அப்பாவின் அழகிய ராட்சசியுடனான ஒரு உரையாடல்

இன்று ஞாயிற்றுக்கிழமை. காலை 06.30 மணியிருக்கும், ஆழ்ந்த தூக்கத்தில், கனவுலகில் இலியானாவுடன் ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன்.

அப்போது தொல்லைபேசி ஒலித்து என் நித்திரையையும், கனவையும் குழப்பியது. யார் அழைத்தது என்று பார்ப்பதற்கு முன்பாகவே அந்த அழைப்பு நின்று போயிற்று. மீண்டும் கண்கள் மூடிக்கொள்ளும் போது தொல்லை பேசி மணியொலித்தது.

எடுத்து ”ஹலோ” என்ற தூக்கக்கலக்கத்தில் கூறினேன்.

மறுபுறத்தில் அப்பாவின் அழகிய ராட்சசி

எங்கள் உரையாடல் இப்படியிருந்தது.

”தம்பி என்னடா காய்ச்சலா?”
”இல்லை”
”அப்ப தடிமலா (ஜலதோஷம்)?”
”இல்லை அம்மா”
”சரி.. சரி .. குளிகைள் எல்லாம் போட்டியா”
”போடுவம்”

எனக்கோ தூக்கம் தாங்கமுடியாதிருந்தது. ஆனால் அவரோ விடுவதாயில்லை.

”டேய், உன்ட தம்பீட மகளுக்கு இன்றைக்கு பிறந்த நாள், மறக்காதே”
அது என் நினைவில் இருக்கவில்லை என்றாலும் ”ஓம் ஓம்” என்று சமாளித்தேன்.  (மதுரா, பெரியப்பாவை மன்னிப்பாயாக)

அம்மா தொடந்தார்..

நேற்று  மச்சாள் வீடு வந்ததையும், அவரின் மகளுக்கு கல்யாணம் நடைபெறவிருக்கும் கதை, ஏனைய பல கதைகளைகள் என்று கூறினார்.

நான் தூங்கியபடியே ம்..ம்..ம் என்று  பதிலளிததுக்கொண்டிருந்தேன்.

அதை அவர் அதானித்திருக்கவேண்டும்

”டேய் என்ன நித்திரயில இருந்து கதைப்பது போல கதைக்கிறாய்” என்றார்
”அம்மா, என்னை நித்திரை கொள்ள விடுங்கோ” என்றேன்

”என்ன நித்திரையோ, நீ 48 வயதாகியும் இன்னும் திருந்தேல்ல, படிக்கிற காலத்திலயும் எழும்பமாட்டாய், அப்பா இருந்திருந்தால் நீ திருந்தியிருப்பாய்” என்று ஒரு பெரிய லெக்கசரே அடித்தார்.

அப்பா என்ன யமனே வந்தாலும் என்னை நித்திரையால் எழுப்புவது முடியாத காரியம் என்பதை அம்மா அறியமாட்டார்.

மீண்டும் அமைதியாக இப்படிச் சொன்னார்.

நண்பர்களே இனித்தான் கிளைமாக்ஸ் வருகிறது. அவதானமாய் வாசியுங்கள்

”தம்பி நேரம் 11 மணியாகிவிட்டது, எழும்புடா, போய் முகம் கழுவி சாப்பிடு ராசா”  என்றார்.
அம்மா இலங்கை நேரத்தையும், நோர்வே நேரத்தையும் குழப்பிக்கொள்கிறார் என்பது புரிந்து.

”ஓம் ஓம்”..  காலைக்கடன்களை முடித்துவிட்டு உங்களுக்கு தொலைபேசி எடுக்கிறேன் என்றேன்.”
” சரி” என்று தொலைபேசியை வைத்தார். (மகன் தனது சொல்லை இப்பவாவது கேட்கிறானே என்று நினைத்துப் பெருமைப்பட்டிருப்பார்)

இப்போது நோர்வேயில் நோர்வேயில் நேரம் 11:15 ஆகிறது. நான் இன்னும் எழும்புவது பற்றி யோசிக்கவே இல்லை.

அம்மாவும் எனக்கு தொலைபேசி எடுத்ததையும், நான் மீண்டும் அவருடன் பேசுவேன் என்றதையும் மறந்திருப்பார்.

வாழ்க, அப்பாவின் அழகிய ராட்சசியின் மறதி!
.................................

முன்பொருமுறை அப்பாவின் அழகிய ராட்சசியுடன்  நடைபெற்ற  இன்னுமாரு உரையாடல் இந்த இணைப்பில் இருக்கிறது



.

3 comments:

  1. கனவுலகில் இலியானாவுடன் ஒரு குத்துப்பாட்டுக்கு ...........

    கனவு தொடர்ந்ததா?

    ReplyDelete
  2. "அப்பாவின் அழகிய ராட்சசி" ஒரு cliche ஆய் விட்டது. பாவனையைக் குறைக்கவும் :-). வெறுமனே "அம்மா" என்பது இயல்பாய் இருக்கும் போல் உள்ளது. (ஏதோ இந்த எளியோனின் எண்ணம்)

    ReplyDelete

பின்னூட்டங்கள்