுவதனால் எனக்கு கிடைத்த முதற்பெருமை துரோகி, இலங்கையின் உளவாளி, சிங்களவனின் கைக்கூலி போன்ற பட்டங்களே.

இவற்றிகெல்லாம் பயந்து நான் எனது கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தினால் என்னைப்போன்ற கோழையான மனிதன் இவ்வுலகில் இருக்கமாட்டான்.

என்மீதான தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது அதனை ஏற்கும் மனப்பக்குவமும் என்னிடம் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

எமது சமூக நிறுவனங்களிடம்; சுயவிமர்சனம், எதிர்வினையாற்றல், உரையாடல்போன்ற வளமான தன்மைகள் இல்லாதிருப்பதும், அவற்றை கற்றுக்கொள்ள மறுப்பதும் இச்சமூக நிறுவனங்கள் முழுமையாக ஜனநாயக ரீதியில் இயங்காமல், ஒரு சிலரின் இருப்புகளுக்காகவே இயங்குகின்றன என்பதை வெளிப்படையாகவே கூறுகின்றன.

அண்மையில் வன்முறையை சிறுவர்களிடத்தில் தூண்டக்கூடிய ஒரு நாடகக்காட்சிபற்றி சிறு விமர்சனத்தை முன்வைத்தேன். நான் சுட்டிக்காட்டிய விடயத்தில் உள்ள நியாயத்தையும், உண்மையையும் நண்பர்களும், முன்பின் தெரியாதவர்களும் தொலைபேசியிலும், நேரிலும் ஆதரித்து உரையாடியிருக்கிறார்கள்.

மறைமுகமாகவே ஆதரவை தெரிவிக்கும் இவர்களால் அந்த ஆக்கத்திற்கு நேரடியாகவே ஆதரவளிக்க முடியாதிருக்கிறது என்பது எத்தனை வருத்தத்திற்குரியது? இதையிட்டு எனக்கு கோபமோ, அயர்ச்சியோ இல்லை.

ஏன் எனில், எமது சமூகத்தின் செயற்பாடு பலகாலமாய் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நன்றாகவே உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

அதிகாரத்தில் உள்ளவர்களது, துரோகிப் பட்டங்களுக்கும், தங்களின் சமூக அந்தஸ்து பாதிக்கப்பட்டுவிடும், நாம் ஒதுக்கப்பட்டுவிடுவோம், எமது பிள்ளைகள் மேடையேறும் சந்தர்ப்பம் அகன்றுவிடும் என்றும் பயந்து ஒதுங்கும் மனிதர்களே பெரும்பான்மையாக வாழும் சமூகம் எம்முடையது.

இதில் கல்வி அறிவுள்ளவர்களும், சமூகத்தில் முன்மாதிரியாக திகழும் பலரும் உள்ளடங்கியிருக்கிறார்கள் என்பதே வேதனையானது. இருப்பினும் அவர்களின் மனநிலைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே உண்மை.

ஆனாலும் இரகசியமாகவேனும் இவர்களால் உங்கள் கருத்தில் உடன்படுகிறேன் என்று கூறமுடிகிறது என்பது எனக்கு பெரும் பலத்தையும், தைரியத்தையும், ஊக்கத்தையும் தருகிறது. காரணம் எமது சமூகம் மாற்றமடையவேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள் என்பதே.

இப்படியான கருத்துகளை நான் நேரடியாக முன்வைப்பதில் அதிருப்திகொண்ட சிலர், எனது நண்பர்கள் பலருக்கும் அவதூறு பேச்சுக்களாலும்  மிரட்டல்களாலும் துன்பங்களையும் மனக்கஸ்டங்களையும் கொடுப்பது தம்மை காப்பாற்றிக் கொள்வதற்கேயன்றி வேறு நோக்கமில்லை.

எங்கள் சமுதாயத்தில், சமூகத்தின் மீது கேள்வி எழுப்புபவர்கள் பிறழ்வுடையவர்கள், துரோகிகள், ஒழுக்கக்கேடானவர்கள் என்ற கருத்தை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகின்றனர். இவர்கள் யார் என்று நோக்கின் இவர்களை நோக்கியே மேற்குறிப்பிட்ட விமர்சனங்களும், கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கும்.

தவிர, இவர்கள் பேசு பொருளினைத் தவிர்த்து அதனை எழுதியவர் மீதான வசைபாடல்களை ஆரம்பித்துவிடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு பேசுபொருளை திசைதிருப்பியம் மாற்றியும் விடுவார்கள்.


உண்மை மற்றும் பொய்யிற்கு அப்பால், பேசப்படும் கருப்பொருளைத் தவிர்த்து, விமர்சிப்பவனின் தனிப்பட்ட வாழ்க்கையைத்தான் அவர்கள் விமர்சிக்க அவர்கள் விரும்பினால், அவர்களும் தம்மைப் பற்றிய தனிப்பட்ட விமர்சிப்புகளுக்கு தயாராகவேண்டுமல்லவா? இப்படியா தொடரப் போகிறோம்?

தன் மீது முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றத் தெரியாதவர்களும், தவறுகளை ஏற்று அவற்றை விவாதத்திற்கு எடுத்துகொண்டு தம்மை வளர்த்துக்கொள்ளும் மனப்பான்மையற்றவர்களும், பொறுத்தமின்றி தம் இருப்பை தக்கவைத்துக்கொள்ள இனஉணர்வுகளை பயன்படுத்தி பதவிகளில் குடியிருப்பவர்களுமே இப்படியான தற்பாதுகாப்பு முறைகளுக்குள் தம்மை மறைத்துக்கொள்கின்றனர்.

நான் மணவிலக்கானவன் என்றும் நான் மறைத்ததில்லை. எனது வாழ்வுமுறையை தெரிவுசெய்ய எனக்கு முழு உரிமையும் உண்டு. சமூகத்தில் நான் தனிமனிதனாகவும், கூட்டுச்செயற்பாட்டாளனாகவும் பங்குகொள்கிறேன். எனக்கு விமர்சிக்கவேண்டும் என்று தெரிபவற்றை நான் விமர்சிக்கிறேன்.

தனது குடும்பத்தையே பார்க்கத்தெரியாதவன் எவ்வாறு சமூகத்தை விமர்சிக்கலாம் என்று, தொடர்ந்து, ஒரு சமூகத்தினர் என்மீது விமர்சனத்தை வைத்துவருகின்றனர். அது மட்டுமல்ல அவர்களுக்கு மஞ்சல் பத்திரிகை எழுதக்கூடிய கற்பனை வளமும் உண்டு என்பதை அவர்களின் கதைகள் உறுதிசெய்கின்றன.

என்னை மட்டுமல்ல ஒரு சமூகத்திலிருந்து ஒருவனை தள்ளிவைக்க சிலர் முடிவெடுத்து செயலாற்றுவதற்கு, பெண்பித்தன், துரோகி என்ற பட்டங்கள் பிரபல்யமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றன.  இது சமூக அமைப்புக்குளின் உள்ளக மோதல்களின்போது இவை ஏற்கனவே பாவிக்கப்பட்டு,  பலருக்கு இப்பட்டங்களை சூட்டப்பட்டு சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

என் எழுத்துக்களை இப்படியான தந்திரங்களினால் நிறுத்திவிடமுடியாது என்பதில் நான் மிகவும் உறுதியாகவே இருக்கிறேன்.

மற்றையவர்களின் காதுகளுக்குள் மட்டுமே குசு குசுக்கும் அவர்களிடம், என்மீதான விமர்சனங்களை பொதுவெளியில் முன்வைக்கும் அறம், விழுமியம், உண்மைத்தன்மை, தங்களின் மீதான விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றும் உளப்பாங்கு, உரையாடும் பழக்கம் போன்றவை இல்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.

அவர்களது இந்த வளமற்ற கருத்தியலே பலருக்கும் என் எழுத்தின் மீது நம்பிக்கையையும், இரகசிய ஆதரவையும் வழங்கும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது.

மணவிலக்கானவன் சமூகத்தை விமர்சிக்கக்கூடாது என்று என்ன விதி இருக்கிறதா? எனது சட்டியில் என்ன வேகுகிறது என்பதை அறியமுன், என்னை விமர்சிப்பவர்கள் தங்களது சட்டியில் என்ன கருகுகிறது என்பதை அறிந்துகொள்ள மறந்துவிடுகிறார்கள் என்பது பெரும் முரண்நகை.

நோர்வேயின் நிதி அமைச்சராக இருந்தவர் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளர். அரச நிர்வாகத்தில், சமூகத்தில்  முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களில் பலர் மணவிலக்கானவர்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர். இப்படியான ஒரு சமூகத்தில் வாழ்ந்துகொண்டு மலினமாக செயற்படும் “மனிதர்களை” நினைத்தால் எமது சமூகத்தின் எதிர்காலம்பற்றிப் பயமே ஏற்படுகிறது.

விமர்சனம் என்பதனை நஞ்சு என்று பார்க்கும் சமுதாயமாக எமது சமுதாயம் இருக்கிறது. முகஸ்துதி எமது சமுதாயத்தின் இன்னொரு சாபம்.

உற்ற நண்பன் எனின் நண்பன் வழிதவறும்போது கண்டித்து  அணைத்து அழைத்து வர வேண்டும். அதே போலத்தான் சமூகம் தவறான பாதையில் பயணிக்கும்போது அது பற்றி எடுத்துக்கூற, விமர்சிக்கவேண்டியதொரு நிலையில் சமூகப்பொறுப்புள்ள அனைவரும் இருக்கிறோம்.

கண்முன்னே தவறுகளும், ஏமாற்றுக்களும், சமூக ஜனநாயக விரோதச் செயல்களும் நடைபெறும்போது அவற்றை கண்டிக்கவோ, எடுத்துக்கூறவோ, விமர்சிக்கவோ எங்களில் எத்தகைபேர் தயாராக இருகிறோம்?

எமது குழந்தைகள் எம்மைப் பார்த்தே வளர்கின்றனர். அவர்களுக்கு இப்படியானதொரு வளமற்ற சமூகப்பொறுப்பற்ற சிந்தனையையா நாம் கற்பிக்க விரும்புகிறோம்? அவர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு பிரச்சனை ஏற்படும்பொது அவர்கள் வாய்முடி மௌனிகளாக இருப்பதையல்லவா நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம்.

இப்படியாக சிந்தனை காலப்போக்கில் எத்தகையதொரு சமுதாயத்தினை எமக்கு தரப்போகிறது? காலம் கடந்துவிட முன சிந்திக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

நான் சந்தித்த, என்னுடன் உரையாடும் பல மனிதர்கள் மாற்றங்களை விரும்பினாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் தம்மீது கட்டவிழ்த்துவிடக்கூடிய அவப்பெயர்கள், அந்நியப்படுத்தல், கேவலப்படுத்தல் ஆகியவற்றிற்குப் பயந்து வாய்மூடி இருப்பதே சிறந்தது என்றிருக்கிறார்கள்.   இம் மௌனத்தை ஒரு வாய்ப்பாக பலசந்தர்பங்களில் மாற்றிக்கொண்டிருக்கிறது எம் சமூகத்தின் ஒரு பகுதி.

எனது சமூகத்தை விமர்சிப்பதனால் நான் “விமர்சிப்பவர்களை” வெற்றிகொள்கிறேன் என்று எண்ணுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நான் நன்கு அறிவேன். அதேவேளை என்னை சிறுமைப்படுத்தும் அவதூறுகளும் என்னை பாதிக்க நான் அனுமதிப்பதில்லை.

இது எமது சமூகம். தனிப்பட்ட கருத்தியல் வெற்றிதோல்விகளைக்கடந்து எமது சமூகத்தின் வெற்றியே முக்கியமானது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இனியாவது விமர்சிப்பவனை விமர்சிக்காது, விமர்சனத்தின் கருப்பொருளைப்பற்றி பேச, கற்றுக்கொள்வோம். 

1 comment:

  1. ஒரு முரண்பாடான அல்லது ஆய்வுக்குரிய விடயம் தொடர்பாக விமர்சனம் என்பது எமது சமுகத்தைப் பொறுத்தளவில் ஆமாம் போடுதல் அல்லது போட்டுத்தகுதல் .
    ஆமாம் போடும் போக்கு தனிநபர் முக்கியத்தையும் வளர்ச்சிப்போக்கில் தனிநபர் வழிபாட்டையும் உண்டாகும்.போட்டுத்தாக்கும் வழிமுறை மலினமான தனி நபர் குறைகளை (விவகரத்தானவன் ,கள்ளன்,போம்பிளைபோருக்கி)அல்லது பலவீனமான சமூகக்குழுவாக மலினப்படுத்தல் (சாதி,மதம்,தேசியத்துரோகம்,பிராந்தியம் ).

    இவற்றிற்கெதிராக
    தோழமையுடன்

    ReplyDelete

பின்னூட்டங்கள்