“என்ன ஆச்சு.. யாரோ பந்தை அடிச்சாங்க… நான் ஸ்டாப் பண்ணி அடிக்க போனேனா… "

“என்ன ஆச்சு.. யாரோ பந்தை அடிச்சாங்க… நான் ஸ்டாப் பண்ணி  அடிக்க போனேனா… கீழ விழுந்துட்டேனா.. குதிக்கால்ல அடி பட்டிடுச்சு… இந்த இடத்துலதான் அகில்லஸ் இருக்கு. அது ஒண்ணுமில்ல… கொஞ்ச வாரத்தில சரியாகிடும்..”

இன்று எனக்கு நடந்த சம்பவத்துக்கும் ”நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் கதாநாயகனுக்கு நடந்த விபத்துக்கும் சற்று ஒற்றுமை இருக்கிறது. அவரின் டயலாக் எனக்கும் பொருந்துகிறது.

எனக்கும் எனது அம்மாவின் அழகிய ராட்சசனுக்கும் என்றுமே அலைவரிசை ஒத்துவந்ததே இல்லை. விதி அவரையும் என்னையும் 14 வருடங்களே Tom and Jerry போன்று வாழவைத்தது. எனக்கு 14 வயது வந்த போது அவர் விடைபெற்றுக்கொண்டார். நானும் அவரைத் தடுக்கவில்லை. அவரும் என்னுடன் இருப்பதை விரும்பவில்லை போலும்.

எமக்குள் ராஜதந்திர உறவுகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் மிக நன்றாக நினைவில் இருக்கின்றது. அது நாம் பிபிலையில் வாழ்ந்திருந்த காலத்தில் நடந்தது.

அன்றும் அவர் மகிழ்ச்சிதரும் பானம் அருந்தியே வீடு வந்தார். நானும் தம்பியும் வீட்டுக்கு வெளியே பந்தடித்துவிளையாடிக்கொண்டிருந்தோம். பெரிசு வருவதை தூரத்திலேயே அவதானித்த நான் மெதுவாய் பின்வாங்கியபடியே, வீட்டுப் பின்புறமாய் நகர்ந்து கொண்டேன்.

போலீஸ்காரனான எனது தந்தையின் கண்கள் அதை கவனித்துவிட்டன. ஆடியபடியே வந்த துவிச்சக்கரத்தில் இருந்து பாதுகாப்பாய் இறங்கிய பெரிசு, அவரின் ஆதர்ஸ்ச புத்திரனான எனது தம்பியை அழைத்து என்னை அழைத்துவரக் கட்டளையிட்டார். நானும் அவரின் கட்டளையை மீறுவது தற்கொலைக்குச் சமம் என்பதால் அவர் முன் ஆஜரானேன். என் கண்கள் அம்மாவைத் தேடியது. அம்மாவை கண்ணுக்கெட்டிய தூரம் எங்கும் காணவில்லை. சரி.. இன்று எனக்கு ராகுகாலம் என்றபடியே அவர் முன் நிற்கிறேன்

டேய்! புட்போல் விளையாடச் சொல்லித்தருகிறேன் வா! என்றார். எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. நடுக்கத்துடன் நின்றிருந்தேன். முதலில் பந்தை எப்படி அடிப்பது என்று கேட்டார். காலால் குத்திக்காட்டினேன். இல்லை, அது பிழை இப்படி அடி என்று திருத்தினார். தலையாட்டுவதைத்தவிர வேறு வழி இல்லையாதலால் தலையை ஆட்டினேன்.

பின்பு கால்பந்து விளையாட்டில் பந்து தடுப்பாளர் எப்படி பந்துகளை விழுந்து தடுப்பது என்று பழக்கினார். அவர் விழுந்து பந்தினை பிடிக்க முயன்றபோது ஒரு பெரிய மரம் சாய்வதைப்போன்று விழுந்தெழும்பினார். சிரிப்பை அடிக்கிக்கொண்டு, தம்பியைப் பார்த்தேன். அப்பாவுக்கு  அடிபட்டிருககுமோ என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். அப்பா எழும்பி மீண்டும் தயாராவதற்கு பல நிமிடங்கள் ஆயின. மீண்டும் விழுந்து பிடிக்க முடியன்றார். பந்து அவரைக்கடந்து போனபின்பே அவரால் விழ முடிந்தது:

இப்படித்தான் எனக்கும் கால்ப்பந்தில் பந்து காப்பாளனாக வருவதற்கான விதை, திருவாளர் செல்வமாணிக்கத்தால் விதைக்கப்பட்டது. பிற்காலததில் அவ்வி‌தை விருட்டசமாகி நானும்  பந்துகாப்பானாக விளையாடி இருக்கிறேன். அப்பாவைப்போலவே பல தடவைகள் பந்து என்னைக் கடந்த பின்பு விழுந்திருக்கிறேன். அதற்காக உடன் விளையாடியவர்கள் அழகழகான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கல்லைக் கண்ட நாயின் வேகத்தில் பந்தின் பின் ஓடித்திருந்திருந்திருக்கிறேன். பந்துப் பைத்தியம் என்று நண்பர்கள் திட்டியிருக்கிறார்கள்.

எனது மகளுக்கு காலப்பந்தில் ஆர்வம் வந்த போது நானும் அவளும் வீட்டுக்குள் பந்தடித்து, பந்து கண்ணாடிப்பொருட்களை உடைத்த போது, ”என்ன  சத்தம்” என்று சர்வதிகாரி வினவ, மகள் கண்களால் கெஞ்ச, ”அது நான் அடித்த போதுதான் உடைந்தது” என்று சர்வதிகாரிகாரியின் முன் மண்டியிட்டிருக்கிறேன்.அதற்காக எனக்கு அளவற்ற முத்தங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டேன் மகளிடம் இருந்து.

இவையெல்லாம் நடந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன.  இப்போதெல்லாம் பந்தை நான் கண்ணால் காண்புதேயில்லை. சென்ற வருடத்திற்கு முன்னைய வருடம் நண்பர்கள் அழைத்ததால் கிழமையில் ஒரு நாள், கால்ப்பந்து விளையாடியிருக்கிறேன். எனினும் முன்பொருகாலத்தில் இருந்து ஆர்வம் என்னைவிட்டு அகன்றிருந்ததை உணர்ந்தும்கொண்டேன். சென்ற வருடம் முழுவதும் எனது காலில் பந்து படவேயில்லை. கடந்த 8 மாதங்களாக உடற்பயிட்சி என்பதை  மனதால் மட்டுமே செய்து வந்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் சற்றுத் தூரம் நடந்தாலே, பல காத தூரம் ஓடிய வந்தியத்தேவனின் குதிரை போன்று வாயில் நுரைதள்ளி இளைக்கிறது.  எனது கட்டிலில் இருந்து எழும்புவதே பெருங்காரியமாய் இருக்கிறது, இப்பொது.

எனது வாழ்க்கை இப்படியாய் இருந்து போது தான் ” நண்பர்களே! நாளை வயது முதிந்தவர்களுக்கான கால்பந்துப்போட்டி நடக்கவிருக்கிறது. எமது கழகம் இரண்டு அணிகளை இப்போட்டிக்கு அனுப்புகிறது. இளைஞர்களே அணிதிரள்வீர், தாக்குதலுக்கு தயாராகுங்கள், TSC sports club வாழ்க” என்ற வீர வசனங்களுடன் வந்தது அந்தக் குறுஞ்செய்தி.

அக் குறுஞ்செய்தியை கவனிக்காது எனது நித்திரையில் கண்ணாயிருந்தேன். சற்று நேரத்தில் உற்ற நண்பர் தொலைபேசினார். சஞ்சயன் ”விளையாடுவதற்கு வீரர்கள் குறைவாக இருப்பதால் நீங்கள் அவசியம் வரவேண்டும்” என்று உத்தரவிட்டு, எனது பதிலை எதிர்பார்க்காமலே தொலைபேசியை வைத்தார் அவர்.

எனது விதியை நொந்தவாறே விளையாட்டு மைதானததில் ஆஜரானேன். என்னை விடுங்கள், தப்பிப்பிழைத்துப் போகிறேன் என்றேன். இல்லை இல்லை பந்து காப்பாளர் இருக்கிறார். நீ தாக்குதல் நடாத்தும் வீரனாக விளையாட வேண்டும் என்று வீர வசனங்கள் பேசினார், பயிற்சியாளர். எனது விதியை நொந்தவாறே, எனது தலையை ஆம் வருகிறேன் என்று தலையை ஆட்டிய போது, கற்பனையில் பல கோல்கள் அடித்துக்கோண்டிருந்தேன். பல வயதான ரசிகைகள் என்னை நோக்கி கையசைத்துக்கொண்டிருந்தார்கள், நான் அவர்களுக்கு கண்ணடித்துக்கொண்டிருந்தேன்.

பயிட்சியாளர் என்னை உதிரி விளையாட்டு வீரனாக விளையாடும்படி கட்டளையிட்டு அகன்றுகொண்டார்.

முதலாவது போட்டியில் 5 நிமிடம் விளையாடக் கிடைத்தது. எனது காலில் அவ்வப்பொது பந்து காலிற்பட்டதாக சிலர் பின்பு குறிப்பிட்டனர். அந்தப்போட்டியின் பின்பு ஏறத்தாள இரண்டு மணிநேரத்தின் பின்பே எனக்கு மீண்டும் சீரான முறையில் முச்சு வரத்தொடங்கியது.

இரண்டாவது போட்டியின் போது பந்துகாப்பாளராக விளையாடும் பாக்கியம் கிடைத்தது. மிகச் சிறப்பாக ஒரு பந்தை விழுந்து தடுத்தேன். அதன் பின் மிகச் சிறப்பாக ஒரு பந்தினை தவறவிட்டேன். எதிர் அணி 1 - 0 என்று முன்னேறியிருந்தது.

அப்போது தான் இன்றைய நாளின் முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. பந்து என்னை நோக்கி மிக மெதுவாக உருண்டு வந்தது. என்னருகில் எவருமில்லை. சத்தியமாய் எவருமில்லை. என்னருகில் வந்த பந்தை நிறுத்தி, மிகவும் ஆறுதலாக, எனது கட்டுப்பாட்டக்குள் கொணர்ந்து, சற்றுத் தூரம் பந்தினை தட்டிச்செல்ல முயற்சித்த போது ” குதிக்காலினுள் ஏதோவோரு ஒலி கேட்கவும், நான் அம்மா என்று அலரவும், நடுவர் வியைாட்டை நிறுத்த விசிலை ஊதியபடியே என்னருகே ஓடிவரவும் நேரம் சரியாயிருந்தது. என்னை துக்கிச் சென்று மைதானத்துக்கு வெளியில் கிடத்தினார்கள். முதலுதவி கிடைத்து.

இந் நிகழ்வு நடந்து ஏறத்தாள 6 - 7 மணிநேரங்கள் ஆகிவிட்டன. என்னால் தற்போது நடக்கமுடியாதிருக்கிறது. வலது குதிககால் பகுதி யானைக்கால் போன்று வீங்கியிருக்கிறது.

“என்ன ஆச்சு.. யாரோ பந்தை அடிச்சாங்க… நான் ஸ்டாப் பண்ணி  அடிக்க போனேனா… கீழ விழுந்துட்டேனா.. குதிக்கால்ல அடிபட்டிடுச்சு… இந்த இடத்துலதான் அகில்லஸ்’ இருக்கு. அது ஒண்ணுமில்ல… கொஞ்ச வாரத்தில சரியாகிடும்..!”




7 comments:

  1. அக்கலிஸ் டென்டன் பிரச்சனையா.
    கொஞ்சக் காலத்திற்கு பிரச்சனைதான்.
    கவனம் எடுங்கள்.
    ஆனால் என்ன? விளையாட்டு மைதானத்திற்கு உங்களிடமிருந்து ஓய்வு கிடைத்த மகிழ்ச்சியாருக்குமே!!

    ReplyDelete
  2. இதற்கு நானும் ஒருவகையில் காரணம் ..சஞ்சயனுக்கும் பந்தடியைப் பற்றி குறும் தகவல் வந்தது ..அவர் அதைப் பற்றிக் கவனம் எடுக்கவில்லை ...நான் தான் கட்டாயம் போகும் படி தொலைபேசியில் வற்புறுத்தி அனுப்பினேன் .(அவருக்கு காலும் மண்டையு இந்த விடயத்தில் வேலை செய்யும் என்பதால்) .இன்று தொலை பேசியில் ஒரு தகவல் வந்தது ..47 வயது உலக அதிசிறந்த விளையாட்டு வீரனுக்கு புதன் கிழமைஆபிரேசன் என்று அதன் பின்ன்பு தான் எல்லாம் புரிந்தது ..என்ன விளையாட்டையும் விளையாடமுன்னுக்க்கு உடலை சூடாக்க வேண்டும் என்று சொல்கிறனான் ..கெடுகுடி சொற்கேளாது ...ஒரு பந்தடி முடித்து ஒவெடுத்து திரும்ப தொடங்க எல்லாம் முடிந்து விட்டது ...சரி எனி நேரத்துக்கு சாப்பாடாவது வேண்டிக் கொடுப்பம் ... எல்லாம் நன்மைக்கே...யாராவது என்னை விட சாப்பாடு கொண்டுவந்தால் எனக்கும் சேர்த்துக் கொண்டு வாருங்கள்...

    ReplyDelete
  3. அண்ணே ... நானெல்லாம் same side goal போட்டு அடியெல்லாம் வாங்கி இருக்கிறேன் !

    ReplyDelete
  4. You will get time, please write; You need a bit of free time, then some time to think; Then you write;

    ReplyDelete
  5. this is psyco problem sympathy seeking /attention seeking by crying of pain .

    ReplyDelete
  6. Super. Looks like its my story
    -Ganesh

    ReplyDelete

பின்னூட்டங்கள்