பொய்யற்ற ஓர் அழைப்பு

சில வாரங்களுக்கு தொலைபேசியில் என்னை அழைத்தார், சில மாதங்களுக்கு முன் அறிமுகமான நண்பர். அவரைப் பற்றி ஒரு ஆக்கம் எழுதியிருந்தேன். (பார்க்க விழுதுகளைத் தொலைத்தவர்கள்). அன்று கணணி வாங்குவுதற்கு அறிவுரை கேட்டிருந்தார். இன்று கணணி வாங்கி விட்டதாயும் அதை பாவிக்கும் விதம் பற்றி கற்பிக்கவே என்னை அழைத்தார்.

அவர் மொராக்கோ நாட்டவர், ஆனால் சுவீடனில் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக சுவீடனில் வாழ்ந்து தற்போது நோர்வேயில் வாழ்கிறார்.

வீட்டு வாசலில் நின்று வரவேற்றார். எனது ஜக்கட்டை பெரிய தலைவர்களின் ஜக்கட்ஐ சிப்பந்திகள் களட்டி எடுப்பது போல களட்டி எடுத்தார். நன்றி என்ற போது, நெஞ்சில் கை வைத்து தலைசாய்த்து எனது நன்றியை ஏற்றுக் கொண்டார்.

கணணியை காட்டிய படியே என்ன குடிக்கிறீர்கள் என்றார் மிகவும் மரியாதையாய். தேத்தண்ணி என்றேன். கணணியை எடுத்து இயக்கினேன். அறைக்குள் இருந்து புரியாத மொழியில் பேசிக்கொண்டு வந்தார் அவரின் மனைவி. அருகில் வந்து கையை பிடித்து குலுக்கினார்.  பின்பு தேத்தண்ணி போட்டுத் தந்தார். அதன் பின் அவர் நான் அங்கு நின்ற 3 மணிநேரமும் அவரின் அறையை விட்டு வெளியே வரவில்லை.

தனது மனைவி வந்திருக்கும் விருந்தினருடன் பேசாமல் தனது அறைக்குள்ளேயே இருந்தது அவருக்கு அசௌகரீயமாக இருந்திருக்க வேண்டும். என்னிடம் அதற்கு மன்னிப்புக் கேட்டார். நான் அது பறவாயில்லை, அது அவரின் கலாச்சாரமாக இருக்கும் என்றேன். ஆம் அது தான் எனது பிரச்சனை என்றார். மனைவி தனக்கு உணவு சமைக்கும், வேலைக்கு போகும் நேரத்தை விட மிகுதியாயிருக்கும் பல மணிநேரங்களை இறைவணக்கத்துக்கே செலவிடுவது இவருக்கு பிடிக்கவில்லை என்பதை அவரின் வார்த்தைகளினூடாக அறிய முடிந்தது.

இருப்பினும் தன் மனைவியை தான் அவளின் இஸ்டத்துக்கு விட்டிருப்பதாகவும், அவள் மிகவும் உண்மையாகவும், பண்பாகவும் இருப்பதாகவும், அவர் தெற்கு மொறாக்கோவை சேர்ந்த மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் சொன்னார்.

தனக்கு இவரை மணமுடிக்க தீர்மானித்த போது பல மிக இளமையான பெண்களை தனக்கு மணமுடிக்க பலர் முன்வந்ததாயும், அவற்றில் பலர் தனது பணத்தில் குறியாயிருந்ததாகவும் ஆனால் தனது மனைவியின் குடும்பத்தினர் மட்டும் நேர்மையாய் இருந்தார்கள் என்றும் சொன்னார்.

மொறாக்கோவில் பணம் இருக்கும் கிழவர்கள் வயதில் குறைவான பெண்களை திருமணம் முடிக்கிறார்கள் என்றும், பெண்ணிண் தகப்பன் வறுமையினால் இதற்கு சம்மதிப்பதாயும், ஆனால் அந்தக் கிழவர்கள் இறக்கும் போது பெண்கள் இரண்டு, முன்று குழந்தைகளுடன் மீண்டும் தகப்பிடம் தஞ்சம் புகுவதை அந்த பெண்களின் தகப்பன்மார் புரிந்து கொள்கிறர்கள் இல்லை என்பதும் அவரின் ஆதங்கமாய் இருந்தது.

தன்னிடம் மொறாக்கோவில் இரண்டு வீடுகள் இருப்பதாயும், அவை வெறுமனே இருப்பதாயும் சொன்னார். அவற்றில் பிரான்ஸ் நாட்டவர்கள் தங்கியிருந்ததாயும் ஆனால் அந்த பிரான்ஸ் நாட்டவரின் வேலைக்காரர்கள் தனது தளபாடங்களை களவெடுப்பதால் தற்போது வாடகைக்கு விடுவதில்லை என்றும், தான் மட்டும் வருடததில் ஒரு தடவை  அங்கு போகிறார் என்றும் தனது சொத்துக்கள் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

கூகில் மப் (Google maps) இல் ஆவரின் வீட்டைக் காட்டினேன். சிறு குழந்தைபோல் குதூகலித்தார். இது எப்ப‌டி சாத்தியம் என்றார்? விளக்கினேன். புரிந்ததோ புரியவில்லையோ தெரியாது ஆனால் தலையாட்டினார்.

என்னை மெராக்கோவுக்கு வரச் சொன்னார். தனது வீட்டில் நான் விருந்தாளியாக  தங்கியிருக்கவேண்டும் என்றார். நான் சிரித்தேன். அவரின் வார்த்தைகளில் பொய்யில்லை என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. தனது நாட்டின் சிறப்புக்களை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்.

நான் புறப்பட்ட போது எனது ஜக்கட்டை மாட்டிவிட்டார். எனக்கு இவ்வாறு ஜ்க்கட் மாட்டிவிடப்பட்டது முதல் அனுபவம் என்பதால் நானும் பல தடவைகள் நன்றி சொல்லி விடைபெற்றேன். உனக்குத் தந்த அழைப்பை நீ எற்றுக் கொள்வாய் என நம்புவதாகச் சொன்னார். நான் புன்னகைத்தேன். அப் புன்னகையின் அர்த்தம் நான் வருகிறேன் என்பதா அல்லது வரமாட்டடேன் என்பதா என்பது எனக்குப் புரியாதிருந்தது.


இன்றைய நாளும் நல்லதே

3 comments:

  1. அப்ப ஃப்ரீ சேவிஸ்தானோ? கட்டணம் அறவிட்டீர்களா?

    ReplyDelete
  2. இதுதான் தூய அட்பு என்பது. பிடியை விட்டுடாதீங்க.

    ReplyDelete

பின்னூட்டங்கள்