இனம், மதம், நிறம், ஊர் கடந்த நட்பு

அண்மையில் எனது நோர்வேஜிய நண்பர் தனது 60வது வயதைக் கொண்டாடினார். அவ் விழா நடப்பதற்கு ஏறத்தாள இரண்டு மாதங்களுக்கு முன் என்னை தொலைபேசியில் அழைத்து, தனது 60வது பிறந்தநாள் விழாவிற்கு வரமுடியுமா என்ற போது நானும் சற்றுக் குசும்புக்காய் வரமுடியாது என்று செல்வதற்கு அனுமதி உண்டா என்றேன்? இல்லை என்றார். இருவரும் ஒரே நேரத்தில் வெடித்துச் சிரித்துக்கொண்டோம்.

அவருக்கும் எனக்கும் 15 வயது இடைவெளி இருக்கிறது.
அவர் ஒரு நோர்வேஜியர், நான் தமிழன்
அவர் பிறப்பால் கிறீஸ்தவர், நான் இந்து
அவர் மதப்பற்றுள்ளவர், நான் அதற்கு எதிர்மாறானவன்
அவர் தலைசிறந்த படிப்பாளி, நான் அதற்கு எதிர்மாறு
அவர் சமயற்கலை நிபுணர், நான் உண்பதில் நிபுணன்
அவர் வெள்ளை, நான் கறுப்பு

இப்படி எமக்கிடையிலான வேறுபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் எமக்கிடையே இதையெல்லாம் கடந்த ஒரு பரிசுத்தமான நட்பு இருக்கிறது. அவரை முதன் முதலில் 1987ம் ஆண்டு மே மாதத்தில் சந்தித்தேன். அன்றில் இருந்து இன்று வரை தொடர்கிறது அவர் நட்பு. அவரின் மனைவியும், நான்கு குழந்தைகளும் என்னுடன் அவரைப் போலவே நட்பாய் இருக்கிறார்கள்.  உலகத்தில் இரு வீடுகளுக்கு என்னால் எனது வருகையை அறிவிக்காமல் போக முடிகிறது. அவற்றில் ஒன்று நண்பரின் வீடு, மற்றையது என் தாயாரின் வீடு.

எனது குழந்தைகளும் அவர்கள் வீட்டுடன் மிகவும் அன்னியோன்யமாய் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. எனது சகோதரரையும், சகோதரியையும் கூட அவர்கள் நன்கறிவார்கள். அவரின் சகோதர சகோதரிகளை நானும் நன்கறிவேன். அவரின் தாய் தந்தையர் வாழ்ந்திருந்த காலங்களில் எம்முடன் அவர்கள் மிகுந்த நட்பாய் இருந்தனர். அவரின் தாயார், எனது மூத்த மகள் பிறந்திருந்த பொழுது முதன் முதலில் இந்நாட்டு வழமைப்படி ”பிள்ளைப்பேறு கஞ்சி”யுடன் வந்து, தனது பேத்தியார் தனக்குத் தந்த கம்பளி போர்வையை என மகளுக்கு பரிசளித்தார்கள். ஏறத்தாள நூறு வருடங்கள் பழமை வாய்ந்த அந்த கம்பளியை பெற்றுக் கொண்ட போது நாம் நெகிழ்ந்து போனோம். அதே கம்பளியை அவரின் பேரனுக்கு நாம் மீளக்கையளித்த போது என்னை விட மிக அதிமாய் நெகிழ்ந்து போனார்கள் அவர்கள்.

வெளிநாட்டு வாழ்க்கை என்னை ஒரு தமிழனாகவுமல்லாமல், ஒரு நோர்வேஜியனுமல்லாமல் என் உணர்வுகளையும், சிந்தனைகளையும் இருநாடுகளுக்கு இடையில் இருக்கும் சூன்ய பிரதேசம் போன்ற இடத்தில் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறதாகவே உணருகிறேன். இதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்திருக்கிறேன். சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இனிமேலும் சந்திக்கக்கூடும். இந்த சூன்ய பிரதேச மனநிலையால் பிரச்சனைகள் மட்டும் தான் இருக்கின்ற என்றில்லை. பல நன்மைகளையும் பெற்றிருக்கிறேன். இனிமேலும் பெறலாம். என்னைப் பொறுத்தவரை இந்த சூன்ய பிரதேச மனநிலை என்பதை ஒரு முன்னேற்றமாகவே நினைக்கிறேன். ஆனால் பலருக்கு ”இவருக்கு தான் ஒரு நொஸ்க்கன் என்ற நினைப்பு” என்னும் கருத்தை கொடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. எது எப்படியோ? இது தான் நான் என்று வாழப் பழகிக்கொண்டிருக்கிறேன். நன்றும் தீதும் இங்குமுண்டு.

அந்த சூன்ய பிரதேச மனநிலையில் நான் அலைந்து திரிந்த காலங்களில் என்னை எமது சம்பாசனைகளுக்குள்ளால் கைபிடித்து அழைத்து வந்தவர் நான் மேலே குறிப்பிட்ட நோர்வேஜிய நண்பர். மணிக்கணக்காய் அவருடன் உட்கார்ந்திருந்து உரையாடியிருக்கிறேன். அவர் மற்றவரின் கருத்துக்களை மிகவும் அவதானமாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் சிந்திக்கத்தக்க வகையில் பதிலளிப்பார். அவருடனான சம்பாசனைகள் இல்லாதிருந்தால் நான் கடந்து வந்த பாதைகள் மிகவும் சிரமமானவையாக இருந்திருக்கும்.

மனதை கொட்டித் தீர்க்க அருகில் ஒருவர் இருப்பதன் அருமையை நான் நன்கு அறிவேன். சக மனிதனுக்கு இன்னொரு மனிதனால் கொடுக்கப்படக்கூடிய அளப்பெரிய பரிசு என்னவெனில் மற்றவர்ரின் வலிகளை முழு மனதோடு கேட்டு அவரிர்களின் பாரத்தைக் குறைப்பதாகும். நான் தடுமாறிய போதெல்லாம் என்னை தட்டித் தந்து நான் தடுக்கி விழாமல் பார்த்துக்கொண்டவர், நான் விழுந்த போதெல்லாம் கைபிடித்து என்னைத் நிமிர்ந்தி நடக்கவைத்தவர். என்னுடன் சேர்ந்த சிரித்துமிருக்கிறார், நாம் சேர்ந்து அழுதுமிருக்கிறோம்.

அவ்வூரில் இருந்து நான் குடிபெயர்ந்த பின் மீண்டுமொருமுறை அங்கு சென்ற போது கடும் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய போது அவர் தனது வீட்டில் 10 நாட்கள் என்னை தங்கவைத்து கவனித்துக்கொண்டார். தினமும் 5 நட்சத்திர ஹோட்டல் மாதிரி கவனித்துக் கொண்டதால் நானும் விரைவான உடல், மன நலம் தேறினேன்.

வெளிநாடுகளில் ஆத்மார்த்தமான நட்புகள் கிடைப்பது அருமையாகவே இருக்கிறது.  தோழமையின் தோள்களில் வாழ்வின் பாரங்களை நாம் இறக்கிவைக்கும் போது நமக்கு ஆறுதல் கிடைப்பது உண்மையென்றாலும், அதை விட அந்நேரங்களில் அந் நட்பு மேலும் மேலும் புடம் போடப்படுகிறது என்பதே உண்மை‌. நண்பர்கள் கிடைப்பதே அருமை. அதிலும் இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவை கடந்து இப்படியான நண்பர்கள் கிடைப்பது அருமையிலும் அருமை. இந்த விடயத்தில் நான் பாக்கியசாலியே.

அவரின் பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய போது நான் மேற்குறிப்பிட்டவற்றைக் கூறினேன். விழா முடிந்ததும் உனது உரையை நான் மிகவும் ரசித்தேன் என்றார். மிக மகிழ்ச்சியாய் இருந்தது எனக்கு.

நான் நமது நட்பினை மிகவும் ரசிக்கிறேன் என்றேன். இருவருக்கம் ஏதோ புரிய, அர்த்தமாய் புன்னகைத்துக்கொண்டோம் நாம்.

அவர் கடந்த 24 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு தமிழ்ச்சொல் கற்றுக் கொண்டிருக்கிறார். தமிழர்களைக் கண்டால்
”எப்படி சுகம்”
”எனது பெயர் லைடுல்வ்”
”பொயிட்டு வாங்கோ” என்பார். நீங்கள் அவருக்கு தமிழ் தெரியும் என்று தொடர்ந்து கதைத்தால்
”இல்லை”  ”இல்லை”என்பார்.

இப்படி யாரும் உங்களுடன் தமிழில் கதைத்தால் சந்தேகமேயில்லை அது என் நண்பர் தான். உங்கள் வாழ்வில் ஒரு உன்னதமான மனிதரை சந்தித்திருக்கிறீர்கள் என்று நீங்கள் பெருமைப்படலாம்.

இன்றைய நாளும் நல்லதே.



.

4 comments:

  1. நட்பு எவ்வளவு அற்புதமானது..

    ReplyDelete
  2. நல்ல நட்பு வாழ்க.
    நன்றி.

    ReplyDelete
  3. ////மனதை கொட்டித் தீர்க்க அருகில் ஒருவர் இருப்பதன் அருமையை நான் நன்கு அறிவேன். சக மனிதனுக்கு இன்னொரு மனிதனால் கொடுக்கப்படக்கூடிய அளப்பெரிய பரிசு என்னவெனில் மற்றவர்ரின் வலிகளை முழு மனதோடு கேட்டு அவரிர்களின் பாரத்தைக் குறைப்பதாகும். ///
    அருமை.
    நட்புக்குண்டோ அடைக்கும் தாழ்.
    யார் எவ்வாறிகினும் ஒரு சொட்டு நட்பை அன்பினால் எடுத்துக்கொள்வது பிடிக்கும். அது தொடர்பறா நிலையில் இருப்பது அதிசயம்.
    எமது அன்பையும் நட்பையும் அவருக்கும் சொல்லிவிடுங்கள்.
    வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    ReplyDelete
  4. நட்பு வாழ்க!!

    ReplyDelete

பின்னூட்டங்கள்