விமர்சிப்பவன் எதிரியா?

ஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி  Winston Churchill கூறுகிறார்.

(Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― Winston Churchill)


சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் விமர்சனமின்மையே என்கிறார்.1986 இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற நைஜீரிய நாட்டு எழுத்தாளும் நாடகசாரியருமான Wole Soyinka.

(The greatest threat to freedom is the absence of criticism. ― Wole Soyinka)

எமது சமுதாயம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு பண்படைந்துள்ளதா அல்லது நெகிழ்ச்சித்தன்மையுள்ளதா?

எமது சமுதாயம் விமர்சனத்தை எவ்வாறு பார்க்கிறது?  விமர்சனம் செய்பவர் எவ்வாறு சமூகத்தால் நோக்கப்படுகிறார்? விமர்சிப்பவருக்கும், விமர்சிக்கப்பட்டவருக்குமான உறவு எவ்வாறு இருக்கிறது என்று நோக்குவோமெனில் நாம் கடந்துசெல்லுவேண்டிய பாதை அதிகமாய் இருப்பதுபோல இருக்கிறது

எமது சமுதாயம் உணர்ச்சிகளினால் கட்டுண்டது. பலரும் விமர்சனங்களை அறிவார்த்தமாக பகுத்தாராய்வு செய்வதில்லை. தன்னைச் சூழவுள்ள மனிதர்கள், நெருக்கமானவர்கள், தாம் சார்ந்துள்ள நிறுவனங்கள், குழுக்கள் என்று விமர்சனங்களை பல வித நிறங்களைக்கொண்ட கண்ணாடிகளுக்குள்ளால் பார்ப்ப‌தே வழமையாக இருக்கிறது. அதன் காரணமாக விமர்சனம் புகழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மாற்றுக்கருத்துடைய விமர்சனங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாற்றுக்கருத்துடைய விமர்சனத்தை முன்வைப்பவரை எதிரியாகநோக்கும் சிந்தனையையும் கொண்டது எமது சமூகம். எவையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது கிடையாது.

அதேவேளை விமர்சனத் தர்மம், விழுமியங்கள், நெறிமுறைகளுக்கு உட்பட்டு விமர்சனம் அமையவேண்டும் என்பதும் மிகவும் அவசியம்.


பலரிடம் உள்ள பலவீனம் என்னவென்றால், அவர்கள் புகழ்ச்சியினூடாக பாழாகிப்போவதையே விரும்புகிறார்கள், விமர்சனத்தினூடாக மீட்கப்படுவதைவிட  என்கிறார் Norman Vincent Peale என்னும் அறிஞர்.

(The trouble with most of us is that we would rather be ruined by praise than saved by criticism. - Norman Vincent Peale)


புகழ்ச்சியை அதிகம் உள்ளடக்காது, மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து எழுதப்படும் விமர்சனங்களால் விமர்சகருடன், விமர்சிக்கப்பட்டவரும் அவரது ஆதரவாளர்களும் முரண்பட்டுக்கொள்ளும் நிலையே எமது சமூகத்தில் அதிகம் காணப்படுகிறது. இது வளமான ஒரு பண்பட்ட சமூகத்திற்கு உகந்ததல்ல.

விமர்சனங்களும் விமர்சிக்கப்படவேண்டும் என்னும் கருத்துடையவன் நான். ஆனால் விமர்சனங்கள் விமர்சிக்கப்படும்போது மிக முக்கியமாக அந்த கருத்துப்பரிமாற்றல் விவாதமாக மாறிவிடாதிருப்பது அவசியம். மற்றையவரின் நியாயமான கருத்தை / விமர்சனத்தை புரிந்துகொள்ளும் நெகிழ்ச்சித்தன்மை எம்மிடம் இல்லாதுவிட்டால் நாம் எமது முன்னேற்றத்தின் படிக்கட்டுகளை மூடிவிடுகிறோம் என்றே நான் கருதுகிறேன்.

நோர்வேயில் விமர்சனங்களை முதுகுக்குப்பின்னே விமர்சிக்கும் தன்மையே அதிகம். நேருக்கு நேர் தமக்கு கூறப்பட்டு புகழ்ச்சி தவிர்ந்த விமர்சனங்களை விமர்சித்து வளமான உரையாடலை நடாத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். விமர்சனங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டாது இருப்பதும் விமர்சனத்தை விரும்பாத தன்மையை ஒத்ததுதே.

வேதனை என்னவென்றால் பல மாபெரும் கலைஞர்களுக்கும், மனிதர்களுக்கும், கல்விமான்களுக்கும் மேலே கூறப்பட்ட நெகிழ்ச்சித்தன்மை இல்லாதிருப்பதே ஆகும். தற்பெருமையும், அதீத சுயநம்பிக்கையும் தேவைக்கு அதிகமாகும்போது வரட்டுக்கௌரவம் அதிகரித்து, நெகிழ்ச்சித்தன்மை அற்றுப்போகிறது. இதுவே வளர்ச்சியை தேக்கநிலையடையவைக்கிறது.

அண்மையில் ஒரு பேராசிரியரை எனது நண்பர் ஒருவர் சந்தித்தார். அப் பேராசிரியர் தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும், வேறு பல நாடுகளிலும் தனது ஆராய்சிகளை மேற்கொண்டு தனக்கென்றெரு தனிஇடத்தை கல்விமான்களுக்கிடையில் பெற்றுக்கொண்டவர். பல் மொழி வித்துவர். தலைசிறந்த அறிஞர்.

எனது நண்பரோ நோர்வேயில் 27 வருடத்திற்கும் அதிகமாக வசிப்பவர். நோர்‌வே கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே சிந்திப்பவர். அவரின் பேச்சும் நோர்வேஜிய சிந்தனையோட்டத்தை ‌‌அடிப்படையாகக்கொண்டது. குறிப்பிட்ட அந்த பேராசிரியர் நோா்வேக்கு வந்து 5 - 6 ஆண்டுகள் ஆகியிருப்பினும் அவரிடம் நோர்வேஜியப் புலமை இல்லை. 

போராசிரியர் தமிழக்குழந்தைகளுக்கு தமிழின் தொன்மை, பெருமைபற்றி கற்பித்துக்கொண்டிருந்தார். அவரின் மொழியாடல் ஆங்கலமும், தமிழும் கலந்திருந்தது. மாணவர்களுக்கு தமிழ் கற்பதன் அவசியம் பற்றியும் கூறினார்.

என் நண்பருக்கு பேராசிரியர் சற்றேனும் நோர்வேஜிய அறிவு இல்லாதிருப்பதும், தமிழை சற்றெனும் அறிந்த குழந்தைகளிடம் அவர் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது இரட்டை நாக்கால் பேசுவதுபோல் இருக்கிறது என்றார், என்னிடம். அவரிடமே இதுபற்றிக் கேட்கலாமே என்றேன் நான். சம்மதித்தாா்.

நண்பர், இடைவேளையின் போது சற்று காரமாகவே தனது கேள்வியைக் கேட்டார். பேராசிரியர் ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் தனது தொழில், வயது, சூழ்நிலை போன்றவற்றினாலேயே தான் இம்மொழியை இன்னும்  கற்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலைவந்தால் நான் இம்மொழியை கட்டாயம் கற்பேன். நோர்‌வே மொழியை கற்கக் கூடாது என்று நான் நினைக்கவில்லை என்பதை மிகவும் அழகாகவும், பண்பாகவும், நெகிழ்ச்சித்தன்மையுடனும் விளக்கியபோது நண்பர் தனது விமர்சனம் தவறு என்று ஓரளவு புரிந்துகொண்டார். பேராசிரியருக்கும் அக் கேள்வி பலத்த சிந்தனையை தூண்டிவிட்டிருக்கும் எனது எண்ணம்.

இப்படியான ஒரு அறிஞர் ஒரு சாதாரண மனிதனின் விமர்சனத்துக்கு பணிவாக விடையளித்து உரையாடியது ”நிறைகுடம் தளும்பாது” என்பதை உறுதிப்படுத்தியது.

விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாக எடுக்காது, அதன் சாரம்சத்தை உணர்ச்சிகளை தவித்து, குழுவாதங்களை தவித்து ஆறிவுபூர்வமாக சிந்திப்போமேயானால் பண்பட்ட, வளமான ஒரு சமுகமாற்றத்திற்கு நாம் அடித்தளமிடுகிறோம்.

இதைத்தவிர்த்து விமர்சனத்தை விஷம் என்று கருதி, விமர்சித்தவனையும் கோடாலிக்காம்பு என்று விமர்சித்து, குழுவாதங்களை மீண்டும் மீண்டும் நிறுவமுற்படுவது பண்பட்ட, வளமான சமூகத்தை நோக்கி இட்டுச்செல்லுமா என்றும் கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நஞ்சற்ற நெஞ்சமே வளமான சமூகத்தின்  சாரளம் என்பேன் நான்.

விமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன நண்பர்களே!
----------------

விமர்சனத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை கீழுள்ள வரைபு அழகாகக் காட்டுகிறது. இந்த செயற்பாடு (Process)  ஆறு பகுதிகளைக்கொண்டது.
  1. செவிமடுத்தல்
  2. உள்வாங்கிக்கொள்ளுதல்
  3. விமர்சனம் பற்றிய உங்கள் கருத்தினை பகிர்தல்
  4. உண்மையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல்
  5. விமர்சித்தவருக்கு நன்றி தெரிவித்தல்
  6. நீங்கள் ஏற்றுக்கொண்ட விமர்சனக்கருத்துக்களுக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளல்.
    மீண்டும் 1வது இலக்கத்திற்கு செல்லல். (இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடு)



2 comments:

  1. பயனுள்ள கருத்துப் பகிர்வு
    தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தங்களது இப்பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்துள்ளேன்.
    http://yppubs.blogspot.com/2014/03/blog-post.html

    ReplyDelete

பின்னூட்டங்கள்