கணிணியுலகப் பள்ளி

இன்று ஒரு சிறு பயலுக்கு சில பாடங்கள் கற்பிக்கத்தொடங்குவதாக ஒப்பந்தமாகியிருந்தது.
பையன் கொப்பியும் பென்சிலுமாய் வருவான் என்று நினைத்திருந்தேன். அவன் iPadஉடன் வந்தான். எனக்கு சற்று கடுப்பாகியது.

”எங்கேயடா கொப்பி” என்றேன்.

ஒரு புழுவைப்பார்ப்பதுபோல அவன், என்னைப் பார்த்தான்.


என்ன பார்வை என்பது போல நான், அவனைப் பார்த்தேன்.


”உனக்கு ஒன்றும் தெரியாது என்று பலத்த மரியாதையோடு ஆரம்பித்து, எங்கள் பாடசாலையில் iPad இல்தான் எல்லாம் நடைபெறுகிறது. வீட்டுவேலையும் அங்கேதான் இருக்கிறது. என்று iPadஐ தட தட வென்று தட்டினான், ஆட்காட்டி விரலை அங்கும் இங்கும் இழுத்தான். திரையில் என்ன என்னவோல்லாம் தோன்றி மறைந்தன.

”பார்... இது தான் நீ கற்பிக்கவேண்டியது”என்றான்

பார்த்தேன். அவனது வீட்டுவேலை என்ன என்று அங்கு எழுதியிருந்தது.

”வீட்டுப்பாடங்களுக்கு உதவி தேவை” என்றான்.

”என்ன வீட்டுப்பாடம்” என்றேன்

மந்திரவாதியைப்போல் iPad இல் தட்டினான். அது வீட்டுப்பாடத்தைக் காட்டியது.

சற்று விளங்கப்படுத்தினேன்.

அவனுக்கு கற்பூரப்புத்தி.

கற்றதை கொப்பியில் எழுது என்றேன்.

இப்போதும் ”புழுவைப் பார்ப்பது போன்று என்னைப் பார்த்தபடியே..

”கொப்பியா? எதற்கு?”

”வீட்டுப்பாடத்தை எழுத”

”ஏன் கொப்பியில் எழுதணும்?”

”சொன்னதைச் செய்”
”மாட்டேன்”

”ஏன்”

நாங்கள் iPad இல் தான் வீட்டுவேலை செய்வோம்”

எனக்கே காதில் பூச்சுற்றுகிறான் என்று நினைத்தபடியே

”சரி .. எங்கே காட்டு பார்ப்போம் என்றேன்”

அவனின் விரல் நர்த்தனமாடியது.

ஆசிரியரின் கேள்விகளை வாசித்து, என்னுடன் விவாதித்து பதிலளித்தான். அப்புறமாக அதை ஆசிரியருக்கு அனுப்பினான்.

”உனது வீட்டுவேலை பதில்கள் கிடைத்துள்ளன”. நன்றி என்று iPad பதிலளித்தது.

அவன் என்னை நிமிர்ந்து பார்ப்பதற்கிடையில் அவனுக்கு இரண்டு சிக்கலான கணக்குகளைக் கொடுத்து எனது சிக்கலைத் தீர்த்துக்கொண்டேன்.

இனிவரும் காலத்தில் இவனை எப்படி சமாளிப்பது என்று பலமாய் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

21.01.2016

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்