ஒரு மனிதன், அவன் கட்டில், அவன் மனச்சாட்சி

சில நாட்களாகவே உடலும் உள்ளமும் கனத்துப்‌ போய் இருக்கின்றன. இது ஒன்றும் புதிதில்லை. பகலை விழுங்கிய பனிக்கால நாட்களில் நான் ஆண்டாண்டுகளாய் அனுபவிக்கும் ஒரு உணர்வு இது.

நேற்று, வெளியில் இருளும், குளிரும் தாராளமாய் விளைந்திருந்தன.  எனது அறையினுள் சாய்ந்திருந்தவாறே வாசித்துக்கொண்டிருந்தேன். யாரோ மெதுவாய் கனைப்பது போலிருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். எவருமில்லை. மீண்டும் வாசிப்பில் ஆழ்ந்து போகும் போது அதே கனைப்புச் சத்தம் கேட்டது. அறைக்குள் பாரும் இல்லை, அப்போ கனைப்பது யார்? என்று சிந்தித்த போது மிகவும் பரீட்சயமான குரலொன்று பேசிற்று. அது எனது கட்டிலின் ஆன்மாவின் குரல்.

”உன்னுடன் ஒரு பிரச்சனை பற்றிப் பேச வேண்டும்” என்றது அது.

நமக்கிடையில் பெரிதாய் எந்தவிதமான பூசல்களும் வருவதில்லை. இருவரும் பூசல்களை விரும்புவதுமில்லை. ஒருவரை ஒருவர் அன்பாய் கவனித்துக்கொள்கிறோம். இருவரும் தனித்தவர்கள். நான் தனியே உறங்குபவன். எனக்குத் துணை என் கட்டில். கட்டிலுக்கு  துணை நான்.

எனது கட்டிலுக்கு ஆன்மா இருக்கிறது. கட்டில் என்னும் சடப்பொருள் அதன் உடலாக இருக்கிறது. எனவே கட்டில் என்னை தனது ஆன்மாவுடனேயே பேசு என்றிருக்கிறது. அதுவும் ஒரு விதத்தில் ஆறுதலாகவே இருக்கிறது. கட்டிலின் ஆன்மா நான் பிறந்த நாள் தொடக்கம் என்னை பிரியாமல் வந்து கொண்டே இருப்பதால் அது நான் எங்கு தூங்கிப் போனாலும் தனக்கென்றொரு உடலை தற்காலிகமாக பெற்றுக்கொண்டு என்னுடன் சேர்ந்துறங்குகிறது. எனது நெருங்கிய நண்பனாயும் இருக்கிறது.

எங்கள் நட்புக்குள் மூன்றாமவர் ஒருவரும் இருக்கிறார். அது என் மனச்சாட்சி. அதற்கும் கட்டிலின் ஆன்மாவுக்கும் பெரிதாய் சொல்லிக்கொள்ளுமளவுக்கு நட்பில்லை. நான் மட்டும் மனச்சாட்சியுடன் நட்பாயிருக்க முயன்றுகொண்டிருக்கிறேன். ஆனால் மனச்சாட்சியோ எம்மிருவருடனும் நட்பாய் இருக்கவே விரும்புகிறது. கட்டிலின் ஆன்மாவோ,  உன் மகிழ்ச்சி எதுவோ அதையோ நானும் விரும்புகிறேன் என்கிறது, என்னிடம்.  கட்டிலின் ஆன்மாவுக்கு தெரிந்த, மனச்சாட்சிக்கு தவறாகப்படும் விடயங்களும் இருக்கின்றன. எனவே மனச்சாட்சியுடன் மோதாதே என்ருரைத்திருக்கீறேன் கட்டிலின் ஆன்மாவிடம்.

சற்று சிந்தித்த பின் ”பின்பொரு நாள் பேசுவோம்” என்று கூறினேன். கட்டிலின் ஆன்மா அமைதியாயிற்று.

அடுத்த நாள்:

அன்றைய பின்னிரவு மிகவும் அமைதியாய் இருந்தது. குளிர் கட்டுக்கடங்கியதாய் இருக்க, வானம் மட்டும் புகார்களை பரப்பிக்கொண்டிருந்தது ஊருக்குள் பரப்பிக்கொண்டிருந்தது. எனக்கு கட்டிலின் ஆன்மாவுடன் பேசும் ஆர்வம் இருந்தாலும் ஏனோ ஒரு பயம் மனதினுள் படந்தபடியே இருந்தது.

ஒரு கிளாஸ் கொன்யாக் எடுத்துக் கொண்டேன்.
5 - 10 நிமிடங்களின் பின் அமரிக்காவின் வான்படையையே எதிர்க்கும் தைரியம் வந்தமர்ந்து கொண்டது, என்னிடம். மெதுவாய் கட்டிலில் சாய்ந்து கொண்டேன்.

க்கும் .. என்று கனைத்துக்கொண்டேன்
” ஏதோ பேச வேண்டும் என்றாயே?,  பேசு, என்றேன்” கட்டிலின் ஆன்மாவிடம்.
எது வித பதிலுமில்லை.

எனது மனச்சாட்சி மட்டும் என்னை  பார்த்தபடியே உட்கார்ந்திருந்தது, பெரு அமைதியுடன். எனக்கு, அது இவ்வாறு அமைதியாய் இருப்பது பிடிப்பதில்லை. அது என் தோல்வியின் அறிகுறி. எனவே மீண்டும் கட்டிலின் ஆன்மாவை நோக்கி பெருஞ் சத்தமாய் ”ஏதோ கதைக்க வேண்டுமென்றாயே அது என்ன என்றேன்”

கட்டிலின் ஆன்மா மனச்சாட்சியினை நிமிர்ந்து பார்க்க அவர்கள் இருவதும் எதோ ரகசியம் பேசுவது போலிருந்தது எனக்கு. ”கொன்யாக்” போதை எனக்குள் எகிறிக்கொண்டிருந்தாலும் என்னையறியாத ஒரு ஒரு நிதானத்தை உணர்ந்திருந்தேன்.

தி்டீர் என கட்டிலின் ஆன்மா பேசத்தொடங்கிற்று. எனது மனச்சாட்சியோ அதன் கருத்துக்களை ஆதரிப்பது போன்றதொரு புன்னகையுடன் அமர்திருந்தது.

”உனது போக்கு சரியில்லை, குடித்திருக்கிறாய் என்றது கட்டிலின் ஆன்மா.

மனச்சாட்சி அதை ஆமோதிப்பது போல தலையை மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டது.

”சற்று சுயவிமர்சனம் செய்து கொள்” என்று மனச்சாட்சி உரைத்த போது அதன் கழுத்தை அப்படியே திருகினால் என்ன என்றிருந்தது எனக்கு. கடும் பார்வை ஒன்றை ஒன்றை வீசினேன்.

மெதுவாய் ஏளனப்புன்னகை செய்தது மனச்சாட்சி. மனச்சாட்சியை எரித்துவிடுவது போல் பார்த்தேன்.

என் காதுகளின் ‌செவிப்பறைகளில் கட்டிலின் ஆன்மா பேசுவது எங்கோ தொலைவில் ஒலிப்பது போல் ஒலித்துக்கொண்டிருந்து.

இன்னுமாரு ஒரு கிளாஸ் கொன்யாக் விழுங்கிக் கொண்டேன். சற்று கைத்தது. ஒரு ரொல்ஸ்ஐ கடித்துக் கொண்டேன்.

”பேசு” என்றது கட்டிலின் ஆன்மா. மனச்சாட்சி அமைதியாய் என்னைப் பார்த்தபடியே இருந்தது.

”நீதானே பேசவேண்டும் என்றாய்” என்றேன் நான், வீம்பாய்

”உன் மனதை நாம் அறிவோம்” என்றன கட்டிலின் ஆன்மாவும், மனச்சாட்சியும் ஒரே சமயத்தில்.

‌அவர்கள் இருவரும் எனக்கெதிராய் ஒற்றுமையானதை என்னால் தாங்கமுடியாதிருந்தது. இன்னுமொரு கிளாஸ்ஐ ஊற்றிக் கொண்டேன்.

”என்ன ” ..... ”  அறிவீர்கள்” என்றது உட்சென்ற கொன்யாக்.
.
அவர்களிருவரையும் என்னால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

நீ செய்யும் செயலை மன்னிக்க முடியாது என்றது கட்டிலின் ஆன்மா.

”நான் என்ன கொலையா செய்துவிட்டேன்” என்றேன். அவர்கள் இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். எனக்குள் எரிச்சல் பற்றியெரிந்து கொழுந்துவிட்டெரியத்  தொடங்கியது.

”இல்லை, ஆனால் என்னைக் கொடுமைப்படுத்துகிறாய்” என்றது கட்டிலின் ஆன்மா

”என்னையும் தான் என்றது” மனச்சாட்சி

”பேசுவதை தெளிவாய் பேசுங்கள்” என்றபடியே மேலும் ஒரு கிளாஸ்ஐ வாயினுள் கவிட்டுக்கொண்டேன்.

கட்டிலின் ஆன்மா பேசாதிருந்தது. மனச்சாட்சியோ .. என்னை ஊடுருவிப்பார்த்து.

தலையைக் குனிந்து கொண்டேன். பின்பு  மீதமாய் இருந்த கொன்யாக்ஐ குடித்து, கடைசித் துளியையும் நாக்கால் தட்டிக் குடித்தேன். பின்பு ”ரோல்ஸ்”ஐ கடித்தேன்.

சில நிமிடங்கள் ஓடியதும், அமெரிக்காவின் வான்படையை மட்டுமல்ல முப்படையையும் எதிர்க்கும் வல்லமை வந்தது போலிருந்தது.

கட்டிலின் மனச்சாட்சி ” நீ என்ன செய்கிறாய் என்று உனக்குத் தெரியும் என்றது”

எனது பொறுமை காற்றில் பறக்க ”என்ன மண்ணாங்கட்டியை செய்கிறேன்” என்று கத்தியபடியே மேசையில் ஒரு குத்து குத்தினேன். மேசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் அதிர்ந்து அடங்கின.

”மெதுவாய் பேசு, நிதானத்தை இழக்காதே” என்றது மனச்சாட்சி

நூல் அறுந்த பட்டம் போல், நிதானம் காற்றில பறக்க, பச்சைத் தூஷணத்தால் பேசினேன்.

மனச்சாட்சி என்னைப்பார்த்தபடியே மௌனித்திருந்தது. என்னால் மனச்சாட்சியை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. நிலத்தைப்பார்த்தபடியே கட்டிலின் ஆன்மாவிடம் புரியும்படி சொல் என்று புறுபுறுத்தேன்

ம்..  கொட்டிப‌டியே சொல்லிற்று கட்டிலின் ஆன்மா, இப்படி:

உனது கட்டில் விரிப்பையும், தலையணையுறையும், போர்வையும் தயவு செய்து சலவை செய்..... என்னால் தாங்கமுடியவில்லை.

உட்சென்ற கொன்யாக்கும், அமெரிக்க முப்படையையும் எதிர்க்கும் சக்தியும் கண நேரத்தில் காலியாகியிருந்தன.

கட்டிலின் ஆன்மா கண்சிமிட்ட, மனச்சாட்சி புன்னகைத்தது,

8 comments:

  1. இது என்ன சஞ்சயன், இந்த சண்டைகள் வழமையானைதுதானே.

    மேசையில் ஓங்கி அடிப்பது பச்சை தூசனத்தால் ஏசுவது இதுல்லாம்

    சகஜம்தானே. அத்துடன் கொன்ஜகும் சேர்ந்துகொண்டால், பிறகு என்ன

    கொண்டாட்டம் தானே, சரி அதை இப்ப தோய்த்தாள் காயமாட்டது. அடுத்த சம்மருக்கு கழுவிபோட்டு பார்க்கவும் . நாளைக்கு கடை திறந்ததும் ஒரு புது படுக்கை விருப்புகள் தலையணை 2 , போர்வை போன்றவற்றை வங்கி கொள்ளவும் . ஆத்மா அப்புறம் அந்தரங்கமா பேசும் , மனசாட்சிக்கு கொஞ்சம் நாளைக்கு வேலை இருக்காது . இதுவும் யாவும் கற்பனை தான் .

    ReplyDelete
  2. ...அப்போ கனைப்பது யார்? என்று சிந்தித்த போது மிகவும் பரீட்சயமான குரலொன்று பேசிற்று. அது எனது கட்டிலின் ஆன்மாவின் குரல்.

    விட்டுடுங்கோ தலைவரே, நாங்கள் எல்லாம் பாவம்.

    ReplyDelete
  3. பல உண்மை தன்மைகள் கற்பனையோடு அற்புதம்.....

    ReplyDelete
  4. ஆன்மாவும் மனச்சாட்சியும் உண்மையில் பேசவெளிக்கிட்டால் அதோகதிதான்...அதுவும் தனிய இருக்கிறவையளின்ர பாடுகளை !

    ReplyDelete
  5. வெறிவளத்திலும் சரியாகத்தான் கதைத்திருக்கிறியள் விசரன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சாமியோவ், அடுத்த பதிவு போடுங்கோ சாமியோவ். வருசக் கடைசி, கொஞ்சம் மப்படிப்பதைக் குறைத்து, கூட எழுதவும்.

    Happy New Year :-)

    ReplyDelete
  7. paavam kattil thurmanam thaanga mudiyavillai polum :)

    ReplyDelete
  8. paavam kattil thurmanam thaanga mudiyalaiyo ...:)

    ReplyDelete

பின்னூட்டங்கள்