திருமணம் அவசியமா? இணைந்து வாழ்ந்தால் என்ன?

அவளுடன் ஒப்பிடுகையில் நான் ஒரு கிராமத்து ராமராஜன். அவளோ உலகத் தாரகை Naomi Campbell போன்ற கறுப்புக் கட்டழகி. எமக்குள் நிறத்தில் மட்டும்தான் ஒற்றுமை இருந்தது. ஆனால் காதலுக்குத்தான் கண்ணில்லையே.
அவளை நான் முதன் முதலில் நேரடியாகச் சந்தித்தது ஒரு கடையில்தான்;. ஆழகிகளால் கவரப்படாத ஆண்கள் யாராவது இருக்கிறார்களா? அதுபோன்றுதான் எனக்கும் முதலில் அவளில் ஒரு ஈர்ப்பு வந்தது. அது பின்னாட்களில் காதலாகியது.
ஒரு நாள் நான், அவளை விரும்புவதாகக் கூறி என்னுடன் சேர்ந்து வாழ வா என்று அழைத்தேன். சில நாட்கள அவளைப் சந்திப்பதும், பார்ப்பதும் பேசுவதுமாய் இருந்தது. சில காலத்தின் பின் நாம் சேர்ந்து வாழத்தொடங்கினோம். உலகறிய திருமணம் என்பதில் நம்பிக்கையில்லாதவன். இது இணைந்து வாழ்தல் முறை. இரண்டரை வருடங்கள் இணைபிரியாது இருந்தோம்.
ஆரம்பத்தில் நான் அவளில் மிகவும் அன்பாகவே இருந்தேன். புது மாப்பிள்ளையைப்போன்று. பின்னான நாட்களில் கவனம் குறைந்தபோது அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் வந்துபோயின. மனித உறவுகளில் எற்படும் கீறல்களைப்போன்றவை அவை.
நான் ஆண்.
ஆஆண்ண்ண்.
மீண்டும் ஒரு தடவை கூறிப்பாருங்கள், ஆஆண்ண்ண்.
அதாவது நெடில்.
பெண்களைப்போல் எம்மால் இருக்கமுடியுமா என்ன?
இப்படி இறைவி திரைப்படத்தில் கூறப்படுவதுபோன்று. அவ்வப்போது அவளைவிட அழகானவர்களை, இளமையானவர்களைக் கண்டால் சபலம் எட்டிப்பார்க்கும். எனினும் தப்பேதும் நடந்துவிடவில்லை.
நம்ம தகுதிக்கு இவளே போதும் என்று மனதை கட்டுப்படுத்தும் கலை வசப்பட்டிருந்தது எனக்கு. வயது காரணமாயிருக்கலாம்.
நேற்று மாலை காலநிலை சிறப்பாக இருந்ததால் இருவரும் நடந்தபடியே உரையாடிக்கொண்டிருந்தோம். ஒரு நாய் எங்கிருந்தோ ஓடிவந்து என்னை நக்கியது. அவள் அதை புகைப்படமெடுத்தாள். நாயின் உரிமையாளர் ”மன்னித்துக்கொள்ளுங்கள், இவன் எல்லோருடனம் இப்படித்தான்” என்றார். ”பறவாயில்லை” என்றபடியே நாயின் தலையைத் தடவிவிட்டேன்.
இருவரும் அமைதியான ஒரு ஏரியின் கரையோரமாக நடந்து சென்று ஒரு மலையின் உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருந்தோம். மிகவும் ஒடுக்கமான, செங்குத்தான ஒற்றையடிப்பாதையை கடந்துகொண்டிருக்கும்போது மேலிருந்து கீழே இறங்கியவர்களுக்காக நாம் சற்றே ஒதுங்கிநிற்கவேண்டியிருந்தது.
அப்போது எனது காலடியில் இருந்த கற்கள் சறுக்கத்தொடங்கின. நான் சமநிலையை இழந்து விழுந்தேன். என் கையைப் பற்றியிருந்த அவளும் விழுந்தாள். எனது காலில் பலத்த அடி. என்னருகில் விழுந்த அவளை கை கொடுத்து எழுப்பியபோது அவள் காயப்பட்டிருப்பது தெரிந்தது. அவள் கண்ணாடி உடைந்துவிட்டிருந்தது. தலைசுற்றுகிறது என்றாள். சற்று உட்கார்ந்திருந்து நிதானித்துக்கொண்டோம். எம்மை கடந்து சென்ற அறிமுகமானவர்கள் இருவர் “காயம் பலமா, உதவி தேவையா” என்று கேட்டார்கள். இல்லை, சமாளித்துக்கொள்ளலாம் என்றுவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் இரத்தம் கட்டியிருந்தது. அவள் வெளிறிப்போய் வெறித்துப்பார்த்துக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். அவளை உலுப்பினேன். தட்டினேன். இடையிடையே “என்ன?” என்றாள். மறுநிமிடம் மீண்டும் மௌனமாய் வெறிக்கத்தொடங்கிவிடுவாள்.
மனம் திக் திக் என்று அடிக்க, பயம் மெது மெதுவாக மனதைப் பற்றிக்கொண்டது. மலையில் இருந்து இறங்கி வந்தோம். அவள் பேசவே இலலை. அவளை அவ்வப்போது இறுகப்பற்றிக்கொண்டேன்.
அன்றிரவு முழுவதும் அவள் நினைவு தப்பிக்கொண்டிருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவுடன் பேசினேன். காலைவரையில் பாருங்கள். அதன்பின் தேவை என்றால் தொடர்புகொள்ளுங்கள் என்றுவிட்டு தொலைபேசியை வைத்தார்கள்.
காலையில் அவளது நினைவு அடிக்கடி தப்பத்தொடங்கியது. நான் ஏதும் கேட்டால் பல நிமிடங்களின்பின் பதிளித்தாள்: அவளாக ஏதும் பேச மறுத்தாள். உணவு உண்ணவில்லை. அவளது உடலில் சக்தி குறைந்துவருவதை உணர்ந்தேன்.
அவசர அவசரமாக எனது வீட்டிற்கு அருகில் உள்ள வைத்தியசாகை;கு அழைத்துச் சென்றேன். நேரம் 10 மணியைக் கடந்துகொண்டிருந்தது. வைத்தியருக்காக காத்திருந்தபோது அவள் மயங்கி என்மீது சரிந்தாள். அவளைத் தாங்கிக்கொண்டபோது வைத்தியரும் உதவியாளர்களும் அவளை படுக்கையில் கிடத்தி அழைத்துப்போனார்கள்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. நானோ பதட்டத்தில் வைத்தியருக்காக காத்திருந்தேன். பத்துநிமிடங்களில் வைத்தியர் வந்து நேற்று என்ன நடந்தது என்று கேட்டறிந்தார். கணிணியைப் பார்த்தபடி யாருடனோ தொலைபேசினார். என்னை மாலை வருமாறு பணித்தார்.
மாலை வந்தபோது டாகடர் என்னை அழைத்துச் சென்று தனது அலுவலகத்தில் உட்கார்த்தினார். “அவளுக்கு எப்படி டாக்டர்” என்றேன்.
“அவரது தலையில் அடிபட்டிருக்கிறது. அதனால் அவர் நினைவிழந்திருக்கிறார். மூளையில் பெருத்த இரத்தக்கசிவு ஏற்பட்டதனால் அவர் சிந்தனை ஆற்றல், உடலுறுப்புக்கள் என்பன செயலிழந்துவிட்டன என்றார். எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. டாக்டர் ஆறுதல் கூறியபடியே அவருக்கு காப்புறுதி ஏதேனும் உண்டு அப்பணத்தைக்;கொண்டு நாம் மேலதிக சிகிச்சையளிக்க முயற்சியுங்கள் என்றார்.
நான் காப்புறுதி நிறுவனத்துடன் தொடர்புகொண்டபோது “உடனே வாருங்கள், அதற்கான ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பிப்போம் என்றார்கள். அரைமணிநேரத்தில் அங்கு நின்றிருந்தேன்.
தங்களது அனுதாபத்தை தெரிவித்தார்கள். சோர்வாகப் புன்னகைத்தேன். என்னை அழைத்துச் சென்று ஒரு காரியலயத்தில் உட்கார்த்தி தேனீரும் தந்தபின் உரையாடத்தொடங்கினார்கள்.
என்ன நடந்தது என்பதை மிகவும் தெளிவாக விபரிக்கவேண்டிவந்தது. எழுதிக்கொண்டார்கள். “இதுபற்றி மிக விரைவில் ஒரு முடிவுசொல்கிறோம். தயவுசெய்து இங்கு காத்திருங்கள்” என்றுவிட்டு அகன்றுகொண்டார்கள்.
தனிமை அசௌகரியமாகவும், மனது பழைய நினைவுகளிலும் அலைந்துகொண்டிருந்தது. அவளின் ஸ்பரிசத்தினை நினைத்துப் பார்த்தேன். மிருதுவான அவளது தோல். கறுப்பென்றாலும் அவள் கட்டழகி. ஒரு சிறு விபத்து எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கை புறட்டிப்போடுகிறது. அவளுக்கு மிக மிக அருகில் நானும் விழுந்திருந்தேன். ஆனால் எனக்கு எதுவும் ஆகவி;லை. அவள் எறத்தாள ஜடமாகிவி;டாள். வாழ்க்கையில் எதுவுமே நிட்சயமில்லை என்பதை மீண்டும் உணர்ந்துகொண்டேன்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. 15 நிமிடங்களில் என்னை அழைத்துவந்தவர் வந்தார்.
“உங்களின் காப்புறுதிப் பணம் உங்களுக்கு கிடைக்கும்.”
“மிக்க நன்றி”
“தயவு செய்து இந்தப் படிவத்தை நிரப்பித்தாருங்கள்” என்றபடியே ஒரு படிவத்தை நீட்டினார்.
அதில் காப்புறுதி செய்யப்பட்டவரின் பெயர் என்று இருந்த இடத்தில் Samsung galaxy S4 என்று எழுதினேன்.
இப்போது புதிதாய் ஒருத்தியுடன் வாழத்தொடங்கியிருக்கிறேன். அவளின் பெயர் Huawei P9. செம செக்சியாக இருக்கிறாள். புகைப்படங்கள் எடுப்பதில் இவள் கில்லாடி.
தலைப்பைப் பார்த்து கதையை வாசித்த உங்களுக்கு நன்றி கூறாவிட்டால் என்னப்பன் Oslo முருகன் மன்னிக்கமாட்டா

1 comment:

  1. படித்தேன் ரசித்தேன் . நன்று

    ReplyDelete

பின்னூட்டங்கள்