வாழ்வின் யாத்திரைகள்

இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன, ஒரு பெரும் பயணத்திற்கு. இதுவரை நான் பயணிக்காத பயணம் அது. பயணத்தின் விறுவிறுப்பும், குதூகலமும், வார்த்தைகளில் விபரிக்க முடியாத ஒரு இனிமையான படபடப்பும் மனதுக்குள் குடிவந்திருக்கிறது. எனக்காக நான், தனியே ஒரு பயணம் இதுவரை சென்றதில்லை என்றே கூறலாம். ‌அதுவும் ஏறத்தாள 4 - 5 வாரங்களுக்கு நான் சென்றதேயில்லை.

எனது வாடகை அறை, வேலை, எனது கணணி, நண்பர்கள், உற்ற நண்பர்கள், நிலக்கீழ் தொடருந்து, தொலைபேசி அழைப்புக்கள், முகப்புத்தகம் என்று என் வாழ்வில் அங்கம் வகிக்கும் அத்தனையையும் ஏறத்தான 30 நாட்களுக்கு ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு நீண்டதொரு நடைப்பயணத்தை ஆரம்பிக்கவிருக்கிறேன். ஆனால் இது சுற்றுலாப்பயணம் அல்ல.

ஏன் இந்தப் பயணம்?

வாழ்வில் நான் தடுமாறி விழுந்தபோதெல்லாம் ஏதோவொன்று வேறு மனிதர்களின் வடிவிலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளினூடாகவும் புதிய புதிய பாதைகளை காண்பித்தபடியே இருக்கின்றது. எழும்பு, எழும்பி நட என்னும் ஒரு அசரீரி எங்கிருந்தோ ஒலிக்கிறது. இவைகள் என்னை ரட்சித்து ஒரு பாதுகாப்பான பாதையில் அழைத்துப்போய்க்கொண்டேயிருக்கின்றன.

கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப்பார்க்கும் போது இவ்வளவையும் எப்படிக் கடந்து கொண்டேன் என்ற ஆச்சர்யமான எண்ணம் ஏற்படுவதையும் மறுப்பதற்கில்லை. எத்தனையோ தளைகளை அறுத்தெறிய நேர்ந்திருக்கிறது. இன்று எனக்கும் எனது கடந்துபோன நாட்களுக்கும் இடையில் பாரிய இடைவெளியை உணர்கிறேன். அதுவும் ஒருவிதத்தில்  ஆறுதலாகவே இருக்கிறது. இந்த ஆறுதலானது என் மகிழ்ச்சியின் அளவுகோல் அல்ல.

வாழ்வின் சுக துக்கங்கள்,  நாவினால் சுடப்பட்ட வடுக்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், அநியாய நியாயங்கள், இழக்கக்கூடாத இழப்புக்கள், தனிமை, பல ஆண்டுகளாகத் தொடரும் மன அழுத்தம், வேறு சில பல நோய்கள் என்று ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது என் வாழ்வில். இவற்றையெல்லாம் கடந்துமிருக்கிறேன், கடந்துகொண்டுமிருக்கிறேன்.

தனிமையின் வலியும், அதன் பாதிப்பும் அதை அனுபவித்தவர்களாலேயே உணரப்படக்கூடியவை. பலதையும் கடந்தவொரு நிலையில் நான் இருந்தாலும் நானும் மனிதன் என்பதை வாழ்க்கை இப்போது அடிக்கடி உணர்த்திக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக எனக்குள் ஒரு வித பய உணர்வு  ஊறத்தொடங்கியிருக்கிறது. சுய நம்பிக்கையும் குறையத் தொடங்கியிருக்கிறது.

இவற்றில் இருந்து நான் மீளவேண்டுமானால் என் சுயநம்பிக்கையை நான் வளர்த்தக் கொள்ளல் வேண்டும். என்னாலும் முடியும் என்ற எண்ணம் மனதில் பதியப்படல் வேண்டும் என்பது எனக்கு புரிந்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை எனது எல்லைகள் என்ன? அவற்றை  ‌மேலும் மேலும் அதிகரித்துக்கொள்ளலாமா? என்பவை என்றும் எனக்கு அத்தியாவசியாமாய் இருந்திருக்கின்றன. கடந்த காலங்களில் அயர்லாந்தில் சைக்கில் பயணம், வடமேற்கு நேர்வேயில் தொடர் மலையேற்றம், அவுஸ்திதிரேலியாவில் பரசூட் முலம் 12000 அடி உயரத்தில் இருந்து குதித்தது என்று என் எல்லைகளை நானே பெரிதாக்கிக் கொண்டதால் கிடைத்த சுயநம்பிக்கை எனக்கு பெரிதும் உதவியிருக்கிறது. எனவே தான் இ்ம் முறை இது வரை நான் சாதிக்காத ஒரு விடயத்தை செய்தாலென்ன என்று தோன்றிற்று. அந்த சிந்தனையின் வடி‌வமே இந்த 800 கிமீ யாத்திரை.

முப்பது நாட்கள் தொடர்ந்து நகரம், கிராமம், காடு, மலை என்று  எல்லாவித காலநிலைகளுக்குள்ளாலும் நடக்கவேண்டியிருக்கிறது. நான் தேர்ந்தெடுத்திருக்கும் வழி கிறீஸ்தவர்களின் மிகவும் பிரபல்யமான பாதயாத்திரை பயணங்களில் ஒன்று என்பதை நான் முக்கியமாக குறிப்பிட வேண்டும். உலகெங்கிலும் இருந்து பலர் வருடம் முழுவதும் இவ்வழியில் யாத்திரை செய்துகொண்டேயிருக்கின்றனர். புதிய புதிய மனிதர்களை, நட்புகளை நான் பெறலாம். ஒரு புதிய நாட்டினை, புதிய கலாச்சாரத்தை மிக அருகில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

நடைப்பயணம் என்பது இலகுவல்ல. எனக்குத் தேவையான பொருட்களை நானே சுமக்கவேண்டும், இரவுகளில் தேவாலய மடங்களில் தங்கியிருக்கவேண்டும். அங்கெல்லாம் நான் கடந்த 25 வருடமாக அனுபவிக்கும் வசதிகள் இருக்கமாட்டாது, எனவே மிகவும் குறைந்த வசதிகளுடனேயே தங்கவேண்டியிருக்கும், உடல் வலிகள் தரப்போகும் உபாதைகளை தாங்கிக்கொள்ளவேண்டும், மனம் தளராது இருக்கவேண்டும், நோய்வாய்ப்படாதிருப்பது என்று பல விடயங்களை நான் கருத்தில்கொள்ளவேண்டியிருக்கிறது.

இவைஎல்லாவற்றையும் மனது தாங்கிக்கொண்டு எனது பயணத்தின் இறுதி எல்லை Satiago de Compostela தேவாலயத்தில் முடிவுறும் போது என் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன். சுயநம்பிக்கையும், ஒன்றைச் சாதித்த மகிழ்ச்சியும், நடைப்பயணம் தந்த சிந்தனைகளும், புதிய மனிதர்கள் தந்துபோன நினைவுகள் என எத்தனையோவிதமான உணர்வுகளை மனம் அனுபவித்துக்கொண்டிருக்கும்.

சில வேளைகளில் இந்த நடைப்பயணத்தின் போது இனி நான் எப்படி வாழ வேண்டும், எதெதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், என் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை என் மனம் எனக்குப் போதிக்கலாம். எது எதுவாகினும் சில சமரசங்களை மட்டும் நான் விரும்பவில்லை. நான் சாதாரண ஆசாபாசங்களுடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனே.

காலம் இதுவரை என்னை வழிநடத்தியிருக்கிறது. நான் விழுந்தபோதெல்லாம்  என்னை எழுப்பி, இதோ உன் வழி என்று வழிகாட்டியிருக்கிறது. எனவே மனதில் எவ்வித கவலையோ பயமோ இன்றி பயணம் போகும் சிறு குழந்தையின் குதூகலத்துடன் நடைப்பயணத்தின் ஆரம்பத்திற்காக காத்திருக்கிறேன்.

ஏறத்தாள ஒரு மாதத்தின் பின் மீண்டும் சந்திக்கக்கடவதாக!

5 comments:

  1. கடினமானது தான் ஆனால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.. ஆரோக்கியம் சிறக்கும்.. வாழ்த்துக்கள் ..சந்திப்போம்..

    ReplyDelete
  2. சாதாரண மொழியில் உங்கள் அனதில் உள்ளதைக் கொட்டியிருப்பது மிகவும் பிடித்திருக்கிறது..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

    ReplyDelete
  3. இதை போன்ற ஒரு பயணத்திற்கு உறவுகள் ஒரு பெரும் சுமை. கடந்த மாதம் வெறும் முன்று நாள் நான் சென்ற ஒஸ்லோ பயணத்தையே என் மனைவியால் தங்கிகொள்ளமுடியவில்லை. என்னை பொறுத்தவரை என் வேலை, அன்றாட வாழ்க்கை நகர்வுகள் அனைத்துமே பயணமாக எடுத்துகொள்வேன். இந்த கடுமையான பயணத்தின் ஊடக நீங்கள் பெரும்
    ஞானம் உங்களை எஞ்சிய வாழ்கையை வழிநடத்த வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  4. You may interested in this http://www.runningthesahara.com/news.html.
    There is DVD. http://www.youtube.com/watch?v=HidKMFClQUU

    ReplyDelete

பின்னூட்டங்கள்