முதற் பனியின் அழகும் குளிரும்

வழியில் என்னை நிறுத்தி எதைவிற்றாலும் நான் வாங்குவதில்லை. தலையிடியைத் தவிர.

இன்று, முதற்பனியின் குளிரில் விறைத்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.  திடீர் என்று உடைகள் தோய்ப்பதற்கான சவர்க்காரம் தேவை என்ற நினைவுவரவே அருகில் இருந்த கடைக்குள் புகுந்துகொண்டேன்.

வாசலில் இரு அழகிகள் எதையோ விற்றுக்கொண்டிருந்ததை கடைக்கண்ணால் கவனித்தபடியே உள்ளே புகுந்து, வெளியே வருகிறேன் என்னை நோக்கி தேவலோகத்துக் குரல்லொன்று மிதந்து வந்தது. நிமிர்ந்துபார்த்தேன்.

வாவ்.. அத்தனை அழகு அவள்கள். ஒருத்தி இந்நாடு. மற்றையவள்  பாரசீகத்து பேரளகி.  முகத்தில் இருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை.

நாம் விற்கும் அதிஸ்டலாபச்சீட்டினை வாங்கினால் உனக்கு   ஐபோன் கிடைக்கலாம் என்றாள், ஒருத்தி.

எனது மைன்ட்வாய்ஸ், அழகிகளே நீங்கள் நஞ்சதைத் தந்தாலும்  நான் வாங்கி உண்பேனே..

அவள்களுடன் பேச்சை தொடர்வதற்காய் ”ஐபோன் என்றால் என்ன?”  என்றேன்.

” தெரியாதா, அது ஒரு வித தொலைபேசி” என்றாள் ஒருத்தி

மற்றையவள் புத்திசாலி.”உனது  கையில் இருப்பதைப்போன்ற தொலைபேசி” அது என்று மடக்கினாள்.

”ஹி ஹி..”

இருவரிடமும் இருந்து ஒவ்வொரு அதிஸ்டலாபச் சீட்டை வாங்கிக்கொண்டேன்.

நன்றி, நன்றி என்றாள்கள்.  கண்களைச் சுருக்கிச் சிரித்தாள்கள். அவள்களின் கண்கள் ஒளிகொண்டிருந்தன. எனது மனம் துள்ளியது.

கடலைபோடத்தொடங்கினேன். கடலையில்  பெரும் கில்லாடிகளாய் இருந்தாள்கள் அவள்கள்.

பெயர், ஊர், பொழுதுபோக்கு என்று பேச்சு ஓடியது. என்ன சாம்பூ வைக்கிறாய் என்று அவள்கள் கேட்கமுதல் புறப்படுவோம் என்று நினைத்தபடியே.” சென்று வருகிறேன்” என்றேன். சரி சென்று வாருங்கள் என்றாள்கள்.

எனக்கு மனதுக்குள் ஒரு கேள்வி குறுகுறுத்துக்கொண்டே இருந்தது. பெண்களிடம் வயதை கேட்பது அழகல்ல. எனவே கேள்வியை மாற்றிக்கேட்டேன்.

நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?

நான் 2ம் வகுப்பு, இவள்  முதலாம்வகுப்பு.

ஒருத்தியின் தலையைக் கோதிவிட்டேன். மற்றையவளின் கன்னத்தை தடவிட்டேன்.

சிரித்தாள்கள்.

அந்த நான்கு கண்களினூடே ஒரு அற்புதமான காலத்தின் வாசனையை நுகரத்தொடங்கினேன்.

கண்கள் கலங்கிவிட, கைகையைக் காண்பித்தபடியே புறப்பட்டேன். வெளியே குளிர் காத்துக்கிடந்தது.


4 comments:

  1. ஆஹா சிறுவர்களும் இப்போது வியாபார விளம்பரம் செய்ய வெளிக்கிட்டாச்சா!ஹீ

    ReplyDelete
  2. சிங்கார சிறுமியரோடு
    சில்லென்ற சந்திப்பு
    சித்தம் குளிரச் செய்தது...

    ReplyDelete
  3. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete

பின்னூட்டங்கள்