அப்பாவின் வாரிசும், அப்பாவும்

செல்வமாணிக்கத்தார் ஒரு கறாரான போலீஸ் அதிகாரி. வீட்டில் இருந்த வாரிசுடன் அவருக்கும், அவருடன் அவரின் வாரிசுக்கும் ”அலைவரிசை” அதிகமாக ஒத்துவந்ததில்லை. நான் வளர்ந்த போது அவர் இல்லை. ஒரு வேளை தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று நண்பனாய் மாறி இருப்பாரோ என்னவோ?


நாம் இருவரும் எப்போதும் எலியும் பூனையுமாயே இருந்தோம். பூனை இல்லாத நேரங்களில் மட்டும் எலிக்கு கொண்டாட்டமாய் இருந்தது. சிறு வயதில்  அவர் வீட்டுக்கு வந்தவுடன் கேட்கும் முதற் கேள்வி வாய்ப்பாடு பாடமாக்கியாச்சா என்பது தான்.  5ம் , 10ம்வாய்பாட்டைத் தவிர ஏனையவை அனைத்தும் அப்பாவையும் என்னையும் பரம எதிரிகளாக்கிய காலம் அது.

நித்திரை என்றால் கேள்வி கேட்கமாட்டார் என்பதால்
ஒரு நாள் அவர் வருவது தெரிந்து ஓடிப்போய் கட்டிலில் படுத்துக்கொண்டேன். கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டு துங்குவதாக பாவனை செய்தேன். அருகில் வந்தவர்... தனக்கு தானே பேசிக்கொள்வது போல ”நித்திரையான ஆட்களின் பெருவிரல் ஆடும்” என்றார். நானும் எனது பெருவிரலை ஆட்டினேன். அதன் பின் அவர் பிரம்பால் என்னையாட்டுவித்தார்.

அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் அப்பாவுடன் மாலையில் மீன் பிடிக்கச் செல்வேன். என்னுடன் தலைமயிர் மிகவும் ஐதான ஒரு உமை நண்பனும் (பெயர் ஞாபகத்தில் இல்லை) வருவதுண்டு. கடலுடனான என் உறவு ஏற்பட அப்பா தான் காரணம். ராவணன் மீசை, அடம்பன் கொடி, மணல் வீடு, நண்டு பிடிக்க என்று எல்லாவற்றையும் அப்பாதான் அறிமுகப்படுத்தினார். ஏங்கள் ஒப்பந்தத்தின்படி கடற்கரையில் அப்பா மீன் பிடிக்க, நான் பக்கத்தில் இருக்கலாம், அது தவிர அவரின் கண்ணின் எல்லைக்குள் இருத்தல் வேண்டும் அதாவது திறந்த வெளிச் சிறைச்சாலை போல. ஓரு நாள் நானும் அந்த நண்பனும் தூரம் போய்விட, அப்பாவோ எங்களை கடல் இழுத்துக் கொண்டது என நினைத்து பல மணிநேரம் ஆட்களை வைத்து தேடி வீட்டிற்கு வந்த போது நானும் அந்த நண்பனும் ஆமை பிடித்து அதன் மேல் மெழுகுவர்த்தி கொழுத்திவிளையாடிக் கொண்டிருந்தோம்.

அவரின் மனவேதனையும், துக்கமும், ஆற்றாமையும் என்னைக் கண்டவுடன் கோபமாக மாற….டேய் பெரியதம்பி இங்க வாடா என்றார் லவுட்ஸ்பீகர் சவுண்டில். அவரின் கத்தல் கேட்டு சமாதானம் பேச அம்மாவும், எம்மியும் வெளியே ஓடி வரவும் நான் இனி அங்கு இருந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என எண்ணி ஓடத்துவங்கவும் சரியாய் இருந்தது. அன்று ஓடிய ஓட்டத்தை நினைத்தால் இன்றும் களைக்கிறது) அப்பா என்னை பிடித்தது வேறு கதை.

அப்பா அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் கிட்டத்தட்ட தினமும் மீன் பிடிக்கப் போவார்.  ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு மீன் கிடைத்தது. அதுவும் அவர் கடைசியாய் மீன்பிடித்த நாள். அந்த மீனை உடனே வெட்டி இரையாய் போட்டுப்பார்த்தார். கடல் பதிலே சொல்லவில்லை. நான் இயற்கைக்கும் ரோஷம் வரும் என்றறிந்தது அன்று தான்.

அப்பா பல project கள் செய்தார். பிபிலையில் மாணிக்கக்கல் தோண்டினார். கரும்புத்தோட்டம் வைத்தார், கோழி வளர்த்தார், ஆடு வளர்த்தார்,  வயல் செய்தார். என் கண்முன்னேயே வயலுக்குள் மேய்ந்த இரண்டு மாடுகளை சுட்டுத்தள்ளினார். ஆனால் எதிலும் அவர் பணம் சம்பாதிக்கவில்லை. அவரது பெயரில் மாணிக்கம் என்று இருந்தால் மட்டும் காணுமா மாணிக்கக்கல் தோண்டுவதற்கு? என்று அவரைக் கேட்டிருப்பேன் இன்று அவர் இருந்திருந்தால்.

இவற்றை விட வேட்டைக்குப் போனார், மயில் வளர்த்தார்.  கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றார். ஒரு முறை சோமபானம் அருந்தி தனது தொழில் இட மாற்றல் உத்தரவை இரத்துச் செய்த உள்ளூர் அரசியல்வாதியை பொது இடத்தில்வைத்துத் திட்டினார்.  அதனால் அப்பாவை வேலையில் இருந்து சில காலங்கள் நிறுத்தி வைத்தார் அந்த அரசியல்வாதி. பின்பு காட்டுப்பகுதிக்கு மாற்றல் உத்தரவும் வாங்கிக் கொடுத்தார். அதன் பின் அப்பா எந்த அரசியல்வாதியையும் திட்டவில்லை.

ஒரு நாள் போலீஸ்நாய் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதை பார்க்கவும்  அழைத்துப்போனார். அந்த நாய் குரைத்த ஒலி உடம்பையே உலுக்கியது, நெஞ்சு அதிர்ந்தது. பின்பு பல தடவை எனக்கும் அப்படி ஒரு நாய் வேண்டும் என்று கேட்டும் நாய் கிடைக்கவில்லை. ஒருவேளை  தனது வீட்டில் இரண்டு நாய் எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ? 1980 களின் ஆரம்பத்தில் தம்பி ஒரு நாய் வளர்த்தான்.  ஏறக்குறைய அதுவும் போலீஸ்நாய் தான். ஆனால் என்ன, வெடிச்சத்தம் கேட்டால் வீட்டுக்குள் வந்து கடடிலின் கீழ் படுத்துவிடும். சூழல் அமைதியானதும் வெளியே வரும். அமைதி விரும்பிய போலீஸ்நாய் என்று நினைக்கிறேன். பின்பொருநாள் பாம்பு கடித்து இறந்து போனது அமைதி விரும்பிய போலீஸ்நாய்.

பிபிலையில் வாழ்ந்திருந்த காலத்தில் 1977இல் அவரின் சைக்கில் டைனமோவை நான் எனது மேதாவித்தனமான விஞ்ஞான ஆராய்ச்சிக்காக உடைத்த போதும் அப்பா என்னைத் துரத்திப் பார்த்தார். ஆனால் அன்று நான் தான் வென்றேன். ஆனால் இரவு படுக்கைக்கு வீடு திரும்பிய போது வாசலில் அவர் வில்லன் போல் நின்றிருந்ததால் சமாதான ஒப்பந்தம் அம்மாவின் முன் கைச்சாத்திடப்பட்டது. பின்பு பல வருடங்கள் அந்த சைக்கிலுக்கு டைனமோ இருக்கவே இல்லை, இப்பவும் என் சைக்கிலுக்கு டைனமோ இல்லை. அப்பா ஏதும் சாபம் போட்டாரோ என்னவோ.

1978  இல் சூராவளி அடித்த போது தம்பியை தேடி பிபிலையில் இருந்து மட்டக்களப்புக்கு நடந்து போய் வந்தார்.

ஒரு முறை முள்ளுக்காவடி எடுத்தார் பயமாய் இருந்தது. அம்மா திருநீறு பூசிவிட்டார். மறு முறை கதிர்காமத்தில் பறவைக்காவடி எடுத்தார், பார்த்ததும் மயங்கி விழுந்தேன். தண்ணீர் தெளித்து, எழுப்பி அப்பாவிடமே திருநீறு வாங்கி வந்து பூசிவிட்டார்கள். அப்பா தொங்கியபடியே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்பா பயங்கரமான முருகபக்தர். வீட்டில் கந்தசஸ்டிக்கவசம் பாடமாக்கு என்பார், தம்பி புத்தகம் பார்க்காமல் மனனம் செய்து பாடினான். எனனால் முதல் 10 வரிகளை கடந்து கொள்ள முடியவில்லை. தன் வாரிசுகளில் 50% ஆவது உருப்படும்போல தெரிகிறது என்று திருப்திப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை தவனைப்பரீட்சையில் கணிதத்திற்கு 18 மார்க்ஸ் எடுத்து போது வீட்டில் அப்பா ருத்திரத்தாண்டவம் ஆடுவார் என்பதால் 18 ஐ 78 என்று ரிபோட்இல் மாற்றினேன். அப்பாவுக்கு சந்தேகம் வந்து எல்லா பாடங்களினதும் கூட்டுத்தொகையைப் பார்த்தார் அது 60 ஆல் பிழைத்தது. பிறகு என்ன நடந்தது என்பது ஒரு சோகமான வரலாற்றுச் சம்பவம்.

பந்தடிக்க, கிறிக்கட் பந்து போட, கீப்பருக்கு நிற்க என்றெல்லாம் பழக்கியதும், ”டேய்! விளையாடு ஆனா படிக்கோணும்” என்று சொல்லியதும் அவர் தான். அவரின் சட்டப்படி மாலை 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் வீட்டில் நிற்க அனுமதியில்லை. அது விளையாட்டு நேரம். ஆனால் 6 மணிக்கு கையில் புத்தகம் இருக்கவேண்டும். இல்லேயேல் அவர் என்னில் விளையாடுவார்.

பதின்மவயில் ஒரு நாள் தியட்டருக்குள் குந்தியிருந்து போது அப்பா இரண்டு வரிசைகளுக்கு பின்னால் அமர்ந்திருக்கிறார் என்று நண்பன் சொன்னதால் கதிரையில் படுத்திருந்தே படம் பார்க்க நேர்ந்தது.  மனிதர் என்னை அன்று கண்டிருந்தால் அவ்விடத்திலேயே என் தோலை உரித்திருப்பார்.

அவர் பொலன்னருவையில் வேலைசெய்த நாட்களில் சைக்கிலுக்கு புதிய ரிம், டயர், செயின், மட்காட்,அது இது என எல்லாவற்றையும் மாற்றித்தந்தார். அன்று தான் முதன் முதலில் அவரை டபிள் ஏற்றிப் போனேன். 100 கிலோ மனிதர் சைக்கிலில் இருந்தபோதிலும் சைக்கில் பஞ்சு போல் உறுண்டோடியது.

கனகலிங்கம் சுருட்டு மட்டும் தான் குடிப்பார். சந்தோச பானம் அருந்தினால் மட்டுமே பிரிஸ்டல் சிகரட் வாய்க்கு வரும். காலையில் கனகலிங்கம் சுருட்டு இல்லாவிடில் கக்கூஸ் போகவராது. அங்குமிங்குமாய் அலைவார்.

அந்தக் காலத்தில், தான் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் என்றார், நம்ப முடியவில்லை என்னால். லொள்லுக் கேள்வி கேட்டால் ஆபத்து என்பதால் அடக்கியே வாசித்தேன். பின்பொருநாள் மாமியிடம் கேட்டேன் அது உண்மையா என்று. ”ஓம், ஓம் அவன் அப்ப நல்லா ஓடுவான்” என்றார். பாட்டியும் அதையே சொன்னார் எனவே அவர் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் தான். நானும் ஓரளவு நீண்ட தூரம் ஓடியதற்காண காரணம் அது தான் போலிருக்கிறது.

நாம் யாழ்ப்பாணம் செல்லும் நேரங்களில்அவரின் பால்ய நண்பர் ஒருவர் மானிப்பாயில் இருந்து  ஒரு பெரிய பிளாஸ்டிக் கொள்கலனில் பனைமரத்துப் பால் எடுத்துவருவார். அவரின் வயிறு பானைபோலிருக்கும். பனைமரத்துப் பால் குடித்தால் வெறிக்கும் என நானறிந்தது அங்கு தான்.

தமிழில் அரைகுறையாய் எழுவார், ஆங்கில பாடதிட்டத்தில் படித்த பாதிப்பு . எழுத்து வேலை எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கும். கோழி கிளறியது போல எழுத்து. ஒன்றும் புரியாது. அப்பாவின் கையெழுத்தில் ஒரு கடிதம் கூட இன்று என்னிடமில்லை என்பது நெஞ்சை நெருடுகிறது. அவரின் எழுத்துரு ஞாபகத்தில் இருக்கிறது. அப்பாவின் படங்களும் என்னிடமில்லை. அப்பாவின் அழகியராட்சசியிடம் நிட்சயம் இருக்கும்.

1981 இல் யாழ்ப்பாணம் போயிருந்தேன். வீட்டு முற்றத்தில் கிட்டிப்பொல் விளையாடியதனால் அப்பாவின் மூத்த அக்காவுக்கும் எனக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள்  முறிந்தது. அன்றிரவே ஏறாவூருக்கு புறப்பட்டு அடுத்தநாள் வீடு வந்து சேர்ந்த போது அப்பாவை மாரடைப்பு என மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நான் அங்கு சென்றபோது அப்பா  மயக்கத்தில்  நெஞ்சை உயர்த்தி உயர்த்தி காற்றைத் தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த அம்மா என்னை அணைத்துக் கொண்டார். சற்று நேரத்தில் என் கண்முன்னேயே அப்பா மூச்சடங்கிப்போனது.

நான் 1980 மார்கழி மாதத்தில் க.போ.த சாதரண தரத்திற்கான பரீட்சை எழுதியிருந்தேன். பரீட்சைக்கு முன் அப்பா ”ஒழுங்கா பரீட்சை எழுது, இல்லாட்டி தெரியும் தானே” என்று ஒரு பன்ஞ்ச் டயாலாக் சொல்லியிருந்தார்.  நான் ஆங்கிலப் பரீட்சை எழுதிய பின்பு அப்பாவின் அந்த பன்ஞ்ச் டயலாக் அடிக்கடி கனவில் வந்தபடி இருந்தது. ஆங்கில பரீட்சைத்தாளில் நான் பார்த்த accident பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது. அதை நான் 30 % ஆங்கிலத்திலும் 70 வீத தமிழிலும் எழுதியிருந்தேன். அது தவிர அனது ஆங்கிலப்புலமை மெச்சும்தன்மையானதாகவும் இருக்கவில்லை. எனவே எனக்கு மிகச் சாதாரண சித்தி அல்லது  சித்தியடைவில்லை என்றே பெறுபேறுகள் வரும் என்பதை அறிந்திருந்தேன். ஆங்கிலத்தில் கல்விகற்ற அப்பா, அவரின் மூத்தவாரிசு ஆங்கிலத்தில் சித்தியடைவில்லை என்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை செய்து பாருங்கள்.  என் நிலமை பீரங்கி வாசலில் கூடு கட்டிய குருவி மாதிரி இருந்தது அந் நாட்களில்.

ஆனால் அப்பா பரீட்சை பெறுபேறுகள் வருமுன்பே முக்திப்பேறு அடைந்ததனால் இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன். அப்பா இருந்திருந்தால் என்னை கொன்று போட்டிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் அம்மாவிடம் இவனுக்கு என்னை மாதிரியே கோபம் வருகிறது என்றாராம். நான் அவரிடமிருந்து பழகிய நல்லபழக்கம் அதுவொன்று தான் போலிருக்கிறது. அவரின் சோமபானம் அருந்தும் பழக்கத்தையும், சுருட்டையும் ஏன் பழகாமல் விட்டேன் என்பதற்கு என்னிடம் பதிலிருக்கிறது. பதிலில் அப்பா இருக்கிறார்.

ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னான நினைவுகளிவை….இதை எழுதும் எழுத்தில் வர்ணிக்கமுடியாததோர் சுகமான உணர்வு என்னை ஆட்கொள்கிறது.

அருகில் உட்கார்த்தி, கதைத்துப் பேசி, இம்சை பண்ண ஆசையிருந்தால் மட்டும் காணுமா? அதற்கு அப்பாவுமல்லவா இருக்க வேண்டும். உங்களருகில் அப்பா இருந்தால் நீங்கள் மகா அதிஸ்டசாலி.

உங்களின் அப்பாவின் நினைவுகளை ஆறுதலாக மீட்டுப்பாருங்கள் உங்களுக்கும் புரியும். அப்பா  இருந்தால் அவரை அருகில் அமர்த்தி ஞாபகங்களை அவருடன் சேர்ந்து பகிர்ந்து பாருங்கள் வாழ்வின் இரகசியம் புரியும்.

இல்லாத அப்பாவுக்கு இது சமர்ப்பணம்.

இன்றைய நாளும் நல்லதே

7 comments:

  1. இனிமையான மீட்டல்கள்.அருகிருக்கும் போது புரியாத உண்மைகள் பின்னாளில் புரிகயில் அவர்கள் இருப்பதில்லை.எழுத்துக்கள் தான் அந்தக்குறையை நீக்குகின்றன..அழகிய ஓர் பதிவு.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்!ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு... ரசித்துப் படித்தேன்...
    பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக அருமையான விவரணை ! உள்ளோடும் நகைச்சுவை அற்புதம். எல்லா அப்பாக்களுக்கும் தங்கள் வாரிசுகள் நன்றாக வர வேண்டும் என்ற பெருவிருப்பு இருந்திருக்கும். நானும் ஒரு மகளுக்கு தகப்பனாக அதை இப்போது உணர்கிறேன்.

    ReplyDelete
  4. 1 வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த எனக்கு அவர்பற்ரிய நினைவை மீண்டும் ஒருமுறை மீட்டடவைத்தது நன்றி.ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  5. 1 வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த எனக்கு அவர்பற்ரிய நினைவை மீண்டும் ஒருமுறை மீட்டடவைத்தது நன்றி.ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  6. 1 வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த எனக்கு அவர்பற்ரிய நினைவை மீண்டும் ஒருமுறை மீட்டடவைத்தது நன்றி.ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  7. Poramaiyai irrukku. Reason ippadi oru son irrupathu!

    ReplyDelete

பின்னூட்டங்கள்