பல்லு போயிரிச்ய்யா போயிரிச்சி...

நேற்றுக் காலை வேலை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கும் போது ”ட்ராம்ப்” வண்டிக்காக காத்திருக்க நேர்ந்தது. அருகில் முகத்தில் சந்தோசத்தையும் முதுகில் பையையும் சுமந்தபடி முதலாம் வகுப்புப் பிள்ளைகள் பலர் நின்றிருந்தனர். காலைக் குளிரின் கடுமையோ, தூக்கத்தின் களைப்போ எதுமே அவர்களிடத்தில் இல்லை. காலையில் பூத்த புது மலர்களாய் நறுமனத்துடன் நின்றிருந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது. ட்ரம்ப் வர ஏறி உட்கார்ந்து கொண்டேன். அவர்களின் ஆசிரிகைகள் இவர்களை எண்ணி எண்ணி ட்ராம்ப் வண்டியினுள் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.  உள்ளே ஏறியதும் எனது ஆசனத்தை சுற்றியும் நின்று கொண்டார்கள்.

அருகில் இருந்த ஒரு சிறுமிக்கு ஆசனததைக் கொடுத்தேன். நன்றி என்று  வாயாலும், கண்ணாலும், முகத்தாலும் சிரித்தாள். தான் இருந்த பின் நண்பிக்கும் இடம் ஒதுக்கினாள். ஒரு ஆசனத்தில் இருவர் இருந்து கொண்டனர். ட்ராம்ப் வண்டி முழுவதும் அவர்க‌ளே வியாபித்திருந்தார்கள். உள்ளே இருந்த காற்றுக் கூட அழககாய் இருந்திருக்கும். அத்தனை மகிழ்ச்சியாய் உலகை மறந்து நின்றிருந்தார்கள் அவர்கள்.

அருகில் இருந்த சிறுமி நண்பியிடம்
“நேற்று மாலை எனது முதல் பல்லு விழுந்தது“  காலை 20 குறோணர்கள் கிடைத்தது என்றாள் (நோர்வேயில் பல்லு விழுந்தால் அதை ஒரு கிளாஸ் இல் போட்டு வைப்பார்கள், இரவு பெற்றோர் அந்த பல்லை எடுத்து விட்டு காசு போடுவது வழக்கம்)
“காட்டு பார்ப்போம்“ என்றாள்
ஈஈஈஈ என்று பல்லைக் காட்டுகிறாள், பல்லை இழந்தவள்.
முத்து முத்தான பல்வ‌ரிசையில் ஒரு முத்தைக் காணவில்லை. அந்த இடைவெளிக்குள்ளால்  நாக்கை விட்டுக் காட்டி சிரித்தாள். மற்றவளும் சிரித்தாள்.
இப்போ அருகில் இருந்த சிறுவர்கள் இருவரும் தங்களுக்கும் பல் இல்லை என்று பற் வரிசையை காட்ட மற்ற சிறுவன் 1,2,3 என்று இல்லாத பற்களை எண்ணினான். பல் விழுவது அவர்களுக்கு பெருமையாய் இருந்தது. குழந்தைக் காலத்தை கடந்து வளர்ந்து விட்ட சந்தோசம் அவர்களுக்கு. அவர்களைத் தொடர்ந்து சற்று நேரத்தில் ஏறத்தாள எல்லா குழந்தைகளும் தங்கள் பல்லைப் பற்றியோ அல்லது  அருகில் இருந்தவரைப் பற்றியோ பெசிக் கொண்டிருந்தார்கள்.

என்னருகில் இருந்த சிறுமி அருகில் இருந்த இளம் ஆசிரியையிடம் உனக்கு எத்தனை பல்லு விழுந்திருக்கிறது என்றாள். அவரோ இதுவரை ஒன்றும் விழவில்லை என்ற போது அழகிய அவளின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தது.
“உண்மையாகவா“
“ம்“
“வாயைத் திற“
ஆஆஆஆஆ
அவரின் வாய்க்குள் இவள் எட்டிப்பார்க்க மற்ற குழந்தைகளும் எட்டிப்பார்த்தார்கள்
ஆசிரியர் நான் சிறுமியாய் இருந்போது எல்லா பற்களும் விழுந்து முளைத்தன என்றார்.
“எத்தனை வயதில் விழுந்தது?“
“7 -9“ வயது வரை
“எல்லா பல்லும் விழுந்திருந்த போது எப்படி உணவு உண்டாய்“
“ஒரே நேரத்தில் எல்லா பற்களும் விழ மாட்டாது, எனவே நீ பயப்படத் தேவை இல்லை“ என்றார்

என்னையறியாமல் நான் எனது வாய்க்குள் ஏதும் பல்லு விழுந்த ஓட்டை இருக்கிறதா என நாக்கால் தடவிப் பார்த்தேன். கொடுப்புப்பல் ஒ்ன்று எனது வாய் நாற்றம் தாங்காமல் பல வருங்களுக்கு முன்பே விடைபெற்றறு ஞாபகம் வந்தது. சில வருடங்களுக்கு முன்  ஞானப்பல் என்றதும் வலியைத் தர அதையும் புடுங்கி எறிந்து, 1500 குறோணர்களையும் புடுங்கிக் கொண்டார் பல் வைத்தியர். (அப்ப உனக்கு ஞானமில்லையை என்று நீங்க கேக்கப்படாது ... ஆமா). எனக்கும் இன்னும் சில வருடங்களில் மீண்டும் பல்விழும் காலம் ஆரம்பிக்கப் போகிறது. அப்போதெல்லாம் இக் கிழந்தைகளை போல் பெருமைப்படமாட்டேன் என்பது மட்டும் நிட்சயம். பொக்கை வாயால் பீடா சாப்பிடும் காலம் வருமா... அய்யோ .. நினைக்கவெ பயமாகவிருக்கிறது. வந்தாலும் இருக்கவே இருக்கிறார் டாக்டர் பாலாஜி, சென்னையில். மீண்டும் என்னை ”யூத்” ஆக்கிவிடுவாராமுள!

அணிலே அணிலே இந்தப் பல்லை எடுத்துக் கொண்டு உன்ட பல்லைத் தா என்று வீட்டின் கூரைக்கு மேல் பல்லெறிந்ததும், ஆடிய பல்லை பல்லால் தட்டி தட்டி விழவைத்ததும், வந்த ரத்தத்தை துப்பி துப்பி நண்பர்ளிடம் பந்தாவாக காட்டித் திரிந்ததும், பல் விளக்கும் போது உமிக்கரி பல் விழுந்த காயத்தில் குத்தி வலித்ததும் எங்கோ தொலைவில் மெல்லிய நினைவின் நறுமணத்துடன் மனதை நனைக்க ட்ராம் வண்டியால் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

ட்ராம்ப் வண்டியின் ஜ்ன்னலில் இருந்த சிறுவர்கள் இற்ங்கிய எல்லோருக்கும் கை காட்டிக் கொண்டிந்தார்கள். என் கையும் என்னைக் கேட்காமலே மேலுயர்ந்து ஆடியது.


இன்றைய நாளும் நல்லதே!


.

1 comment:

  1. அந்த நாள் ஞாபகம் வந்து சென்றது...........சமுதாயத்தோடு ஒட்டி வாழ்கிறீர்கள் அந்த்த மகிழ்ச்சி உங்களையும் தொற்றிக்
    கொள்கிறது பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

பின்னூட்டங்கள்