சிங்கத்திடம் சிக்கி சின்னாபின்னமான சோகக் கதை

எனக்கு ஒரு “சிங்கம்” நண்பராக இருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனது நண்பர் என்றதும் அச்சனின் வயது அதிகமாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அச்சனுக்கு வயது இந்த இளவேனிற் காலம் வந்தால் 10 முடிந்து 11 ஆரம்பிக்கிறது.

சிங்கத்தைப்பற்றி ஓரிரண்டு கதைகள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆனால் இதுவரை அவருக்கு ஏன் சிங்கம் என்று பெயர் வந்தது என்று எழுதவில்லை. அதைக் கூறிவிட்டு இன்றைய கதையை ஆரம்பிக்கிறேன்.

இன்றைய காலத்தில், சிங்கத்தின் கதாநாயகன் தனுஸ் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை. அதற்குக் காரணம் அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் சண்டைக்காட்சி. தனுஸ்’க்கு முன் விஜய். விஜய்க்கு முன் சூர்யா. சூர்யாவுக்கு முன் அதே சூர்யாதான்.

சூர்யா நடித்த சிங்கம் மற்றும் சிங்கம்-2 திரைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா? இந்த இரண்டு படங்களையும் எனது சிங்கம் விடுமுறை நாட்களின்போது காலை, மதியம், மாலை என்று ஒரு நாளைக்கு 3 தடவைகள் என்று மாதக்கணக்கில் பார்த்த ஒரு பொற்காலம் இருந்தது.

“ஒவ்வொரு அடியும் ஒண்ணரை தொன்’டா, பாக்றியா.. பாக்றியா” என்றெல்லாம் எனக்கு டயலாக் பேசி, சண்டைக்காட்சிகளின்போது சோபாவின் நுனிக்கு வந்து, கண்கள் விரிந்திருக்க, உலகமே மறந்த ஒரு உன்னதமான ஜென் மனநிலையில் அந்த இரண்டு படங்களையும் அவன் பார்த்து ரசித்ததை நான் கண்ணுற்றபின் அச்சனுக்கு “சிங்கம்” என்று பெயர் வைத்தேன்.

அவன் இன்றுவரை அந்தப் பெயரை ஆட்சேபிக்கவில்லை. அவ்வப்போது அவருக்கு, தான் அப்படி அழைக்கப்படுவதில் பெருமை இருப்பதை நான் சிங்கத்தின் புன்னகையில் இருந்து புரிந்துகொண்டுள்ளேன்.

இன்றைய கதை இனிமேல்தான் ஆரம்பமாகிறது.

இன்று சிங்கத்தை எனது மாளிகைக்கு அழைத்துவந்தேன். அப்புறமாய் நாம் படம் பார்க்கப்போவதாய் திட்டம்.

எப்போழுது வந்தாலும் கேட்டும் இரண்டு கேள்விகளையும் சிங்கத்தார் இன்றும் கேட்டார்.
எப்போதும் சொல்லும் பதில்களை நானும் கூறினேன்.

“என் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறாய்?”
“ராசா…. எனக்கு இது போதுமாயிருக்கிறது”
“உன்னிடம் ஏன் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை?”
“என்னிடம் கணிணி இருக்கிறது. எனவே தொலைக்காட்சிப்பெட்டி தேவையில்லை”
“ம்” என்று கர்ச்சித்தது சிங்கம்.

“அய்யா, பெப்சி குடிக்கிறாயா” இது நான்.
“எனக்கு ஆட்சேபனையில்லை” என்றான் நோர்வேஜிய மொழியில், அநாயசியமாக.

எனக்கு ஆட்சேபனை என்னும் சொல் 11 வயதில் தெரிந்திருக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இப்படித்தான் ஆரம்பித்தது அந்த சோகமான நாள்.

“அய்யா, இன்று என்ன திரைப்படம் பார்ப்போம்” என்றேன்.

எங்கள் இருவருக்கும் குழந்தைகளுக்கான அனிமேசன் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே கணிணியில் புகுந்து, கூகிள்இல் மேய்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டுபிடித்தான். அது அனிமேசன் படம் இல்லை.

“எத்தனை வயதுக்குரியவர்களுக்கான படம்”; என்று சிங்கத்தாரைக் கேட்டேன்.
கொடுப்புக்குள் சிரித்தபடியே “15 என்றான். படத்தின் பெயர் ஏதோ பட்மேன் - சூப்பர்மேன் என்றும் கூறினான்.

கடந்த முறை சிங்கத்தை ஒரு 15 வயது திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றபோது ஒரு ஏடாகூடமான முத்தக்காட்சியின் போது கண்கணை மூடிக்கொண்டு “சஞ்சயன் மாமா, நான் அவர்கள் முத்தமிடுவதை பார்க்கவில்லை என்று கூறிய அதி மேதாவி இவன். அது மட்டுமல்ல அன்று படம் முடிந்ததும் “சஞ்சயன் மாமா, வீட்டில் முத்தக்காட்சியைப்பற்றி சொல்லாதே” என்றும் ஒப்பந்தமும் போட்டுக்கொண்டான்.

எனவே இவனை மீண்டும் 15 வயது படத்துக்கு அழைத்துப்போனால் எனக்குத்தான் வில்லங்கம்வரும் என்று நினைத்து, வேறு படம் தேடு என்று கட்டளையிட்டேன்.

சிங்கம் ”இல்லை அது நல்ல படம், அதைப் பார்ப்போம்” என்றது.

”அது எனக்கும் தெரியும். நீங்க இப்ப வேற படம் தேடுறீங்க இல்ல வீட்ட போவோம்” என்றேன் சற்று அழுத்தமாக.

மறுநிமிடமே ஒரு குழந்தைகளுக்கான அனிமேசன் படத்தைக் கண்டுபிடித்தான்.
வாகனத்தில் ஏறிக்கொண்டோம்.

ஜானி படத்தில் ஜென்சி பாடிய “ஒரே வானிலே” என்ற பாட்டு ஒலிக்கத்தொடங்கியது. நான் தலையை மேலும் கீழும் ஆட்டியபடி ரசித்துக்கொண்டிருந்தேன். சிங்கம் சகிக்கமுடியல என்னும் அர்த்தத்தில் தலையை வலது இடது என்று ஆட்டியது மட்டுமல்ல எனது பாடலை நிறுத்தி, வானொலியை தட்டி காதுகொடுத்து சகிக்க முடியாத ஒரு ஆங்கலப்பாடலை கேட்கத்தொடங்கினான்.

இப்போது மேலேத்தேய இசை இசைத்தது. சிங்கம் என்னை கடைக் கண்ணால் பார்த்தபடி, தலையாட்டியபடி ரசித்துக்கொண்டிருந்தது.

அவன் என்னைக் கலாய்க்கிறான் என்பது அவனது நக்கல் சிரிப்பில் புரிந்தது.

எனவே மிகவும் மரியாதையான குரலில் “அய்யா, இந்த பாடலை யார் பாடியது?” என்றேன். சிக்கினான்டா சிங்கம் என்று நான் நினைத்து முடிப்பதற்கிடையில் ….
"Pitbull" என்னும் தென் அமெரிக்கக் கலப்பு இனத்துப் பாடகர் பாடியது” என்றான்.

“டேய், பொய் சொல்லாதே என்றபோது, வானொலியில் “இந்த பாட்டை பாடியவர் "Pitbull” என்று அறிவிப்பாளர் அறிவித்தார்.

விதி என்னோடு தன்விளையாட்டை ஆரம்பித்திருந்தது.

அடுத்து ஒரு பாட்டு வந்தது. “சரி, இந்த பாட்டு யார் பாடியது” என்றேன். சிங்கம் அசரவிலலை… சற்றும் யோசிக்காது “Alan Walker". இவர் ஒரு "You Tuber” என்றான். வானொலி இம்முறையும் அவனை ஆமோதித்தது. வீடு வந்தபின் Alan Walker ஐ கூகிள்பண்ணினேன். அவன் சொன்னது அத்தனையும் உண்மை.

11 வயதில் எனக்கு TMSஐ தெரியாதே....

அவனின் வாயில் அப்போது வந்தமர்ந்த அந்த நக்கல் சிரிப்பை இப்போது நினைத்தாலும் எனக்கு பயமாக இருக்கிறது.

அதன்பின் நான் வாயைப்பொத்திக்கொண்டேன். வாகனம் தியட்டருக்குச் சென்றுகொண்டிருந்தது. சிங்கத்தார் தலையாட்டியபடியே பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்.

இருவரும் இனிப்புக்களுடன் படத்தைப் பார்ப்பதற்கு அமர்ந்துகொண்டோம்.

அருமையான படம். சிங்கத்தார் படத்தை ரசித்தும், விழுந்து விழுந்து சிரித்தும் பார்த்துக்கொணடிருந்தார்.

அப்போது படத்தில் ஒரு காட்சியில் வெள்ளை நிற நீண்ட தாடிவைத்த கதாநாயகனின் குருநாதர் “உனக்கு “Inner Peace” தேவை” என்று தனது மாணவனுக்கு அறிவிப்பார்.
அட. இது பெரிய அர்த்தமுள்ள சொல் ஆயிற்றே. சிங்கத்திற்கு விளங்கியிருக்காதே என்று நினைத்தபடியே, மெதுவாகக் குனிந்து “ராசா, “Inner Peace” என்றால் என்ன என்று தெரியுமா” என்று கேட்டேன்.

“சூ... சும்மா படத்தைப் பார். அலட்டாதே, பிறகு கதைப்போம்” என்ற கர்ச்சித்தது சிங்கம்.

இவனுக்கு அதன் அர்த்தம் தெரியாது என்பதால் கதையை மாற்றுகிறான் என்று நினைத்தேன்.

பொறுடீ.. படம் முடியட்டும், வச்சுகிறேன் கச்சேரியை என்றும் கறுவிக்கொண்டே படத்தைப் பார்த்தேன்.

படம் முடிந்ததும் இருவரும் பீட்சா கடைக்குள் புகுந்துகொண்டோம். சிங்கத்தார் தனக்குரிய பீட்சாவை ஆடர் பண்ணியபின் எனக்கு முன்னே வந்து உட்கார்ந்துகொண்டார்.

“Inner Peace” என்றால் என்ன என்று உனக்கு சொல்லவேண்டும். அது முக்கியமான சொல் என்றுவிட்டு அதுபற்றி சொல்வதற்கு ஆயத்தமாக மூச்சினை உள் இழுக்கிறேன், சிங்கம் “சஞ்சயன் மாமா.. நான் சின்னப்பிள்ளை இல்லை, “Inner Peace” என்றால் அது ஆழ் மனது சம்பந்தப்பட்டது. நீ அதை “சமாதானம்” என்று நினைத்தால் அதற்கு கம்பனி பொறுப்பாகாது என்பது போல நோர்வே மொழியில் கூறி ஏளனமாக என்னைப் பார்த்தான்.

எனது “Inner Peace” மறைந்துபோனது. ஆழ் மனது வலித்த்து.

எனக்கு “ஆழ்மனது” என்ற சொல் அறிமுகமானபோது எனக்கு எத்தனை வயதிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். 11 வயது கடந்த பல பத்து வருடங்களின்பின்னான ஒரு காலமாய் இருக்கவேண்டும்.

எனது சிங்கம் சும்மா சிங்கம் இல்லை…. அவன் ஒரு Lion King

1 comment:

பின்னூட்டங்கள்